சேக்கிழார் பாடல் நயம் – 122 (புரிந்தவர்)

திருச்சி புலவர் இராமமூர்த்தி
பாடல்:
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி
அரிந்திடல் உற்ற போதில் அரசனும் ‘பெரியோர் செய்கை
இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்று எதிர் கடிதின் சென்று
பெரும் தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும்
வரலாறு:
இவ்வளவு பெரிய யானைமுன்னே இந்த உண்மைத் தவமுடைய அடியார் சென்றபோது நடந்ததை அறியாத மன்னன் யானையும் பாகரும் மாளும் வண்ணம் வெட்டியதே போதுமோ? எனக்கேட்டார். அது கேட்ட எறிபத்தர், ‘’அரசே, இறைவனுக்குச் சாத்த சிவகாமி ஆண்டார் எடுத்து வந்த மாலையைச் சிந்தி வீழ்த்தியது! நானும் அதனையும் பாகரையும் வெட்டி வீழ்த்தினேன்!’’ என்றார். அதுகேட்டு மன்னன் அடியார் திருவடியில் வீழ்ந்து இறைவனடியாருக்குச் சிவாபராதம் செய்த யானையையும் பாகரையும் கொன்றது போதாது! என்னையும் கொல்வதே சரி, அதுவும் மங்கல மழுவால் கொல்லாமல், என் வாளால் கொல்க ‘’ என்று தம் உடைவாளை எடுத்து நீட்டினார்.
மனம் வருந்தித் தம் உடைவாளை எடுத்து நீட்டிய மன்னரை நோக்கிய எறிபத்தர், இறைவன்பால் இத்தகைய அன்பு கொண்டவர் பெருமையை எண்ணி அரசர் தந்த உடைவாளை உடனே வாங்கிக் கொண்டார், அப்படி வாங்கா விட்டால் தாமே வெட்டிக்கொள்வார் என்ற காரணத்தால் விரைந்து வாங்கினார். புகழ்ச்சோழரும் வணங்கி, என்னைக் கொன்று என்பிழை தீர்க்க இவரே முயல, அருளிய இறைவன் கருணையை எண்ணிமகிழ்ந்தார்! ‘’யானையும் பாகரும் செய்த பிழையைத் தன் பிழையாகக் கருதி, வாளைத் தந்த அன்பனாருக்கு நான் தீங்கு நினைத்தேன்; ஆதலால் இப்போது நானே என் உயிரை மாய்த்துக் கொள்வேன்’’ என்று அவ்வாளைத் தம் கழுத்தில் வைத்து அரிந்து கொள்ள முயன்றார்!
பாடல்:
புரிந்தவர் கொடுத்த வாளை அன்பர் தம் கழுத்தில் பூட்டி
அரிந்திடல் உற்ற போதில் அரசனும் ‘பெரியோர் செய்கை
இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்று எதிர் கடிதின் சென்று
பெரும் தடந் தோளால் கூடிப் பிடித்தனன் வாளும் கையும்
பாடலின் பொருள்: நினைந்து அவர் கொடுத்த வாளை அன்பர்தம் கழுத்திற் பூட்டி அரியத் தொடங்கிய போதிலே, “பெரியோர் செய்கை யிருந்த படி இது என்ன? ஓ! கெட்டேன்!” என்று எதிர் விரைந்து போய் மிகப் பெரிய தமது தோள்களாற் கூடி அரசரும் அந்த வாளினையும் அதைப் பிடித்த அன்பரது கையினையும் சேர்த்துப் பிடித்துக் கொண்டனர்.
விளக்கம்:
புரிதல் – தீர எண்ணுதல் – முற்றும் நினைத்தல் – தம் முன்பு உவகை கொண்டதைப் புரிந்தும், வெட்டுக என்று தொழுதலைப்புரிந்தும், விரும்பிக் கொடுத்த வாள்.
இப்பாடலில் அன்பர் எறிபத்தரையும் அரசர் புகழ்ச்சோழரையும் குறித்தன. அடியாரைப் பெரியோர் என்றது, சிவாபராதம் தம்பால் ‘நிகழ்வதனால் தாம்
எரிவாய் நரகத்துக் காளாகாதபடி தடுத்து உதவும் பெற்றியாற் பெரியோர் என்றார். செய்தற்கரும் செயல் செய்தலாற் பெரியோர் என்றார் என்றலுமாம்
இருந்தவாறு இது என்? கெட்டேன்! என்ற தொடர், நாம் எதிர்பாராத வண்ணம் இவ்வாறு இருந்தபடி இது என்ன! ஆச்சரியம்! கெட்டேன்! எதிர்பாராதபடி அதிவிரைவில் தீங்கு நிகழக்கண்டபோது வரும் அவலச்சொல் ‘கெட்டேன்’ என்பதாம் . இவ்வாறு தமக்கிறுதியைத் தாமே தேடிக்கொள்ளும் செய்கை ஒரு பெரியார்பால் நிகழ்வது தம்மாற் கூடிற்றே என்று எண்ணியபோது பேரவலம் மனத்து நிகழ்ந்தது. அதனைக் குறிக்கக் கெட்டேன் என்ற அவலச்சொல் வந்தது. வலிய மழுவை வீசி, வன்பெருங் களிற்றினையும் எறிந்து வீரஞ்செய்து வென்ற பெரு வீரர் செயலையும் விலக்குதற்குரிய பெருவன்மை நோக்கி இவ்வாறு சிறப்பித்தார்.
கூடி – கிட்டி – சேர்ந்து, கழுத்தை அரியவொட்டாமல் வாளுங் கையும் சேர்த்துப் பிடித்தனர் என்க. ஊறு செய்யும் கருவி வாளாதலின் முதலில் இவரது கையின் பிடியினுள்ளே கொண்டு தடுக்கப்பட்டது வாளென்பார், வாளும் என்று அதனை முன்வைத்துக் கூறினார். தோளால் – கையால், பெருந்தோளுடைமை உயர்ந்த உடலிலக்கணமாம்.
இப்பாடலில் அரசராகிய புகழ்ச்சோழர்,அடியாராகியஎறிபத்தர், ஆகியோரின் சமயத்துக்கு ஏற்ற விரைந்த மதிநுட்பம், செயல் ஆகியவை புலனாகின்றன!
‘’மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை! ‘’
என்ற குறளை நினைவூட்டும் பாடல் இது!