Tag: செண்பக ஜெகதீசன்

  • பொங்கல் வாழ்த்து…

    செண்பக ஜெகதீசன்bullock-index

     கழனியில் விளைந்தநெல் அரிசிபொங்கி

    காட்டு மஞ்சள் இஞ்சியுடன்

    பழவகை காய்கறி சேர்த்துவைத்து

    பகலவன் கதிர்முன் படைத்துவைக்கும்

    உழவர் திருநாள் நந்நாளில்

    உறவாய்த் தமிழர் ஒன்றிணைந்தே

    பழகி என்றும் பயனுறவே

    பகர்வோம் பொங்கல் வாழ்த்தின்றே…!

     

    படத்துக்கு நன்றி

    http://www.123rf.com/photo_9745647_bullocks-with-yoke-to-pull-the-plow–old-agricultural-work-recall-in-the-italian-countryside.html

     


     

    Share
  • குறளின் கதிர்களாய்… (18)

      செண்பக ஜெகதீசன்hay-index

     

    வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

    வைத்தூறு போலக் கெடும்.

    -திருக்குறள்- 435 (குற்றங்கடிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    எளிதில் பற்றி

    எரிந்து சாம்பலாகிவிடும்

    தீயின்முன் வைக்கோல்..

     

    தெரிந்திடு இதை,

    குற்றம்

    வருமுன்னே காத்திடு

    வாழ்க்கையைக் காத்திட,

    வைக்கோலாய் அழியுமுன்னே…!

     

    குறும்பாவில்…

     

    தீமுன்னே வைக்கோலாய் அழிவு,

    குற்றம் வருவதற்குள்

    காத்திடாதார் வாழ்வு…!

     

          மரபுக் கவிதையில்…

     

    எரியும் தீயின் முன்பிருந்தால்

    எரிந்தே சாம்பலாய் வைக்கோலும்

    திரிந்திடும் கதைதான் தெரிந்ததுவே,

    தேவை இக்கதை இக்கணம்தான்

    வருத்திடும் குற்றம் வருமுன்னே

    விரைவாய்க் காத்திடு வாழ்வதையே,

    அருகில் வந்தபின் அழுதாலும்

    அழிந்திடும் வாழ்வெனும் வைக்கோலே…!

     

    லிமரைக்கூ…

     

    முன்விழுந்த வைக்கோலை எரித்திடுமே தீ,

    முன்காத்திடா குற்றமது

    முடித்திடும் மனிதவாழ்வை தெரிந்திடு நீ…!

     

    கிராமியப் பாணியில்…

     

    காத்திடுநீ காத்திடு- கொடுங்

    குத்தம் வருமுன்ன காத்திடு..

     

    குத்தம் வந்தா வாழ்வழியொம்- மனுச

    வாழ்வழியொம்,

    குத்தம் வந்தா கெட்டழியொம்- எல்லாம்

    கெட்டழியொம்..

     

    தீக்க முன்ன வக்கோலுபோல

    தீஞ்சழியொம்- வாழ்க்க

    தீஞ்சழியொம்..

     

    அதால,

    காத்திடுநீ காத்திடு- கொடுங்

    குத்தம் வருமுன்ன காத்திடு…!

     

    படத்துக்கு நன்றி

     http://olegvolk.net/newsite/texturelibrary/textures-artificial.html 

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • இணைப்பு…

     செண்பக ஜெகதீசன்furious-images

    மதமென்றும் இனமென்றும்

    மொழியென்றும்,

    மற்றேதுமின்றியும்

    மனிதரில் ஆயிரம்

    மாறாத பிரிவினைகள்..

     

    இணைக்கிறது இயற்கை

    இவர்களைச்

    சாவில்-

    இயற்கைச் சீற்றங்களாய்…!

    படத்துக்கு நன்றி

    http://www.deccanchronicle.com/130615/news-current-affairs/article/rains-fail-fill-dams

    Share
  • வாழ்த்துவோம் புத்தாண்டில்…

    செண்பக ஜெகதீசன் english images

    சென்ற ஆண்டின் சேதாரங்கள்

    சேர வேண்டாம் மனதினிலே,

    வென்ற நல்ல வேளையையே

    வைத்திடு மனதில் நிலையாக,

    இன்று புதிதாய்ப் பிறந்தோமெனும்

    இளசைப் பாரதி வாக்கினைப்போல்

    என்றும் வாழ்ந்தே வென்றிடுவோம்

    என்றே வாழ்த்திடு புத்தாண்டிலே…!

    படத்துக்கு நன்றி

    http://spoonful.com/printables/mickey-minnies-new-year-celebration-banner

     

    Share
  • ஓட மதவிலே…

    செண்பக ஜெகதீசன்peacock-images

    ஓட மதவிலே

    ஒத்தயில காத்திருக்கும் கொக்கே கொக்கே- நானும்

    அத்தமவன் வருவானுண்ணு

    ஒத்தக்காலுல நிக்கேன் நிக்கேன்..

     

    வாடக்காத்துல

    ஓடக்கரயில

    ஆடக் காத்திருக்கும் மயிலே மயிலே

    பாடாப்படுத்துறானே பாவிமவன்,

    தேடவெச்சிட்டானே- அப்பன்

    கூடப்பொறந்தவா பெத்தபுள்ள..

     

    அரிசிபோட்டா

    அருகவரும் மைனா மைனா

    உருகிப்போயி நிக்கிறனே,

    தெருவிலபோன மச்சானத்தான்

    தேடிப்பாத்து வரச்சொல்லு- நான்

    வாடுறதப் போய்ச்சொல்லு..

     

    சொல்லச்சொல்லத்

    திருப்பிச்சொல்லும் கிளியே கிளியே

    பாலும்பழமும் ஒனக்குத்தந்தேன்- எம்

    மேலக்கொஞ்சம் எரக்கம்காட்டு,

    வேலதேடிப் போனமச்சான்

    வெபரந்தெரிஞ்சி எனக்குச்சொல்லு- என்

    வேதனயக் கொறச்சித்தள்ளு..

     

    துள்ளிஓடும் கண்ணுக்குட்டி

    மொள்ளவாயேன் கிட்டகொஞ்சம்,

    எள்ளளவும் பயமில்லாமத்

    துள்ளுறியே- நானும்

    எம்மச்சான் பேரச்சொல்லி

    ஏங்குறனே..

     

    சோறுபோட்டா

    சேந்துவரும் காக்கா காக்கா

    சேதிஒண்ணு தெரிஞ்சிக்கிட்டேன்,

    காலயில ஒங்கொரலக்

    கேட்டுப்புட்டேன்-

    கட்டாயம் வந்துடுவான்

    எம்மச்சான்,

    கறியுஞ்சோறும் ஒனக்குத்தான்

    கட்டாயம் நாந்தருவேன் காக்கா காக்கா…!

    படத்துக்கு நன்றி

        http://fengshui.about.com/od/fengshuicures/qt/feng-shui-birds.htm            

     

    Share
  • அன்புத்தேவன் அவதரித்தான்…

        செண்பக ஜெகதீசன்christmas index

    தன்னைப் போலப் பிறரையுமே

    தயையுடன் என்றும் நேசியெனச்

    சொன்ன தேவ குமரனவன்

    சின்னக் குடிலில் அவதரித்தான்,

    அன்னை மரியாள் மடியினிலே

    அகில ரட்சகன் அருள்கின்றான்,

    அன்பைச் சொன்ன அருட்குமரன்

    அடிகள் பணிந்து வாழ்த்துவமே…!

    படத்துக்கு நன்றி

    http://inhabitat.com/family-shocks-guinness-world-records-by-hanging-over-500000-christmas-lights/

     


    Share
  • குறளின் கதிர்களாய்… (17)

     

     செண்பக ஜெகதீசன்

     

    பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்

    வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

    -திருக்குறள்- 481 (காலமறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    இரவுக்கரசன் கோட்டானும்

    இலகுவாய்த் தோற்றிடும்,

    பகலில் ஒரு

    காக்கையிடம்..

     

    பாடம் இதுதான்

    ஆட்சியாளர்களுக்கும்,

    காலமதை நன்கறிந்து

    காயை நகர்த்தினால்தான்

    கிடைக்கும் வெற்றி

    களத்தில்…!

     

    குறும்பாவில்…

     

    காக்கை வென்றிடும் கூகையைப் பகலில்..

    கதையிதுதான் ஆட்சியாளருக்கும,

    காலமறியாது சென்றால்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    இருளிலும் தெரியும் கண்களாலே

    இரவை ஆண்டிடும் கோட்டானும்

    உருவில் சிறிய காக்கையிடம்

    வந்தால் பகலில் தோற்றுவிடும்,

    தெரிந்திடு உண்மை இதைத்தானே

    தெளிவாய்ப் பொழுதைத் தெரிந்திட்டே

    சரியாய்ச் செயலைச் செய்தால்தான்

    சேரும் வெற்றி ஆட்சியர்க்கே…!

     

    லிமரைக்கூ…

     

    பகலில் தோற்கும் காக்கையிடம் கூகை,

    பொழுதைத் தெரிந்தே

    செய்யும் போரில் சூடிடலாம் வாகை…!

     

    கிராமியப் பாணியில்…

     

    பாருபாரு நேரம்பாரு

    பாயத்தான் பதுங்கத்தான் நேரம்பாரு- சரியா

    நேரம்பாரு..

     

    ராப்போது ராசாதான் கூவபாரு- அது

    பகலவந்து மாட்டிக்கிட்டா

    தோத்திருமே காக்காக்கிட்ட- சின்னக்

    காக்காக்கிட்ட..

     

    ராச்சியத்து ராசாவுக்கும்

    கதயிதுதான்- சொல்லும்

    கருத்திதுதான்,

    காலநேரம் பாத்துசெஞ்சா

    செயம் வருமே- எல்லாமே

    செயம் வருமே..

     

    பாருபாரு நேரம்பாரு

    பாயத்தான் பதுங்கத்தான் நேரம்பாரு- சரியா

    நேரம்பாரு…!

     

            -செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • குறளின் கதிர்களாய்… (16)

    செண்பக ஜெகதீசன்

     

    குறளின் கதிர்களாய்… (16)

     

    நிலத்தியல்பா னீர்திரிந் தற்றாகு மாந்தர்க்
    கினத்தியல்ப தாகு மறிவு.
    -திருக்குறள்- 452 (சிற்றினம் சேராமை)

    புதுக் கவிதையில்…

    இருக்கும் நிலத்தின்
    இயல்பு போல்
    மாறிடும்
    தண்ணீரின் தன்மை..

    இதுபோல் தான்
    சேர்ந்திடும்
    இனத்தின் இயல்புபோல்
    சேர்கிறது அறிவு
    மனிதனுக்கே…!

    குறும்பாவில்…

    நிலம் மாற்றும் நீரின் இயல்பை,
    சேரும் இனம்,
    மனிதனின் அறிவை …!

    மரபுக் கவிதையில்…

    நிலத்தில் வீழும் நீரதுவும்
    நிறத்தில் குணத்தில் மாறிடுமந்
    நிலத்தின் தன்மை போலவேதான்,
    நிலத்தில் மனிதனின் நிலையிதுதான்
    கலந்து பேசிப் பழகையிலும்
    காணும் மனித உறவினிலும்
    பலனாய்க் கிடைக்கும் அறிவதுதான்
    பழகும் மாந்தர் இயல்பாமே…!

    லிமரிக்…

    நிலத்தின் குணத்தில் மாறிவிடும் பார்
    நிலத்தில் வந்தே சேர்ந்திடும் நீர்,
    மாந்தருள் பழகிடும் கணம்
    மாறிடும் அவர்தம் குணம்,
    சேர்ந்திடும் மனிதர் அறிவெனவே பார்…!

    கிராமியப் பாணியில்…

    மழத்தண்ணி மண்ணுல உழுந்தா
    மாறிப்போவும்- நல்லா
    மாறிப்போவும்..

    நெறமில்லாத் தண்ணிக்கும்
    நெறம் வருமே- மண்ணு
    நெறம் வருமே,
    கொணம் வருமே- மண்ணு
    கொணம் வருமே..

    இந்த
    மழத்தண்ணி கததானே
    மனுசங் கதயும்,
    அவன்
    கூட்டுசேரும் மனுசம்போலக்
    கொணம் மாறும்- இருந்த
    கொணம் மாறும்,
    அறிவுமாறும் அறிவுமாறும்
    அவனப் போல…!

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்… (15)

    செண்பக ஜெகதீசன்

     

    குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே

    யுடம்போ டுயிரிடை நட்பு.

    -திருக்குறள்- 338 (நிலையாமை)

     

    புதுக் கவிதையில்…

     

    மண்ணில் மனிதனின்

    உடலுயிர்

    தொடர்பு இதுவே-

    முட்டை ஓட்டைத்

    தனியே

    விட்டுவிட்டுப் பறவைக் குஞ்சு

    வெளியேறிடும் நிலைதான்…!

     

    குறும்பாவில்…

     

    முட்டை ஓட்டைத் தனியேவிட்டு

    பறவைக்குஞ்சு பறந்திடுவதாய்,

    உடலைவிட்டு உயிர் பிரிவதும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    முட்டை மீது தாய்ப்பறவை

    மிகுந்த அன்பால் அடைகாக்கும்,

    முட்டையை விட்டு வரும்குஞ்சு

    முட்டை ஓட்டை விட்டுவிட்டே

    எட்டிக் கூடப் பாராமல்

    எட்டப் பறக்கும் கதையதுதான்,

    விட்டுச் செல்லும் உயிரதுவும்

    உடம்பும் கொண்ட தொடர்பதுவே…!

     

    லிமரைக்கூ…

    குஞ்சுவந்ததும் கைவிடப்படும் முட்டை ஓடு,

    உடலதைத் தனியேவிட்டு

    உயிர்போன இடமதுதான் எங்கே தேடு…!

     

    கிராமியப் பாணியில்…

     

    கூடுகெட்டி முட்டவுட்டு

    அடகாக்கும் பறவ- பாசமா

    அடகாக்கும் பறவ..

     

    குஞ்சி வந்தா,

    மறந்துபோவும் ஒறவ

    முட்டஓட்டு ஒறவ- காத்த

    முட்டஓட்டு ஒறவ..

     

    முட்டஓட்டத் தனியாவுட்டு

    பறந்துபோவும் பறவ- ஒறவ

    மறந்துபோவும் பறவ..

     

    மனுச உசுரு கதயிதுதான்,

    ஒடம்பத் தனியா உட்டுப்புட்டு

    உசுரு போவும்- இந்த

    உசுரு போவும் தன்னந்தனியா…!

    Share
  • ஏனடா கவலை…

     செண்பக ஜெகதீசன்images

    அன்று தேவன் எழுதிய எழுத்து- அதை
    அழித்திட நினைப்பது ஆகுமோ பெண்ணே,
    தொன்று நிகழ்ந்ததின் தொடர்ச்சியிவ் வாழ்வு- அதைத்
    தொலைத்திடத் திட்டம் தகுமோ கண்ணே..

    நாளை நடப்பதை நன்றாய் அறிவான்- அவன்
    நம்மைப் படைத்தவன் நன்கறி தம்பி,
    காளைப் பருவம் வாழ்வினில் கொஞ்சம்- அதில்
    கவலைத் தீயில் கருகிடாய் வெம்பி..

    ஆடும் பம்பரம் அகிலம் மீதுநாம்- அதை
    ஆட்டும் ஒருவனை அறிவையோ அண்ணா,
    நாடும் வீடும் நம்முடன் வருமா-அந்த
    நிலையிலா வாழ்வை நினைப்பயோ கண்ணா..

    கடலலை இரைச்சல் காதைப் பிளக்கும்- அதைக்
    கருத்தில் கொளாதே கலம்விடு நண்பா,
    உடலெனும் காவில் உணர்ச்சிப் பூக்கள்- அவை
    உதிரச் செய்வது உயர்ந்தவர் பண்பா…!

    படத்துக்கு நன்றி

        http://www.virginiarowing.com/ 

    Share
  • குறளின் கதிர்களாய்… (14)

    செண்பக ஜெகதீசன்

     

    பயன்மர முள்ளுர்ப் பழுத்தற்றாற் செல்வம்

    நயனுடை யான்கட் படின்.

    -திருக்குறள்- 216 (ஒப்புரவறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    பயனாகும் எல்லார்க்கும்,

    நல்ல மரம்

    பழத்துடன் நின்றிருந்தால்

    ஊர்நடுவே..

     

    பிறர்க்குதவும்

    ஈர நெஞ்சுடையோரிடம்

    இருக்கும் செல்வத்திற்கும்

    இதுதான் கதை-

    இதுவும் உதவும் எல்லோருக்கும்…!

     

    குறும்பாவில்…

     

    நடுவூர் நல்மரத்துப் பழங்கள்போல்

    பலருக்குதவும்,

    நல்லமனமுள்ளவன் கைச் செல்வமும்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    நல்ல மரமது ஊர்நடுவே

    நிறைய பழுத்து நின்றிருந்தால்,

    எல்லா மக்களும் பயன்பெறுவர்

    எடுத்து மகிழ்வுடன் சுவைத்திடுவர்,

    செல்வ மிதனின் கதையிதுதான்

    சேர்ந்தவர்க் குதவும் குணமுடைய

    நல்லவர் கையில் நிறைந்திருந்தால்

    நாடும் எவர்க்கும் குறைவிலையே…!

     

    லிமரைக்கூ…

     

    நல்லபழத்துடன் நடுவூர்நிற்கும் மரம்,

    எல்லார்க்கும் உதவிடும்

    செல்வம்நிறை நல்லவரின் கரம்…!

     

    கிராமியப் பாணியில்…

     

    நல்லமரம் நல்லமரம்

    நடுவூருல நல்லமரம்,

    பாக்க ஒசந்தமரம்

    பலருக்கும் ஒதவொம்மரம்,

    பலரொம் அறிஞ்சமரம்

    பழமெல்லாம் நெறஞ்சமரம்,

    எட்டிப் பறிச்சிடலாம்

    எல்லாரும் தின்னுடலாம்..

     

    இதப்போல

    நல்ல மனுசங்கிட்ட

    நெறஞ்கிருக்கொஞ் செலுவமெல்லாம்

    எல்லாருக்கொம் ஒதவிடுமே

    நல்லதெல்லாம் நடந்துருமே

    நாமொம்

    நல்லவார்த்த சொல்லுவமே…!

     

        

    Share
  • அவனை அழைக்காதீர்!…

    செண்பக ஜெகதீசன்

     

    அவனை அழைக்காதீர்,

    அவன்வழியில் செல்லட்டும்…!

    அவனொரு வானம்பாடி,
    வானிலெங்கும் வட்டமிட்டுப் பறக்கட்டும்..

    அவனொரு கவிக்குயில்,
    செந்தமிழில் சுதந்திரமாய்க் கூவட்டும்..

    அவனொரு வெண்புறா,
    சமாதானச் சிறகோசை கேட்கட்டும்..

    அவனொரு மடவன்னம்,
    நஞ்சொதுக்கி அன்புப்பால் பருகட்டும்..

    அவனொரு பொன்வண்டு,
    பூக்களிலே தேனருந்திக் களிக்கட்டும்..

    அவனொரு புள்ளிமான்,
    துள்ளியவன் துணைநாடிச் செல்லட்டும்..

    அவனொரு எருமைமாடு,
    தூற்றுபவர் தூற்றிக்கொண்டிருக்கட்டும்..

    அவனோர் அணிப்பிள்ளை,
    அன்புள்ளோர் அவன்முதுகைத் தடவட்டும்..

    அவனொரு கருமேகம்,
    கவின்மொழியில் கவிமழையாய்ப் பொழியட்டும்..

    அவனொரு கோவிற்படி,
    கும்பிடுவோர் காலடிகள் மிதிக்கட்டும்..

    அவனொரு கைகாட்டி,
    நாடுவோர்க்கு நல்லவழி காட்டட்டும்..

    அவனொரு சுமைதாங்கி,
    அல்லலுற்றோர் மனச்சுமையை இறக்கட்டும்..

    அவனொரு நிழற்குடை,
    அவதியுற்றோர் இளைப்பாறிச் செல்லட்டும்..

    அவனொரு பரம்பொருள்,
    எல்லாமாய் எங்கேயும் இருக்கட்டும்..

    அதனால்,
    அவனை அழைக்காதீர்,
    அவன்வழியில் செல்லட்டும்…!

    Share
  • மதிப்பு!…

    செண்பக ஜெகதீசன்

     

     

     மதிப்பு…

     

    உலோகத்தை உருக்கி

    உருக்கொடுத்து சிலையாய்,

    மனிதன்

    உயர்த்திவிடுகிறான் மதிப்பை-

    வணங்கும் தெய்வமாக..

     

    மதிப்பு

    விலைமதிப்பாகும்போது,

    வெளியேற்றப்படுகிறார் கடவுள்

    கடத்தல் பொருளாக..

     

    படைத்தவனைப் படைத்தவனே

    கடத்துகிறான்

    கிடைக்கும் காசைக்

    கடவுளாய் எண்ணி..

     

    இப்போது சிரிக்கிறான்

    இறைவன்,

    இவனைப் பார்த்து…!

     

           

    Share
  • குறளின் கதிர்களாய்… (13)

     

    தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்

    கற்றனைத் தூறு மறிவு.

    -திருக்குறள்- 396 (கல்வி)

     

    புதுக் கவிதையில்…

     

    தோண்டத் தோண்டத்தான்

    ஊறும்

    வேண்டுமட்டும் தண்ணீர்,

    மணற்கேணியில்..

     

    மனிதன் கதையும் இதுதான்-

    கற்றிடக் கற்றிடத்தான்

    கூடிடும் அறிவு…!

     

    குறும்பாவில்…

     

    ஊறிடும் கேணிநீர் தோண்டத்தோண்ட..

    பெருகிடும் அறிவுமே,

    படிக்கப் படிக்க…!

     

    மரபுக் கவிதையில்…

     

    தண்ணீர் தொடர்ந்து வந்திடவே

    தாழ்வாய் உள்ள கேணியதில்

    மண்ணைத் தோண்டி எடுத்திட்டால்

    மேலும் மேலும் ஊறிடுமே,

    கண்ணாய்ப் போற்றும் கல்வியிலும்

    கற்றிடு கற்றிடு மேன்மேலும்,

    திண்ணமாய் ஓங்கி வளர்ந்திடுமே

    தீராச் செல்வம் அறிவதுவே…!

     

    லிமரைக்கூ…

     

    வெட்டவெட்ட ஊறிடும்மணற் கேணி,

    அறிவதில் உயர்ந்திடவே

    தொடர்ந்துகற்கும் கல்விதான் ஏணி…!

     

    கிராமியப் பாணியில்…

     

    தோண்டுதோண்டு நல்லாத்தோண்டு

    தோப்புக்குள்ள கேணியத்தான்..

     

    தோண்டத்தோண்ட மண்ணுவரும்

    தொளபோட்டுத் தண்ணிவரும்,

    சேத்துமண்ண எடுத்துவுட்டா

    ஊத்துத்தண்ணி ஓடிவரும்,

    தோண்டுதோண்டு நல்லாத்தோண்டு..

     

    படிப்புக்கதயொம் இப்புடித்தான்,

    படிக்கவேணொம் படிக்கவேணொம்

    படிப்படியா படிக்கவேணொம்

    பலகலயொம் படிக்கவேணொம்

    படிக்கப்படிக்க அறிவுவளரொம்

    பலகதயொம் தெரிஞ்சிபோவொம்..

     

    அதுக்கு,

    படிக்கவேணொம் படிக்கவேணொம்

    படிப்படியா படிக்கவேணொம்…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • தெரியும் பார்…

    செண்பக ஜெகதீசன்

     

    பிடிக்கவில்லை என்றாலும்

    இதழ்களில்

    புன்னகையை ஒட்டிக்கொள்..

     

    வேண்டாம் என்றாலும்

    வாயில் கொஞ்சம்

    வழிவிடு இனிய சொல்லுக்கு..

     

    தேவையில்லை என்றாலும்

    தெரிந்தோ தெரியாமலோ

    பிறர்க்குக்

    கொஞ்சம் உதவிப் பழகு..

     

    பலனேயில்லை யெனிலும்

    பலர்க்கு

    நலனே செய்துபார்..

     

    தேவையே இல்லையெனிலும்

    தெரியும் பார்

    உன்னைச் சுற்றி ஒளிவட்டம்…!

     

    Share