Tag: தி.இரா.மீனா

  • எட்டுக் கோணல் பண்டிதன் – 15

    எட்டுக் கோணல் பண்டிதன் – 15

    தி. இரா. மீனா

                 அத்தியாயம் பத்தொன்பது

    ஜனகர் தன் அனுபவ ஞானத்தால் விகற்ப நினைவனைத்தையும் நீக்கி, சுயமஹிமையில் நிலைத்துள்ள தனக்கு அதைத் தவிர வேறெதுவும் எண்ணத்தில் இல்லை  என சுவானுபவம் உரைத்தல் இவ்வத்தியாய மாகும்.

    1. தத்துவ ஞான அனுபவத்தை உள்வாங்கிக் கொண்டு மனதிலிருந்து பலவகையான ஆலோசனைகளாகிய முட்களை வெளியே எடுத்தேன்.

    2. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு அறம், பொருள், இன்பங்களேது? துவைதமேது? அத்வைதமேது?

    3. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு இறந்த, நிகழ் எதிர் காலங்களேது? இடமேது? என்றென்றும் என்பதேது?

    4. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு ஆத்மாவேது? அனாத்மாவேது? நன்மை தீமைகளேது? நினைப்பும் நினைப்பின்மையும் ஏது?

    5. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு கனவேது தூக்கமேது்? விழிப்பேது பயமேது? தைரியமேது?

    6. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு தொலைவேது? அருகேது? உள்ளேது? வெளியேது? நுட்பமேது? தூலமேது?

    7. சுயமஹிமையில் நிலைத்துள்ள எனக்கு சாவேது? வாழ்வேது? உலகங்களேது? உலகியலேது?ஒடுக்கமேது? சமாதியேது?

    8. ஆத்மாவில் அமைதியடையும் எனக்குப் யோக வரலாறும், ஞான வரலா றும் போதும்! போதும்!

                       அத்தியாயம் இருபது

    ஜனகர் தூய அறிவாகிய தன்னிடம் கருவி,கரணாதிகள்,இரட்டைகள், வினைகள், உலகம், ஜீவர்கள், மாயை, சம்சாரம், மோட்சம் முதலான எதுவுமில்லை என்று கூறுதல் இவ்வத்தியாயமாகும்.

    1. மாசில்லாத என் சொரூபத்தில் பூதங்களேது, உடலேது, பொறிகளேது, மனமேது, சூன்யமேது, அவாவின்மையேது?

    2. என்றும் இரட்டையில்லாத எனக்குச் சாத்திரமேது, ஆத்மஞானமேது, நினைப்பில்லாத மனமேது, நிறைவேது, ஆசையில்லாத தன்மையேது?

    3. அறிவு அறியாமைகளேது, நானேது, இதுவேது, எனதேது, பந்த முக்தி களேது, சொரூபத்திற்கு வடிவமேது?

    4. என்றும் வகுக்க முடியாத வினைகளேது, ஜீவன் முக்தியேது, விதேக முக்தியேது?

    5. புரிபவனேது, புசிப்பவனேது, வினையில்லாத விளக்கமேது, எந்தக் காலத் திலும் குணமற்ற எனக்கு ரோஷமும் அதன் பயனுமேது?

    6. நானேயாகின்ற ஒரே சொரூபத்தில் உலகமெங்கே, யோகியும், ஞானியும், பக்தனும், முக்தனும் எங்கே?

    7. நானேயாகின்ற ஒரே சொரூபத்தில் படைத்தலும், அழித்தலுமேது? சாதிப் பிற்குரியதும், சாதனையும், சாதகனும், சித்தியுமேது?

    8. அறிபவனும், அறநெறியும், அறிபொருளும், அறிவுமேது? என்றும் தூயவ னாகிய எனக்கு ஒன்றென்பதும், ஒன்றுமில்லை என்பதுமேது?

    9. என்றும் வினையில்லாத எனக்குச் சிதறுவதும், குவிவதுமேது? அறிவு அறியாமைகளேது?மகிழ்ச்சியும், துன்பமுமேது?

    10. எப்போதும் நினைப்பில்லாத எனக்கு விவகாரமேது, அமைதியேது? சுக துக்கங்களேது?

    11. என்றும் மாசில்லாத எனக்கு  மாயையேது, சம்சாரமேது? விருப்பமும், வெறுப்புமேது? ஜீவனும், அதுவெனும் பிரம்மமுமேது?

    12. மாறாத பரம்பொருளினும் வேறில்லாத தானாயிருக்கும் எனக்கு இணைவ தேது, விலகலேது?, பந்தமேது, விதுதலையேது?

    13. உபாதையற்ற சிவமாகிய எனக்கு  உபதேசமேது, சாத்திரமேது, சீடனேது, குருவேது? அடைவதற்குரிய பேறு என்று என்ன இருக்கிறது?

    14. இருப்பேது .இன்மையேது? ஒன்றேது, இரண்டேது? பலவாறு  இப்படிக் கூறுவது எதற்கு? எனக்கு முன் எதுவுமேயில்லை.

    [முற்றும்]

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 14

    எட்டுக் கோணல் பண்டிதன் – 14

    தி. இரா. மீனா

                 அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி

    71. ஒளி வடிவமாகக் காண்கின்ற பொருளேதும் காணாதவனுக்கு விதியேது, விரக்தியேது, துறவேது, அடக்கமேது?

    72. எல்லையில்லாத பொருளாகச், சுடர் விடுபவனாக படைப்பையே காணாதவனுக்குக் கட்டுப்பாடேது விடுதலையேது, சுகமேது, துக்கமேது ?

    73. அறிவு மட்டுமே தோன்றும் படைப்பின் மாயை பலவாக உள்ளது. இதையுணர்ந்த ஞானி நான், எனது என்றில்லாமல், ஆசைகளற்று இருப்பான்.

    74. அழிவும், தாபமும் அற்று தன்னையே காண்கின்ற  மௌனிக்கு அறிவேது உலகமேது,உடலேது, நான் எனது என்பதேது?

    75. மனதை அடக்கும் தன்மையை அஞ்ஞானி கைவிட்டால் அக்கணமே அவன் தவறுகள் செய்து வீண் வார்த்தைகள் பேச நேரும்.

    76. சாதாரணன் உண்மைப் பொருளைக் கேள்விப்பட்டாலும் மடமை ஒழிவ தில்லை; முயற்சியால் வெளித் தோற்றத்தில் மாறுபாடில்லாதவன் போலவும், உள்ளே சபலமானவனாகவும் இருப்பான்.

    77. ஞானத்தால் செயல் நீங்கியவன், உலக நோக்கில் செயல்கள் புரிந்தாலும் எதையும் சொல்லவோ செய்யவோ அவனுக்கு அவசியம் ஏற்படுவதில்லை.

    78. எப்போதும் விகாரமில்லாமல், தாபமில்லாமல் வாழும் தீரனுக்கு இருளேது, ஒளியேது, சிறிதேனும் அழிவேது?

    79. இவன் தன்மை இது என்று சொல்ல முடியாத உயர்வான யோகிக்கு தீரமேது, விவேகமேது, தாபமின்மை தானேது?

    80. விண்ணுலகமில்லை, நரகமில்லை, ஜீவன் முக்தியில்லை.மிகப் பேசு வதேன்? யோக  நோக்கில் எதுவுமேயில்லை.

    81. தீரனது குளிர்ச்சியான சித்தம் அம்ருதம் பெருகுவதாகும். அவன் எதையும் விரும்ப மாட்டான்; அடையவில்லையே என்றும் வருந்த மாட்டான்.

    82. ஆசையில்லாதவன்  அமைதியுள்ளவனைப் புகழ மாட்டான்; தீயவனை இகழவும் மாட்டான். இன்ப, துன்பங்களில் சமனாய், செய்தற்குரிய எதையும் காணமாட்டான்.

    83. தீரன் உலகியலை வெறுக்க மாட்டான்; ஆத்மாவைக் காணவும் விரும்ப மாட்டான். மகிழ்தல், சினமடைதல் ஆகிய எதுவுமற்றவன். அவன் இறந்த வனுமில்லை, பிழைத்திருப்பவனுமில்லை.

    84. ஞானி மக்கள் வீடு முதலியவற்றில் நட்பற்றவனாக, விஷயங்களில் ஆசையற்றவனாக தனது உடலில் கவனமற்றவனாக எதையும் விரும்பாதவனாக இருப்பான்.

    85. இருப்பதைக் கொண்டு பிழைப்பவனும், நாடெங்கும் யதேச்சையாக  நடப்பவனும், அஸ்தமித்த இடத்தில் படுப்பவனாகிய  தீரனுக்கு எங்கும்  சந்தோஷமே.

    86. பூமியில் இளைப்பாறி, உலகியலனைத்தையும் மறந்தவனுக்கு உடல் விழுந்தாலும், எழுந்தாலும் அதுபற்றிக் கவலையில்லை.

    87. ஒன்றுமில்லாதவனாக, இரட்டையற்றவனாக, சந்தேகம் நீங்கியவனாக, எதிலும் ஆசையில்லாதவனாக தானாகத் தனித்து மகிழ்ச்சி அடைபவன் ஞானி.

    88. கர்வமின்றி,  மண்ணும், கல்லும், பொன்னும் சமமாகக் கருதும் ஆசை யற்றவனாக ஞானி விளங்குவான்.

    89. எதிலுமே விருப்பமில்லாதவனுக்கு மனதில் வருத்தமிருக்காது. விடு தலையுடன் நிறைவாக வாழ்கின்றவருக்கு யாரை நிகராகச் சொல்ல முடியும்?

    90. அறிந்தும் அறியாதவன், பார்த்தும் பார்க்காதவன், பேசியும் பேசாதவன் — ஞானியைத் தவிர வேறு யார்?

    91. பிச்சைக்காரனானாலும் அரசனானானாலும் ஆசையின்றி, நல்லது கெட்டது என்னும் எண்ணமற்றவனே சிறந்தவன்.

    92. கள்ளமிலாமல் நேர்மையாக வாழ்கின்ற யோகிக்குச் சுதந்திரமேது, ஒடுக்கமேது, தத்துவ நிச்சயம் தானேது ?

    93. தன்னுள்ளே இளைப்பாறி, நிறைவடைந்து, ஆசைகளற்று, துன்பமற்றவன உள்ளே அனுபவிக்குமதை எப்படி ஒருவருக்குச் சொல்ல முடியும்?

    94. தீரன் தூக்கத்திலும் , கனவிலும், விழிப்பிலும் ஒரே மாதிரியாகவே இருக்கிறான்.

    95. ஞானி நினைவுற்றாலும் நினைவற்றவன்; புலன்களோடு செயல் பட்டாலும் புலனற்றவன்; புத்திசாலியானாலும் புத்தியற்றவன்; அகந்தையோடிருந் தாலும் அகந்தையற்றவன்.

    96. அவன் சுகியிமில்லை; துக்கியுமில்லை; பற்றவற்றவனுமில்லை; பற்றுள்ளவனுமல்ல; எதுவுமாகாதவன்.

    97. தீரன் குழப்பத்தில் குழம்ப மாட்டான்; சமாதியில் ஒடுங்க மாட்டான்; ஜடத் தன்மையிலும் ஜடமாக மாட்டான். மேதமை மிகுந்தாலும் பண்டித னாக மாட்டான்.

    98. உள்ளபடி தன்னிலை நின்ற முக்தன் செய்ததிலிருந்தும், செய்ய வேண்டி யதிலிருந்தும் விடுபட மாட்டான். ஆசைகளற்று எங்கும் சமனாகிய நிலையிலிருப்பான். அவன் செய்யாததையோ, செய்ததையோ நினைக்க மாட்டான்.

    99. வணங்கினால் மகிழ்வதும், வைதால் கோபமும் அடைய மாட்டான். சாவு கண்டு பதற மாட்டான்; வாழ்விலும் களிப்படைய மாட்டான்.

    100. புத்தி அமைதியுடையவன்  ஜனக்கூட்டத்திற்கோ, காட்டிற்கோ ஓட் மாட்டான். எங்கும் சமமாக உள்ளபடியே இருப்பான்.

    [பதினெட்டாம் அத்தியாயம் நூறு சுலோகங்களைக் கொண்டு மிகப் பெரியதாக அமைந்ததாகும்.]

    [தொடரும்]

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 13

    எட்டுக் கோணல் பண்டிதன் – 13

    தி. இரா. மீனா

                 அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி

    41. தனக்குள் அமைதி அடைகிற தீரனுக்கு உண்மை ஒடுக்கம் என்றும் இயல்பாக இருக்கும். கட்டுப்பாடற்றவருக்கு அது இயல்பாகாது.

    42. இருப்பை ஒருவன் நினைக்கிறான். மற்றொருவன் ஒன்றுமில்லையெனக் கருதுகிறான். இன்னொருவன் இரு பாவனைகளுமில்லாமல் கலக்கமின்றி இருக்கிறான்.

    43. மதிகெட்டவர்கள் மயக்கத்தால் இரண்டில்லாத தூய ஆத்மாவை மனதால் உணராமல் செயல்படுவதால் ஆயுள் முழுவதும் அவர்களுக்கு அமைதியில்லை.

    44. மனிதர்களின் புத்தி பிடிப்பற்றிருப்பதில்லை. முக்தனது புத்தி எக்காலத்திலும் சிறிதும் பிடிப்பில்லாமல் ஆசைகளற்று இருக்கும்.

    45. மிரட்சியுடையவர் அடைக்கலம் தேடி, வாழ்வு வேண்டி குகையில் நுழைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வார்கள்.

    46. சம்ஸ்கார வாதனையற்ற சிங்கத்தைக் கண்டு யானைகள் ஒசையில் லாமல் ஒட்டமெடுக்கின்றன. ஓட முடியாவிட்டால் கெஞ்சிப் பணிகின்றன.

    47. உள்ளம் பொருந்தியவன் சந்தேகமடைய மாட்டான். மோட்ச நூலைப் பேணிக் காக்க மாட்டான்.கண்டும், கேட்டும், தொட்டும், முகர்ந்தும், உண்டும் சுகமாக இருப்பான்.

    48. பொருளின் லட்சணத்தைக் கேட்ட அளவில் புத்தி தெளிந்து மீண்டும் கலங்காதவன் ஆசாரம், அநாச்சாரம், உதாசீனம் முதலிய எதையும் காண மாட்டான்.

    49. அவன் களங்கமில்லாதவனாக நல்லதோ கெட்டதோ எப்பொழுது எதைச் செய்ய நேருகிறதோ அப்பொழுது அதைச் செய்வான். அவன் செயல் குழந்தையினது போன்றது.

    50. சுதந்திரத்தால் சுகம் அடையலாம். சுதந்திரத்தால் பரம் அடையலாம். சுதந்திரத்தால் விடுதலை அடையலாம். சுதந்திரத்தால் பரமபதம் அடைய லாம்.

    51. ஆன்மாவாகிய தான் புரிபவனும், புசிப்பவனும் அல்லன் என்று ஒருவன் என்று உணர்கிறானோ அன்றே மனநினைவனைத்தும் அழிந்து போகிறது.

    52. கட்டற்றதாக இருந்தாலும் தீரனுடைய இயல்பு நிலை அழகானது. உள்ளத்தில் ஆசை கொண்ட சாதாரணனது செய்கை அவனுக்கு அமைதியைத் தராது.

    53. கற்பனை நீங்கி பந்தமில்லாத சுதந்திர மதியுடையவர்களான தீரர் உயர்ந்த நிலையிலுமிருப்பார். குகைகளிலும் இருப்பார்கள்.

    54. அந்தணரையும், தேவதையையும், இடத்தையும், பெண்ணையும், அரசனையும், அன்பரையும் காண்பதும் வழிபடுவதும் தீரனுக்கு எந்தத் துன்பத்தையும் தராது.

    55. பணியாளர், மக்கள், பெண்கள், பேரர், உறவினர் முதலியவர்கள் கேலி செய்து அவமதித்தாலும் யோகி சிறிதும் வருந்துவதில்லை.

    56. அவன் மகிழ்ந்தாலும் மகிழ்ந்தவனில்லை; வருந்தினாலும் வருந்தியவனில்லை; அவனது விந்தையான நிலையை அவனைப் போன்றவர்களே அறிவார்கள்.

    57. செய்தாக வேண்டுமென்பதே சம்சாரம். பூரண வடிவம் உடையவராக, வடிவமற்றவராக திரிபில்லாமலும், தாபமில்லாமலும் உள்ள ஞானிகள் கடமையைக் காணமாட்டார்கள்.

    58. சாதாரணன் ஒன்றும் செய்யா விட்டாலும் குழப்பம் காரணமாக எல்லாவற்றையும் கண்டு கலக்கம் அடைவான். தேர்ந்தவன் கடமைகளைச் செய்யும் போதும் கலங்குவதில்லை.

    59. உள்ளம் அமைதியுடையவன் படுத்தாலும், வந்தாலும், போனாலும், பகர்ந்தாலும், நுகர்ந்தாலும் சுகமாகவேயிருப்பான்.

    60. உலகம் போல விவரித்தாலும், தனதியல்பால் இன்னலற்றவனாக இருப்பவன் துன்பமற்று ஒளிர்பவனாக இருக்கிறான்.

    61. சாதாரணனுக்கு வினைத்தீர்வு கூட ஒரு வினையாக இருக்கிறது. தீரனுக்கு வினை கூட வினை நீக்கத்தின் பயனைத் தரும்.

    62. விஷயங்களிடம் வெறுப்பை அஞ்ஞானியிடம் காணலாம். உடலின் மீது அவாவற்றவனுக்கு ஆசையேது? வைராக்கியமேது?

    63. அஞ்ஞானியின் நோக்கு எப்போதும் நினைப்பு, மறப்புக்களில் அழுந்தியிருக்கும். சாதாரணனுடைய நோக்கோ விஷயங்களை நினைத்தும், நினைக்காத தன்மையுடையதாகும்.

    64. எந்த முயற்சியிலும் விருப்பமில்லாமல் குழந்தை போல இருக்கும் தூயவனாகிய மௌனி செயல்படும் போதும் பற்றடைவதில்லை.

    65. பார்த்தும், கேட்டும், பரிட்சித்தும், முகர்ந்தும், உண்டும், உள்ளத்தில் ஆசையற்றவனாக, நிலைமை எல்லாவற்றிலும் நடுநிலைமையாளனாக இருக்கும் ஆத்மஞானியே புண்ணியசாலி.

    66. வானம்போல என்றும் திரிபற்ற தீரனுக்கு உலகச் சுழலேது? தோற்ற மேது? அடைவேது? அதன் சாதனமேது?

    67. விஷயங்களை நீத்து வரையற்ற பரத்தில் இயற்கை நிலையுடையவன் தற்சுவை நிறைவுடையவனாகச் சிறப்படைவான்.

    68. இதுபற்றி பலவாறு உரைத்து என்ன பயன்? உண்மை உணர்ந்த பெரியவர்கள் போகத்தையோ, முக்தியையோ தேட மாட்டார்கள். எப்போதும் எதனிடமும் மகிழ்ச்சியடையவதில்லை.

    69. பெயரளவில் வெளித் தோன்றும் தத்துவம் முதலாக துவைத உலகைத் துறந்து தூய அறிவுடையவருக்கு கடமையொன்று எஞ்சியிருக்குமா?

    70. மயக்கத்தில் தோன்றிய இவையெல்லாம் ஒன்றுமில்லை என நிச்சயித்து குறியில்லாமல் சுடருகின்ற தூயவன் இயல்பாகவே அமைதியடைகிறான்.

    [தொடரும்]

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 12

    எட்டுக் கோணல் பண்டிதன் – 12

    தி. இரா. மீனா

                அத்தியாயம் பதினெட்டின் தொடர்ச்சி

    11. விகற்பமில்லாத தன்னிலை உடையவனுக்கு அரசாட்சியிலும்,பிச்சை எடுப்பதிலும்,லாப நஷ்டங்களிலும், மக்கள் கூட்டத்திலும், காட்டிலும் விஷேஷமென்று எதுவுமில்லை.

    12. இதைச் செய்தோம், இதைச் செய்யவில்லை என்னும் இரட்டையிலிருந்து விடுபட்ட யோகிக்கு அறம், பொருள், இன்பங்கள் எங்கேயுள்ளன!

    13. ஜீவன் முக்தராகிய யோகிக்குக் கடமையேதுமில்லை. மனதில் பற்றுதல் இல்லை. இயல்பாக இருப்பதே அவர் தொழிலாகும்.

    14. நினைப்பனைத்தின் முடிவிலே இளைப்பாறுகின்றவருக்கு மோக மெங்கே, உலகமெங்கே, தியானமும், விடுதலையும் எங்கே?

    15. உலகத்தைக் காண்பவன் அஃதில்லையென்று சாதிக்கட்டும். உலகைக் கண்டும் காணாதவன் என்ன செய்வது ?

    16. பரம்பொருளைக் கண்டவன் அப்பரமே நான் எனக் கருதவேண்டும். இரண்டாவதைக் காணாதவன்- நினைப்பற்றவன்-எதை நினைப்பான்?

    17. தன் ஆசையைக் காண்பவன் அதை அடக்குவான். பெரியார் ஆசையடைய மாட்டார். அடைவதற்கு எதுவுமில்லாத போது அவர் எதைச் செய்வார்?

    18. உலகத்து மனிதர்களைப் போல இருந்தாலும் ஞானி அவர்களிலிருந்து மாறுபட்டவன். தனக்குக் களங்கம் வருவதை அவன் ஒருகாலும் அனுமதிக்க மாட்டான்.

    19. நினைப்பும்,  நினைப்பின்மையுமற்று,  வாதனையற்று  நிறைவுற்றிருப்பவன் உலகப் பார்வையில் பல செய்தும் உண்மையில் எதுவும் செய்யாதவனே.

    20. எதை எப்போது செய்ய நேர்கிறதோ அதைச் செய்து சுகமாக இருக்கும் தீரனுக்கு எந்தக் கவலையுமில்லை.

    21. பற்றற்று, கட்டற்றுச் சுதந்திரமாக இருப்பவன் காற்றில் சருகென வினையை ஏற்றாடுவான்.

    22. உலகியல் அற்றவனுக்கு எதனிடமும் களிப்போ, ஏக்கமோ உண்டாகாது. அவன் என்றும் மனம் குளிர்ந்து உடலற்றவன் என ஒளிவிடுவான்.

    23. மாசற்றுக் குளிர்ந்த உள்ளமுடையவனாகத் தனக்குள் மகிழ்ச்சி அடையும் தீரன் எதையும் ஒழிக்க நினைக்க மாட்டான். அவனுகெங்கும் அழிவில்லை.

    24. இயல்பாகவே மனதில் எதுவும் இல்லாதவனாகச் செயல்படும் தீரனுக்கு பாமரர்களுக்குரிய மான, அவமானங்கள் இல்லை.

    25. இந்த வேலையைச் செய்வது உடலே நானில்லை என்னும் கருத்தைப் பின்பற்றுபவன் செய்தும் செய்யாதவனே.

    26. ஆர்வமற்றவன் போலச் செயல்பட்டாலும் அவன் சாதாரணனில்லை. ஜீவன் முக்தனான அவன் உலகில் உழன்றாலும் தன் தன்மையிலிருந்து மாறமாட்டான்.

    27. பற்பல ஆராய்ச்சிகளால் களைத்த தீரன் எதையும் நினைக்க மாட்டான், அறிய மாட்டான், கேட்க மாட்டான், பார்க்க மாட்டான்.

    28. சமாதியும், சமாதியின்மையும் இல்லாததால் ஞானி அறிஞனு மில்லை; பாமரனுமில்லை. உலகம் கற்பிதமென நிச்சயித்து அதைப் பார்க்கும் போது பிரம்மமாயிருக்கிறான்.

    29. எவனுக்கு மனதில் அகந்தையிருக்கிறதோ அவன் செய்யாதவனாக இருந்தாலும் செய்கிறான். அகந்தையில்லாத தீரன் செய்தும் ஒன்று மில்லை.

    30. முக்தனது மனம் குழப்பமின்றி, குதூகலமின்றி, தொழிலின்றி,  அசைவின்றி, ஆசையின்றி இருக்கிறது.

    31. ஆலோசிக்கவோ, செயல்படவோ முற்படாத உள்ளம் எந்தக் காரணமுமில்லாமல் ஒரொருகால் ஆலோசிக்கும், செயல்படும்.

    32. உண்மையை உள்ளபடி கேட்கும் சாதாரணன் மயக்கமடைகிறான். ஞானியோ சாதாரணனைப் போல ஒடுக்கம் அடைகிறான்.

    33. சித்த ஓர்மையையும், அடக்கத்தையும் சாதாரணர் மிகப் பழகுவர். தூங்கியவர் போலத் தன்னிலை நிற்கும் தீரர் செய்யக் கூடியது எதையும் காண்பதில்லை.

    34. முயற்சியினாலோ, முயற்சியின்மையாலோ சாதாரணர் அமைதியடைவதில்லை.  அறிஞரோ உண்மை நிச்சயத்தாலேயே சாந்தனாகிறார்.

    35. அப்பழக்கத்தையே மேற்கொண்ட மனிதர்களும் உலகற்று நோயற்று அறிவோடு அன்போடு நிறைவாய்த் திகழும் தம்மையுணர்வதில்லை.

    36. சாதாரணர கன்மத்தால்  விடுதலை பெறுவதில்லை. புண்ணியவான்  ஞானத்தினால் விடுபட்டு நிலை பெறுகிறான்.

    37. அதுவாக விரும்புவதால் சாதாரண மனிதர் அப்பரம்பொருளை அடைவதில்லை தீரனோ விரும்பாமலே  பரம்பொருளே தானாயிருக்கிறான்.

    38. ஆதாரத்தை விட்டு எதையும் அடைய விரும்பும் அவிவேகிகள் பிறவிச் சுழலைப் பெருக்குவார்கள். விவேகிகள் பிறவி வேரையே அறுத்து விடுவார்கள்.

    39. சாந்தியடைய விரும்பும் சாதாரணர் சாந்தியடைவதில்லை. தீரன் உண்மையை உணர்ந்து என்றும் மனமடங்கியிருக்கிறான்.

    40. காட்சியைப் பற்றி நிற்பவனுக்கு ஆன்மப் பார்வை எங்கேயிருக்கிறது? தீரர் அதையும், இதையும் காணாமல் அழிவற்ற ஆன்மாவையே காண்பார்கள்.

    [தொடரும்]

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 11

    எட்டுக் கோணல் பண்டிதன் – 11

    தி. இரா. மீனா

                     அத்தியாயம் பதினேழு

    ஆனந்த நிலையையும் ,உயிரியல்பையும் ஜனகருக்கு அஷ்டவக்கிரர் விளக்குவது இந்த அத்தியாயமாகும்.

    1. மனநிறைவும், இந்திரிய அமைதியும் பெற்று தனிமையில் எவன் என்றும் இன்பமடைவானோ அவனே ஞானப் பயனையும், யோகப் பயிற்சியின் பயனையும் அடைந்தவனாவான்.

    2. தன்னிடமே பிரமாண்டத் தொடரெல்லாம் நிறைந்துள்ளபடியால், உண்மை உணர்ந்தவன் இவ்வுலகில் எந்தக் காலத்திலும் துன்பமடைய மாட்டான்.

    3. ஈச்சம் குருத்தை உண்டு இன்பமடையும் யானையை வேப்பிலை மகிழ் விப்பதில்லை. அது போலத் தன்னுள்ளே மகிழ்ச்சியடைபவனை உலகவிஷயங்கள் எவையும் என்றும் மகிழ்ச்சி அடையவைப்பதில்லை.

    4. அனுபவித்த போகங்களில் வாதனையற்றிருப்பவனும், அனுபவிக்காத வற்றில் உதாசீனமாக இருப்பவனும் ஆகிய ஒருவன் உலகத்தில் கிடைப்பதற்கு அரியவனாவான்.

    5. இந்த உலகில் போக விருப்பினரையும், மோட்ச விருப்பினரையும் காண லாம். போகம், மோட்சம் இரண்டையும் விரும்பாத பெரியவர்கள் மிக அரியவர்களாவார்கள்.

    6. அறம், பொருள், இன்பம், வீடு, வாழ்வு, சாவு முதலிய எல்லாவற்றிலும் பெரியவருக்கு வேண்டல் வெறுத்தல் எதுவுமில்லை.

    7. அவனுக்கு உலகம் தொலைவதில் விருப்பமில்லை. அது இருப்பதில் வெறுப்புமில்லை. அவ்வாறானவன் விரும்பியவாறு வாழ்ந்து இன்ப வடிவாகயிருக்கிறான்.

    8. இவ்வாறு மனதொழிந்தவன் பார்த்தும், கேட்டும், முகர்ந்தும் அருந்தியும் சுகமாக இருப்பான்.

    9. சம்சாரக் கடல் வறண்டவனது பார்வை குறியற்றும், செயல் உத்தேசமற்றும். பொறிகள் வேகமற்றும் இருக்கும். விருப்பும், வெறுப்பும் அவனுக்கில்லை.

    10. அவன் விழிப்பதும், உறங்குவதுமில்லை; இமைப்பதும், திறப்பதுமில்லை; விடுபட்டோனிடம் வெளிப்படும் பரநிலை அது!

    11. எல்லாவிடத்திலும் அவன் தன்னிலை நிற்பவனாக, தூய்மையான உள்ளமுடையவனாய் இருப்பான். துன்பம்  நீங்கிய முக்தனாக எங்கும் பிரகாசிப்பான்.

    12. பார்த்தும், கேட்டும், தொட்டும், முகர்ந்தும், உண்டும், ஏற்றும், புகன்றும், சென்றும், விருப்பு, வெறுப்புகளிலிருந்து விடுபட்ட முக்தனே பெரியவன்.

    13. அனைத்திலும் சுவையற்ற முக்தன் எதையும் தூற்றுவதில்லை, புகழ்வ தில்லை, மகிழ்வதில்லை, கோபிப்பதில்லை, கொடுக்கல் வாங்கல் அவனிடமில்லை.

    14. காதலறும் பெண்ணைக் கண்டும், அணுகி வரும் சாவைக் கண்டும் உள்ளம் கலங்காது தன்னிலை நிற்கும் பெரியோன் முக்தனேயாவான்.

    15. அனைத்திலும் சமதிருஷ்டி உடைய தீரனுக்கு இன்பத்திலும் துன்பத்திலும், ஆணிலும், பெண்ணிலும், ஐஸ்வர்யத்திலும், ஆபத்திலும் எந்த விஷேஷமுமில்லை.

    16. உலகச் சுழலற்றவனிடம் வருந்துதலில்லை, இரக்கமுமில்லை; செருக்கில்லை, தாழ்வுமில்லை, வியத்தலில்லை, குழப்பமுமில்லை.

    17. முக்தன் விஷயங்களை வெறுக்க மாட்டான் விரும்பவுமாட்டான். என்றும் பற்றற்ற உள்ளத்தோடு நேர்ந்ததையும், நேராததையும் ஏற்றுக் கொள்வான்.

    18. அகத்தே ஒன்றுமில்லாதவன். நன்மை, தீமையென்ற வித்தியாசங்களை உணர மாட்டான். அவன் தனிப் பரநிலை பொருந்தியவன் போலும்.

    19. நான், எனது அற்று உண்மையில் எதுவுமில்லையெனத் துணிந்து, உள்ளே ஆசையற்றவன், செய்தும் செய்யாதவனே.

    20. அகந்தை நழுவியவன் மனம், ஒளி, மயக்கம், கனவு, அழியாமை ஆகியவையற்ற ஒன்றில் நிலையுற்றவனாவான்.

                       அத்தியாயம் பதினெட்டு

    எல்லாவற்றையும் துறந்து, தன்னிலையில் சும்மா இருப்பதுவே சுகமென்றும், பிற சாதனைகள் சிறுவருக்கேயென்றும், தன்னிலை நின்றவனுக்கு எக்கடமையும், இரட்டையும், விகற்பமுமில்லையென்றும், ஜீவன் முக்தனது இயல்பு விசித்திரமானது, தீனர்களாம் பாமரருக் கும், தீரனாம் அவனுக்கும் வெகுதூரமென்றும், ஞானியை ஞானியே அறிய முடியுமென்றும், வாழ்விலும், சாவிலும், தனிமையிலும், ஜனக் கூட்டத்திலும் மெய்ப் பொருளில் நிலைத்தவனாக இருப்பான் என்றும் அஷ்டவக்கிரர் ஜனகருக்குக் கூறுவது இவ்வத்தியாயமாகும்.

    இ்ந்த அத்தியாயத்தில் மொத்தம்  நூறு சுலோகங்கள் உள்ளன. அவை மேலும் மூன்று தொடர்களில் இடம் பெறும்.

    1. ஞானம் ஏற்படுகின்ற இன்பமே வடிவாகிய அமைதியொளியைப் போற்றுவோம்.

    2. உலகப் பொருட்கள் எல்லாவற்றையும் பெற்று போகங்கள் செழிக்கப் பெறலாமெனினும், எல்லாவற்றையும் துறந்தாலன்றி சுகமானவனாதல் இயலாது.

    3. கடமையாம் கடுவெயிலின் அனலால் உள்ளம் பொசுங்கியவனுக்குச் சாந்தியை விட்டு சுகமெங்கேயுள்ளது.

    4. இப்படைப்பு கற்பனை மட்டுமே; உண்மையிலொன்றுமில்லை. இருப்பையும், இருப்பின்மையையும் உணரும் தன்மையுடையவர்களுக்கு இன்மையென்றுமில்லை.

    5. விகற்பமும், வருத்தமும், மாறுதலும் மாசுமற்ற தனது நிலை தொலைவிலுமில்லை, அருகிலுமில்லை. அது என்றும் அடையப்பட்டதேயாகும்.

    6. மயக்கம் விலகித் தன்னையே மீண்டும் பெற்றோர் பார்வை மூட்ட மின்றி துன்பமில்லாமல் இருப்பார்கள்.

    7. அனைத்தும் கற்பனையே; ஆத்மாவோ கட்டற்ற பழம்பொருள் என்று ணர்ந்த தீரன் சிறுவரைப் போல என்ன பழகுவது ?

    8. தான் பிரம்மம் என்றும், இருப்பும் இன்மையும் கற்பனைகளென்றும் துணிந்து அவாவற்றவன் எதையறிவது? எதைச் சொல்வது? எதைச் செய்வது?

    9. அனைத்தும் ஆத்மாவேயெனத் தீர்ந்து மோனத்திலிருக்கும் யோகிக்கு அது நான், இது நானல்ல என்னும் விகற்பங்கள் ஒழிந்தன.

    10. அமைதியற்ற யோகிக்கு  விஷேஷமில்லை. சாதாரணமுமில்லை; மேதையில்லை; மடமையுமில்லை; சுகமில்லை, துக்கமுமில்லை.

     [தொடரும்]

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 10

    எட்டுக் கோணல் பண்டிதன் – 10

    தி. இரா. மீனா

                     அத்தியாயம் பதினைந்து

    ஞானமயப் பரம்பொருள் நீ; எல்லாம் நீயொருவனே. விகற்பமும் ,நினைப்பும் இல்லாமல் சுகமாக இரு என்று  அஷ்டவக்கிரர் ஜனகருக்கு உபதேசிப்பது இந்த அத்தியாயமாகும்.

    1. ஸத்வபுத்தி உண்மை உபதேசத்தால் கிருதார்த்தனாகிறான். மற்றவன் ஆயுள் முழுவதும் தேடி மயங்குகிறான்.

    2. விஷயச் சுவையறுதலே வீடு; விஷயச் சுவையே பந்தம்; ஞானம் இவ்வளவே. இஷ்டப்படி செய்து  கொள்.

    3. இந்த உண்மையறிவு வாய் ஜாலமுடையவனும், மேதாவியும், முயற்சி மிகுந்தவனுமான ஒருவனை ஊமையையும் சோம்பேறியையும் போலாக்குவதால் போக விருப்பினர் இதை விலக்குவார்கள்.

    4. உடல் நீயில்லை; உடலுனக்கில்லை; புசிப்பவனும், புரிபவனும் நீயில்லை. நீ ஞான மயமானவன். என்றும் சாட்சி தேவையற்றவன். சுகமாக வாழ்வாய்.

    5. விருப்பும், வெறுப்பும் மனித இயல்புகள். உனக்கோ என்றும் மனமில்லை. திரிபும், விகற்பமுமற்ற ஞான ஆத்மாவே நீ சுகமாக வாழ்வாய்.

    6. படைப்பனைத்திலும் தன்னையும், தன்னிடம் படைப்பனைத்தையும் கண்டு நான் எனது என்பதற்று சுகமாக இருப்பாய்.

    7. கடலில் அலைகள் போல எதனிடம் இந்த உலகம் இலகுமோ அதுவே நீ. ஐயமில்லை. ஞான வடிவே. தாபமில்லாமல் இரு.

    8. அன்பனே! நம்பு, நம்பு. இங்கே நீ மயங்காதே. மாயைக்கு அப்பாலான ஆத்மாவே, ஞான மயமாம் இறைவனே நீ.

    9. குணங்கள் சூழும் உடலே நிற்கிறது. வருகிறது. போகிறது. ஆத்மாவே போவதும் வருவதுமில்லை. அதைப்பற்றி ஏன் வருந்துகிறாய்?

    10. உடல் பிரளய முடிவு மட்டும் இருக்கட்டும்; இன்றே இன்றே போகட்டும். ஞானமாம் வடிவாம் உனக்கு அதனால் ஆக்கமேது அழிவேது?

    11. வரையறையற்ற பெருங்கடலாகிய உன்னிடம் உலகத் திரை இயல்பாகவே உதிக்கட்டும் அல்லது அடங்கட்டும். அதனால் உனக்குக் கூடுதல், குறைதல் இல்லை.

    12. அன்பனே! ஞானமே உன் வடிவமாகும். இந்த உலகம் உன்னிலும் வேறில்லை. ஆதலால் யாருக்கு எவ்வாறு எங்கே ஏற்பதும், விடுவதுமாம்?

    13. அழிவில்லாமல் அமைதியாக இருக்கின்ற ஒரே ஞானவானாகிய உன்னிடம் பிறப்பெங்கே? வினையெங்கே? அகந்தைதானெங்கே?

    14. எதை நீ கண்டாலும் ஒருவனாகிய நீயே அங்கிருக்கிறாய். பொன்னாலான மேகலை, தோள்வளை, சிலம்பும் பொன்னிலிருந்து வேறாகுமோ?

    15. இது நான்,  இது நானல்ல என்னும் மாறுபாட்டை முழுவதும் ஒழித்து அனைத்தும் ஆத்மாவே எனத் துணிந்து நினைப்பற்றுச் சுகமாக இருப்பாய்.

    16. உன்னை உணராததால்தான் அகிலம் உண்டாகிறது. உண்மையில் நீ ஒருவனே இருக்கிறாய். உனக்கு அயலாக சம்சாரியோ சம்சாரமற்றவனோ ஒருவனுமி்ல்லை.

    17. இந்த உலகமும் மயக்கமே தவிர வேறில்லை என்று துணிந்து வேதனையற்று ஆன்ம விளக்கமாக மட்டுமிருப்பவன் எதுவுமில்லாதது போல அமைதியாக இருப்பான்.

    18. பவசாகரத்தின் கண் ஒருவனே இருந்தான், இருக்கிறான், இருப்பான். உனக்கு பந்தமுமில்லை, முக்தியுமில்லை. செயல் முடித்தவனாகச் சுகமாக இருப்பாய்.

    19. ஞான மயமானவனே! சங்கற்பம், விகற்பங்களால் சித்தம் குழம்பாதே. ஆனந்த வடிவமாகிய தன்னிடம் ஒய்வுற்று சுகமாக இருப்பாய்.

    20. எங்கும் எந்தக் காலத்திலும் தியானத்தை ஒழிப்பாய். சித்தத்தில் ஒன்றையும் வைத்துக் கொள்ளாதே. நீ விடுபட்டவனாக ஆத்மாவாகவே இருக்கிறாய். நினைப்பினால் ஆவது என்ன?

                          அத்தியாயம் பதினாறு

    எல்லாவற்றையும் மறந்தால் ஆத்மானந்தம் கிடைக்கும் என்றும் விருப்பு வெறுப்பற்று நான் என்பது இல்லாமலிருக்க வேண்டும் என்று ஜனகருக்கு அஷ்டவக்கிரர் உபதேசிப்பது இந்த அத்தியாயமாகும்.

    1. பற்பல நூல்களை பலமுறை சொன்னாலும், கேட்டாலும் அனைத்தையும் மறந்தாலன்றித் தன்னிலை இன்பம் உனக்கில்லை.

    2. போகத்தையோ சமாதியையோ நீ சார்ந்திரு. ஆயினும் அன்பனே! ஆசைகளற்ற உள்ளமே அளவில்லாத மகிழ்ச்சியை உனக்குத் தரும்.

    3. விஷயங்களில் உழலுவதால் அனைவரும் துன்பப்படுகின்றனர். இதை யாரும் உணர்வதில்லை. புண்ணியவானொருவன் இந்த உபதேசத்தாலேயே பேரின்பம் பெறுவான்.

    4. கண்ணை இமைத்துத் திறப்பதற்கும் எவனொருவன் வருந்துவானோ சோம்பலில் தலைசிறந்தவனாகிய அவனுக்கே இன்பம். வேறு எவர்க்குமில்லை.

    5. அறம் பொருள் இன்பம் வீடு பற்றி இது செய்தோம் இது செய்யவில்லை என்னும் இரட்டைகளில் இருந்து மனம் விடுபட்டால் அதுவே ஆசையற்ற நிலையாம்.

    6. விஷயத்தை வெறுப்பவன் விரக்தன்; விஷயத்தில் உழல்பவன் காமி். ஏற்றுக் கொள்வதும் விலக்கித் தள்ளுவதும்  இல்லாதவன் விரக்தனுமில்லை. காமியுமில்லை.

    7. விசாரணையற்ற  நிலையைத் தலமாகக் கொண்டு சம்சாரப் புதரின் முளையாகிய ஆசை உள்ளவரையில் மட்டுமே ஏற்றுக் கொள்வதும், விலக்கித் தள்ளுவதும் இருக்கும்.

    8. தொடங்குவதால் ஆசையும், விலக்குவதால் வெறுப்புமே உண்டாகுமென் பதால் அறிஞன் இரட்டைகளற்றுக் குழந்தை போல இருப்பான்.

    9. துன்பத்தைத் தொலைக்கும் ஆசையால் அவாவுடையவன் உலகியலைத் துறக்க விரும்புகிறான். அவா ஒழிந்து விடுதலையடைந்தவன் உலகிலி ருந்தும் துன்பமடைய மாட்டான்.

    10. யாருக்கு முக்தியில் விருப்பமுள்ளதோ, எனது உடல் என்ற விருப்பம் உள்ளதோ அவன் துன்பத்தையே அனுபவிப்பான். அவனால் ஞானியாகவோ, யோகியாகவோ முடியாது.

    11. சிவனே அல்லது ஹரியே அல்லது பிரம்மனே உனக்கு உபதேசம் செய்பவனாக இருந்தாலும் எல்லாவற்றையும் மறந்தாலன்றி நீ சுகமடைய முடியாது.

    கிருதார்த்தன் – ஞானி

    [தொடரும்]

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 9

    எட்டுக் கோணல் பண்டிதன் – 9

    தி. இரா. மீனா

                     அத்தியாயம் பன்னிரண்டு

    உடல், வாக்கு, உள்ளச் செயல்களில் முற்றிலும் பற்றற்று, தன்னிலை நிற்றலை ஜனகர் ஷ்டவக்கிரருக்குக் கூறுவது இந்த அத்தியாயமாகும்.

    1. முதலில் உடல் செயல்களிலும், பின்பு வாக்கை வளர்ப்பதிலும், அதன்பின் நினைப்பிலும் வெறுப்புற்றதனால் நான் இவ்வாறே நிலைத்துள்ளேன்.

    2. சப்தாதி விஷயங்களில் மகிழ்ச்சியில்லாததாலும், ஆத்மாவின் காண முடியாத தன்மையாலும் மகிழ்வும் துயரமுமின்றி   இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.

    3. விபரீதத் தோற்றம் முதலியவற்றால் மனம் சிதறும் போது சமாதி முயற்சி என்னும் நியதியை உணர்ந்து இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.

    4. தள்ளுவதும் கொள்ளுவதும் இல்லாதது போல மகிழ்வதும் துன்பமடைவதும் இல்லாததால் நான் இவ்வாறே நிலைத்துள்ளேன்.

    5. ஆச்ரமம், ஆச்ரமமின்மை, தியானம், அகப்பற்று ஒழித்தல் ஆகியவற்றால் வரும் மாறுபாடு கருதி இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.

    6. செயல் முனைவு எவ்வாறு அறியாமையாலோ அது போலத்தான் அதைத் துறத்தலும் என்ற உண்மையை நன்குணர்ந்து இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.

    7. நினைக்க முடியாததை நினைக்க எண்ணினால் அது நினைவு வடிவமே என்பதால் இவ்வாறே நான் நிலைத்துள்ளேன்.

    8. இவ்வாறு எவர் செய்கிறாரோ அவர் கிருத கிருத்யன். இவ்வாறு தன்னை எவர் சார்வரோ அவர்  கிருத கிருத்யன் ஆவார். [செய்ய வேண்டியதைச் செய்து முடித்தவன்]

                     அத்தியாயம் பதிமூன்று

    இயல்பாகிய சொரூப நிலையில் எந்த மாறுபாடும் இல்லாமல் ஜனகர் தன் அனுபவத்தை ஷ்டவக்கிரருக்கு உரைப்பது இந்த அத்தியாயமாகும்.

    1. ஒன்றுமில்லாததில் உள்ள தன்னிலையின்பம் கோவணம் மட்டும் உடையவனுக்கு இல்லாமையால் தள்ளுவதும், கொள்ளுவதும் இல்லாமல் இன்பமாக இருக்கிறேன்.

    2. சில நேரம் உடல் வருந்துகிறது; சில நேரம் நாவு வருந்துகிறது. சில நேரம் மனம் துன்பமடைகிறது. ஆதலால் இவற்றை நீக்கி விடுதலை நிலையில் சுகமாக இருக்கிறேன்.

    3. உண்மையில் நான் எதையும் செய்பவன் இல்லை என்பதை உணர்ந்து எப்போது எதைச் செய்ய முடிகிறதோ அதைச் செய்து இன்பமாக இருக்கிறேன்.

    4. உடல் பொருந்திய யோகிக்கே கருமம், கரும நீக்கம், பந்தம் முதலான பாவனைகள். யோகமும், வியோகமும் எனக்கில்லாததால் இன்பமாக இருக்கின்றேன்.

    5. இருப்பது, நடப்பது, படுப்பது ஆகியவற்றால் எனக்கெதுவும் ஆவதும் போவதுமில்லை. ஆதலால் நின்றும் நடந்தும் படுத்தும் இன்பமாக இருக்கின்றேன்.

    6. தூங்குவதால் நான் இழப்பது ஒன்றுமில்லை. முயற்சி செய்வதால் அடைவது ஒன்றுமில்லை. ஆதலால் அழிவும் உயர்வும் இல்லாமல் இன்பமாக இருக்கிறேன்.

    7. விஷயங்களில் சுகம் முதலியவற்றிற்குக் குறித்த வடிவம் இன்மையைப் பலமுறை கண்டதால் நல்லது, தீமையானது இரண்டையும் நீக்கி இன்பமாக இருக்கின்றேன்.

                   அத்தியாயம் பதினான்கு

    நினைப்பற்று இருப்பது இயல்பாகி அதனால் ஆசையின்றி, உள்ளுணர்வில் நிலைபெற்றுச் சுதந்திரமாக உலவும் ஞானியின் போக்கை யாராலும் அறிய முடியாது என்று ஜனகர் உரைப்பதாகும்.

    1. தப்பித் தவறி விஷயத்தை நினைத்தாலும் இயற்கையில் யார் நினைவற்றவரோ, அவர் தூக்கத்தில் விழிப்பு கண்டவரைப் போல சம்சாரச் சுழற்சியற்றவர்.

    2. ஆசையற்றுப் போனதால் எனக்குச் செல்வமோ, நட்போ, பகையோ, நூலோ, அறிவோ எங்குள்ளது?

    3. பரமாத்மாவும் ஈசனுமாகிய புருஷனை அறிந்த பின்பு பந்த விடுதலையிலும் ஆசையற்றுப் போனதால் முக்திச் சிந்தனை எனக்கில்லை.

    4. உள்ளே மாறுபாடுகள் ஒழிந்து வெளியே சுதந்திரமாக உலவுகிற ஞானியின் நிலையை அத்தகையவர்களே அறிவார்கள்.

    [தொடரும்]

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-42

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-42

    தி. இரா. மீனா

    நிக்களங்க சென்னசோமேஸ்வரா

    “வெட்ட வெளியெலாம் திடமானால் வானம் மண்
    பாதாளத்துக்கு இடம் எங்குள்ளதோ?
    இடரைச் செய்ய முடியாத மனிதரெல்லாம்
    சம்சாரத்தை விட்டோமென மொட்டையடித்துக் கொண்டால்
    அறிஞன் விரக்தனாக முடியுமா? இதனால்
    அஞ்ஞானம் விட்டு அறிவைக் காட்டுபவன்
    நிக்களங்க சென்னசோமேஸ்வரன் தானே? “

    நிஜமுக்தி இராமேஸ்வரா

    “மாற்றத்தால் உடல் தேய்ந்து தேய்ந்து
    நொந்து வெந்தவர் அனைவரும் வெறுமையாகி
    இளமை நாளும் தேய்ந்து தேய்ந்து
    கதி கெட்டோர் அனைவரும் வெறுமையாகி
    தலைமுடியை மழித்து வெறுமையான பின்னர்
    பொன் பெண் மண்ணுக்கு வசமாகாமலிருப்பதே வாழ்க்கை
    புலன்களின் தாக்குதலுக்குட்படாமல் இருப்பதே வாழ்க்கை
    கதிகெட்டு சக்தியிழந்து வீணே
    வெறுமையான வாழ்க்கையது உலகில்
    சங்கடமன்றோ சொல்வாய் நிஜமுக்தி இராமேஸ்வரனே“

    நிர்தனப்பிரிய இராமேஸ்வரா 

    “பிச்சைக்காரனெனும் நிலைக்கு என்னை நடத்திடுவாய்
    சென்றங்கு பிச்சை பிச்சையெனில்
    யாரும் தராதபடி செய்திடுவாய்
    தவறியே கொடுத்தாலும்
    கொடுக்கின்ற பாத்திரம் விழுந்து உடையுமாறு
    செய்திடுவாய் நிர்தனப்பிரிய இராமேஸ்வரனே “

    மர்க்கடேஸ்வரா

    “இகபரத்தினுள்ளே பொன் பெண் மண் காற்று
    இடையூறுகள் என்பன அடிப்படையாம்
    காமத்தை விட்டொழித்தால் துறவியாம்
    காணாய் மர்க்கடேஸ்வரனே “

    மகாலிங்க வீரராமேஸ்வரா

    “சூன்யத்துள் அடங்கின மின்னல் போலானதென்
    குருவின் நல்லுரைகள்
    மின்னலின் ஒளிக்கீற்று போலானதென்
    குருவின் நல்லுரைகள்
    படிகக் குடத்திலிட்ட சுடர் போலானதென்
    குருவின் நல்லுரைகள்
    மகாலிங்க வீரராமேஸ்வரன் போலானதே
    குருவின் நல்லுரைகள் எனக்கு“

    இந்தத் தலைப்பின் கீழ் 129 சரணர்கள் 30 பெண் வசனக்காரர்கள், 13 பெயர் தெரியாத சரணர்கள் என்ற நிலையில் மொத்தம் 172 எழுபத்திரண்டு வசனக்கார்களின் வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

     – முற்றும்.

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 8

    எட்டுக் கோணல் பண்டிதன் – 8

    தி. இரா. மீனா

    இரட்டைகளை விடுவதால் பரஞானம் உண்டாகும் என்றும், ஸம்ஸ்கார நாசமே ஸம்சார நாசமென்றும், அதுவே உண்மை நிலை என்றும் ஜனகருக்கு அஷ்டவக்கிரர் போதிப்பதே இந்த அத்தியாயமாகும்.

                     அத்தியாயம் ஒன்பது

    1. செய்ததும், செய்யாததும் பிற இரட்டைகளும் எப்பொழுது எவருக்கு ஓய்ந்தது என்றிங்கே அறிந்து உதாசீனமுற்று சங்கல்பமற்று தியாகமே சிறந்ததென்றிருப்பாய்.

    2. அன்பனே! யாரோ ஒரு புண்ணியவான் உலகியலை உணர்ந்து வாழ்க்கை வேட்கையும், போகவிருப்பும், அறிதல் வெறுப்பும் அடங்கப் பெறுகிறான்.

    3. இவையனைத்தும் நிலையாதது, சாரமற்றது. இகழ்ந்து தள்ளக் கூடியது என்று நிச்சயித்தவன் சாந்தி அடைகிறான்.

    4. எங்கே மனிதர்களுக்கு இரட்டைகளே இல்லையோ அங்கே கால மென்பதென்ன, வயதாவதென்ன? அவற்றைப் புறக்கணித்தவன் பூரணனாவான்.

    5. மகரிஷிகளும், சாதுக்களும், யோகிகளும் வெவ்வேறு கொள்கை யில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு வெறுப்படைந்தவானால் சாந்தியடைய முடியுமா?

    6. உதாசீனம், சமத்துவமென்னும் யுக்திகளால் ஞான ஸ்வரூபானுப வத்தை உலகச் சுழலிலிருந்து காப்பாற்றுகின்றவன் குருவாவான்.

    7. பஞ்சபூதத் திரிபுகளைப் பூதங்களாகவே காணமுடியும் போது அந்தக் கணத்திலேயே நீ உண்மையில் கட்டறுந்து சொரூபநிலையடைவாய்.

    8. ஸம்ஸ்காரங்களே சம்சாரமென்று அவையனைத்தையும் விட்டு விடு. இந்நிலைதான் உண்மை.

                        அத்தியாயம் பத்து

    நிலையாதவைகளாக உள்ள அறம், பொருள், இன்பங்களை அறவே நீக்கி ஆசைகளற்று ஓய்ந்து சுகமாக இருக்க வேண்டுமென்று ஜனகருக்கு அஷ்டவக்கிரர் உபதேசிப்பது இவ்வத்தியாயமாகும்.

    1. காமப் பகையையும், பொருளாசையையும் விட்டு, இந்த இரண்டிற்கும் முன்னதான தர்மத்தையும் விட்டு அனைத்திலும் உதாசீனம் கொள்வாய்.

    2. நண்பரும், நிலமும், செல்வமும், வீடும், மனைவியும், சுற்றமும், சம்பத்து அனைத்தும் நாலைந்து நாட்களே. இதையோர் கனவென, மாயத் தோற்றமெனப் பார்ப்பாய் .

    3. எங்கெங்கோ ஆசையிருக்கிறதோ அங்கங்கே சம்சாரம் என்றுணர் வாய். திட வைராக்கியமோடு ஆசையற்றுச் சுகமாக இருப்பாய்.

    4. ஆசையே பந்தம்; அதை அறுப்பதே முக்தி. உலகத்தின் மீது பற்று ஒழியும் போதெல்லாம் அவ்வப்போது ஆன்ம இன்பமுண்டாகும்.

    5. நீ ஒருவன். அறிவுமயமானவன். தூய்மையானவன். உலகமோ அசத்தும், ஜடமுமாகும். அவித்தை என்பது ஒன்றுமேயில்லை. ஆனாலும் நீ அதை அறிய விரும்புவதேன்?

    6. பிறவிதோறும் ராஜ்யமும், மக்களும், பெண்களும், உடலும், சுகங்களும் ஆர்வத்தோடிருந்தும் அழிந்து போயின.

    7. அறம், பொருள், இன்பம் எல்லாம் போதும். உலகக் காட்டில் இவற்றால் மனம் அமைதியடையவில்லை.

    8. எத்தனை பிறவிகள்தான் உடலாலும், மனதாலும், வாக்காலும் பாடுபடவில்லை? கருமம் துன்பம்; களைப்பைத் தருவது. ஆதலால் இப்போதாவது ஓய்ந்திருப்பாய்.

                  அத்தியாயம் பதினொன்று

    உலகியல் முழுவதும் பிரகிருதியின் தர்மமென்றும், நினைப்பே துக்கத்தின் காரணமென்றும், அனைத்திற்கும் ஆதாரமாம் ஆத்மாவில் நிலைத்தவனே சாந்தி சுகத்தை அடைந்தவனென்றும் ஜனகருக்கு அஷ்டவக்கிரர் விளக்குவது இவ்வத்தியாயமாகும்.

    1. ஆதலும், அழிவதும் இயற்கையால் என உணர்ந்தவன் ஐயமின்றி துயரமின்றி சுகமாக அமைதியடைவான்.

    2. இறைவனே எல்லாவற்றிற்கும் காரணம் வேறொருவருமில்லை என உணர்ந்தவன் மனதில் ஆசைகள் நீங்கி அமைதியுடையவனாகி எதிலும் ஒட்டமாட்டான்.

    3. செல்வமும், விபத்தும் அந்தந்தக் காலத்தில் விதியால் வருபவை எனத் துணிந்தவன் பொறிகள் நிலைக்கப் பெற்று என்றும் நிறைந்த வனாக ஒன்றையும் விரும்ப மாட்டான். வருந்தவும் மாட்டான்.

    4. இன்ப துன்பங்களும், ஜனன மரணங்களும் விதி வசமெனத் துணிந்து தன்னால் ஆவதொன்றுமில்லை எனக் கவலையில்லாமல் இருப்பவன் பற்றற்றவன்.

    5. நினைப்பாலன்றி வேறெவ்வாறும் துக்கம் இங்கு ஏற்படாதெனத் தெரிந்து கவலையற்று அனைத்திலும் ஆசை தீர்ந்தவனே இன்பமும் அமைதியும் அடைந்தவன்.

    6. உடல் நானல்ல. என்னுடையதுமல்ல.அறிவே நான் எனத் துணிந்த வன் முக்தி அடைந்தவன் எனலாம். செய்ததையும் , செய்யாததையும் அவன் நினைக்க மாட்டான்.

    7.பிரமன் முதல் புழு வரை அனைத்தும் நானே எனத் துணிந்தவன் அடைந்ததிலிருந்தும், அடையாததிலிருந்தும் முற்றிலும் விலகித் திரிபற்றுத் தூய்மையுடையவனாக இருப்பான்.

    8. பல விந்தைகளை உடைய இந்தவுலகம் ஒன்றுமேயில்லாதது என உணர்ந்து ஆத்ம விளக்கமாக இருப்பான்.

     [தொடரும்]

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-41

    தி. இரா. மீனா

    இங்கு இடம் பெறும் வசனக்காரர்களின் பெயர், வாழ்க்கை குறித்த விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. வசனங்களில் இடம் பெற்றிருக்கும் முத்திரை கொண்டு இவர்கள் அடையாளம் காணப் பெறுகின்றனர்.

    ஆனந்த சித்தேஸ்வரா

    “மென்மை கடினம் வெப்பம் குளிர்ச்சி அறியும் வரை
    அர்ப்பணிப்பை மீறக்கூடாது
    அங்கத்திடம் ஒன்றினால் இலிங்கமறிய முடியாது
    அழிவற்ற சரணருக்குக் கூழாயினும் பரவாயில்லை
    அமுதமானாலும் பரவாயில்லை
    ஓடும் பரவாயில்லை செம்பும் பரவாயில்லை,
    படுக்கையும் பரவாயில்லை கிழிந்த பாயும் பரவாயில்லை
    அரம்பையும் சரி, சாதாரணமானவளும் சரி,
    அரசனும் பரவாயில்லை சேவகனும் பரவாயில்லை
    ஊரும் சரியே காடும் சரியே
    போற்றுதலும் தூற்றுதலும் நன்றே.
    இத்துணையும் மீறிய பெரிய மனிதர் செயலை
    உலகத்தவர் எங்ஙனம் அறிவர் ஐயனே
    ஆனந்த சித்தேஸ்வரனே.”

    ஈஸ்வரி வரத சென்னராமா

    “பொன் குவியல் ஆயிரம் பெண்கள் பெரிய நாடெனினும்
    இவ்வுடல் அழிவது உறுதி ஆசையைத் துறந்து
    ஈஸ்வரீய வரத சென்னராமனெனும் இலிங்கத்தில் ஆசை
    வைத்தால் எதிர்காலம் நன்றாம் காணீர் அண்ணன்மாரே“

    ஏகாந்தவீர சொட்டாளா

    “வந்த வழியில் மீண்டும் போகாதவன் இலிங்க ஐக்கியன்
    முன்னும் பின்னும் மறந்து ஐயமற்றவன் இலிங்க ஐக்கியன்
    குரு ஏகாந்தவீர  சொட்டாளனுள்
    தன்னைத் தான் மறந்தவன் இலிங்கமுடன் இணைந்தவன்.”

    ஏகோ ராமேஸ்வரலிங்கா

    “தான் இன்புற்றால் தன் இலிங்கம் மெச்ச நடப்பது
    தான் இன்புற்றால் தன் இலிங்கம் மெச்சப் பேசுவது
    நிந்திக்க வேண்டாம் ,பிறரை நிந்திக்க வேண்டாம்
    யாருக்கு ஆனாலென்ன? ஆகாவிட்டாலென்ன?
    தான் இன்புற்றால் போதும்.
    ஏகோராமேஸ்வர இலிங்கத்தின் உண்மையறிந்தால்
    முற்றி வளர்ந்த நெற்கதிர் போல் இருக்க வேண்டும் சரணன்”

    குருவரத விருபாக்ஷா 

    “செல்வமெனில் அனைவரும் வருவர்,
    நெருப்பெனில் யாரும் நிற்க மாட்டார் ஐயனே.
    உலகு எரிகிறது விஷ நெருப்பினால்.
    உருண்டோடுகிறது எண்டிசையும் சுரரின் கூட்டம்
    ஹரிபிரம்மன் திருமகள் கலைமகள் கரம்பிடித்து
    மருள் கொண்டனர் உமது உண்மையறியாமல்
    திருஇருந்தது பக்தருக்கு ,நெருப்பை நீ தரித்துள்ளாய்
    நிகர் யாருமிலர் உனக்கு குருவரத  விருபாக்ஷனே.”

    ஜங்கமலிங்கப் பிரபு

    “உலகிலிருக்கிற கல்லெல்லாம் இலிங்கமெனில் குருவின் தயவேன்
    நதியின் நீரெல்லாம் புனிதமெனில் இலிங்கத்தின் தயவேன்
    விளைந்த பயிரனைத்தும் பிரசாதமெனில் ஜங்கமனின் தயவேன்
    என்பதால் மூவகையின் தயவும் அழிந்தது
    காணாய் ஜங்கமலிங்கப் பிரபுவே.”

    திரைலோச்சன மனோஹர மாணிகேஸ்வரலிங்கா

    “உடல்கள் அழியும் முன்னர் அரவணைத்து
    பார்வை மழுங்கும் முன்னர் பார்த்து
    மதி மயங்கும் முன்னர் இலிங்கம் இலிங்கமென்பீர்
    செல்வம் தொலைந்து போகும் முன்னர்
    ஜங்கமருக்கு வழங்கி
    திரைலோச்சன மனோஹர மாணிகேஸ்வரனே
    நட்பு வைப்பின் மீண்டும் வாராதோ?”

    நஞ்சுண்ட சிவா

    வேதம் சரித்திரம் சிற்றறிவு வாதம் தந்திரம் இதிகாசம்
    நால்வகைப் புராணம் முன்னோர் வசனம் கற்றென்ன?
    குருவிடம் நம்பிக்கையில்லை இலிங்கத்தில் ஒழுக்கமில்லை
    ஜங்கமனிடம் கவனமில்லை பிரசாதத்தில் முழுமையில்லை
    பாதோகத்தில் பரமசுகமில்லை
    இந்த ஐவகை ஒழுக்கங்களிலிருந்து தானழிந்து
    வேற்றுமையறியாமல் நான் பக்தன், விரக்தியுடையோனெனில்
    சிரிக்க மாட்டார்களா உனதடியார்
    பரமகுருவே நஞ்சுண்ட சிவனே“

    [தொடரும்]

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 7

    எட்டுக் கோணல் பண்டிதன் – 7

    தி. இரா. மீனா

                      அத்தியாயம் ஐந்து

    உலகமும், உலக அனுபவங்களும் கற்பனையென்று உணர்ந்து அனைத்திலும் சமத்துவமுற்று சொரூபத்தில் கரைந்து போ என்று ஜனகருக்கு ஷ்டவக்கிரர் உபதேசிப்பது இவ்வத்தியாயமாகும்.

    1.எதனோடும் பற்றும் உனக்கில்லை; தூயவனாகிய நீ துறக்க விரும்புவதேன்? அனைத்துணர்வுகளையும்  கரைத்து நீ அவ்வாறே கரைந்து போ.

    2. கடலிலிருந்து எழும் குமிழிகள் போல உலகம் உன்னிலிருந்து உதிப்பதில்லை. ஒன்றாகிய ஆத்மாவை உணர்ந்து நீ அவ்வாறே கரைந்து போ.

    3. கயிற்றிலரவு போல வெளிப்படையாகக் கண் முன் தோன்றினாலும் அது ஒரு தனிப்பொருள் இல்லாததால் உன்னிடம் உலகில்லை என்று இவ்வாறே நீ கரைந்து போ.

    4. இன்ப ,துன்பங்களிலும் ஆசை நிராசைகளிலும் ,வாழ்விலும் சாவி லும் கூட சமமாகப்  பூரணமாக இவ்வாறே நீ கரைந்து போ.

        அத்தியாயம் ஆறு

    வரையுற்ற ஜடவுலகிற்கு ஆதாரமாக இருப்பவனே நான். ஆதலால் அதைத் தள்ளுவதும், ஏற்றுக் கொள்ளுவதும் ,ஒழிப்பதும் இல்லையென ஜனகன் கூறுவது இந்த அத்தியாயமாகும்.

    1. வானம் போல எல்லையற்றவன் நான், உலகம் குடம் போன்ற ஜடம் என்னும் இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும், ஒழித்தலுமில்லை.

    2. மஹா சமுத்திரம் போன்றவன் நான்; உலகமோ அலை போன்றது. இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும், ஒழிப்பதுமில்லை.

    3. கிளிஞ்சல் போன்றவன் நான்; உலகக் கற்பனை வெள்ளி போன்றது. இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும், ஒழிப்பதுமில்லை.

    4.அகிலப் படைப்பிலும் உள்ளவன் நானே; மேலும் அகிலப் படைப்பே என்னிடம் உள்ளது. இதுவே ஞானம். ஆதலால் இதைத் தள்ளுவதும், கொள்ளுவதும் ,ஒழிப்பதுமில்லை.

                          அத்தியாயம் ஏழு

    அகண்ட அனுபவத்தே நிலை பெறின், உலகத் தோற்றத்தால் சாதக பாதகங்கள் எதுவுமில்லையென்றும், அதனிடம் விருப்பமோ வெறுப்போ உண்டாகாது என்று ஜனகன் கூறுவது இவ்வத்தியாயமாகும்.

    1. எல்லையில்லாக் கடலாம் என்னிடம் உலகக் கப்பல் மனக்காற்றால் இங்குமிங்கும் அலைகிறது. அதனால் எனக்கொன்றும் வருத்த மில்லை.

    2.எல்லையில்லாக் கடலாம் என்னிடம் உலகத்திரை உண்டானாலும், ஒடுங்கினாலும், அதனால் வளர்வும் தேய்வும் எனக்கில்லை.

    3. எல்லையில்லாக் கடலாம் என்னிடம் ஜகம் ஒரு கற்பனையே; நான் அமைதியானவன்; வடிவற்றவன் என்னும் ஞானத்தில் நான் நிலை பெற்றேன்.

    4. ஆத்மா விஷயங்களில் இல்லை; வரையற்ற, மாசற்ற அங்கே விஷயமில்லை – என்று பற்றற்று, அவாவற்று அமைதியுடைய நான் இதனில் நிலை பெற்றேன்.

    5. நானோ ஞானமயமானவன்; உலகமோ இந்திரஜால நிகர். ஆதலால் எவ்வாறு எதனிடம் எனக்கு வேண்டல் வெறுத்தல் உண்டாம்?

                      அத்தியாயம் எட்டு

    ஜனகருக்கு பந்தங்களின் இயல்பைக் கூறி ,அகந்தையில்லாமல் எதையும் ஏற்றுக் கொள்ளாதும், தள்ளாதும் இருக்க வேண்டுமென  ஷ்டவக்கிரர் கூறுதல்

    1.எப்போது மனம் ஏதோ ஒன்றை விரும்புவதும், வருந்துவதும், தள்ளுவதும், உவப்பதும் சீறுவதும் உண்டோ, அப்போதே பந்தம்.

    2. எப்போது சித்தம் எதையும் விரும்பாது வருந்தாது தள்ளாது மகிழாது சீறாதிருக்குமோ, அப்போதே முக்தி.

    3. எப்போது மனம் சில விஷயங்களில் பற்றுமோ அப்போதே பந்தம். எப்போது சித்தம் எவ்விஷயத்திலும்  தோயாதோ, அப்போதே வீடு.

    4. நானற்ற போது விடுதலை, நானுற்ற காலை பந்தம் என்று   விளையாடல் போலறிந்து எதையும் ஏற்றுக் கொள்ளாமல், தள்ளாமலிரு.

    [தொடரும்]

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-40

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-40

    தி. இரா. மீனா

    அக்கம்மா

    கல்யாணைச் சேர்ந்தவர். ’ஆசாரவே பிராணவாத இராமேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும்.

    1. “பற்றற்றவனுக்கன்றி ஆசையுள்ளவனுக்கு விரதமுண்டோ?
    அமைதியுடையவனுக்கன்றி சினமுடையவருக்கு விரதமுண்டோ?
    கொடையாளிக்கல்லாமல் கருமிக்கு விரதமுண்டோ?
    தன்னாற்றலுக்கு ஏற்றாற்போல் மனத்தூய்மையுடன்
    இருக்கும் மாயபக்தனே உலக வினைகளற்ற சரணர்
    அவர் பாதம் என்னுள்ளத்தில் வார்ப்புப் போலுள்ளது.
    சரணரின் மாட்டுக் கொட்டகையாம்
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம்“

    2. “குருவாக இருந்தாலும் ஒழுக்கக் கேடுடையவனெனில்
    பின்பற்ற முடியாது.
    இலிங்கமாயிருப்பினும் ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டிருப்பின்
    வழிபட முடியாது.
    ஜங்கமனாயிருப்பினும் ஆசாரத்தைப்
    பின்பற்றவில்லையாயின் சேர இயலாது.
    ஆசாரமே பொருள், விரதமே உயிர்,செயலே அறிவு
    அறிவே ஆசாரம்
    ஆச்சாரமே பிராணவாத இராமேஸ்வர இலிங்கம் அதுவே“

    3. “தான் மூழ்கிய பின்னர் கடலின் ஆழம் தனக்கேன்?
    தான் ஆயுதமொன்றில் அகப்பட்ட பின்னர்
    தன்னுடலை ஆயுதங்கள் பல தளைப்படுத்தினாலென்ன?
    ஒரு முடிவுக்கு வந்த பின்னர்
    இந்த உலகோருடன் வேறு பேச்செதற்கு?
    இது கட்டுப்பாடுடன் கூடிய நியமம்
    நியமத்தால் வந்த முடிவு
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கத்தின் விருது.“

    4. “பக்தன் வீட்டிற்கு அடியார் வந்தால்
    திருமண  மகிழ்ச்சியை விட அதிகமென நினைத்து
    உடலுருகி மனமிணைந்து கண்கள் நிறைந்து
    வஞ்சனை ஐயம் தோன்றாமல்
    ஐயமற்றவனாகிச் செய்கின்ற பக்தனுடைய
    முற்றத்தின் வாசலே
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வர இலிங்கத்தின் சிரமாம்.”

    5. “ஐயமுள்ள வரையில் தவமிருப்பவன் இல்லை
    வாள்முனைக்கு அஞ்சும் வரையில் வீரமுடைய வீரனல்ல.
    மூவகையுடல்  உள்ளவரையில் இலிங்கமுள்ள
    அங்கமுடையவனல்லன்.
    நிந்தனை வந்தபின்னும் அங்கத்தை விடவில்லையெனில்
    ஒழுக்கமுடையவன் அல்லன்.
    இந்த நியமங்களில் உட்பட்டவனுக்கு
    அங்கிங்கெனும் பயமெங்குமில்லை.
    ஆச்சாரவே பிராணவாத இராமேஸ்வரலிங்கத்திலுமில்லை.”

    உரிலிங்க பெத்தியின் புண்ணியஸ்திரி காளவ்வே

    உரிலிங்க பெத்தியின் மனைவி.’உரிலிங்க பெத்தியிகளா அரசா ’இவரது முத்திரையாகும்.

    1. “கடமை காயகமற்றவர் பக்தரல்லர்
    வாய்மை தூய்மையற்றது காயகமல்ல
    ஆசையென்பது பிறப்பின் மூலம்
    ஆசையற்றது நித்திய முக்தியாம்
    உரிலிங்கப் பெத்திகளரசனுள், சுலபமல்ல காண் தாயே.”

    3. “தும்பையின் கொள்ளிபோல் எரிகின்றவன் பக்தனா?
    பொய்யுரைத்துப் பெற்றுச் செய்பவன் பக்தனா?
    பக்தர் குலத்தை இகழ்பவன் பக்தனா?
    தன்னுயிருக்குத் துன்பம் வரினும் இவரைவிடவேண்டும்
    விடவில்லையெனில் உரிலிங்கப் பெத்திகளரசன்
    விரும்பான் தாயே“

    எடேமட நாகிதேவய்யாவின் புண்ணியஸ்திரி மசணம்மா 

    ’ நிஜகுணேஸ்வர ’இவரது முத்திரையாகும்.

    “காகம் நாய் இரண்டையும் உண்டவரில்லை;
    விரதம் கெடுத்தவரோடு இணைந்தவரில்லை;
    நாய்க்கு ஆரஞ்சு செரிக்குமா?
    உலக மாந்தருக்கு விரதம் பொருந்துமா ,
    சிவமூலத்துக்கன்றி?
    நிஜகுணேஸ்வர இலிங்கத்தில் தாங்களே சாட்சி“

    எச்சரிகே காயகதா முக்திநாதய்யா :

    இவருக்கு முத்தண்ணா  என்ற பெயருமுண்டு.காயகம் இரவுநேர காவலாளி. ’சுத்த சித்த பிரசித்த பிரசன்ன குரங்கேஸ்வரலிங்கா’ என்பது இவரது முத்திரையாகும்.

    “உடல் மாற்றம் போதும் எழுக,
    வஞ்சகச் செயல்கள் பல மறந்தெழுக,
    பக்தியும் முக்தியும் உமக்களிக்கும் இலிங்க நட்பை
    நினைத்தெழுக.
    உமது குருவின் ஆணை
    உமது பற்றற்ற அறிவின் விழிப்புணர்வறிந்தெழுக.
    சுத்த சித்த பிரசித்த பிரசன்ன குரங்கேஸ்வர
    இலிங்கத்துடன் இணைய வேண்டுமெனில்.”

    [தொடரும்]

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 6

    எட்டுக் கோணல் பண்டிதன் – 6

    தி. இரா. மீனா

                         அத்தியாயம் மூன்று

    இந்த அத்தியாயத்தில் ஷ்டவக்கிரர் அகப்பற்றையும், புறப் பற்றையும் நிந்தித்து ஞானியின் இயல்பை ஜனகருக்கு விளக்குகிறார்.

    1. அழிவில்லாத ஒன்றாகிய ஆத்மாவை உண்மையில் உணர்ந்த ஆத்ம ஞானியும் தீரனுமாகிய உனக்குப் பொருள் தேடுவதில் எப்படி மகிழ்ச்சி உண்டாக முடியும் ?
    2. கிளிஞ்சல் என்று அறியாததால் வெளித் தோற்றத்தில் ஆசை ஏற்படுவது போல, ஆத்மாவை உணராத போது மோகத்தால் காணும் விஷயங்களில் விருப்பமுண்டாகும்.
    3. கடலில் அலைகள் போல எதனிடம் இந்த உலகம் விளங்குமோ அதுவே நான் என்று அறிந்த பிறகும் ஏழை போல நீ பதறுவது எதற்காக?
    4. ஒருவன் அழகான தூய அறிவைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பினும், தனது அதிகமான சிற்றின்பப் பற்று இயல்பால் மாசுடையவன் ஆகிறான்.
    5. தன்னிடம் படைப்பு அனைத்தையும், படைப்பனைத்திலும் தன்னையும் காணும் முனிவனுக்கு, நான் அல்லது என்னுடையது என்ற மமகாரத் தொடர்பிருப்பது மிகுந்த அதிசயமே.
    6. அத்வைத உயர்நிலையை நாடும் யோகி, காமவயப்பட்டுக் காதல் கொண்டு சீரழிதல் விந்தையானதாகும்.
    7. ஒருவன், பலம் மிகக் குறைந்து முடிவு காலத்தை நெருங்கியிருந்தும் ஞானப் பகையானது என்றறிந்த காமத்தை விரும்புவது விந்தையே.
    8. விவேகம் கொண்டும், இம்மை மறுமைகளில் விருப்பமற்றும் உள்ள யோகிக்கு முக்தியின்பால் பயமேற்படுதல் விந்தையே.
    9. ஆத்மாவையே என்றும் காண்பவனாக உள்ள தீரன் உபசரிக்கப்பட்டாலும், துன்புறுத்தப்பட்டாலும் மகிழ்ச்சியும் கோபமும் அடைவதில்லை.
    10. இயங்கும் தன்னுடலைப் பிறர் உடலெனக் காண்பவன் புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் குழம்புவதில்லை.
    11. மாயமயமாக இந்த உலகத்தை மகிழ்ச்சியின்றிப் பார்க்கும் அறிவுடையோன் தன்னை இறப்பு நெருங்கும் போது அச்சமடைவானோ?
    12. ஆத்மஞான நிறைவு கொண்டு, ஆசை- நிராசைகளிலிருந்து விடுபட்டு, பற்றற்ற மனமுடையவனாக வாழ்பவனுக்கு யார் நிகராக முடியும் ?
    13. தனது இயல்பினாலேயே தோன்றுவதேயன்றி வேறொன்றுமில்லை என்றுணர்ந்த அறிவுடையவன், தான் ஏற்றுக்கொள்ளுவதற்கும், ஒதுக்குவதற்கும் உரிய பொருளாக எதையும் காண்பதில்லை.
    14. இருமையும், மனவெழுச்சியும்,உள்ளத்தில் அழுக்கும் இல்லாதவனுக்குத் தானாக ஏற்படும் அனுபவத்தால் இன்பமுமில்லை, துன்பமுமில்லை.

                அத்தியாயம் நான்கு

    இந்த அத்தியாயம் ஜனகர், தானுணர்ந்த ஞானநிலையின் பெருமையை ஷ்டவக்கிரரிடம் சொல்வதாக அமைகிறது.

    1. விஷய அனுபவங்களுடன் செயல்படும் ஆத்மஞானியை, சம்சார பந்தத்தைச் சுமக்கும் பாமரருடன் ஒப்பிடுதல் பொருந்தாது.
    2. இந்திரன் முதலான தேவர்கள் தீனர்களாக எந்த நிலையை அடைய விரும்புவார்களோ அந்த நிலையைத் தன் பயிற்சியால் அடைந்த போதிலும் ஒரு யோகி அதனால் மகிழ்ச்சி அடைவதில்லை.
    3. பாவ, புண்ணியங்களின் தன்மை ஞானியின் உள்ளத்தைத் தீண்டுவதில்லை, வானத்தில் புகை படிந்தது போலக் காணப்பட்டாலும், படியாதது போல.
    4. இந்தவுலகம் முழுவதும் ஆத்மாவே என்றுணர்ந்து சுதந்திரமாக வாழ்பவரைத் தடை செய்யும் தகுதி யாருக்கிருக்கிறது?
    5. பிரமன் முதல் புழு வரையுள்ள நான்கு வகை படைப்புக் கூட்டத்தில் விருப்பு வெறுப்புகளை விலக்குகிற திறமுடையவன் மெய்யறிவு ஞானி ஒருவனே.
    6. உலகிறையாகிய இரண்டில்லாப் பொருளே தானென்று யாரோ ஒருவன் உணர்கிறான். அவன் சித்தம் போல வாழ்பவன். அவனுக்கு எந்தப் பயமுமில்லை.

    தீரன் – வடமொழியில் இச்சொல்லுக்கு புலன் செயல்பாடுகளுக்கோ, வாழ்க்கையின் பல்வகையான போக்குகளுக்கோ ஆட்படாமல்  உறுதியாகவும் தெளிவாகவும் செயல்படக் கூடிய யோகி என்பது பொருள்.

    [தொடரும்]

    Share
  • வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-39

    வசனக்காரர்கள் – சிவனைப் பேசியவர்கள்; சிவனோடு பேசியவர்கள்-39

    தி. இரா. மீனா

    ஹெண்டத மாரய்யா

    கள் விற்கும் தொழிலைச் செய்து வந்த இவர் சரணராக மாறியவர். ’தர்மேஸ்வரலிங்கா’ இவரது முத்திரையாகும்.

    “மண்ணெனும் குடத்தின்  நடுவே
    பொன்னெனும் கள் உற்பத்தியானது
    பெண்ணெனும் வட்டிலில் பருக போதை தலைக்கேறியது.
    இந்த போதையில் மூழ்கியவர்களை
    எப்படி மிக உயர்ந்தவர்களென்பது?
    பக்தி பற்றற்றவன் என்பது இப்பக்கமே எஞ்சியது
    தர்மேஸ்வரலிங்கத்தை எட்டவில்லை“

    ஹொடே ஹூல்ல பங்கண்ணா

    புல் விற்கும் காயகம் இவரது.’ கும்பேஸ்வரலிங்க ’இவரது முத்திரையாகும்.

    1. “கட்டையை நெருப்பில் வைக்க
    ’நான் இருக்கிறேன், வேண்டாமென’
    உள்ளிருந்த நெருப்பு உரைத்ததோ?
    தான் உள்ளிருந்து உணவானது புறமிருந்த கட்டைக்கு
    இங்ஙனம், பிறருக்குத் தன்னுள் இடந்தராதவனுக்குப் பதிலில்லை
    கும்பேஸ்வர இலிங்கத்துள்ளிருக்கும்
    ஜெகந்நாதவனை அறிந்தவருக்கு“

    2. “கூலி வேலை செய்தும் விவசாயம் செய்தும்
    தூய மனத்துடன் குரு, இலிங்கம் ஜங்கமனுக்குக்
    காயகம் ஆற்றுவோனின் நிலை எப்படிப்பட்டதெனில்;
    தானாற்றும் செயலைப் பிறரிடம் செய்ய வைக்கமாட்டான்,
    தான் பெற்றது பிரசாதம், பிறர் பெற்றது
    உணவெனச் சொல்ல மாட்டான்.
    எஞ்சிய உணவுக்கும் பிரசாதத்துக்கும்
    வேற்றுமை பார்க்க மாட்டான்; இரண்டும் சமமென்பான்.
    இத்தகைய பிரசாதி கொடுக்கும் பிரசாதம் தூய்மையானது.
    அது இலிங்கமெனும் உடலில் நிலைத்த பிரசாதம்
    இங்ஙனம் வேற்றுமை காட்டாத அருவத்தின் பிரசாதியை
    கும்பேஸ்வர இலிங்கத்திலுள்ள ஜெகந்நாதன் சாட்சியாக
    நமோ நமோ என்பேன்!“

    ஹேமகல்ல ஹம்ப்பா

    ’ பரமகுரு படுவிடு சித்தமல்லி நாத பிரபுவே ’ இவரது முத்திரையாகும்.

    1. “உணவின் தேவையில்லாதவனுக்கு
    உழவின் தொடர்புண்டோ?
    வானில் பறப்பவனுக்கு
    பூமியில் நடமாடும் ஆசையேன்?
    வைரக் கவசமணிந்தவனுக்கு
    அம்பின் பயமுண்டோ ஐயனே?
    மாயமற்றவனுக்கு மாயையின் தயவேன்?
    பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதனுள் இணைந்தவனுக்கு
    பிறதெய்வங்களின் தயவேன்? “

    2. “நடக்க முடியாதவனுக்கு அழகிய மனைவி வாய்த்தால்
    அவர்தம் இல்லறம் நடப்பதெங்ஙனம் ஐயனே?
    பேச்சு வராதவருக்கு அரசுப் பட்டம் கிடைத்தால்
    குடிமக்கள் பரிவாரம் அரசு நடத்த முடியுமா ஐயனே?
    அஞ்ஞான குணத்தின் மாயாவி போகும் வரையில்
    மெய்ஞ்ஞான சம்சாரமுண்டோ ஐயனே?
    சம்சாரகுணம் உள்ளவரையில் பரமாத்மாவின் எண்ணமிகுமோ
    சம்சார மாயை உயிராயிருப்பவருக்கு
    தூய சம்சாரமுண்டோ ஐயனே?
    பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதப் பிரபுவே ”

    3. “படகு பாய்மரம் நம்பியோர்
    கடல் ஆறு தாண்டமாட்டார்களா ஐயனே?
    வில் வாளேந்தி போர்க்களம் புகுந்தோர்
    போரினை வெல்ல மாட்டார்களா ஐயனே?
    குருவை நம்பியோர் பிறப்பை வெல்லமாட்டார்களா ஐயனே?
    பரமகுரு படுவிடி சித்தமல்லிநாதப் பிரபுவே.”

    கரஸ்தல மல்லிகார்ஜூனதேவா

    ’பரமகுரு சாந்தமல்லிகார்ஜூனா ’இவரது முத்திரையாகும்.

    1. “அகத்தில் தெளிவில்லாதவனுக்கு
    புறத்தில் செயலிருந்து பயனென்ன?
    பார்வையற்றவனின் வாழ்வு போலாம் அது.
    புறத்தில் செயலின்றி அகத்தில் தெளிவிருந்து என்ன பயன்?
    அது சூன்யத்தின் தீபம் போலாம்
    அகத்தின் தெளிவு, புறத்தின் செயல்
    இவ்விரண்டும் இணையவேண்டும்.
    அது எங்ஙனமெனில் அகத்தில் தெளிவு புறத்தில் செயலுள்ளவனே
    பக்தனாம் மகேஸ்வரனாம் பிரசாதியாம்
    பிராணலிங்கியாம் ஐக்கியமான அடியவனாம்
    நம் பரமகுரு சாந்த மல்லிகார்ஜூனன் தானாம்.”

    2. “கடலிலுள்ள ஆலங்கட்டியைச் செதுக்கி
    தூணாக்கி வீடு கட்டிக் கொண்டு
    குடித்தனம் செய்ய முடியுமா ஐயனே?
    நெருப்பினுள்ளிருக்கும் கற்பூரத்தின் குடுவையுள்
    நறுமணம் நிரப்பி பசையாக்கி
    மகிழ முடியுமா ஐயனே?
    காற்றிலுள்ள மணம்பிடித்து
    மாலைகட்டித் தலையில் சூட முடியுமா ஐயனே?
    பாலையின் கானல் நீரைக் குடத்திலேந்தி
    சுமந்து வந்து சமைத்துண்ண முடியுமா ஐயனே?
    உமது மேன்மையறிந்து நிறைமனதுடன் பரவசமாகி
    தன்னை மறந்த பரசிவயோகிக்கு
    மறுபிறவி மீண்டுமுண்டோ?
    பரமகுரு சாந்தமல்லிகார்ஜூனனே?”

    [தொடரும்]

    Share
  • எட்டுக் கோணல் பண்டிதன் – 5

    எட்டுக் கோணல் பண்டிதன் – 5

    தி. இரா. மீனா

                   அத்தியாயம் – 2 தன்னை ’உணர்தல்

    ‘இதுவரை மாயையால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த நான் இப்போது அதிலிருந்து விடுபட்டு குறைபாடுகளற்று, அமைதியானேன்’ என ஜனக மன்னர் தத்துவத்தின நுட்பமுணர்ந்து வியப்புடன் சுவானுபவம் உணர்த்தல் இரண்டாவது அத்தியாயமாகும். இதில் இருபத்தைந்து வசனங்கள் உள்ளன.

    1. படைப்பிற்கப்பால் குற்றமற்ற அமைதிமயமான அறிவே நானாகயிருக்க இத்தனை காலம் மயக்கத்தில் நான் ஏமாறினேனே.
    2. நானொருவன் இந்த உடலை ஒளிர்விப்பது போல உலகத்தையும் ஒளிர்விக்கிறேன். ஆதலால் உலகமனைத்தும் என்னுடையது அல்லது ஒன்றுமே எனதல்ல.
    3. உடலுடன் உலகை விட்டு நீங்குவதும், ஏதோ ஒரு நுட்பத்தால் என பரம்பொருள் எனக்குக் காட்டுகிறது.
    4. அலைகளும் நீர்க்குமிழிகளும் நீரிலிருந்து வேறானவையில்லை என்பது போலவே ஆத்ம வெளிப்பாடான உலகம் ஆத்மாவிலிருந்து வேறானதில்லை.
    5. ஆராய்ந்து பார்க்கும் போது ஆடை என்பது நூல் என்ற ஒன்றே என்பது போல படைப்பும் ஆன்மமயமானதாக உள்ளது.
    6. கரும்பின் சாற்றில் உண்டாகும் சர்க்கரை அதனாலேயே [சாற்றால்] வியாபிக்கப்படுவது போல உலகம் என்னிடம் உண்டாகி இடைவிடாமல் என்னால் வியாபிக்கப்படும்.
    7. தன்னையுணராத போது உலகம் உண்டாகும்; தன்னையுணர்ந்தால் உலகம் தோன்றாது. கயிற்றைப் பார்க்காதபோது அரவு தோன்றும்; கயிற்றைக் கண்டால் அரவு தோன்றாது.
    8. எனது சுயவடிவம் ஒளியேயன்றி வேறில்லை; உலகம் ஒளிரும் போது நானே ஒளிர்கிறேன்.
    9. கிளிஞ்சலில் வெள்ளியென, கயிற்றில் பாம்பென, வெயிலில் கானலென அறியாமையால் உலகம் என்பால் விகர்ப்பிக்கப்பட்டிருக்கிறது.
    10. என்னிடமிருந்து வெளிப்பட்ட உலகம் என்னிடம்தான் ஒடுங்கும். மண்ணில் குடமும், நீரில் அலையும் பொன்னில் பணியும் போல.
    11. பிரமன் முதல் புழுவரை உலகின் அழிவிலும், அழிவின்றி நிற்கும் வியப்பு மிகும் யான் போற்றி.
    12. உடலுற்றாலும் ஒருவனாயிலகும் நானே நான்! எனக்கே வணக்கம். வருவது, போவது எங்குமெனக்கில்லை. உலகம் முழுவதும் நிறைந்திருப்பவன் நானே.
    13. உடலால் எதையும் தொடாமல், தொன்று தொட்டு உலகு தாங்குமெனக்கு நிகர் சமர்த்தானவர் எவர்? நானே நான்! என்னை வணங்குகிறேன்.
    14. என்னை வணங்குகிறேன். ஒன்றுமில்லையெனக்கு. இல்லையெனில் மனம், வாக்குகளுக்கு, இலக்கு எல்லாம் என்னுடை யதே.
    15. அறிபவன், அறிவு, அறிகின்ற பொருள் என்ற இந்த மூன்றும் உண்மையல்ல. அறியாமையால் இவை எங்கிருக்குமோ அங்கு களங்கமில்லாப் பொருள் நான்
    16. துன்பத்தின் மூலம் துவைதம். அதற்கு முன்பு பார்ப்பது முழுவதும் பொய். ஏகமாம் தூய ஞான ரஸமே நான் என்பதிலும் வேறு மருந்தில்லை.
    17. ஞானமுடையவன் நான்; அறியாமையால் சிலவற்றைக் கற்பிதம் செய்து கொண்டேன். தொடர்ந்து ஆய்ந்ததன் மூலம் எனக்கு விகற்பமில்லா நிலை வாய்த்தது.
    18. பந்தமெனக்கில்லை; மோட்சமுமில்லை. ஆதாரமற்ற குழப்பம் அடங்கியது. உலகம் என்னிடமுள்ளது; [ஆயினும்] உண்மையில் என்னிடமில்லை.
    19. உடலுடன் இவ்வுலகம் ஒன்றுமேயில்லையென்றும், ஆத்மா தூய அறிவு மயமென்றும் துணிந்தேன். ஆனால் இப்போது கற்பனை எதனிடம்?
    20. உடலும், சொர்க்க – நரகங்களும், பந்த முக்திகளும், பயமும் – இவையெல்லாம் கற்பனையே. ஞான ஆத்மாவாம் எனக்கு இதனாலென்ன பயன்?
    21. துவைதம் காணாத எனக்கு மக்கள் கூட்டம் காடு போலாகியது. எதனிடம் நான் மகிழ்வடைவேன்?
    22. உடல் நானல்ல; எனக்கு உடலில்லை. ஜீவனும் நானல்ல; ஞானமே நான். வாழ்க்கை விருப்பமே என் பந்தமாக இருந்தது.
    23. எல்லையில்லாத பெரும் கடலாகிய என்னிடம் மனமாகிய காற்றெழ பற்பல உலகத் திரைகள் திடீரென விந்தையாய்க் கிளம்புகின்றன.
    24. எல்லையில்லாத பெருங்கடலாகிய என்னிடம் மனக்காற்று ஒடுங்க, ஜீவனாகிய வியாபாரியின் உலகக் கப்பல் அழிவடைகிறது.
    25. கரையில்லாத பெருங்கடலாகிய என்னிடம் ஜீவ தரங்கங்கள் இயற்கையாகவே உண்டாகி மோதி விளையாடி ஒடுங்குகின்றன.

    [தொடரும்]

    Share