Tag: சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

  • உலகச் சுகாதார தினம்

    -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    சுகாதாரத்தை நினைத்தால் இன்றோ
    சற்றும் நெஞ்சு பொறுக்குதில்லையே
    புறத்தூய்மை நீராலமையும் என்பதற்குப்
    புண்ணியம் சேர்க்கும் மழையுமில்லை
    அகத்தூய்மை வாய்மையாற் காண்பதற்கு
    அகம்தான் சீராய்ப் பெற்ற மனிதனுமில்லை! world hygene day

    நெஞ்சினில் நஞ்சு வைத்தே பலர்
    வஞ்சம் தீர்த்து மகிழ்கின்றார்
    பிஞ்சையும் விட்டு வைப்பதில்லை
    பெரியவரும் இதற்கு விதி விலக்கில்லை
    அஞ்சி தான் அனைவரும் வாழ்கின்றார்
    அஞ்சுதல் பேதைமை என்பது மறந்தே
    காடுகள் அழித்துக் காற்றை மாசுபடுத்திக்
    கருமேகத்தின் கூடலைத் தடைசெய்து
    மாரியின் திசையைத் தான் மாற்றி
    மதிகெட்டுத் தானும் அழிகின்றார்!

    புகையிலை எனும் பாதகத்தியின்
    பாதகம் உணர்ந்தும் அறிவிலிகளாய்ப்
    பிளாஸ்டிக் எனும் கொடுங்கோலனுடன்
    தோழனாய்க் கைகோத்த அப்பாவிகளாய்
    மது மாது இல்லையென்றால் பலருக்கு
    மதி விடுப்பெடுக்கிறது மணிக்கணக்காய்!

    ஆறறிவும் தாமே பெற்றிருந்தும் ஐயகோ!
    ஓரறிவுக்குக் கூடவா இன்னும் எட்டவில்லை?!
    வேண்டாம் இந்நிலை அன்புத் தோழர்களே!
    வேண்டுகிறேன் இந்நாளில் உங்களையே
    மனிதத்தோடு நாம் ஒன்றிணைந்தே நம்
    மரணத்தைச் சற்றே தள்ளி வைப்போம்
    எங்கும் எதிலுமே தூய்மை கண்டிடவே
    எல்லோரும் ஒன்றாய்ப் படையெடுப்போம்!

    (ஏப்ரல் 7 – இன்று உலகச்சுகாதார தினம்)

     

    Share
  • மகளிர்க்காக!

    – சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
    womens' day

     

     

     

     

     

     

     

     

    அன்பை வழங்குதலில் ஆனாய் அன்னையே
    ஆறுதல் அளித்துத் தேற்றுவதில் தோழியே
    இல்லறத்தை நல்லறமாக்கும் இனிய துணைவியே
    ஈடற்ற குலக்கொழுந்தே ஆனாய் நீ நன்மகளே
    உறைக்கக் கூறி குறை களைதலில் உன்னத சகோதரியே
    ஊர் உலகமே போற்றட்டும் நீ வாழி என இன்றுனையே
    எத்துணை பேரிடர்  உன் வாழ்வதினிலே தான் வரினும்
    ஏற்றதனை வெற்றி கொள்வதனில் நீயே மகா சக்தியடி
    ஐ! நின் பெருமை என் சொல்ல மாற்றுக் குறையா பொன்னே!
    ஒன்றா இரண்டா பலகோடி பாமாலையாய் அதைத்  தொடுத்துச்
    சீராக அதனையுமே சிறப்புறவே  உந்தனுக்கே
    சென்று எட்டுத் திக்குமே ஒலிக்கச் செவ்வனே செய்திடுவோம்!

     

     

    Share
  • பொங்கல் திருநாளும் வந்ததே!

    -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    அகமோடு முகமும்   மலர
    ஆதவனை வணங்கி வரவேற்று
    இல்லத்தில் பொங்கல் வைத்து                         pongal4
    ஈடற்ற மகிழ்ச்சி தானும் பொங்க
    உள்ளத்தே நல்லன மட்டும் விதைத்து
    ஊராரோடும் நாம்தான் ஒன்றுகூடி
    எப்போதும் சமத்துவமே மேலோங்க
    ஏகமனதுடன் வாழ்த்துக்கள்  பரிமாறி
    ஐ! நம் தை மகளுக்கும் நன்றிசொல்லி
    ஒப்பற்ற சமுதாயம் உருவாகவே
    ஓயாது நாமும் தான் பாடுபடுவோம்!
    பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவர்க்கும்!

    வாழ்க வளமுடன்!

     

     

    Share
  • மழை 

    -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    மழலை ஜானி விளையாட
    மழையைப் போகச் சொல்லி                        rain
    மற்றொரு நாள் வருமாறு
    பணித்தோம் பள்ளிக் காலத்தில்…

    பள்ளிக்கால மழையின் பணிவோ
    இக் கலிகால மழையிடம் இல்லை
    பலகோடி ஞானிகள் ஒருசேரப்
    பணிந்து நின்று கெஞ்சினாலும்
    அடங்க மாட்டேன் நானென்று
    அடம் பிடிக்கின்றதே அடைமழையாய்…!

     

    Share
  • மகாத்மாவும், கல்வித் தந்தையும்!

      -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    அஹிம்சையை ஆயுதமாய்க் கொண்ட அண்ணலே
    ஆர்வமுடன் உமைஇன்று  நினைவு கூா்வோமே
    இந்திய தேசத்தின் பிதா நீர் இல்லையெனில்
    சுதந்திரக் காற்றை நாங்கள் சுவாசிக்க  இயலுமா?  gandiandkamaraj

    உயரிய வழியில் தான் போராட்டம் பல நடத்தி
    நாட்டின் மகாத்மாவாய் நாளும் பலர் மனதில் நீரே
    கதராடை மகத்துவத்தை அனைவர்க்கும் உணர்த்தி
    கண்கண்ட கடவுளாய்த் தூய மனதோடு நின்றீரே

    பலர் மனதைப் பற்றிய தீண்டாமைப் பேய்தான்
    பகலவனைக் கண்ட பனிபோல் விலகியது உம்மால்
    நற்குணங்களின் நாயகன் நீர் பிறந்த நாளில் தான்
    கல்விக் கண் தந்த காமராஜருமே விட்டுப்  பிரிந்தார்

    தாய்மண்ணின் பெருமை தரணியெல்லாம் சிறக்கத்
    தன்னலமற்ற நன்மகனார் அளித்த கல்வியே சாட்சி
    கஷ்டங்கள் பல தாங்கித் திட்டங்கள் பல அர்ப்பணித்த
    கர்ம வீரர், படிக்காத மேதை அவரையும்  பணிவோமே

    நன்மக்கள் இருவரை இன்று  நினைக்கின்ற கடமையே
    நாட்டு மக்கள் நம் அனைவரின்  தலையாயக் கடமையே
    ஆட்சிகள் பல மாறிடலாம்,  காட்சிகள் பல மாறிடலாம்
    ஆதவன் தம் புகழ் போல  உங்கள் புகழ்  நீடு வாழும்!

     

    Share
  • நிலா முத்தம்!

    -சித்ரப்ரியங்கா சுப்ரமணியன்

    நில்லாமல் ஓடி வரத் தானே
    நிலாப்பெண்ணே உனை அழைத்தும்,
    நீண்ட இடைவெளி நம்மிருவருக்குள்!    moon and cloud

    ஓ! அதிர்ஷ்டசாலி முகிலனோ?
    சத்தம் இல்லாமல் வானில் தான்
    முத்தப் பரிமாற்றம் நடக்கிறதோ?

    விண்ணில் உள்ள வெண் நிலாவையும்
    மண்ணில் உள்ள பெண் நிலாவையும்
    முத்தமிடுவதில் சற்று சிக்கல்தான்!

    ஆம்!
    சத்தமின்றி இட்ட முத்தத்தால்
    சித்தம் மெல்லத்தான் கலங்கிப்
    பித்தனாய் நித்தம் உலவுவோர்
    இப்பாரினில் எத்தனை பேர் தானடி!

    முகிலனே!
    நீயோ அதிர்ஷ்டசாலி!
    பட்ட துயரை மழைநீராய்க்
    கொட்டித் தீர்த்துக் கொள்கின்றாய்!
    என் கண்ணில் நீரில்லை!

    நீயோ அதிர்ஷ்டசாலி!
    நானோ அவளால் ஆனேன்
    உன்னிடம் இன்று கடனாளி!

     

     

    Share
  • முண்டாசுக் கவியே மீண்டும் வா!

    – சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    கம்பீரத் தோற்றத்துடன் விளங்கும் அழகுக் கவியே
    காணவில்லை எனத்தான் தேடுகிறோம் உனையே
    சுதந்திரக் காற்றை நாங்கள் நித்தம் சுவாசிக்கத் தானே
    பல கவிதை தான் வடித்துப் பக்குவப்படுத்திய சிற்பியே
    எட்டையபுரம் பாரதத் தாய்க்கு அளித்த அறிவு மழலையே
    எட்டாத தொலைவே ஓடவைத்தாய் நீயும் அந்நியனையே

    கண்ணனைக் கண்ணம்மா ஆக்கிக் கவிபல பாடினாயே
    உன் செல்லம்மாவுமேதான் உனக்காக ஆனாள் தாயே
    அச்சமில்லை அச்சமில்லை என அன்றே நீயும் உரைத்தாய்
    அஞ்சி வாழும் அவல நிலை அறிந்தால் நீயோ துடிப்பாய்
    நீ கண்ட புதுமைப் பெண்களாய் இருக்கத் தானே ஆவல்
    நீயே கண்டால் வெடிப்பாயே பெண்மைக்கு ஏது காவல்?
    உனக்காக நாங்கள் இன்று செலுத்துவோம் வீரவணக்கம்
    உன் நாமம் சொன்னால் தானே தமிழும் அமிழ்தாய் இனிக்கும்!

    தரணி தன்னில் பல துறையில் சிறந்திருக்ககிறோம் நாமே
    தப்பாது அன்றே நீ வடித்த வரிகளின் இலக்கணம் தானே
    நன்றிகள் பலகோடி உரித்தாக்குவோம் உனக்கே ஐயா
    நலிந்த நம் தாயவள் முகம் மலரச்செய்த தலைமகனே
    என்ன தவம் செய்தோம் உனைப்பெற முண்டாசுக் கவியே
    என்று மீண்டும் நீ வருவாய் என ஏங்கித் தவிக்குது புவியே
    அண்டம் உய்ய மீண்டு(ம்) வா ஐயனே!

     

    Share
  • நாதமற்ற நல்வீணை!

    -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    நல்லதோர் வீணை செய்தே அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுபோல்
    எனக்கும் சிறிது கவித்திறன் தந்து
    ஏனிந்த ஈனச் சமூகத்தில் உலவவிட்டாய்
    தமிழன்னையே?

    மாதர் தம்மை இழிவு செய்யும்
    மடமையைக் கொளுத்துவோம் எனும்
    முண்டாசுக் கவியின் பொன்மொழி கொன்று
    மாதரைக் காமத்திற்காகக் கொளுத்துகிறான் இன்று!

    அன்னையே கண்கண்ட தெய்வம்
    அக்கா அவளோ இரண்டாம் தாய்
    தங்கை அவளோ தான்பெறாத குழந்தை
    தாரம் அவளோ பத்தினித் தெய்வம்
    உண்மையான காதல் இவர்களிடம் இருக்க,
    உதவாக்கரை சிலரோ
    இக் கலிகாலக் காதல்பேயைப் பற்றிக்
    கண்டபடி அலைகிறார் பெண் பின்னால் சுற்றி!
    காதல் என்பதன் உண்மை அர்த்தம் உணராது
    ஐ லவ் யூ என அரற்றுவதேன் சில ஈனப் பதர்கள்?

    இருபதில் காதலி ஐ லவ் யூ சொல்வது வேதம்
    அதே
    நாற்பதில் சகோதரி ஐ லவ் யூ சொல்வது நாராசம்
    அறுபதிலோர் அன்னை ஐ லவ் யூ சொல்வது ஆபாசம்
    நன்றிகெட்ட சமூகத்தின் நிலைதான் இது!
    தாய்க்கும் தாரத்திற்கும் தங்கைக்கும் அக்காவிற்கும்
    வித்தியாசம் உணராது அறிவு விளையாத களர்நிலத்தில்
    ஈனப் பதர்களாய்ச் சில கருங்காலிகள்!

    முண்டாசுக் கவியோ இன்றிருந்தால் அம்
    முண்டாசால் தூக்கிட்டு மாண்டிருப்பான்!
    துண்டு துண்டாய்த் தன்னை வெட்டித்
    தானே கீழே தவித்தபடி சாய்ந்திருப்பான்!
    அதனால்…
    பெண்களே விழித்தெழுங்கள்!
    முண்டாசுக் கவிஞனுக்கு நீர் ’பிண்டம்’ வைக்கவில்லை எனினும்
    இந்த அண்டம் காக்க அலைகடலெனத் திரண்டு ஒன்றுபடுங்கள்!
    பெண்ணே,
    பெண்ணாய் நீ பிறந்ததற்குப் பெருமைப்படு அடி என் கண்ணே!

     

    Share
  • அன்னை

    சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்.

    அன்னை (பலர் குடியிருந்த (குடியிருக்கும்) கோவில்)

    received_1572346819684554
    அம்மா!

    ‘இந்த ஒரு வார்த்தையில்தான் அகிலமே உள்ளடக்கம்’.

    ஆம், அன்னையானவள் இல்லத்தின் ஜீவநாடி. அந்தத் தாய் தன் திருமணத்தின் முன்னரே தன் அன்னை, உடன்பிறந்தவர்க்கு அன்னையாய்த் திகழ்ந்தவள். அடிமை இந்தியாவில் அவதரித்து இருப்பினும், தன் இல்லம் தழைத்தோங்கி நிற்கப் பாடுபட்டவள். குடும்பத்தில் செல்லமாக வளர்க்கப்பட்டும், தந்தை நோய்வாய்ப்பட்டு இறந்தபோதும் தந்தை ஸ்தானத்தைத் தான் எடுத்துக் கொண்டவள்.

    தந்தையின் மரணம் அவளை வெகுவாய் பாதித்தது. இளம் வயதில் பத்தாம் வகுப்பு வரை பயின்று, தட்டச்சில் தேர்ச்சி பெற்று, குடும்ப நண்பர் உதவியுடன் குடும்பப் பொறுப்பைக் கையிலெடுத்தவள்.

    ஏதோ புண்ணியம் செய்ததால். தன் மகள் போல பாவித்த அவர் உதவியுடன் முன்னேறி மெல்ல மெல்ல அவள் அரசுப் பணியில் சேர்ந்தாள். ஒரே சேலையைக் கிழித்து, அக்கா, தங்கை உடுத்து, தம்பி பாவம், அவன் பல இடங்களுக்குச் செல்பவன் எனப் பிள்ளையாய் அவனுக்கு நல்ல உடை அணிவித்து அழகு பார்த்தவள்.
    தம்பி தங்கையை ஊக்குவித்து அவர்களையும் ஆளாக்கி, அரசுப் பணியில் அமர்த்தி பணியாற்றச் செய்தவள். பின் தன் பொறுமைக்குக் கிடைத்த பரிசாய் அமைந்த கணவனுக்கோ அரசுப் பள்ளியில் ஆசிரியப் பணி. கணவன் உதவியுடன் தாய், தங்கை, தம்பிக்கு ஆதரவாய் இருந்து, உடன்பிறந்தோர்க்கும் நல்ல திருமண வாழ்க்கை அமைத்துக் கொடுத்தவள்.

    ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது’

    என்னும் வள்ளுவனின் வாய்மொழிக்கேற்ப இல்லறத்தை இனிதாய் நடத்தி வந்து, கட்டினவன் இஷ்டப்பட, தான் கஷ்டப்பட்டு இரண்டு ஆண்பிள்ளைகள், ஒரே பெண் என மூவருக்குத் தன் கருவறையைக் கடனாகக் கொடுத்து, இந்த விந்தை உலகைக் காணச் செய்தவள் அந்தத் தாய்.

    பிரசவத்திற்கு முன் தன் செல்ல மகளைப் பெற்றெடுக்க அவள் பட்ட வேதனை தான் என்ன சொல்ல. ஒற்றைத் தலைவலியால் அவதியுற்று, அந்தக் கஷ்டத்தினூடே அலுவலகம் சென்று பணியாற்றி, பெண் சிசுவைப் பாதுகாத்து ஈன்றெடுத்தாள்.

    ‘பெண் பிள்ளை வேண்டாமென்ற பழங்கூற்றைத் தான் போக்க
    பத்துமாதம் பெண் சிசுவைக் கருவில் பாதுகாத்து வளர்த்தவள்’,
    பின் ஈன்றெடுத்து, தந்தை அவர்தம் கைகளிலே தாலாட்டக் கொடுத்தப் பெருமை, நம் அன்னை அவளையே சாரும்.

    குழந்தைகளைப் பாதுகாத்து வளர்க்க அவள் அன்னை உதவியாக இருந்ததால், அவள் சுமை சற்றுக் குறைந்தது. தானும், தன் கணவனும் அரசுப் பணியில் இருந்ததாலோ என்னவோ, தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கொடுக்க முடிந்தது. எத்தனை வீடுகளில், அக்காலத்தில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வி கிடைப்பது சாத்தியம் என்பதைச் சற்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த வகையில் நம் அன்னை புண்ணியவதி, பிள்ளைகளும் அதிர்ஷ்டசாலிகளே.

    ‘தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை’
    என்னும் கூற்றுக்கிணங்க நம் அன்னையின் மழலைகள் அவளைப் போலவே படிப்பில் படு சுட்டியாய்த் திகழ்ந்தால்,

    ‘ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக் கேட்டத் தாய்’
    என நம் ஐயன் வள்ளுவப் பெருமான் வாய்மொழிக்கும் உதாரணமான சிறப்பு அன்னை அவளுக்கு மட்டுமே.

    பிள்ளைகளைக் கடைசி வரை ஆளாக்கி அன்னையென இருந்த பெருமை பாட்டி, அன்னை மற்றும் சிற்றன்னைக்கு உண்டு. எனவே அன்னையென மூன்று காவல் தெய்வங்கள் இருந்தால் இல்லம் கோவில் தானே?

    பிள்ளைகள் படித்த கிறித்தவப் பள்ளியில் இரு செவிலித்தாய் அன்னையராய் குழந்தைகளை அரவணைத்து, அன்பு செலுத்தி கல்வி தந்ததால், நம் அன்னையின் இல்லம் மெல்ல மெல்லப் பல்கலைக்கழகமாக மாறத் தொடங்கியது. செவிலி அன்னையரின் பிரார்த்தனையால், அவர்கள் வேளாங்கண்ணி மாதா கோவில் சென்று வந்து அவர்கள் தந்த எண்ணெய் பிரசாதத்தாலும், அவளின் ஒற்றைத் தலைவலியும் நாளடைவில் மறைந்தது. இப்படி அன்னையானவள் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஜோதியெனத் திகழ்கிறாள்.

    அடுத்து தம்பி, தங்கை திருமணத்தை இனிதே நடத்திக் கொடுத்து, அவர்களின் அன்னையாய் கணவனுடன் நின்று ஆசி அளித்து இனிதே வாழ வைத்து, அவர்கள் பிள்ளைகளையும் அரவணைத்தவள் அவள்.

    பாட்டியானவள் பேரப்பிள்ளைகளுக்கு வீட்டுப்பாடம் சொல்லிக் கொடுத்து, சமையலும் முடித்து வைத்திடுவாள். அன்னை மற்றும் சித்தியின் பணி அன்னையாய் அலுவலகப் பணியின் இடையிலும், பள்ளி சென்று பிள்ளைகளின் நலன் நோக்குதல், பின் அவர் தேவையை படிப்பில் பூர்த்தி செய்தல் எனத் தொடர்கிறது. அன்னையின் அன்புக்கு என்றும் அழிவில்லை, அவள் பணிக்கு என்றும் ஓய்வில்லை.

    அவள் மகனும், மகளும் உயர்நிலை பயிலும் போது பள்ளியிலேயே முதல், மூன்றாம் இடம் பிடித்த போது, கணவனுடன் அகமகிழ்ந்து அவர்கள் வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு வழி வகுத்துக் கொடுக்கும் நிலையில் அவள் இப்போது மூன்று பிள்ளைகளையும் ஏதுவான பிரிவில் சேர்த்து மேல்நிலைக் கல்வி பயில வகை செய்தாள்.

    ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’
    என்பது போல் பிள்ளைகளின் முயற்சிக்கும், கணவனுடன் கைகோர்த்து தாய் தந்த ஊக்கத்திற்கும் பலனாக மூத்த பிள்ளைக்கு மருத்துவக் கல்லூரி, மற்ற இருவருக்கு பொறியியல் கல்லூரியில் சேர அனுமதி. அவர்களின் கல்லூரி படிப்பு செலவிற்கு கணவன் உழைக்க, தானும் இல்லத்திலும் வேலை செய்து கொண்டு, அலுவலகத்திலும் இன்முகத்தோடு அயராது உழைத்திருப்பாள்? அந்த வேதனையை அவள் வெளிக்காட்டியதே இல்லை. ஏனெனில் தாய் பொறுமையின் இலக்கணம்.

    செல்லமாய் வளர்த்த மகளைக் கல்லூரியின் விடுதியில் விட்டு அவள் நலன் அறிய நேரமானால், கணவனுடன் சேர்ந்து துடித்த வேதனையைச் சொல்ல வார்த்தையே இல்லை. பட்ட துன்பத்திற்கெல்லாம் பலனாக மூத்த மகனுக்கு அரசு மருத்துவமனையிலும், மற்ற மகன், மகளுக்கு பொறியியல் கல்லூரியில் பணி. இப்போது தாயின் மகிழ்வையும், மனநிலையையும் நான் உரைக்கத் தேவையில்லை.

    அலுவலகப் பணியில் இருந்து ஓய்வு பெற்றுப் பின், இரு மகன்களுக்கும் மருத்துவப் பணியில் உள்ள இரு குணவதிகளை மனைவியாய் அமைத்துக் கொடுத்து, மருமகள்கள் இருவருக்கும் அன்னையாய்த் திகழ்கிறாள் நம் அன்னை. பிறகு தன் தாயும் நோய்வாய்ப் பட்டுப் பிரிந்தபோது, தாங்கொண்ணா துயருற்ற அவளுக்கு அன்னை அவள் கணவன் மட்டுமே.

    அன்னையாய் மருமகள்கள் இருவருக்கு மட்டுமின்றி, தம் பேத்திகளுக்கும் அன்னை அவளே. அவர்கள் இருவரையுமே பள்ளி செல்லும் வரை வளர்த்து ஆளாக்கி விட்டு மகன்கள் குடும்பத்திற்கும் துணை நிற்கிறாள். அன்னையாய் விளங்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் கண்ணயர்வு என்பதே கிடையாது.

    அப்படித்தான் நம் அன்னை தன் கணவனுடன் இணைந்து மகன்கள், மருமகள்கள் பணிக்குச் சென்ற போது பேத்திகளை கண்ணயர்வின்றி கவனித்துக் கொண்டது. அன்னையின் பணி இதுதான் என நாம் பட்டியலிட முடியாது.

    ஆனால் அந்த அன்னைக்கு இத்தனை மகிழ்விலும் ஓர் மனக்குறை மட்டுமே. தன் செல்ல மகள் மணம் தாமதமானால் எந்த அன்னை மனம் சகிப்பாள்? அன்னையாவாள் முதல் தெய்வம். அந்தத் தெய்வத்தின் மனக்குறையும் ஒரு நாள் நிவர்த்தி பெறுமா என்றால் நிச்சயம் நிவர்த்தி ஆகும். எல்லாம் வல்ல தெய்வம், அவள் பட்ட கஷ்டத்திற்குப் பலன் நிச்சயம் தரும்.

    ஆம், ஒவ்வொரு பெண்ணுமே இந்த அவனியில் ஜனனம் எடுக்கும் தருணத்திலிருந்து, இவ்வுலகை விட்டு மறையும் வரை தாயாகத்தான் அவளை மாற்றிக் கொண்டு, தாய்மைப் பணிக்கென தன்னை அர்ப்பணிக்கிறாள் என்பதே நிதர்சனமான உண்மை. இதனால் அவள் படும் வேதனைகளை வெளிக்காட்டிக் கொள்வதில்லை என்பதும் உண்மையே.

    அன்னையே அன்பின் முதல் மொழி, கண்கண்ட தெய்வம், ஏன் அனைவரின் வாழ்க்கைக்கும் ஆதாரம். ‘அவனின்றி ஓர் அணுவும் அசையாது’, என்பதை விடுத்து ‘அவளின்றி ஓர் அணுவும் அசையாது’ எனக் கொள்வதே சாலச் சிறந்ததாகும்.

    அன்னையைப் பற்றிச் சுருங்கச் சொன்னால் அம்மா என்பதே அனைவர் அழைக்கும் முதல் வார்த்தை. அன்னையைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
    அன்பின் திரு உருவம்,
    அனைவர் வீட்டின் வாழும் தெய்வம்,
    பத்து மாதம் நம்மை சுகமாய்ச் சுமந்த சுமைதாங்கி,
    பரந்த உலகிற்காக நம்மை வழங்கிய வள்ளல்,
    பிள்ளை நிலாவாய் இருந்த நமக்கு வான் நிலா காட்டி அமுதூட்டிய அன்புத் தோழி,
    இளம்பிறையாய் இருந்த நம்மை முழுநிலவாய் வாழ்வில் மாற்றும் சிற்பி!

    அதனால் மழலை நமக்காக, மாதாவாகிய அவள் நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் அவளுக்காகப் பிரார்த்தித்து, மாதாவின் திருவடி பணிவோம். அன்னையை இழந்து வாடுவோர்க்கு மனக்குறையே வேண்டாம். அன்னை என்றாலே அன்பு. ஆம்! அன்னை மறைவதில்லை. அவள் ஒவ்வோர் இல்லத்திலும் ஒரு பெண் மகளாய் வேறு ஸ்தானத்தில் நித்தம் வலம் வந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

    அதனால் அன்னையின் அடி பணிவோம், அன்னையைப் போற்றுவோம், பெண்மையைப் போற்றுவோம், பேணிக் காப்போம். என்னைப் பெற்ற அன்னையின் அடி பணிந்து, என் கட்டுரையை இனிதே நிறைவு செய்கிறேன்.

    Share
  • எங்கள் கண்ணன் பிறந்தான்!

    -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    அகிலத்தையே அன்னைக்கு வாய்வழி காட்டியவனே
    ஆயர்குலக் கொழுந்தாய் விளங்கும் நல் அச்சுதனே
    இரந்துபின் கர்ணனுக்கு மோட்சம்தனைத் தந்தவனே
    ஈதலினால் சபையில் திரௌபதியின் மானம் காத்தவனே!  krishnan images.jpg (6)

    உலகம் உய்ய கீதோபதேசம் அருளிய நாயகனே – நீ
    ஊதும் குழலால் மெய்ம்மறந்த கோபியர்தான் எத்தனை பேர்?
    எட்டாவது மழலையாய் இன்று அஷ்டமியில் வந்தவனே
    ஏற்ற தசாவதாரத்தில் உந்தன் ஆற்றலினால் சிறந்தவனே!

    ஐ! கண்டதுமே திருஷ்டிபடும் அழகு செல்லக் கண்ணனே
    ஒருத்திக்கு ஒருவனெனும் உயர்வழி நின்ற சீதாராமனே
    ஓங்கி உலகளந்த உத்தமனே தூயவனே வாமனனே
    தேவி நாராயணியை மார்பில் தாங்கிய மாலவனே!

    நின் பிஞ்சுமலர்க் காலடி மெல்லத்தான் எடுத்து வைத்துச்
    சகத்தில் உள்ளோர் இல்லமெல்லாம் அருளைப் பொழிய
    சடுதியில் வந்திடுவாய் சிரித்த குழந்தையாய் பூபாலனே
    பாரதத்தில் பார்த்தனுக்குத் துணைநின்ற பார்த்தசாரதியே
    காத்தருள வேண்டுமய்யா அடைந்தோம் சரணாகதியே!

     

     

    Share
  • ஆசிரியரை நினைவுகூா்வோம்!

    -சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    அன்னை தந்தையை அடுத்துவரும் ஆசானே – உம்
    ஆசி ஒன்றிருந்தால் உலகையே தான் வெல்லலாமே  teacher
    இலைமறை காய் போன்ற மாணவர் அறிவதனை
    ஈடற்ற கலங்கரை விளக்கமாய் ஒளிரச் செய்பவரே
    உன்னதமான நின் கரத்தால் பாலகர் கரம் பிடித்து
    ஊக்கமுடன் ‘அ, ஆ’ எழுதக் கற்றுக் கொடுப்பவரே
    எழுத்தறிவித்த இறைவனே, எங்கள் குருநாதரே
    ஏகமனதுடன் உமை இன்று நினைவுகூா்வோம் நாமே
    ஐயம் தெளிவித்துக் கல்விக்கண் திறக்கும் கர்த்தாவே
    ஒளிமயமான எதிர்காலம் எங்களுக்கு நீர் வழங்கி
    ஓய்வின் பின்னும் உறுதுணையாய் உடன் நிற்கின்றீரே
    வாழ்வில் எத்தனைக் கட்டங்கள் நாங்கள் கடந்து வரினும்
    வாழவைக்கும் குருவே நின்தாள் தொழுது பணிவோமே!

     

     

    Share
  • தாயுமானவன்!

    – சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்

    அன்னையவள் இல்லத்தின் குலவிளக்காய்த்தான் திகழ
    அப்பனாக உடன் இணைந்து அகல்விளக்காய் ஒளிர்பவனே
    அன்னை தந்தையாய் உனைத்தான் எனக்கு அறிமுகப்படுத்த
    மழலை எனக்கு விந்தையாய்ப் பலவற்றின் அறிமுகம் தந்தவனே
    உன் மனைவி அவளுக்கு நீதான் ஆனாய் தலைச்சனே
    உன் பெற்றோர் மனதினிலோ நீ குலக்கொழுந்தாய் நிலைத்ததேன்?

    அன்னை பத்துமாதம் சுமந்ததுகூடப் பெரிதாய்த் தெரியவில்லை எனக்கு
    அப்பனாய் நீ நெஞ்சில் சுமந்தவலி தெரியவில்லையா உனக்கு?
    உன் மக்கள் அவர் தமக்கு என்றும் நீ கதாநாயகனே
    அவர் செயலில் தந்தை உன் செய்கை பிரதிபலித்தல் விந்தையல்லவே!
    உன் மகளின் மண வாழ்வில் இளவரசனே தான் வந்தாலும்
    மனதார அவள் நாளும் பூஜிக்கும் பேரரசனும் நீதானே!

    உன் மகன் தன் வாழ்வில் உயர்நிலையை அடைந்தாலும்
    மனக்கண் உன்துயர் மறைத்த மகத்தான ஏணி நீ தானே
    எங்களுக்காய் நீ செய்த தியாகமெல்லாம் என்ன சொல்ல
    எந்தை உன் புகழ்பாட நெஞ்சமெல்லாம் இனிக்குதய்யா மெல்ல
    அழைத்தவுடன் வர இயலாது என்று எண்ணித் தானோ
    ஆண்டவனே உனைத்தான் அனுப்பி வைத்தான் எங்களுக்காய்
    அன்னைதான் நாங்கள் குடியிருந்த கோவில் என்றாலும்
    தந்தை நீதான் இல்லத்தின் தலைசிறந்த காவல் தெய்வமே!

    அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பது போல்
    நீ தானே ஐயா நம் குடும்ப மரத்தின் நிலையான ஆணிவேர்!
    தந்தையே நீ இன்றுதான் எவ்வளவு தொலைவில் இருந்தாலும்
    தப்பாத உண்மை இதுதானே பல நேரம் நீ தந்தையல்ல
    தாயுமானவனே!

     

    Share