Tag: பா. வானதி வேதா. இலங்காதிலகம்

  • எழுத்து – 10

    எழுத்து – 10

    வேதா. இலங்காதிலகம்
    டென்மார்க்

    பழுதற்ற பவுத்திர வரிகள் தான்!
    உழுது உலகையெழுப்பும் வரிகள் தான்!
    எழுது! எழுது! எழுத்து வாசிக்கப்படுகிறதா!
    எழுதுவது யாரெனப் பார்ப்பதே தோல்வி
    உழுத்த சிபாரிசு பேதம் பார்த்தல்
    எழுத்தைக் காட்டினுள் வேகமாய்த் தள்ளுது.
    எழுத்திற்கு வயதில்லை பிறகு ஏன்
    எழுதுபவன் இளமையா, முதுமையாவென ஒப்பீடு!

    தொழுதிடும் வரிகள் நேர்த்தியைப் பார்!
    வழுவற்ற வரிகளா! கம்பன் பாரதியின்
    விழுதுகளா  என்று தமிழைப்  பார்!
    கழுவி ஊற்றாதே கருத்துடை எழுத்துகளை!
    எழுத்து நான்கு வயதிலொரு கூறு
    எழுமையாம் நாற்பது வயதிலொரு கூறு.
    எல்லாமே இனிமை இல்லையது சேறு.
    வல்லமையோடு  வாரியெடு இது ஆறு!

    வாரியிறைக்க குளம் குட்டையல்ல
    வல்ல தமிழை நெருங்கி அண்டு!
    கொல்லாது குடையும் இன்ப வண்டு!
    இல்லாத ஆனந்தம் நிச்சயம் உண்டு!
    நல்ல எழுத்து தலைநிமிர்ந்து நிற்கும்
    அல்லல் செய்யும் கரகாட்டத் தினவெடுப்பு
    நில்லாது எழுத்தாணி எழுதி வடித்திடும்
    நெல்லாக விளைந்து நூலாகி உருவெடுக்கும்.

    Share
  • எழுத்து- 4

    14212124_605045806324274_6346503443436024746_n

     

    நூல் படிக்க எழுத்து கற்கிறோம்
    மேலுலகு செல்லு முன்னர் கற்றிடுங்கள்!
    நாலெழுத்து வாசிக்கும் இன்பக் கவர்ச்சியால்
    நூலும் விரும்பியவர் வாசிக்கும் விலைமகளே
    இறக்காத விடயங்களில் எழுத்தும் ஒன்று.
    நிற்காத தொடர் வண்டி போல
    உறங்காத நயகரா நீர் வீழ்ச்சியாக
    இறங்குவது எழுத்துச் சாரல் தொடர்ச்சியாக

    சுந்தரக் கடல் எழுத்து தந்திரமோ
    மந்திரமோ அல்ல மன விதைகள்
    முந்திய வள்ளுவன் வாழ்வின் குறளும்
    அந்தக் கம்பன் தமிழும் எம்
    நிரந்தர சிறகாக்கிப் பறந்திட ஆசை.
    நினைத்திடு எழுத்து ஒரு சூரியன்!
    நிரந்தர ஏர் சமூகத்தை உழுதிட!
    பரந்த பிறப்பிற்கு உயிர் தருவது.

    நல்ல எழுத்தை அலட்சியமின்றிப் பாராட்டலாம்
    வெல்லும் கொலுசுச் சத்தம் அது
    புல்லரிக்கும் மனதில் எண்ணும் தோறும்
    வெல்லும் வரிகள் மின்னும் வைரங்கள்
    புலன்களை ஊடுருவிப் பிறக்கும் முத்துகள்
    வலமிடமின்றி எழுத்துக் கருவியால் குதிக்கும்.
    கடற்கரை மணல் சிறு நண்டோவியப்
    படமாக ஊர்ந்து ஊர்ந்து சிலிர்க்கும்.

    ஆக்கம்:- பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க். 5-10-2017
    _______________

    Share
  • கேட்டாளே ஒரு கேள்வி!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம் 

    சும்மா இருப்பதல்ல ஓய்வுக் காலம்
    சுகமான கனவுகள் நிறைவேற்றும் காலம்
    சுதந்திர மனம், ஆரோக்கிய உடல்
    சுறுசுறுப்பு  அனுபவம் சுயமாய் இயங்குதல்.

    உடற் பயிற்சி, உகந்த வெளியுலா,                             woman
    உணர்வின் மனச்சுளுக்கு எடுக்கப் பல
    உற்சாகம் தரும் நூல்கள் வாசிப்பு
    உள்ளம் மகிழ உறவுகளின் கூட்டுறவு.

    அச்சச்சோ நேரம் போதவில்லையேயெனும்போது
    உச்சக் கேள்வியொன்று  பக்கம் விழுந்தது
    ”என்ன வீட்டிலிருந்து சமையல் செய்கிறீர்களா?என்ன உடல் பருத்து  விட்டதா?”

    விரியும் தமிழும் நானுமொரு பக்கம்
    தெரியாதா  என் தமிழ் பற்றி இவளுக்கு?!புரியாது சமைக்கப் பிறந்தவள் என்கிறாளே!சிரிப்புத்தான் வந்ததிவள் கேள்வியால் எனக்கு!

    ஓய்வூதியம் எடுத்த பின்னும் மனிதன்
    ஓய்வதில்லை; ஓடியாடிய உடல் ஓயாது
    ஓய்ந்திருத்தல் என்பதும் மனதுக்கும் இல்லை
    ஓடை போன்று ஓடுவதே வாழ்வு!

    பல வகையாக வாழும் விதம் உண்டு
    கலகலப்பான வாழ்க்கை விதம் ஒன்று
    நலமற்ற கறாரான வாழ்வு வேறு
    விலகுங்கள் என் வழி வேறு!

    (வேறு)

    குமையும் பெண் மனங்களே!
    அமைந்த வாழ்வை அற்புதமாக்குங்கள்!
    சமையலே வாழ்வு அல்ல!
    சமையல் சிறு பாகமே!

     

    Share
  • மறக்கவியலா இன்ப வெள்ளம்!

    -வேதா. இலங்காதிலகம்

    வெள்ளம் பலர் வாழ்வில் வேதனை
    உள்ளம் வெதும்பத் துன்பச் சாதனை
    வெள்ளம் கொள்ளும் பெரும் கள்ளம்
    பள்ளம் நோக்கித் தானே துள்ளும்.                      flood

    தள்ளும் ஊரையே அழித்து முழுகும்
    துள்ளும் குழந்தைகள் கப்பலிட மகிழும்
    வெள்ளம் என்றதும் எனக்கும் நினைவில்
    வள்ளத்தின் பயணம் வரும் நிறைவில்.

    அன்று இலங்கைத் தேயிலைத் தோட்டத்தின்
    நின்றாளும் அதிகாரியாக என் துணைவர்
    வென்றது வெள்ளம் காலு கங்கையால்
    தெருவினை மேவிப் பாய்ந்ததே கடல்.

    தேயிலைக் கொழுந்து மூட்டைகள் தொழிற்சாலைக்குத்
    தேவதூதர்களாய்  தோணிக்காரர்கள் உதவிக்கு, கொழுந்துக்
    கோணிகள் தோணியில்! நாமுமதில் பயணிகளாய்
    தோற்றம் காஷ்மீரப் படகுப் பயணமாய்!

     

     

    Share
  • உறவு

    -வேதா. இலங்காதிலகம்

    உறவு நடிப்பாகினால்
    உதறுதல் நன்றாகும்
    உடனிருப்பதில் அருத்தமென்ன!
    நெருங்காத மனங்களாலிதயம்
    வருந்த வேண்டாமே!

    துரோகத்தின் காலடிகள்
    துவம்சமாக்கும் பாதையை
    உறவின் அரும்பெருமைகளைப்
    பறக்க விடுதலால்
    இறக்கிறது உறவுன்னதம்!

    உறவு ஊனின்
    உள்ளுறையும் ஆணிவேராய்
    உணர்வெனும் பண்பிற்கு
    ஆதாரமாய் உள்ளது
    உடலையும் வாழவைக்கிறது!

     

    Share
  • தேடும் அன்பு! 

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    அடிமனதில் உள்ளூர ஊறும்
    அன்பூற்றில் ஆழ்ந்து நனையாமலும்
    அலுக்காது காயம் செய்தலாய்                            hearts-of-flame
    இல்லா நெருக்கமுடை உறவுகள்
    இருந்தென்ன? விலகியென்ன? சமனே!

    விருந்தெனும் ஆனந்தக் கீழ்வானமாகக்
    கரும்பெனும் ஆழ்மன அன்பை
    விருப்பித் தேடுதலாய் நிதமும்.

    திறந்து வெளியான அன்பைப்
    பறந்து மினுமினுக்கும் அன்பிறகைக்
    கறந்த பாலினிளம் சூட்டில்
    சிறந்து மகிழ்ந்தருந்தத் தேடுகிறோம்.

    புதிர்கள் வழியும் உறவுகளிடம்
    எதிர்ப்படுமா பொங்கிப் பிரவகிக்கும்
    கதிர்வீசும் உயிர்ப்புடை அன்பு
    உதிர்ந்துதான் போகிறது!

     

     

     

    Share
  • பச்சையின் முதுமை

     

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

     

    vetha

     

     

     

     

     

     

     

     

     

    பச்சை வண்ணம் கண்களிற்கு உச்சமாய் அகம் குளிர்வித்துப்
    பருவம் தந்த இலைகளிற்குப் பக்குவமான பங்கீடு முதுமை
    பருவத்தோடு அசைந்து ஆடிப்  புருவமாய் மலர் அருகிலது
    பருவ காலம் மாறிடக் கருகுதலான காம்பு கழன்றது. 

    நிழல் குடையான இலையென்று நிலப் பாவாடையான நிலையின்று
    சருகு சரசரக்கவில்லை பழுத்து  முருகு நிலம் போர்த்தியது
    ஆல் வேலிங்கு  இல்லை வீல் என்று அலறவில்லை
    கால்கள் புதையும் அளவு கீழ் விழுந்தது முடிவு. 

    இலையுதிர் காலம் விரித்தது  இறகு; நீளாது பனி
    இறகுகளை மூடிடும்;  எருவாகி  இசைவாகிப் பூமியோடு மண்ணாகும்
    நான்கு விதப் பருவங்களை  நாம் ரசித்து வாழ்கிறோம்
    நன்கொடையாம் இயற்கையின் அற்புத
    நயப்பாடான பரிசை அனுபவிப்போம்.

     

    Share
  • முத்து

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    உயர்முத்தின் தாய் முசெலினங்களில் முத்துச்சிப்பி.
    உயிர் சிப்பியுள் திண்மப்பொருள் (நுண்துகள்) நுழைவால்
    உறுத்தலடையும் சிப்பியில் எபிதீலியம் படிவம்
    உருவாகி நுண்துகளைச் சுற்றிப் பொதிகிறது.
    சிப்பியின் சுரப்பு நீர்ப் படிவம்                                            pearl
    சிப்பிக்குள் கசியும் கெட்டியான பசை
    சிப்பியின் பாதுகாப்புப் பசைநேக்கர் படையாக
    அப்புதலால் உருவாகிறது நவரத்தினத்திலொரு முத்து.

    விலங்கின வகையாம் முத்துச் சிப்பி.
    விலைமதிப்பு இல்லா விநோத சீவன்.
    அரிய வகைக் கடல் வாழுயிரினம்.
    விரிவாக நூற்றுக்குமதிகமான சிப்பி இனங்களுண்டு.
    பட்டை தீட்டத் தேவையற்றது முத்து.
    பட்டொளியாம் இயற்கைப் பொலிவுரு நேக்கரால்.
    முத்தின் மறுபெயர் நித்திலம் தூமணி.
    முத்துக்களில் சிறப்புடையது ஆணி முத்து.

    இயற்கை முத்து அவிகுலிடி என்ற
    இனமான சிப்பியிலும், யூனியனி என்ற
    மட்டிகளிலும் உருவாகிறதாம்.
    முத்துகள் நீலம் மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்புகளில் உண்டு.
    முத்துகளில் கறுப்பினம் அந்தமான் தீவிலுண்டாம்.
    முத்திற்குப் பிரபலமானது பாண்டிய நாடாம்.
    முத்துநகர் தூத்துக்குடியாம்.
    மூழ்கி முத்துச் சிப்பியெடுத்தல் ‘முத்துக்குளிப்பு’ என்பார்.

     

    Share
  • நான்

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    நான் யாரெனும் தன்னறிவு நன்மை
    நான் முயல் நான் எறும்பு
    நான் திமிரற்றவள் மானம் உள்ளவள்
    நான் படித்தேன் யாழ் கோப்பாயில்
    நான் கட்டுரை கவிதைகள் எழுதுகிறேன்
    விண்மீன்களாய் என்னைச் சுற்றுது அவைகள்
    நான் உன் அன்பை நினைத்து
    என்னை மறக்கிறேன் இது காதல்!

    இயற்கை அழகில் தொலையும் நான்
    இசையும் கவியில் மயங்கும் நான்
    அசையும் மழலையில் உருகும் நான்
    அகவும் மயிலை ரசிக்கும் நான்
    நான் (தன்)முனைப்பு நீக்கும் நான்
    தன்னான்ம உணர்வு பெறுவது தெளிவு
    ’தான்’ என்ற கர்வ அழிவில்
    ’நான்’ என்பது இனிமை கீதமாகும்!

     

    Share
  • அலத்தத் (சூரியகாந்தி) தமிழ்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    அலட்சியங்களால் அலவு கொண்டாலும்
    அலட்டிக் கொள்ளாது அம்பாக
    அலத்தமாகச் செந்தமிழ் தெம்பாக            vetha
    அலங்கார வரிகள் ஓயவில்லை!

    கவி, பா மழை
    புவியான மனம் நனைக்க
    அவிழ்வது அமைதி ஆனந்தம்
    குவிவது தமிழ் வாசம்!

    நினைத்ததை மேடையில் கூறல்
    நிகழ்ந்தது பதினொரு அகவையில்
    நின்மல எழுச்சியது பெரும்
    நிறைவுடை ஆக்கம் ஊக்கம்!

    கர்வம் சுயநலம் நிறையுலகில்
    சர்வசாதாரணச் சஞ்சாரம் கடிது
    வர்ணம் பூசி வகையாய்
    அர்ப்பணம் செய்யலாம் காலத்தை!

    (அலவு – மனத்தடுமாற்றம், வருத்தம்; அலத்தம் – சூரியகாந்தி)

     

    Share
  • டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (15-10-1931 – 27-7-2015)

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    இந்திய ஏவுகணை நாயகன், தமிழ்
    இலக்கிய ஆர்வலன், பன்முக விஞ்ஞானி
    இந்தியா வல்லரசாகக் கனவு கண்டார்                  kalam
    இராமேஸ்வரத்தில் உதித்த முத்து கலாம்
    இந்திய அறிவியல் நட்சத்திரம், வீணையும்
    இசைக்கும் இசை ஆர்வலர் மரணமற்றவர்
    மகத்துவர், மக்களின் ஜனாதிபதியானவருடல் மறைந்தது
    மனிதருள் மாணிக்கத்திற்கு ஆத்ம அஞ்சலி!

    பத்மபூஷன், பாரதரத்னா, ஆர்யபட்டா இன்னும்
    பத்விபூஷன் என்று எண்ணற்ற விருதாளர்
    படகுச் சொந்தக்காரர் மரைக்காயர் தந்தையார்
    ஜைனுலாப்தீன் – ஆஷியம்மாவின் திருப்புதல்வன்
    சைவ உணவுக்கார இசுலாமியர், உலகமறை
    திருக்குறளின் அடியொற்றி நடந்த பிரம்மச்சாரி
    திருவே அறிவென உலகோரை ஊக்கியவர்
    நெருப்பின் சிறகுகளிவர் ஆங்கிலச் சுயசரிதை!

    மாமேதை, கனவுகள் காணுங்களென்று நினைவாகினார்
    மார்க்கம் காட்டி இளையோர் சிந்தனைகள்
    தீர்க்கமாக, மாணவர் குழாமுடன் கலந்தவர்
    பார் போற்றும் விஞ்ஞானி கவிஞருமாவார்
    நாட்டுக்காகத் தனையீந்த நற் சிந்தனையாளர்
    அறிவியல் தொழில் நுட்பத்தை நல்ல
    நெறியோடு காதலித்த இந்தியத் துருவநட்சத்திரம்
    அறிவால் அறிமுகம் அறிவுறுத்திய அறிஞன்!

    சாந்தி!  சாந்தி!

     

    Share
  • இணையத் தமிழே இனி…

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    சுணையற்று உறைந்தவர் மணை விட்டெழுகிறார்!
    அணைகிறார் தமிழ் ஆய்வு செய்கிறார்!
    புணையாக்கி இணையத் தமிழுள் நீந்துகிறார்!
    இணைந்து ஆர்வமாய்ப் பின்னுகிறார்! விதைக்கிறார்!
    இணையற்ற ஏணியிது தமிழ் வானிற்குப்
    பணையுடைப் பாட்டரும் காணாத சுரபி           surfing-the-internet
    பிணையும் எழுத்துப் பிழைகள் பாசி
    கணைச் சூடாகாது வெல்லல் வாசி

    தூசி நிறை இதயக்கமலத்தைப் பலர்
    பாசி படர்ந்த கிணறாக ஆக்குகிறார்
    ஆசியுடைத் தமிழடிகள் ஒளி ஈர்த்து
    வாசிக்கிறாராதித் தமிழ்ச் சங்க நூல்களை
    பூசித்துக் கூடித் தமிழ் எழுதுகிறார்
    கூசித் தம் மொழிக்கு உயிரூட்டுகிறார்
    நேசித்துப் புனிதமாய் இலக்கணம் படிக்கிறார்
    யாசிக்காத இணையத் தமிழே! அற்புதம்!

    கட்டுரை, சரித்திரம், ஆராய்வு, புவியியல்,
    கொட்டிய கலைகள், சமயம், அரசியல்
    எட்டாதது எதுவுமில்லை, யோகா, விளையாட்டென
    சொட்டும் நல்லறிவு, நல்லுணர்வு பெறுமதியாய்த்
    தொட்டிட்டால் வித்தகங்கள் அள்ளலாம் வெள்ளமாய்!
    தட்டும் விரல்நுனி வியப்பு நூலகம்!
    எட்டும் இணையத் தமிழே இனி
    கொட்டும் முரசு வெள்ளிடை மலை!

     (மணை – அமரும் பலகை, சிறு பீடம்;   புணை – தெப்பம்
    பணை – பெருமை;  கணைச் சூடு – நோய் வகை
    சுணை – சுரணை, அறிவு, கூர்மை)

     

    Share
  • இரட்டைவால் குருவி!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    கரிக்குருவி, வலியன் குருவி, கரிச்சான்,
    கருவாட்டு வாலி, ஆனைச்சாத்தன், காரியெனும்
    கறுப்பான பல பெயருடைய இரட்டைவால் குருவி
    கண்டம் ஆசியா தாயகமான சிறுகுருவி

    கீச்சுக் கீச்சு ராகமாய் உற்சாகச் சுரத்தில்               sparrow
    கீதமிசைக்கும்; அடர்த்தியற்ற காட்டில் வாழும்
    வால் இரண்டாய்ப் பிளந்து ஆங்கில
    ’வி’  எழுத்துருவில் இருபத்தெட்டு செ.மீ. நீளம்

    பயமற்றது, துணிச்சல், உரமுடை மனம்
    பசுக்களின் மீதேறிச் சவாரி செய்யும்
    பருந்து, காகம், கழுகுகளை ஓடஓட
    பராக்கிரமமாய் விரட்டிக் கொத்தி எதிர்க்கும்!

    எறும்புப் புற்றின் மீது அமருமாம்
    எண்ணற்ற தன்னுடலின் உண்ணிப் பூச்சிகளையழிக்க!
    எறும்புகள் வெளியாக்கும் பாஃமிக் அமிலத்தில்
    எல்லாப் பூச்சிகளும் அழியுமாம்! வியப்பு!

     

    Share
  • பழையன வேண்டாம்!

    -பா வானதி வேதா. இலங்காதிலகம்

    vanathiவாருங்கள் தமிழ்புரிக்குச் செல்வோம்!
    வேருங்கள் சுய அறிவால்
    சேருங்கள் தீந்தமிழ் வரிகள்
    எங்கும் வெளியிடாத ஓவியம்
    எங்கும் பாடாத பாடல்
    எங்கும் ஆடாத நடனம்
    எங்கும் எழுதாத வரிகள்
    எங்கும் தேவையாம் கொடுங்கள்!

    தொல்காப்பியம் தண்டியலங்காரம் புலமைப்
    பல் நூல்கள் புரட்டுங்கள்!
    வல்லமையாய்ப் புதிதாய் வார்த்திடுங்கள்
    கல்லுதல் செய்தே வரைந்தவைகள்
    எல்லாம் பழையன என்றால்
    கொல்லையில் வீசுவதா சொல்லுங்கள்!
    வள்ளுவன் பாரதியின் பழையவைகள்
    ஊரதிரத் தேரோடுது பாருங்கள்!

    மல்லாட்டம் தமிழோடு போடுங்கள்!
    கல்லாதாரும் கற்றவரும் விளங்க
    வில்லவனாகிக் காதலையும் வரையுங்கள்!
    வில்லங்கமின்றிக் கவி இலக்கணம்
    நல்லங்கமாக்கி நெஞ்சக் கிண்ணத்தால்
    துல்லியமாய் வெல்லமாய் ஊற்றுங்கள்!
    எல்லோரும் மேதை என்பார்கள்!
    சொல்வளம் பஞ்சமற்ற புலவராகுங்கள்!

    (கல்லுதல்- தோண்டுதல்;  வில்லவன் – மன்மதன்)

     

    Share
  • அந்த மாமரம்!

    -பா. வானதி வேதா. இலங்காதிலகம்

    அந்த மாமரம் அன்று
    சொந்த மாமரம் எமக்கு
    தந்த நிழற் குடையில்
    குந்தப் பாய்விரித்த
    முந்தை அனுபவம் இது
    சந்தமாய் நெஞ்சில் பாயுது!

    வாழ்வூக்கிய பால பருவ
    வான் நோக்கிய மாமரம்
    புல் வெட்டிப் பசுந்தாகக்
    கல் பொறுக்கிச் சுத்தமாகச்
    சருகுகள் கூட்டி அள்ளி
    ஒருமையாய் ஒரு மைதானமாக்கி
    அருமையாய் அப்பா சகோதரர்களுடன்
    ஒருத்து அனுபவித்த வசந்தம்
    பெருமையான மாலைப் பொழுதுகள்
    கருமையற்ற மனமினித்த காலங்கள்!

    தேன் சுவையான மாம்பழம்
    பென்னம் பெரிய மாம்பழம்
    இன்று நினைத்தாலும் ஏக்கம்!
    மாலைத் தென்றல் பெரும்
    சாலையெனப் புகுந்து விளையாடி
    வாலையாட்டிச் சாமரம் வீசியது
    ஊஞ்சல் கட்டி ஆடி
    உறவாடிய பசும் கொற்றக்குடை!

    பெரிய கல்லோ ஒரு
    பெரிய வேரின் புடைப்பையோ
    சிம்மாசனமாக்கிக் கூடி அமர்ந்து
    சிரித்து ரசித்த ரசனை
    சிந்தை நிறைந்து வழிகிறது
    கூட்டுக் குடும்பமாய் மாமரத்தடியில்
    குலவியதை நெஞ்சம் மறக்காதது!
    குறை! இன்றைய பிள்ளைகளறியாதது!

     

    Share