Category: புதிய பிள்ளைப்பருவங்கள்

  • புதிய பிள்ளைப்பருவங்கள்-9

    புதிய பிள்ளைப்பருவங்கள்-9

    மீனாட்சி பாலகணேஷ்

    குருகுல வாசம்/ கல்வி கற்றல் (ஆண்பால் பிள்ளைத்தமிழ்)

    ஒருவர் தம் வாழ்வில் முந்தியிருந்து சிறப்படைந்து விளங்க, கல்விகற்றல் பெரிதும் இன்றியமையாததாகும். ஆண்மக்களாயின் பழங்காலத்தில் அவர்களைக் குருகுலவாசம் செய்ய அனுப்புவது ஒரு வழக்கமாக இருந்து வந்தது. ஆசிரமத்தில் குருவுடன் தங்கி, அவரும் அவர் மனைவியுமிடும் பணிகளைச் செய்து உதவி, பின் கல்வியையும் கற்றொழுகி, அவற்றிற் சிறந்து வீடுதிரும்புதல் வழக்கிலிருந்து வந்தது.

    கிருஷ்ணன் சந்தீபனி முனிவரிடம் கல்விகற்க அவருடைய குருகுலத்தில் இருந்ததைப் புராணங்களில் நாம் குருகுல வாசமாகக் காண்கிறோம். பதின்மூன்று வயதாகும்வரை கோகுலத்தில் நந்தகோபன் வீட்டில் யசோதையின் செல்லக்குழந்தையாக வளர்ந்த கிருஷ்ணன் கம்சனைக் கொன்று தன்னைப் பெற்ற தாய்தந்தையரான தேவகி, வசுதேவர்களைச் சிறைமீட்கிறான். அதன்பின் வசுதேவர் கிருஷ்ணனுக்கு உபநயனம் செய்விக்கிறார். கிருஷ்ணனையும் பலராமனையும் முறையாகக் கல்விகற்க சந்தீபனி முனிவரின் ஆசிரமத்திற்கு வசுதேவர் அனுப்பி வைக்கிறார் எனவும் அறிகிறோம். இங்குதான் கிருஷ்ணன் பிற்காலத்தில் தன் உயிர்த்தோழனான சுதமா எனும் குசேலரைச் சந்திக்கிறான்.

    இவர்கள் கல்விகற்று வந்த நாட்களில் ஒருநாள் குருவின் மனைவியார் அடுப்பெரிக்க, உலர்ந்த விறகினைக் கொண்டுவருமாறு இவர்களிடம் கூற, இவர்களும் காட்டினுள் பயணிக்கின்றனர். விறகினைத் தேடிக்கொண்டு நீண்ட தூரம் சென்றுவிட்டனர். நீண்டநேரமும் ஆகிவிட்டது. மின்னல், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்கின்றது. மழையில் வழி தவறித் தவறான பாதையில் சென்று பயத்துடன் ஒரு மரத்தினடியில் நிற்கின்றனர். இவர்களைக் கிருஷ்ணனே தைரியமூட்டி, கொடிய வனவிலங்குகளிடமிருந்து தப்பிக்க மரக்கிளைகளில் ஏறிக்கொண்டு வாகாக இருக்குமாறு செய்விக்கிறான். பொழுது புலர்ந்ததும் சீடர்களைக் காணாமல் குரு சந்தீபனி முனிவரே கவலைகொண்டு அவர்களைத் தேடிக்கொண்டு கானகத்துள் வந்து அவர்களை ஆசிரமத்திற்கு அழைத்துச் செல்கிறார்.

    கிருஷ்ணனும் பலராமனும் மிகக்குறைந்த காலத்திலேயே, அதாவது அறுபத்தொன்று நாட்களிலேயே தாம் கற்க வேண்டிய அனைத்தையும் கற்றுத்தேர்ந்தனர். குருவின் ஆசிரமத்தை விட்டுச் செல்லும் முன்பு குருதட்சிணையாக அவருக்கு என்ன வேண்டும் எனக்கேட்டு அதனையளிப்பது சீடர்களின் வழக்கம். ஆகவே கிருஷ்ணனும் பலராமனும் சந்தீபனி முனிவரிடம் குருதட்சிணை பற்றி அவரையே கேட்டனர். குருவிற்கு கிருஷ்ணன் திருமாலின் அவதாரம் எனத் தெரியும். நீண்ட நாட்களின் முன்பு கடலில் நீராடச் சென்ற அவரது ஒரே மகனை ஒரு அரக்கன் கடலினுள் இழுத்துச் சென்றுவிட்டான். அவனை மீட்டுத்தர இயலுமானால் அதுவே தாம் வேண்டும் குருதட்சிணை என்றார் குரு.

    கிருஷ்ணன் பலராமனுடன் பிரபாச கடற்கரைக்குச் சென்று அங்கு சங்காசுரன் எனும் அசுரனைக்கொன்று அவனால் விழுங்கப்பட்ட சிறுவனை மீட்டு வருகின்றான். சங்காசுரனிடமிருந்து பாஞ்சசன்னியம் எனும் சங்கினையும் எடுத்துத் தனதாக்கிக் கொள்கிறான். தன் மகனைத் திரும்பப்பெற்ற குருவும் பெரிதும் மகிழ்ந்து கிருஷ்ணனையும் பலராமனையும் ஆசிர்வதிக்கிறார் எனப் பல புராணங்கள் கூறுகின்றன.

    கற்கவே கசடறக் கல்வியைக் குருவிடம்
    சந்தீபனி யாசிரமத்திற்
    றந்தைதர மாசற்ற மற்ற சிறாருடன்
    மனமகிழ்ந் துறைந்தங்கு

    பொற்பாத மலர் பதித்துப் பூமகளின்
    துணைவனே! பதுமநாபனே!
    பொன்மகள் ருக்குமிணி கேள்வனே! கேசவனே!
    பங்கமின்றிக் கல்விச்செல்வம்
    பெற்றிடவே பார்த்தனுக் குக்கீதையு ரைத்தகண்ணனே!
    பெருமைமிகு அண்ணன்
    பலராமனு நண்பன் சுதாமாவு முடனிருக்க
    பேரானந்த முடன்கல்வி

    கற்றிடவே கருத்துடன் ஆங்கிருந்து ஆசானுமன
    மகிழவவர் மனையாளும்
    தமக்கிட்ட பணிகளைச் சிறக்கச் செய்து
    குருகுலத்தே இருந்தவனே!       1.

                                       ————

    பங்கமின்றிக் கற்றகல்வி பலித்திட ப்
    பக்குவமாய்ப் பாடம்சொன்ன குருவுக்காகப்
    பரிவுடனே காணிக்கை யளித்திடவே
    பாங்காகப் பரந்தாமன் வினவிடவே

    துங்கமுனியும் தவமிருந்து பெற்றமகன்
    தன்னை யொருகட லரக்கன்
    கவர்ந்து சென்றதைக் கவலையுடன்
    கூறிடவே கண்ணன்பல ராமனுடனே

    பொங்கிடும லைகள்புரண்டெ ழும்பெருங்கடலுள்
    புகுந்தே யக்கடலினிடை புதுமையாகவே
    பஞ்சசன்னிய வரக்கன்றன்னைப் பங்கஞ்செய்து
    புங்கவரின் புதல்வனை மீட்டெடுத்தச்

    சங்கமதனைக் கைப்பெற்று சாதனைசெய்து
    சயத்துடனே குருவினிடம் வந்தடைந்தான்
    சாகசஞ் செய்துமீட்ட சிறுமகனை
    சந்தீபனி முனிமகிழக் கொடுத்திட்டான்.    2.

                                      ———————-

    சொற்ப தினமான பத்தாறு நாட்களிலே
    அற்பு தமாய்க் கற்றகல்வி அருமையாகவே
    கற்ப துவுங்கேட்ப துவும்பலித மாகவே
    பற்ப நாபன் திருவடிகள் பணிந்திடுவமே!            3.

                                ——————-

    இப்பாடல்களில் கிருஷ்ணன் குருகுலவாசம் செய்து கல்வி கற்றதனைக் கண்டோம்.

    இத்தகைய பிள்ளைப்பருவங்கள் காண்போர் கருத்திற்கேற்பவும், எண்ணுவோர் எண்ணத்திற்கிணங்கவும் இன்னும் பலவாகக்கூட இருக்கலாம். கடந்த ஒன்பது அத்தியாயங்களில் என் அறிவிற்கெட்டியவாறு நான் சிந்தையில் எண்ணிக் களித்த பருவங்களைப் பாடிக் களித்தேன். பகிர்ந்தும் கொண்டேன். இத்துடன் இந்தத் தொடரை நிறைவு செய்கிறேன். படித்து ரசித்த வாசக உள்ளங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    (நிறைந்தது)

    Share
  • போர்க்கலைகள் பயிலல் – 8

    போர்க்கலைகள் பயிலல் – 8

    மீனாட்சி பாலகணேஷ்

    (புதிய பருவங்கள்- ஆண்பால் பிள்ளைத்தமிழ்)                   

    பாடலே பெறாத புதிய பிள்ளைப்பருவங்கள் எனும் இத்தொடரில் நாம் வளர்ந்துவரும் பெண்மக்கள் சிறுபருவத்திலிருந்தே விளையாட்டாகவோ உண்மையாகவோ பயிலும் கலைகளைக் கண்டோம். இப்போது ஆண்மக்களுக்கான பருவங்களைக் காணலாம். பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் பெரும்பாலும் கடவுளர்கள் மீதே (முருகப்பெருமான், திருமாலின் அவதாரங்கள்) பாடப்பட்டுள்ளன. சிலவே அரசர்கள் மீது பாடப்பட்டவை (குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ், முதலியன). இதில் வியப்புக்குரிய செய்தி என்னவெனில் முருகன், திருமால், அரசன் குலோத்துங்க சோழன் ஆகியோரின் வீரதீரப் பிரதாபங்கள் பல இடங்களில் பல பருவங்களில் பொருத்திப் பாடப்பட்டுள்ளன. பிள்ளைத்தமிழுக்கு இலக்கண நூல்கள் வகுத்துக் கூறும் பல பருவங்களுள் ‘கச்சினொடு சுரிகை காமுறப்புனைதல்’ என்பதும் ஒன்றாகும். இதனைக் கதிரகாமப் பிள்ளைத்தமிழ் ஆசிரியர் ஒருவரே மூன்றே மூன்று பாடல்களில் உடைவாள் செறித்தல் என்று நயமுறப் பாடியுள்ளார். (உடைவாள் செறித்தல், மீனாட்சி பாலகணேஷ், வல்லமை இதழ்)

    எனது குறுகிய வாசிப்பில், அரச குடும்பத்து ஆண்மக்கள் போர்க்கலை பயில்வதனை எந்தக்காப்பியத்திலும் விளக்கியதனைப் பற்றி அறியேன். தெரிந்த பெரியோர்கள் சுட்டிக்காட்டினால் பெரிதும் நன்றி பாராட்டுவேன்.

    எந்தக்கலையையும் இளம்வயதிலேயே குழந்தைகளுக்குப் பழக்குவார்கள். கல்வி, இசை, நடனம், சித்திரம், சாத்திரங்கள் முதலியன. போர்க்கலை மட்டும் இதற்கு விதிவிலக்கல்லவே! ஆகவே கார்த்திகைப்பெண்களால் வளர்க்கப்பட்டு வரும் சிறுமுருகன், வில், வாள்வீச்சு பயின்று, குதிரை, யானையேற்றம் பயில்வதனைப் பாடி மகிழப் போகிறோம். யார் முருகனுக்கு ஆசான்? அவரைப் பெயரிடாமல் ஆசான் என்றே கூறுவோம். தந்தைக்கே ஆசானான அண்ணலுக்கு நாம் யாரை ஆசான் எனக்கொள்வதாம்?

    நீலமயில் மீதுலவு நெட்டிலைவேல் மயிலோனே!
    ஆலகால முண்டவனின் அருள்பெரு குங்குமரனே!
    வேலைவீசி கிரவுஞ்சவெற்பைப் பொடித்தவ னேகடம்ப
    மாலைதவழ் மார்பனே! மடக்குறத்தி மணாளனே!

    தாயுமையாள் கைதந்த ஆயுதத்தைக் கொண்டந்த
    மாயவவுணர் கூட்டத்தைச் செற்றொழித் துத்தொல்லை
    யோயவெஞ்சி னங்கொண்டக் கூட்டத்தை வேரறுத்த
    மாயவன்திரு மருகா! மகிழ்வள்ளி மணவாளா!

    போர்க்கலை பயின்றதெங்கோ! பயிற்றுவித்த துவும்யாரோ!
    கார்க்காலமே கங்கள்போலெழு கயவன்மேற் கணையேவி
    யேர்க்கோல உலகமது எழில்கொண் டேற்றமுற்றிலங்க
    ஆர்க்கும்நல் சேவறனை யிரதத்தின் கொடிகொண்டாய்!

    வீரத்திரு மகனே! வெற்றிவடி வேலனே!
    சக்தியுமை பாலனே!
    ஆரத்தழு விடவுன் அருமைத் திருவடியை
    ஆவல்மிகப் பெருகுதே!
    நேரம்சென் றிடுதே! வீரம் தனைப்பாட
    என்நாவால் இயலாமை
    யோரம்நின் றுந்தன் ஓங்கும் வீரத்தை
    ஒண்டமிழால் போற்றுவேன்!

    எத்தனையோ முறை முயன்றும் முருகப்பெருமான் போர்க்கலை பயின்ற திறத்தைப் பாடல்களில் வடிக்க இயலவில்லை. இதுவும் முருகன் திருவிளையாடல் போலும்! என் இயலாமையைக் கூறியே அவன் போர்த்திறத்தைப் போற்றிச் சில பாடல்கள் புனைந்துள்ளேன். அனைத்தும் அவன் கருணை!

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள்-7

    புதிய பிள்ளைப்பருவங்கள்-7

    மீனாட்சி பாலகணேஷ்     

    சமையல் பழகுதல்-7        

    (புதிய பருவங்கள்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    புதிய பருவங்களில் அடுத்து நாம் காணப்போவது சமையல் பழகுதல் என்பதாகும். பெண்குழந்தைகள் ஐந்தாறு வயதுச் சிறுமிகளாக உள்ளபோது பாவனையாகப் பொய்தல் விளையாட்டு விளையாடுவார்கள். மூன்று கற்களை அடுப்பாக்கி, சிவந்த நிறம் கொண்ட மாதுளை மலர்களை நெருப்பாகக் கொண்டு, சிறு மண்சட்டிகளையோ அல்லது பெரிய சங்குகளையோ பானையாகக் கொண்டு அதில் ஆற்றுநீரை உலைநீராகப் பெய்து, மணலையோ சிறு கற்களையோ அரிசியாக இட்டுச் சோறாக்கி விளையாடுவர்.

    இவற்றை அழித்துச் சிதைக்க வரும் சிறார்களை அவ்வாறு செய்யாதிருக்க வேண்டுவதனை ஆண்பால் பிள்ளைத்தமிழின் சிற்றிற்பருவத்தில் முன்பே கண்டோம். இது தொடர்பான பல விளையாட்டுக்களையும் கண்டுள்ளோம். பத்து ஆண்டுகள் நிரம்பிவரும் சிறுமி உண்மையான சமையல் செய்வதனை அன்னையுடன் அருகிருந்து கற்றுக் கொள்வாள். இவளே பின்பு சிறு பெண்குழந்தைகளுடன் விளையாடும்போது உண்மைச் சமையலின் சில பகுதிகளைத் தானே மேற்கொண்டும் செய்வதுண்டு. இதனையும் இந்தப் பொய்தல் விளையாட்டில் காண்கிறோம்.

    சமையல் செய்வதனை ஆசையாகக் கற்றபெண் திருமணம் முடிந்து கணவனுக்குத் தான் செய்யும் புளிப்பான மோர்க்குழம்பை அவன் சுவைத்து உண்டதில் மகிழ்ச்சி அடைந்ததனை ஒரு சங்கப்பாடல் நமக்கு விளக்குகிறது.

    சமையல் செய்யும் அவசரத்தில், புளித்த தயிரை விரல்களால் பிசைகிறாள்; கழுவ நேரமுமின்றித் தனது ஆடையிலேயே துடைத்துக் கொள்கிறாள். ஈர விறகோ என்னவோ, அடுப்பும் வேறு ஒத்துழைக்க மறுத்து, புகை மண்டுகிறது; அவளது குவளைமலர் போலும் கண்களில் புகுந்து தொல்லை செய்கிறது! இவ்வாறெல்லாம் பாடுபட்டுச் சமைத்த இனிய சுவையான மோர்க்குழம்பைக் கணவன் ‘நன்றாக உள்ளது,’ எனக்கூறிச் சுவைத்து உண்கிறான். இப்பெண்ணின் முகம் நுட்பமான மகிழ்ச்சியை அடைந்து மகிழ்ந்தது – என்று செவிலித்தாயின் கூற்றாக அமைந்த குறுந்தொகைப் பாடல்.

                                 முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
                                கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
                                குவளை யுண்கண் குய்ப்புகை கமழத்
                                தான் றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
                                இனிதெனக் கணவ னுண்டலின்
                                நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே1.

    இவ்வாறெல்லாம் இல்வாழ்க்கைக்குத் தம்மை உருவாக்கிக் கொள்ளும் இளம்பருவத்தின் ஒரு இனிய கட்டமே சமையல் பழகுதலாகும். நாம் இப்போது முற்றும் வித்தியாசமாக, உலகுக்கே படியளக்கும் அன்னை உமையவளாம் அன்னபூரணி தன் இளமைப்பருவத்தில் எவ்வாறு சமையல் பழகினாள் எனப் பார்த்து மகிழலாமா?

    மணம்புரிந்து கொண்ட பரமனுடன் இல்வாழ்க்கைக்குத் தயாரான மங்கை அன்னபூரணியிடம் பரமன் இருநாழி நெல்லை மட்டுமே அளித்து, “நீ உலகத்தோர் உய்யுமாறு முப்பத்திரண்டு அறங்களையும் வழுவாமல் செய்வாய்,” என்று அன்புடன் கூறிவிட்டான். அவளும் தனது கருணையினால் பரமன் கூறியவாறு அனைத்துலகங்களையும் அன்னமும் மற்றனைத்தும் குறைவறத் தந்து புரந்தளித்துக் காப்பது சுவர்க்கத்தையும் மோட்சத்தையும் தரும் காசிமா நகரில் அன்னபூரணியாக இருந்துகொண்டு தானே அன்றோ!

                            பொன்னனைய பூவையுனைப் போற்றிப் புகழும்
                                பித்தன்பே ரருளான்
                       மன்னுலகை யெலாம்நீ மகிழ்ந்துபு ரந்தளிக்க
                                விருநாழி நெற்றந்து
                       சொன்னசொற் றவறாது சுவர்க்க மோட்சந்தருங்
                                காசிமா நகருறையு                 
                       மன்னபூர ணித்தாயே! அன்னமளித் துலகை
                                யளித்த ருள்வாயே2!

    தான் உயிர்களைப் புரக்க ஆக்கிய இன்னமுதில் ஒரு பங்கினை ஐயன் தன்னிடமே ஏந்தி நிற்கும் சட்டியிலும் படைக்கிறாள் தாய் அன்னபூரணி! சங்குவளையலை அணிந்த அவள் (மணமான பெண்கள் சங்குவளைகள் அணிவது வட இந்திய வழக்கம்) சிற்றில் விளையாடிய காலத்தில் சமையல்கலையைப் பழக்கிக் கொண்டாள்; அவள் ஐயனின் இடப்பாகத்தில் வாழும் உமையவள்; வாராணசி நகரிலுறையும் அன்னபூரணித்தாய்!

                            அங்கர மலர்கொடு ஆக்கிய அடிசிலை
                                அன்புடன முதமென
                       சங்கர னேந்திய சட்டியில் வட்டிக்கும்
                                சங்குவளைக்  கையளே!
                       சங்கரி யே!சிற்றில் பயில் சுந்தரியே
                                எமைவாழ் வித்திடுமையன்
                       பங்கில் வாழுமையே வாராணசி நகருறை
                                யன்னபூ ரணியளே3!

    இப்பூவுலகில் நான் உனக்கொரு விளையாட்டுப் பாவை (பொம்மை!) தானே! ஆகவே என்னை நீ சீராட்டி வளர்த்து, பல நலங்களையுமளித்தருளி, வாழ்வில் முன்னேற நம்பிக்கையொளி தந்து நல்ல எண்ணங்களுடன் இருக்க அருளுகிறாய். தேனும் பாலுமான நற்பொருட்களைத் தேடியெடுத்து என் வாழ்வை இனிதாக்கி, அது திகட்டாத வண்ணம் அமுது செய்விக்கிறாய். ஆதரவு தருகிறாய். உனது மானின் விழிகளை நிகர்த்த கண்களால் என்னப் நோக்கி இந்த மாநிலத்தில் நான் மயங்கி விழாமல் காப்பாற்றி மதி, நிதி, நலம் அனைத்தையும் குறையின்றிக் கொடுப்பவள் நீயே எமக்கு வாய்த்த ஒரு பெருஞ்செல்வம். உன்னிடம் கொண்ட குறையற்ற அன்பினால் உடல் உயிர் அனைத்தையும் உனக்கேயளித்து வாழும் அடியார்களுக்கு உன் கருணையால் வீடுபேற்றையும் இறுதியில் தரும் உமையவளே! உன்மத்தனாம் சிவனின் அருளென விளங்குபவளே! (காசிமாநகர் வீடுபேறு தருமிடமாதலால் அங்கு வாழும் உமையான அன்னபூரணி வீடுபேறு தருபவளென்பது பெறப்படும்!).

                            நானொரு பாவையெனை நன்றாகச் சீராட்டி
                                நானிலத்தே நலம்பலவு மளித்து
                           நாளும் பொழுதும் நம்பிக்கை யொளிதந்து
                                நல்லெண் ணங்கூட்டி வைத்து
                       தேனொடு பானமுத மானனற் பொருட்களை
                                தேடியெடுத் துச்சிறுகூழ் சமைத்து
                          தித்திக்க வென்வாயில் திகட்டாத முதுசெய்வித்
                                தணைத் தாதரவு மளிக்கும்
                       மானொடு கண்ணிணை மயங்கவே நோக்கி
                                மாநிலத்தில் மயங்கி வீழாமல்
                           மதியுநிதி யுநலமு மங்காமலே கொடுக்கு
                                மாநிதிச் செல்வி யன்னாய்!     
                       ஊனொடு வுயிருமுள் ளன்பால் தந்திடு
                                முழுவலடி யார்தம் பாலுள
                            முருகிவீ டுபேறுந் தந்திடு முமையே!
                                உன்மத்த சிவனின் அருளே3!

    அனைத்து மானிடர்க்கும் அன்னையின் அருளை வேண்டுகிறேன்.

    அடுத்து சில ஆண்பால் பிள்ளைத்தமிழ்ப் பருவங்களை நோக்குவோம்.

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

                                       ————————–

    பார்வை நூல்கள்:

    1. குறுந்தொகை

    2, 3, 4. மீனாட்சி பாலகணேஷ்- காசி அன்னபூரணி அம்மை மீதான பிள்ளைத்தமிழ் பாடல்கள்.

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 6

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 6

    மீனாட்சி பாலகணேஷ்

    வில், வாள், ஆயுதம் பயிலல் (புதிய பருவங்கள்- இருபால் பிள்ளைத்தமிழ்)

    1.பெண்பால்

    புதியதாகச் சேர்த்துக்கொள்ளக் கூடிய பிள்ளைத்தமிழ்ப் பருவங்களுள் ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் பொதுவான ஒரு பருவத்தைப் பார்க்கலாம்.   அரசுகட்டில் ஏறும் ஆண்மகனுக்கு உரியது ‘கச்சினொடு சுரிகை காமுறப் புனைதல்’ எனும் பருவம். இதனை நாம் முன்பே கண்டோம். வில், வாள் ஆகிய ஆயுதப் பயிற்சி, குதிரை, யானையேற்றம் ஆகியனவும் ஆண்மகனுக்கே, சிறுவயதிலிருந்தே (ஏழெட்டு ஆண்டுகளிலிருந்தே) பயிற்றுவிக்கப்படும். பெண்களுக்கு உரியதாக இதனை முதலில் காணலாமா?

    தடாதகை போலும் இளம் சிறுமிகளுக்கும் போர்க்கலைகளான இவை பயிற்றுவிக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அவள் பாண்டிய அரசியல்லவா? பரஞ்சோதி முனிவரின் திருவிளையாடற்புராணத்தில், மதுரைக் காண்டத்தில், தடாதகை வளரும் பருவத்தில் போர்க்கலைகள் பயில்வது பற்றி ஏதும் கூறப்படவில்லை. ஆனால் அன்னை கயிலாயத்தை அடைந்து சிவகணங்களுடன் போர்புரியும்போது அவளது போர்த்திறத்தை நன்கு விவரிக்கிறார் புலவர்பெருமான்.

    மூன்று பாடல்கள் அம்மையின் போர்த்திறத்தை அழகுறப்பாடுகின்றன.

    சிவகணங்களின் தலைவர் நந்தியெம்பெருமான். அவருடைய படைவீரர்கள் தத்தம் கைகளில் ஏந்தியிருந்த படைகளைத் தடாதகைப் பிராட்டியார் தமது கொடிய கணைகளினின்றும் பாம்புபோன்ற அம்புமழையினைச் சொரிந்து பொடிப்பொடியாக்கினார். (‘கட்புற்றரவில் கணைமாரிகள் தூற்றி நின்றாள்’).

                        கொட்புற் றமரா டுமிக்கொள்கையர் தம்மி னந்தி
                       நட்புற் றவர்கைப் படைதூட்பட ஞானமூர்த்தி
                       பெட்புற் றருள வருமெங்கள்பி ராட்டி வெய்ய
                       கட்புற் றரவிற் கணைமாரிக டூற்றி நின்றாள்1.

    கையிலுள்ள ஆயுதங்கள் அழிக்கப்பட்டதும் அச்சிவகணங்கள் கற்களை எடுத்து தடாதகையின் உடலில் படும்வண்ணம் வீசினர். அவை தன்மீது படும்முன்பே ‘பொய்ம்மை மனத்தினர் செய்யும் தவம் அழிவது போல’ தனது நெய்பூசிய வச்சிரப்படைகொண்டு  அம்மை அவற்றை அழித்தனள்.

                        கையிற் படையற் றனர்கற்படை தொட்டு வீரர்
                       மெய்யிற் படுகென் றுவிடுக்குமுன் வீரக் கன்னி
                       பொய்யிற் படுநெஞ் சுடையார் தவம்போல மாய
                       நெய்யிற் படுவச் சிரவேலைநி மிர்ந்து வீசி2.

    பின் அவ்வீரர்களின் படைகளைத் துண்டம்துண்டமாகத் துணித்தாள் அன்னை. தனது தண்டப்படையால் அவைகளைத் தாக்கினாள். அவர்கள் புறம்காட்டி ஓடினர். ‘அண்டங்களையும் சராசரங்களையும் தானே படைத்துக் காக்கும் பராசக்தியின் வலிமையைக் கூறவும் நம்மால் இயலுமோ?’ என்கிறார் பரஞ்சோதி முனிவர்.

                        துண்டம் படவே துணித்தக்கண வீரர் தம்மைத்
                       தண்டங் கொடுதாக் கினள்சாய்ந்தவர் சாம்பிப் போனார்
                       அண்டங் கள்சரா சரம்யாவையுந் தானே யாக்கிக்
                       கொண்டெங் குநின்றாள் வலிகூற வரம்பிற் றாமோ3.

                                       *****

    இனி, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் பலவிடங்களில் காணப்படும் அம்மையின் போர்த்திறன் பற்றிய செய்திகளைக் காணலாமா?

    குழந்தையை உறங்கவைக்கப் பாடும் பாடலில் தாய்மாரும் செவிலியரும் அம்பிகையின் சேனை செய்த போரை ஒரு தாலப்பருவப்பாடலில்  விவரிக்கின்றனர். அவர்களுக்குப் பெரும் உற்சாகம். தடாதகை நந்திதேவனின் அப்படைகளை ஓட ஓட விரட்டினாள் எனப்பாடி மகிழ்கின்றனர்.

    தடாதகை திக்விஜயம் சென்றபோது அவள் வயது பதினைந்தோ பதினாறோ தான். இளங்குமரியான அரசகுமாரி சிவகணங்களை எதிர்த்தகாலை, நந்திதேவர் அலட்சியமாக அவளை நோக்கி, “மயிர்ச்சாந்து அணிந்த கருமையான கூந்தலையுடைய சிறிய பெண்ணான நீதானோ எம் தலைவனாகிய சிவபிரான் வாழும் கயிலைமலையை முற்றுகை இடுபவள்?” எனச் சீறுகிறார். அவர்கள் அனைவரையும் தனது போர்த்திறத்தால் தோற்றோடச் செய்த வீரம் படைத்தவள் தடாதகை என்கிறார் புலவனார்.

                            ‘தகரக் கரிய குழற்சிறுபெண்பிளை
                                நீயோ தூயோன்வாழ்
                      சயிலத் தெயிலை வளைப்பவளென்றெதிர்
                                         சீறா வீறோதா
                       நிகரிட் டமர்செய் கணத்தவர்நந்திபி
                                      ரானோ டேயோடா4…’

    போரைத் தொடர்பவள் கயிலைமலைத் தலைவனைப் போருக்கு அழைக்கிறாள். அவர் தன்முன்பு வந்ததும் உடனே உள்ளப்புணர்ச்சி காரணமாக இவரே தன் மணாளன் எனத் தெளிகிறாள். நாணேற்ற உயர்த்திய வில்லைத் தழைத்துப் பிடித்தபடி, அதன் நாணினை விரல்களால் தழுவியபடி உயிர்ச்சித்திரம்போல் உண்மையாகவே வந்த நாணத்துடன் நிற்கிறாள்.

                            மெய்வந்த நாணினொடு நுதல்வந்தெழுங்குறு
                                          வெயர்ப்பினொ டுயிர்ப்புவீங்கும்
                        விம்மிதமு மாய்நின்றஉயிரோவம் எனவூன்று
                                          விற்கடை விரற்கடைதழீஇத்
                       தைவந்த நாணினொடு தவழ்தந்தசெங்கைகொடு
                                          சப்பாணி கொட்டியருளே5

    இங்கு போருக்கெடுத்த வில் பயனின்றிக் கையில் தவழ்கின்றது!! அன்னையின் போர்க்கோலமே அவளுக்குத் திருமணக் கோலமும் ஆகின்றது. இருப்பினும் கண்களால் காதற்கணைகளைத் தொடுத்தபடி நிற்கிறாள் தடாதகை!

                            கட்கணைதுரக்கும் கரும்புருவ வில்லொடொரு
                                         கைவிற்குனித்துநின்ற
                       போர்க்கோலமேதிரு மணக்கோல மானபெண்
                                பொன்னூசல்ஆடியருளே6!

    ஆக, யாம் கண்ட வரையிலும் அருமையான பல பாடல்களிலும் அன்னையின் போர்த்திறமையைப் பெரிதாகப் பேசுபவர்  குமரகுருபரனார் ஒருவரே!

    மேலும் மங்கையர்க்கரசியார் எனும் அரசமகளுக்கும் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டுள்ளது. (கோவை கவியரசு கு. நடேச கவுண்டரால் இயற்றப்பெற்றது). இவர் சோழர்குல இளவரசியாகப் பிறந்து பின் திருமண உறவால் கூன்பாண்டின் எனப்பட்ட நின்றசீர் நெடுமாறப் பாண்டியற்கு மனைவியானார். இவர்மீதான பிள்ளைத்தமிழிலும் இவர் சைவத்திற்கு சம்பந்தப் பெருமானுடன் சேர்ந்து செய்த தொண்டுதான் பலவாறு சுட்டப்படுகின்றதேயன்றி, இவரது போராற்றலும் திறமையும் கூறப்படவில்லை. சோழ இளவரசியாக இருந்தபோது ‘மானி’ எனும் பெயரால் அழைக்கப்பட்டார்.

                            ‘மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை
                                வரிவளைக் கைம்மட மானி
                       பங்கயச் செல்வி பாண்டிமாதேவி7,’ என்பது சம்பந்தப்பெருமான் வாக்கு (தேவாரம்).

    தற்சமயம் சக்தி விகடனில் ‘சிவமகுடம்’ எனும் பெயரில் ஒரு தொடர் வெளிவந்துகொண்டுள்ளது. அதில் இவருடைய போர்த்திறமை நன்கு நயமாக மிகவும் உயர்வாக விவரிக்கப்பட்டுள்ளது. வேறெங்கும் எவ்விலக்கியத்திலும் (பெரியபுராணத்திலும் கூட) இவருடைய போர்த்திறமை கூறப்படவில்லை; பாடப்படவில்லை! இது வியப்பிற்குரிய செய்தியாகும்.

                                                               *****

    இனி, எமது கற்பனையில் உதித்த, எட்டு அல்லது ஒன்பது வயதுச் சிறுமியான தடாதகை எனும் மீனாட்சியம்மை போர்க்கலை பயிலும் நிகழ்ச்சிகளைக் காண்போம்.

                                                               *****

    போர்க்கலை ஆசான் வாளைச் சுழற்றி வீசப் பயிற்றுவிக்கிறார். வெகு அலட்சியமாக தனது வாளைச் சுழற்றி, அவருடைய வாள் வீச்சைத் தடுக்கிறாள் தடைசெய்யவியலாத ஆற்றல் படைத்த மங்கை தடாதகை எனும் மீனாட்சி! அடுத்து அவர் வேல்வீசக் கற்றுக் கொடுக்கிறார். அவளோ அதனை நொடியில் பயின்று, தன் கண்களெனும் வேலை வீசவும் பழகியிருந்தனள். குமரிப் பெண்ணல்லவா?அவள் தனது தாள்களே கதி எனப்பணியும் தவத்தோர்க்கு அவருடைய இருவினைகளையும் தீர்த்து வைப்பவள். எமக்கும் அவ்வினைகளைத் தீர்த்து தனது பால்போலும் பளிங்குமுகத்தில் புன்னகை காட்டி அருளுகிறாள் அந்த மீனாட்சி!

                            வாள்வீச்சி னையாசான் வகுத்துணர்த் துவிக்கவவ்
                                வாள்வீச்சி னைத்தனதுவா ளாற்றடுத்தாள்
                       வேல்வீச்சி னையடுத்து வேண்டிப்ப யிற்றுவிக்க
                                வேல்வீச்சி னைத்தன்விழி களாற்பயின்றாள்
                       தாள்நோக்கி யன்பர்க தித்துத்துதித் திடத்தன்
                                தாளவர் தலைபதித் துவினையெ லாங்களைந்தெம்
                       பால்நோக்கி பவரோகம் பழவினையு மழிந்திடப்
                                பால்போன்ற நகைமுகம் காட்டியருளினாள்8. (1) 

                                                               *****

    திக்விஜயத்திற்குத் தயாராகும் அரசி மீனாட்சியை அடுத்துக் காண்கிறோம். கூந்தலை இறுகக் கொண்டையிட்டு நறுநெய்பூசி வாரிமுடிந்து கட்டியுள்ளாள். போர்க்கவசம் கச்சணிந்த மும்முலைகளையும் அணைத்துக் காக்கிறது. மருதோன்றியணிந்த கரங்கள் வாளின் தந்தப்பிடியை இறுகப் பற்றியுள்ளன. சிலம்பும் சதங்கையும் கொஞ்சும் பஞ்சுப்பாதங்கள் இப்போது தண்டை எனும் வீரக்கழல்களை அணிந்துள்ளன. இடையிலணிந்துள்ள மேகலை, உடைவாளின் உறையுடன் உரசி ஒருவிதமான தாளலயத்தை உண்டாக்கி அவளுடைய நடைக்குக் கட்டியம் கூறுகிறது! பிடியைப்போல் மென்னடை பயில வேண்டிய இளநங்கை இப்போது ‘தம்,தம்,’ எனக் கூடமே அதிர தன் அன்னையைக்கண்டு ஆசிபெற வந்துகொண்டிருக்கிறாள்! பாண்டிய வம்சத்திற்குரிய வேப்பமாலை, மருக்கொழுந்து, முல்லை மலர்களுடன் கூடிய ஒரு ஆரமெனத் திருமார்பில் புரளுகிறது! கயல்விழிகள் அன்பு, வீரம், அருள், கொடை, இளமைக்கே உரிய அச்சமின்மை, சிறிது ஆணவம் (சிவனையும் வென்றுவிடலாமென்ற எண்ணத்தில் கயிலை செல்லுபவளல்லவா இம்மங்கை?) ஆகிய உணர்வுகளை ஒவ்வொரு நொடியிலும் பிரதிபலிக்கின்றன. பாண்டியரின் கயற்கொடி ஒளிவீசிப்பறக்க அவள் திக்குவிசயத்திற்குப் புறப்பட்டு விட்டாள்!

                            வஞ்சிய வள்நங்கை பாண்டியன் குலமங்கை
                                வில்லேந்தி வீரநடை பயின்றனளே!
                           வானவருந் தானவரும் வடவரு மேங்கிநிற்க
                                வேப்பமாலை தவழவெஞ் சமருக்கே!
                       அஞ்சன மெழுதிய அங்கயற் கண்ணழகி
                                அங்கையில் வாளேந்தி ஆரவாரமாக
                           அன்னை காஞ்சனையி னாசிகளைப் பெற்று
                                அன்புமற முங்குணமு மொருங்கமைய
                       குஞ்சரப் படையுங் குதிரைகற் றம்படையுங்
                                கொண்டுவிண் ணுமண்ணும திரக்கோமகள்
                           கொடியிடை யாளன்னை வாழ்த்தக் கொடுஞ்சமருக்
                                குப்படைதி ரட்டிப்புறப் பட்டனளே!
                       கொஞ்சுமொ ழிப்பாவை கூடலுறை பொற்பூவை
                                கையிலொரு வாளுங்கூர் வேலுமேந்தி
                           கன்னிநாட் டின்கயற் கொடியை யுயர்த்தி
                                திக்குவிசய மெனப்புறப் பட்டனளே9!  (2)

    இவ்வாறு திக்குவிசயத்திற்குப் புறப்பட்ட தடாதகை, எல்லா அரசர்களையும் தனக்குத் திறை செலுத்த வைத்தோ, அல்லது போரில் வென்று சிறைப்பிடித்தோ வைத்தபடி சென்று பின் கயிலைமலையை அடைகிறாள். வியர்க்க, விறுவிறுக்கச் சிவகணங்களுடன் போர் செய்தவள், வில்லிலிருந்து கணைகளைத் தொடுத்தும், ஆயுதங்களால் அடித்தும் நந்திதேவரையே கலங்க வைக்கிறாள்.

    தவஞ்செய்யும் முனிவர்கள் வாழும் கயிலைமலை மீதேறி, ஆண்டவனாம் சிவபெருமானை சமருக்கு அழைக்கிறாள். அவர் தன்முன்பாக வந்து தோன்றியதும், தனது பழைய நினைவுகள் திரும்ப வந்ததும், அவரே தன் மணாளனென உணர்ந்து மலைத்து வியர்க்கிறாள்.

    அண்ணல்மீது காதற்கணைகளைக் கண்களால் தொடுக்கிறாள். தண்ணிலவின் கிரணங்கள் வெந்தணலாய்ப் பொழிய (காதல் வயப்பட்டோருக்கு, நிலவும் சுடும்!), போர்க்கோலமொழிந்து காதலில் தன்னையிழந்து நிற்கிறாள் தடாதகை!

                        மூண்டதொரு சமரிலவள் முகமெல்லாம் வியர்த்தாள்
                       மூண்டெழுஞ் சினத்தில்சிவ கணங்களையு மொறுத்தாள்
                       மூண்டெழும் வேகத்தில்விற் கணைகளைத் தொடுத்தாள்
                       மூண்டெழுந் திறத்தில்நந் திதேவனை யுமடித்தாள்.

                       யாண்டவர் தவஞ்செய் யுங்கயிலை மலைமீதேறி
                       யாண்டவன் றன்னையும் வெஞ்சமருக் கழைத்தா
                       ளாண்டவ னாங்கந்த அணங்கவள் முன்தோன்றவவ்
                       வாண்டகை தனைக்கண் டயர்வியர் வெய்தினாள்.

                        அண்ணலின்மீ தெண்ணிலாக் கட்கணைகள் தொடுத்தாள்
                       தண்ணிலவும் வெந்தணலாய் தண்கலை கள்பொழிய
                       பெண்ணவள் தன்போர்க்கோ லமழிந்திட் டுநின்றாள்
                       விண்ணவரு மண்ணவரு மலர்மாரி பொழிந்தார்10. (3)

    இப்பாடல்கள் அன்னையின் இப்பருவத்தைப் போற்றச் செய்த எனது சிறுமுயற்சி. அவள் திருவடிகளுக்கே அர்ப்பணம்.

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

                                       ————————–

    பார்வை நூல்கள்:

    1, 2, 3 – பரஞ்சோதி முனிவர்- திருவிளையாடற் புராணம்.

    4, 5, 6 – குமரகுருபரர்- மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    7. திருஞானசம்பந்தர்- தேவாரம்

    8, 9, 10 – பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்.

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 5

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 5

    மீனாட்சி பாலகணேஷ்

    ஆடல் பாடல் பயிலல்
    (புதிய பிள்ளைப்பருவங்கள்- பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    ஆடலும், பாடலும் பெண்ணினத்துடன் பிறந்தது. அழகுக்கலைகளில் பெண்குழந்தைகளுக்குள்ள ஆர்வத்தைக் கண்டு வருகிறோம். தன்னை மட்டும் அழகு படுத்திக் கொள்வதோடன்றி, நுண்கலைகள் எனப்படும் நடனம், இசை ஆகியனவற்றையும் வாய்ப்புக் கிடைத்தபோது ஆர்வமுடன் பயில்வர் பெண்குழந்தைகள். பெற்றோர்களும், அவருள்ளும் தாய்மார்கள், தத்தம் பெண்குழந்தைகள் இசை, நடனம் இவை கற்க வேண்டுமென்பதில் பெரும் ஆர்வம் காட்டுவர்.

    பெண்குழந்தைகளின் இசை, நடனம் இவை தொடர்பான சில சுவையான செய்திகளைக் காண்போமா?

    பண்டைக்காலத்தில், அரசகுடும்பத்துப் பெண்களும் ஆண்களும் அறுபத்து நான்கு நுண்கலைகளையும் கற்றுத் தேர்ந்திடுதல் மரபாகும். வீணை வாசிப்பதில் சிறந்த உதயணன்போல், ஆட்டத்தில் சிறந்து விளங்கிய ஆட்டனத்தி எனும் சேரமன்னன்போல் சிலர் இவற்றில் மிகச் சிறந்தும் விளங்குவர். பெண்மக்கள் வீணை, யாழ் என பலப்பல இசைக்கருவிகளையும் இசைப்பதில் வல்லவர்களாக இருப்பர்.

    வளர்ந்த பெண்மக்கள், ஆடவர் (இளைஞர்கள்) ஆகியோர் பற்றிய பல செய்திகளை இலக்கியங்களில் காண்கிறோம். உதயணன்- வாசவதத்தை, ஆட்டனத்தி- ஆதிமந்தி, ஆகியோர் இவர்களுள் சிலர். சிறுபிள்ளைகள் பற்றிய செய்திகளைக் கண்டறியோம்.

    ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலஹரி எனும் அம்பிகை மீதான ஸ்லோகத்தொகுப்பில் உள்ளதொரு பாடல் அம்பிகை எவ்வாறு ஈசனுக்கு இணையாக உலகம் வாழ நடனமாடுகிறாள் எனக் கூறுகிறது. இதனைக் குற்றாலம் வள்ளிநாயகம் என்பவர் தமிழில் அழகுற மொழிபெயர்த்துள்ளார்.

    அம்பிகையும் சிவபிரானும் இந்தப் பிரபஞ்சத்திற்குத் தாயும் தந்தையும் ஆகியவர்கள். சிவபிரான் ‘தாண்டவம்’ எனும் ஆண்களுக்கான நடனத்தையும், அம்பிகை ‘லாஸ்யம்’ எனும் பெண்களுக்கான நடனத்தையும் ஒருவரையொருவர் பார்த்தபடி ஆடுவதனால் இந்த உலகம் படைத்துக் காக்கப்படுகின்றது. இவர்களின் இடையறாத நடனம் நின்றுவிட்டால் உலகம் அழிந்துவிடும். ஆகவே தம் குழந்தைகளாகிய நம்மீது கருணைகொண்டு நாம் இனிதுவாழ அன்னையும் அத்தனும் இடையறாது நடனமாடுகின்றனர் என்பது இதன் உட்பொருள்.

                ஆதார மூலத்தின் சக்கரத்தே ‘சமயா’
                       ஆடுகின்ற நவரசத்தி னோடு
             பாதார விந்தத்தின் பைரவத் தாண்டவம்
                       பார்த்துநான் கைகூப்பி னேன்
             சேதார ஊழிக்குப் பின்னாலே உருவாகும்
                       ஜெகத்தில்வாழ் உயிர்களுக்குங் கூட
             நீதானே யம்மை! சிவன்தானே தந்தை!
                       நின்னருளே அவ்வுலகும் ஆளும்!1

                                          (குற்றாலம் வள்ளிநாயகம்)

                                       *****
    ஒருமுறை சிவபிரான் அம்மையுடன் (காளி) நடனம் ஆடியபோது தனது தோல்விக்கு அஞ்சி, தனது காதுக் குண்டலத்தை வேண்டுமென்றே நழுவ விடுகிறார். பின்பு நடனமாடியவாறே கால்விரலால் அதை எடுத்துச் செவியில் திரும்ப அணிந்து கொள்கிறார். இவ்வாறுசெய்ய காலைச் செவியின் உயரத்திற்கு உயர்த்த வேண்டியதாயிற்று. அம்மையால் அவ்வாறு செய்ய முடியாமையால் (பெண்கள் நடனமாடும்போது அடக்கம் கருதி காலை அவ்வண்ணம் உயர்த்த மாட்டார்கள்!) அன்னை நாணித் தலைகுனிந்து தனது தோல்வியை ஒப்புக்கொள்கிறாள். இதைக் குறிப்பிட்டு பாபநாசம் சிவன் அவர்கள் ஒரு அழகான பாடல் புனைந்துள்ளார்.

                            பல்லவி

             ஆடும் தெய்வம் நீ அருள்வாய்
             இடது பாதம் தூக்கி  (ஆடும்)

                       அனுபல்லவி

                நாடும் அடியர் பிறவித் துயரற
             வீடும் தரும் கருணைநிதியே நடம் (ஆடும்)

                       சரணம்

             சுபம்சேர் காளியுடனாடி படு தோல்விக்கஞ்சி திருச்செவியிலணிந்த மணித்
             தோடு விழுந்ததாக மாயம் காட்டியும் தொழுபதம் உயரத்தூக்கியும் விரி
             பிரபஞ்சம் முழுதும் ஆட்டும் நின் திருப்பதம் தஞ்சமென உனை அடைந்தேன்
             பரிந்தென் திண்டாட்டம் கண்டு பரிசு தரும் துரையே
                                                                      சபைநடுவில் தத்திமியென்று2

                                                                                                  (ஆடும்)

    அடியார்களின் கற்பனை எவ்வாறெல்லாம் சிறகுவிரிக்கிறது என்பதற்கு இதுவுமொரு அழகிய எடுத்துக்காட்டு.

    உளுந்தூர்பேட்டை திரு. சண்முகம் அவர்களால் இயற்றப்பட்டு, இசைப்பேரறிஞர் திரு. சீர்காழி கோவிந்தராஜன் அவர்களால் மிகவும் பிரபலமாகியதொரு பாடல்தான் ‘சின்னஞ்சிறு பெண்போலே’ எனும் பாடல்.

                            பல்லவி

             சின்னஞ்சிறு பெண்போலே சிற்றாடை இடையுடுத்தி
             சிவகங்கைக் குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள் (சின்னஞ்சிறு)

                       அனுபல்லவி

             பெண்ணவளின் கண்ணழகைப் பேசிமுடியாது
             பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது (சின்னஞ்சிறு)

                      சரணம்

             மின்னலைப்போல் மேனி அன்னை சிவகாமி
             இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
             பின்னல் ஜடைபோட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்

    பித்தனுக்கு இணையாக நர்த்தனம் ஆடிடுவாள்3  எனச் சிவகாமி அன்னையை ஒரு சின்னஞ்சிறுமியாக, ஆடலரசனான நடராசனுக்கு இணையாக நடனம் ஆடுபவளாக அவர் சித்தரித்துள்ளது என் கற்பனையைத் தூண்டியது எனில் மிகையேயில்லை!

    இத்தகைய தெய்வீக நடனம் கற்கும் சிறுபெண்ணான உமையம்மையைப் பற்றி நாம் ஓரிரு ‘பிள்ளைத்தமிழ்’ பாடல்களாவது பாடிப்பரவ வேண்டாமோ? என் எளிய காணிக்கை இதோ!

    நாதாந்த வெளியினில் சிவபிரானுடன் இடையறாது நடனம் ஆடுபவள் எம்மன்னையான சிவகாமி! வேதாந்த வெளி, விரியும் கற்பனைகள், பிரானின் திருவுள்ளம், வேதங்களின் உட்பொருள் இவற்றுள் எல்லாம் கலந்து ஆடுபவள் அவள்! அவளுடைய இந்த ஆனந்த நடனத்தை உள்ளத்தில் எண்ணும்போது புரியாத தத்துவங்கள் புரியும். அடியார் இன்பவெள்ளத்தில் மூழ்குவர். ஆகவே உனது திருவடிகளை சிறிய சீரடிகளைப் பதித்துப் பேரண்ட வெளியினில் ஆனந்தமாக நடனமாடி அருளுகவே! சிறுமியான அன்னையை உலகையாளும் பேரரசியாகக் கண்டமையால் அவ்வழியமைந்த பாடலிதுவாகும்.

                நாதாந்த வெளியினில் நாதனாம் சிவனுடன்
                       ஆனந்த நடமிடும் ஆதிசக்தியே!
                 நன்மைதீ மைகளுக் கென்றும் சாட்சியாய்
                       நடுவா யிருக்கும் நாரணியே!
             வேதாந்த வெளிக்குள் வேரானகற் பனைக்குள்
                       வெட்டவெளி தன்னில் நட்டமிடுபவளே!
                 வெண்ணீற ணியய்யன் தன்னுள்ள வெளியினில்
                       வேதங்கள் ஒலிக்கநா தங்கள்கிளர்க்க
             போதாந்த வெளியினில் புரியாத பொருள்சிறக்க
                       பொங்கிடும் களியினில் சிந்தைகளிகூர
                 போற்றிடு மடியவர்பெ ருகுமின் பவெள்ள                
                       வூற்றினில் மூழ்கியே உள்ளங்குவிந்திட
             ஆதாரந்தந் திடுமுனற் புதப்பொற் சீரடிபதித்து
                       ஆனந்தமாக வேபேரண்ட வெளியினில்
                  ஆடிடுக வம்மையே நடமாடி யருள்கவே!        
                       ஆடலரச னுடனாடி யருள்கவே!4

    சிறுமி சிவகாமி நடனமாடிக் கொண்டிருக்கிறாள். வாணி தனது வீணையில் இன்னிசை எழுப்ப, இலக்குமி கைத்தாளமிட்டு ஜதி கூறுகிறாள். சசிதேவி மத்தளம் வாசிக்கிறாள். அம்மையின் நடனத்தால் ஈர்க்கப்பட்டு ஆடலரசனாகிய சிவபிரான் தானும் வந்து உடனாடுகின்றான். ஒருகட்டத்தில் நடனம் போட்டியாக மாறி உச்சத்தை அடைகிறது. இருப்பினும் சிவனும் சக்தியும் ஒன்றேயாதலால் வெற்றி தோல்வியின்றி அனைவரும் மனம் மகிழும் வண்ணம் நிறைவுறுகின்றது. உலகில் அனைவரும் இன்புற்று வாழும் வண்ணம் சிவகாமி அம்மையே நீ நடனமாடுவாயாக!- என வேண்டுகிறோம்.

                அன்னையே இன்னமுதே ஆனந்த நடராசன்
                       அகங்களிக்கு மானந்தசிவகாமியே!
                 அலைமகள் தாளமிட கலைமகடன் கைக்கொண்ட
                       வீணையினி லின்னிசையெழுப்ப      
             பன்னும்பனு வற்சிறக்கப் பரமனும் நின்றுடன்
                       பாடற்கிணங் கப்பரதமாடிட
                 பாங்கான நடனங்கள் பலவுங் கூட்டிட
                       பற்பலநர்த் தனங்கள்செய்திட
             மன்னுபுகழ் மாதவத் தோர்மனங் களிகூர்ந்திட
                       மாதேவிநீ யாடியபொழுதில்
                 மகாதேவ னவன்மன் றில்தோல் விக்கஞ்சிட
                       மற்றவனு ளமறிந்தம்மைகனிந்திட
             பின்னுமிவ் வுலகுய்ய பெற்றதாய் தந்தையும்
                       ஒன்றானதொரு வடிவல்லவோ?
                 பேருலகி லானந்தம்பெற் றுயிர்கள் வாழ்ந்திட
                       பேரானந்த நடமாடியருளுகவே!5      

                                       ****************

    இது ஆடல்; இனி அம்பிகையின் பாடலைக் காண்போமா?

    அம்பிகையின் மீதான பல பிள்ளைத்தமிழ் நூல்களில் அம்மானைப் பருவத்தில் அம்மானையாடும் சிறுமியான அன்னை இனிமையாகப்  பாடிக்கொண்டே ஆடுவதனைப் பற்றிப் புலவர்கள் கூறிப்பிட்டிருப்பார்கள்.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் அம்மானைப்பருவத்தில் மீனாட்சி பாடியவாறே அம்மனையாடுவது விவரிக்கப்பட்டுள்ளது. கொத்தான மணிக்கக் கூட்டத்தால் செய்யப்பட்ட அம்மானைக்காய்கள் குயிலைப் போல் பேசும் உனது இனிய குரலின் குழல் போன்ற இசைக்கு உருகி, குளிர்ந்த துளிகளைச் சிந்துகின்றன.

                ‘கொத்து மணித்திர ளிற்செயும்அம்மனை
               குயிலின்மி ழற்றியநின்
                குழலினி சைக்குருகிப்பனி தூங்கு
               குறுந்துளி சிந்தியிட6 என்பன பாடல் வரிகள்.

    பெண்குழந்தைகள் தமது எல்லா விளையாட்டுகளிலும் பாடலைச் சேர்த்துக் கொள்வர் என்பது கண்கூடு!

    அன்னையின் உறைவிடமான சிந்தாமணி கிருகம். அன்னை ஆனந்தமாக ஊஞ்சலில் அமர்ந்துகொண்டு தாம்பூலம் தரித்துக் கொண்டிருக்கிறாள். அப்போது கலைவாணியான சரஸ்வதி அவள் முன்னமர்ந்துகொண்டு தனது வீணையை மீட்டிப் பசுபதியாகிய பரமசிவனின் பிரதாபங்களைப் பற்றிய பாடல்களை வாசித்துக் கொண்டிருக்கிறாள். தலையை ஆட்டித் தன் தலைவனின் பெருமைகளைக் கேட்டுப்பூரித்த உமையம்மை, “நன்றாக உள்ளது,” எனக்கூறுவதற்காக “ஸா” எனக் கூறத் துவங்கவும், வீணையின் தொனி மங்கி விடுகிறது. கலைமகள் நாணமடைந்து வீணையை அதன் உறையினில் இட்டு மூடிவைக்கிறாள்.

    இந்த ஆதிசங்கரரின் சமஸ்கிருதச் சுலோகத்தின் தமிழாக்கம்.

                வரமருளும் பரமேசன் சரிதத்தைப் பாடலாய்
                       வாணியவள் வீணையிலே மீட்ட
             பரமசந் தோஷத்தால் தலையசைத்த தேவிநீ
                       சபாஷ் என சரஸ்வதியை வாழ்த்த
             அதிமதுரச் சொல்தனது இசைமிஞ்சிய தாலே
                       அவள்வீணை தனையுறையுள் பூட்டி
             நிதியாக நின்வாக்கை மதித்தடுத்துச் சொல்கின்ற
                       வார்த்தைக்குக் காத்திருப்பாள் தாயே!7

                                                            (குற்றாலம் வள்ளிநாயகம்)

    இத்தகைய புகழ்வாய்ந்த அம்பிகையை, இசையின் உள்ளாய்ப் பொலிபவளை, ஈசன் பங்கில் உறைபவளை என்னென்று புகழ்வது? குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரமெனும் ஏழு சுரங்களாலான பல பண்களால் மேகராகக் குறிஞ்சியையும், மேற்செம்பாலைப் பண்ணையும் இசைக்கிறாள் சிறுமியான சிவகாமி. தனது உள்ளங்கவர் அண்ணலின் பெருமைகளைப் பாடி மகிழ்கிறாள். இந்த அனைத்துலகங்களையுமே தன் அருள் எனும் இசையால் ஆரபி, கௌரிமனோகரி, வசந்தபைரவி, வகுளாபரம், தோடி எனப் பலப்பல ராகங்களால் காதலுடன் நிறைக்கிறாள். இந்தக் கருணையைப்போற்றி உன் தாளிணைகளைப் பணிந்து, ‘இவ்வுலகம் செழிக்க, வல்வினைகள் கெட தர்மவதியான சிவகாமி அன்னையே! இன்னிசை பொழிவாயாக!’ என வேண்டுவோமா?

                ஏழிசையா யிசைப்பயனாய் இலங்கிடு மீசன்பங்கில்
                       ஏந்திழையே நீயுறைந்தாய்
                 எழிலோங்கும் உன்நாவில் குரலொடு துத்தம்கைக்
                       கிளையுழை இளிவிளரிதாரமெனு
             மேழிசையாற் பண்ணனைத் தும்பாங்கா கப்பாடுவாய்!
                       மேகராகக்கு றிஞ்சியினுமேற்செம்
                 பாலைப்பண் ணினிலும் மூண்டெழுந்த புகழ்மாலை
                       பெருமான்மேற் சாற்றிடுவா
             யாழிசூழ னைத்துலகு முன்னருளிலு மிசையிலும்
                       ஆரபியெனகௌரி மனோகரியெனவ
                 சந்தபைரவி யெனவகுளா பரணமென சுந்தரத்
                       தோடியென நிறைக்குமுன்றன்
             தாளிணை தான்பணிந்து தரணியெ லாஞ்செழிக்க
                       தவங்கள் தானியற்றும்
        தாபதருக் கருளுநல் தர்மவதி சிவகாமீ
                       தீங்குரற்றே னிசைபொழிகவே!8

    (தொடரும்)

                                       ————————–

    பார்வை நூல்கள்:

    1, 7. சௌந்தர்ய லகரி- தமிழாக்கம்- குற்றலம் வள்ளிநாயகம்

    2. பாடல்- பாபநாசம் சிவன்

    3. பாடல்- உளுந்தூர்பேட்டை சண்முகம்

    4, 5, 8- சிவகாமியன்னைமீது பிள்ளைத்தமிழ்ப் பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்

    6. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 4

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 4

    மீனாட்சி பாலகணேஷ்

    மருதோன்றி அணிதல்

         (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    அழகுக்கலை என்பது பெண்ணோடு கூடிப்பிறந்து வளர்வது. அதற்கு வயது வரையறையே இல்லை! உலகம் முழுமையுமே, கூந்தல் அலங்காரங்களாகட்டும், விதவிதமான அணிமணிகள், ஆடைகள், அனைத்துமே பெண்களின் பார்வையில் ஒப்பற்றதொரு பரிமாணத்தை அடைந்து ஒளிர்வனவாகும்.

    இவற்றுள் ஒன்று மருதோன்றி, மருதாணி, மெஹந்தி – இவையெல்லாம் பெண்கள்  தங்கள் கரங்களையும் கால்களையும் அழகுபடுத்திக்கொள்ள அணிந்து கொள்ளும் இயற்கை சாதனங்கள் ஆகும். பருவமடைந்த இளம் பெண்கள் தொய்யில் எனப்படும் வண்ணக்குழம்பாலான சித்திரங்களைத் தங்கள் தோள்களிலும் மார்பிலும் வரைந்து கொள்வர் எனக் கலித்தொகை இலக்கியத்திலிருந்து அறிகிறோம்.

    மருதாணி அல்லது மருதோன்றி பற்றிய குறிப்புகள் இலக்கியங்களில் தனியாகக் காணக்கிடைக்காவிடினும், இது ஒரு தொன்மையான அழகுக்கலை என அறியலாம். சூடான் போன்ற அரபிய நாடுகளிலும் மருதோன்றிக் குழம்பால் கை கால்களுக்கு சிவப்பு நிறமூட்டிக் கொள்வதனை அறிகிறோம்.

    மருதாணி அல்லது மருதோன்றி என்பது புதர்போல வளரும் ஒரு தாவரமாகும். மிகவும் மருத்துவ குணங்கள் வாய்ந்த இதன் இலைகளே பறித்து நன்கு அரைத்தெடுக்கப்பட்டு கைகளையும் கால்களையும் அழகுபடுத்தப் பயன்படுத்தப் படுகின்றன. மருதாணியின் தாவரவியல் பெயர் ‘லாசோனியா இனெர்மிஸ்’ (Lawsonia inermis). மருதாணி கொடுக்கும் நிறத்துக்கு அதிலிருக்கும் லாசோன் (Lawsone) எனும் பொருள் காரணமாகிறது.

    இது அழவணம், மருதாணி, மருதோன்றி எனவெல்லாம் வழங்கப்படும். அழகைச் சேர்ப்பதனால் அல்லது உடலுக்குக் குளிர்ச்சியை அளிப்பதனால் ஐ-வணம் எனும் பெயரும் இதற்குண்டு. பாதங்களில் அணியப்படுவதனால் சரணம் எனும் பெயரும் உண்டு. வெள்ளை நிறமுடைய இதன் மலர்கள் மணமிகுந்தவை. நகச்சுற்று எனும் விரல்களிலான நோய் மருதாணியை அணிய குணமாகும். கண்கள் குளிர்ச்சி பெறவும், நன்கு உறக்கம் வரவும் இவ்விலையை அரைத்துத் தலையில் தேய்த்துக்கொண்டு நீராடுவர். தலைக்குத் தேய்த்துக்கொள்ளும் எண்ணெயிலும் இதனை இட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளுவர். பெண்கள் இதன் கூழைக்கொண்டு கைகளிலும் கால்களிலும் பல வடிவங்களை வரைந்து அழகு செய்து கொள்வர்.

    திருவிழா நாட்கள், குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளான, திருமணம், வளைகாப்பு, இன்னபிற அனைத்திலுமே மருதோன்றியும் ஒரு மங்கலப்பொருளாகச் சேர்த்துக்கொள்ளப்படும். மருதோன்றிக் குழம்பைக் கைகளிலும் கால்களிலும் வேண்டிய வகையில் வரைந்து இட்டுக்கொண்டு, அது செம்மண் நிறம் வருவதற்காக, அணிந்தபடியே சிறுமியரும், இளமங்கையரும், பெண்டிரும் உறங்கவும் செய்வர். நல்ல நிறம் வருவதற்காக இலைகளைப் பறித்து அரைக்கும்போதே உடன், மஞ்சள்கிழங்கு, செப்புக்காசு, சுண்ணாம்பு முதலியவற்றையும் சேர்த்து வைத்தரைப்பர். அந்தப்பூச்சு சிலமணி நேரங்களில் தானே உலர்ந்து உதிர ஆரம்பிக்கும். நன்கு நீரால் கழுவிவிட்டு எண்ணையைப் பூசுவர் சிலர். ஆக மொத்தம், கைக்கு அழகு, கண்ணுக்குக் குளிர்ச்சி, மகிழ்ச்சிகரமான பொழுதுபோக்கு, விளையாட்டு; வேறென்ன வேண்டும்?

    தற்காலத்தில் இந்த மருதாணிக்கூழ் கூம்புவடிவப் பொட்டலங்களாகக் கிடைக்கிறது. வட இந்திய மாநிலங்களில் திருமணத்தின் முன்பு மணப்பெண் மருதாணி (மெஹந்தி) அணிவது என்பது ஒரு சடங்காகவே ஆடல், பாடல், விருந்துடன் நிகழ்கிறது. தென்னகத்திற்கும் இவ்வழக்கு வந்து சேர்ந்துள்ளது. இதற்காகவே சித்திரக்குறிப்புகளும், அவற்றை வரையும் முறைகளைப் பயிற்றுவிக்கவும் குழுக்கள் கூட உள்ளன.

    வாழ்க்கையை ரசனையுடன் வாழும் வழிமுறைகள்!!

                                                   *****

    இந்த முன்னுரையுடன் நாம் இப்போது ஏழெட்டு வயதுச் சிறுமி கற்பகவல்லியன்னை மருதோன்றி அணிந்து மகிழும் சில காட்சிகளைக் கண்டு களிப்போமா?

    மலைமகளான கற்பகவல்லிக்கு ஒருநாள் மருதாணி இட்டுக்கொள்ள ஆசை பிறந்தது. உடனே தோழியர் விரைந்து சென்று நந்தவனத்தினின்றும் மருதாணி இலைகளைக் கொய்து மடியில் பாவாடையில் கட்டிக்கொண்டு வந்து சேர்ந்தனர். செவிலித்தாய் முத்தம்மாள் அவற்றை வாங்கிக்கொண்டு உரலில் அரைத்தெடுக்கச் சென்றாள்.

    “முத்தம்மா, மையா அரைச்சுக்கோ,” என வேணி அறிவுறுத்த, “ரெண்டு செப்புக்காசு இருந்தாக் குடு,” எனக் கேட்டு வாங்கி, அவள் சுருக்குப்பையிலிருந்து எடுத்துத்தர, அதனையும் உரலிலிட்டு மருதாணியோடு சேர்த்து நசுக்கினாள் முத்தம்மாள்!

    ‘கம கம’வென மருதாணிக்கே உரிய அருமையான நறுமணம் அந்தப்பகுதி பூராவும் நிறைந்தது. வெள்ளிக்கிண்ணத்தில் வழித்தெடுத்த மருதாணி உருண்டைகளையும் கூழையும் வைத்துக்கொண்டு கற்பகத்தைச் சுற்றி அமர்ந்தவண்ணம் அவள் கரங்களையும் கால், பாதங்களையும் அலங்கரிக்க முற்படுகின்றனர் தோழியர். பாடலும் பிறக்கின்றது.

    “கற்பகம் எனும் பொன்மயிலாக மயிலாப்பூர் எனும் பதியினில் வந்து, தனது பொற்கரங்களால் பூக்களை எடுத்து, பொன்மேருவை வில்லாக வளைத்தும், முப்புரங்களையும் எரித்த சிவபெருமானின் பொன்னடிகளில் இட்டுப் பூசை செய்பவளும், அடியவர்களுக்கு வேண்டும் வரங்களை எல்லாம் கற்பகத்தருவாக நின்று தருபவளும், தன்னையே நம்பிப் பணியும் அடியார்களுக்குத் தவறாமல் உதவுபவளும், அபயகரம் காட்டுபவளும் ஆகியவளின்  கைகளுக்கு மருதாணி இடுவோம். தாமரை மலர்போலும் அவள் கைகளுக்கு மருதாணி இடுவோம்,” எனப் பாடுகின்றனர்.

                       பொன்மயிலாக மயிலையம் பதியினில் வந்து
                                பொற்கரத்தாலே பூவகைகள் கொண்டு
                       பொன்மேருவை வளைத்துப் புரமெரித் தவன்றன்
                                பொன்னடிக்கிட் டுப்போற்றித் துதித்து
                       நன்மையெலாம் அடியார்க்கு நாடோறு மருளி
                                நம்பிப்பணிந் தவர்களுக் குமுதவி
                       தன்மையுடன் தண்ணளிசெய் கைக்கு மருதாணி
                                தாமரைமலர்க் கைக்கு மருதாணி.     (1)

                                                               *****

    அடுத்து விரிகின்றதொரு அற்புதக் காட்சி! அன்னை மேனாவதியும் மற்ற செவிலியர், தோழியரும் கற்பகவல்லிக்கு மருதோன்றி இடும் காட்சி. ஒரு சிறு வெள்ளிக்குச்சியினைக் கொண்டு மருதாணிக்குழம்பால் பெண்மயிலாம் கற்பகத்தின் சிவந்த கைகளில் மயிலொன்றின் வடிவை வரைகிறாள் ஒரு பெண். மேனையின் ஆலோசனைப்படி அதைச்சுற்றி, திரிசூல இலச்சினையை வரைகிறாள் இன்னொருத்தி.  அடுத்து கால்களில் மருதாணி இட வாகாக, கற்பகவல்லியை, தேன்குரல் கொண்ட தோழிமார்கள், தென்றல்வீசும் முற்றத்தில் உயர்ந்த ஒரு பீடத்தில் அமர்த்திவைத்து, கைகளைப்பற்றி- (அவை எப்படிப்பட்ட கைகள்? – மான், மழு, சடையில் பிறைமதி தரித்த பிரானின் அருளைவேண்டி நித்தமும் பூசையைத் தவமாகவே செய்திடும் கைகள்) மருதோன்றி இட்டு, வான்முகிலைக் கண்டு களிநடம் புரியும் கற்பக வடிவானவளின் (அம்மை மயிலாக உருவெடுத்த வரலாறு) வண்ணத்திருவடிகளைப்பற்றி அவற்றிற்கும் மருதாணி இடுகின்றனராம்.

                       மேனையுமங்கே மருதோன்றிக் கூழ்கொண்டு
                                மேதினியை யாளுமுனது திருக்கையில்
                       மேகாரவடி விலுந்திரி சூலவடிவிலும்
                                மேவியழகாக மென்மை யாய்வரைய
                       தேனையும் பழித்திடுந்தீங் குரற்றோழியர்
                                தென்றலுல வுமுற்றந் தன்னிலே
                       தேடியேவழைத் துனையொ ளிர்மணித்
                                தவிசிருத்தி தளிர்க்கை தனைப்பற்றி
                       மானையுமழு வையுமதியை யுஞ்சடையணி
                                மகாதேவ னின்னரு ளைவேண்டி
                       மாதவப் பூசையினை நிகழ்த்திடும்
                                மாதேவி கற்பகவல்லி யுன்னை
                       வானைக்கண் டுகளிநட மாடிடும்
                                வனமயிலின் வண்ணத்திரு வடிபற்றி
                       பாங்காகவே மருதோன்றி யினாலான
                                பற்பல சித்திரம் வரைகிறார்.   (2)

                                                               *****

    ஒருபோது இமயாசலத்தில் சிவபிரான் உமையன்னைக்கு திருநீற்றின் பெருமையை விளக்கிக் கொண்டிருந்தார். அவ்வமயம் அங்கு ஒரு வண்ணமயில் ஆடி வந்தது. உமையின் கவனம் சிதறியது. இதனைக் கண்ட சிவபிரான் சினம் கொண்டார். “நீயும் ஒரு மயிலாகப் பிறப்பாயாக,’ எனக் கூறினார். பின் அன்னை தன் தவறுணர்ந்து மனமுருகி வேண்டிட, தவம் செய்து தன்னை வழிபட்டுத் தன்னிடம் வந்து சேர அருளினார். அவ்வாறு அன்னை மயிலாக (கற்பகமாக) இருந்து தவம் செய்த இடமே திருமயிலை எனும் மயிலாப்பூர். அவ்வண்ணலைப் பூசிக்கும் அன்னையின் அழகான கைகளுக்கு அணிவிக்கும் அழகு மருதாணி எனத் தலபுராணத்தையும் இணைத்துக் கூறுகிறது இப்பாடல்.

                            நீற்றதன் பெருமையினை நேசமுடன் எம்மையன்
                                நிமலையு னக்குரைக்கநீ
                       நின்றதனைச் செவிமடுக்க வந்ததொரு தடையாம்
                                நீலமாமயி லொன்றுமே
                       மாற்றதனைக் கண்ணுற்று மனங்கருத் துத்தவற
                                மாதேவியுன் மீதவன்
                        முனிவுற்று மயிலாகப் பிறத்தியென வுரைக்க
                                மனங்கலங்கி நீயுவேண்ட
                       மாற்றியே மயிலையம் பதிதனில் சென்றெம்மை
                                பெருந்தவந் தானியற்றில்
                       மகிழ்ந்துமே மணங்கொள் வம்மாதுநீ செல்கென
                                மகாதேவனு ரைக்கக்கேட்டே
                       ஆற்றியே அருந்தவம் அண்ணலை யடைந்திட்டாய்
                                அம்பிகைகற் பகக்கொடியே!
                       அவனைநீ பூசிக்கு மழகான வுன்கைக்கு
                                ஐவணம ணிவிப்பமே.                       (3)

                                                   *****

    இதிலிருந்து மருதோன்றி அணியும் நிகழ்ச்சியும் ஏழெட்டு வயதான சிறுமியருக்கே உரிய அரிய பருவமொன்றாகும் என அறியலாம். பிள்ளைத்தமிழின் அதிகப்படியான பருவங்களுடன் இதனையும் இணைத்துக் கொள்ளலாம் என்பது எனது தாழ்மையான எண்ண ஓட்டம்!

    இதுபோன்றும் இன்னும் சில அழகிய நிகழ்வுகள் கொண்ட பிள்ளைப்பருவங்களைத் தொடர்ந்து காணலாம்.

                                                   (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)


     1, 2, 3- பாடல்கள்- மீனாட்சி பாலகணேஷ்- கற்பகவல்லி பிள்ளைத்தமிழ்- மருதோன்றிப்பருவம்

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 3

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 3

    மீனாட்சி பாலகணேஷ்       

    கூந்தல் அலங்காரங்கள்

    (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    கூந்தல் என்பது ஒரு பெண்ணின் எல்லாவயதிலும் அவளுடைய பெண்மைக்குச் சான்றுகூறி, அழகிற்கு அழகு சேர்ப்பதாகும். பெண்களின் கூந்தலைப் பற்றிப் பாடாத கவிஞர்கள் உண்டோ? அன்றுமுதல் இன்றுவரை அவளுடைய கருங்கூந்தலைப்பற்றி எத்தனை கவிதைகள்! என்னென்ன வருணனைகள்!

    சௌந்தர்யலஹரி அன்னை தெய்வத்தின் கேசாதி பாத வருணனையில் ஆதிசங்கரர் கூறுவதனை வீரை கவிராஜ பண்டிதர் அழகுற மொழிபெயர்த்து வழங்கியுள்ளதனைக் காணலாமா?

    அன்னையின் கருங்கூந்தல் எவ்வாறுள்ளதென விவரிக்கிறார்:

     

    ‘மலர்ந்த நறுநெய்தல் காடுபோல பிரகாசிக்கின்றது அக்கூந்தல். அடர்த்தியாக, வழுவழுப்பாக, மென்மையாக உள்ளது. இந்திரனுடைய நந்தவனத்தில் பூத்துள்ள நறுமலர்கள் அக்கூந்தலின் இயற்கை நறுமணத்தைத் தாமும் அடைய விரும்பி அக்கூந்தலில் வாசம் செய்கின்றன; அக்கருங்கூந்தல் என் மனத்து இருளை நீக்கவேண்டும்,’ என வேண்டுகிறார்.

    அலர்ந்தகரு நெய்தலங் காடெனக் கடைகுழன்
    றறநெய்த்து  இருண்டு செறிவோடு  
    இலங்குறும் இயற்கை மணம் எண்டிசையளப்ப அதில்
    இதழ் மூழ்கு நறை விழைவினால்
    பொலன்கொள் முடியாகண்டலேசர் பொற்றுணர்விரி
    பொதும்பர் மதுமலர்ப் படிவதோர்
    சிலம்பளி பரந்தவுனது ஓதியென் மனத்திருள்
    செறிவுதெற வருள் கமலையே!1

    பெண்டிரின் கூந்தலுக்கு இயற்கை நறுமணம் உண்டா என எழுந்த ஐயத்தால் உண்டான கதை, ‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பீ,2‘ எனும் குறுந்தொகைப் பாடல், அதன் தொடர்பான திருவிளையாடலைப் பற்றி தமிழ் அறிந்தோர் அனைவரும் அறிந்திருப்போம்.

    இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் மாதவி தனது கூந்தலை எவ்வாறு அலங்கரித்துக்கொண்டாள் என விளக்கமாகப் பாடியுள்ளார்.

    பத்துவகைத் துவரினாலும்(நாவல், கடுக்காய், நெல்லி, தான்றிக்காய், ஆல், அரசு, அத்தி, இத்தி, முத்தக்காசு, மாந்தளிர்), ஐந்துவகை விரையினாலும் (நறுமணப்பொருள், கஸ்தூரி, மயிர்ச்சாந்து, அகில்,  சந்தனம்), முப்பத்திரண்டுவகை நறுமணப் பொருள்களாலும் (ஓமாலிகையாலும்) ஊறவைத்த நன்னீரினால் நறுமண நெய்பூசிய தன் கூந்தலை நீராட்டினாள். பின் அகிற்புகை செலுத்தி அதனை உலர வைத்தாள். அதனை ஐந்துவகையாகப் பகுத்து (ஐம்பால்) ஒவ்வொரு வகைக்கும் கத்தூரிக் குழம்பினை ஊட்டினாள்.

             ‘பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
             முப்பத் திருவகை ஓமா லிகையினும்
             ஊறின நன்னீர் உரைத்தநெய் வாசம்
             நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப்
             புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை
             வகைதொறு மான்மதக் கொழுஞ்சே றூட்டி.3.’

    பரிபாடலிலும், மற்ற சங்க இலக்கியங்களிலும் கூந்தல் பராமரிப்பு, அலங்காரங்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

    பட்டுப்பூச்சி போன்ற துறுதுறுப்பான சிறுமி! அவளுடைய கருமுகில் கூட்டங்கள் போன்ற அழகான அலையலையான நீண்ட கருங்கூந்தல். வண்டுகள் இன்னிசை மிழற்றியவாறு அதில் சூட்டப்பட்ட மலர்களில் தேனருந்தி மகிழ்கின்றன. அதற்குப் போட்டியிட்டுக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான கூந்தல் அலங்காரத்தைச் செய்து அழகு பார்க்கும் தாயும் சேடியரும். யாரிந்தப் பெண்? அழகான கூந்தலுக்கு உரிமையாளர்? எட்டு அல்லது ஒன்பதாண்டுகளே நிரம்பிய நமதருமைச் சிறுமி மீனாட்சியேதான்!!

    கூந்தல் அலங்காரம் என்பது சிறுமியர்க்கு / பொதுவாகவே பெண்களுக்கு அவர்களது மிகச்சிறு வயது முதலே மிகவும் பிடித்தமான ஒன்றாகும். வளரும் பெண்மகவின் உளவியல்படி காணப்புக்கின், அழகியல் பலவிதங்களில் அவளிடம் இயல்பாகவே இருந்து வெளிப்படுவதனைக் காணலாம். அதனால் இதனையும், பெண்மகவின் கூந்தல் அலங்காரங்களையும் பெண்பால் பிள்ளைத்தமிழின் ஒரு நிகழ்வாகவோ / பருவமாகவோ சேர்த்துக் கொள்ளலாமே!

    பெண்குழந்தைகளானால் பிறந்து சிலமாதங்களிலேயே தாய்மார்கள் அக்குழந்தையின் தலைமயிரை விதம்விதமாக அலங்கரிக்க முற்படுவார்கள். தலைமயிர் சிறிது வளர்ந்ததும் அதனைச் சூழியம் எனப்படும் உச்சிக் கொண்டையாக்கி முடித்து, மலர்களை அதில் செருகி அழகு பார்ப்பார்கள்.

    மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் இதற்கான கருத்துக்களைக் காணலாம்.

    தவழ்ந்தாடி வரும் சின்னஞ்சிறு மகவுக்குத் தாய் அதன் தலைமயிரை உயர்த்திக் கொண்டையாகக் கட்டியிருக்கிறாள்; அதனைச் ‘சூழியக் கொண்டை’ என்பார்கள். புன்னகையாடக் குழந்தை மீனாட்சி தவழ்ந்தாடி வருகிறாள் என்பார் புலவர்.

               ‘முகமதியூடெழு நகைநிலவாட, முடிச்சூழியமாட……..4.’

    எனத் தவழும் பருவமான ஆறாம் மாதத்திலிருந்து துவங்கி இத்தகைய உச்சிக்கொண்டை அவ்வப்போது தாய்மாரால் பெண்மகவு வளருந்தோறும் முடிக்கப்படும்!

    எட்டு, ஒன்பது, பத்தாம் ஆண்டுகள் பெண்குழந்தை ஊசலாடி மகிழும் பருவம். விதம்விதமாகக் கூந்தல் அலங்காரங்களைச் செய்து அழகு பார்ப்பார்கள் தாய்மார்கள். தன் மகளைச் சிங்காரித்துப் பார்ப்பதில் எந்தத் தாய்க்குத்தான் விருப்பமிருக்காது? வீசியாடும் ஊசலில், பம்பு போன்ற நீண்ட கருத்த பின்னலும் உடனடினால் எந்தத்தாய் தான் பெருமையில் உள்ளம் பூரிக்க மாட்டாள்?

    கீழ்க்காணும் பாடலில் குமரகுருபரர் மீனாட்சியின் நகரமான மதுரையின் பெருமையைக் கூறும் பாடலில் இது பற்றிய நயமான கருத்தைக் காணலாம்.

    பனி துளிக்கும் (பில்கும்- எத்துணை அழகிய சொல்!) குறும்பனிக்காலமான கூதிர்க்காலத்தில் நீராடிய சிறுமிகளின் கூந்தல் ஈரம் புலராது உள்ளது என்று தாய்மார்கள் அச்சிறுமிகள் தம் கூந்தலை ஆற்றுவதற்கு ஏதுவாக, அகில், சாம்பிராணி, ஆகிய புகையை ஊட்டச் செய்வர். ஒரு தூபக்காலில் கனியும் கரிக்கட்டைமீது அகில், சாம்பிராணியைத் தூவிப் புகையெழச் செய்து, அதன்மீது பெரியதொரு கூடையை வைத்து மூடுவர். பின் சிறுமியரைக் கூந்தலை விரித்து அதன்மீது கிடத்துமாறு செய்வர். புகை நன்கு கூந்தலின் உள்ளே ஊடுருவி அதனை உலர்த்தும். இக்கூந்தலில் அவர்கள் எப்போதும் மலர்களைச் சூடுவதால் அதற்காக வண்டுகளும் கூந்தலை மொய்த்தபடி இருக்கும்.

    மேலும் இக்கூந்தலை அவர்கள் முடி, கொண்டை, சுருள், குழல், பனிச்சை எனும் ஐந்து வகையான பகுப்புகளாக, விருப்பத்திற்கேற்ப முடிப்பதனால், கூந்தலே ‘ஐம்பால்’ எனப் பெயரையும் பெற்றது.

             முடி என்பது உச்சியில் முடிக்கப்படும்; இது சூழியம் எனவும் கூறப்படும்.
             கொண்டை பக்கவாட்டில் முடிக்கப்படும்;
             சுருள் என்பது கூந்தல் சுருட்டிச் செருகப்படுவதனைக் குறிக்கும்.
             குழலானது சுருட்டி முடிக்கப்படுதலைக் குறிக்கும்.
             பனிச்சை என்பது பின்னி விடப்படும்.

    இக்காலத்திலும் இவை அனைத்தும் பல மாற்றங்களுடன் வழக்கத்தில் உள்ளன.

                பில்குங்குறும்பனிக்கூதிர்க் குடைந்தெனப்
                       பிரசநாறைம்பாற்கினம்
              பேதையர்கள்ஊட்டும் கொழும்புகை மடுத்துமென்
                       பெடையொடுவரிச்சுரும்பர்
             புல்குந்தடம்பணை உடுத்துமது ரைத்தலைவி
                       பொன்னூசல்ஆடியருளே 5      

    எனும் பொன்னூசற் பருவப்பாடலில் பலவிதமான கூந்தல் அலங்காரங்களும் பேசப்பட்டுள்ளன.

    இவ்வைம்பால் பற்றிய மேலும் பலவகையான குறிப்புகள் திவாகர, பிங்கல நிகண்டுகளிலும், அக, புறநானூற்றிலும், சீவகசிந்தாமணி, நாலாயிர திவ்வியப்பிரபந்தம், திருவாசகம் முதலியவற்றிலும் பரந்து காணப்படுகின்றன.

    இக்கூந்தல் அலங்காரங்கள் பலவிதங்களில் கூந்தலை முடிப்பதுடன் மட்டுமே முழுமை பெறாது. அவற்றில் வாசமிகு வண்ணமலர்களையும் பலவிதமாகத் தொடுத்தும் கட்டியும் அலங்கரிப்பர் பெண்கள். முல்லை, பித்திகம், தாழம்பூ, மருதோன்றிப்பூ, செண்பகப்பூ, ஆகிய வாசமிகு மலர்களாலும், மருக்கொழுந்து, தவனம் ஆகிய நறுமணப் பச்சிலைகள், மேலும் முத்து, மணிகள், பொன்னணிகள் முதலியனவற்றால் முடித்த கூந்தலை அலங்கரிப்பர். அழகான கூந்தலை அழகிய வாசமிகு, பலநிற மலர்கள் அலங்கரிக்க வேண்டாமோ?

                                                   *****

    இனி நாம் மதுரையரசி மீனாட்சியின் அரண்மனைக்குள் சிறிதே சென்று பார்ப்போமா?

    வைகைப்புது நீரிலாடிவிட்டு ஈரக்கூந்தலுடன் மீனாட்சி வந்துள்ளாள். தாதியர் ஓடிச்சென்று பூத்துவாலையால் முடிந்த அவளுடைய கூந்தலை விரித்துத் துவட்டுகின்றனர். கையிலடங்காத கருங்கூந்தல். அதற்குள் தோழியர் அகில், சாம்பிராணி ஆகியவற்றைக் கனலிலிட்டு அதன்மீது ஒரு கூடையைக் கவிழ்த்துவைத்து, மீனாட்சியை அதனருகே அமரவைத்து, அவளுடைய அடர்ந்த கூந்தலை விரித்து அதன்மீது பரப்பி உலர்த்துகின்றனர். அரைநாழிகை கழிந்ததும் ஏறக்குறைய உலர்ந்த கூந்தலை, கூந்தல் அலங்காரம் செய்வதில் வல்லவளான பெண் ஒருத்தி, அழகாகப் ‘பை’ போன்று பின்னி விடுகிறாள். ‘பைப்பின்னல்’ எனும் இவ்வமைப்பில் கூந்தல் உலர வாய்ப்பு அதிகம் உண்டு. இதுவுமன்றி ‘அகத்திக்கட்டு’ என்ற கூந்தல் பின்னலையும் பெண்கள் எண்ணெய் நீராடிய அன்று ஈரம் உலருவதற்காக, பின்னிக்கொள்வார்கள்.

    (மனக்கண்ணில் இக்காட்சியைக் காணும் நாம் மீனாட்சியின் கூந்தலை இவ்வாறெல்லாம் அலங்கரிக்க இவர்கள் பெற்றபேறு என்னே என எண்ணுகிறோம். அம்மை நம்மையும் காத்தருளுக என வேண்டுகிறோம்.)

                                                               –000–

    வைகைப்புதுநீ ராடிவந்த வன்னமயிலுந்தன்
    வளர்தோகை யன்னகருங் கூந்தலினை
    விரித்துப்பு கைகூட்டு மன்னையரும்வரி
    வண்டுகள் மிழற்றுமக் கூந்தற்காட்டினை

    ‘பை’கைகொண் டேகும்வகை முறையால்
    பற்றியெ டுத்தேபுது வகையாமொரு
    பனிச்சைப் பின்னலி டும்தாயரும்
    பவித்திர மானதம்கை யதனாற்செயுஞ்

    செய்கையிது வொன்றினா லன்றோ
    செயற்கரிய பேறுபெற்றுய்ந் தாரம்மே
    செய்வதினியா மொன்றறியோம் சிறியேம்புன்
    செயல்கள் ஏற்றருளிச் சிந்தைகுடியேறி

    பொய்மையற் றபெருவாழ்வும் புண்ணியஞ்சேர்
    பெருந்தனமு முதவியுந்தன் பூவிணைப்
    பங்கயத் திருத்தாளில் பொருந்திவாழக்
    கயற்கண்ணால் கனிந்துநீயு மருளுகவே! (1)6

                                                  *****

    நீராடிய கூந்தலை ஈரம்போக ஆற்றும்பொருட்டுப் பைப்பின்னலிட்டுக் கொண்ட பெண்மகள், சிறிது இளைப்பாறியதும் தோழியருடன் நந்தவனத்திற்குச் சென்று ஊசலாடிக் களிக்கிறாள். வேகமாக வீசியாடும் ஊசற்காற்றில் கூந்தலின் ஈரம் முற்றும் உலர்ந்து விடுகின்றது!

    இப்போது அவளுடைய கூந்தலை அழகாக ஐம்பால் பகுப்புகளும் செய்ய ‘நீ, நான்’ எனப் போட்டியிடும் தோழியரும் செவிலியரும்! ஒருத்தி சிறிது தலைமயிரைக் கையிலெடுத்து நறுநெய் பூசி அதனை அழகாக வளைத்து பக்கவாட்டில் ஒரு சிறுகொண்டையாகப் போடுகிறாள். பளபளக்கும் முத்துக்களாலான சரம் ஒன்றினையும் அதில் சுற்றிவிட்டு அழகு செய்கிறாள்.

    “செங்கமலம், நகரடி! நம்ப மீனம்மாவுக்கு, நாகப்பின்னல் பின்னிவிட என் முறையடி இப்போது,” என்றபடி, இரண்டாகப் பகிர்ந்துகொண்ட கருங்கூந்தலின் ஒரு பகுதியைப் பிடிக்க இயலாமல் பிடித்து, வாச நெய் பூசி, தந்தச் சீப்பால் இழைய வாரி, நான்கு கால்கள் எடுத்து நாகப்பின்னல் பின்னலானாள். அழகான குஞ்சலம் (சடைக்குச்சு, குஞ்சலம் என்றெல்லாம் இதற்குப் பெயர்கள் உண்டு) ஒன்றை கையில் ஏந்தியபடி அவளருகே நின்றிருந்தாள் பொன்னம்மா. என்ன வேலைப்பாடு அதில்! மூன்று கருநிறப் பந்துகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, தங்க முகப்புகள் கொண்ட அவற்றில் ரத்தினங்களும் மரகதங்களும் இழைக்கப்பட்டிருந்தன. பின்னலின் கடைசியில் அதனை வைத்து முடிந்துவிட்டு, முல்லைச்சரத்தைத் தொடுத்துக் கொண்டிருந்த கலைச்செல்வியை அவசரப்படுத்தினாள் பொன்னம்மாள்!

    அதற்குள் செவிலித்தாயான தாயம்மாள், இவர்களைச் சைகையாலேயே நகரச் செய்துவிட்டு, மீதமிருந்த கூந்தலைச் சில சுருள்களாகச் சுருட்டி அழகு படுத்தினாள். வாகாக ஒரு சிறிய கொண்டையையும் சரசரவென்று பின்னலின் உச்சியில் அமைத்தும் விட்டாள். கண்கொள்ளாக் காட்சி!

    தாழம்பூ மடல்களை அழகாக நறுக்கியெடுத்து அப்பின்னலில் வைத்துப் பொருத்தி, இடையிடையே தங்கத்தாலான சம்பக மலர்களையும் நறுமணம் வீசும் உண்மை சம்பக மலர்களையும் பொருத்துகின்றனர். பிறைச்சந்திரன், சூரியன் வடிவங்களிலுள்ள சூரிய, சந்திரப் பிரபைகள் சிறு மயிர்க்கால்களில் பிணைக்கப்பட்டு தலையில் பொருத்தப்பட்டுள்ளன. பின், கொண்டையின் நடுவில், நடனமாடும் ஈசனின் உருவம் நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட அழகானதொரு சடைவில்லை அழகுறப் பொலிகிறது.

    மலயத்துவசனின் பாண்டிய குலக்கொழுந்தைக் காண ஆயிரம் கண்கள் போதாது அன்றோ?

    முத்துச்சரங் கொண்டுச்சிக் கொண்டைதனில் முடிவார்
    முன்னைப்பழம் பொருளின் நாயகியாம் உனக்கு!
    முல்லைச்சரங் கொண்டுநாகப் பின்னலில் அணிவார்
    முல்லைச் சிரிப்புடைய மீனாட்சி தனக்கு!            

    கொத்துமலர்க் குழல்சுருட்டி கோதைக்குக் கொண்டையிட
    கொஞ்சிடும் வண்டினமு மருதப்பண் ணிசைக்க
    குச்சிசைத்துப் புனைந்தசடை கெஞ்சுமிடை யிற்றவழ
    கோமளமாய் வனைந்தசம் பகமலரு மணம்பரப்ப
        
    தத்தைக்கிளி யுனக்குத்தா ழம்பூதைத்தி டுவார்பின்
    தலைக்கணி யாய்ச்சந்திர சூரியரையு மணிவிப்பார்
    சடைவில்லை யெனவேயந்தத் தாண்டவமா டிடும்பொற்
    கழலணிவேந் தனினவரத் தினப்பதக்கஞ் சூடிடுவார்

    முத்தைவிளைக் குங்கொற்கைச் சிலாபத்திற் கரசியே
    மாடங்கள் சூழ்மதுரைக் கூடலின் தலைவியே
    மலயத்துவசன் குலக்கொழுந் தேமங்கையருள் ளருமருந்தே
    மாதேவிபர மேசிமகா மேருதனில் உறைதாயே! (2)7

                                                   *****

    கூந்தலை அழகாகப் பின்னி, கொண்டையிட்டுப் பூமுடித்தால் மட்டும் போதுமா? அந்த அழகுக்கு ஈடாக மற்ற அணிகலன்களையும் பூட்டி அழகுபார்க்க வேண்டாமா?

    ஆபரணங்கள் நிறைந்த பெட்டியை எடுத்துவருகிறாள் காஞ்சனமாலை. மகளருகே அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக எடுத்து தாயம்மாளிடல் கொடுக்க, அவள் மீனாட்சியின் பஞ்சினும் மென்மையான பாதங்களில் சிறிய மணிகள் குலுங்கும் பாதசரங்களை அணிவிக்கிறாள். காஞ்சனமாலையே தன் செல்லமகளுக்கு நெற்றியில் மணம்நிறைந்த சிவந்த குங்குமத்தையும் பூசி, திருநீற்றுப் பொடியைப் பூசுகிறாள்; அதற்குள் மறந்துபோய்விட்ட சிறு திருகுப்பூக்களைக் கொண்டையில் பொருத்துகிறாள் மேகலை!

    அன்புமகளைப் பார்க்கும் அரசியின் கண்களில் பரவசம் பொங்குகிறது; மனக்கண்ணில் காணும் நமக்கும் களிபொங்குகிறது. நெற்றிச்சுட்டி, காதணிகள் மாட்டி, மீன்களைப் பொரும் கயல்விழிகளுக்கு மைதீட்டி மகிழ்கின்றாள்.

    இத்தகைய அழகுப்பெட்டகமாய்த்திகழும் இச்சிறுபெண் தேவர்களும் வந்து வணங்குபவள்; வேதங்களின் உட்பொருளாய்த் திகழ்பவள்; இவளை என்னசொல்லி வாழ்த்துவது? திருவடியில் வீழ்ந்து வணங்கவே இயலும் அல்லவோ?

                பஞ்சினுமெல் லடிகளுக்கு பாதசர மிழைத்து
                       பசியநெற்றிக் குப்பொடியுங் குங்குமமு மிழைத்து
                 பசுந்தோகை யொக்குங்கருங் கூந்தற்கு நெய்பூசி
                       பாவையுந்தன் பின்னலிலே பதக்கங்கள் தான்வைத்து

              நெஞ்சமெல்லா முனதுதுதி நெகிழ்ந்தோடி யுள்ளிறங்க
                       நேரமெல்லா முனதுவெழில் கண்டுகண் கள்களிக்க
                  நீலநிறக்கல் லிழைத்தநல் நெற்றிச்சுட்டி பூட்டியும்
                       நேரிழையா ளுனக்கான நல்லணிகள் மாட்டியும்
            
             அஞ்சனந்தீட் டியுங்கயல் பொருங்கயல் விழிக்கற்புதமாய்
                       அதிசயமாங் கொண்டை முடிந்ததனில் அணிந்திடவே
                 அரியநவரத் தினதிருகுப்பூ விழைத்துத் தாழைமலர்
                       அமைத்துப்பின் னலில்முல் லைப்பூதைத் துவப்பார்

              விஞ்சையரு வந்துபணி யஞ்சொல்மொழி கிஞ்சுகமே
                       வேதவிழுப் பொருளேயெந் தவப்பயனாய் நிற்பவளே!
              வாழ்வின் ஒளிவிளக்கே! வான்மழையே! வள்ளலே!
                       வாழ்த்தவ கையுண்டோ வணங்கிடுமுன் பொன்னடியை! (3)8

                                                   ****

    பார்வை நூல்கள்:

    1. வீரை கவிராஜ பண்டிதர்- சவுந்தரிய லகரி- பாடல் 42.

    2. இறையனார் குறுந்தொகை 2 -ஆம் பாடல்.

    3. இளங்கோவடிகள்- சிலப்பதிகாரம்.

    4, 5. குமரகுருபரர்- மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

    6, 7, 8. மீனாட்சி பாலகணேஷ்- மீனாட்சியம்மையின் கூந்தல் அலங்காரம் பற்றிய பாடல்கள்.

       (புதிய பருவங்கள் தொடரும்)

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 2

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 2

    மீனாட்சி பாலகணேஷ்

    வளையல் அணிதல்

       (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    பெண்குழந்தைகளின் வளர்ச்சியில் நாம் கண்டு ரசிக்கப்போகும் அடுத்த நிகழ்வு கைநிறைய விதம்விதமாக வளையல்களை அணிந்துகொண்டு மகிழும் பருவத்திலிருக்கும் ஐந்து முதல் பத்து வயதினரான சின்னஞ்சிறு பெண்குழந்தைகளைத்தான். வளையல்கள் பெண்களின் அழகு சாதனங்கள். மங்கலச்சின்னங்கள். கலகலவென ஆர்க்கும் பலநிறங்களிலான கண்ணாடிவளை முதல் இரத்தினம், முத்து, மரகதம் என நவரத்தினங்களையும் வைத்திழைத்த பொன்வளைகளும் கங்கணங்களும் கூடப் பெண்களின் விருப்பத்திற்கானவைதாம்!

    பண்டிகை நாட்களாகட்டும், ஊர்க்கோவிலில் திருவிழாவாகட்டும், பிறந்தநாள் ஆகட்டும்; புதுவளைகள் அணிவதில் பெண்களுக்குண்டான ஆசை அளவிட முடியாதது. இதற்குச் சின்னஞ்சிறுமிகளும் விலக்கில்லை.

    60-70 ஆண்டுகள் முன்புவரைகூட வளைவியாபாரி ஒருவர் முதுகில் பத்திரமாகக் கட்டித்தூக்கிய வளையல் மூட்டையுடன் கிராமத்துத் தெருவிலோ, அல்லது நகரத்துத் தெருக்களிலோ ‘வளையல் வாங்கலையோ வளையல்!’ எனக்கூவியபடி செல்வதுண்டு. அல்லது ஓர் அம்மாள் கூடையில் கண்ணாடி வளையல்களை அழகாகப் பாங்காக அடுக்கிவைத்துக்கொண்டு, “வளேல், வளேல், வளேல,” என்று கூவியவண்ணம் தெருத்தெருவாகச் சென்று விற்பாள். ஏதாவது ஒரு வீட்டுத் திண்ணையில் தனது மூட்டையை இறக்கிவைத்து, மேற்துண்டால் வியர்வையைத் துடைத்தபடி, வெற்றிலைச்சாற்றை ஒருபுறம் உமிழும் வளையல் வியாபாரி, அந்த வீட்டுக் குழந்தையிடம், “பாப்பா, குடிக்கத் தண்ணீர் கொடேன்,” என்பார். பல நேரங்களில் பாப்பா செம்பில் கொணரும் நீரைத் தொடர்ந்து அந்த வீட்டம்மாளும் இன்னொரு ஏனத்தில் கடுகும் கருவேப்பிலையும் தாளித்துப் பெருங்காயமும் உப்பும் கலந்த சுவையான மோரைக் கொண்டு வந்து கொடுப்பாள். தாகத்தோடு நடந்து வந்திருக்கும் வளையல் வியாபாரி ஆவலோடு அதைப் பருகிமுடித்தபின், “புதுப்புது நிறங்களில் பச்சைவளை, பட்டுவளை, தங்கநிறவளை கொண்டு வந்திருக்கேன், பார்க்கிறீகளா?” எனத் தாமே முதுகில் சுமந்துவந்த துப்பட்டியை விரித்து வளையல் மூட்டையை அவிழ்ப்பார்.

    இதற்குள் தெருவில் உள்ள வீடுகள் அனைத்திலிருந்தும் பெண்கள், பெரியவர்களும், இளம்பெண்களும், சிறுமிகளும், குழந்தைகளுமாகக் கூடிவிட்டிருப்பார்கள். வியாபாரியும் அகலமான பெரிய திண்ணையில்தான் தமது மூட்டையை இறக்கியிருப்பார். அத்தனை வளையல்களையும் புதுப்புது நிறங்களையும் கண்ட பெண்கள், வளையல்கள் போலவே கலகலப்பார்கள். அக்காள்மார், அன்னையர், அத்தை, பாட்டிகளின் உற்சாகம் சின்னஞ்சிறு சிறுமிகளையும் தொற்றிக் கொள்ளாதா என்ன? தமது குட்டிக்கைகளை நீட்டியவண்ணம், “தாத்தா, மாமா,” என உறவுகொண்டாடியபடி வளையல் அணிவிக்க சின்னஞ்சிறுமிகள் முந்துவார்கள். வியாபாரியும், பொறுமையாக, சாமர்த்தியமாக அனைவரையும் மகிழ்விக்கும் வண்ணம் குறும்பாக, வேடிக்கையாக, எதார்த்தமாகப் பாட்டுக்களைப் பாடியபடி, வளையல்களை எடுத்துக் காட்டிக்கொண்டே, அவரவர் கைகளில் அழகுற அணிவித்து விடுவார். ஓரிரு வளைகள் உடைந்து விடும், அவற்றை ஓரமாகப் போட்டு விடுவார்.

    சிறுமிகளுக்கு முதலில் அணிவித்து, அவர்கள் முகங்களைப் புன்னகையில் மலரச் செய்துவிட்டு, இளம் பெண்களுக்கும், அன்னையர்க்கும் கூட அணிவித்து விடுவார்.

    வளையல் வியாபாரியின் வரவை எதிர்நோக்கி வீடுகளில் தாலாட்டுகள் பாட்டிமார்களால் பாடப்பட்டன!

    வாரும் வளைச்செட்டியாரே! வந்திறங்கும் திண்ணையிலே!
    கொச்சிட்ட திண்ணையிலே! கோலமிட்ட வாசலிலே!
    (கொச்சிட்ட- அழகான)
    அகலமுள்ள திண்ணையிலே நீளமுள்ள வாசலிலே
    கம்பளியைப் போட்டு கனத்த சுமை இறக்கும்!
    துப்பட்டியைப்போட்டு தங்கவளைத் தூக்கு இறக்கும்!

    கறுப்புவளை உண்டாமோ காவலனார் கண்மணிக்கு?
    சிகப்புவளை உண்டாமோ சுந்தரனார் பெண்மணிக்கு?
    பச்சைவளை உண்டாமோ பாண்டியனார் பேத்தியர்க்கு?
    நீலவளை உண்டாமோ நிமலனார் செல்வியர்க்கு?

    பொட்டுமிட்டு மையுமிட்டு பொற்கொடிக்குப் பூச்சூட்டி
    பக்கத்தே கன்னத்தில் திருஷ்டிப்பொட்டு வையுங்கள்!1

    இவ்வாறு வளையல்கள் இன்றுவரை அனைவர் உள்ளங்களிலும் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் விளைவிக்கும் ஒரு பொருளாக உள்ளது. வெளியூர் சென்றுவரும் தந்தைமார் தமது அருமைப் பெண்குழந்தைகளுக்கு அவரவர்கள் வசதிக்கேற்ப வளையல்களை வாங்கிவந்து பரிசாகக் கொடுத்தனர்.

    பிறந்து சில மாதங்களே ஆன சிறு குழந்தைக்கும் கையில் கருநிற வளைகளைப் போட்டு வைப்பார்கள்- காற்று, கறுப்பு அண்டாதிருக்க இவையே காப்பாகும்.

    அடடே! இன்று சாமிநாத மாமா வீட்டில் அவர் மகள் காமாட்சிக்கு வளைகாப்பாயிற்றே! வளையல் வியாபாரி முருகப்பனுக்குக் கொண்டாட்டம்தான்! காமாட்சிக்கு வளையடுக்கும் சாக்கில் ஊரே வளைகளணிந்து மகிழும். அதோ! கேட்கிறதா அவர் பாடிக்கொண்டே சிரித்த முகத்துடன் பச்சையும் சிகப்புமாகக் கண்ணாடி வளையல்களை காமாட்சியின் கரங்களில் அடுக்குவதை!

    ‘வளை குலுங்கினாற்போல மழலைமொழி பேசும்
    கிளை பெருகி வாழவே வளை சூட்டுகின்றோம்.’2

    இவ்வாறெல்லாம் பெருமைமிகுந்த வளையலுக்கு இலக்கியத்தில் இல்லாத இடமும் உண்டோ?

    சிவபெருமானே வளையல் வியாபாரியாகி மதுரைவீதிகளில் வளையல் விற்றதனைத் திருவிளையாடல் புராணம் பாடிப் பெருமிதமடைகின்றதே! கதையை நினைவு கூர்வோமா?

    தாருகாவனத்து முனிவர்களுக்குத் தாங்களே அனைவரிலும் உயர்ந்தவர்கள் எனும் செருக்கு மிகுந்தது. அவர்களது அகந்தையை அழிக்கத் திருவுள்ளம் கொண்ட சிவபிரான் பிட்சாடனர் கோலம் கொண்டார். பிச்சை எடுக்க வந்த பேரருளாளனின் அழகில் மயங்கிய முனிவர்களின் பத்தினியர் அவர்பின் செல்லத் தலைப்பட்டனர். கைவளைகளும் மேகலையும் கழல, ஆடை கலைய பிட்சாடனருடன் சல்லாபிக்க முயன்றனர். அவரும் அங்கிருந்து மறைந்துவிட்டார். பத்தினியர் தம் நிலையிழந்ததனை அறிந்த முனிவர்கள் அவர்களை மதுரை நகரில் அழகான வணிகமகளிராய்ப் பிறக்கவும், சாபவிமோசனமாக, சோமசுந்தரக்கடவுள் அவர்களைத் தீண்டும்போது சாபம் விலகும் எனவும் கூறினர்.

    அவ்வாறே அப்பெண்கள் மதுரையில் வணிகமகளிராகப் பிறந்து அழகுற வளர்ந்து பருவமடைந்தனர்.

    அந்த மாட மதுரைநகர்க் கரசா கியசுந் தரக்கடவுள்
    வந்து நும்மைக் கைதீண்டும் வழியிச் சாபங் கழியுமெனச்
    சிந்தை தளர்ந்த பன்னியருந் தென்னர் மதுரைத் தொன்னகரிற்
    கந்த முல்லைத் தார்வணிகர் காதன் மகளி ராய்ப்பிறந்தார்.3

    அப்போது சிவபிரான் வளையல் வியாபாரியாக அழகுக்கோலத்துடன் வளைகள் விற்றவண்ணம் தெருக்களில் சென்றார். மறைப்பொருளை உரைசெய்த மணிவாயைத் திறந்து, “வளை வாங்குவீர்,” என்று கூறியவரிடம் வணிகர்குல மகளிர் வளை வாங்கச் சென்றனர்.

    மன்னு மறையின் பொருள் உரைத்த மணிவாய் திறந்து வளை கொண்மின்
    என்னும் அளவில் பருவ முகில் இமிழ் இன்னிசை  கேட்டு எழில் மயில்போல்
    துன்னு மணி மேகலை மிழற்றத் தூய வணிகர் குல மகளிர்
    மின்னு மணி மாளிகை நின்றும் வீதி வாயில் புறப்பட்டார்4                                                

    ‘எமக்கு வளை அணிவிப்பீர்,’ எனவும், ‘இது பெரிதாக உள்ளது; சிறியவளை அணிவியும்,’ என்றும், அணிவித்த வளைகளைப் புறம்சென்று உடைத்தெறிந்துவிட்டு வந்து பின்னும் வளை அணிவிக்க வேண்டியும், ஆசையாகக் கைகளை நீட்டி அவர்தொட்டு வளை அணிவிக்க மகிழ்ந்தும், ‘நாளையும் வந்து வளை அணிவிப்பீர்,’ என வேண்டியும் பலவாறாக அவ்வணிக மகளிர் உவகைப்பெருக்கில் வளையல் வியாபாரியிடம் பேசி மகிழ்ந்தனர்.

    பின் நடப்பனவற்றைத் திருவிளையாடற் புராணத்தில் காணவும். அவ்வணிக மகளிர் அனைவரும் ஐயன் கையால் வளையணிவிக்கத் தொடப்பட்டதால் முத்தி அடைந்தனர்.

    பழங்காலத்தில் ஆடவர்கள் மகளிரின் கையைத் தொடுவது குற்றமெனச் சமுதாயம் கருதியது. ஆனால் வளைச்செட்டி பெண்ணின் கையைத் தீண்டுவது குற்றமாகாது. வளையலை வளையல் செட்டி அணிவிக்க, அணிய வேண்டுமென்ற சமுதாய விதியும் ஒருகாலத்தில் வழக்கிலிருந்தது!

    வள்ளிமீது மையல்கொண்ட முருகன் வள்ளியின் கரத்தைத் தீண்டி இன்பமுற நினைத்தான். அதற்கு வழி யாது? வளையல் செட்டி வேடம் கொண்டான்.

    செட்டி வடிவுடன் வள்ளியிடம் சென்றதைத் திருத்தணிகையுலா,

    ‘…………………………பட்டி வள்ளி
    கைவளைய லேற்றி – காலில் வளைந்தேற்றி,
    மைவளையு நெஞ்ச மய லேற்றி- வெய்ய
    இருட்டுவிடி யாமுன் இனத்தவர்கா ணாமல்
    திருட்டுவியா பாரஞ்செய் செட்டி,’5 எனப்பாடுகின்றது.

    முருகன் வள்ளியிடம் நெருங்கச் செட்டி வேடங் கொண்டதை அருணகிரியார்,

    ‘சித்திரப் பொற்குறப் பாவைபக் கம்புணர செட்டியென்
    றெத்திவந் தாடிநிர்த் தங்கள்புரி சிற்சிதம் பொற்புயஞ்
    சேரமுற் றும்புணரு மெங்கள் கோவே’6 எனப்பாடுகின்றார்.

    (சிற்சிதம் – ஞானம்; வள்ளி ஞானத்தவள்)

    மற்றொரு திருப்புகழ்,

    ‘செட்டி யென்றுசிவ காமி தன்பதியில்
    கட்டு செங்கைவளை கூறு மெந்தையிட 
    சித்த முங்குளிர நாதி வண்பொருளை நவில்வோனே’7

    (இத்திருப்புகழ் திருவிளையாடல் புராணச் செய்தியைக் கொண்டது. செட்டி வடிவெடுத்துத் தேவி சிவகாமி (சிவகாமி – தடாதகைப் பிராட்டி) அரசாட்சி செய்த மதுரையில் செவ்விய கையில் வளையல் கட்டுக்களை விலைகூறி விற்ற எந்தை சிவபிரானுடைய உள்ளம் குளிர மூலப்பொருளை உபதேசித்தவனே!)

    இக்கதைகள் வளையலின் பெருமையையும் அதுசார்ந்த அரிய திருவிளையாடல்களையும் உணர்த்தியதனால் இங்கு பகரப்பட்டன.
    ___________________________

    இனி பிள்ளைத்தமிழுக்கு வருவோமா?

    அரசிளங்குமரி சின்னஞ்சிறுமி தடாதகைக்குக் கைநிறையக் கலகலக்கும் சிவப்பு, பச்சை, மஞ்சள்நிறக் கண்ணாடிவளைகளை அணிந்துகொள்ள ஆசை! வளையல் வியாபாரி மூட்டையை அவளுக்காகவே எடுத்து வருவார். ஆறுவயதுச் சிறுமி மீனாட்சியின் கையிலும் அத்தனை தோழிமார் கையிலும், ஏன் அரண்மனையில் உள்ள பெண்டிர் அனைவரின் கையிலும் அவளுடைய ஆசைப்படி அழகழகான வளைகள் ஒலித்துக் கேட்போரை மகிழ்விக்கும். இன்றும் வளையல் வியாபாரி வருகிறார். தோழியர் அவரை அன்போடு அழைத்துப் பாயில் அமரக்கூறி, மீனாட்சிக்கு வளைகள் அணிவிக்க வேண்டுகின்றனர்.

    முக்குறுணிப் பிள்ளையவனை உச்சிமோந்து முத்தமிடும்
    மீனாளின் கையிலணி முத்து வளையல்!
    நெக்குருகிப் பாடிய குருபரர்க்கு நெகிழ்ந்துருகி
    பரிசிலளி பாண்டிய அரசிகை வளையல்!
    அக்குரோணி சேனைகொண்டு அண்ணலொடு போர்தொடுத்த
    அம்மையவள் கைகுலுங்கு மிரத்தின வளையல்!
    பக்குவமாய் வந்துநீரும் பாயதனை விரித்தமர்ந்து
    பாங்கான கைகளுக்குப் பல்வளைகள் சூட்டிடுவீர்!         (1)

                (இது தோழியர் வளையல் வியாபாரியை நோக்கிப் பாடியது!)

    வளையல் வியாபாரியும் அமர்ந்துகொண்டு பட்டுக்கயிற்றில் முடிந்து கொண்டு வந்திருக்கும் கட்டுக்கட்டான வளைகளை அவிழ்த்து மீனாட்சியின் கரத்திற்குப் பொருத்தமானவையும் தங்கநிறத்தில் வேலைப்பாடுகள் செய்யப்பெற்றுள்ளதுமான சிவப்பு, பச்சைநிற வளையல்களைப் பொருத்தமாக அவள் கரங்களில் அணிவித்தவர் அக்கரங்களின் அழகைக் கண்டு தாமும் கவிஞராகவே மாறிப் பாடுகிறார்!

    பந்தும் கழங்குமாடும் பைந்தளிர்க் கரத்தினிற்கு
    பச்சைவண்ணப் பட்டுவளையல்!
    சிந்துர வண்ணக்கைக்கு மின்னும் சிகப்புவளையல்!
    சுடர்மஞ்சள் சொர்ணவளையல்!
    அந்தமில் ஆலவாய் அழகன் பற்றுங்கைக்கு
    ஆடகப்பொன் ஐம்பொன்வளையல்!
    சுந்தரியே நிரந்தரியே எம்மையாள் தடாதகையே
    சூடிடுவாய்நீ அழகுவளையல்!                    (2)

    (தோழியரும் வளையணிவிக்கும் வியாபாரியும் சேர்ந்து பாடும் பாடல்)

    இப்பருவத்தைப் பாடல்களாக்க வேண்டும் என்ற அவாவில் எழுந்த இம்மூன்று பாடல்களையும் அவள் கரங்களையே திருவடிகளாகக் கருதி, பாடல்களை வளையல்களாக்கி அணிவிக்கிறேன்.

                சின்னஞ்சிறு சிவந்தகைகள், சொக்கனுக்கு மணமாலை
                       சூட்டிய செந்தளிர்க் கைகளுக்கு
             கன்னங்கரிய கருகுமணி வளைபொற் கங்கணமும்
                       கருத்துடன் அணிவித்துக் களித்த
             அன்னைகாஞ் சனமாலை பெற்றபேறு பெரிதன்றோ?
                       அங்கயற்கண் இன்னமுதே! ஆருயிரே!
             சொன்னவிப் புன்சொல்லால் செவ்வியவுன் புகழ்மாலை
                       சூட்டிடவே வளையல் சூட்டிடுவேன்!

    (என் புன்மொழிகளையும் வளைகளாக்கி அவள் கரங்களைப் பாதங்களாய்க் கருதிச் சூட்டியது)            

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

    பார்வை நூல்கள்:

    1, 2. சம்பிரதாயப் பாடல்கள்.
    3, 4. பரஞ்சோதி முனிவர், திருவிளையாடல் புராணம், வளையல் விற்ற படலம்.
    5. கந்தப்பையர், திருத்தணிகை உலா.
    6, 7. அருணகிரிநாதர்- திருப்புகழ்


    திருத்தணிகையுலாவில் முருகன் வளையல்செட்டி வடிவில் சென்ற செய்தியையும் திருப்புகழில் முருகன், சிவபிரான் ஆகியோர் செட்டிவடிவங்கொண்ட செய்திகளையும்  மதிப்பிற்குரிய எனது பேராசிரியர், முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி அவர்கள் அளித்து இக்கட்டுரைக்கு மேலும் சுவை சேர்த்ததனை இங்கு நன்றியுடன் பதிவிட விரும்புகிறேன்.

    சித்திரம் வரைந்தவர் எனது நண்பர் திருமதி உபாஸனா கோவிந்தராஜன். இவர் அமெரிக்காவாழ் சென்னைவாசி. சிலகாலம் மென்பொருள் பொறியாளராகப் பணிபுரிந்தார். பின் சித்திரம் வரையும் கலையில் தேர்ச்சி பெற்றார். இந்தியப் புராணங்கள், கதைகள் இவற்றை விளக்கும் சித்திரங்களை வரைவதில் ஆர்வம் உள்ளவர்.

    இந்தக் கட்டுரைக்காகப் பிரத்தியேகமாக, சிறுமி மீனாட்சி ஆசையாக வளைகள் அணிந்துகொள்வதனை அன்னை காஞ்சனமாலை கண்டு களிப்பதனை வரைந்து கொடுத்துள்ளார்.


     

    Share
  • புதிய பிள்ளைப்பருவங்கள் – 1

    புதிய பிள்ளைப்பருவங்கள் – 1

    மீனாட்சி பாலகணேஷ்

    1. கோலம் வரையும் பருவம்

      (பெண்பால் பிள்ளைத்தமிழ்)

    அனைத்துக் குழந்தைகளின் வளர்ச்சியிலும் அழகான சுவையான பல பருவங்களும், நிகழ்வுகளும் உண்டு. இந்தத் தொடரில் என் கருத்தில் தோன்றிய, பாடல் பெறாத ஒருசில பருவங்களை நாம் காணப்போகிறோம். பெரிதளவில் பிள்ளைத்தமிழ் நூல்களை பெண்பாற் புலவர்கள் பாடாமையாலோ என்னவோ, சில அழகான குழந்தைப்பருவத்து நிகழ்வுகள் பாடல்பெறாமலே போய்விட்டன. பெண்பாற் புலவர்களால் பாடப்பட்ட ஓரிரு பிள்ளைத்தமிழ் நூல்களும் இன்றுவரை தேடியும் என் கைக்குக் கிட்டவில்லை.

    பெண்களுக்கும் ஆடவருக்கும் குழந்தையின் ஒரு செயலைக் காணும்போழ்தில் தோன்றும் கற்பனைகள் வேறுபடும் அல்லவா? மேலும் தாய்மாரே குழந்தையுடன் பெரும்பொழுதுகளைக் கழிப்பதனால், அவர்கள் தத்தம் குழந்தைகளுடன் செய்து மகிழும் செயல்களும் பாடப்பட வேண்டும் அல்லவா?

    ஆகவே இவற்றைப் பதிவுசெய்யலாம் எனும் ஆர்வத்தினால் எழுந்த கட்டுரைகள் இவை. இக்கட்டுரையைப் பேராசிரியர் முனைவர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்களுக்கு அனுப்பிவைத்து, அவர் பார்த்தபின்பே பதிப்பிற்கு அனுப்புகிறேன். பேராசிரியர் ஐயா, இனி இப்பருவங்களையும் பிள்ளைத்தமிழ் பாடுவோர் தமது நூல்களில் சேர்த்துப் பாடப் பரிந்துரைக்கலாம் எனத் தமது கருத்தைக் கூறியுள்ளார்.

                                                   —————————————

    ஆண்டாள் பாடியுள்ள நாச்சியார் திருமொழியில், ‘தையொரு திங்களும்,’ எனத்துவங்கும் பாசுரத்தொகுப்பில் கோலம் வரைவதனைப் பற்றிக் கூறுகிறாள்.

    தை மாதம் முழுவதும் (எல்லா நாட்களிலும்) கண்ணபிரான் வரும் இடம் முழுவதிலும், தரையைத் தூய்மை செய்து, அலங்கரித்து, அழகாக உள்ள மண்டலவடிவில் (வட்டவடிவில்) கோலம் இட்டு, அவன் வரும்வழியினை அழகுபடுத்தி வைத்தேன்,’ என்கிறாள். ‘கண்ணனோடு என்னைச் சேர்த்துவை,’ என அனங்கனான காமவேளையும் அவன் தம்பியையும் வேண்டுவன இப்பாடல்கள்.

    ‘தையொரு திங்களும் தரைவிளக்கித்
             தண்மண் டலமிட்டு மாசிமுன்னாள்
    ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
             …………………………………..‘ என்பது பாடல்.

    —————————-&————————-

    இனி, பிள்ளைத்தமிழில் எவ்வாறு இப்பாடல்களை அமைக்கலாம் எனக் காணலாம்.

    அதிகாலை நேரத்தில் வீட்டின்முன் பசுஞ்சாண நீர்தெளித்துக் கூட்டி, கோலமாவினால் அழகான கோலங்களை வரைந்து வைப்பது நம் மிகப்பழைய வழக்கம். பெண்குழந்தைகள் அரிசிமாவையோ அல்லது வெண்கற்களையும் நுண்ணிய வெண்மணலையும் பொடித்து, இடித்துச் சலித்துச் செய்த கோலப்பொடியையோ கொண்டு சாணநீரால் தெளித்துக் கூட்டிய வீட்டு முன்வாசலில் கோலமிடுவதில் ஐந்தாறு வயது முதலே ஆர்வம் காட்டுவார்கள்.

    அவ்வாறு இச்சிறுபெண், பத்துவயதுப் பைங்கிளி, வட்டிலில் கோலமாவை எடுத்துவந்து அன்னை அருகிருக்கப் பிஞ்சுவிரல்களால் மாவினை எடுத்து முதலில் புள்ளிகளை வைக்கின்றாள். தாய் அவள் வயதுக்கேற்ற  சிறிய கோலங்களைக் கற்றுக் கொடுத்துள்ளாள். இவளோ தாயும் அறியாமல் பாட்டியிடமும் மற்றவர்களிடமும் தன் திறமைக்கும் மிஞ்சிய பெரிய கோலங்களை வரையக் கற்றுக் கொண்டுள்ளாள்.

    அதுவும் மகளிர் விரும்பும் மார்கழிமாதம் வந்துவிட்டால் போதும்! எங்கு நோக்கினும் தெருவெங்கும் கோலங்கள்! விதவிதமான கற்பனைகள்! ஓரிடத்தில் ஒரு மங்கை அவளுடைய இல்லத்தின் முன்பு நீராழி மண்டபம் கோலம் வரைகின்றாள். புள்ளிகளைக் கணக்கிட்டு வைத்து, இரு விரல்களிடையே அள்ளிய வெண்மையான கோலமாவை அழகான இழைகளாக்கி அப்புள்ளிகளை இணைத்தும் வளைத்தும் அவளிடும் கோலம் கண்ணுக்கு விருந்தாகிறது.

    ‘எதற்காக இன்று இவ்வளவு பெரிய கோலம்? மார்கழிமாதம் கூட இல்லையே!’ எனப் பெண்டிர் வியக்கின்றனர். அவள் இழைக்கும், வரையும் கோலத்தின் அழகைக் காண பெரியவர்களும் சிறுவர்களுமாக பெண்கள் கூட்டம். அவள் கோலம்வரையும் நளினமான அழகைக்காணப் பல பாட்டிமார்கள்! சாட்டைபோலவந்து முன்னே விழும் அழகான கருநாகம்போலும் பின்னல். அதனை பின்னால் தள்ளிக் கொண்டபடியே மும்முரமாகக் குனிந்து புள்ளிவைப்பதிலும் கோலத்தில் இழைகளைச் சேர்ப்பதிலும் முனைந்திருக்கிறாள்.

    “மங்கையை உள்ளே அழைத்துக்கொண்டுபோய் சுற்றிப்போடடி அம்மா!” என ஒரு முதியவள் ‘அறம்வளர்க்கும் மங்கை’ எனப்பெயர் கொண்ட அப்பெண்ணின் தாயிடம் கரிசனத்துடன் கூறுகிறாள். அவளருகேயும் வந்து, “மங்கை, இங்குவா,”என அவளை அழைத்த பக்கத்து வீட்டம்மாள், உரிமையோடு அவளுடைய நீண்ட பின்னலைப் பிடித்துச் சுற்றிச் சுருட்டி ஒரு கொண்டையாக்கி விடுகிறாள். அவளைப் பார்த்துக் கன்னங்குழியப் புன்னகைக்கும் மங்கையை ஆசைதீரக் கன்னத்தை வழித்து திருஷ்டி எடுத்து, விரல்களைச் சொடுக்கிக் கொள்கிறாள். அறம்வளர்க்கும்மங்கை ஊரில் எல்லாருக்கும் செல்லப்பெண்!

    இன்று பஞ்சநதீஸ்வரர் எனும் ஐயாறப்பர் திருவீதி ஊர்வலம் வரப்போகிறாராம். கோவிலும் அதனைச் சூழ்ந்த தெருக்களும் அமளிதுமளிப்படுகின்றன. தெருக்களில் நீர் தெளிக்கப்பட்டு, கோலங்களிழைக்கப்படுகின்றன. மங்கையின் அண்ணன் மணிவண்ணனும் அவர்கள் இல்லத்தின் முன்பு அழகான தோரணங்களைக் கட்டிவைத்துள்ளான். ஐயாறப்பர் வலம்வரும் பிரதான வீதியிலன்றோ அவர்கள் இல்லம் அமைந்துள்ளது!

    கோலமிழைக்கும் இப்பெண் யார்? அந்த அறம்வளர்த்த நாயகியே சிறுபெண்ணாக வந்துதித்தாளோ?கண்டு மயங்குகிறோம்!

    விநாயகப்பெருமான், மயிலேறி உலவும் முருகன், ஆலமரத்தடி அமர்ந்து மௌனகுருவாகி உபதேசிக்கும் அண்ணல் சிவபிரான், மாலவனாம் மாயவனாகிய திருமால் அனைவரும் மனம் மகிழும் மங்கை இந்த அறம்வளர்க்கும் நங்கை.

    அத்தன் சிவபிரானளித்த இருநாழி நெல்லினைக்கொண்டு முப்பத்திரண்டு அறங்களையும் சலியாது செய்து உலக மக்களைப் புரப்பவள் அறம்வளர்த்த நாயகி அம்மை!

    நாதசுரம் எனும் மங்கள வாத்தியத்தினின்று எழும் இன்னிசையுடனும், பின்னால் மறையோதும் அந்தணர்கள் வேதவொலி முழக்கி வர, வீதித் திருவுலா வருகின்ற ஐயாறப்பனின் வரவுக்காக, அனைவரும்  தத்தம் மனைகள்முன்பு, நீர்தெளித்து, அழகான பெரிய  கோலங்களை வரைந்து அவன் வருகையை ஆவலாக எதிர்நோக்கியுள்ளனர்.

    சிறுபெண்ணான அன்னையே! அவனை வரவேற்க நீயும் அழகழகான கோலங்களை இழைத்தருளுக.

    குறும்பும் உற்சாகமும், மகிழ்வும் மலர்ச்சியும், அழகும் நளினமும் கூத்தாடும் இளம்சிறுமியான அன்னையே! அறம்வளர்க்கும் நாயகியே! எம்மை ஆண்டருள்கவே!

    இதோ எமது எளிய காணிக்கை உன் திருவடிகளுக்குத் தாயே!

    ஞாலமுதல் வனாவேழமுகத் தனுநீல மயிலேறி
    உலவும் சமர்த்தனு
    மாலமரத்தடி யில்நாளும மர்ந்து அருள்மழை
    வழங்கிடு மண்ணலு
    மாலவன் மாயவனு முளமகிழு மங்கையே
    அறம்வளர்க்கு நாயகியே!
    கோலமயில் நீயுந் தோழியருட னிணைந்து
    கோலம்வரைந் திடுவாயே! (1)

    நாழியிரண்டு நெல்லளித்து நல்லறம்நீ
    ஆற்றுகென நாதன்பணித்திட
    ஆழிசூழகில மெலாந்தாவி யணைத்தரு
    ளுந்தேவியான வாதிசத்திதாயும்நீ
    வாழிவளமுட னெண்னான்கு அறமியற்றி
    வழுவாதுவர மருளுந்தேவி
    கோழிகூவுங் காலைப்போதில் கன்னியருடன்
    கூடிக்கோலமி ழைத்திடுவாயே! (2)

    நாதசுர முழங்க கீதவொலி யெழும்ப
    வேதமறை யொலிக்கவுன்       
    நாதனை யாறப்பன் வீதிவல(ம்) வருங்கால்
    காதலுடன் காந்தள்       
    போதனைய கையால் கோலப்பொ டியதனை
    யள்ளிப்புள்ளி களிட்டு
    மாதரசே! மனமிக மகிழ்ந்து மாடக்குள
    சித்திரமாம் கோலமிடுவாயே! (3)

    (இவை திருஐயாறு அறம்வளர்த்த நாயகி மீது இயற்றப்பட்ட பாடல்கள்)

    சித்திரம் வரைந்தது: டாக்டர் சுப்பையா புகழேந்தி.

    (புதிய பிள்ளைப்பருவங்கள் தொடரும்)

    Share