வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-38

0

தி. இரா. மீனா

ஹடப்பத ரேச்சண்ணா

தாம்பூலப் பெட்டி சுமக்கும் காயகம் இவருடையது. கல்யாண் புரட்சியின் போது சரணரின் கூட்டத்தோடு உளுவி வரை சென்றவர். ’நிக்களங்க கூடல சங்கம தேவா’ இவரது முத்திரையாகும்.

“பக்தன் மும்மலங்களில் மனம் வைப்பானோ?
துறவி இந்திரியத்தில் ஈடுபட்டு மீண்டும் துறவியாவானோ?
இவ்விரண்டின் எண்ணம் உறுதிப்படுமானால்
மலரின் மணம்போல் ,கண்ணாடியின் பிம்பம் போல்
எரியும் கற்பூரத்தின் நிலை போலாம்
நிக்களங்க கூடலசென்ன சங்கம தேவனான அடியான்.“

ஹாதரகாயகத மாரய்யனின் புண்ணியஸ்திரி கங்கம்மா 

மாரய்யனின் மனைவி இவர். ’கங்கேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

“காயகம் எது செய்தாலும் உடலொன்றே ஐயனே
உறுதி எதுவாயினும் ஒன்றே ஐயனே
அபாயம் தப்பினால் இறப்பில்லை
உறுதி தப்பினால் இணைதல் சாத்தியமில்லை
காகம் கோகிலம் போல இணைந்தால் கொடிய நரகாம்
கங்கேஸ்வர இலிங்கத்தில்“

ஹாவினநாள கல்லய்யா

பொற்கொல்லர் இவரது காயகம். கல்யாண் புரட்சியில் பங்கு பெற்றவர். ’கல்லேஸ்வரா’ இவரது முத்திரையாகும்.

1. “வாழ்க்கை ஒவ்வொரு தினத்தையும் அப்படியே ஏற்கிறது.
ஐயனே யானென்று உனை நினைப்பேன் தொழுவேன்
ஒரே எண்ணத்தில் உனை நினைப்பின்
நாளையை விட இன்று நல்லது
மகாலிங்க கல்லேஸ்வரனே.’

2. “பேராசையென்பது பாவம், வேறு பாவங்கள் இல்லை ஐயன!
பக்குவமென்பது பரமசுகம் உலகில் வேறில்லை ஐயனே!
இகபரத்தின் ஆசையின்றேல் சிவயோகம்,
மகாலிங்க கல்லேஸ்வரன் அறிவான், சித்தராமனின் மேன்மையை”

3. “உணவின் இன்பமும், புலன்களுமுள்ள வரையில்
உம்மை நினைப்பது பொய்யாம் ஐயனே,
உம்மை வழிபடுவது பொய்யாம் ஐயனே,
என் பசிக்குத் தாங்களே உணவானால்
உம்மை நினைப்பது உறுதி காணாய்
மகாலிங்க கல்லேஸ்வரனே“

4. “குருவுண்டு இலிங்கமுண்டு ஜங்கமருண்டு புனிதநீர் பிரசாதமுண்டு
இருந்தும், துன்பத்திலுள்ளேன் இயல்பான பக்தி வசமாகாததால்
மகாலிங்க கல்லேஸ்வரனே
நிஜ சத்பாவ, சத்திய சரணர் மகான்களின் நட்பில்லாததால்
இவர்தம் வாய்ப்பின் மர்மமறியாமல்
மீண்டும் உழல்கிறேன் துன்பத்தில்“

5. “வள்ளலானாலென்ன அவன் கேட்டதனைத்தும் அறியக் கூடாது
போர்க்களத்து தீரனாயினென்ன வாள் மழுங்கியது அறியக் கூடாது
நட்பாயிருந்தென்ன பிரிந்ததை அறியக் கூடாது
தங்கக் கொடியானால் என்ன உரைத்ததை அறியக் கூடாது
மகாலிங்க கல்லேஸ்வரனின் மேன்மையறியின்
சம்சார சாகரம் தாண்டியதை அறியக் கூடாது“

6. “வரவில்லை, ஏதுக்கய்யா? உன் வருகையை எதிர்பார்த்திருந்தேன்.
அருகில் வரவில்லை, ஏதுக்கய்யா? அருகாமையை எதிர்பார்த்திருந்தேன்.
காட்டவில்லை, ஏதுக்கய்யா? உன் இலிங்கவடிவமாம் திருஞானமாம்.
பூசைக்குக் கொள்ளும் போதன்றி என் மனதுள் வராததேன்
மகாலிங்க கல்லேஸ்வரனே?”

7. “சரணர் உறவு அறிந்தபின்
குலச்செருக்கு பிடிவாதச் செருக்கு கிடையாது பாரய்யனே!
இலிங்க உறவறிந்தபின்
ஒழுக்க உறவில்லை பாரய்யனே!
பிரசாத உறவறிந்தபின்
இகம்பரமென்பதில்லை பாரய்யனே!
மகாலிங்க கல்லேஸ்வரனே இம்மூவகை உறவுக்கு
இதுவே அடையாளம்“

ஹூஞ்சின காளகத தாசய்யா

சேவல் சண்டையை ஏற்பாடு செய்வதுதான் இவரது காயகம். ’சந்திரசூடேஸ்வர லிங்கா’ இவரது முத்திரையாகும்.

“குஞ்சு தோற்றால் தாங்குவேன் ,
விரதம் பொய்த்தவரைப் பாரேன்,
சந்திர சூடேஸ்வர இலிங்கமே. “

ஹெண்டத மாரய்யா

கள் விற்கும் தொழிலைச் செய்து வந்த இவர் சரணராக மாறியவர். ’தர்மேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும்.

“மண்ணெனும் குடத்தின் நடுவே
பொன்னெனும் கள் உற்பத்தியானது
பெண்ணெனும் வட்டிலில் பருக போதை தலைக்கேறியது
இந்தப் போதையில் மூழ்கியோர் அனைவரையும்
எப்படி மிகவும் உயர்ந்தோர்கள் என்பது ?
பக்தி பற்றற்றவன் என்பது இப்பக்கமே எஞ்சியது
தர்மேஸ்வர இலிங்கத்தை எட்டவில்லை.”

 [தொடரும்]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.