Tag: கவிஞர் இடக்கரத்தான்

  • வீழும் நடப்பது வாழும்!

    -கவிஞர் இடக்கரத்தான்

    நிற்பது வீழும் நடப்பது வாழும்
    நினைவில் வையுங்கள் – உயர்
    கற்பனை தன்னை மெய்யாய் ஆக்கிடும்
    காரியம் செய்யுங்கள்!

    எண்ணம் தன்னை உயர்வாய் வைப்பின்
    என்றும் ஏற்றம்தான் – பிறரை
    புண்ணெனச் செய்யும் புன்மைச் செயல்கள்
    புயலின் சீற்றம்தான்!

    வெள்ளி நிலாபோல் குளிரைப் பொழியும்
    வார்த்தை கொட்டுங்கள் – நலம்
    அள்ளியும் தருமது அழியாப் புகழை
    அழகாய் எட்டுங்கள்!

    கீழே விழினும் அருவியைப் போன்று
    குளிர்மழை பொழியுங்கள் – பிறர்
    வாழும் வகையில் விரிந்த உள்ளம்
    வைத்தே வாழுங்கள்!

    இல்லை என்னும் வார்த்தை எம்மிடம்
    ஏதெனப் பேசுங்கள் – மலரும்
    முல்லை போன்று வளைந்து இருப்பினும்
    மணமும் வீசுங்கள்!

    உலகும் ஊரும் உயர்வாய்ப் போற்றிட
    உயர்ந்து நில்லுங்கள் – மிக
    இலகும் உள்ளம் கொண்டு உலகினை
    எளிதாய் வெல்லுங்கள்!

    தீதும் நன்றும் பிறரால் வராது
    பேருண்மை – பொய்மை
    சு+தும் வாதும் முற்றும் தள்ளியும்
    சேர்ப்பீர் உயர்நன்மை!

    அடுத்தவர் வென்று அகமகிழ்ந் தாடல்
    அழகும் தானில்லை – வெற்றி
    தொடுத்தேன் என்னும் தலைக்கனம் பள்ளம்
    தள்ளியும் தரும்தொல்லை!

    பணிவில் பெருமை கொள்ளல் என்பது
    பண்புடைச் செயலாகும் – மனத்
    துணிவே பெரிதென அகந்தையில் மிதத்தல்
    துயரப் புயலாகும்!

    பணியும் நாணல் பாயும் புயலைப்
    பணியச் செய்துவிடும் – உயர்
    பணிவைக் காட்டா பனையோ புயலைப்
    பகைத்தே பொய்த்துவிடும்!

    அறமும் அறிவும் இருகண் என்பதை
    அகமும் வைத்திடனும் – நம்
    புறமும் அகமும் ஒன்றெனப் போற்றின்
    பேதம் பொய்த்துவிடும்

    விதியால் தாழ்வுறும் நிலையில் பிறரிடம்
    வீழுதல் மிகச்சிறுமை – கூர்
    மதியால் விதியை வென்று எழுதல்
    மானுடத்தின் அருமை!

    புத்தன் ஏசு காந்தி என்றுனைப்
    புவிகை தட்டட்டும் – இவன்
    சுத்த மனத்தினன் எனஊர் போற்றிட
    சுகமும் கொட்டட்டும்!

    Share
  • திகைக்கச் செய்தார்!

    -கவிஞர் இடக்கரத்தான்

    மாவீரன் சிவாஜிபெரும் கோட்டை கட்டும்
    மகத்தான பணிதனையும் தொடரும் வேளை
    காவியுடை தரித்தங்கு வந்து நின்ற
    குருவான ராமதாஸர் தம்மை வணங்கி
    ஆவலுடன் அகந்தையுமே மிகுந்து கொள்ள
    ”அங்குபணி ஆற்றிவரும் அனைவ ருக்கும்
    மாவீரன் நானன்றோ உணவு மற்றும்
    மற்றவற்றை வழங்குவதாய்” கூறி நின்றான்!

    குருநாதர் இதுதனையும் கேட்ட பின்னர்
    குறுநகையும் தனைஒன்றை உதிர்த்து விட்டு
    அருகினிலும் கிடந்தஒரு கல்லைக் காட்டி
    ”அதுதனையும் நீபிளப்பாய்” என்று சொன்னார்!
    உருவியதன் வாள்கொண்டு கல்லை ரெண்டாய்
    உடைக்கத்தான் அதிலிருந்து தேரை தோன்ற
    ”சிறுஉயிரும் இதற்கும்உன் உணவு தானா?
    சிந்திப்பாய்” எனக்கூறித் திருந்தச் செய்தார்!

    கவிஞர் இடக்கரத்தான்

    Share
  • துணைதான் யாரோ?

    -கவிஞர் இடக்கரத்தான்

    வானுக்குக் துணைசெய்யும் நிலவின் தோற்றம்
       வயலுக்குத் துணைதானே வரப்பின் ஏற்றம்
    ஆணுக்குத் துணைசெய்வாள் அழகுப் பாவை
       அரசுக்குத் துணைஆற்றும் நல்லோர் சேவை
    மானுக்குத் துணைசெய்யும் குட்டைக் கால்கள்
       மாந்தர்தம் துணையன்றோ நீதி நூல்கள்
    தேனுக்காய் அலையும்சிறு வண்டி னுக்கோ
       தேன்சிந்தும் மலர்க்கூட்டம் துணையே ஆகும்!

    ஊருக்குத் துணைசெய்யும் நதியின் ஓட்டம்
       உயர்வுக்குத் துணைசெய்வார் நல்லோர் கூட்டம்
    நாருக்குத் துணைசெய்யும் மலரின் வாசம்
       நன்மைக்குத் துணையாற்றும் நல்லோர் நேசம்
    வேருக்கு வலுசேர்க்கும் மண்ணின் ஈரம்
       வெற்றிக்குத் துணையாற்றும் நெஞ்சின் வீரம்
    யாருக்கும் பயனில்லா உயிரும் ஓர்நாள்
       யமனுலகு போகையிலும் துணைதான் யாரோ?

    10.12.2018

    Share
  • வியப்பு தோன்றும்!

    கவிஞர் இடக்கரத்தான்

    வான்நிலவும் கடலிறங்கி நீந்தக் கூடும்
       வஞ்சியரும் நெடும்தாடி வளர்க்கக் கூடும்
    தேன்சிந்தும் மலர்க்கூட்டம் பறக்கக் கூடும்
       தேரினையும் எறும்புகளும் இழுக்கக் கூடும்
    மீன்கூட்டம் மணல்மேட்டில் வாழக் கூடும்
       மின்வெட்டும் நிரந்தரமாய் மறையக் கூடும்
    வீண்வார்த்தை அரசியலும் பேசி வாழ்வோர்
       வாய்மைதனில் நடந்திடுங்கால் வியக்கத் தோன்றும்!

    புயலதுவும் தென்றல்போல் தழுவக் கூடும்
       புலிபோலும் எலிகளுமே பாயக் கூடும்
    மயில்களெலாம் குயில்களென இசைக்கக் கூடும்
       மதுவும்தான் உயிர்காக்கும் பொருளாய் மாறும்
    அயல்மொழியும் தமிழின்முன் மண்டி இட்டு
       அடிமைபோல் ஏவல்களும் செய்யக் கூடும்
    செயல்தனிலும் தூய்மைதனைக் காக்கும் நல்ல
       சீர்கொண்ட அரசியலால் வியப்பு தோன்றும்!

    – 09.12.2018

    Share
  • வாகை அள்ளு!

    கவிஞர் இடக்கரத்தான்

    எப்படியோ போகட்டும் நாடு – என்று எகத்தாளம் பேசுவதும் கேடு – தொடர்ந்து தப்புமிக நடப்பதனை துணிச்சலுடன் எதிர்க்கும் மனம் கொள்ளு – தீங்கு – கிள்ளு!
    எப்படியோ போகட்டும் என்று – உன்னுள் இருக்கின்ற மனசாட்சி கொன்று – பெரும் தப்படியில் செல்வாரை தடுக்கமனம் இல்லாமை குற்றம் – அவலம் – முற்றும்!
    தன்னலத்தார் முகத்திரையும் கிழியனும் – அவர் தலைக்கனமும் முற்றிலுமே அழியனும் – என்றும் பன்னலமும் காக்குமுயர் பண்புள்ளம் கொண்டோரின் உறவு – நல்ல – வரவு!
    நாட்டுநலம் தனைமுற்றும் மறப்பார் – குள்ள நரித்தனங்கள் செய்துவந்து பறப்பார் – பெரும் வேட்டையிட்டு நாடுதனை வேதனையில் தள்வாரை விரட்டு – சக்தி – திரட்டு!
    உன்னாலும் முடியுமடா தம்பி – நாடு உன்னையுமே இருக்குமிக நம்பி – நாளும் முன்நோக்கிச் செல்வதுதான் முழுவெற்றி கொணருமென்று முழக்கு – வெளுக்கும் – கிழக்கு!
    சொன்னதைச் செய்திடலாம் நம்பு – இந்த செகத்தைநம்பு கோலாலும் நெம்பு – வான் மின்னலெனச் செயல்பட்டு மேன்மைமிக நாடடைய வைப்பாய் – செயலில் – மெய்ப்பாய்!
    பத்துவிரல் மூலதனம் இருக்கு – என்று பயமின்றி மீசைதனை முறுக்கு – சிறு சத்தமின்றி வெற்றியுனை சங்கமித்து ஆற்றல்பறை சாற்றும் – ஊர் – போற்றும்!
    தன்னம்பிக் கைதனையும் பெருக்கு – உயர்வை தடுத்துவரும் எதிர்ப்புதனை உருக்கு – என்றும் உன்னைப்புறம் தள்ளும்குறு உணர்வுகளை வேருடனே கிள்ளு – வாகை – அள்ளு!

    கவிஞர் இடக்கரத்தான் – 03.12.2018

    Share
  • கொள்வோம் பங்கு!

    விட்டலாச் சாரியாரின் படமும் – பெரும் விந்தைசெய்ய மாறுதுதான் தடமும் – ரத்தம் சொட்டுகின்ற பேய்பிசாசு செய்மாயா ஜாலங்கள் அன்று – கிராபிக்ஸ் – இன்று!
    ஆந்திரரை கொல்டிகளும் என்று – அன்று அங்கலாய்த்த தமிழினமும் இன்று – கை ஏந்தவந்த கிராஃபிக்ஸை ஏற்றுவக்கும் செயல்சகிக்க வில்லை – ரசிகர் – தொல்லை!
    அறிவியலின் நுட்பங்கள் கொண்டு – காட்சி அதிரடியாய் மாறுவதைக் கண்டு – ரசிகர் அறிவின்றிக் கரம்தட்டி ஆரவாரம் செய்கின்றார் மிகுந்து – அரங்கு – புகுந்து!
    அறிவைமிக விழுங்குதுதான் நுட்பம் – மேலும் ஆழமாகும் நடிகர்ரசிகர் நட்பும் – நன்கு புரிந்துகொண்ட இயக்குனர்கள் புத்தியற்ற ரசிகர்கண்டு சிரிப்பார் – கயிறு – திரிப்பார்!
    தூக்கிவிடும் ஊடகங்கள் தாங்கும் – மகிழ்ந்து தருகின்ற பணத்திற்காய் ஏங்கும் – நாட்டை சீக்காளி ஆக்கும்துயர் சீர்கெட்ட செயலாற்றிப் பிழைக்கும் – தவறு – இழைக்கும்!
    தமிழ்த்திரையின் வளர்ச்சிஉச்ச கட்டம் – என்று தம்பட்டம் அடித்தலுமே மட்டம் – கடலுள் அமிழும்கலம் தன்னைவிட்டு அகலாது அழியும்ரசிகர் கூட்டம் – கொள்வார் – வாட்டம்!
    என்றைக்குத் தணியும்திரை மோகம்? – மேலும் இதுவளரின் நாடுமிகச் சாகும் – நன்கு கொன்றிதனைப் புதைப்பதற்குக் கொள்கைதனை யார்வகுப்பார் இங்கு? – கொள்வோம் – பங்கு!

    கவிஞர் இடக்கரத்தான்

    Share
  • நீர்க்குமிழ்

    நீர்க்குமிழி போல்அழகு காட்டும் பாங்கு நிரந்தரமாய் ஜொலிக்குமென நம்பிக் கொண்டு யார்க்கும்தான் அடங்காது பாயும் வேகம் நட்டாற்றில் மூழ்குமொரு படகின் சோகம்!

    போர்க்களமாம் வாழ்க்கைதனில் போரா டித்தான் பெரும்வெற்றி தனைநாமும் குவிக்க வேண்டும் பேருக்கு வீரரென நடித்துக் கொண்டு போய்வேடம் போட்டுவரின் தவிக்க நேரும்!

    எல்லாமும் எல்லார்க்கும் வாய்க்கும் என்னும் எதிர்பார்ப்பு சோகத்தில் முடிவில் தள்ளும் வல்லாராய்ப் பொய்வேடம் புனைந்து கொண்டு வாழ்ந்திடுவார் வருந்திடுவார் தோல்வி கண்டு!

    நல்லோராய் வாழுவதில் தவறு இல்லை நிச்சயமாய் அதுதொல்லை தாரா துண்மை வல்லூறு போல்பிறரை பறிக்கும் வாழ்வு வீழ்ந்துவிடின் துடிக்கத்தான் விரட்டும் தாழ்வு்!

    நெஞ்சத்தில் உயர்நினைவை நிரப்ப வேண்டும் நாளெல்லாம் நல்லுரையைப் பரப்ப வேண்டும் பஞ்சத்தில் வீழ்ந்திடினும் சோர்வு தன்னில் பணிந்துபிறர் பொருளேற்றல் தவிர்த்தல் வேண்டும்!

    மஞ்சத்தில் புரளுமுயர் வாழ்வு வாய்ப்பின் மனம்தன்னை பஞ்சாக்கிப் பணிந்து பிறர் அஞ்சத்தான் வாழும்வகை கோணா மல்தான் அன்புமழை மிதமாகப் பொழிதல் வேண்டும்!

    வானைப்போல் மனம்தன்னை விசாலம் ஆக்கி மானுடத்தை காக்கும்பணி ஆற்றல் வேண்டும் மானைப்போல் உயிராக மானம் தன்னை மனிதமெலாம் உயர்வாகப் போற்றல் வேண்டும்!

    தேனைப்போல் இனிக்கும்மொழி பேசல் வேண்டும் தென்றலென மென்காற்றை வீசல் வேண்டும் வீணையென இசைமழையைப் பொழிதல் வேண்டும் விண்நிகர்த்த புகழ்நிலையில் வழிய வேண்டும்!

    கவிஞர் இடக்கரத்தான்

    30.11.2018

    Share
  • அவனருள் கும்பிடடா!

     
    நல்லவை சுமந்து நன்மைகள் ஆற்றின்

    நாடு போற்றுமடா – நல்லது

    அல்லவை சுமந்து அல்லல்கள் வளர்ப்பின்

    அகிலம் தூற்றுமடா!
    பிறப்பின் பயனும் பிறர்க்கெனச் சொல்லும்

    பணியை ஆற்றிடடா – தனிச்

    சிறப்பை அதிலும் செலுத்தியும் வாட்டும்

    சிறுமை தூற்றிடடா!
    வாழ்வின் பயனும் புகழெனச் சொல்லும்

    வாழ்வை அமைத்திடடா – மிகத்

    தாழ்வுறும் நினைவை அறவே தள்ளியும்

    தர்மம் சமைத்திட்டா!

     
    ஏற்றமும் இறக்கமும் இரட்டைப் பிறவிகள்

    என்பதை அறிந்திடடா – நிலை

    மாற்றியும் இயற்கை காட்டுதல் உணர்ந்து

    மமதை எறிந்திடடா!

     
    காற்று என்றும் ஓர்திசை தன்னில்

    காலமும் வீசாது – நலம்

    ஆற்றும் செயலில் நன்மைகள் விளையின்

    நாடுனை ஏசாது!
    நல்லவை விதைப்பின் நன்மைகள் விளையும்

    நினைவில் ஏற்றிடடா – துயரில்

    தள்ளிடும் நினைவுகள் தன்னைத் தள்ளும்

    தர்மம் போற்றிடா!
    நாடுனைப் போற்றும் வண்ணம் நடந்து

    நற்பெயர் பெற்றிடடா – பெரும்

    கேடன் என்றுனை ஊரார் சாடா

    கொள்கையில் முற்றிடடா!

     
    மகிழ்ச்சி என்பது மனத்துள் உள்ளது

    மறந்தும் போகாதே – நிகழும்

    நிகழ்ச்சிகள் யாவும் ஈசன் செயல்தான்

    எவரையும் நோகாதே!

     
    இறைவன் வழங்கும் கடுகுள் மலையும்

    இருக்கும் நம்பிடடா – கூர் அறிவும்

    காலமும் சமமாய் வழங்கிய

    அவனருள் கும்பிடடா!

     
    04.02.2018
    கவிஞர் இடக்கரத்தான்.

    Share
  • நாளை வெம்புவார்!

     

    தண்ணிகேட்டு முதல்வர்பாவம் ஓடுறார் – தண்ணி

    தரமறுத்து கதவைஅங்கு மூடுறார்! – என்ன

    பண்ணித்தான் அவர்தொலைப்பார்

    பெருசுசெய்த பாவமின்னும்

    தொடருது – இருள் – படருது!
    செத்துப்போன உயிர்மீண்டும் வருமா? – தலை

    சாகடித்த காவிரிகை தருமா? – வாழ்க்கை

    வெத்தாகும் எனத்தெரிந்து

    வழக்குதனை திரும்பஅன்று

    பெற்றார் – வாழக் – கற்றார்!
    கறந்தபால் மீண்டும்மடி புகாது – நம்மைக்

    கதறவைத்த தலைசெயல் தகாது – நாட்டு

    நலனைமிக அவர்மறந்து

    நன்குதன்னைக் காக்கவுமே

    செய்தார் – வாகை – கொய்தார்!
    ஊழல்வழக்கில் சிக்கமனம் பதைத்தார் – மிக

    ஊசலாடும் மனசாட்சி புதைத்தார் – தன்னை

    வாழத்தான் செய்வதற்கு

    வழக்கதனை வாபஸ்வாங்கிப்

    பிழைத்தார் – பாவம் – இழைத்தார்!
    நடுவர்மன்றத் தீர்ப்பையுமே மதியார் – உச்ச

    நீதிமன்ற வாசல்தனை மிதியார் – கன்னடர்

    நடுவனரசு சொல்லுவதை

    நன்றெனவே கேட்கும்மனம்

    இல்லார் – பெரும் – பொல்லார்!
    நம்நாட்டு மக்களுமே சரியிலே – இவர்

    நடந்துகொள்ளும் விதமெதுவும் புரியலே – என்றும்

    தும்பைவிட்டு வால்பிடிக்கும

    தேவையற்ற செயல்செய்யப்

    பறப்பார் – கடமை – மறப்பார்!
    மஞ்சுவிரட்ட ஒற்றுமையாய் நிற்பார் – அதில்

    மலையளவு வெற்றிபெறக் கற்பார் –

    அணையில் கொஞ்சமுமே நீரின்றி

    காளைஎட்டிப் பார்த்திடினும்

    வருந்தார் – என்றும் – திருந்தார்!
    முந்துரிமை விதிச்சிறப்பை அறியார் – அதை

    முறையாகப் பயன்படுத்தத் தெரியார் – நமைச்

    சந்திதனில் நிற்கவைக்கும்

    சதிகாரர் அரசியலை

    நம்புவார் – நாளை – வெம்புவார்!
    06.02.2018
    கவிஞர் இடக்கரத்தான்

    Share
  • கொடி தனை ஏந்தும்!

    கவிஞர் இடக்கரத்தான்

     

    இந்திய தண்டனைச் சட்டம் விரைந்து

    எதைச் செய்ததுஎனத் தெரியலே – அதை

    முந்தியில் செருகியும் ஊழல் செய்வார்

    முற்றும் மறைத்தல் சரியிலே!

    ஒளிக்கற் றைதனில் ஊழல் செய்தார்

    ஒழிந்து திரிவார் நன்று – சட்டம்

    எளிதாய் வாய்தா வழங்கியும் நீதியை

    எறிந்தே வீசிடும் கொன்று!

    எத்தனை வருடங்கள் வழக்குத் தொடருது

    என்று தானிது முடியும்? – வழக்கு

    இத்தனை வருடம் தொடர்ந்து நடப்பின்

    என்று அவலம் வடியும்?

    பசியைப் போக்க உணவைத் திருடிய

    பாமரன் மறுநாள் சிறையில் – நாட்டை

    ருசித்துப் புசிக்கும் பாதகர் அழகாய்

    பளபளப் பார்குளிர் அறையில்!

    முரண்பா டதுவும் நீதித் துறையை

    முற்றும் அரித்து வருகுது – நாட்டைச்

    சுரண்டும் அரசியல் தனமும் நீதியைச்

    சுட்டும் பொசுக்கிடக் கருகுது!

    வழக்குரை ஞர்தமில் பாதிப் பேரும்

    வாய்மை தனைப்பொய் ஆக்குறார் – உயர்

    கிழக்கை மேற்கெனச் சொல்லும் திறனால்

    கயவரின் கவலை போக்குறார்!

    வண்ணம் மாறிடும் பச்சோந் திகள்போல்

    வகையாய் மாறும் தீர்ப்பு – தம்

    எண்ணம் போன்று தீர்ப்பை மாற்றிடின்

    எங்ஙனம் வாழும் ஈர்ப்பு?

    அன்று கொல்லும் அரசனும் இல்லை

    ஆண்டவன் கல்லெனும் தொல்லை – நீதி

    கொன்று குவிக்கும் சட்டம் தன்னால்

    கொடுமைக் கேது எல்லை?

    நாமும் அமைதி காப்பது இழிவு

    நிலையிது தொடருதல் அழிவு – இனித்

    தாமதம் இன்றியும் வாள் எடுப்போம்

    தர்மம் சாயுதல் தடுப்போம்!

     

    Share
  • துயர் போக்கடா!

     கவிஞர் இடக்கரத்தான்

     

     

    மனிதமுமே சிறிதேனும் இல்லார் – புனித

    மண்தனையும் ஏய்த்துவக்கும் பொல்லார் – வாழ்வின்

    புனிதமதை மிகமறந்து

    புவிதனையும் மிகப்படுத்தி

    வாழ்வார் – வீழ்ந்து – தாழ்வார்!

     

    பிறர்துயரில் மகிழ்ச்சிமிகக் கொள்வார் – பெரும்

    பொருள்பறிக்க வெறிபிடித்துத் துள்வார் – உயர்

    அறவழியை மிகமறந்து

    ஆதாயம் காணவழி

    தேடுவார் – ஓடி – ஆடுவார்!

     

    பேராசை பிடித்துமிக அலைவார் – பெரும்

    பேய்த்தனங்கள் செய்ததனில் குலைவார் – என்றும்

    நேராக்க முடியாத

    நெளிவுவழி தனில்நடந்து

    கெடுவார் – துயர் – படுவார்!

     

    அன்புவீசை என்னவிலை? என்பார் – பிறரை

    அடித்தவரும் அதன்துயரை உண்பார் – என்றும்

    என்புதோல் போர்த்தவரும்

    எளிதாக மண்ணுலகை

    ஏய்ப்பார் – நலம் – தீய்ப்பார்!

     

    தனையசைப்பார் யாருமிலை சொல்வார் – பெரும்

    தலைக்கனத்தில் பிறர்கனவைக் கொல்வார் – என்றும்

    தனைஆழம் புதைத்தழிக்கும்

    தகுதியற்ற வழிதன்னை

    நாடுவார் – தேடி – ஓடுவார்!

     

    புனையாரின் குருட்டுத்தனம் புரிவார் – கண்ணைப்

    பொத்திடவும் உலகொளிரின் எரிவார் – பெரும்

    ஆனைவெளிறி ஓடுதல்போல்

    அதட்டிவரும் மெய்க்கெனவே

    அஞ்சுவார் – அழுது – கெஞ்சுவார்!

     

    மேலொருவன் பார்ப்பதனை மறப்பார் – தனை

    மடக்கயாரும் இல்லையென்று பறப்பார் – எந்தக்

    காலமுமே ஏதும்செய்யா

    கடவுள்கற் சிலைஅஞ்சேன்

    என்பார் – தீ – பண்பார்!

     

    தெய்வம்நின்று கொல்லுமெனல் பொய்யடா – உடன்

    தேடிவந்து பாய்ந்தடித்தல் மெய்யடா – இனிச்

    செய்வதையும் நலம்காக்கச்

    செய்வதற்கு நினைவலைகள்

    தேக்கடா – துயர் – போக்கடா!

     

     

    Share
  • அவலம் ஓயனும்!

    கவிஞர் இடக்கரத்தான்

    இழிவுகளும் நாட்டினிலும் பெருகுது 

    பெரும் இடரதனால் நாட்டின்வளம் கருகுது 

    மிக அழிவதனை அன்னைநாடு அணைப்பதற்கு

    முன்னதனைக் காக்கனும் – துயர் – போக்கனும்!
    அண்ணல்காந்தி தந்தவுயர் விடுதலை 

    தனை அடகுவைத்து வளர்க்கின்றார் கெடுதலை 

    பெரும் தன்னலத்தார் அரசியலால் தாய்நாடு தள்ளாடி வீழுது

     துயர் – சு+ழுது!
    காந்தியவர் வாரிசெனச் சொல்லுறார் 

    அதில் கருணையதும் இன்றியுமே கொல்லுறார் 

    மிக வாந்தியுமே எடுத்தாற்போல் வகையற்ற துயராட்சி நடத்துறார் 

    காலம் – கடத்துறார்!
    அவசரக் கோலமெனும் திட்டம் – தந்த அலங்கோலத் தால்கண்டோம் நட்டம்

     பெரும் நவரச நாயகனாய் நடித்தேய்க்கும் தாடிமிக மோசம்

     வெற்று – கோஷம்!
    ஊர்ஊராய் சுற்றியுமே திரிவார்

    மிக உத்தமராய் காட்டியுமே வருவார்

     உற்றுப் பாரெந்தன் நடிப்பதனை பாரனைத்தும்

    போற்றுதெனை என்கிறார் – நாட்டைத் – தின்கிறார்!
    தாமரையை வளர்க்கவுமே எண்ணுறார் 

    ஆட்சித் தளவாடத் தால்துயரும் பண்ணுறார் 

    பெரும் பு+மறையும் நாகமெனப் பெருந்தீங்கை

    மறைந்தவரும் செய்யுறார் வாகை – கொய்யுறார்!

    தூஙகும்வரை தொடையில்கயிறு திரிப்பார் 

    நம் தயவாலும் ஜெயித்துமிகச் சிரிப்பார் 

    துயர் தாங்குதற்கா நாம்பிறந்தோம்?

    துணிந்தெழுந்து நாம்புயலாய் பாயனும் – அவலம் – ஓயனும்!
    08.08.2017

    Share
  • வல்லமையின் மறுவடிவம் பாரதி!

    கவிஞர் இடக்கரத்தான்

    1449822241-4574

    வல்லமையில் மறுவடிவம் பாரதி 

    நரிகள் வெள்ளையர்க்குத் தானவனும் பேரிடி 

    அடிமைப் பள்ளமதில் நமைத்தள்ளிப் படுத்தியவர் தமைப்பதறச் செய்தவன் – பாட்டால் – வைதவன்!
    அனைவர்க்கும் வேண்டும்தான் வல்லமை – எதிர்ப்பு அஞ்சிஓடும் வண்ணம்திடச் சொல்லமை – செய்யின் உனைத்துரத்தும் எதிர்ப்பலையை உன்காலில் விழச்செய்வாய் என்றான் – மனதில – நின்றான்!
    பாரதியின் பாட்டனைத்தும் நெருப்பு – வெள்ளைப் பதர்களுக்கு அவனென்றால் வெறுப்பு – பெரும் பாரதிரும் பாட்டாலும் பரங்கியரை ஆட்டிவைத்துக் காட்டினான் – துரத்தி – ஓட்டினான்!
    ரௌத்திரமும் கொள்ளுமெனச் சொன்னவன் – பாட்டு ரதமோட்டி வலம்வந்த தென்னவன் – பெரும் ஔவியமும் கொண்டவெள்ளை அரக்கர்தமை நடுநடுங்கச் செய்தவன் – வாகை – கொய்தவன்!
    தோட்டாக்கள் எனும்அவனின் பாட்டு – வெள்ளைத் துரைமார்க்கு வைத்ததுதான் வேட்டு – பாட்டு நாட்டோரை உந்தவைக்க நரிகளெனும் பரங்கியரும் பணிந்தார் – ஓடத் – துணிந்தார்!
    பாட்டுக்கு ஒருபுலவன் பாரதி – விடுதலைப் போரில்ரதம் செலுத்தியநற் சாரதி – எங்கள் நாட்டின்பெரும் செல்வமதை நக்குபவர் நாவறுப்பேன் என்றவன் – பாட்டால் – கொன்றவன்!
    பாரதியை நெஞ்சிலென்றும் வைப்போம் – அவன் புனிதமொழி தமைவணங்கி மெய்ப்போம் – நமை யாரெதிர்க்க வந்திடினும் அச்சமில்லை அச்சமில்லை சொல்லுவோம் – நிமிர்ந்து – செல்லுவோம்!
    06.08.2017

    Share