Tag: எஸ்.வி. வேணுகோபால்

  • கடந்த காலத்தின் நுங்கு

    எஸ் வி வேணுகோபாலன் 

    இளமைக்கால நினைவுகளை,
    துள்ளாட்டத்தைக்                                                                                            Nungu     
    கூட்டமாய்ச் சேர்ந்து
    கொண்டாடிய பொழுதுகளை
    வெயிலைச் சவாலுக்கு இழுத்த
    திமிர் பிடித்த பருவத்தை…

    எப்படியோ சூல் கொண்டு
    பிறந்து கனிந்து விழுந்து
    லாரிகளில் இடம்பெயர்ந்து
    நகரத்தை எட்டிய பனங்காயைக்
    கையிலெடுக்கும் மாரிச்சாமி
    கீறி எடுத்துக் கொடுக்கிறார் 

    முப்பதாண்டுகளுக்கு முன்பான
    ஒரு கோடையில், கிராமத்தில்
    அண்ணன்காரன் தட்டிப் பறித்துப் போன
    இளசான நுங்காகப் பார்த்து!

     

    Share
  • வலி

    ராசை கண்மணி ராசா 

     

    சாணிப்பால் ஊற்றி
    சவுக்கால் அடித்தான்
    என் பூட்டனை உன் பூட்டன்.

    காலில் செருப்பணிந்தால்
    கட்டி வைத்து உதைத்தான்
    என் பாட்டனை உன் பாட்டன்

    பறைக்கு எதுக்குடா படிப்பு என
    பகடி செய்து ஏசினான்
    என் அப்பனை உன் அப்பன்

    ‘உங்களுக்கென்னப்பா?
    சர்க்காரு வேலையெல்லாம்
    உங்க சாதிக்குத்தானே’-என
    சாமர்த்தியம் பேசுகிறாய் நீ!

    ஒன்று செய்
    உன்னை அறியாத ஊரில் போய்
    உன்னைப் பறையனென்று சொல்!
    அப்போது புரியும் என் வலி !

     

    Share
  • உன்னதமான ஒரு சமூகத்திற்கான கரைதல்…..

    எஸ் வி வேணுகோபாலன்

    ஒரு திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை இப்படி நேரடியாக அதனோடு தொடர்பு படுத்திக்கொண்டு விலக முடியாமல் தவித்த அனுபவம் மிக அண்மைக் காலத்தில் ஏற்படவில்லை.

    thanga_meengal_tamil_movie_first_look_posters_wallpapers_75ac354

    திரைக் கதையோடும் அதன் ஓட்டத்தோடும் பின்னிக் கொள்ள நேர்ந்ததற்கு பளீர் என்று தெற்றுப் பல் தெரியச் சிரிக்கும், சட்சட் என்று முக பாவங்களை மாற்றத் தெரியும், அகலக் கண்கள் விரித்து இயற்கையின் ரகசியங்களை விழுங்கக் காத்திருக்கும் செல்லம்மா பாத்திரம் ஒரு காரணம். வாழ்த்துக்கள், சாதனா! பாத்திரப் படைப்போடு சங்கமம் ஆகிவிட்ட கல்யாணியாக நடித்த ராம் அடுத்தது. அருமை, ராம்!

    தங்க மீன்கள் ஒரு சமூக, பொருளாதார விஷயத்தை, ஆளுமை பிரச்சனை, உளவியல் அம்சங்களின் பின்புலத்தில் பேசுகிறது. அதன் வெற்றி, தோல்வியைக் காட்டிலும் இன்றைய தமிழக பண்பாட்டுச் சூழலில் இத்தகைய ஒரு திரைக் கதையின் தேவை என்ன, அதன் தாக்கம் என்ன என்பதை விவாதிப்பது முக்கியமாகிறது.

    மிகச் சிறு வட்டத்திற்குள், மிகக் குறைவான பாத்திரங்களின் தேர்வுக்குள், அதிக நிலப்பரப்பை நோக்கி கவனத்தைச் சிதறடிக்காமலும், காட்சி-வசனம் என்ற சாதனங்களை நேர்த்தியான கலவையிலும் வழங்க இயக்குனர் ராம் எடுத்துக் கொண்டிருக்கும் பாடுகள் உள்ளபடியே வணக்கத்திற்குரியவை. வேறு மாதிரி அலைந்து திரிந்து களைத்துப் போயே பழக்கப்பட்டுவிட்ட இன்றைய சராசரி திரை ரசிகருக்கு இதில் ஒவ்வாமை ஏற்பட்டிருக்குமாயின் அதற்கு சரியான மருந்து என்ன என்பதைச் சொல்லாமலே புரிந்து கொள்ள முடியும்.

    தேடலில் இருக்கும் நடுத்தர வயது மகன், அவனது காதலுக்கு ஆட்பட்டு வாழ்க்கைத் துணையாக (இணையாக அல்ல என்பது படத்தின் போக்கில் புரிகிறது) வந்துவிடும் மனைவி, நல்லாசிரியர் விருது பெற்று ஓய்வும் பெற்றுவிட்ட அரசுப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் அப்பா, அவரை அனுசரித்து, அவரது கசப்பைப் பகிர்ந்து கொள்ளும் அம்மா, பள்ளியால் மந்தம் என்று புறக்கணிக்கப்படும் சூட்டிகைக் குழந்தை என்று கை அடக்கமான வீடு. (இல்லம் என்ற சொல்லைப் பயன்படுத்த இயலாது).

    குழந்தைக்கான பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாத தனது தந்தையினது பாசத்தின் ஊற்றில் தனியே ஒரு பள்ளிக்கூடத்தை மானசீகமாக உருவாக்கிக் கொண்டு அந்தக் கல்வியில் தேர்ச்சி பெற்று முன்னேறிக் கொண்டிருக்கிறது குழந்தை. வீட்டில் உள்ளோரும் சரி, பள்ளியைச் சார்ந்தோரும் சரி குழந்தையை அறிய முயற்சி மேற்கொள்வதில்லை என்பது ஒரு முக்கியமான உளவியல் கூறாக படத்தில் வெவ்வேறு நிகழ்வுகள், காட்சிகள், வசனங்களின் மூலம் எடுத்து வைக்கப் படுகிறது.

    தனது குழந்தைக்கு மேலான கல்வி தர வேண்டும் என்று தனியார் நிறுவனத்திற்கு சைக்கிளில் அவளை வைத்துக் கொண்டு விரையும் கல்யாணி, கடைசி காட்சியில் அவளை அரசுப் பள்ளியில் பெருமிதம் பொங்க சேர்த்துவிட்டு அவள் குவிக்கும் வெற்றியை ரசிப்பதோடு நிறைவு பெறுகிறது படம்.

    இதனிடையே பேசப்படும் செய்தி, நிலையான வருமானம் அற்ற ஒரு மனிதனின் அலைக்கழிப்பு. சம்பாதிக்க முடியாதவனுக்கு சுய மரியாதையோ, மதிப்போ இருக்கக் கூடாது என்கிறது சமூகம். டிகிரி கூட (!) படிக்காத பெற்றோரின் குழந்தையை இங்கே சேர்த்தது எங்கள் தப்பு என்கிறது தனியார் ஆங்கில வழிக் கல்வி நிறுவனம்.

    தன்னை பள்ளிக்கூடம் எதற்கு இப்படி ஒதுக்கி வைக்கிறது, சக மாணவர்கள் ஏன் தன்னை பரிகசித்து சிரிக்கின்றனர், தனக்குச் சரியாகப்படும் விடைகள் ஏன் எப்போதும் ஆசிரியர்களுக்குத் தவறாகவே படுகின்றன என்று நிலைகுலையும் ஒரு சிறுமிக்கு வீட்டில் நிபந்தனை மேலிட்ட அன்பும், சலிப்பில் ஊறிய கவனிப்பும், பெருமூச்சோடு உதிரும் ஆசியும் கிடைக்கின்றன. தனக்கான அங்கீகாரத்தை அவள் தன்னைப் போலவே நிராகரிக்கப் பட்ட தந்தையிடம் மட்டும் தான் கோராமலே பெறமுடிகிறது. மிக நுட்பமான இடம் இது இந்தக் கதையில்.

    தந்தை – மகள் உறவு ஆரோக்கியமான விதத்தில் பேசப்படுகிறது. அதில் மற்றவர்கள் செய்யும் குறுக்கீடுகள் நம்மை மேலும் ஊன்றிக் கவனிக்க வைக்கின்றன. “நீ எதுக்குடா பள்ளிக்கூடத்துக்குப் போய் நிக்கிற…அவளுக்கு எதற்கு ரெண்டு அம்மா…?” என்று குழந்தையின் தாத்தா தனது பையனிடம் கேட்கும் கேள்வி, பொதுவாக நடுத்தர குடும்பங்களில் வேலைப் பிரிவினை குறித்த ஆழமான பரிமாணங்களை எடுத்து வைக்கிறது. பொதுவாக குழந்தை பராமரிப்பு, பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களைச் சென்று பார்ப்பது, பாட்டு கிளாஸ், பண்டிகை பலகாரம், துணிமணி, வீட்டைச் சுத்தமாக வைத்திருத்தல்…. இன்னபிற பொறுப்புகள் ஒரு தாயினுடையவை. அந்த இடத்தை ஓர் அப்பா எடுத்துக் கொள்வது தேவையற்றது என்ற கருத்தாக்கம் தொக்கி நிற்கும் கேள்விகள் அவை.

    கற்றலின் இனிமை மறுக்கப்பட்ட வகுப்பறை, ஒரே ஒரு காட்சியிலேயே சாட்டையடி மாதிரி எடுத்து வைக்கப் படுகிறது. ஆங்கில எழுத்து W எப்படி என்பதில் குழப்பம் இருக்கிறது செல்லம்மாவுக்கு. அதையும் M என்ற எழுத்தையும் குழப்பிக் கொண்டிருக்கிற அவள் சிக்கிக் கொண்டு விடுகிறாள். இந்த எழுத்துக்களை கரும்பலகையில் எழுதச் சொல்லி ஏவும் ஆசிரியையின் தீப்பொறி உமிழும் கண்கள், நடுங்க வைக்கும் தடித்த சொற்கள், நொடிக்கு நொடி உத்தரவுகளாக பிறப்பிக்கப்படும் அச்சுறுத்தல்கள், அதிர வைக்கும் உடல் மொழி…….இவை எதுவுமே வகுப்பறைக்குரிய இலக்கணங்களுக்குள் வராது. இந்த வன்முறையின் உச்சகட்டம், அவளுக்கு எழுத வராத எழுத்தின் பெயரை வைத்தே அவளைக் கூப்பிடுமாறு மற்ற மாணவர்களுக்கு ஆசிரியை பிறப்பிக்கும் உத்தரவு. மலை வாழை அல்லவோ கல்வி, அதை வாயார உண்ணுவாய் போ என் புதல்வி என்று பாவேந்தர் சொன்ன கல்வி இதுவா?

    இளம் வயதிலேயே அந்தக் குழந்தைக்கு தங்க மீன்கள் பற்றிய கனவை ஊட்டிவிட்டிருக்கிறார் தந்தை. அது பின்னர் கல்விக்கான குறியீடாக இறுதிக் காட்சியில் குழந்தையின் கட்டுரை வாசகங்கள் மூலம் அடையாள படுத்தப் படுகிறது. எங்கே நீச்சல் தெரியாத குழந்தை, தகப்பனும் அருகில் இராத அந்த சோக நாட்களில் தனது எதிர்பார்ப்புகள் எல்லாம் நொறுங்கிய தருணமொன்றில் தங்க மீன்களைத் தேடி ஆழமான குளத்திற்குள் சென்றடைந்து விடுவாளோ என்ற பதைபதைப்பை முதல் காட்சியிலேயே பார்வையாளரின் புத்தியில் விதைத்துவிடுகிறார் இயக்குநர்.

    ஒவ்வோர் ஆண்டும் எத்தனை பள்ளிக் குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் இப்படியாகத் தத்தமது தங்க மீன்களைத் தேடப் போய் தாங்களே தங்க மீனாக அந்தந்த குடும்பங்களின் வீட்டுச் சுவர்களில் படமாகி விட்டார்கள் என்ற புள்ளிவிவரங்கள் அதிர்ச்சியானவை. தமிழ் வழிக் கல்வி பயின்று கல்லூரியில் ஆங்கிலம் மூலம் கற்க வேண்டிய நெருக்கடியை எதிர்கொள்ள இயலாது தூக்கில் தொங்கினார் ஒரு மாணவி. தேர்வில் தோல்வி பயம் காரணமாக முடிவுகள் வருவதற்கு ஒரு நாள் முன்பு விஷம் குடித்தவர்களில் சிலர் அடுத்த நாள் தேர்ச்சி பெற்ற செய்தி வந்திருந்தது. வேலைக்கான கேம்பஸ் தேர்வில் முதல் பட்டியலில் பெயரில்லை என்பதற்காக மிக அண்மையில் ஒரு மாணவர் ரயிலின் குறுக்கே விழுந்து தம்மை மாய்த்துக் கொண்டார்.

    சமச்சீர் கல்வியை வரவிடாது மெட்ரிகுலேஷன் கல்வி வள்ளல்கள் எத்தனை முயற்சிகளை மேற்கொண்டனர் என்பதை தமிழக கல்விச் சூழல் பார்த்தது. தாய்மொழியில் படிப்பது அவமானம், ஆங்கிலமே அறிவின் வெளிச்சம் என்று பெற்றோரை மூளைச் சலவை செய்திருக்கும் மிகப் பெரிய வர்த்தகம் இன்றைய கல்விமுறை. ஈவிரக்கமற்ற தண்டனை கொட்டடிகளாக (ஹிட்லரின் கான்சென்ட்ரேஷன் கேம்ப்) உருவாக்கி வளர்த்தெடுக்கப்படும் போர்டிங் பள்ளிகள் இன்று சக்கை போடு போட்டுக் கொண்டிருப்பதன் காரணம் என்ன, உலகமயத்தின் சந்தைமயம், போட்டி உலகம், இருளாக சித்தரிக்கப் படும் எதிர்காலத்தின் மீதான அச்சம் ! உரையாடல்கள் அற்ற வெளியாக நமது வீடுகள் இருப்பதை கல்யாணியின் வீடும் காட்டுகிறது.

    வோடஃபோன் நிறுவன விளம்பரத்தில் வரும் நாய்க்குட்டி தனக்கு வேண்டும் என்று கேட்கும் செல்லம்மாவுக்கு அதன் விலை தெரியாது. வாக்கு கொடுத்துவிடும் தந்தை கல்யாணிக்கும் தெரியாது. அசாத்திய கற்பனையாகத் தோன்றும் ஒரு முயற்சியை மேற்கொண்டு அந்த நாய்க்குட்டியை வாங்கவும் செய்துவிடுகிறான் கல்யாணி. எனக்கென்னவோ, வெவ்வேறு முறையில் தங்களைப் பணயம் வைத்தும், வருத்திக் கொண்டும், வெளியே சொல்ல இயலாத இன்னல்களை உட்கொண்டும் தங்களது குழந்தைகளின் கல்விக்காக அலைவுறும் பெற்றோர் குறித்த குறியீடாக அது பிறகு யோசிக்கையில் பட்டது.

    நடுங்க வைக்கும் ஸ்டெல்லா மிஸ் சித்தரிப்புக்கு நேரெதிராக, அரவணைக்கும் ஆசிரியையாக வரும் எவிட்டா நேரடியாக இடம் பெறும் காட்சிகள் மிக மிகக் குறைவு என்றாலும் பார்வையாளருக்கு எளிதில் விளங்கிவிடும் பாத்திரமாகி விடுகிறார். தனியார் நிறுவனத்தில் தத்தளிக்கும் அந்தத் தங்க மீன் பிறகு அரசு பள்ளியில் உற்சாக நீச்சல் அடிப்பதோடு, செல்லம்மாவின் கை தொடுதலுக்கு அருகே காத்திருக்கவும் செய்கிறது.

    படத்தில் யாரும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை என்ற தத்துவம் எதார்த்த உலகை மதிப்போடு அணுகத் தூண்டுகிறது. நல்ல தாத்தா ஆனா அவரு கெட்ட அப்பா என்று தனது பாட்டனைக் காண்கிறாள் செல்லம்மா. தொழிலாளிக்கு பாக்கி வைக்கும் சிறு தொழில் உடைமையாளர் உள்ளபடியே அவரும் நலிவுற்ற தொழிலில் நசிந்து கொண்டிருப்பவராக இருக்கிறார். வெளிநாட்டில் வசதியான வாழ்க்கையில் இருக்கும் தனது மகள் கோபித்துக் கொண்டுவிடக் கூடாதென ஏழை மகன் வயிற்று பேத்தியிடம் கெட்டவளாக நடந்து கொள்ளும் பாட்டி, தன தவறுக்கு வெட்கமுறும் நல்லவளாகவும் இருக்கவே செய்கிறாள். தன்னை மிக கேவலமாக நடத்தும் மாமியாரே ஆனாலும், தன்னை மதிக்கும் கணவனின் கடுமையான வற்புறுத்தலுக்குச் செவி மடுக்காது இருந்துவிடும் மனைவி, அவன் வீட்டைவிட்டு வெளியேறிப் போன பிறகும் குழந்தைக்காக எல்லாம் பொறுத்துப் போகிறவளாக இருக்க வேண்டியிருக்கிறது.

    ஸ்டெல்லா மிஸ் போன்றவர்கள் ஏன் குழந்தைகளிடம் அப்படி நடந்து கொள்கின்றனர் என்பதை, பின்னர் எவிட்டா, “நிறைய மாணவர்கள், அதிகமான வேலை பளு, குறைவான சம்பளம்…. அவங்களும் பாவம் என்ன செய்வாங்க” என்று சொல்லும்போது நிஜ வில்லன்கள் யார் என்று சிந்திக்கச் செய்துவிடுகிறது. தனது மகன் நல்லவன், அவனை திரும்ப வீட்டுக்கு வரச் சொல்லுங்களேன் என்று வேண்டும் தனது மனைவியிடம், கல்யாணியின் அப்பா, அவன் ரொம்பவும் நல்லவன், கொஞ்சம் கெட்டவனாத் தான் திரும்பட்டுமே என்று சொல்லும் இடம் நிறைய கேள்விகளுக்கு விடையாகிறது. புதிய கேள்விகளை முன்வைக்கிறது.

    சம கால சமூக சூழல் மனிதர்களை எப்படி புரட்டிப் போடுகிறது, உணர்வுகளை எப்படி கொச்சை செய்கிறது, உறவுகளை எவ்விதம் சின்னாபின்னமாக்கிச் சீரழிக்கிறது என்பதை ராம் பல விதமாக நுட்பமாக காட்சிப் படுத்துகிறார்.

    தனது குழந்தை பள்ளியில் திருடி இருக்கிறாள் என்று சொல்லும் மனைவியிடம், கல்யாணி, “அந்த ஸ்கூலே திருட்டு ஸ்கூல் தான் ” என்று சொல்லும் இடம். காசு இல்லாதவங்க பாக்காதீங்க என்று விளம்பரம் போடும் போது சொல்றாங்களா என்று குமுறும் இடம். ஒரு கேள்விக்கு இரண்டு, மூன்று, பத்து பதில் வைத்திருக்கும் ஒரு சிறுமியை எப்படி முட்டாள் என்று சொல்ல முடியும் என்று செல்லம்மா கேட்கும் இடம் என்று பளீர் வசனப் பொறிகள் படத்தில் பொருத்தமாக ஒலிப்பது கவனிக்க வேண்டியது.

    பொண்ணுக்கு மட்டும் தான் கால் பிடிச்சு விடுவீங்களா என்று கொஞ்சலோடு கேட்கும் போதும், இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே காத்திருந்து என்னை எங்காவது அழைத்துச் சென்று கொஞ்சம் பேச மாட்டீர்களா என்று ஏங்கும் போதும் சமதையாக சித்தரிக்கப் படும் கல்யாணியின் மனைவி பாத்திரம், முடிவெடுக்கும் எந்த விஷயத்திலும் தலையிட முடியாதவளாக காட்டப்படுவதும், கல்யாணி மனைவியையும், பெண் குழந்தையையும் ‘டி’ போட்டே பேசுவதும் நெருடலாக எனக்குப் பட்டவை. அது கல்யாணியின் பாத்திர வார்ப்பு அப்படி என்றாலும். பெண் குழந்தைக்கான கல்விக்காக எதையும் செய்யப் புறப்படும் ஒரு தந்தை குடும்ப விஷயத்தில் தனது அடுத்த தலைமுறைக்கு இது விஷயத்தில் சொல்ல ஏதும் வைத்திருக்கக் கூடாதா என்ன?

    படிப்பில் மந்தமாக இருப்பதாகப் பேசப்படும் தனது பெண் குழந்தை காலச் சுழற்சியில் பெரிய மனுஷியாக வேறு ஆகிவிடுவாளோ என்று பதறும் தாயின் சித்திரம் போன்ற பல நுண்மையான காட்சிப்படுத்தல் உள்ள படத்தில் இந்த எதிர்பார்ப்பு கூடுவதைத் தவிர்க்க முடிவதில்லை…

    ஆனந்த விகடனில் கடந்த பல வாரங்களாக மறக்கவே நினைக்கிறேன் தொடரில் வெவ்வேறு நிகழ்வுகளை எழுதிக் கொண்டுவரும் மாரி செல்வராஜ் பெயரை இந்தப் படத்தில் உதவி இயக்கம் என டைட்டிலில் ஆர்வத்தோடு பார்த்து மகிழ்ந்தேன். “பூ” ராமு, ரோகிணி என மிகையற்ற நடிப்பை கலைஞர்கள் நல்கி இருப்பது படத்தின் வலு. செல்லம்மாவின் தோழியான ‘பூரி’ ரசிகை அசத்தல் நடிப்பு. மெட்ரிகுலேஷன் பள்ளியின் பலவிதமான கொடுமைகள், அபத்தங்களை பரிகசிக்கும் நையாண்டிப் பாடல் இடம் பெற்றிருக்கிறது. இயற்கையோடு ஒன்றி நகரும் சிறப்பான ஒளிப்பதிவும், ரயில் சத்தத்தையும், படகுத் துறை சங்கு ஒலியையும் காட்சிப்படுத்தலுக்கு ஏற்ப அமைந்திருக்கும் பின்னணி இசையும் பேசப்பட வேண்டியவை.

    படத்தின் தொடக்கத்தில் வண்ணதாசன், கே வி ஷைலஜா, பவா செல்லதுரை ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. படத்தின் நிறைவில், தன்னலமற்று தன்னார்வத்தோடு கற்பிக்கும் ஆசிரியர்கள் யாவருக்கும் அர்ப்பணிக்கப் பட்டிருக்கிறது.

    தங்க மீன்கள், உணர்ச்சிகளை மறைத்துக் கொண்டு பார்க்க இயலாத கனமிக்க அனுபவமாகத் தான் எனக்கு இருந்தது. அதிலிருந்து தப்பி ஓட இயலாதபடிக்கு. ‘ஆனந்த யாழிசை மீட்டுகிறாள்..’ என்ற அருமையான நா முத்துக்குமார் பாடலின் இதமான இசையோட்டத்தினை அப்பா-மகள் அன்பு பரிமாற்றத்தின் கட்டுமானத்திற்குச் சிறப்பாகப் பயன்படுத்தி இருக்கிறார் ராம். வானில் இருந்து நிலவுப் பந்தை எடுத்து விளையாடும் தந்தையும், மகளும் மறுபடி வெண்ணிலவை உரிய இடத்தில் திருப்பி வைத்துவிட்டு அடுத்த ஆட்டத்திற்குச் செல்கின்றனர். அதன் ஒளியில் ஒளிரும் அவர்களது மகிழ்ச்சியான முகங்கள் எப்போதும் அப்படி இருக்கும் ஒரு காலத்திற்கான கரைதலே இந்தப் படம் என்று தான் தோன்றுகிறது.

    *******

    படத்திற்கு நன்றி:

    http://idiotirosh.blogspot.in/2013/05/blog-post.html

    Share
  • ஸ்னோடென்

    பொய்மையைச் சுட்டெரிக்க புறப்பட்ட அக்கினி குஞ்சு

    எஸ் வி வேணுகோபாலன்

    உலகின் ஆகப் பெரும் சுதந்திர நாடு என்று தன்னை அறிவித்துக் கொள்கிற அமெரிக்காவில் தான் “உஷ்…சத்தம் போடக் கூடாது” என்ற அதிகார மிரட்டல் அமலில் இருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை எல்லா உரிமைகளும் குடிமக்களுக்கு உண்டு. ஆனால் ‘நீங்கள் பேசுவது, எழுதுவது, கருதுவது எல்லாவற்றையும் வேவு பார்க்கும் உரிமை எங்களுடையது’ என்கிறது அமெரிக்க ஆட்சி அதிகாரம். சீட்டு ஆட்டத்தில் அடுத்தவர் கண்ணில் படாமல் தங்களது சீட்டுக்களை அத்தனை சாமர்த்தியமாய் மறைத்துக் கொண்டு ஆடுகிற பலே கில்லாடி ஆட்டக்காரர்கள் உண்டு. அப்போது அங்கே இருக்கவே செய்யாத வேறு ஒரு நபர் வேறு எங்கோயிருந்து அவரை அலைபேசியில் அழைத்து, இந்தச் சீட்டை வச்சுக்காதே, அத எடுத்து ஆடு ” என்று சொன்னால் அவருக்கு எத்தனை அதிர்ச்சியாக இருக்கும்?

    Snowden 1இப்படி உலகத்தைத் தனது உள்ளங்கையில் மை தடவிப் பார்த்துவிடுகிற வஞ்சக மந்திரவாதியாக பெரிய உரு எடுத்து நிற்கிறது ஏகாதிபத்தியம். மதுரை மீனாட்சி கோவிலுக்குள் நுழையும்போதே, நீங்கள் கண்காணிக்கப் படுகிறீர்கள் என்று வெளியே ஒரு பலகையில் எழுதி வைத்திருப்பதைப் பார்க்க முடியும். அப்படி எதுவும் எழுதி வைக்காமல் உலகம் முழுக்கத் தனது கண்காணிப்பில் கொண்டு வந்து வைத்திருக்கிறது அமெரிக்கா. வெறும் உளவு இல்லை அது, தனி நபர் சுதந்திரத்தின் மீதான களவு என்பதைத் தான் எட்வர்ட் ஸ்னோடென் என்ற 29 வயது இளைஞர் அம்பலப் படுத்தினார். அவர் சொன்னதை விட்டுவிட்டு அவரைச் சிறைக்குள் தள்ளத் துடித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. அவர் மீது என்ன குற்றம் சாட்டப் பட்டிருக்கிறது தெரியுமா, ஒற்று வேலை பார்த்ததாக !

    எட்வர்ட் ஸ்னோடென் அமெரிக்காவின் உளவுத் துறை நிறுவனமான தேசிய பாதுகாப்பு ஏஜென்சியில் (NSA), பூஸ் அலென் ஹேமில்டன் என்கிற தனியார் குழுமம் ஒன்றினால் காண்டிராக்டு வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தவர். ஆனால் உள்ளே என்ன நடக்கிறது என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பார்த்து அதிர்ந்து போய்விட்டார். இப்படி சொந்த மக்களையே உளவு பார்க்கும் தேசத்திலா நாம் வாழ்கிறோம் என்று வெறுத்துப் போனார். தொலைபேசி உரையாடல்கள், மின்னஞ்சல் வழி நடக்கும் விவாதங்கள், கடித போக்குவரத்துக்கள் என ஒன்று விடாமல் மூன்றாவது நபர் ஒருவர் தங்களுடனே பயணம் செய்து கண்காணிக்கிறார், படிக்கிறார், கேட்கிறார், பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறியாத மக்களுக்கு உண்மைகளை உடைத்துச் சொல்லிவிடுவது என்று முடிவெடுத்தார்.

    தக்க காரணம் சொல்லப்பட்டு வெளிப்படையான முறையில் எழுத்து பூர்வமான வகையில் யாரை எந்த இடத்தில் சோதனை செய்யப் போகிறோம் என்ற தகவல்nsa hq தெரிவிக்கப்படாமல் இருக்கும் வரை, குடிமக்களுக்குத் தமது உடல்,வீடு, தஸ்தாவேஜுகள் எல்லாவற்றையும் குறித்த பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது என நான்காவது திருத்தம் கொண்டுவரப்பட்ட அமெரிக்க அரசியல் சாசன சட்டம் 1791 கூறுகிறது. ஸ்னோடென் ஒரு தனி நபர். மனசாட்சி உள்ள ஒரு தனி நபர். தமது நாட்டு அரசியல் சாசன சட்டம் சொல்வதை – ஆட்சியாளர்கள் சத்திய பிரமாணம் எடுத்தவற்றை நம்பிக் கொண்டிருந்த, ஆனால் நடைமுறையில் அவை அத்துமீறப்படுவதை நேரடியாகக் கண்டு நிம்மதி குலைந்துபோன ஒரு தனி நபர். தனது மனம் தனக்கு இட்ட ஓர் ஆணையைத்தான் அவர் நிறைவேற்றினார். தமக்கு என்னவும் நேரலாம்,என்ன நேர்ந்தாலும் சரி என்ற தெளிவோடு தான் அவர் அதைச் செய்தார்.

    வெராக்ஸ் (உண்மை விளம்பி) என்ற புனைபெயரை வைத்துக் கொண்டு, ஸ்னோடென் இரண்டு முக்கிய பத்திரிகையாளர்களுக்கு சங்கேத மொழியில் மின்னஞ்சல்கள் அனுப்பி வைத்தார். பார்டன் ஜெல்மன் (வாஷிங்டன் போஸ்ட் ) மற்றும் க்ளென் க்ரீன்வால்ட் (கார்டியன்) இருவருக்கும், அவர் இணைத்து அனுப்பியவை 2038ம் ஆண்டு வரை வெளிப்படையாக்கப் படக் கூடாதவை என்று வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள். இந்த ஜூன் 6ம் தேதியன்று மேற்படி நாளிதழ்கள் இந்த ஆவணங்களில் உள்ளவை குறித்து அம்பலத்திற்குக் கொண்டு வந்தார்கள். மூன்று நாட்கள் கழித்து தமது உண்மை பெயரையும் வெளியிட்டு விடுமாறு ஸ்னோடென் கேட்டுக் கொண்டதை வைத்து அந்த இரு நாளிதழ்களிலும் அவரது பெயரும் மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. நான் செய்வது ஒவ்வொன்றும் நான் அறியாது வேவு பார்க்கப்படும் ஒரு தேசத்தில் வாழவே நான் விரும்பவில்லை என்று பேசிய சமயம், ஸ்னோடென் ஹாங்காங் சென்று அடைந்திருந்தார்.

    ஜார்ஜ் புஷ் காலத்தில் பல மடங்கு கூடிப் போயிருந்த ரகசிய .உளவு மற்றும் கண்காணிப்பு வேலைகளால் கொதித்துப் போயிருந்த அமெரிக்க மக்களிடம், தாம் வித்தியாசமாக நடந்து கொள்வோம் என்று தேர்தல் பிரச்சார நேரத்தில் சொன்னவர் பாரக் ஒபாமா. அவரைப் பற்றிய மதிப்பீட்டின் உயரத்தை வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறது ஸ்னோடென் கட்டவிழ்த்துவிட்ட சங்கதிகள். எனவே ஒபாமா உடனடியாகக் கருத்து சொல்ல வேண்டி வந்தது. அவர் என்ன சொன்னார் என்பது முக்கியமானது.ஸ்னோடென் வெளியிட்ட விஷயங்கள் உண்மையா, பொய்யா என்று தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் குறித்துக் கூட ஒபாமா கண்டுகொள்ளவே இல்லை. நமது அனைத்து நடவடிக்கைகளின் ரகசியங்கள் எதுவும் இப்படி கசிவதை அனுமதிக்க முடியாது. ஸ்னோடென் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப் படவேண்டும் என்றார். இப்போது ஸ்னோடென் சொந்த தேசத்திற்கு எதிராகக் குற்றம் அல்ல, துரோகம் இழைத்தவராக அரசினால் அடையாளப்படுத்தப் பட்டுவிட்டார். அவர்களுக்கு ஏன்இத்தனை காட்டமாகக் கோபம் வருகிறது என்றால் ஸ்னோடென் அம்பலபடுத்தி இருக்கும் உளவு வேலைகள் அப்படி!

    வெரிசான் என்னும் அமெரிக்காவின் இணையதள மற்றும் தொலை தொடர்பு நிறுவனத்தை அமெரிக்க அரசு அதிகார மிரட்டல் செய்து, அவர்களது சேவையைப் பயன்படுத்தி வருகிற எல்லா தொலைபேசி அழைப்புகளின் விவரங்களையும் தங்களுக்கு தெரிவிக்க உத்தரவு போட்டிருக்கிறது. உலகளாவிய அளவில் இணையதள சேவை வழங்கிக் கொண்டிருக்கும் ஆப்பிள், கூகிள், முகநூல், மைக்ரோசாப்ட், யாகூ, யூ டியூப் உள்ளிட்ட அமெரிக்காவின் ஒன்பது முக்கிய நிறுவனங்களிடமிருந்து தொடர்ச்சியான முறையில் விவரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறது அமெரிக்க அரசு. தங்களது வசமுள்ள விவரங்களைத் தோண்டி எடுத்துக் கொள்ள தாங்கள் யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்று இந்த நிறுவனங்கள் சொல்லிக் கொள்கின்றன. ஆனால் அரசின் வசம் எல்லா விவரங்களும் போய்க் கொண்டிருக்கின்றன.

    உலக நாட்டாமையாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் அமெரிக்க ஏகாதிபத்தியம் இப்படி சொந்த நாட்டு மக்களின் நிழலையே திருடிக் கொண்டிருப்பதை ஸ்னோடென் அம்பலப் படுத்தியது பேரதிர்ச்சி செய்தியாக மூண்டது. ஆனாலும், ‘இதெல்லாம் தவிர்க்க முடியாதது’ என்ற ஒரு கருத்தாக்கத்தையும் அந்த சமூக அமைப்பு விதித்திருப்பதை, கருத்துக் கணிப்பின் ஏற்ற இறக்கங்களிலிருந்து காண முடிகிறது. செப்டம்பர் 11, 2001 இரட்டை கோபுர தகர்ப்பு பயங்கர நிகழ்வை எந்த அமெரிக்கக் குடிமகனும், குடிமகளும் மறக்க முடியாது. ஏற்கெனவே உலக அளவில் தங்களுக்கு சவால், எதிர்ப்பு, பகைமை இருப்பதாக சித்தரித்துக் கொண்டே தான் இதர உலக நாடுகளுக்கு சவாலாக, அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் ஏகாதிபத்தியம் மக்களது பாதுகாப்பு உணர்வைத் தூண்டியே அவர்களை பாதுகாப்பற்றவர்களாக நடத்துகிறது.

    என் எஸ் ஏ தனது நாட்டு மக்களை மட்டும் உளவு பார்க்கவில்லை. பிரிட்டன் உதவியோடு உலக அளவிலான முறையில் இந்த வேலையைத் திறம்பட செய்து கொண்டிருக்கிறது. 2 பில்லியன் டாலர் – இப்போதைய மதிப்பில், 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உடா என்ற இடத்தில் பெரிய பாதுகாப்புப் பெட்டகம் ஒன்றை நிறுவிக் கொண்டிருக்கிறது. அதில் எந்த அளவுக்கு விவரங்கள் சேகரித்து வைக்க முடியும், தெரியுமா? இந்த பூமியில் வாழும் ஒவ்வொரு குடிமகனும் தலா பத்து லட்சம் டிவிடி வைத்திருந்தால் அவற்றின் மொத்த சேமிப்பு அளவு எவ்வளவோ அந்த அளவுக்கு!

    ஸ்னோடென் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கும் செய்திகளால் பிரிட்டனிலும் மக்கள் அரசைக் கடுமையாகக் குறை கூறத் தொடங்கி உள்ளனர். ஆனால் பிரதமர் கேமரூன் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவே இல்லை. “சட்டத்தை மதிக்கும் யாரும் இத்தகு உளவு நடவடிக்கைகளைக் கண்டு அஞ்சுவதற்கு எதுவுமில்லை, அவரவர் பாதுகாப்புக்காக சிறிது விலை கொடுத்துத் தான் ஆகவேண்டும்” என்று அரசு தரப்பில் சொல்லப்பட்டுவிட்டது.

    உலக அளவில் நடக்கும் கூட்டங்களில் எந்தெந்த நாட்டிலிருந்து யார் யார் வந்து என்னென்ன சொல்லப் போகின்றனர் என்று முன் கூட்டியே திருட்டுத் தனமாக ஒட்டுக் கேட்டுப் பதிவு செய்து கொள்ளும் வேலையையும் என் எஸ் ஏ உரிய ஆட்களை வைத்து செய்து கொண்டுதான் இருக்கிறது. ஜி 20 கூட்டம் நடக்கையில்,பொருளாதார நிபந்தனைகள், நிர்ப்பந்தங்கள் போன்ற நுட்பமான விஷயங்கள் குறித்து முன்கூட்டியே விவரங்களை கள்ளத் தனமாக அறிந்து வைத்திருந்து பேச்சு வார்த்தைகளின் போது அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளின் சார்பாக பங்கேற்கும் பிரதிநிதிகள் உரிய விதத்தில் அவற்றைப் பயன்படுத்தி தங்களுக்கு சாதகமான முடிவுகள் எடுக்கும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்துவது உள்பட இப்போது அம்பலத்திற்கு வந்திருக்கிறது. 2009ல் லண்டனில் நடந்த அத்தகைய உச்சி மாநாடு ஒன்றில் அமெரிக்க உளவு நிறுவனத்துடன் பிரிட்டன் நிறுவனமான ஜி சி ஹெச் கியூ (UNITED KINGDOM’S GOVERNMENT COMMUNICATIONS HEAD QUARTERS) இணைந்து வேவு பார்த்திருக்கின்றனர். மேற்படி மாநாட்டில் நமது பிரதமர் மன்மோகன் சிங்கும் கலந்து கொண்டிருந்தார் என்பதையும் சேர்த்து முந்தைய வரியை வாசிக்கவும்.

    இப்போது ஆபத்தின் இன்னொரு பரிமாணத்தை கவனிப்போம். என் எஸ் ஏ வேவு பார்க்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. நம்மைக் குறித்த விவரங்களின் அளவு, 6.3 பில்லியன் விவரங்கள் அதாவது 6300 கோடி ! எப்படி இவ்வளவு விவரங்கள் போகின்றன என்பதைச் சொல்ல சித்தர் வித்தை எதுவும் தேவை இல்லை. கூகிள், யாஹூ, ஹாட் மெயில் ஆகிய மூன்று முக்கிய நிறுவனங்கள் வழியாகத் தான் மின்னஞ்சல் பரிமாற்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம். அவ்வளவு ஏன், இந்தக் கட்டுரையை ஜி மெயிலில் தான் தீக்கதிருக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறேன். அதைப் பெரும்தீக்கதிர் ஆசிரியர் மின்னஞ்சல் முகவரியும் ஜி மெயிலில் தான் இருக்கிறது. தனி மனிதர்களை விடுங்கள். அரசு நிறுவனங்கள், அமைச்சகங்கள், பிரதம மந்திரி அந்தரங்க செயலாளர் உள்பட அனைத்து வகையிலும் செய்திகள், கொள்கை முடிவுகள், விவாதங்கள், கருத்துக்கள், முரண்பாடுகள் எல்லாம் அமெரிக்காவுக்கு முதலில் போய்விட்டுத் தான் மனிதர்களைப் போய்ச் சேரும் அளவு என் எஸ் ஏ தகவமைப்பு செய்துகொண்டிருக்கிறது.

    ஆதார் அட்டை வாங்கியாயிற்றா என்று பய பக்தியோடு நடுத்தர வர்க்கம் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டிருக்கிறது. தேடித் தேடித் போய் நின்று அப்பாடா கடமையை முடித்தோம் என்று பெரிய பெருமிதம் பொங்க வாங்கிக் கொண்டு வந்து நிற்கிறோம். ஆதார் விவரங்களை தக்க வைத்துக் கொள்ளவும்,விவரங்களை உரிய இடத்தில் உரிய வகையில் பாதுகாத்துப் பொருத்தி வைக்கவும் மூன்று அமெரிக்க நிறுவனங்களிடம் தான் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனங்கள் அமெரிக்க அரசு கேட்கும் எந்த விவரத்தையும் மறு பேச்சின்றி எடுத்துக் கொடுத்தாக வேண்டிய இடத்தில் இருப்பவை என்பதை மறந்துவிடக் கூடாது.

    Julian Asangeஇறைவனது சக்தியைப் பாடும் பக்தர்கள் “அவன் அருளாலே அவன் தாள் வணங்கி” என்று பாடுவார்கள். அமெரிக்கக் கொள்கையை எதிர்ப்பதானாலும் அவர்கள் அருளால், அவர்களுக்கு முதல் தகவல் தந்துவிட்டுத் தான் நாம் எதிர்க்கவே முடியும். அவ்வளவு ஏன், இந்தக் கட்டுரையும் அவர்களது பார்வைக்கு முதலில் போயிருக்கும். மிக மிக மோசடியான, மோசமான, நய வஞ்சகமும், சூழ்ச்சியும் இணைந்த வலைப்பின்னலாகத் தனது உலக அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது ஏகாதிபத்தியம். இதன் சில முனைகளை ஏற்கெனவே வெளிக் கொண்டுவந்த விக்கி லீக்ஸ் நிறுவனத்தின் ஜூலியன் அசாஞ்சே இன்னமும் பிரிட்டன் மண்ணில்தான் இருக்கிறார். தமக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கும் ஈகுவடார் நாட்டு தூதரகத்தின் உள்ளே காத்திருக்கும் அவரை ஈகுவடார் நாட்டுக்கு செல்ல இன்னமும் பிரிட்டன் அனுமதிக்கவில்லை. பிராட்லி மேனிங் என்ற இராணுவ வீரர், இராக் போரில் அமெரிக்கா செய்த அத்து மீறல் போர்க் குற்றங்களை புகைப்படம் எடுத்ததை விக்கி லீக்ஸ் நிறுவனத்திற்குத் தந்துதவிய குற்றத்திற்காக 2010 முதல் தனிமைச் சிறையில் வைக்கப் பட்டிருக்கிறார். அண்மையில் இராணுவ நீதிமன்றம் அவர் மீது சுமத்தப் பட்டிருக்கும் குற்றச் சாட்டுக்களில் இரண்டைத் தவிர அனைத்தும் நிரூபிக்கப் பட்டிருப்பதாகவும், மேனிங் குற்றவாளி தான் என்றும் சொல்லிவிட்டது. அவர்கள் கணக்குப் படி, இந்தக் குற்றங்களுக்காக மேனிங்குக்கு என்ன தண்டனை வழங்கப் படலாம் என்று யோசிக்கும்போது, கிட்டத் தட்ட 130 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் பட வேண்டியிருக்கும்.

    ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற புகழ் பெற்ற நூலை எழுதிய அமெரிக்கர் ஜான் பெர்கின்ஸ், தனது வாழ்விற்குத் துணிந்து தான் உலக வங்கியின் சதி நடவடிக்கைகள் குறித்து புத்தகத்தை வெளியிட்டார். ஆரன் ஸ்வார்ட்ஸ் என்ற கணினி நிபுணரான 26 வயது இளைஞர் (ஆர் எஸ் எஸ் பீட் என்னும் வலைத்தளங்களிளிருந்து உடனுக்குடன் விவரங்கள் கிடைக்கப்பெற உதவும் மென்பொருளை உருவாக்கியவர்), அமெரிக்காவின் மாசாசூட்ஸ் பல்கலைக் கழகத்தின் ஜோ ஸ்டார் காப்பகத்தில் விலைக்காக சேமித்து வைக்கப்பட்டிருக்கும் கணக்கற்ற அறிவியல் ஆய்வுகள், விவரங்கள் அடங்கிய உலகின் வாசலை தமது மென்பொருள் ஒன்றின் உதவியால் உடைத்துத் திறந்து ஆர்வமுள்ள யாரும் திறந்து படிக்கட்டும், பயன்படுத்தட்டும் என்று வழிகாட்டியதற்காக விசாரணைக்கு உட்படுத்தப பட்டார். சித்திரவதை தாளாமல் இந்த ஆண்டு ஜனவரி 11 அன்று தன்னை மாய்த்துக் கொண்டார்.

    சொந்த நாட்டு மக்களையும் உலகையும் வேவு பார்க்கும் அரசை அம்பலப் படுத்திய ஸ்னோடென் இப்போது ஹாங்காங்கிலிருந்து மாஸ்கோ சென்று அங்கே காத்திருக்கிறார். அவர் ரஷ்யாவில் இருப்பதில் தங்களுக்கு பெரிய ஆட்சேபனை இல்லை, ஆனால் அவர் இந்த அம்பலப் படுத்தும் வேலைகளை விட்டுவிட வேண்டும் என்றும்,என்றும் ரஷ்ய அதிபர் புடின் சொல்லியிருக்கிறார். ஸ்னோடெனுக்கு அடைக்கலம் தர ஈகுவடார் தயார் என்று அந்த நாட்டுத் தலைவர் ரபேல் கொரியா சொல்லியிருக்கிறார். நிலைமைகள் எப்படி விரியும் என்று பொறுத்துத் தான் பார்க்க முடியும். அண்மையில் வந்த செய்தியின்படி, ரஷ்யா அவருக்கு அடைக்கலம் வழங்கிவிட்டது. அதனால் அமெரிக்கா கடும் கோபத்தில் இருக்கிறது.

    இந்திய ஆட்சியாளர்கள் ஸ்னோடென் குறித்து எதுவும் வாய் திறக்கவில்லை. தங்களது நாடு உள்பட அமெரிக்காவின் ரகசிய கண்காணிப்பில் இருக்கிறது என்பதைப் பற்றி கவலை கொள்ளாதவர்கள் ஸ்னோடென் பற்றி எதற்கு யோசிக்கப் போகின்றனர்? அண்மையில் பிரண்ட்லைன் இதழுக்கு நேர்காணல் அளித்திருக்கும் சிந்தனையாளர் தாரிக் அலி, ஸ்னோடென் துரோகி அல்ல, விடுதலை போராளி என்று வருணித்திருக்கிறார். ஆனால் பாவம், அவர் தனி நபர். மக்கள் இயக்கமாகப் புறப்படாமல் அரசுகளின் பயங்கரவாதத்தை முறியடிக்க முடியாது என்பதையும் அவர் விளக்குகிறார். ஸ்னோடென் நேர்மையான உள்ளத் துடிப்பு கொண்டு சிறகடிக்கும் இளைய தலைமுறையினரின் குறியீடு. அக்கினி குஞ்சு. பொய்மையைச் சுட்டெரிக்க எரியும் தீ. அது நின்று எரிவது அவசியம். அந்தத் தீயைப் பரப்புவது எதிர்கால உலக சமூகத்திற்கு நல்லது.

    ***********
    நன்றி புதிய ஆசிரியன் (ஆகஸ்ட் 2013)

    Share
  • ரசனையும், சொல் நயமும் தோய்ந்த பாடல்களில் எந்நாளும் வாழ்பவர்

    அஞ்சலி: கவிஞர் வாலி

    ரசனையும், சொல் நயமும் தோய்ந்த பாடல்களில் எந்நாளும் வாழ்பவர்

    vaali 2

    எஸ் வி வேணுகோபாலன்

    ஆனைக்கட்டித் தெரு ரவி தான் எனக்கு முதன்முதலில் கவிஞர் வாலியின் கவிதை ஒன்றை ரசனையுடன் வாசித்துக் காட்டியது. கண்ணதாசனையும், வாலியையும் திரைப்படப் பாடல்கள் மூலமாக மட்டுமே அறிந்திருந்த எனக்கு, ரவி தான் அவர்களைக் கவிஞர்களாக அடையாள படுத்தியது. என் அண்ணனுடைய கல்லூரித் தோழர் அவர் (இப்போது எங்கே இருக்கிறீர்கள் ரவி ?). எட்டாம் வகுப்பு படிக்க நான் காஞ்சிபுரம் செல்ல நேர்ந்த அந்தக் காலம் எனக்கு நிறைய இலக்கிய வாசல்களைத் திறந்து வைக்கத் தொடங்கியது. எழுபதுகளில் குமுதம் இதழில் வாராவாரம் கண்ணதாசனும், அதே நேரத்தில் ஆனந்த விகடனில் வாலியும் கவிதை எழுதிக் கொண்டிருந்தனர். முச்சங்கப் புலவர் முதல் முந்தா நாள் புலவர் வரை என்று தொடங்கிய வாலியின் நான் என்ற தலைப்பிலான கவிதை ஓர் அருமையான அறுசீர் விருத்தம். கிளிப் பொருத்திய அட்டை ஒன்றைக் கையில் வைத்தபடி சிந்தனை முகமாக உட்கார்ந்திருக்கும் வாலியின் புகைப்படம் இன்றும் என்னுள்ளத்தில் பொருந்தியிருக்கிறது. .ஆனால், வாலி, மக்கள் மத்தியில் திரைப்படப் பாடல்களால் தான் பிரபலமாக அறியப்பட்டிருந்தார். வாலியின் மறைவு சாதாரண மக்களையும் பேச வைப்பது அதனால் தான்..

    ஐந்து பத்தாண்டுகள். பத்தாயிரத்திற்கு அதிகமான பாடல்கள். எத்தனையோ நடிக நடிகையருக்காக, எத்தனையோ இசையமைப்பாளர்களுடன் அமர்ந்து எத்தனையோ பாடகர்கள் குரல் வழி தமது அனுபவத்திலிருந்தும், கற்பனையின் வெளிப்பாடாகவும் விரிந்த அவரது பாடல் உலகம் திரை இசைப் பாடல்கள் குறித்த ஆய்வுகளில் தவிர்க்க முடியாத இடத்தில் .இருக்கிறது. குறும்பும், நையாண்டியும் நிறைந்த பாடல் வரிகள் முதற்கொண்டு காதல், கொண்டாட்டம், சோகம், தனிமை என பல வித உணர்வுகளையும் தத்தகாரம் என்று சொல்லப்படும் திரை இசை மெட்டுக்குள் கொண்டு வந்தவர் அவர். இனிமையும், உருக்கமும், வேகமும், எழுச்சியும் இசையமைப்பாளரின் திறமை, கற்பனை, இசைக் கலைஞர்களின் உழைப்பு என்றிருந்தாலும் பாடல்களைக் காலம் கடந்து நிற்கச் செய்வதில் பாடல் வரிகளுக்கு முக்கிய இடம் இருக்கிறது. சாதாரண மக்கள் மனத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால் அசாத்திய எளிமையும் வேண்டியிருக்கிறது. கருத்தும் பளிச்சென்று வந்து விழுந்தாக வேண்டும். இந்தத் திறன் பெற்றவர்கள் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்க முடிகிறது. இதில் வாலிக்கு தவிர்க்க முடியாத தனியிடம் இருக்கவே செய்கிறது. தான் இயற்கை எய்தும் காலம் வரை அவருக்கு அந்த ஆற்றல், ஒருங்கிணைப்பு, ஒத்திசைவான உளவியல் வாய்த்திருந்தது என்பது முக்கியமானது.

    எம் ஜி ஆரின் ஒரு முழு படத்திற்கு அத்தனை பாடல்களையும் எழுதி அவை வெற்றி பெற்றது வாலியை முக்கிய கவிஞராக அடையாளப்படுத்தியது. அந்தப் படம் படகோட்டி. ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார், ஒவ்வொரு நாளும் துயரம், ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம் என்ற வரிகளின் நுட்பம் அசாத்தியமானது. எம் ஜி ஆர் தனது படங்களில் பாடலுக்கு தனி கவனத்தை எடுத்துக் கொள்வார் என்பது எல்லோரும் அறிந்தது. இந்த சமூக தாக்கத்தை அவர் வாலியிடம் கண்டெடுத்ததை அடுத்தடுத்து தமது படங்களில் இடம் பெறச் செய்து கொண்டார். சிவாஜி நடித்த பாபு படத்தின் புகழ் பெற்ற இதோ எந்தன் தெய்வம் என்பது வாலியின் அருமையான பாடல்களில் ஒன்று. அதிலும் அவர் தி மு க வின் ஏழையின் சிரிப்பில் இறைவன் என்ற முழக்கத்தை கடைசி சரணத்தில் கொண்டு வந்திருப்பார்.

    அதே பாபு படத்தில் இன்னொரு பாட்டு. வரதப்பா கஞ்சி வரதப்பா என்பது பழைய காலத்து மடக்கணி சரக்கு..அதைப் பல்லவியாகக் கொண்டு சிவாஜி நடித்த பாபு திரைப்படப் பாடல் ஒன்றை எழுதியிருப்பார் வாலி. அந்தக் காலத்தில் கூடையில் கேரியர்களை (பம்பாய் டப்பாவாலா போல) எடுத்து வரும் பெண் பாத்திரத்தை முன்வைத்து அந்த வீதி நடனப் பாடல். கஞ்சி கலயம் தன்னைத் தலையில் தாங்கி வஞ்சி வரதப்பா என்று தொடரும் பல்லவி.

    அதன் ஒரு சரணத்தில் இப்படி வரும்:

    குலாம் காதர் புலாவிலே கறி கெடக்குது – அது
    அனுமந்தராவ் அவியலிலே கலந்திருக்குது
    மேரியம்மா கேரியரில் எறா இருக்குது – அது
    பத்மநாப அய்யர் வீட்டுக் குழம்பில் மிதக்குது

    சமையல் எல்லாம் கலக்குது – அது
    சமத்துவத்தை வளர்க்குது

    சாதி சமய பேதமெல்லாம்
    சோத்தைக் கண்டா பறக்குது – ஆமாம்
    சோத்தைக் கண்டா பறக்குது

    பல வித்தியாசமான பாடல்களை திரைப்படங்களுக்காக எழுதியவர் வாலி. புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ( இரு கோடுகள் ) பாடல் ஓர் ஆணின் வாழ்வில் ஒருவர் அறியாமல் மற்றவர் இடம் பெற்றுவிடும் இரு பெண்களின் குரலாக ஒலித்தது. சக்கை போடு போடு ராஜா (பாரத விலாஸ்) மனசாட்சியோடு பேசித் திண்டாடும் நாயகனின் பாடல். மௌன ராகம் படத்தின் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு தன்மையில் அமைந்திருந்தது. மணமுடித்தவனோடு மனம் பொருந்தி இல்லறம் காண முடியாது தவிக்கும் பெண்ணும், அவளைப் புரிந்து கொள்ள இயலாது தத்தளிக்கும் ஆணுமான பாத்திரப் படைப்புக்கு (மன்றம் வந்த தென்றலுக்கு, நிலாவே வா ) வாலியின் பாடல்கள் மிகப் பெரிய அளவில் மதிப்பு கூட்டியிருந்தன. அபூர்வ சகோதரர்கள் படத்தின் பாடல்கள் அனைத்துமே வேகம் பொருந்திய ரசனையில் வெற்றி பெற்றவை என்றாலும், உன்ன நெனச்சு பாட்டப் படிச்சேன் என்ற சுய கழிவிரக்கப் பாடல் தனித்துவம் வாய்ந்தது.

    திரைப்படப் பாடல்களில் பல்லவி சரியாக அமைவது மிக மிக முக்கியமான அம்சம். கண்ணதாசன், வாலி இருவரின் பெருமைக்குரிய விஷயம் இந்தப் பல்லவி. பத்ரகாளி படத்தில் ஜேசுதாஸ், பி சுசீலா குரல்வழி சிறப்பு பெற்ற வாலியின் “கண்ணன் ஒரு கைக் குழந்தை” பாடலுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அந்த மெட்டு அப்படி. எல்லா வரிகளையும் இந்த முதல் வரியில் வரும் சொற்களைக் கொண்டே தாள லயத்திற்குப் பிசகின்றிப் பாடிவிட முடியும். பூக்காரி படத்தில் முப்பது பைசா மூணு முழம் என்று ஒரு பல்லவி வரும். பத்து பைசா ஒரு முழம் என்று பாடிப் பாருங்கள். கணக்கு தான் சரியாக வரும். மெட்டு ஓடிவிடும். அதே போல் பூக்காரப் பெண்கள் விரைந்து விற்றுத் தீர்க்க எப்படி சொல்லி வாடிக்கையாளரை அழைப்பார்களோ அந்த சங்கதியும் இந்தப் பல்லவியில் இருக்கிறது. பூக்காரப் பெண்ணிடம் வம்பு செய்ய ஆட்கள் இருப்பதும், அவள் அதற்கு சரியான பதிலடி கொடுப்பதும் அந்தப் பாடலில் உண்டு. அதன் கடைசி சரணத்தில் அரசியலும் இருக்கிறது (இந்தா தம்பி செந்தாமரைப் பூ, இருக்கிற துட்டை நீ போடு. நம் கண்ணாயிருந்து நெஞ்சில் நிறைந்த அண்ணா சிலைக்குப் பூ போடு என்ற வரிகளின் சந்தமும், எளிமையும் கவனிக்கத் தக்கது).

    எம் ஜி ஆர் தனிக்கட்சி தொடங்கிய நேரத்தில், மு க முத்து திரையுலகில் நுழைந்தபோது அதை மனத்தில் வைத்து அவருக்காக எழுதப் பட்ட வரிகள் உள்ளிட்டு வாலியின் பாடல்கள் பலவற்றில் அரசியல் வாடை வீசும். ஜெயசங்கர் படத்தின் பாடல் ஒன்றில், ராமரை வருணிப்பது போல், முழுக்க முழுக்க எம் ஜி ஆர் புகழ் பாடும் ஜானகியின் நாயகனே ராமச்சந்திரா என்ற பாடலும் வாலி தான் எழுதியிருக்க முடியும். திரைப்படங்கள் சிலவற்றிற்கு வசனமும் எழுதியிருக்கும் வாலி, கலியுகக் கண்ணன் படத்தில் தேங்காய் சீனிவாசன் கடவுளைப் பார்த்துக் கேள்வியாகக் கேட்கும் ஓரிடத்தில் “ஓய் உமக்கு கருணாநிதின்னு பேரு வச்சது சரிங்காணும், எல்லாக் கேள்விகளுக்கும் ரெடிமேடா பதில் வச்சிருக்கீர் என்று எழுதியிருப்பார். மேடை நாடகங்களும் எழுதியிருக்கிறார் வாலி. அவரது சம்பூர்ண ராமாயணம் என்ற சமூக நாடகத்தில், புராண பாத்திரங்களும் வருவார்கள். அனுமன், ராமனைப் பார்த்து ஏ டி எம் கே ராமச்சந்திரா என்று அழைப்பார். ராமன் அதிர்ந்து போய் என்ன இது அரசியல் என்பார். அதில்லை, நீங்கள் அயோத்தியாவின் தசரத மகாராஜாவுக்கும் கவுசல்யாவிற்கும் பிறந்தவர் தானே, உங்கள் இனிஷியலைத் தான் அப்படி சொன்னேன் என்பார். அரங்கம் அதிரும். கவியரங்க மேடைகளிலும் அவரது அரசியல் வெடிகள் பிரசித்தம்.

    திரையுலகில் கண்ணதாசன், வாலி இருவருக்குமான பொற்காலம் ஒன்று பகிர்ந்து கொள்ளப் பட்டிருந்தது. தொலைக்காட்சிப் பெட்டியோ, கணினியோ வந்து சேராத – ரசிகர்கள் வானொலிக்கு மிகவும் கடன்பட்டிருந்த அந்த காலத்தில், சிவாஜி-எம் ஜி ஆர் படங்களை வைத்து விவாதங்களும், முரண்பாடுகளும், விளையாட்டுச் சண்டைகளும் நடந்தது போலவே, இந்த இரு கவிஞர்களின் பாடல்களை வைத்தும் ஒரு தளத்தில் அப்படியான சர்ச்சைகள் நடப்பதுண்டு. யார் எந்தப் பாடல் எழுதியது என்பதில் கருத்து மாறுபாடுகளும் தோன்றிவிடும். இதயத்தில் நீ படத்தில் வாலி எழுதிய உறவு என்றொரு சொல் இருந்தால் பிரிவு என்றொரு பொருள் இருக்கும் என்ற பாடலும் (பழகி வந்த புதிய சுகம் பாதியிலே மறைந்தாலும் என்று தொடங்கும் அதன் தொகையறா (?) சிறப்பாக இருக்கும்), கண்ணதாசன் எழுதிய ஆனந்த ஜோதி படத்தின் நினைக்கத் தெரிந்த மனமே என்ற பாடலும் ஒன்றே போல் மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய உணர்வுகளை உள்ளடக்கியவை.

    வாணி ஜெயராம் என்ற அற்புதமான பாடகியை தமிழ்த் திரை இசையில் எம் எஸ் வி அறிமுகம் செய்த மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ பாடல் வாலியின் இனிய பாடல்களில் ஒன்று. நானே நானா யாரோ தானா (அழகே உன்னை ஆராதிக்கிறேன்), என் கல்யாண வைபோகம் உன்னோடுதான், மல்லிகை முல்லை பூப்பந்தல் (அன்பே ஆருயிரே) போன்ற பல பாடல்களை வாணி பாடினார். இசை ராகங்கள் குறித்து வாலிக்கு ஞானம் இருந்தது அவரது பாடல்களில் அப்படியே வந்திறங்குவதைப் பார்க்க முடியும். நீ ஒரு ராக மாலிகை என்ற பாடலில் பல ராகங்களின் பெயரை அத்தனை ரசமாக வருணிப்பின் வரிகளுக்குள் வாலி.

    எப்போதும் சத்தமாகப் பாடும் எல் ஆர் ஈஸ்வரி, ‘காதோடு தான் நான் பாடுவேன்’ என்று மெல்லிய குரலில் பாடிய அந்தப் பாடல் வாலி எழுதியது. அது இடம் பெற்ற வெள்ளிவிழா படத்தில் அதன் இசை அமைப்பாளர் இன்னொரு சாதனையும் செய்தார். தனது இசையமைப்பில் வேறு ஓர் இசை அமைப்பாளரான எம் எஸ் விஸ்வநாதனைப் பாடவைத்தார். எம் எஸ் வி பாடிய உனக்கென்ன குறைச்சல் என்ற அந்த அருமையான பாடலில், தனிமையை இப்படி விவரிப்பார் வாலி: கடந்த காலமோ திரும்புவதில்லை. நிகழ் காலமோ விரும்புவதில்லை. எதிர்காலமோ அரும்புவதில்லை. இது தானே அறுபதின் நிலை. ஆனால் இளமை நம்பிக்கை துள்ளும் மடை திறந்து பாடலில் (நிழல்கள் – எஸ் பி பாலசுப்பிரமணியன்) நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம், இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம், வருங்காலம் வசந்த காலம் என்று எழுதியிருப்பார் அவர்.

    திரைக்கதையை பாடல்களில் சொல்லிவிடுவது வேறெங்கும் கிடையாது என்று ஒரு முறை எழுத்தாளர் அசோகமித்திரன் குறிப்பிட்டார். அதை அத்தனை கச்சிதமாகச் செய்ததில் வாலியும் ஒருவர். தசாவதாரம் படத்தின் ‘கல்லை மட்டும் கண்டால்’ பாடலில் சைவ வைணவ முரண்பாடுகளைக் கருவாகக் கொண்ட அடிப்படை விஷயத்தைக் கொண்டு வந்திருப்பார். ஆனால் மதங்களைக் கடந்து நேசிக்கும் மனம் அவருக்கு இருந்ததை அவரது எழுத்துக்களிலும், பேச்சுக்களிலும் அவர் வெளிப்படுத்தி வந்ததுண்டு. நீ இல்லாத இடமே இல்லை என்று தொடங்கும் அல்லா அல்லா என்ற பிரபல பாடல் அவர் எழுதியது தான்.

    அவரது “அம்மா” என்ற கவிதை தொகுப்புக்கு எழுதிய முன்னுரையில் கி வா ஜகந்நாதன், சிருங்கார ரசம் என்பது கத்தியில் நடப்பதைப் போன்றது, பாரதி எழுதியதையே வ ரா விமர்சித்திருப்பார். அவர் இந்த தொகுப்பைப் பார்த்தால் வாலியின் சில கவிதை வரிகளை என்ன சொல்வார் என்று எழுதியிருந்ததாக நினைவு. கவிதையை விடவும், திரைப்படப் பாடல்களில் வாலி எத்தனை விரசமாகவும் எழுதித் தர சித்தமாக இருந்தார். கொச்சையான ரசனை தூண்டும் வரிகளையும், வலிய எழுதித் தள்ளிய வெற்று அடுக்குமொழி சொற்கள் நிரம்பிய கவிதைகளையும் வாலி மிக இலகுவாக தவிர்த்திருக்க முடியும். அத்தனை அனுபவ மொழியும், சொல் வளமும் அவருக்கு வாய்த்திருக்கவே செய்தது. தாள லயமும், சந்தமும், சொல் நயமும், இலக்கிய வாசிப்பும் அவருக்குக் கை கூடியிருந்தது. ஆனாலும் அவர் அப்படியான பாடல்களில் ஒரு போதை உருவாக்கிக் கொண்டார்.

    நான் என்ற அவரது கவிதையில் ஓரிடத்தில், உள்ள வயல் நெடுக உணர்வென்னும் ஏர் கொண்டு/ மெல்ல உழுதுவிட்டு மேவுகின்ற கற்பனையாம்/ நல்ல விதை தூவி நற்கவிதை பயிராக்க/ வல்ல புலவர்தம் வரிசையிலோர் உழவன் நான் என்று சொல்லியிருப்பார். 82 வயதில் அவர் மரணமுற்ற போது, இன்றைய தலைமுறையினர் அவரை அறிந்திருக்கும் வியப்புக்குரிய விஷயம், அவரது தொடர்ச்சியான எழுத்தினால் மட்டும் சாத்தியமானது அல்ல, மறக்க முடியாத வரிகளில் இப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் அவரது பழைய பாடல்களில் அவரது திறமையின் வேர்கள் ஊடோடி இருப்பது தான் காரணம். அதைவிடவும் முக்கியமானது, தமது வாழ்நாள் முழுக்க தமக்குப் பேரும் புகழும் வாய்த்திருந்தாலும், கர்வம் ஓங்கிவிடாது மற்றவர்களைப் பற்றி உன்னதமாகவும், மேலான சொற்களிலும் மதித்துப் பேசிவந்த அவரது வாழ்க்கை அறமும் கவனிக்கத் தக்கது. ரசனையும், சொல் நயமும் மிக்க பல வித்தியாசமான பாடல்களை திரை உலகுக்குத் தந்த வாலியின் நினைவுகள் நலம் வாழ எந்நாளும் நல்வாழ்த்துக்கள் (மறுபடியும்) !

    ***************
    நன்றி வண்ணக்கதிர் ஆகஸ்ட் 4, 2013

    Share
  • ஓர் அதிர்ச்சி மரணம் எழுப்பும் நினைவலைகள்……..

    எஸ் வி வேணுகோபாலன்

    இளவரசன் மரணம் மிகுந்த அதிர்ச்சிக்குரிய விதத்தில் நேரிட்டுள்ளது. எட்டு மாத தொடர் போராட்டம், அலைக்கழிப்பு, மன உளைச்சல், இருபத்து நான்கு மணி நேரமும் அடுத்தது என்ன, அடுத்தது என்ன என்றே நாற்புறமும் நடுநடுங்கிப் பார்த்துக் கொண்டிருக்குமாறு மிரட்டிக் கொண்டிருந்த சாதிய சக்திகளின் சவால்கள் நிரம்பிய அச்சம் நிரம்பிய சூழல்……இவற்றினிடையே தத்தளித்துக் கொண்டிருந்த இரு மலர்களில் ஒன்று உதிர்ந்து விழுந்தே விட்டது. உளவியல் ரீதியாக ஏற்கெனவே அவர்கள் மீது வீசப்பட்டிருந்த கட்டாரி, இப்போது உடலியல் ரீதியாக அந்த இளைஞனின் மரணத்தை அறிவித்திருக்கிறது. வாழத் துடித்த இளைஞனின் அகால மரணம் இது என்பது கவனத்திற்குரியது.

    ilavarasan with his mother

    ஊடக விவாதங்கள், பெரும்பாலும் அது தற்கொலையா கொலையா என்று திருப்பிவிடப்பட்டது. ஒரு நண்பர் சொன்னார், தமக்கு வந்த முதல் செய்தி இப்படி இருந்ததாம்: ‘இளவரசனை தற்கொலை செய்துவிட்டனர்’ என்று. வாய் தவறி சொல்லப்பட்டது போல் தெரியும் இந்தச் சொற்களை வேறு முறையில் வாசித்தால் எத்தனை ஆழமான உண்மையும், சமூக அதிர்ச்சியும் இந்த வாக்கியத்தில் நிரம்பியிருக்கிறது. காதல் மணத்தில் இணைந்த இளவரசனும், திவ்யாவும் ஒரு சேர இருந்தவரைக்கும்கூட ஒரு வன்மம் மிகுந்த தாக்குதலை எந்த நேரமும் எதிர்பார்த்திருந்த வாழ்க்கையாகத் தான் அது இருந்திருக்கிறது. ஆனால் அண்மைக் காலத்தில் மிக வேகமாக நிகழ்ந்துவிட்ட சில நடப்புகளை அடுத்து திவ்யா தாம் தமது தாயோடு செல்ல விரும்புவதாக நீதிமன்றத்தில் தெரிவித்துப் பிரிந்து சென்றுவிட்ட பிறகு, முன்னைவிடவும் பதட்டம் கூடிய சூழலின்வசம் இளவரசன் வாழ்க்கை தள்ளப்பட்டது என்பதை நாம் மறந்துவிட முடியாது. இந்தப் பின்புலத்தில் நேர்ந்திருக்கும் அவரது மரணம் ஓர் அராஜக அரசியல் வன்முறைக் களத்தில்பலி வாங்கப் பட்ட உயிர் என்பதை எப்படி மறுக்க முடியும்?

    உயிர்களையே பலி கேட்கும் சமூக திரட்டல், இப்போது குதித்துக் கொண்டாடவோ, கொக்கரிக்கவோ என்ன சாதித்தது என்பது வேதனை தரும் கேள்வி. தாமாக உள்ளன்போடு பேசிய அந்த அப்பாவிப் பெண்ணிடமிருந்து பின்னர் எத்தனை சொற்கள் மாறி மாறி பிடுங்கி எடுக்கப் பட்டன. தந்தையும் இல்லாத நிலையில், தாம் தமது தாயோடு செல்ல விரும்புவதாகவும், ஆனால் தமது கணவர் இளவரசன்பால் தமக்கு எந்த வருத்தமும் இல்லை என்று முதலில் சொன்ன அவர், பிறகு அடுத்தடுத்துப் பேசுகையில் வேறு முறையிலும் கருத்துக்கள் சொன்னதாக ஊடகங்கள் தெரிவித்தன. சாதி இத்தனை பெரிய அம்சமாகத் தங்களது திருமண வாழ்வில் குறுக்கிடும் என்று தாம் உணர்ந்திருக்கவில்லை என்று சொன்ன அவர், அம்மா விருப்பத்தையும் பெற்று மீண்டும் இளவரசனுடன் இணைவேன் என்றும் சொன்னார். ஆனால், பிறகு தாம் அப்படி சொல்லியிருக்கவில்லை, இனி இளவரசனோடு இணைவது என்ற பேச்சே இல்லை என்று சொல்லிவிட்டதாக இறுதியில் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டது.

    divya 2

    தமது உள்ளத்தின் அன்பில் தோய்த்தெடுத்த சொற்களை அந்தப் பெண் தமது உதடுகளை நோக்கி எடுத்துக் கொண்டுவருவதற்குள் அதன் பாதையிலேயே அந்தச் சொற்களை வழி மறித்து, அடித்துத் திருத்தி வலியும், வேதனையும் நிரம்பிய வேற்று மொழி ஒன்றை இரத்தப் பிசுக்கோடு வெளியேற்ற வைத்ததில் என்ன ஆனந்தம் ஆதிக்க சக்திகளுக்கு? சொல்லப்பட்டவையும், மாற்றிச் சொன்னதாக மாற்றிச் சொல்லப்பட்டவையும், சொன்னதாக சொல்லப்பட்டவையும், சொல்லாதது என்று அறிவிக்கப்பட்டவையுமாக சொற்களும் கற்களும் இறைந்து கிடக்கும் ரயில் தண்டவாளத்திற்கு அருகேதான் கிடைத்திருக்கிறது இளவரசனின் உடல். அது வாழ்வைத் தொலைத்தவரின் சடலம் அல்ல, வாழ்வு பறிக்கப்பட்டவரின் உடல்.

    ஒரு காதல் மணத்தை முன்வைத்து ஏற்கெனவே விளைவிக்கப்பட்ட ஒரு மரணம் – அதன் நிமித்தம் மேலும் ஒரு மரணமும் தேவைப்பட்டிருக்கிறது ஆதிக்க உணர்வுகளின் வேட்கைக்கு. மிகச் சில மணி நேரங்களில் இடித்தும், எரித்தும் தரைமட்டமாக்கப்பட்ட முன்னூறு வீடுகளின் கரிப்புகையும், சாம்பல் நாற்றமும் இன்னமும் அடங்காதிருக்க, இளம் காதல் வாழ்க்கையின் மீது தீர்மானமாக வீசப்பட்ட தீ பற்றி எரிகிறது இப்போது! குடும்பங்களும், குடியிருப்புகளும், சமூகமும் எல்லாம் ஒரு வன்மத்தின் சாபத்திற்கு இலக்கு ஆக்கப்பட்டாற்ப் போல கலைத்துப் போடப்படுவதை எந்த நாகரிக உலகம் அனுமதிக்க முடியும்?

    அடிப்படை மனித உணர்வுகள் கேள்விக்குள்ளாக்கப்படும் சமூகம் தன்னைப் பண்பட்டதாக அறிவித்துக் கொள்ள முடியாது. ஏற்புடைமையும், நிராகரிப்பும் வேண்டுமானால் அவரவர் விருப்பம் சார்ந்ததாக இருக்கலாம். தாங்கள் விரும்பாததைக் கிள்ளிப் போடவும், அதன் மீது நெருப்பை அள்ளிப் போடவும் யாருக்கும் உரிமை கிடையாது.

    கால காலமாக நட்பும், நேயமும் கெழுமிய அண்டை அயலாராக மற்ற சமூகத்தினரோடு வாழ்ந்து வந்ததாகவே நாய்க்கன் கொட்டாய் பகுதியின் காலனி மக்கள் நவம்பர் 7 தாக்குதலுக்குப் பின் சென்று சந்திக்கும்போது கூறினர்.பரஸ்பரம் குடும்ப நிகழ்வுகளில், கொண்டாட்டங்களில், திருவிழாக்காலங்களில் கலந்து பழகியவர்கள், சேர்ந்து உண்டவர்கள் எப்படி திடீரென்று வாளை உருவிக் கொண்டு எதிரே வந்து நின்றனர் என்ற மலைப்பில் இருந்து அவர்கள் மீளாததைப் பார்க்க முடிந்தது. மண்ணில் புதைந்திருக்கும் வேரில் கலந்தது மாதிரி மனத்தின் அடியாழத்தில் கிடக்கும் உணர்வுகளைக் கீறி வெறுப்பும், பகைமையும் வெடிக்குமாறு தூண்டுபவர்கள் எப்படி மக்கள் தலைவர்களாக விளங்க முடியும்?

    மூன்று காலனிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் தன்மையிலும் ஓர் அரசியல் பளிச்சென்று புலப்பட்டது. கலப்பு மணம் செய்திருந்த தலித் குடும்பங்கள் மீது வன்முறை கூடுதலாக நிகழ்த்தப்பட்டது. அந்த வீடுகள் மிக அதிகபட்ச வன்மத் தாக்குதலின் சாட்சியங்களாக நிற்கின்றன. தங்களை விட உயர் சாதி பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளும் தலித் வாலிபர்களின் நோக்கம் சொத்துக்களை அடித்துப் பிடுங்குவது, பிறகு அந்தப் பெண்ணைக் கைவிடுவது என்றெல்லாம் பா ம க தலைவர்கள் பொழிந்து தள்ளிய அவதூறுகளை, மிக காட்டமாகவும், ஆவேசத்தோடும் மறுத்த பெண்மணி ஒருவரை, வங்கி ஊழியர் இயக்கத்தின் சார்பில் அந்தப் பகுதிக்குச் சென்றபோது நாங்கள் சந்தித்தோம்.

    “என்னைத் திருமணம் செய்தபிறகு எனது கணவர் ஒற்றை நயா பைசா கூட எனது பெற்றோரிடம் சென்று மிரட்டிப் பறிக்கவில்லை. நாங்கள் அந்தப் பக்கம் செல்லவே இல்லை. எங்களை ஏற்காத எனது பெற்றோர் வழி உறவுகள் யாரையும் எனது குழந்தைகளுக்கு இன்றுவரை தெரியாது. எங்களை ஏன் வம்புக்கிழுக்கிறது பா ம க ? அடுத்தடுத்து தேர்தலில் தோல்வி கண்ட அந்தக் கட்சிக்கு கொள்கை கோட்பாடு எல்லாம் திவால் ஆகிப் போன பிறகு, அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்குத் தங்களை முன்னிறுத்த வேறு எதுவும் கிடைக்கவில்லை. தலித் விரோத அரசியலை முன்னெடுக்கின்றனர்” என்றார் அவர். கணவரை இழந்துவிட்ட அந்தப் பெண்மணியின் வீட்டில் கடுமையான தாக்குதல் தொடுக்கப்பட்ட நேரம், அவரது மகள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தாக்கிய வெறி கும்பலுக்கும் இதெல்லாம் தெரியும். தங்களுக்கு எந்தத் தொடர்பும் அற்ற ஒரு நிகழ்வுக்காகத் தங்களை இப்படி தாக்க இவர்களுக்கு யார் அதிகாரம் அளித்தது என்று கேட்டனர் அவர்கள்.

    முட்புதர்களுக்கு இடையே வயதுக்கு வந்த தனது மகளையும், நடுங்கிக் கொண்டிருந்த சிறு வயது மகனையும் பெரும் அச்சத்தோடு சேர்த்தணைத்துக் கொண்டு அன்றைய பாழிரவு எப்படி கடந்து போகும் என்று தாம் பட்ட பாட்டை, தையல் நாயகி என்ற பெண்மணி டிசம்பர் 5, 2012 அன்று தருமபுரியில் மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய போராட்ட மேடையில் எடுத்துரைத்தபோது அதிர்ந்து கேட்டது ஜனத் திரள். ‘நாளை மீண்டும் இதைப் போலவே தாக்க வந்தால் நாம் என்ன செய்வோம்’ என்று தனது மகன் கேட்டதைச் சொன்ன அவர், தலித்தாகப் பிறந்தது எங்கள் குற்றமா என்று கேட்ட கேள்விக்கு ஆதிக்க சக்திகளின் பதில் என்ன?

    ஒரு தருமபுரி செய்தி மட்டும்தான் கவனத்தை தேசிய அளவில் ஈர்த்திருக்கிறது. அதற்கு முன்பாகப் பல நிகழ்வுகள் தமிழகத்தின் வடமாவட்டங்களில் நடக்கவே செய்தன. கட்டைப் பஞ்சாயத்துகள் நடத்தி இப்படியான காதல் திருமணங்கள் கேள்விக்குள்ளாக்கப் பட்டன. ரத்து செய்து அறிவிக்கப்பட்டிருக்கின்றன. குடும்பங்கள் மிரட்டப்பட்டன. தத்தமது மகனையோ, மகளையோ தீர்த்துக் கட்டிவிடுமாறு தீர்ப்புகள் வழங்கப்பட்டு நிறைவேற்றப் பட்ட கொடுமைகளும் நடந்திருக்கின்றன.

    தருமபுரி நிகழ்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பாக எழுத்தாளர் இமையம் உயிர்மை இதழில் எழுதிய “பெத்தவன்” நெடுங்கதை (பாரதி புத்தகாலயம் அதை சிறு நூலாக வெளியிட்டிருக்கிறது) அத்தகைய அதிர்ச்சி மிக்க நடப்புகளை நேரடியாகப் பேசியது. உழைப்பாளி மக்களை அடையாள அரசியல் எப்படி கூறுபோடுகிறது என்பதை அதன் இலக்கிய வடிவம் தொட்டுக் காட்டியது.

    தலித் காலனி மக்களுக்கு ஆர்வத்தோடு வங்கிச் சேவை கிடைக்க உதவிய கிராம வேளாண் வங்கி ஊழியராக இருந்த நாகராஜன், திவ்யாவின் தந்தை என்ற முறையில், சாதி ரீதியாகக் கூட்டப்பட்ட பஞ்சாயத்து எதிரே எப்படி கூனிக் குறுகி நிறுத்தப்பட்டார் என்பதும், அதன் தொடர் நிகழ்வுகளில் நேர்ந்த அவரது மரணமும், அதன்மீது கட்டமைக்கப்பட்ட தாக்குதல் வன்முறையும் ஒரு தனிப்பட்ட காதல் திருமணத்திற்கு எதிரானது மட்டும் அல்ல. ஓர் அரசியல் நடவடிக்கை அது. சமூக எச்சரிக்கை. தங்களது அணியைத் தமது அரசியல் விருப்பங்களுக்கு ஒத்திசைவாகத் திரட்டுதலின் வன்முறை அறிவிப்பு அது. தங்களைப் போன்றே இருக்கும் வேறு பல இடைநிலை சாதி அமைப்புகளையும் தங்களது பாணியிலேயே நடந்து கொள்ளுமாறு தங்களது மேடையில் நிறுத்தி வைத்து அறிவுறுத்தும் அபாய அரசியல் அது.

    தாராளமய கொள்கைகளால் காயப்பட்டுப் போயிருக்கும் அன்றாட வாழ்க்கை, கல்வி-சுகாதாரம் எல்லாம் காசு உள்ளவர்க்கே என்று ஆக்கப்பட்டிருக்கும் சவாலான நிகழ்காலம், நிச்சயமற்ற எதிர்காலம் இவற்றின் பின்புலத்தில் தங்களது பொது எதிரிக்கு எதிராகத் திரள வேண்டிய மக்களை மிகுந்த சுயநலத்தோடு பிரித்துப் போடும் இத்தகைய அரசியல் யாருக்கு சாதகமானது என்பதை கூர்ந்து கவனிக்க வேண்டும். கொலைகளும், தற்கொலைகளும் பெருகும் ஒரு சமூகமாக தமிழகம் உருமாறிக் கொண்டிருப்பதன் பிரதிபலிப்பாக வெளியாகும் அண்மைக் கால புள்ளிவிவரங்கள் வேதனை அளிப்பவை.

    ஒரு தனிப்பட்ட வாழ்க்கை, இரண்டு உள்ளங்களின் பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் நேர்ந்த காதல் திருமணம் இன்று ஒரு பொது பிரச்சனையாக மாற்றப் பட்டதும், அவர்களது விருப்பத்திற்கு எதிரான திசையில் அந்த வாழ்க்கை இப்போது மிக கோரமான முறையில் முடிக்கப்பட்டிருப்பதும் இந்த நிகழ்வுகளை இன்னும் ஆழமான புரிதலோடு பார்க்குமாறு சமூகத்தைப் பணிக்கின்றன. சாதி கௌரவம் என்ற போர்வையில் நடத்தப்படும் அத்து மீறிய தலையீடுகளைக் குறித்து எச்சரிக்கை கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றன. வன்மமும், வன்முறையும் குடும்ப வாழ்க்கையின் சன்னல்களை உடைத்தெறிந்து உள்ளே நுழைவதை உரத்த குரலில் நிராகரிக்குமாறு வற்புறுத்துகின்றன. சோதனை மிகுந்த இந்த நேரத்தில் அன்பின் வழியது உயிர்நிலை என்ற உன்னதமான வாழ்க்கை நெறியை உயர்த்திப் பிடிக்குமாறு மன்றாடிக் கேட்கின்றன. பகைமையும், வெறுப்பும், கசப்பும் பரவி விரவும் – மானுடத்திற்கு எதிரான – கருத்தாக்கங்களில் இருந்து விடுபட்டு – காதல் இருவர் கருத்து ஒருமித்து வாழ முன் வரும்போது அதற்கு ஆதரவு தந்து இன்பம் அடையப் பழகுமாறு கோரிக்கை விடுக்கின்றன. உழைப்பாளி மக்களின் விடியல் தங்களிடையே பிரிந்து கூறுபட்டு நிற்பதில் அல்ல, ஒன்றுபட்டு நிற்பதில், பொது எதிரிக்கு எதிராகக் கூட்டாகப் போராடுவதில் தான் அடங்கி இருக்கிறது என்றும் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

    தமது தாயின் அருகே இளவரசன் இறுக்கம் கலந்த – ஆனால், நம்பிக்கை மிஞ்சி இருந்த பார்வையோடு நின்ற காட்சியும், பாதுகாப்பு வளையத்துக்குள் பதட்டத்தோடு திவ்யா பார்த்த பார்வையும் நாளேடுகளை நிரப்புகின்றன. இரண்டுக்குமே பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு சமூகத்திற்கு இருக்கிறது. அது ஆரோக்கியமான மாற்று சிந்தனையின் வழித் தடத்தில் இருக்கிறது.
    **************
    நன்றி: வண்ணக்கதிர் (ஜூலை 14, 2013)

    Share
  • மிஸ்ட் கால்

    எஸ் வி வேணுகோபாலன்

    தினமும் காலையில் முக்கியமாகத் தேவைப்படும் வேளையிலோ, இரவிலோ தமது கைப்பேசியை எங்கே வைத்தோம் என்று தெரியாமல் அதைத் தேடுவது பலருக்கும் தவிர்க்க முடியாத வாழ்க்கை விதியாகிவிட்டது. உடனே, பக்கத்தில் கிடைக்கும் ஒரு தொலைபேசி அல்லது அலைபேசியில் தமது எண்ணைத் தட்டி ஒரு மிஸ்ட் கால் கொடுத்து ரீங்காரம் எந்தத் திசையில் இருந்து கேட்கிறதோ அங்கே காதையும் கண்ணையும் வைத்துத் தேடி எடுப்பது அடுத்த கட்டம். சில வேளைகளில் அந்த ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருக்கும், சம்பந்தப் பட்ட கைப்பேசி கண்ணில் சிக்காது…சோஃபாவில், டீப்பாயில், மேசையில் செய்தித் தாள்களின் அடியிலோ, சிறு தலையணைகளுக்குக் கீழோ, மடித்து வைத்திருக்கும் துணிமணிகளுக்கு இடையிலோ மாட்டிக் கொண்டு என்னைக் கையில் எடேன், கையில் எடேன் என்று கதறிக் கொண்டிருக்கும். சட்டென்று சிக்காது.

    வாழ்க்கையில் நாம் எத்தனையோ முக்கியமான பொருள்களைத் தவற விடுகிறோம். இந்தக் கைப்பேசிகள் வருவதற்குப் பல நூற்றாண்டுகள் முன்பிருந்தே தலைமுறை தலைமுறையாக மனிதர்கள் எவ்வளவோ நெருக்கமான விஷயங்களை இப்படி தடயம் தெரியாமல் இழந்து தவிக்கவே செய்திருக்கின்றனர். சாவி கையில் இருக்கும், கண்ணருகே இருந்தாலும் பூட்டு டக்கென்று கண்ணில் படாது. வீட்டைப் பூட்டிவிட்டுப் புறப்படுமுன் வீட்டு மனிதர்களைக் கூறு போட்டு ஊறுகாய் போட்டு முடிந்திருக்கும். ரேஷன் கார்டு, படிப்புச் சான்றிதழ், ஐ டி அட்டை, ஊருக்கான பயணச் சீட்டு, வங்கி பாஸ்புக், நேற்று வரை வீடு முழுக்க எங்கே நடந்தாலும் தட்டுப் பட்டிருந்த செய்தித் தாள், முக்கியமாக, கைக்குட்டை………எத்தனை எத்தனை பொருள்கள் கண்ணா மூச்சி காட்டிக் கொண்டே இருக்கின்றன, அன்றாட வாழ்வில்.

    சமையல் அறையில் எந்த டப்பாவைத் திறந்தாலும் சிக்காத மிளகு சீரகப் பொடி, எங்கோ ஒளிந்து கொண்டு தோசை தீயும் வரை கையில் வந்து சேராத – தோசைக்கென்று வைத்திருக்கும் இரண்டு கரண்டிகளில் வாகான ஒன்று, குழந்தையின் டிபன் பாக்ஸ் மூடி, தண்ணீர் பாட்டில்….எத்தனை எத்தனை தேடல்கள் நகர வாழ்வின் சோதனையான காலை நேரங்களில்..

    இதற்கெல்லாம் மிஸ்ட் கால் மாதிரி ஒரு ஏற்பாடு இருக்கக் கூடாதா என்று கேட்டார் ஒரு நண்பர். ஆனந்த விகடனில் ஓவியர் மதன் ஒரு முறை, இயற்கையில் இப்படி ஏற்பாடுகள் இருந்தால் வசதியாக இருக்குமே என்ற பொது தலைப்பில், உரிக்க வாகாக ஜிப் வைத்த வாழைப்பழம், தூக்கிச் செல்ல பிடி வைத்தே விளைந்திருக்கும் பெரிய பூசணிக் காய் என்று கலக்கி இருந்தார். அப்படி காணாமல் போகும் பொருள்களுக்கு தலையில் மினுக் மினுக் என்று மின்னும் சிறு விளக்கு ஏற்பாடு இருக்கலாம் தான்.

    ஆனால், அப்புறம் தேடலின் சுவாரசியமும், சண்டையும், தவிப்பும், பரிதவிப்பும் அற்ற வாழ்க்கை எவ்வளவு போரடித்துவிடும்?

    இருந்த இடத்தில் இருந்தபடி வீட்டில் காணாமல் போன பொருள்களின் இருப்பிடம் குறித்த வரைபடத்தை ஏதோ கையில் வைத்திருப்பது போல அம்மாக்கள் சொல்வது வழக்கம். எங்கே எனது ஸ்கூல் பேக் என்று கத்திக் கொண்டிருக்கும் யூ கே ஜி வாண்டின் காதைத் திருகி கட்டிலுக்குக் கீழே உதைத்துத் தள்ளிய இடத்தில் தான் இருக்கும், போய்ப் பாரு, அதற்கென்ன காலா முளைத்திருக்கு, வேறெங்கேயும் ஓட என்று கேட்பார்கள் அம்மா. அதற்குக் காரணம் பொருள்களின் அருமை அவர்களுக்குத் தெரிந்திருப்பதன் சூட்சுமம் தான். உன்னிப்பான கவனிப்பு தான் உள் மனத்தில் பதிந்திருக்கும். இதம் பதமாக வருடிக் கேட்டால் எடுத்துக் கொடுக்கும். பதறிக் கொண்டே தேடினால் தாவு வாங்கி விடும்.

    பள்ளி நாட்களில் ஆண்டு தவறாமல் இசைப் போட்டிகளில் முதல் பரிசு வாங்கிய பெண் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி மணம் முடித்தபின் சுவடே தெரியாமல் தொலைத்திருக்கும் தங்கள் இசையை எந்த மிஸ்ட் கால் போட்டுக் கண்டெடுக்க? கவிஞர் நா முத்துக்குமாரின் தூர் என்ற அற்புதமான கவிதையில் (கணையாழி, 1995) கிணற்றில் தூர் எடுத்துக் கொண்டிருக்கும்போது கிடைக்கும் பொருள்களின் பட்டியலில் வேலைக்காரி திருடியதாக சந்தேகப்பட்ட வெள்ளி தம்ளர் என்று ஒரு அதிர்ச்சி வரி வைத்திருப்பார். அவளுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ அவள் மீது கட்டப்பட்ட திருட்டுப்பட்டத்தை எந்த சூத்திரத்தாலும் திரும்பப் பெறவே முடியாது. அந்தக் கவிதையின் கடைசி வரி, இதையும் விட பேரதிர்ச்சி கொடுத்து

    இன்றுவரை அம்மா
    கதவுகளின் பின்னிருந்துதான்
    அப்பாவோடு பேசுகிறாள்
    கடைசிவரை அப்பாவும்
    மறந்தே போனார்
    மனசுக்குள் தூரெடுக்க

    என்று முடியும்.

    மவுனத்திற்கு என்ன மிஸ்ட் கால்? பேசப்படாத செய்திகளுக்கு எந்த மிஸ்ட் காலும் இல்லையே. அப்படியானால் எத்தனை எத்தனையோ ஒருதலை காதல்கள் வாழ்வில் தொலைத்தவற்றை இலக்கியங்களில் போய் ஒளிந்து கொண்டு வாழ வைத்துக் கொண்டிருக்குமா? அவசரப்பட்டு இழக்கும் நட்புறவுகள், கணவன்-மனைவி உறவில் விரிசல்கள், தந்தைக்கும் மகனுக்கும் மகளுக்கும் தாய்க்கும் இடையில் விரிவடைந்து போய்க் கொண்டிருக்கும் இடைவெளிகள் இவை எவற்றின் இடையேயும் மிஸ்ட் கால் ஏற்பாடு இருந்தால் எத்தனை கோடி புன்னகைகளைப் பூக்க வைத்து சமாதானக் கொடியைக் காற்றில் பறக்க விட முடியும்?

    ஆனால் யோசித்துப் பார்க்கையில் மனிதகுலத்தின் அரிய தவமாகக் கிடைத்திருக்கும் நேயம் தான் மிஸ்ட் கால் என்று தோன்றுகிறது. அன்பின் வழியே உருகி உருகிப் பாயும் தன்னலமற்ற பேராற்றுப் பூம்புனலில் எல்லா அழுக்குகளையும் கழுவி மனத்தைச் சீராக்கித் துடைத்து பளபளப்பாக்கி அறவே அறாத சங்கிலித் தொடராக மக்களை இணைத்துவிட முடியும் என்றுதான் படுகிறது.

    அன்பு என்பது நீர் மட்டுமல்ல, நெருப்பும் தான் என்றும் இன்னொரு பார்வையில் படுகிறது. மார்கழி மாதத்தில் இசைக்கப் படும் ஆண்டாளின் அற்புத திருப்பாவைப் பாசுரங்களில் ஐந்தாவதாக வரும் “மாயனை மன்னு” என்று தொடங்கும் அழகுக் கவிதையில், நின்றனவும் தீயினில் தூசாகும் செப்பு என்று நிறைவாக வரும் இடத்தில் மாசுகளைச் சுடும் நெருப்பு தேவைப்படுவதும் உணர்த்தப்படுகிறது. கரைக்கவோ, சுட்டெரிக்கவோ அன்பு தான் நம்மைச் சூழ வேண்டியிருப்பது.

    மூப்பின் களைப்பில் மூளையின் இயக்கங்களின் தளர்வில் தவறவிடும் நினைவோட்டங்களோடு போராடிக் கொண்டே அடுத்தடுத்த தலைமுறைகளின் அவமதிப்பையும், வசைமொழிகளையும், நிராகரிப்பையும் வேளை தவறாது புசித்துக் கொண்டிருக்கும் வயதான மூதாட்டிகளோ, பெரியவர்களோ ஏதோ தாங்களாக முணுமுணுத்துக் கொண்டிருப்பது ஒரு வேளை ஏக்கத்தின் பெருமூச்சில் எழும் மிஸ்ட் கால்களாக இருக்கக் கூடும். வண்ணதாசனின் ஓர் அற்புதமான சிறுகதையில் வரும் தாத்தா ஒருவரின் பேச்சு மொழி வீட்டில் இருக்கும் யாருக்கும் அர்த்தமாவதில்லை. அவரை யாரும் லட்சியம் செய்வதுமில்லை. ஆனால் வீட்டின் பின்புறக் கதவைத் திறந்து கொண்டு நுழையும் நாவிதர், ஒரு நாற்காலியில் அவரை உட்கார வைத்து முகத்தில் சோப்பு நுரையைக் குழைத்துப் பூசிக் கொண்டே கத்தியைத் தீட்டிக் கொண்டு தமது வேலைக்குத் தயாராகும் ஒரு கணத்தில் தாத்தா அந்த சவரத் தொழிலாளியோடு சகஜமாகப் பேசத் தொடங்கியிருந்தார் என்று கதை முடியும், தாத்தாவின் மிஸ்ட் கால் அந்த எளிய மனிதரின் காதில் இலகுவாகப் போய் விழுகிறது.

    பிரச்சனை மிஸ்ட் கால் ஏற்பாடு இல்லாதது அல்ல, எத்தனையோ உன்னத விஷயங்கள் என்னைப் பார், பார் என்று குரல் கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றன. அவை மனிதர்களுக்கு சித்திக்காமல் போவதற்கு ஒரு காரணம் உண்டு. தாராளமய உலகில், தன்னலத்தின் கொடூர வேடத்தில் தங்களைப் பொருத்திக் கொண்டு எல்லாவற்றையும் வென்றெடுப்பதான வெறியில் தம்மையும் பறி கொடுத்துக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு காதுகள் அற்றுப் போய்க் கொண்டிருப்பதுதான் அது.

    *********

    நன்றி : வண்ணக்கதிர்

    Share
  • இறுக்கமாகிக் கொண்டிருக்கும் சமூக வாழ்க்கை …………

    எஸ் வி வேணுகோபாலன்

    அண்மையில் ‘சிறப்பாக’ ஓடிக் கொண்டிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்தில் இப்படி ஒரு வசனம் வந்திருக்கிறது:

    ”நீங்க நியூஸ் பேப்பரே படிக்கிறது இல்லையா?”
    ”டெய்லி டேட் மாத்தி விக்கிறான்… அதை எதுக்குப் படிக்கணும்?”

    இது நகைச்சுவைக்காக எழுதப் பட்ட ஒரு வசனம் தான். ஆனால் செய்தித் தாள்களில் வரும் சில திடுக்கிடும் செய்திகள், பரபரப்பு விஷயம், அதிர்ச்சி சம்பவம் இவற்றைத் தொகுக்க உட்கார்ந்தால், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சில நிகழ்வுகள் நம்மைச் சுற்றிலும் நடந்து கொண்டிருப்பது போலத் தோன்றும். ஒரு பத்து நாள் விஷயங்களை ஒரு சேர எடுத்து வாசிக்க நேர்ந்தால் சமூகத்தில் நம்பிக்கை கொள்வதற்கு எதுவுமே மிஞ்சாது போல் கூடத் தோன்றும்.

    கொலை, தற்கொலை, கணவன் – மனைவி உறவில் விரிசல், அதிகமாகிக் கொண்டிருக்கும் மண முறிவு (விவாகரத்து), கள்ளக் காதல், பரஸ்பர சந்தேகம், நிம்மதியற்ற தாம்பத்திய வாழ்க்கை, பொருளாதார ஏற்றத் தாழ்வு மற்றும் மனைவி வேலைக்குப் போவது குறித்த கருத்து முரண்பாடு, குடும்ப உறுப்பினர் நிமித்தம் கருத்து மோதல்கள்…..இவை குறித்த இடைவிடாத செய்திகள் நாளிதழ் முழுக்க நிறைந்திருப்பதைக் காண முடியும். குடும்பங்கள் நொறுங்கிக் கொண்டிருக்கின்றன என்ற சித்திரம் நேரடியாகச் சொல்லப்படாவிட்டாலும், அப்படியான குரல் கேட்கும்படி பல செய்திகள் வருகின்றன.

    இவை எதுவும் பொய்யான செய்திகள் அன்று. எங்கோ நடப்பதைத் தான் எழுதுகின்றனர். ஆனால், சமூகம் முழுக்க இந்த மாதிரியான விஷயங்களே நிறைந்திருப்பது மாதிரியான தோற்றம் நமக்குள் ஏற்பட்டு விடுகிறது. அது உண்மை அல்ல. இந்தச் செய்திகள் வழங்கப்படும் விதம் அப்படியான ஒரு தாக்கத்தை வாசகருக்கு ஏற்படுத்துகிறது.

    அப்போதைக்கு வெளிவந்திருக்கும் செய்திகள், ஒரு பக்க சார்பாக வெளிப்படும் செய்திகள், முழு விவரமற்ற ஊகத்தில் புனையப்படும் செய்திகள், உண்மை கலவாத கற்பனை சரடுகள், உணவில் சேர்க்கப்படும் அஜினமோட்டோ போல் விறுவிறுப்பு ஏற்றி எழுதப்படும் செய்திகள், மறுப்பு வந்தாலும் கண்டு கொள்ளாது விடப்படும் செய்திகள்…..என இது ஒரு தனி விவாதத்திற்குரிய அம்சம்.

    இன்னொருபுறம், இந்தச் செய்திகள் படிப்பவர் மனத்தில் பன்மடங்கு விரிவாக்கம் செய்து புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருப்பது தெரிந்தும் தெரியாதது போல் எழுதப்படுவது. அதாவது எங்கோ ஒன்று இரண்டு நிகழ்வுகள் என்றல்ல, வர வர காலம் போகும் போக்கே சரி இல்லையே என்று தான் வாசகர்கள் புரிந்து கொள்வார்கள்.

    ஏன் இந்த மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன….ஏதாவது காரணங்கள் உண்டா, தற்செயலான நிகழ்ச்சிப் போக்குகள் தானா என்றெல்லாம் பெரிய விவாதங்களையோ அலசல்களையோ ஊடகங்கள் நடத்துவதில்லை. தங்களுக்கு ஆதாயம் உருவாக்கும் அதிரடி, பரபரப்பு செய்திகள் மீது மட்டும் கண் கூசும் அளவு வெளிச்சம் பாய்ச்சுவதும், சமூகத்திற்கு உருப்படியாகச் சொல்லத் தக்க அல்லது சொல்ல வேண்டிய விஷயங்களை இருட்டடிப்பு செய்வதும் ஊடக வாடிக்கை. அவர்களுக்கு அதில் அரசியல், வர்த்தக நோக்கம் உண்டு.

    இன்றைய சமூகம் பெருமளவு இறுக்கமான நிலையில் இயங்குகிறது என்பது கவனிக்கத் தக்கது. இறுக்கமான சமூக இயக்கம் மனிதர்களை நெளிவு சுளிவுக்கு உட்பட மறுக்க வைக்கிறது. சின்னச் சின்ன விஷயங்களில் கூட தேவையற்ற விரோத மனப்பான்மை உருவாக இடம் தருகிறது. அடுத்தவர் சொல்வதைக் கேட்கும் பொறுமையோ, எதிர்ப்பக்கம் என்ன நியாயம் இருக்கிறது என்று அறிய விரும்பும் தன்மையோ இல்லாது போய்க் கொண்டிருக்கிறது. தாம் செய்வது சரி என்று தீர்மானமாக நம்பும்போது மற்ற எல்லாக் கதவுகளும் அடைபட்டுவிடுகின்றன. பகிர்தல் அற்ற உளவியல் ஓர் அழுத்தத்தை உள்ளே கூட்டிக் கொண்டே செல்கிறது. இதனால் மூச்சு திணறும் மனிதர்கள் வன்மம் வளர்த்துக் கொள்ளவும், வன்முறையை யோசிக்கவும் நேர்கிறது. அல்லது, தங்களுக்கு இங்கே வாழ இடமில்லை என்று முடிவெடுக்கவும் தூண்டுகிறது.

    இந்த இறுக்கமான சமூக இயங்குதல், நெளிவு சுளிவுக்கு உட்பட மறுக்கும் உளவியல் ஒருபுறம். மற்றொருபுறம், கனவுகளையும், இலக்குகளையும், வெற்றிக் கோடுகளையும் மட்டுமே நிறுத்தி ஓடிக் கொண்டிருக்கும் அன்றாட வாழ்க்கை. இவை மனிதர்களை எளிதில் சலிப்படைய வைக்கிறது. மிக இலகுவாக நிராசை அடைய வைக்கிறது. விரும்பிய உணவை ருசித்து உண்ணவேண்டிய பொழுதில், எரிச்சலும் பதட்டமும் உணவுத் தட்டை நிரப்பி விடுகின்றன.

    தாம் மட்டுமே ஏமாற்றப் படுகிறோம் அல்லது தாம் மட்டிலும் எப்படியாவது முந்திச் சென்று விட வேண்டும் என்ற உளப்பாங்கை இன்றைய போட்டி உலகம் ஏற்படுத்துகிறது. சந்தைப் பொருளாதார உலகம் தனித்தனி நியாயங்களை, தனித்தனி கற்பிதங்களை, தனித்தனி தீர்வுகளை நுட்பமாக சமூகத்தில் நடுகிறது.

    இந்த உணர்வாக்கம் தான், வெல்வதற்காக எதுவும் செய்யலாம் என்று தூண்டுகிறது. வெற்றிப் பயணத்தின் திசை வழியில் வெல்வதற்கான கருவிகளை எப்படியும் பயன்படுத்தலாம் என்று கற்பிக்கிறது. அடுத்தவர் வலியை, அடுத்தவர் துயரை, அடுத்தவர் கதறலை நின்று நிதானித்துக் கேட்டு, அவர்களுக்கு ஆறுதல் வழங்கலாம் என்று நிற்பது கூடத் தமது நேரத்தில் வீண் விரயம் என்று பாராதது போலக் கடந்து செல்ல வைக்கிறது.

    சக மனிதர்கள் என்ற சொல்லை எடுத்துவிட்டு சக போட்டியாளர்கள் என்ற சொல்லாடலை முன்வைக்கிறது. உரையாடல்களுக்குப் பதிலாக வாக்கு வாதங்களையும், நிதானமான அணுகுமுறைகளுக்கு மாற்றாக ஆவேசத் தலையீடுகளையும், மறு பரிசீலனைக்குப் புறம்பாக இறுதிச் சொல் இதுவே என்ற வற்புறுத்தலையும், பன்முக நோக்கைக் கை கழுவி ஒற்றைக் கோணத்தையும், திறந்த பார்வையை உதறிவிட்டுக் குறுகலான சொந்தப் பார்வையையும் முன்மொழிகிறது.

    இதனால் தான், பேசித் தீர்க்கக் கூடிய விவாதங்களில் திடீரென்று ஆயுதங்கள் மூலம் பிரச்சனைகள் ‘தீர்த்துக்’ கட்டப்படுவதைக் காண்கிறோம்.சண்டை இட்டுக் கொண்டிருக்கும் யாரோ இருவரிடையே புகுந்து சமரசம் செய்ய முயற்சி எடுக்கும் மூன்றாவது நபர் கொலையுண்டதான செய்திகளை அதிர்ச்சியோடு கவனிக்கிறோம். ஆசிரியரைக் கொல்லத் துணியும் மாணவரையும், எந்தக் காரணமும் இன்றி அண்டை வீட்டு நபரைப் ‘போட்டுத் தள்ளும்’ மனிதர்களையும் கண்டு நடுங்குகிறோம்.

    இதன் விபரீத அடையாளங்கள் குடும்ப உறவிலும் வெளிப்படுகின்றன. திருமணம் நிச்சயிக்கும் பெற்றோர் குழந்தைகள் என்ன விரும்புகிறார்கள், எதை எதிர்பார்க்கின்றனர் என்று பொறுமையோடு கேட்டறியாத போதும், திருமண வயதில் உள்ள ஆணும் பெண்ணும் மனம் விட்டு பெற்றோரிடம் பேசத் தவறுகிற போதும் முதல் கட்ட பிரச்சனைகள் தோன்றுகின்றன. கல்வி, வேலைத் தன்மை, ஊதியம் போன்றவையும், உணவுப் பழக்கங்களும், வேறு வகை பழக்க வழக்கங்களும் திருமணத்திற்கு அடுத்த நாளில் இருந்தே பூதாகர உருவெடுக்கின்றன.

    தாங்கள் எப்படியும்இருக்கலாம், பெண்கள் மட்டும் அடங்கிப் போகவேண்டும் என்ற ஆணாதிக்க மனோபாவம் நவீன பண்பாடுகளை விரும்புவதுபோல் காட்டிக் கொள்ளும் ஆண்களிடமும் நிலவுகிறது. பரஸ்பரம் ஒளிவு மறைவற்ற பகிர்தலுக்கான இடம் மறுக்கப் பட்டதாக குடும்பங்கள் இன்று பெருகி வருகின்றன. சின்னச் சின்ன கருத்து முரண்பாடுகள் கூட பெரிய மோதல்களாக வெடிக்கின்றன. சரி செய்யக் காலம் தாழ்த்தும் ஒவ்வொரு இடைவெளியும், பெரிய பெரிய பள்ளங்களாக உருவெடுத்து விடுகின்றன.

    குடும்ப வேலைகளைப் பகிர்ந்து கொள்வதில் ஒரு ஜனநாயகத் தன்மை வேண்டும் என்ற அம்சம் நமது மரபிலோ, கல்வியிலோ, வளர்ப்பிலோ கிடையாது என்பது மிக சுலபமாக, இனிமையாக பேசி சரி செய்யத் தக்க விஷயங்களைக் கூட ஊதி ஊதிப் பெரிதாக்குகிறது. ஈகோ எனப்படும் அகங்காரம் அறிவுக் கண்ணை இறுக்க மூடிவிடுகிறது.

    அதிக ஊதியம் பெற்றுத் தரும் ஓய்வு ஒழிச்சல் அற்ற வேலைகளில் ஈடுபடுவோர் தமக்கான நிம்மதியை மது பானத்தில் தேடுவது தற்காலத்திய மிகப் பெரிய பிரச்சனையாக உரு மாறியிருக்கிறது. மது ஒரு தவறான பழக்கம் என்று சமூக மதிப்பில் பார்க்க வேண்டியதில்லை. ஆல்கஹால், நமது உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள், நமது உளவியலில் ஆட்டிப் படைக்கும் மாற்றங்கள், பொருளாதார ரீதியாக சுமத்தும் செலவினம், பொதுவெளியில் ஏற்படுத்தும் நெருக்கடிகள் இவை பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. கூட்டாக, குடும்ப சங்கமமாக, உறவின் வெளிப்பாடாக, நட்பின் அடிப்படை கட்டுமானமாக இன்று மது அருந்துதல் மாறிக் கொண்டிருக்கிறது. இதன் வெடிப்புகளும் குடும்ப உறவில் பிரதிபலிக்கின்றன.

    பணத்தை முன் நிறுத்தும் தாராளமய பொருளாதாரம் குறுக்கு வழியில், மிக விரைவான கதியில் முன்னேறிவிட முடியும் என்ற கருத்தை முன்வைக்கிறது. நீடித்த, ஆரோக்கியமான, மகிழ்ச்சி தரும் சொந்தங்களை விடவும், குறுகிய காலத்திற்கு இன்பம் பயக்கும் உறவுகளை நாடத் தூண்டுகிறது. இதன் தாக்கமே எல்லை மீறிய ஆசைகள், தவறான தொடர்புகள், நட்பின் விரிசல்கள் போன்றவற்றை நியாயப் படுத்துகின்றன. பணம் எல்லாவித உறவுகளையும் சிதைக்கிறது என்பதை மார்க்சிய பார்வை சுட்டிக் காட்டுகிறது. கலை, கேளிக்கை, விளையாட்டு எல்லாவற்றையும் காசு எப்படி பேரம் பேசுகிறது, சீரழிக்கிறது, கொச்சைப் படுத்துகிறது என்று நாம் பார்க்கிறோம். மனித உறவுகளையும் அது ஈவிரக்கமின்றி மிதித்துப் போகிறது.

    நாம் அன்றாடம் செய்தித்தாள்களில் அல்லது செய்தி ஊடகங்களில் தெரிந்து கொள்கிற நடப்புகள், தனி நபர் நடவடிக்கைகள் போலவோ, தனி நபர் வாழ்க்கை தடுமாற்றங்கள் போலவோ நமக்குத் தெரிகின்றன. ஆனால் அவற்றை நுட்பமாக கவனிக்கத் தான் வேண்டும். முற்போக்கான மதிப்பீடுகள் மட்டுமே சமூகத்திற்கு ஆரோக்கியமான முன்மாதிரிகளை ஏற்படுத்தித் தர இயலாது, வெறும் பேச்சுக்களால் மட்டும் சமூகத்தை மாற்றி அமைக்க முடியாது. ஆரோக்கியமான சமூக மாற்றம் பற்றிய அக்கறை கொள்வோர் இந்தச் செய்திகளைக் கடக்கும்போது மாற்று சமூகப் பார்வைகள் குறித்த விவாதத்தை அதிகரிக்க வேண்டும். முற்போக்கான முன்னுதாரணங்கள் பொது மன்றத்தில் பரந்த கவனத்திற்கு எடுத்துச் செல்லப் படவேண்டும்.

    வாழ்க்கையின் தடுமாற்றங்களைத் தனி நபர் பிரச்சனைகளாக ஊடகங்கள் செய்தியாக்கும்போது அதை தேடித் தேடி படிக்கும் கிளுகிளுப்பு ஒரு விற்பனை சரக்கு. அதன் மூல காரணத்தைத் தேடிப் பார்த்து விவாதிப்பது மாற்றங்களுக்கான தொடக்கப் புள்ளி.

    ***********

    நன்றி : வண்ணக்கதிர்

    Share
  • குருவி கத்துகிறதா…சிக்கட்டி பாடுகிறதா

    எஸ்.வி.வேணுகோபாலன்

    பேரன்பின் அ முத்துலிங்கம் அவர்களுக்கு

    தீராநதி மே இதழை நேற்று தான் வாங்கினேன்…(அது நேற்றுதான் வந்திருக்கும் என்று கருதுகிறேன்…வியாழன் அன்று எங்களது பள்ளிக்கூட நிகழ்வு ஒன்றுக்காக பட்டுக்கோட்டை சென்றிருந்தேன்)…

    இது தான் நாள் என்ற தலைப்பில் உங்களது கதை காத்திருந்தது, 18ம் பக்கத்தில்…

    புலம் பெயர் வாழ்க்கையின் நிச்சயமற்ற தருணங்கள், எல்லை கடத்தலின் எல்லையற்ற அபாயங்கள், உயிரைக் கையில் பிடித்தபடி அலைவுறும் நேரங்கள்….இவற்றின் மற்றுமொரு அழுத்தமிக்க பதிவாக இந்தக் கதை…

    இந்த உலகு யாருக்காக இயங்குகிறது…யாருக்கானது என்ற கேள்விகள் எனக்குள் அடிக்கடி நிகழும்…. எஜமானர்கள், அடியாட்கள், அரசுகள், அதிகாரிகள், விதிமுறைகள், தண்டனைகள்…என்று பொருத்துக அட்டவணையில் இடம்பெற வேண்டிய ஜோடி ஜோடியான வன்முறை சொற்கள் எவ்விதம் மனித வாழ்விற்குள் நுழைந்தது….

    தூக்கு மேடை குறிப்புகள் (ஜூலியஸ் பூசிக்) என்ற மகத்தான உண்மைக் கதையில், நாசிச சித்திரவதைக்கு உள்ளாகும் போது அவர் தமக்குத் தாமே சொல்லிக் கொள்ளும் இடம் ஒன்று வரும்: என்னை என் இத்தனை வலுவுள்ளவனாகப் பெற்றீர்….? மானசீகமாகத் தனது பெற்றோரிடம் முன் வைக்கப்படும் இந்தக் கேள்வி, முடிவற்ற துயரத் தாக்குதலை எதிர்கொள்ளும் அரசியல் உரம் பெற்ற கம்யூனிஸ்ட் ஒருவரது உளத் திண்மையை சோதிக்கும் உச்சகட்ட தாக்குதலின் போது அவரது வெளிப்பாட்டு மொழியாக வெளிவரும்…

    சம காலத்தில், இலங்கைத் தமிழர் சொந்த மண்ணிலும், வெளி தேசங்களிலும் படும் இன்னல், இழிவு, அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை விவரிப்புக்கு அப்பாற்பட்டது…

    இது தான் நான் கதை, இந்த வேதனையின் பாடுகளை, இத்தனை இடர்மிகுந்த சூழலிலும் பரஸ்பரம் துளிர்க்கும் கரிசனத்தை, அடுத்தவர்க்காக உதிர்க்கப்படும் கண்ணீர்த் துளிகளை, அடிப்படை மனித நேயத்தை எந்த மிகையுமற்ற குரலில் பேசுகிறது…வெடி மருந்துகளின் வேதியல் நெடிக்கிடையே நம்பிக்கையை மூச்சுத் திணராது பொத்திக் காப்பது இத்தகைய உணர்வுகளன்றி வேறென்ன…

    கதையில் வரும் சந்திரா மாமி ஓர் இயற்கை கொண்டாடி…பறவைகளின் பெயர்கள் மட்டுமல்ல,, அவற்றின் சஞ்சாரம், வாசஸ்தலம், பறத்தலின் திசையை வைத்து நீர்ப்பரப்பு அறிதல் இன்னோரன்ன விஷயங்களில் கொண்டிருக்கும் தேர்ச்சி அருமையான அம்சம்….

    கதையை நீங்கள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற இலக்கணத்தில் கொண்டு வர தேர்வு செய்யும் வடிவம் எப்போதுமே சிறப்பானது…இந்தக் கதை அதில் இன்னோர் புதிய உயரத்தைத் தொடுகிறது….

    குருவி கத்துகிறது என்று சொல்வதே, சந்திரா மாமியை கோபப்படுத்துகிறது…சிக்கட்டி பாடுகிறது என்று சொல்லவேண்டும் என்று கற்பிக்கிறார்…இயற்கையோடு ஒத்திசைவாக வாழப் பழகும் மனிதர்களால் இயற்கையோடு சென்று மீண்டும் கலக்கும் தருணத்தையும் அறிந்திருக்க முடிவது உங்களது அற்புதக் கதை சொல்லும் நேர்த்தி. இலக்கியமயமாகும் வாழ்வியல் தரிசனம்…

    முன் பின் பார்த்திராத மனிதர்களுக்காக வாசக உள்ளங்களை அலைமோத வைக்கிறீர்கள்….
    குலுங்கி அழ வைக்கிறீர்கள்….ஏக்கப் பெருமூச்சோடு இறுக்கமாக விழி மூடி சிந்திக்கத் தூண்டுகிறீர்கள்….

    வணக்கங்கள் அ மு…
    எஸ் வி வேணுகோபாலன்

    Share
  • கடற்கரை நினைவுகளில்……….

    எஸ் வி வேணுகோபாலன்

    என் கடந்த காலத்தைத்
    துணைக்கு அழைத்து வந்திருக்கிறேன்
    இன்றைய கடற்கரைக்கு…

    உறுத்துகின்றது மணல்
    நிறைவேற்றத் தவறிய வாக்குறுதிகளால் நிரம்பி –
    பேரோசை எழுப்பும் அலைகளின்
    கண்டனத்தை
    அமைதியோடு ஏற்றுக் கொள்கிறது மனம்

    கைகளில் தட்டுப்படும்
    உடைபட்ட கிளிஞ்சல்களின்
    விட்டுப் போன பகுதிகளைத்
    தேடுகிறது பேதை உள்ளம்
    இழந்த நட்புகளின் எஞ்சிய நினைவுகளில்

    அப்போது திமிராய் மிதித்துத்
    தகர்த்த மலைக் கோவில்களைத்
    திரும்ப மீட்டெடுத்து எழுப்பினாலும்
    யாரிடம் தர என ஏங்குகிறது இதயம்

    வறண்ட உதடுகளைத் திரும்பத் திரும்ப
    ஈரப்படுத்தித் தோற்கும் நாவைப் போல்
    தீண்டும் நுரையலைகளின்
    சுழிப்பு அழித்துப் போட்ட
    பெயர் ஒன்றை
    எழுதிவைத்த மண் எந்தப் பக்கம்
    எனத் தேடுகின்றன கண்கள்

    உப்புக் காற்றின் சில்லென்ற நேயம்
    கழுவி விடுகிறது கன்னங்களை
    ரணங்களை ஆற்றுப் படுத்தும் காலத்தைப் போலவே

    நீரோடு சேர்ந்து கருத்துவிடும்
    இரவின் வெளிச்சத்தில்
    விடை சொல்லி எழுகையில்
    கைக்குட்டை திருடியிருக்கும்
    மணல் துகள்களை உதறி
    அவ்விடத்திலேயே பத்திரப் படுத்தி
    மீள்கிறேன்

    தடயம் பதிந்திருக்கும்
    தோழமை நினைவுகளையும்…

    **********

    Share
  • புத்தகங்கள் சூழ்ந்த வீடு

    வாசிப்பின் மோகம் குறையாது மாடத்தி !

    எஸ் வி வேணுகோபாலன்

    கணையாழி இதழில் சுஜாதா எழுபதுகளின் இறுதியில் “வேண்டாம்” என்ற தலைப்பில் பதினாறு சீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்று போட்டுக் கவிதை ஒன்றை எழுதி இருந்தார். “காலையிலே எழுந்திருந்தால் செய்தித் தாளில், கற்பழிப்புச் செய்திகளைப் படிக்க வேண்டாம் / காப்பித் தூள் கடன் வாங்கும் மனைவி கண்ணில் காத்திருக்கும் நீர்த் துளியை மதிக்க வேண்டாம்..”என்று போகும் அதை வெளியிட்ட ஆசிரியர், அதற்குப் பதிலாக “வேண்டும்” என்ற தலைப்பில் கவிதைகளை வரவேற்று எழுதி இருந்தார். எல்லோரும் வேண்டும் என்று தானே எழுதுவார்கள் என்று எண்ணிய நான், மறுபடியும் வேண்டாம் என்ற தலைப்பில் எழுதிய கவிதை இப்படித் தொடங்கியது:

    கணையாழி விற்றிருந்தால் வாங்க வேண்டாம்
    கைதவறிக் கிடைத்தாலும் படிக்க வேண்டாம்
    காசிருக்கும் வரை நூலாய் வாங்கிப் போட்டுக்
    கடை கடையாய் கால் விலைக்குத் துறக்க வேண்டாம்..

    ஆனாலும் புத்தகங்களை வாங்கித் தள்ளும் தீராத ஆசையும், வாசிப்பின் தணியாத தாகமும் நின்ற பாடில்லை. புத்தகங்கள் சூழும் வாழ்க்கை எப்படி உருக் கொண்டது என்று துல்லியமாய்ச் சொல்லத் தெரியவில்லை என்றாலும், அதன் நீர்க் கோலம் ஒன்று இப்படி கண் முன் நிற்கிறது…

    எட்டாம் வகுப்பில் நுழைய இருந்த நேரம் எனது தாய் வழி பாட்டனார் – வாலாஜாபாத் இந்து மத பாடசாலையின் புகழ் மிக்க தலைமை ஆசிரியராக விளங்கியவர் – தமது பணி ஓய்வுக்குப் பின் குடியேறியிருந்த காஞ்சிபுரத்திற்கு என்னை அழைத்து அங்கே அவரோடு தங்கிப் படிக்கச் செய்திருந்தார். பள்ளிக்கூடம் திறக்க இருந்த சில நாட்களுக்குள் அவர் மாரடைப்பால் காலமானது எனது வாழ்வின் இரண்டாவது அதிர்ச்சி…இரண்டரை வயதில் தாயைப் பறிகொடுத்த முதல் அதிர்ச்சிக்குச் சிகிச்சையை தமது அன்பால் பொழிந்து இதமளித்த அந்த மாமனிதர் வைத்திருந்த ஆளுயர மர அலமாரியின் பெரிய அறைகள் எதை இழுத்தாலும் அவற்றில் புத்தகங்கள் நிறைந்திருந்தது. சின்னஞ்சிறு கதைகள், சுதந்திர வேள்வியில் தியாகம் புரிந்தோர் கதைகள், வாசித்து வாசித்து அட்டை வெளிர் மஞ்சளாக ஆகியிருந்த நாலாயிர திவ்விய பிரபந்தம், யாரோ காலண்டர் அட்டை போட்டுப் பளபளக்க வைத்திருந்த கம்ப ராமாயணத்தின் முதல் மூன்று காண்டங்கள் அடங்கிய அற்புத புத்தகம்…..

    புத்தக வாசிப்பையும், நூல்களை நோக்கிய ஒரு வெறியையும் என்னை விட நான்கு வயது மூத்தவரான எனது அண்ணன் எஸ் வி ரங்கராஜனிடம் தான் நான் பழக்கிக் கொண்டிருக்கவேண்டும். என்ன வகையான புத்தகம் என்றாலும் கையில் எடுத்துப் புரட்டாமல் இருக்க அவரால் முடியாது. வீட்டிற்குள் ஒரு சேர புத்தகங்களை வைத்திருக்க முடியும் என்பதை காஞ்சிபுரம் தெற்கு மாட வீதி உணர்த்தியது என்றால், ரங்கசாமி குளத்தருகே (இன்றும் இயங்கிக் கொண்டிருக்கும்) மாவட்டக் கிளை நூலகம் கொத்துக் கொத்தாகப் புத்தகங்களைப் பார்த்த முதல் இடமாக இருந்தது. வேலூர் மாவட்ட நூலகம், எனது முந்தைய பள்ளிக்கூடத்தின் நேரெதிரே இருக்க விடுமுறைக்குத் தந்தை வீட்டுக்கு வேலூர் செல்லும் ஒவ்வொரு முறையும் எனது அனைத்து விடுமுறை நாட்களையும் நான் அங்கே தான் கழிக்க விரும்பினேன். தண்ணீர் வைத்திருக்கும் டிரம், சங்கிலி பிணைத்திருக்கும் பித்தளை தம்ளரின் பிரத்தியேக வாசத்தோடும் தொண்டைக் குழிக்குள் இறங்கிய நீர் இன்னும் நினைவுக் காப்பகத்தில் இருக்கிறது. ஆனாலும் எனக்கான நூல் சேகரிப்பைத் தொடங்கும் தாகம் என்னைக் கல்லூரி நாட்கள் வரை காத்திருக்க வைத்தது. அதற்கான உண்டியலில் முதலில் விழுந்தவை பள்ளி நாட்களில் தவறாது எனக்குக் கிடைத்து வந்த பரிசு புத்தகங்கள்.

    சென்னை மாநகரில் புகுமுக வகுப்பில் சேர பாட்டியின் அரவணைப்போடு மேற்கு மாம்பலத்தில் தாய்மாமன் வீட்டை வந்தடைந்த போது, எனது கவிதைகள் வெளியாகியிருந்த சிற்றிதழ்களையும், பரிசு நூல்களையும், எப்படியோ சேர்ந்திருந்த சில புத்தகங்களையும் ஒரு நீல நிற பெட்டிக்குள் உடைகளோடு சேர்த்து அடைத்து வைத்திருப்பேன். எனது சொந்த நூலகம் அந்தக் கைப்பெட்டிக்குள் தான் பிறப்பெடுத்தது. கோவையில் முதுநிலை கல்விக்காக மீண்டும் தந்தையோடு சென்று சேர்ந்தபோது டெபுடி கலெக்டர் என்ற அவரது அந்தஸ்து காரணமாகக் கிடைத்திருந்த பெரிய தனி வீட்டின் மாடியில் எனக்கு ஒரு தனியறையும், புத்தகங்களுக்காக சுவரில் அடித்து மாட்டிவைக்கும் ஒரு மர ஷெல்ஃபும் வாய்த்தது. கல்லூரிப் புத்தகங்களுக்கான இடம் தான் என்றாலும், அதில் மெதுமெதுவாகக் குடியேறத் தொடங்கின எனது வாசிப்பு வசந்தங்கள். அப்போதும் சிற்றிதழ்களே அதிகமிருந்தன, அழகியசிங்கர், ஸ்ரீதர்-சாமா ஆகியோர் என்னையும் உள்ளடக்கி நடத்திவந்த மலர்த் தும்பி பத்திரிகையில் வரும் படைப்புகளை எடுத்து எடுத்துப் படித்தபடி தான் வேதியல் பாடத்தின் மேற்கல்வியை மேற்கொண்டிருந்தேன். கோவை வானொலி நடத்திய நிகழ்ச்சிகள், இலக்கிய கூட்டங்கள் இவற்றோடு பாலகுமாரன், மாலன், சுப்ரமணிய ராஜூ எல்லோரும் எழுத்தாளர் சாவியோடு வந்து கலந்து கொண்டிருந்த கூட்டத்தில், சில உணர்ச்சிகர பேச்சுக்களைக் கேட்டபிறகு நூல் வாசிப்பின் வேகம் கூடியது. கணையாழி உள்ளிட்டுச் சில இதழ்களின் தொடர் வாசகன் ஆனேன். பெரிய அளவில் நூல்கள் வந்தடைய எனது சொந்த நிதி நிலைமை அனுமதித்திருக்கவில்லை.

    இடமாற்றலில் எனது தந்தை தருமபுரிக்குச் சென்றுவிடவும், கோவையில் அரிசி மண்டி வைத்திருந்த நண்பர் ஒருவர் முன் என்னை நிறுத்தினார் தந்தை. அவரோ, தாம் அரிசி மூட்டைகள் வைத்திருந்த அறை ஒன்றில் எந்த வாடகையும் இல்லாமல் நான் குடியிருக்கலாம் என்று அனுமதித்தார். அந்த அறைக்குள் எனக்கு முன்பே நான்கு பெருச்சாளிகள் என்னைப் போலவே வாடகை கொடுக்காமல் குடியிருந்தது எனக்குப் பின்னர் தான் தெரியவந்தது. அவற்றிடமிருந்து என்னையும், எனது நூல்களையும் தற்காத்துக் கொள்ள இருபத்து நான்கு மணி நேரமும் டியூப் லைட் எரியவிட்டிருப்பேன் (அந்த அறைக்குள் சன்னல்கள் கிடையாது !). வங்கியில் வேலை கிடைத்து திருத்தணி அருகில் வங்கனூர் என்ற சிற்றூரில் குடியேறியபோது எப்படியோ அந்த நீலப்பெட்டி என்னோடு வந்துவிட்டிருந்தது. தரையிலேயே புத்தகங்களை அடுக்கி வைக்கத் தொடங்கினேன். தருமபுரி பேருந்து நிலையம் அருகில் முதன்முறை பார்க்க நேர்ந்த நியூ செஞ்சுரி புக் அவுஸ் கடைக்குள் வேதியல் பற்றிய 107 கதைகள் என்ற தலைப்பிலான ஆங்கிலப் புத்தகம் தான் முதலில் கண்ணில் பட்டது. அதன் எழுத்து நேர்த்தியும், அசத்தல் சித்திரங்களும் சோவியத் வாசிப்புலகை நோக்கி ஈர்த்தது. முன்னதாக பதினோராம் வகுப்பு விடுமுறையின்போது வேலூரில் அண்டை வீட்டில் அஞ்சல் ஊழியர் சங்கத் தலைவர் சி எஸ் பஞ்சாபகேசன் அவர்களது குடும்பத்தோடு ஏற்பட்ட நெருக்கம், அவரது இளைய மகள் சி பி மல்லிகா பத்மினி என் வசம் வாசிக்கக் கொடுத்த மக்சீம் கார்க்கியின் தாய் நாவலின் நினைவுகளைப் புதுப்பித்துக் கொண்டேன். வங்கனூரில் உள்ளூர் மாணவரகள் பலர் மாலை நேரங்களை என்னோடு கழிக்க அவர்களது பாடப் புத்தகங்களோடு வந்து விடுவார்கள். கணிதம், ஆங்கிலம், தமிழ், அறிவியல் என பல்வேறு பாடங்களில் அவர்களது ஐயங்களைத் தீர்க்க உதவியபடி, அவர்களுக்கு வாசிப்புப் பழக்கம் ஊட்ட எனது நூலகம் இப்போது கொஞ்சம் விரிவடைத் தொடங்கியிருந்தது. ஆனாலும் அது தரைமீதே கொலுவிருந்தது.

    இடமாற்றல் கேட்டுச் சென்னைக்குக் குடிபெயர்ந்த போது, மீண்டும் தந்தையின் நிழலில் வந்து இளைப்பாறிய பொழுதில், வாடகை வீட்டில் எனது நூல்களை மீண்டும் நீலப் பெட்டிக்குள் அடைத்து வைத்திருந்தும் இடம் காணாது சுவர் அலமாரியில் திணித்து நிரப்பியிருந்தேன். தங்கை ஆண்டாள் (இன்றும்) வீட்டின் சிறந்த வாசகி. விரைந்து சொந்தமாக வாங்கிய எளிமையான சிறுவீட்டில் புத்தகங்கள் கம்பீரமாக வரிசையாக எனது பார்வைக்கு எப்பொழுதும் அடையாளம் காட்டியபடி அடுக்கப் பட்டிருந்தன. அந்த வரிசை, நியூ செஞ்சுரி தயவில் மிக மிக மலிவான விலையில் நீண்டு கொண்டு சென்றது. சோவியத் நூல்களோடு, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் போருக்கு விடை கொடுப்போம் போன்ற அழகு நூல்களும், வேறு தமிழ் பதிப்பக நூல்களும், அதிகமாகக் கவிதை நூல்களும் என்னிடம் சேரத் தொடங்கிய நேரத்தில் திருமணம் நிகழவும், அதற்கு முந்தைய சந்திப்புகளில் எனக்கும் எனது வாழ்க்கை இணை தோழர் ராஜேஸ்வரி இருவருக்கும் இடையேயான உரையாடலில் பரஸ்பரம் படித்திருந்த புத்தகங்கள், வீட்டில் வைத்திருக்கும் நூல்கள் முக்கிய இடம் பெற்றிருந்தது. நீரோடு நீர் போல நாம் சேருவோம் என்று எங்கள் புத்தகங்கள் கலந்த வீட்டில் நாங்களும் அன்போடு குடியேறினோம். எங்கள் குடும்பத்தின் இன்னொரு பேசும் உறுப்பினராக நூல்கள் வளர்ந்தன.

    எனது மாமனார் குடும்பம் பம்மல் பகுதியில் வாங்கியிருந்த காலி மனையில் கட்டிய வீட்டில் மாடியில் தனியறையும், நூல்களுக்கான சிறப்பு சுவர் அலமாரியும் ஏற்பாடு ஆனது. அந்தப் பெரிய நூலகத்தில், எனது சேகரிப்போடு, மைத்துனி கங்காபாய், அவரது கணவர் தோழர் நடராஜன், மைத்துனர் கவிஞர் மா குருமூர்த்தி ஆகியோர் வாங்கியிருந்த புத்தகங்களும், (மாமனார் மாத்ருபூதம் அவர்கள் பள்ளிக் காலத்தில் பெற்றிருந்த அருமையான பரிசுப் புத்தகங்களும், அகராதிகளும்) இரண்டறக் கலந்துவிட்டிருந்தன. எல்லாம் இடதுசாரி இயக்க சிந்தனைப் பரப்பில் வளர்ந்தவர்கள். ஆதலால் சில புத்தகங்கள் இரண்டு, மூன்று கூட தட்டுப்படும். வாசிப்பு தளம் விரிவடைந்து வரும் அதே வேகத்தில், எப்போது எல்லாம் வாசிப்போம் என்ற பெருமூச்சும் எழுந்த காலங்கள் அவை. சுவர்ப் பல்லிகளின் சீழ்க்கை ஒலி கூட இது பற்றிய பழிப்பு தானோ என்று நான் எண்ணுவதுண்டு. இத்தனைக்கும், ஜோல்னாப் பை புத்தகங்களோடு தான் வீட்டை விட்டு வெளியேறும், கூடுதல் கனத்தோடுதான் இரவு மீளும் என்றானது. ஒரு கட்டத்தில், குழந்தைகளுக்காக என்று நூலகம் அடுத்த கட்டம் சென்றது. என் பி டி, சி பி டி புத்தகங்களின் வசீகர மயக்கத்தில் ஆங்கிலமும், தமிழுமாய் சொல்லச் சொல்லத் திகட்டாத கதைப் புத்தகங்கள் ஜாம் ஜாம் என்று உடன் பயணம் செய்யத் தொடங்கின.

    அதற்கு முன்னும், பின்னும் சென்னை மாநகரில் ஆறே முறை தான் வீடு மாற்றினோம். (அதில் ஒற்றை அறை மட்டுமே இருந்த ஒரு சிறு வீட்டில் பரணில் ஏற்றிவிட்ட புத்தக மூட்டையைப் பார்த்து அரற்றியே எட்டு மாதங்கள் கடந்து போனது…). வீடு மாற்றும் நேரத்தில், அடேங்கப்பா, புத்தக மூட்டைகளைத் தொடுகிற வரை எல்லாம் மங்களகரமாகப் போய்க் கொண்டிருக்கும். அந்த இடத்தில் கை வைக்கிற போது சுற்றி நின்று ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிப்பார்கள். புது இடத்தில் இத்தனை இடம் கிடையாது…எதற்கு மூட்டை மூட்டையாய்க் குப்பைகளை எடுத்துக் கொண்டு. இப்போதே உட்கார்ந்து கழித்துக் கட்டுங்கள்..என்று. அதிலும் குறும்பு நிறைந்த கண்களோடு மைத்துனர் குருமூர்த்தி சொல்லிக் கொண்டே போவதை மறக்க முடியாது. ‘ஐந்தாவது மாநாட்டு அறிக்கை, அதைத் தூக்கிப் போடுங்க, அப்புறம் ஆறாவது மாநாட்டிலும் அதே அறிக்கையைத் தான் எழுதி வைப்பீங்க, இதென்ன புத்தகம், பெரிஸ்த்ரோய்க்கா? கொர்பச்சேவே எல்லாத்தையும் வித்துட்டு அமெரிக்கா போய்ட்டாரு, கழுதையத் தூக்கி வீசுங்க, புதிய கல்விக் கொள்கையா, அது பழையதாய்ப் போய் வருஷமாச்சு, எதுக்கு இத்தனை ஃபிரண்ட்லைன் ? அவங்க ஆபீஸ்ல இருந்து வந்து கேப்பாங்கன்னா?…’ அப்படியே அள்ளி எடுத்துக் காப்பாற்றி ஒவ்வொன்றையும் அடுத்த வீட்டுக்குக் கொண்டு சேர்ப்பது பெரும் பாடு.

    மாம்பலத்தில் இருந்து தற்போது இருக்கும் கோடம்பாக்கம் சொந்த இல்லத்திற்கு வந்த போது, வேறு எந்த அறைக்கும் கொடுத்த கவனத்தைப் போல் பல மடங்கு அக்கறையோடு எனக்காகப் புத்தக அலமாரியை வடிவமைத்திருந்தார் தோழர் ராஜி. அது நிறைந்தாலும், அட்டைப் பெட்டிகளில் வந்திறங்கிய புத்தகங்கள் குறைந்தது மாதிரி தோன்றவில்லை. பெண் விடுதலை, சிறுகதைத் தொகுதிகள், அதிகாலையின் அமைதியில், முதல் ஆசிரியர், வீரம் விளைந்தது, உண்மை மனிதனின் கதை, தாய், மாதவராஜ், தமிழ்செல்வன் கதைகள், பிரளயனின் சந்தேகி, என் ராமகிருஷ்ணன் அவர்கள் எழுத்தில் பல தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, கப்பற்படை எழுச்சி, நினைவுகள் அழிவதில்லை,……….என பெருகிய நூல் நதியை அணை கட்டி யார் தடுப்பது. துணிக்காக ஒதுக்கப் பட்டிருந்த இடத்திலும் தஞ்சம் புகுந்தன நூல்கள். ஆனாலும் ஜோல்னாப் பை கனத்தே தான் வீடு மீண்டு கொண்டிருந்தது.

    திடீரென்று சுவர் அலமாரியைத் திறந்தால், நான்கு ஐந்து ஜோல்னாப்பைகள் அப்படியே இடத்தை அடைத்துக் கொண்டிருக்க, புத்தகங்களும் வகை தொகையில்லாமல் துணி வரிசையிலும் ஒண்டிக் கொண்டிருக்கும். ஏம்ப்பா, இன்னிக்கு ஒரு நாள் சீக்கிரம் வந்து இந்த அலமாரியை ஒழித்துச் சுத்தமா அடுக்கி வச்சிருங்க என்று குரல் வரும். ஒரு பத்து மணிக்கு சாவகாசமாக அந்த அறைக்குள் நுழைந்து புத்தகக் கட்டுக்களை இழுத்துக் கீழே வீழ்த்தினால், பை பையாய்ப் புத்தகங்கள், கவர் கவராய்ப் புத்தகங்கள் சரிந்து விழுந்து இடத்தை நிரப்ப, ஜவுளிக் கடையில் இறைத்துப் போட்ட துணிகளை மடிக்க உட்காருபவனாக அமர்வேன். அடுக்க வேண்டியது, ஒழிக்க வேண்டியது…எல்லாம் ஐந்து நிமிடத்தில் அகன்று விட, எடுத்த புத்தகத்தில் பிடித்த பக்கத்தை எடுத்து அந்த வரிகள் அங்கே தான் இருக்கின்றனவா, இடம் பெயர்ந்துவிட்டதா என்று படிக்க ஆரம்பித்தால் அதற்கு முடிவேது…தோழர் ராஜி அறைக்குள் எட்டிப் பார்த்து, என்னப்பா முடிக்கலையா மணி ரெண்டு (நள்ளிரவைக் கடந்து..) என்பார்…தோ..இன்னும் கொஞ்சம் தான் என்று அவரது தலை மறைந்ததும் வாசிப்பு தொடரும் மறுபடியும். அப்படியே நூல்களை வாரி எடுத்து நாற்காலிகள் மீதும், பெரிய ஜூட் பையிலும், துணிக்கடை பிளாஸ்டிக் உறைகளிலும் நிரப்பி சுவர் ஓரமாக நிறுத்திவிட்டு, அடுத்த நாள் முடித்துவிடலாம் என்ற பொய்யான வாக்குறுதியை அளித்துவிட்டு அன்றாட ஓட்டம்.

    ஆனாலும், தவறாது புத்தகக் கண்காட்சியில் ஆஜர். ஒரு நண்பரிடம் கேட்டேன், நீ தான் போன ஆண்டு சந்தித்தபோது இனிமேல் நூலே வாங்க மாட்டேன், வாங்கியதையே படிக்க முடியவில்லை என்று சொன்னாயே, எங்கே இங்கே என்றேன். குடியை நிறுத்திவிட்டேன் என்று சொல்லும் ஒருவன் கடைக்கு அடுத்த நாள் போய் நின்றபோது, போதை மறந்து விடக் கூடாது என்று வந்ததாகச் சொல்வது மாதிரி தான் என்றார்.

    தேர்வு செய்யப்பட்டிருக்கும் தனது விருப்ப நூல்களை ஆர்வத்தோடு படிக்கும் மகள் இந்து (இரா.நடராசனின் ரோஸ் புத்தகத்தை எவ்வளவு விலை கொடுத்தாலும் தர மாட்டாள் ), அன்றன்று வாங்கிய புதிய புத்தகங்களை அன்றே ஒயிலாய் சாய்ந்து உட்கார்ந்து ஆசை தீர வாசிக்கும் மகன் நந்தா, இரண்டு கைகளாலும் புத்தகத்தை ஏந்திப் பிடித்துக் கொள்ள இயலாத படிக்கு இடது கை, தோள்பட்டை செயலற்ற நிலையிலும் நூல்களை வாசித்துத் தள்ளிக் கொண்டிருக்கும் மாமியார் கோமதி அம்மாள் (பிரசுரமாகும் எனது எழுத்து அனைத்தின் முதல் வாசகர் அவர்), படிக்க நேரமற்றுப் போக வைக்கும் அன்றாட நச்சரவை சபித்தபடி ரயில் பயணத்திற்குப் புத்தகத்தைத் தேக்கிக் கொள்ளும் மனைவி ராஜி எல்லோரும் வாசிப்புச் சூழலை வளப்படுத்திக் கொண்டிருப்பவர்கள்.

    நூல்களை அடுக்கி வைக்கவோ, எதையாவது எடுக்க எண்ணி கை வேறொன்றின் மேல் படவோ நேரும்போது விரிவது புத்தகங்கள் மட்டுமா, அது எப்போது வாங்கியது என்ற நினைவின் பின்னோட்டம், அதை வாசிக்கத் தொடங்கிய அந்தப் பொழுது, அதில் இன்னும் பத்திரமாக இருக்கும் பிடித்த வரிகள் எல்லாமும் ஒரு மறு ஒளிபரப்பாக மனத்தில் ஓடுவதை யார் தான் தடுக்க முடியும்..உங்களுக்கு அறிமுகமான இலக்கிய வீதி தான் என்றாலும் சில வீடுகளில் அதிகம் உரிமையோடு அடிக்கடி நுழைவீர்கள், சிலவற்றைக் கடக்கும் போது வெளியில் இருந்தபடி குரல் கொடுத்துப் பார்த்துவிட்டு நகர்வீர்கள், வேறு சிலவற்றை அடுத்த முறை வரும்போது உள்ளே எட்டிப் பார்க்கலாம் என்று வேகமாகக் கடந்து போவீர்கள் தானே, புத்தக வீதியும் அப்படியே தான் இருக்கிறது. படித்தவை, மீண்டும் படித்தவை, தொடாது வைத்திருப்பவை, முன்னே இருந்த நிலையில் இருந்து மக்கிய பக்கங்களோடு நைந்து போயிருப்பவை…என்று!

    ஆனாலும் வாசிப்பின் மோகம் குறையாது பெருகுவதே வாழ்க்கையை இனிமையாக்கிக் கொண்டிருக்கிறது. தீக்கதிர் இலக்கியச் சோலையில் வெளியான எனது இந்த சுய விமர்சனக் கவிதை அதைத் தான் பேசுகிறது:
    நூல்களோடு…….

    வாங்க விடுபட்ட புத்தகங்களிடம்
    இன்னும் கால அவகாசம் கேட்கிறேன்

    உறங்கவிடாது அலைக்கழித்தவற்றோடு
    தொடரும் உறவுகளையும்
    உறக்கத்தை ஊட்டியவற்றிடம்
    கருணையையும் கேட்கிறேன்

    காலத்தின் இரக்கம் மறுக்கப்பட்டு
    நைந்துபோன நூல்களிடம்
    மன்னிப்பு கோரி மன்றாடுகிறேன் –
    கவனமற்றுக் கையாளப்பட்டவற்றிடமும்!

    பல்வரிசையில் காணாமல் போன பல் போல்
    உருவப்பட்டுக்
    களவாடப்பட்ட நூல்களிடம்
    யாசிக்கிறேன் அவற்றின் மீட்சியை

    பைகளைக் கிழித்துக் கொண்டு நிறைந்தும்
    மேசை முழுக்க இறைந்தும்
    வானொலிப் பெட்டிக்கும்
    தொலைக்காட்சிப் பெட்டிக்கும்
    காதுகள் முளைத்ததாய்
    அவற்றருகே அடைந்து கொண்டும்

    இன்னும்
    தொலைபேசி உட்கார்ந்திருக்கும்
    சுவர்ப் பலகையில் குடியேறியும்

    பெரிய வாசக தோரணையைக்
    கொடுத்துக் கொண்டு
    கண்ணாடிக் கதவறைக்குள்ளிருந்தவாறு
    (தண்ணீர் குடிக்க
    எழும்
    ஒவ்வொரு நள்ளிரவிலும் )
    என்னை நியாயம் கேட்டுக் கொண்டும்

    கிடக்கும் எண்ணற்ற நூல்களிடம்
    முன்வைக்கிறேன்
    வாசிப்பிற்கான
    நிரந்தர கால நீட்டிப்புக்
    கோரிக்கை விண்ணப்பத்தை –

    வெட்கத்தோடும்
    விடமுடியாத தாகத்தோடும்………..

    ***********

    நன்றி ; புத்தகம் பேசுது இதழ்

    Share
  • மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட மாட்டாயா….

    அண்மையில் மறைந்த திரு பி பி ஸ்ரீநிவாஸ் அவர்களது நினைவில் அன்றைய இரவே நான் எழுதிய இந்த எளிய பிரதி, ஏப்ரல் 22 தீக்கதிர் நாளேட்டில் வந்திருக்கிறது….
    உங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் போல் தோன்றியது….

    நன்றி
    எஸ் வி வேணுகோபாலன்

    அற்புதமான பாடகர் பி பி ஸ்ரீநிவாஸ் சித்திரை திங்கள் முதல் நாள் காலமாகிவிட்டார்.

    காலங்களில் அவள் வசந்தம், கலைகளிலே அவள் ஓவியம் என்று முணுமுணுக்காத பழைய தலைமுறை இருப்பது அபூர்வம். மெல்லிசை என்று அழைக்கப்படும் திரை இசையை அதனினும் மெல்லிய இசையாகத் தமது குரல் வழி பொழிந்தவர் பி பி எஸ்.

    மிகக் குறைந்த எண்ணிக்கையில் கவிஞர்கள், இசை அமைப்பாளர்கள், கதாநாயகர்கள் இருந்த அந்த அறுபதுகளில் சிவாஜி, எம் ஜி ஆர் என்ற பெரிய நடிகர்களுக்கு டி எம் சவுந்திரராஜன் நிரந்தர பாட்டுக்காரராகத் திகழ்ந்தார். எங்கே நிம்மதி என்று வானொலியில் பாடல் புறப்படுகையிலேயே ரசிகன் சிவாஜி படம் என்று முடிவுக்கு வந்துவிடுவான். அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு என்று தொடங்கும் பாடலை வாத்தியார் பாட்டுடா என்று கூத்தாடத் தொடங்கிவிடுவான்…

    பி பி எஸ் அவர்களது அலை வரிசை வேறு தளத்தில் இயங்கியது. பிறந்த குழந்தையின் கள்ளம் கலவாத புன்னகைக் கோடு போலவோ , ஒரு முதியவரின் பற்றற்ற உலர்ந்த சிரிப்பைப் போலவோ இருக்கும் பாடல்கள் அவருக்கு வாய்த்தது வியப்புக்குரிய விஷயம். துள்ளலான காதலைக் கூட அவரது கொஞ்சும் மொழி இலக்கியப் படுத்தியதை, தாமரைக் கன்னங்கள் தேன்மலர்க் கிண்ணங்கள் என்னும் எதிர் நீச்சல் படத்தின் பாடலில் கேட்க முடியும். வாலியின் அருமையான வார்த்தை விளையாட்டு நிறைந்த அந்தப் பாடலில் (மங்கை நான் கன்னித் தேன், காதலன் தீண்டும் போது கைகளை மன்னித்தேன் என்று பி சுசீலா இழைக்கும் இடம் அத்தனை அழகு), நாகேஷின் சேட்டை நிறைந்த உடல் மொழிக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களோடு அமைந்திருக்கும் சரணங்களைப் பாடியிருப்பார் பி பி எஸ்.

    ரோஜா மலரே ராஜகுமாரி என்ற பாடல் காதல் உருக்கத்திற்கு இலக்கணம் எழுதுபவர்கள் கேட்டுக் கொண்டே எழுத வேண்டிய சாகித்தியம். உதடுகளை அவர் எப்படிப் பிரித்து எப்படி மூடி பாடலின் சொற்களை உச்சரித்தார் என்று யோசிக்க வைக்கும் எழில் அவரது குரலில் நெளிகிறது. வீரத் திருமகன் படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடலிலும் சுசீலா அவருக்கு ஏற்ற இணை குரலாய் ஒலித்தார்

    எம் எஸ் விஸ்வநாதன் தமது எந்த மெல்லிசைக் கச்சேரியிலும் முதல் பாடலை இசைக் கருவிகளைக் கொண்டு தான் தொடங்குவார். எண்பதுகளில் நான் பார்த்தவரையில் அது காதலிக்க நேரமில்லை திரைப்படத்தின் நாளாம் நாளாம் திருநாளாம் என்ற இனிமை நிறைந்த பாடலாகத் தான் இருக்கும். அதில், இளைய கன்னிகை என்ற சொற்களை அத்தனை கிறக்கமாக எடுத்துக் கொடுப்பார் பி பி எஸ். அதே கதியில் சரணங்களை இசைக்கும்போதும், ஹம்மிங் செய்கையிலும் அப்படி ஒரு சுகானுபவத்தை அளிப்பார் கேட்போர்க்கு.

    அவருக்கே உரித்தான வெல்வெட் குரலில் ஜானகியோடு இணைந்து அவர் பாடிய போலீஸ்காரன் மகள் படத்தின், பொன் என்பேன் சிறு பூ என்பேன் என்ற கீதம், வித்தியாசமான திரை இசைப் பாடல்களைத் தொகுத்தால் அதில் முக்கிய இடத்தில் இருக்கும்.

    சொற்களை அவர் கொஞ்சம் நகாசு வேலை செய்து சொகுசாக்கி உருட்டி விடுவது போல் வந்து நமது இதயத்தைத் தொடும்….சோகப் பாடல்களோ இதயத்தை வருடும். ஜெமினி கணேசனுக்கென்றே அவர் குரல் கொடுத்த கண்ணதாசனின் தத்துவ முத்துக்கள் இரவின் தனிமையில் நம்மை வேறு ஒரு கிரகத்திற்குக் கொண்டு போய்க் குடியமர்த்தும். அப்படியான பாடல்களில் மயக்கமா கலக்கமா ஒரு தினுசான வித்தை காட்டும் என்றால் அசர வைக்கும் வேறொரு பாடலான யார் சிரித்தால் என்ன, இங்கு யார் அழுதால் என்ன என்பது கற்பனையான ஒரு சோகத்தைக் கேட்பவருள் உருவாக்கி அதில் ஒரு பரவசத்தை ஏற்படுத்தி நிறைவுறும்.

    டி எம் சவுந்திரராஜனோடு இணைந்து பி பி எஸ் கொடுத்த அருமையான பாடல்களில், மறக்க முடியாதவை, பொன் ஒன்று கண்டேன், பெண் அங்கு இல்லை என்பது தனி ராகம். புல்லாங்குழல் இசையின் ஒத்த கதியில் மிகவும் அமைதியான பரஸ்பர காதல் பகிர்வின் இரண்டு வெவ்வேறு குரல்கள் கலந்து மிதக்கும் அந்தப் பாடலில், ஸ்ரீநிவாஸ் அழுத்தமான டி எம் எஸ் குரலினூடே ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பு போல மென்சிதறலாய்த் தமது குரலைப் பொழிவார். அவள் பறந்து போனாளே பாடல் வேறொரு பாவத்தில் இதே இருவரின் குரல்களை இணைக்கும் பாடல். எம் எஸ் வி தேர்ச்சியான கருவிகளைப் பயன்படுத்தி மேற்கத்திய சூழலை மனத்திற்குள் படரவிடும் அழகே தனி.

    தவப் புதல்வன் படத்தில், சிவாஜிக்காக ‘உலகின் முதலிசை தமிழிசையே’ என்று டி எம் எஸ் பாடுவதற்குப் போட்டியாக, திக்குரிசி சுகுமாரன் நாயர் என்ற நடிகர் பாடுவதற்கு பி பி எஸ் பாடிய, சங்கீத குலோமினி பஹியாகே என்ற சங்கீதம் ருசியானது

    என்ன சொன்னாலும் பி பி ஸ்ரீநிவாஸ் பாடிய தத்துவப் பாடல்களில், கண்ணதாசனின் சிறந்த பாடல்களில் ஒன்றான காட்டு ரோஜாவில் வரும் எந்த ஊர் என்றவனே பாடல் ரசனைக்கு ஏற்ற சரக்கு. அதில்

    காதலூர் காட்டியவள்
    காட்டூரில் விட்டுவிட்டாள்,
    கன்னியூர் மறந்தவுடன்
    கடலூரில் விழுந்துவிட்டேன்,
    பள்ளத்தூர் தன்னில் என்னை
    பரிதவிக்க விட்டுவிட்டு
    மேட்டூரில் அந்த மங்கை
    மேலேறி நின்று கொண்டாள்….

    என்று ஓர் இழு இழுத்து ஒரு நொடி pause கொடுப்பார்….இசையின் அழகு, நடுவே கடந்து போகும் ஓசையற்ற மவுன இடங்கள் என்பதன் இலக்கணம் அந்த இடம்…

    ‘அழகிய மிதிலை நகரத்திலே யாருக்கு ஜானகி காத்திருந்தாளை’ விட்டுவிட முடியுமா.அல்லது ஏன் சிரித்தாய் என்னைப் பார்த்து, ஆதி மனிதன் காதலுக்குப் பின் அடுத்த காதல் இது தான், என்னருகே நீ இருந்தால் இயற்கையெல்லாம் சுழலுவதேன், என்ற எந்தப் பாடலைத் தான் விட்டுவிட முடியும்? இன்னும் அவரது முத்திரைப் பாடல்களான நிலவே என்னிடம் நெருங்காதே, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம், பால் வண்ணம் பருவம் கண்டு, கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே, பார்த்தேன் சிரித்தேன், ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால்…..எதைத் தான் விட முடியும்?

    கர்ணன் படத்தில், மழை கொடுக்கும் கொடையுமொரு என்று கம்பீர நாவுக்கரசர் சீர்காழி கோவிந்தராஜன் தொடங்கும் பாடலில், பி பி எஸ் நுழையும் என்ன கொடுப்பார் எதைக் கொடுப்பார் என்றிவர்கள் எண்ணும் முன்னே வரிகளும் சரி, குழந்தைக்காக படத்தில் ராமன் என்பது கங்கை நதி என்று அதே போல சீர்காழி தொடங்கி வைக்கும் மூவர் பாடலில், இயேசு என்பது பொன்னி நதி என்று பி பி எஸ் அடி எடுத்து, அப்புறம் சரணங்களிலும் மென்குரலில் இசைக்கும் இடங்களும் சரி ரசிகர்களுக்கு போனஸ் பரிசு.

    இதெல்லாம் கடந்த காலத்தின் மனிதர்களுக்கானவை…இடையே திடீரென்று எதிர்பாராத இன்ப அதிர்ச்சி, எண்பதுகளின் பிற்பகுதியில் ஊமை விழிகள் படத்தில், மிகப் பரவலாகக் கொண்டாடப் பட்ட, தோல்வி நிலை என நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா என்ற இரத்தினத்தை பி பி எஸ் வழங்கியது

    மிக மிக எளிய மனிதராகவே அறியப்பட்ட அவர், கிட்டத் தட்ட ஒரு குழந்தையைப் போலவே நடந்து கொண்டவர். எப்போதும் பல நிறங்களில் விதவிதமான பேனாக்களை பாக்கெட்டில் வைத்திருப்பார் அவர். உட்லண்ட்ஸ் டிரைவ் இன் ஓட்டல் இடிக்கப்பட்டு அங்கே செம்மொழி பூங்கா வரவிருப்பதாக செய்தி வந்ததும் முதலில் அதிர்ச்சி அடைந்தவர் அவர் தான்….கால காலமாக மாலை நேரங்களை அவர் அங்கே தான் கழித்து வந்தார். அவரைப் பார்க்க விரும்பும் யாரும் அந்த நேரத்தில் அவரை அங்கே பிடித்துவிட முடியும்.

    எந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டாலும் அவரது கவிதை ஒன்று தயாராக இருக்கும்….ஆங்கிலத்திலும் தமிழிலும் தம்மை சிறப்பித்த மனிதரின் பெயரில் உள்ள எழுத்துக்களை முதல் எழுத்துக்களாக வைத்து அத்தனை வரிகளில் ஒரு கவிதை எடுத்து விடுவார் அல்லது அந்த அமைப்பின் பெயரில்.! இந்தியன் வங்கியில் ஒரு பாடல் போட்டிக்கு அவர் அழைக்கப்பட்டபோது வங்கியைப் பெருமைப் படுத்தி அப்படியான ஒரு கவிதையை வாசித்தார் அவர்.

    தம்மை விட இளைய வயது பாடகர்கள் அல்லது போட்டிகளில் தமது பாடலைப் பாடும் சிறுவர்கள் யாரையும் அத்தனை சிறந்த குரல் வளம் மிக்கவர்களாக வாழ்த்துவார். தலைக் கனத்தோடு அவர் யாரையும் மட்டம் தட்டிப் பேசியதாக ஒரு நிகழ்வும் நினைவில் இல்லை.

    அவரது குரல் ஓர் அலங்காரம் என்றால், அவரது உடை அலங்காரம் இன்னும் தடபுடலாக இருக்கும்….சரிகைக் குல்லாய் சட்டை மீது ஓர் சால்வை, பவர் அதிகமான லென்ஸ் கொண்ட கண்ணாடி, நெற்றியில் திருநாமம்.

    சில மாதங்களுக்குமுன் பாண்டி பஜாரில் ஓர் ஓட்டலில் இருந்து அவர் வெளியே வருவதைப் பார்த்தேன்…உடன் வந்த குடும்ப உறுப்பினர்களில் இளைய தலைமுறைக்கு அவர் பெயரைச் சொல்லத் தெரியாமல் திணறிய போது வருத்தமாக இருந்தது…அவரைத் தெரியும் என்றால் அருகே போய்ப் பேசுங்களேன் என்றார்கள். எனக்குத் தான் அவரைத் தெரியும், அவருக்கு என்னைத் தெரியாது. .இந்த முதிய வயதில் அவர் தேடித் தேடி அவசரமாக வெளியேறிக் கொண்டிருக்கும் நேரத்தில், வெறும் அற்ப ரசனையுடன் குறுக்கிட எனக்கு தயக்கமாக இருந்தது….வழக்கமாக இத்தனை யோசிக்கவே மாட்டேன்.

    அவரை இனி ஒரு போதும் அருகே சென்று பார்த்துப் பேசவோ அவரது பாடல்களை அணு அணுவாய் நான் எப்படி ரசித்தேன் என்று நடுங்கும் அவரது கைகளை எடுத்து எனது இதயப் பக்கத்தில் அழுத்தியவாறு பகிர்ந்து கொள்ளவோ முடியாது என்று இன்று நினைக்கும்போது அன்றைய தயக்கம் இப்போது வேதனை மிகுந்ததாக மாறுகிறது…..

    வணக்கம் பி பி எஸ்…..எங்களை உங்களது வசீகர குரலின்வழி புதிய கனவுகளுக்கு கற்பனைகளுக்கு வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்படுத்திய கலைஞனே, நீங்கள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் – தமிழில் மட்டும் அல்ல கன்னடம் தெலுங்கு என உங்கள் குரல் ஒலித்த அத்தனை மொழிகளிலும்…..

    *************************
    நன்றி: தீக்கதிர் – ஏப்ரல் 22

    Share
  • அஞ்சலி: டி எம் சவுந்திரராஜன்

     

    உணர்ச்சிகர பாடகன் விடை பெறுகிறான், பாடல்களை நம்மிடம் விட்டு….

    எஸ் வி வேணுகோபாலன்

     

    ஒரு கண்ணதாசன், ஒரு சிவாஜி, ஒரு எம் ஜி ஆர், ஒரு விஸ்வநாதன், ஒரு சவுந்திரராஜன்….இதெல்லாம் ஒரு சகாப்தம்..திரும்ப வராது….

    மேலே நீங்கள் படித்த வாக்கியம் சாட்சாத் டி எம் எஸ் அவர்களே சொன்னது. கவியரசு கண்ணதாசன் மறைவை அடுத்து சென்னை தொலைக்காட்சியில் கண்ணீர் மல்க அவர் சொன்ன செய்தி அது. உள்ளபடியே சகாப்தம் தான் அந்தக் காலம்.

    பி பி ஸ்ரீநிவாஸ், ராமமூர்த்தி என மறைந்து கொண்டிருக்கும் இசை மேதைகளின் வரிசையில் இப்போது டி எம் சவுந்திரராஜன் காலமாகிவிட்டார். இசை தேவதைக்கு துயரம் மிகுந்த காலமும் கூட இது.

    டி எம் எஸ் என்பது ஒரு குரல் மட்டுமல்ல. நான்கு பத்தாண்டுகளை, சில நூறு திரைப்படங்களை, அடுத்தடுத்த தலைமுறைகளை அப்படியே கட்டி ஆண்ட இசை சிம்மம். எப்படித் தான் அவர் நடிகர்களுக்கு ஏற்பத் தமது குரலில் மாற்றங்களைக் கொண்டு வர முடிந்தது என்பது பலரும் வியந்து நோக்கிய விஷயம். நடிகர்களின் காலப் போக்கிற்கு ஏற்ற நெளிவு சுளிவுகளையும் கூட அவர் தமது குரலில் ஏற்றிக் கொண்டார். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் என்ற (மலைக்கள்ளன்) பாடலின் தொனி வேறு. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் (எங்க வீட்டுப் பிள்ளை) பாடலின் தொனி முற்றிலும் வேறு. தாழையாம் பூ முடிச்சு (பாகப் பிரிவினை) பாடிய காலம் வேறு, சுமை தாங்கி சாய்ந்தால் (தங்கப் பதக்கம்) காலம் வேறு.

    பாடலைப் பாடுவது மட்டிலும் அல்ல பாட்டுக்கான பாவத்தைப் பிடிப்பது மட்டிலும் கூட அல்ல, வாயசைக்கும் நடிகரின் திறன், அவரது உடல் மொழி, அந்தக் கதா பாத்திரத்தின் சமூக அடையாளம்….இவை எல்லாவற்றையும் தனது குரல் ஒரு ஒட்டுமொத்தக் குறியீடாக உணர்த்தி விட வேண்டும் என்று ஒரு பயிற்சி மேற்கொண்டார் போலும். இதனால் தான் அவர் – ஆத்திரம், அன்பு, கோபம், காதல், வீரம் சோகம், என எந்த உணர்ச்சியைக் காட்டும் பாடலையும் எடுத்துப் பாடும் திறமையைப் பெற்றிருந்தது.

    கம்பீரம் பொங்கும் பாடல்களை மிக அனாயாசமாகப் பாட முடிந்த அவருக்கு, மெலிதான குரலில் அரவணைப்பாக இசைக்கவும் தெரிந்திருந்தது. கர்ணன் படத்திற்காக அவர் பாடிய (ஆனால் படத்தில் இடம் பெறாத) மகாராஜன் உலகை ஆளலாம் என்பதில் ஒலிக்கும் அவரது குரலுக்கும், சித்திரம் பேசுதடி என் சிந்தை மயங்குதடி (சபாஷ் மீனா) என்பதன் குழைவுக்கும் எத்தனை வேறுபாடு ! சோதனை மேல் சோதனை போதுமடா சாமி (தங்கப் பதக்கம்) என்ற தன்னிரக்கம் மிகுந்த ஒரு பாடலுக்கும், அச்சம் என்பது மடமையடா (மன்னாதி மன்னன்) போன்ற நெஞ்சு நிமிர்த்தும் ஒரு பாடலுக்கும் எத்தனை மாறுபாடு.

    துயரம் பொங்க ஒலிக்க வேண்டிய பாடல்களை அவர் வெளுத்துக் கட்டினார். நினைந்து நினைந்து நெஞ்சம் (சதாரம்), நான் உன்னை அழைக்கவில்லை, ஒரே பாடல் உன்னை அழைக்கும் (எங்கிருந்தோ வந்தாள்), தேவனே என்னைப் பாருங்கள் (ஞான ஒளி), ஆட்டுவித்தால் யார் ஒருவர் (அவன் தான் மனிதன்), அம்மம்மா தம்பி என்று நம்பி (ராஜபார்ட் ரங்கதுரை) என்று பெரிய பட்டியல் உண்டு. ஓர் இசைக் கருவி இழைத்துத் தரும் சோகத்தை அவரது குரலினுள் குரலாக ஒரு ரசவாதம் செய்து அந்த அனுபவத்தை ரசிகர்களுக்கு அவரால் வழங்க முடிந்தது.

    கர்நாடக சங்கீத ஞானம் இருந்ததால், ராகங்கள் கொஞ்சும் இசைப் பாடல்களை அவர் தூக்கலான குரலில் இசைக்க முடிந்தது. வசந்த முல்லை போலே (சாரங்கதாரா), ஏரிக்கரையின் மேலே (முதலாளி), முல்லை மலர் மேலே (உத்தம புத்திரன்), சின்னஞ்சிறிய வண்ணப் பறவை (குங்குமம்), மாதவிப் பொன் மயிலாள் (இரு மலர்கள்) என கிறங்க வைக்கும் குரலில் அவர் கலக்கிய பாடல்களில், கே வி மகாதேவன் அவர்களின் இசை நுட்பத்தில் விளைந்த ‘பாட்டும் நானே பாவமும் நானே’ (திருவிளையாடல்) பாடல் ஓர் அற்புதக் கொடை ! கர்நாடக சங்கீதத்தில் பாடத் தொடங்குமுன் சுருதி சேர்த்துக் கொள்ள, ஸ ப ஸ பிடிப்பது என்று முக்கிய தொடக்கம் ஒன்று உண்டு. அதை, ஒரு இசையறிவு அற்ற பாமரன் எத்தனை கொனஷ்டை வேலைகளைச் செய்து பாடுவானோ (விறகுவெட்டி பாத்திரம்) அப்படி பாடியவாறே ஸ ப ஸ சுருதியில் அதை அமைத்துத்தான் அந்தப் பாடலை டி எம் எஸ் தொடங்குவார். சிரிப்பில் உண்டாகும் ராகங்களே என்ற எம் எஸ் விசுவநாதனின் (எங்கிருந்தோ வந்தாள்) அரிய பாடலில் பி சுசீலாவும் டி எம் எஸ்சும் சங்கீத சிரிப்பு சிரிப்பது வித்தியாசமான அனுபவம்.

    பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற ஒப்பற்ற கவிஞர் மிகக் குறுகிய காலமே திரையுலகில் பங்களிப்பு செய்ததில், அவரது பொருளடர்த்தி மிகுந்த பாடல்களின் உயிர்த் துடிப்பாக ஒலித்தது டி எம் எஸ் குரல். தூங்காதே தம்பி தூங்காதே, திருடாதே, சின்னப் பயலே சின்னப் பயலே ஆகியவை காலத்தால் அழியாதவை. அதைப் போலவே, தியேட்டரில் ஒரு காலத்தில் ரசிகர்களை துள்ளாட்டம் போட வைத்த சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா (நீல மலைத் திருடன்), எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் (மலைக்கள்ளன்) போன்றவை ஒரு ரகம் என்றால், எழுபதுகளில் கொடி கட்டிய அடி என்னடி ராக்கம்மா (பட்டிக்காடா பட்டணமா), அம்மாடி பொண்ணுக்குத் தங்க மனசு (ராமன் எத்தனை ராமனடி) வரிசையில் சிலவற்றை இரண்டு எதிரெதிர் உணர்வுகளின் விளிம்பில் பாடியவை இன்னொரு விதம்.

    சிவாஜி, எம் ஜி ஆர் இருவருக்காக மட்டுமல்ல- ஜெய்சங்கருக்காகவும் அவர் நிறைய பாடினார். நாகேஷ், முத்துராமன், ரவிச்சந்திரன், சிவகுமார்…. என பல நடிகர்களுக்கும் ஒலித்த அவரது குரல், தனக்குப் பல பாடல்களை எழுதிய கண்ணதாசனுக்காகவும் கூட (ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு, பரமசிவன் கழுத்தில் இருந்து.) ஒலித்தது.

    கிராமப்புறக் கதைகளுக்கான தெம்மாங்கு பாடல்களும், துள்ளாட்டப் பாடல்களும் அவருக்கு நிறையவே வாய்த்திருந்தன. மணப்பாறை மாடு கட்டி (மக்களைப் பெற்ற மகராசி) பாடல் எல்லாக் காலத்திற்குமான ஒன்று. மேற்கத்திய பாணியில் சாந்தி திரைப்படத்தில் அவர் பாடிய ‘யாரந்த நிலவு…’ அவரது இன்னொரு பரிமாணத்தை எடுத்துச் சொன்னது. எந்தக் குரலோடும் இணைந்து, தனது தனித்துவத்தைப் பதிக்கும் திறம் அவரது தனித்தன்மையாக இருந்தது. ‘இது மாலை நேரத்து மயக்கம் ‘ (தரிசனம்) போன்ற எல் ஆர் ஈஸ்வரியின் கிறக்கம் மிகுந்த பாடல்களானாலும், காதலின் பொன் வீதியில் (பூக்காரி) போன்ற எஸ் ஜானகியின் கொஞ்சும் குரல் ஒலிக்கும் பாடல்களானாலும், முத்துக்களோ கண்கள் (நெஞ்சிருக்கும் வரை) போன்ற இழையும் குரலெடுக்கும் பி சுசீலாவோடு இணைந்து ஒலித்த பாடல்களானாலும் அவரது குரல் எப்போது வந்து கலக்கும், எந்த ஒரு மிதப்பில் வசீகரிக்கும் என்று எதிர்பார்க்க வைக்கும்….

    திரைப்படப் பாடல்களில் மட்டுமல்ல, பக்திப் பாடல்களிலும் எண்ணற்ற ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்துவிட்டவர் அவர். புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே ஒலிக்காத இசைக் குழு ஏது தமிழகத்தில் ! முருகர் பாடல்களுக்கு அவரைப் போல் உள்ளம் கரைய வைத்தவர்கள் யார்….அழகென்று சொல்லுக்கு முருகா, உள்ளம் உருகுதையா, மண்ணானாலும் திருச்செந்தூரில், முத்தைத் திரு பத்தி…இந்தப் பாடல்களை அவர் தமக்கென்று அமைத்துக் கொண்ட அசத்தலான ஒரு பாணியில் பாடி கேட்பவர் மனங்களை மயக்கிக் கொண்டிருந்தார். சில படங்களில் நடிக்கவும் செய்தார்.

    அவரது பாடல்களை உற்றுக் கேட்கும்போது, ‘ன்’ என்ற எழுத்தை அவர் அதற்குமுன் ஒரு ‘ல்’ சேர்த்து தினுசாக உச்சரிப்பதைக் கண்டு பிடிக்க முடியும். ஒன்று என்ற சொல்லை அவர், (உனது விழியில் என்ற பாடலில், உயிர் கொண்ட ஓவியம் ஒன்று என வரும் இடத்தில்) ஒல்ன்று என ஸ்டைலாக ஒலிப்பதைக் கேட்க முடியும். இன்று என்பது இல்ன்று எனவும், வந்து என்பதை வல்ந்து எனவும் அவர் பாடுவதைக் கேட்க முடியும்.

    தமிழ் அவரது தாய்மொழி இல்லை என்றபோதும் (அவரது சவுராஷ்டிரா மொழி), மொழியின் தூய்மை கெடாது உச்சரிக்கும் திறன் அவருக்கிருந்தது. தெருக்கூத்து, எம் கே தியாகராய பாகவதர் பாடிய ராதே உனக்கு கோபம் ஆகாதடி பாடலின் சற்றே மாற்றப்பட்ட வடிவத்தில் டி எம் எஸ் பாடிய பாடலும் பிரபலம் பெற்றது. அந்த உயர்ந்த கட்டைகளில் பாடிய காலம் பின்னர் மாறிக் கொண்டு வந்தது. அடிமைப் பெண் படத்தில் எம் ஜி ஆர்,புதிதாக அறிமுகப் படுத்திய எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்களின் ஆயிரம் நிலவே பாடல் வெற்றி பெற்றபோது இனி அவர் தான் தமக்குக் குரல் கொடுப்பார் என்று சொன்னது டி எம் எஸ் அவர்களின் பாடல்க குறையத் தொடங்கிய காலம். சில ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, டி ராஜேந்தர் ஒரு தலை ராகம் படத்திற்குப் பாட அழைத்தார். இரண்டு பாடல்கள். ஒன்றின் முதல் வரி, என் கதை முடியும் நேரம் இது…அடுத்தது: நான் ஒரு ராசியில்லா ராஜா. அதற்குப் பிறகு பெரிய அளவில் பாடல்கள் இல்லை…வயது அவரது குரலை உடைத்தது.

    பெரிய அங்கீகாரம் அற்ற அண்மைக் காலத்தில், கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் கைரளி தொலைகாட்சி அவரை அழைத்து சிறப்பித்து பரிசும் நிதியும் வழங்கியது குறிப்பிடத் தக்கது. கலைஞர்களை, எழுத்தாளர்களை, ஓவியர்களை தமிழ் சமூகம் கொண்டாடும் காலம் எப்போது வரும் என்ற கேள்வியை எழுப்பியது அந்த விழாவின் புகைப்படம். அவரது மறைவுச் செய்தி கேட்ட பிறகு, இணைய தலத்தில் அவரது கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் (கவிஞர் வாலி) என்ற ஆரம்ப கால பக்திப் பாடலைக் கேட்டேன்….இளமை சொட்டும் குரலில், பிசிறற்ற இழைவும், குழைவும், ராக ஏற்ற இறக்கங்களும் மனத்தைக் கொள்ளை கொண்டது.

    அவரது மறைவு, அவரது பாடல்களை – அவரது வளமிக்க குரலை மேலும் நிரந்தரமாக்கவே செய்கிறது. கிராமப்புற திருமண இல்லங்களின் ஒலி பெருக்கிகளில், நகர்ப்புற இசைக் குழுக்களின் நிகழ்ச்சி நிரலில், ஆலய திருவிழாக்களில், மன்றங்களின் கொண்டாட்டங்களில் தவிர்க்க முடியாத குரலாக டி எம் எஸ் ஒலித்துக் கொண்டு தான் இருப்பார். என்ன தான் புதிய பாடல்களை இசை நிகழ்ச்சியில் அடுத்தடுத்துப் பாடிக் கொண்டிருந்தாலும், அரை மணி நேரம் கழித்து ஒருவர் ஓசைப் படாமல் பழைய டயரியை எடுத்துத் திருப்பிக் கொண்டே வந்து, ‘பாவாடை தாவணியில்…’ (நிச்சய தாம்பூலம்) என்று மைக்கில் குரலெடுக்கும் போது சபை களைகட்டிவிடும். அப்புறம் ‘இன்பமே உந்தன் பேர்…(இதயக்கனி)’ தொடரும். சிவாஜியே பாடியது போல, எம் ஜி ஆரே வந்து இசைத்தது போல மக்கள் புளகாங்கிதம் அடைந்து கேட்டுக் கொண்டிருப்பார்கள்…..

    ****************

    Share