திருச்சி புலவர் இராமமூர்த்தி

யானையும், முத்தும்  சிறந்த   மலையாள நாட்டில் தோன்றிய  விறன்மிண்டர் சிவத்தலங்கள் தோறும் சென்று வழிபாடு செய்தவண்ணம் திருவாரூருக்கு  வந்தார். அங்கே அடியார்கள்  பலரும் வழிபாடு செய்யும் தேவாசிரய  மண்டபத்திலே அவர்களொடு  கலந்து மகிழ்ந்தார்.

அவர் அடியார்களுடன் இணைந்து மகிழ்ந்திருக்கும் போது, அம்மண்ட பத்தின் வழியே சுந்தரமூர்த்தி சுவாமிகள் இறைவனையே  காணும் குறிக்கோளுடன் வழியில் இருந்த சிவனடியார்களைக்  காணாமல் சென்றார்.

அவ்வாறு அடியாரை வணங்காமல் சென்ற சுந்தரரை, விறன்மிண்டர்  ‘’அடியாரைப்  பேணாமல் உள்ளே சென்றவர்  யாரானாலும் சிவபெருமானுக்குப் புறம்பானவரே !’’ என்று விலக்கி வைத்தார். பின்னர் இறைவனே  சுந்தரரிடம் அடியாரைப் பேணி வணங்காத செயல் அடியார் நெறிக்குப் புறம்பானது. என்று உணர்த்தினார், இவ்வாறு இறைவன் திருவருளைப் பெற்ற  விறண்மிண்டரின் உறுதியான சிவப்பற்றினை வேறு யார் பெறுவார்கள் என்ற சிறப்பைப் பெற்றார் .  இதனைச்  சேக்கிழார் ,  புகழ்ந்து பாடினார்.

அருட்டிரு நிறைந்த பெருமை எந்நாளும் விளங்குகின்ற தேவாசிரிய மண்டபத்திற் பொலிந்து பொருந்தி வீற்றிருக்கின்ற சிவனடியார்களைத் தொழுது, அவர்கள்பால் வந்து அணையாமல் ஒரு புறமாக ஒதுங்கிச் செல்லும் வன்றொண்டன் புறகு என்று உரைப்பதற்குச் சிவபெருமானருளிற் பெருகுகின்ற பெரிய பேறு பெற்றார் இந்நாயனார். அதுவேயுமன்றி மேலும் பெறுதற்கமைந்து நின்றாரானார்,  மேலும் பாடினார் .

சேணார்  மேருச்   சிலைவளைத்த  சிவனாரடியார்  திருக்கூட்டம்
பேணாதேகும்   ஊரனுக்கும் , ‘’பிரானாந்தன்மைப் பிறைசூடிப்
பூணாரரவம்  புனைந்தார்க்கும்  புறகு!’’ என்றுரைப்ப மற்றவர்பால்
கோணா வருளைப்  பெற்றார்  மாற்றினியார் பெருமை  கூறுவார்

என்று பாடினார். இதன் பொருள்

சேணிடையிலும் உயர்ந்து நிறைந்த மேருமலையை வில்லாகவளைத்த சிவபெருமானடியார் திருக்கூட்டம் பேணாது செல்லும் நம்பியாரூரருக்கும் அவரை ஆண்ட தலைவராந் தன்மையுடைய, பிறையைச் சிரத்திற் சூடிப் பாம்பை அணியாக அணிந்த பெருமானுக்கும் புறகு என்றுரைப்ப மற்ற அவர்களிடமே கோணாத அருளைப் பெற்றார். இதனின் வேறு பெருமையும் யாவர் சொல்ல வல்லார்?

என்பதாகும்.. “அகில காரணர் தாள்பணி வார்கடாம், அகில லோகமு மாளற்குரியர்“ ஆதலால் சிவப்பிரானைப் பேணி வணங்கும் விறன்மிண்டருக்குத் தலைமைப்பேறு கிட்டியது. இவ்வாறு அடியாரையும் ஆண்டவனையுமே புறகு என்று உரைக்கும் வலிமை பெற்றார் அவர். இவர் அவ்வாறு சினம் கொண்டதும் இறைவனையும் புறகு எனது தள்ளியதும் இறைவனின் நாடகமே யாகும்

இறைவரும் உலகம் உய்யத்திருத்தொண்டத்தொகையினைத் தோற்றுவிப்பதும், நம்பிகளைத் திருக்கூட்டத்தினுட் கூட்டுவிப்பதும் ஆகிய இரண்டினையும் தாமே செய்வதினும் இந்நாயனாரைக் கொண்டு செய்விப்பது தக்கதென்று திருவுளம் பற்றி இவ்வாறு இவர் சொல்லுமாறு செய்தனர்     என்று உரையாசிரியர்  கூறுகிறார்.

விறண்மிண்டருடைய செயலால் , அடியார் பெருமையை சுந்தரர் அறிந்து கொண்டார். இறைவனே சுந்தரருக்கு, ‘’தில்லைவாழ்அந்தணர்தம்  அடியார்க்கும்  மடியேன்’’ என்று அடியெடுத்துக்  கொடுத்தார். பின்னர் அவரைத் தொடர்ந்து பலரும் திருத்தொண்டர் பற்றிப் பாடினர். சேக்கிழார்  பெருந்தகையும் அவற்றை ஒட்டியே இப்புராணம் பாடினார்.  இதனால் விறன்மிண்டர் எஞ்ஞான்றும் எவ்விடத்திலும் வளையாத திருவருளைப் பெற்றார் என்பதைச் சேக்கிழார் ‘’;கோணா அருளை பெற்றார் ‘’ என்ற தொடரால் குறிக்கிறார்.

இப்பாடல் விறன்மிண்டர் சினத்தால்  அவர்  பெருமை,  இறைவன் பெருமை, சுந்தரர் பெருமை, திருத்தொண்டர்  திருவந்தாதி பாடிய நம்பியாண்டார் நம்பி  பெருமை, சேக்கிழாரின் பெருமை ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய சிறப்புடையதாயிற்று.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.