திருச்சி புலவர் இராமமூர்த்தி

கருப்பு வில்லோனைக் கூற்றைக் காய்ந்தவர் கடவூர் மன்னி,
விருப்பு உறும் அன்பு மேல் மேல் மிக்கு எழும் வேட்கை கூர,
ஒருப்படும் உள்ளத் தன்மை உண்மையால் தமக்கு நேர்ந்த
திருப்பணி பலவும் செய்து, சிவ பத நிழலில் சேர்ந்தார்.

வரலாறு

திருப்பனந்தாள் என்ற தலத்தில் தாடகை என்னும் மங்கை குழந்தை வரம் வேண்டி நாள் தோறும் மாலை தொடுத்து ஈசனுக்கு அணிவித்தாள். ஒரு நாள் மாலையை அணிவிக்க சிரமம் எற்பட்டபோது இறைவனே குனிந்து மாலையை ஏற்றார். அன்று முதல் தலைசாய்ந்த நிலையிலேயே இருந்தது. அதனைக் கண்ட அப்பகுதியின் மன்னன் மணிமுடி சோழன் (நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்க்கரசியின் தந்தை) யானை, குதிரை கொண்டு கட்டி இழுத்தும் பலன் தரவில்லை. அரசன் இரவும் பகலும் கவலையுற்று வருந்தினான். . மழுவேந்திய சிவந்த கையினையுடைய சிவபெருமான் எழுந்தருளிய அம்மருங்குள்ள திருக்கோயில்களுக்கும் சென்று, தொழுது, மேற்போந்து, எல்லா வுலகங்களையும் காக்கும் பொருட்டு வேதவிதி வழுவாமல் ஆகவனீயம் முதலியமுத்தீக்களையும் வளர்த்துக் காத்துவருகின்ற மறையோர் வாழ்கின்ற செழிப்புடைய பூஞ்சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாளிற் சேர்ந்தனர்.

திருக்கடையூர் குங்கிலியக்கலய நாயனார்  இவ்வாலயம் வந்தபோது ஈசனின் தலையை நிமிர்த்த எண்ணி ஒரு கயிற்றை தன் கழுத்தில் சுருக்கிட்டு மறுமுனையை ஈசன் கழுத்தில் கட்டி ஒன்று உன் தலை நிமிர வேண்டும் இல்லையேல் நான் இங்கேயே உயிர் விடல் வேண்டும் என இழுத்தார்.

ஒருமை பொருந்திய அன்பாகிய நாரினால் இயன்ற கயிற்றினாலே; திண்மையுடைய தொண்டர் பூட்டி இளைப்படைந்த பின்னரும் அக்கருத்துக்கு மாறுபட்டு முன்போலச் சாய்ந்து நிற்க இறைவர்க்கு முடியுமோ?  கலயனாரது மனத்தில் எழுந்த ஒருமைப்பாட்டினைக் கண்ட அப்பொழுதே பெருமையுடைய பிரானார் நேரே நின்றனர்; தேவர்களும் ஆகாயத்தில் மகிழ்ச்சியினால் ஆரவாரித் தனராகிப் பூமாரி பொழிந்தார். மன்னவன்  சேனைகளும் களிறுகளும் மகிழ்ந்தன; அரசன் அடியார்முன் சென்று அவர் திருவடியைத்  தலைமேல் வைத்து வணங்கினான்.

விண்ணிற் பறக்கின்ற முப்புரங்களும் வேகும்படி வேதப்புரவி பூண்ட தேரில் மேரு மலையை வலிய வில்லாக வளைத்து நின்ற செஞ்சடையப்பருடைய நேர் நிற்கும் நிலையினை அடியேன் தரிசிக்கும்படி செய்தருளினீர்! மண்ணைப் பிளந்து சென்ற திருமாலும் தேடிக் காணமுடியாத (சிவபெருமானது) மலர் போன்ற திருவடிக ளிரண்டினையும் பண்பு மிக்க அடியவர்களல்லது வேறு யாவரே அன்பினால் நேர் காண வல்லவர்?” என்று போற்றி அங்கே ஆலயத்திறைவனுக்கு உரிய திருப்பணிகள் செய்து புறப்பட்டான்!

கலயனார் திருப்பனந்தாள்  இறைவன் கழலடி வாழ்த்திச் சிலநாள் அங்கே இருந்தார்.சில நாள்கள் கழிந்த பின்பு,  திருக்கடவூரிற் சேர்ந்து நிலைபெற்ற தமது திருப்பணியில் ஒழுகி வருகின்ற நாட்களிலே ஒப்பற்ற சீர்காழித் தலைவராகிய ஆளுடைய பிள்ளையாரும் தாண்டக வேந்தராகிய மிக்குப் பெருகும் புகழுடைய ஆளுடைய அரசுகளும் ஒன்றாக அங்கு எழுந்தருளக் கண்டு  நிகரில்லாத மகிழ்ச்சி பொங்க அவர்களை எதிர் கொண்டு சென்று அழைத்து வந்து, தமது திருமனையில் எய்தி, எல்லையில்லாத அன்பின் மிக்க ஆறு சுவைகளும் பொருந்த அமைத்து ஊட்டி, அவர்களது திருவருளினைப் பெற்றதேயன்றி, மணமுடைய அழகிய கொன்றைமல ரணிந்த இறைவருடைய திருவருளினையும் பெற்றார்.

கரும்பை வில்லாகவுடைய மன்மதனையும் இயமனையும் தண்டித்த சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் திருக்கடவூரிலே (கலயனார்) நிலையாக வாழ்ந்து விருப்பம் பொருந்திய அன்பு மேன்மேலும் மிகுந்து எழுகின்ற ஆசை அதிகப்படவே, ஒருப்படுகின்ற மனநிலை உண்டாயினமையினால் தமக்கு நேர்பட்ட திருப்பணிகள் பலவற்றையும் செய்து சிவனது திருவடி நீழலிற் சேர்ந்தனர்.

குங்கிலியக்  கலைய நாயனாரின் அரிய  சிவத்தொண்டுக்குக்  காரணம் அவர் செய்த குங்கிலிய தூபப்பணியே என்பதை,

‘’பெரும்புலர்  காலை மூழ்கி பித்தர்க்கு பத்தர் ஆகி
அரும்பொடு  மலர்கள் கொண்டு அங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல்  விளக்கு  தூபம்  விதியினால் இடவல்லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர் வீரட்டனாரே!

பொள்ளத்த  காயமாயப்  பொருளினைப்  போக மாதர்
வெள்ளத்தைக்  கழிக்க வேண்டில் விரும்புமின்  விளக்குத் தூபம்
உள்ளத்த  திரியொன்றேற்றி உணருமா றுணர வல்லார்
கள்ளத்தைக்  கழிப்பர் போலுங் கடவூர் வீரட்டனாரே!

மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும்
மால் அயனும் கூடி தங்கள்
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி
தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல்
என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து
விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி
வெண்காடு மேவிய விகிர்தனாரே

என்ற  திருமுறைப் பாடல்கள் விளக்குகின்றன. ஆகவே இப்பாடல் கலயனாரின்  தனித்த சிறப்பைக் காட்டுகிறது!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.