Tag: எம். ஜெயராம சர்மா

  •        ஏன் இயற்கை அழிக்கின்றீர் !

     

                  எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     

     

    மரம் அழிக்கும் மானிடரே

    மரம்  வளர்க்க  வாருங்கள்

    மரம் அழித்து  நிற்பதனால்

    மரத்ததுவா உங்கள்  மனம்

    நிலம்  காக்கும்  மரத்தையெலாம்

    நிர்மூலம் ஆக்கி  நின்றால்

    நிச்சயமாய் இயற்கை அன்னை

    நிம்மதியை இழந்து  நிற்பாள்  !

     

     

    வயல்  நிலங்கள் எல்லாமே

    மாடி  மனை  ஆகிறது

    வளம் விழுங்கும் அரக்கர்களாய்

    மனிதர் பலர் மாறுகிறார்

    தொழிற்சாலை எனும் உருவில்

    தூசு மழை  குவிகிறது

    தூய  நீரை தேடிநின்று

    துவழ்கின்றார் மக்கள் எலாம் !

     

    எடுத்து  நிற்கும்  செயலாலே

    இயற்கை வளம் குலைகிறது

    இயற்கை எனும்  அமைப்புதான்

    இவ்  உலகின் அரணாகும்

    இயற்கை எனும் கவசத்தை

    எடுத்துப்  பிய்த்து எறிவதனால்

    இயற்கை அன்னை கோபமது

    எமைத்  தாக்கி   நிற்கிறதே  !

     

    ஓயாமல்  மழை  பெய்து

    ஒரு பக்கம் அழிகிறது

    பேயாகக் காற்று  வந்து

    பேர் அழிவைச்  செய்கிறது

    எதிர்பாரா தீ  வந்து

    இடர் கொடுத்து நிற்கிறது

    இவை பார்த்தும் மானிடரே

    ஏன் இயற்கை அழிக்கின்றீர் !

    Share
  •      கடுஞ்சட்டம் வரவேண்டும் !

     

                ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா 

     

    கர்ப்பிணிகள் என்றுமவர்

    கண்களுக்குத் தெரிவதில்லை

    கண்ணிழந்தோர் என்பதையும்

    கருத்திலவர் கொள்வதில்லை

    புலனிழந்து இருக்கின்றார்

    என்றுமவர் பார்ப்பதில்லை

    போகமதை மனமிருத்தி

    பொறுக்கித்தனம் செய்கின்றார் !

     

    ஏழை பணக்காரரென்று

    எதுவுமவர் பார்ப்பதில்லை

    வாழ்வைத்தொடும் குருத்துக்களை

    வதைக்கவவர் தயங்கவில்லை

    பட்டினியாய் கிடக்கின்ற

    பரதேசி ஆனாலும்

    கட்டவிழ்த்து விட்டிடுவார்

    காமுகத்தின் கோரமதை !

     

    வயதுகூடப் பார்ப்பதில்லை

    வக்கிரங்கள் செய்திடுவார்

    சபலமனம் கொண்டதனால்

    சதிராடி நின்றிடுவார்

    கற்பழிப்புச் செய்வதிலே

    கருத்தாக இருக்குமவர்

    கழுவேற்றி வதைப்பதற்கு

    கடுஞ்சட்டம் வரவேண்டும் !

     

    கற்பழிக்கும்   கயவருக்கு

    காருண்யம் காட்டாதீர்

    நட்டநடு வீதிவைத்து

    சுட்டிடுங்கள்  தீயாலே

    வெட்டவெளி தனில்விட்டு

    விட்டெறிங்கள் கல்மாரி

    கெட்டவர் அழிவதற்கு

    இயற்றிடுவோம் கடுஞ்சட்டம் !

    Share
  • கலைஞருக்கு ஒரு இரங்கற்பா

     

     

    தமிழன்னை தவிக்கின்றாள் !

    ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா


    தமிழ்த்தாயின் தவப் புதல்வா
    தானாக எழுச்சி பெற்றாய்
    அமிழ்தான தமிழ் மொழியை
    ஆசை கொண்டு அரவணைத்தாய்
    தமிழ் முரசாய் நீயிருந்தாய்
    தமிழெங்கும் முழங்கி நின்றாய்
    தவிக்க விட்டுப் போனதெங்கே
    தமிழ் அன்னை தவிக்கின்றாள் !

    சங்கத் தமிழ் இலக்கியத்தை
    தானாகக் கற்று நின்றாய்
    பொங்கிவந்த தமிழ் உணர்வால்
    பொழிந்து நின்றாய் பலவுரைகள்
    ஒல்காப் புகழ் தொல்காப்பியத்தை
    உள்ளம் அதால் நேசித்தாய்
    உனைப் பிரிந்து வாடுகின்றார்
    ஓலம் அது கேட்கலையா !

    வள்ளுவத்தை வாழ்வு எல்லாம்
    மனம் முழுக்க நிறைத்தாயே
    வள்ளுவத்தை பலர் அறிய
    வரைந்தாய் நீ ஓவியத்தை
    வள்ளுவர்க்கு சிலை எடுத்தாய்
    வள்ளுவர்க்கு உரு கொடுத்தாய்
    தெள்ளு தமிழ் அறிவுடையாய்
    தேம்பி நின்று அழுகின்றோம் !

    வெள்ளித்திரை உன் வரவால்
    வீறு நடை போட்டதன்றோ
    அள்ளிவந்த உன் தமிழை
    ஆர்வமுடன் பலர் ரசித்தார்
    எதுகை மோனைத் தமிழாலே
    எல்லோரும் உனைப் பார்த்தார்
    எல்லோரும் ஏங்கி நிற்க
    எங்குதான் சென்று விட்டீர் !

    சட்ட சபை வரலாற்றில்

    சாதனைகள் பல படைத்தாய்
    திட்டம் இட்டுச் செயலாற்றி
    தீரனாய் உயர்ந்து நின்றாய்
    கட்டழகு மீசை உடன்
    கறுப்பு நிறக் கண்ணாடி
    கலைஞர் அதை அடையாளம்
    காணாமல் போன தெங்கே !

    மு.க எனும் எழுத்தை
    முணு முணுக்கும் மக்களெலாம்
    முத்தமிழின் சொத்து என
    மு.க வை மதிக்கின்றார்
    மு.க. வின் துணிச்சலுக்கு
    மு.க தான் சமமாகும்
    மு.க வை காணாமக்கள்
    மூச் சொழிந்து நிற்கின்றார் !

    Share
  • கங்காரு நாட்டின் கண்ணியம்

    ம. ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா
    முன்னாள் தமிழ் கல்வி இயக்குநர்
     M.Phil , Dip.in Ed , Dip.in.Soc , SLEAS 

     கங்காருநாடு என அழைக்கப்படுகின்ற அவுஸ்திரேலியா 200 வருட வரலாற்றினைக் கொண்டது, இங்கு பல நாட்டினர், பல மொழிகளைப் பேசுபவர்கள், பல இன கலாசார பண்பாடுகளைக் கொண்டவர்கள் என 165 இனமக்களை அரவணைத்து அவர்களுக்கு அமைதியான ஆறுதலான வாழ்வினையும் வழங்கிக் கங்காருநாடு கண்ணியம் மிக்க நாடாக உலகில் விளங்குகிறதுஎன்பது பெருமைக்குரிய விஷயமாகும்.ஜனநாயகத்தை நூறுசதவிகிதம் நிலைநாட்டி வெற்றியுடன் திகழும்  கண்ணியமும் இங்கு இருக்கிறது என்பது குறிப்பிடப்படவேண்டிய தொன்றேயாகும்.

       இந்த நாட்டின் ஆதிக்குடிகள் ” அபோர்ஜினிஸ் ” என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் கங்காரு மண்ணுக்கு உரியவர்கள் ஆவர். ஆனால் பிரித்தானிய ஆக்கிரமிப்பால் நிலை மாறி இப்போது கங்காரு மண்ணின் சொந்தக்காரர்  வெள்ளையர் ஆகிவிட்டார்கள். என்றாலும் ஆதிக்குடிகள் வரலாறு கங்காரு மண்ணுடன் ஒட்டியே இருக்கிறது.அவர்களின் நிறம், அவர்களின் மொழியில் காணப்படும் சில சொற்கள்,அவர்களின் விழாக்கால கொண்டாட்ட அலங்காரம்இவற்றை யெல்லாம் உற்று நோக்கும் பொழுது தமிழர்களின் சாயல் அவர்கள்டத்துப் படிந்திருப்பதாகக் கருத முடிகிறது.இதனாலத்தான் தமிழர்களையும் கங்காரு நாடு கைகொடுத்து வரவேற்றதோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.

        பல்லின கலாசாரத்தின் தொட்டிலாகக் கங்காரு நாடு திகழ்கிறது.மதம் கடந்தமக்கள் பலர் இங்கு இருப்பதனால் மதமென்னும் குணத்தை இங்கு காண்பது அரிதென்றே சொல்லலாம்.அரசாங்கம் மதம்பற்றி எதுவுமே பேசுவதில்லை.அதே வேளை வழிபடும் சுதந்திரத்திலும் தலையிடுவதும் இல்லை.விரும்பியவர்கள் விரும்பியபடி தங்கள் சமயவழிபாடுகளை நிகழ்த்தும் உரிமையை இந்த நாடு வழங்கியிருக்கிறது.  இதனால்  வழிபாட்டில் மக்கள் தாம்விரும்பிய வாறு ஈடுபடும்முழுச் சுதந்திரம் இங்கு காணப்படுகிறது.இதனால்த்தான்  அவுஸ்திரேலிய மாநிலங்களில் பல இந்துக் கோவில்கள் எழுச்சிபெற்று இருக்கின்றன.    படிக்கும் பாடசாலைகளிலும் மதம்பற்றிப் பேசப்படுவதில்லை.ஆனால் கிறிஸ்தவ, இஸ்லாமியப் பாடசாலைகளில் அவரவர் மதக்கல்வி ஊட்டப்படுவதற்கும் எந்தவிதத் தடையும் போடப்படுவதும் இல்லை.அவுஸ்திரேலியர்களாக இருக்கின்றவர்கள் தங்களின் பெயர்களை கிறிஸ்தவப் பெயராக வைத்திருந்தும் அவர்கள் தாங்கள்எந்தமதம் என்று சொல்கிக்கொள்வதும் இல்லை.அதைப்பற்றி சிந்திப்பதும் இல்லை. இதனால் மதம் என்னும் பெயரால் இங்கு எந்தவித சிக்கல்களோ மோதல்களோ ஏற்படுவதே இல்லை.

         பல்லின கலாசார நாடாக விளங்குகின்ற காரணத்தல் கறுப்பு வெள்ளை என்றுபார்க்கும் குறுகிய நோக்கும் இங்கு இல்லை என்றே கூறலாம். இதனால் ஆசியநாட்டவரோ ஆபிரிக்க நாட்டவரோ அமைதியாக ஆறுதலாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் எனலாம்.மனிமனிதனை மனிதனாக மதிக்கும் பண்பு இந்த நாட்டின் முக்கிய பண்பாடாக விளங்குகிறது. அரசியல் பிரமுகர்கள் கூட எதுவித ஆடம்பரமும் இன்றி சாதாரண மக்கள் போன்றே சமூக நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவார்கள்.மந்திரியாக இருந்தாலும் கடைகளில் பொருட்களை வாங்கினால் அதற்குரிய பணத்தைக் கொடுத்தே வாங்குவார்.மந்திரிக்கென்று தனியான சலுகைகள் கிடையாது.அவரும் சாதாரண பிரசையாகவே நடந்துகொள்ளும் முறையானது ஜனநாயகத்தின் உயிர்துடிப்பினையே வெளிப்படுத்தி நிற்கிறது எனலாம்.

          முன்னேற விரும்பும் யாவருக்கும் இந்த நாடு நூறு சதவிகித ஒத்துழைப்பைவழங்கிக் கொண்டிருக்கிறது.விரும்பியதைப் படிக்கலாம்.விரும்பிய தொழிலைச் செய்யலாம்.படிப்பதற்கு வயது இங்கு ஒரு தடையில்லை.எந்த வயதினரும் விரும்பியதைப் படிக்கும் வசதி இங்கு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது.

        வேலைசெய்யமுடியாதவர்எனக்கணிக்கப்பட்டவர்கள்,வயதுவந்தவர்கள், வேலையினை இழந்தவர்கள்.  யாவருக்கும் அவர்கள் அன்றாடம் வாழும் வகைக்கு

    ஏற்ற பண உதவிகளை இந்தநாடு சிறப்பாக வழங்கியும் வருகிறது. மூத்தோருக்குப்பல சலுகைகளையும் கொடுத்து வருகிறது.பெண்களுக்கு மிகச்சிறந்த பாதுகாப்பு இந்தநாட்டில் கிடைக்கிறது.  இந்த நாட்டுக்கும்வந்த தமிழர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றுதான் சொல்ல  வேண்டும்.இந்த நாடு பல்லின கலாசாரத்தைப் பேணுவதால் தமிழர்தம் பண்பாடு கலசாரங்களுக்கு மதிப்பளித்து அவர்களின் சமூக அந்தஸ்த்தைக் காப்பாற்றிக் கொள்ள சர்வ சுதந்திரமும் வழங்கி நிற்கிறது என்பது மிகவும் கவனிக்கப் படவேண்டிய விஷயமாகும்.

       தமிழை அரசாங்க அறிவித்தல்களில் கூட இந்தநாடு இடம் பெறச் செய்திருக்கிறது.தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் கூட தமது கருமங்களை ஆற்றுவதற்கு மொழிமாற்றுச் சேவையினையும் இலவசமாகக் கொடுத்து உதவி நிற்கிறது. தமிழ் அமைப்புகளுக்கு பண உதவிகளை வழங்குகிறது.தமிழ்ச் சங்கங்களின் விழாக்ககளுக்கு குறிப்பிட்டளவு பண உதவிகளை வழங்கி வருவதும் குறிப்பிடத்தக்கதே.

         கங்காரு நாட்டில் தேர்தலில் இந்தநாட்டின் பிரசையாகிவிட்ட எவருமே வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு வழங்கப் பட்டிருக்கிறது.இதனால் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழர்கள் கலந்து வெற்றியீட்டி அரசியலில் கலந்து சேவையாற்றும் வாய்ப்பும் இங்கு வழங்கப்பட்டிருக்கிறது.

          இந்தநாட்டில் இருந்து படித்து தொழில் பார்க்க ஆங்கிலம் அவசியம் என்பதனால்ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறது.ஆனால் அதே வேளை சொந்த மொழியை பண்பாட்டை விட்டுவிடத்தான் வேண்டும் என்னும் கட்டாயம் இந்த நாட்டிலில்லை.இது இங்கு வந்த யாவருக்கும் பெரும் வரப்பிரசாதம் என்றுதானே எண்ணவேண்டும்.

       இதனால் தமிழ் மொழி அரசாங்கத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கிறது.அவுஸ்திரேலிய அரசின் மொழிக்கொள்கையானது அவுஸ்திரேலியாவில் ஆங்கிலமும் பிற மொழிகளும் வளர பெருந்துணையாய் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. 1980ஆம் ஆண்டுகளில்அவுஸ்திரேலியாவுக்கென்று ஒரு மொழிக்கொள்கை தேவை என்ற நோக்குடன் அரசின் மொழிக்கொள்கையை நடுவண் அரசு நான்கு முக்கிய கோட்பாடுகளுடன்உருவாக்கி , தேசிய அளவில் அதை ஒழுங்கு படுத்தியது.அதில் ஆங்கில மற்ற மொழிகளைக் காத்தல்,  மற்ற மொழிகளிலும் அரசியல் சேவைகள் கிடைக்கப் பண்ணுதல், இரண்டாவது மொழி கற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துதல். இதன்படி  1987 ஆம் அவுஸ்திரேலியாவின் தேசிய மொழிக் கொள்கை நடு வண் அரசால் அங்கீகரிக்கப்பட்டது. இக்கொள்ளை அங்கீகரிக்கப் பட்டதன் மூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் இப்படி ஒரு பன் மொழிக் கொள்கையை வகுத்த முதலாவது நாடாக அவுஸ்திரேலியா விளங்குகிறது என்பது இந்தநாட்டின் கண்ணியமானஒரு செயற்பாடாக அமைகிறதல்லவா ?

        சில நாடுகளில் தங்கள் தாய் மொழியில் பேசவே பயப்படுகின்றனர். உதாரணமாக இலங்கையின் தலைநகரில் வாழும் தமிழர்மக்கள் வெளியிடங்களில் கூடியளவு தமிழில் பேசுவதை தவிக்கின்றார்கள்.காரணம் அங்குள்ள பெரும்பான்மை இனத்தவர் தங்களை இனங்கண்டு விடுவார்கள் என்னும் பயத்தினாலே. அப்படி  இனங்காணப்பட்டால் தமக்குப் பாதுகாப்பு இல்லாமை வந்து விடலாம் என்று இன்றளவும் அஞ்சும் நிலை காணப்படுகிறது.

      ஆனால் கங்காரு மண்ணில் மட்டும் இந்தப் பயத்துக்கு இடமே இல்லை.வீட்டிலோ அல்லது தெரிவிலோ வேலைசெய்யும் இடத்திலோ போக்குவரவு செய்யும் பஸ்சிலோ புகைவண்டியிலோ அல்லது சந்தைகளிலோ விமான நிலையத்திலோ எங்கு வேண்டுமானாலும் இன்பத் தமிழில் இனிமையாகப் பேசுக் கூடிய சுகம் இந்த நாட்டில் இருக்கிறது.அந்த அளவு வேற்று மொழிக்கும் அவர்களது பண்பாடுகளுக்கும் கெளரவம் வழங்கும் கண்ணியம் மிகவும் தாராளமாக இங்கு இருக்கிறது என்பதை யாவரும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.

       இதனால்த்தான் தமிழ்விழாக்களையும், தமிழ் நூல்கள் வெளயீடுகளையும், இசை, நடன அரங்கேற்றங்களையும் , தமிழ்ப் பத்திரிகைகளையும் ,தமிழ்ச் சங்கங்களையும் அமைத்து தமிழர்கள் தங்கள் சுயத்தினத் தொலைக்காமல் கங்காரு நாட்டில் வாழ முடிகிறது என்றால் அதனை கங்காரு நாட்டின் கண்ணியம் என்று போற்றுவது பொருத்தமாக இருக்கிறதல்லவா !

    Share
  • நரகமதைச் சுமந்து நிற்பாள் !

    (எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா)

    பாரினிலே  பெரும்   படைப்பாய்
    பரிணமித்த படைப்பு  என்றால்
    பாங்கான  பெண் படைப்பே
    ஆகும் எனக்  கண்டிடலாம்
    அப்படைப்பை பிரம்ம  தேவன்
    ஆக்கிவிட  எடுத்த  நாள்
    அப்பிரமன் படைப்பு  அதற்கே
    அதிக சவால் ஆகிருக்கும் !

    அழகாக  முகம் அமைக்க
    அதிக  நாள்   ஆகிருக்கும்
    அன்பு பாசம் நேசம்வைக்க
    அதற்கும் நாள் எடுத்திருக்கும்
    பொறுமை எனும் நகையணிய
    வெகு நாளே வந்திருக்கும்
    பெண்மை அங்கே உருவாக
    பிரம்ம தேவன் களைத்திருப்பான்  !

    கருவறையை உள்ளே வைத்தான்
    கருணைதனை நிறைய வைத்தான்
    அருமை நிறை அன்னையென
    அவள் படைப்பை அளித்தானே
    வருகின்ற துயரம் எலாம்
    மனம் ஏற்க அவள்படைப்பை
    மாண்பு நிறை படைப்பாக
    படைத்து விட்டான் பிரமனவன்  !

    தங்கையென பெயர் பெறுவாள்
    தமக்கை என மாறிடுவாள்
    தன்னிகரே இல்லை எனும்
    தாயாக அவள் இருப்பாள்
    மங்கலமே அவள் ஆவாள்
    வருவோர்க்கு உணவு அளிப்பாள்
    எங்குமே அவள் தேவை
    எவர்க்கும் நிகர் இல்லையன்றோ !

    பிள்ளைபெறும் பெரும் பொறுப்பை
    பிரம்ம தேவன் கொடுத்துள்ளான்
    பேணி அவள் வளர்த்துவிட
    பெரும் பாடு பட்டிடுவாள்
    வளரும் பிள்ளை வாழ்வளிக்கும்
    என்று அவள் வளர்ப்பதில்லை
    பிள்ளை வாழ்வு மனமெண்ணி
    பெருங் கனவே கண்டுநிற்பாள்  !

    கவலை  எல்லாம்  உள்வாங்கி
    கண்  நீரால்  கரைத்திடுவாள்
    கடும் பசியே வந்திடினும்
    காட்டாமல் அவள் இருப்பாள்
    சுடு சொற்கள் கேட்டாலும்
    சுகம் என்றே எடுத்துநிற்பாள்
    சொர்க்கம் என நினைத்தவளும்
    நரகமதை சுமந்து நிற்பாள் !

    Share
  • உயர்ந்து நின்றார் காமராசர் !


    ( எம். ஜெயராமசர்மா…… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

    இலக்கியங்கள்  இலக் கணங்கள்
    எதும் அவர் படிக்கவில்லை
    இங்கீலீசு பள்ளிக் கூடம்
    எட்டி அவர் பார்த்ததில்லை
    தலைக் கனத்தை வாழ்நாளில்
    தன தாக்கிக் கொண்டதில்லை
    தமிழ் நாட்டின் தலைமகனாய்
    தாம்  உயர்ந்தார்  காமராசர்  !

    ஏழையென பிறந்த  அவர்
    கோழை என வாழவில்லை
    தோழமையை மனம் இருத்தி
    தோள்  கொடுத்தார் மக்களுக்கு
    ஆழ நிறை அன்புடனே
    அவர் நோக்கு அமைந்ததனால்
    அரசு கட்டில் அமர்ந்தாலும்
    அனைவருக்கும் உதவி நின்றார்  !

    மாடிமனை  வீடு  எலாம்
    வாங்கி அவர் குவித்ததில்லை
    மற்றவர்கள் மனம்  வருந்த
    சொத்தும் அவர் சேர்த்ததில்லை
    கோடிகளில் செல்வம் அதை
    கொள்ளை அவர் கொண்டதில்லை
    கொள்கையுடன் வாழ்ந்து நின்று
    குன்றமென  உயர்ந்து  நின்றார்   !

    அரசியலால்  காசு  தேட
    அவர்  என்றும்  முயன்றதில்லை
    அதிகார  வெறி கொண்டு
    அவர் ஆட்சி செய்ததில்லை
    அனைவரையும் அணைத்து நிற்க
    அவர் மனது விரும்பியதால்
    அவர் ஆண்ட  காலமதை
    அனைவருமே விரும்பி நின்றார்   !

    கல்வி   தேடும்   எழையர்க்கு
    கண் ஆனார்  காமராசர்
    கல்வி கற்கா  தன்னிலையை
    கருத்தில் அவர் இருத்தினரே
    எல்லோரும் கல்வி கற்க
    எண்ணி  அவர் செயற்பட்டார்
    இதனாலே  அவர் என்றும்
    இருந்து விட்டார் உள்ளமெலாம்  !

    படிக்காத  மேதை  எனப்
    பவனி வந்தார்  காமராசர்
    படித்தார்கள் நினைவில் வரா
    பலவற்றை அவர் செய்தார்
    நடித்து அவர் வாழ்ததில்லை
    நாகரிகம் பேணி நின்றார்
    நம் நாட்டில் அவர்போல
    யார் வருவார் நலன்காக்க  !

    அரசியலில் அவர் வாழ்வு
    அப்பழுக்கு அற்ற தென்று
    அரசியலார் சொல்லி நிற்க
    அவர் வாழ்ந்து சென்றுவிட்டார்
    ஊழல் என்னும் பேய்தன்னை
    ஓரங்கட்ட  அவர்  நினைத்தார்
    ஊழல் அற்ற தலைமகனாய்
    உயர்ந்து  நின்றார்  காமராசர்    !

    Share
  • ஆண்டவர்க்கே புரியவில்லை

    ( எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

    நிலவினிலே காலை வைத்தான்
    நீள்கடலை சுற்றி வந்தான்
    வளம் கொழிக்க வைப்பதற்கு
    வகுத்து நின்றான் பலவழியை
    அளவில்லா ஆசை கொண்டு
    ஆற்றி நின்றான் ஆராய்ச்சி
    ஆனாலும் அவன் மனமோ
    அமைதி நிலை அடையவில்லை !

    ஆண்டவனைப் பழித்து நின்றான்
    அவதூறாய்ப் பேசி நின்றான்
    அறம்பற்றி நியாயம் பற்றி
    அதிகமாய் கிண்டல் செய்தான்
    இறப்போடு பிறப்பு எல்லாம்
    ஏன் இங்கே வருகுதென
    இன்றுவரை குழப்பி நின்று
    இவன் தெரியா உலைகின்றான் !

    வாதம் பல செய்கின்றான்
    வழக்கு பல காணுகிறான்
    ஆதாயம் தேடித் தேடி
    அறம் தொலைத்து நிற்கின்றான்
    அன்னை தந்தை பாசம்கூட
    அவன் மனதில் காணவில்லை
    அவன் மனமோ என்னாளும்
    அல்லலில் தான் உழல்கிறது !

    ஆண்டவனின் படைப்பு அதனில்
    அவன் படைப்பே உயர்வாகும்
    அவனுக்கே ஆற்றல் பல
    ஆண்டவனே வழங்கி உள்ளான்
    ஆனாலும் அவன் போக்கோ
    ஆண்டவர்க்கே புரிய வில்லை
    அவன் மட்டும் இவ்வுலகில்
    அதையெண்ணா வாழுகிறான் இவ்வுலகில் !

    Share
  • உதவிநிற்கும் என உணர்வோம் !


    (எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா)

    இந்துமதம்  பெளத்தமதம்  இஸ்லாமொடு  கிறீஸ்தவமும்
    வந்திங்கு  பலவற்றை வழங்கியே இருக்கிறது
    சொந்தமெனக் கொண்டும் பலர்சுகம் காணாநிலையினிலே
    வெந்துவெந்து உழலுகிறார் வேதனையால் வாழ்வினிலே
    எந்தமதம் பெரியமதம் எந்தமதம் சிறந்தமதம்
    என்றெண்ணிப் பலபோர்கள் எங்குமே நடக்கிறது 
    வந்தமைந்த மதமுரைத்த மனுநீதி யாவுமிங்கே
    மதம்பிடித்தோர் கைகாலே  மடிந்துகொண்டே போகிறது !

    களவெடுக்கப் பொய்யுரைக்க எம்மதமும் சொன்னதில்லை
    கற்பழிக்கக் கொலைசெய்ய எம்மதமும் விரும்பவில்லை
    போட்டிபோட்டுப் பொருள்பறிக்க எம்மதமும் காட்டவில்லை
    பொறாமைகொண்டு பொசுக்குவென்று எம்மதம் இயம்பவில்லை
    வீட்டுநலன் நாட்டுநலன் விலத்திநிற்க வேண்டுமென்று
    நாட்டிலுள்ள மதமேதும் சொன்னதுண்டா எண்ணிடுவீர்
    காட்டுத்தனம் மிகுந்துநிற்கும் கயமைக்குணம் உடையோரால்
    கண்ணியமாம் மதமனைத்தும் காணாமல் போகிறதே  !

    ஓடுகின்ற உதிரமதில் ஒழுகுகின்ற கண்ணீரில்
    தேடித்தான் பார்த்தாலும் தெரிந்திடுமா வேற்றுமைகள்
    நாடுபல இருந்தாலும் நாகரிகம் பலவிருந்தும்
    வாழுகின்ற மக்களெலாம் மகத்தான உயிர்களன்றோ
    யாதுமே ஊர்களென்றும் யாவருமே கேளிரென்றும்
    தீதகற்றும் உண்மைதனை செவிமடுக்க மறந்தோமே
    வாழுகின்ற வாழ்வுதனை வண்ணமுற வாழ்வதற்கு
    ஓதிநிற்கும் மதமனைத்தும் உதவிநிற்கும் எனவுணர்வோம் ! 

    Share
  • மரணவாசல் போகின்றார் !

    எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

    பணத்தினால் போதை வரும்
    பதவியினால் போதை வரும்
    பட்டம் பல பெற்றாலும்
    போதை தலைக் கேறிவிடும்
    இதனாலே வரும் போதை
    எல்லோர்க்கும் இடைஞ்சல் தரா
    போதை ஊட்டும் பொருளன்றோ
    பொல்லாத விளைவைத் தரும் !

    போதையூட்டும் பல பொருட்கள்
       புதுப் புதிதாய் வருகிறது
    காதலுடன் பலர் வாங்கிக்
       காணுகிறார் இன்ப நிலை
    இன்பமென எண்ணி எண்ணி
       ஏற்றுநிற்கும் பல பொருட்கள்
    துன்பமாய் அமையும் என்று
       துளிகூட அவர் நினையார் !

    போதை தரும் பலவற்றை
       பொழுது போக்காய் பயன்படுத்தி
    பாதை தடுமாறி நின்று
       பலர் வாழ்வை இழந்துவிட்டார்
    சாதனைகள் பல இருக்க
       சன்மார்க்க வழி இருக்க
    போதையினை தலைக் கேற்றி
       பொசுக்குகின்றார் நாளை எல்லாம் !

    போதைப் பொருள் ஏற்பதனால்
       பொறி புலன்கள் தடுமாறும்
    வீதி தனில் செல்கையிலே
       வில்லங்கம் செய்யத் தூண்டும்
    நாடி வரும் நற்குணங்கள்
       நம்மை விட்டே அகன்றுவிடும்
    நமக்கு நாமே புதைகுழியை 
       நாம் வெட்டி நின்றிடுவோம் !

    கொள்ளை அடியென நினைக்கும்
       குணம் அங்கே வந்துநிற்கும்
    கொலை செய்து கற்பழிக்கும்
       குரூரமும் கூட நிற்கும்
    நல்ல வல்ல எக்குணமும்
       நம்மிடத்து வந்து விடா
    பொல்லாத செய் என்றே
       போதை அங்கு வழிநடத்தும் !

    நீதி நேர்மை பார்க்காது
       நெஞ்சு உருக நினைக்காது
    வாதமிடும் போர்க் குணத்தை
       வளர்த்து விடும் போதையது
    புவி மீது வாழ்கின்றார்
       போதைப் பொருள் ஏற்பதனால்
    மதியிழந்து வாழ் விழந்து
       மரண வாசல் போகின்றார் !

    Share
  • அழவிட்டுப் போனதேனோ !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    பாடியகுயில்   பறந்தோடிவிட்டது
    பாட்டுக்கேட்ட  யாவருமே
    பரிதவித்தே நிற்கின்றார்
    பலமொழிகள் குயில்காணாப்
    பார்த்தேங்கி அழுகிறது
    பாரதத்தாய் இசைமகளைப்
    பறிகொடுத்து ஏங்குகிறாள்  !

    இசைஞானி வசமாகி
    இசைத்தபாடல் எத்தனையே
    எம்ரகுமான் இசைக்கோப்பில்
    இனித்தபாடல் இதயமெலாம்
    இசைமகளை இனங்கண்ட
    இசையாளர் பலருமிப்போ
    இசைமகளின் முகங்காணா
    ஏக்கமுற்று இரங்குகின்றார் !

    சிங்கார  வேலனைத்
    தந்துவிட்ட இசைக்குயிலைச்
    சிந்தித்து சிந்தித்து
    இசையுலகு அழுகிறது
    திரையுலகை இக்குரலே
    திகைப்பூட்ட வைத்ததனால்
    திரையுலகு  இப்போது
    தேம்பிநின்று அழுகிறது !

    பத்தாயிரம்   பாடல்கள்
    பன்மொழியில் பாடியதால்
    பலருமே   இசைக்குயிலை
    பார்த்துமே வியந்தார்கள்
    பரிசுபல  குவிந்தன
    பாராட்டும் பெருகியது
    பாடிநின்ற   பூங்குயிலோ
    பாரைவிட்டுப் பறந்ததுவே !

    யாருமே மறக்கார்கள்
    ஜானகி அம்மாவைக்
    கானக்   குயிலாக
    கலக்கினார் இசையுலகை
    அவர்குரலில் இனியுலகில்
    ஆரிசைக்க வருவார்கள்
    அக்குரலை கேட்காமால்
    அழவிட்டுப் போனதேனோ!

    Share
  • எனக்கு அவர் வரமாகும் !

    (எம்.ஜெயராமசர்மா ..மெல்பேண்..அவுஸ்திரேலியா )


    பெற்றெடுத்தாள் அன்னை
    பேணிநின்றார் தந்தை
    கற்பதற்கு கைபிடித்து
    கல்வியிலே ஏணியானார்
    முற்றுமே துறந்தவராய்
    முனிவராய் அவரிருப்பார்
    சற்றுநான் சறுக்கிவிட்டால்
    தான்தாங்க வந்துநிற்பார் !

    எப்பவுமே எனைப்பற்றி
    எண்ணியே இருந்திடுவார்
    தப்பிதங்கள் செய்யாமல்
    தடுப்பதிலே முன்னிற்பார்
    அற்பத் தனங்களை
    அறவே வெறுத்திடுவார்
    அறவழியில் நான்வளர
    அவரேயென் குருவானார் !

    அப்பாவின் வார்த்தைகள்
    அத்தனையும் மந்திரமே
    அவர்செய்யும் அத்தனையும்
    அரணாக அமைகிறதே
    எப்பவுமே இப்பிறப்பில்
    என்தந்தை இறையெனவே
    எண்ணியே தொழுகின்றேன்
    எனக்குஅவர் வரமாகும் !

    Share
  • எல்லாப் புகழும் இறைவனுக்கே !


    ம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

    எல்லாப் புகழும் இறைவனுக்கே
    இயன்றவரை உதவிடுவோம் யாவர்க்குமே
    நல்லவற்றை நினைத்திடுவோம் நாளெல்லாம்
    அல்லவற்றை அகற்றிடுவோம் அனைவருமே
    சொல்லுவதை சுவையாகச் சொல்லிடுவோம்
    சோர்வின்றி நாளெல்லாம் உழைத்திடுவோம்
    கொல்லுகின்ற கொலைவெறியை மறந்திடுவோம்
    குணமதனைச் சொத்தாக்கி உயர்ந்திடுவோம் !

    எல்லையில்லா ஆனந்தம் ஈந்தளிக்கும்
    எல்லையில்லா இறையினைநாம் ஏற்றுநிற்போம்
    வல்லமையின் வடிவான இறையினைநாம்
    வணங்காமல் இருந்துவிடல் முறையேயன்று
    சொல்லளித்துச் சுவையளிக்கும் தூயசக்தி
    துதிப்பார்க்கு காட்சிதரும் பெரியசக்தி
    எல்லையில்லா உலகினையே படைத்தசக்தி
    இறையொன்றே என்றுநாம் நினைப்போமென்றும் !

    நினைப்பார்க்கு இறையாகக் காட்சிதந்து
    வெறுப்பார்க்கு நம்பிக்கை ஊட்டிநின்று
    பொறுப்புடனே வாழ்வதற்கு வழியாய்நிற்கும்
    போற்றுகின்ற பொருளே இறைவடிவமாகும்
    கருத்துடனே நினைவார்க்கு கருணையாகி
    கவலையுடன் இருப்பார்க்கு கையுமாகி
    இருக்கின்ற சக்திதான் இறையென்றெண்ணி
    இருக்கின்றார் இவ்வுலகில் பலருமின்று !

    இறைபற்றிக் கருத்துப்பல இருந்திட்டாலும்
    எல்லோரும் இறைபற்றி எண்ணுகின்றார்
    எதிர்வாதம் இவ்வுலகில் எழுந்திட்டாலும்
    இறைபக்தி அற்றநிலை எங்குமில்லை
    இறையிருக்கு இறையிருக்கு எனும்நினைப்பை
    எவர்வந்து தடுத்தாலும் பலனேயில்லை
    இறையிருந்து நல்லவழி காட்டிநிற்பார்
    இறைதொழுது எல்லோரும் இருப்போம்நாளும் !

    Share
  • நாம்படிப்போம் வள்ளுவத்தை !

     

    எம். ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா

    படைக்கின்ற இலக்கியங்கள் பயனளிக்கும் பாங்கினிலே
    கிடைக்கின்ற போதுதான் படைப்பினுக்கு உயர்வாகும்
    படைக்கின்றார் மனப்பாங்கும் படைப்பூடே வந்துநிற்கும்
    படைப்பவர்கள் சமூகத்தை மனத்திருத்தல் அவசியமே !

    நெறிபிறளும் வகையினிலே படைக்கின்ற இலக்கியங்கள்
    நீண்டகாலம் கொண்டதாய் நின்றுவிடல் அரிதாகும்
    குறிக்கோளை மனமிருத்தி வருகின்ற இலக்கியங்கள்
    குவலயத்தால் என்னாளும் கொண்டாடி போற்றப்படும் !

    தனிப்பட்ட கருத்துக்களை தானுரமாய் கொண்டபடி
    தரமற்ற படைப்புகளும் தரணிக்கு வருகிறது
    நுனுப்புல்லை மேய்ந்தவராய் படைக்கின்றார் இருந்துவிடின்
    வருகின்ற படைப்புகளும் வளமற்றே வந்துநிற்கும் !

    வாழுகின்ற வழிகூறும் வகையினிலே இலக்கியங்கியங்கள்
    வருகின்ற போதிலேதான் வரட்சிநிலை அகன்றுநிற்கும்
    மோதுகின்ற குணமதனை முன்னிறுத்தி இலக்கியங்கள்
    சேதிசொல்லும் போதிலேதான் திசைகூடக் கெட்டுவிடும் !

    வள்ளுவரின் படைப்பதனை வையகத்தார் வாழ்த்துகிறார்
    இனங்கடந்து மொழிகடந்து எல்லோரும் விரும்புகிறார்
    சொல்லவரும் அத்தனையும் நல்லபடி சொல்லுகிறார்
    வெல்லுகின்ற இலக்கியமாய் வள்ளுவமும் இருக்கிறது !

    சாதிபற்றிச் சொல்லவில்லை சமயம்பற்றிச் சொல்லவில்லை
    நீதிபற்றி சொல்லுவதில் நியாமும் நிறைந்துளது
    கடவுள்பற்றிச் சொல்லவில்லை கட்சிபற்றிச் சொல்லவில்லை
    கட்டாயம் செய்வதனை கண்ணியமாய் சொல்கிறது !

    இலக்கியத்தைப் படைப்பார்கள் இங்கிதமாய் படைப்பதற்கு
    ஏற்றபல பாடங்களை வள்ளுவத்தில் படித்திடலாம்
    நலந்திகழ மனம்நிறைய நாலுபேர்க் கேற்றபடி
    நற்படைப்பைப் படைப்பதற்கு நாம்படிப்போம் வள்ளுவத்தை !

    Share
  • அவலக்குரல் கேட்கலையா !

     

     

    ( எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

    பொருள்தேடும் நோக்கத்தில் புதைகுழிகள் தோண்டுகிறார்
    வருவாயை மனமிருத்தி மாயம்பல செய்கின்றார்
    இரைதேடும் விலங்குகள்போல் இரக்கமதை அழிக்கின்றார்
    அளவின்றி ஆசைப்பட்டு அனைத்தையுமே அள்ளுகிறார் !

    ஆட்சியிலே அமர்ந்திருப்பார் அறந்தொலைத்து நிற்கின்றார்
    அதிகாரம் இருப்பதனால் அலட்சியமாய் நடக்கின்றார்
    காவல்செய்யும் துறையினரும் கடமையினை மறக்கின்றார்
    காலந்தோறும் மக்களெலாம் கவலையிலே உழலுகின்றார் !

    பொதுநோக்கம் எனும்நோக்கை பொசுக்கியே விடுகின்றார்
    பூமியின் வளமனைத்தும் காசாக்க விளைகின்றார்
    மேடையேறி வாய்கிழிய விதம்விதமாய் பேசுகிறார்
    பாதகத்தை மனம்முழுக்க பதுக்கியே வைக்கின்றார் !

    சாதிகூறிச் சாதிகூறி தமக்குலாபம் தேடுகிறார்
    சமயத்தை பலமாக்கி தன்பக்கம் ஆக்குகின்றார்
    நீதிகூட நடக்காமல் கொடுக்கின்றார் பணத்தையெல்லாம்
    நிம்மதியை அவர்பெற்று நிம்மதியை அழிக்கின்றார் !

    சாமியினை நம்பிநின்று சனங்களெல்லாம் அழுகின்றார்
    சாமிவரம் கொடுப்பதிலே தாமதமே ஆகிறது
    ஆர்வந்து காத்திடுவார் என்றுமக்கள் நோக்குகிறார்
    ஆண்டவனே மக்களது அவலக்குரல் கேட்கலையா !

    Share
  •       பாரைவிட்டுப் போனதேனோ  !

     

          (  எம் . ஜெயராமசர்மா ….. மெல்பேண் …. அவுஸ்திரேலியா  )

     

     

    குங்குமம் பொட்டும் குறுகுறுத்த பார்வையும்

    எங்குமே பரந்துநிற்கும் எழிலார்ந்த கற்பனையும்

    பொங்கிவரும் தமிழுணர்வும் பொறுப்பான எழுத்துக்களும்

    எங்களுக்கு அளித்துவிட்டு எங்குசென்றீர் சித்தரையா   !

     

    எழுதிக் குவித்தகை எப்படித்தான் ஓய்ந்ததுவோ

    அளவின்றி  பலவற்றை ஆர்வமுடன் தந்தீர்கள்

    வழுவின்றி வையகத்தில் வாழும்வகை எழுத்தாக்கி

    வழங்கிவிட்டு ஏனையா மனமேங்க வைத்துவிட்டீர்        !

     

    வெள்ளுடையில் மேடையேறி வெளியாகும் கருத்துக்களை

    அள்ளிநாம் பருகிவிட ஆசையுடன் இருக்கின்றோம்

    வெண்தாடி வெள்ளுடையில் வேறுயார் இங்குள்ளார்

    வித்தகரே சித்தரையா விரைவாகச் சென்றதேனோ     !

     

    பரிசுபல பெற்றாலும் பல்லக்கில் ஏறாமல்

    பக்குவத்தைக் கடைப்பிடித்து பலபேரும் மதிக்கநின்றாய்

    படைக்கின்ற அத்தனையும் பயனாகும் பாங்கினிலே

    படைத்தளித்து விட்டுத்தான் பாரைவிட்டு அகன்றனையோ    !

     

    உன்நாவல் அத்தனையும் உரமாக இருக்குமையா

    வெவ்வேறு விதமாக விறுவிறுப்பாய் தந்துநின்றாய்

    தமிழ்படிப்பார் யாவருமே தலைமீது வைப்பார்கள்

    அறிவான எழுத்தாலே அனைவரையும் ஆண்டுவிட்டாய்   !

     

    முக்காலமாய் உந்தன் எழுத்துக்களை பார்த்திடலாம்

    முதற்காலம் முற்போக்கு முகிழ்த்ததையே பார்க்கின்றோம்

    இடைக்காலம் வெள்ளித்திரை ஈர்த்துவிட இருந்துவிட்டாய்

    இக்காலம் இறைபக்தி எழுத்தாக்கி எழுச்சிபெற்றாய்     !

     

    குடும்பத்தை உயர்த்துதற்கு கொடுத்துநின்றாய் பலகருத்தை

    குலவிளக்காம் பெண்கள்தமை குன்றேத்திப் பலபுகன்றாய்

    நலமிக்க சமுதாயம் நாட்டில் வரவேண்டுமென்று

    நாளெல்லாம் எழுதிவிட்டு நாயகரே சென்றதேனோ        !

     

    படைப்புலம் அழுகிறது பத்திரிகை அழுகிறது

    பாலகுமாரன் ஐயா பசுந்தமிழும் அழுகிறது

    பரவசமும் பக்குவமும் பாங்காக படைத்தளித்த

    பாலகுமாரன் ஐயா பாரைவிட்டுப் போனதேனோ    !

     

    Share