Tag: சுரேஜமீ

  • சிகரம் நோக்கி . . . . . (20)

    சுரேஜமீ.

     

    நேரம்

    peak1

     

    உழைப்பின் அருமையை அறிந்தவர்கள் நேரத்தின் தன்மையை உணர்ந்தவர்களாக இருப்பார்கள்! ஒவ்வொரு நிமிடமும் வாழ்வின் அர்த்தத்தை நமக்கு விளக்கிக்கொண்டு இருக்கிறது என்பதை ஒரு சிலர் மட்டுமே அறிய, அவர்கள் வாழ்வு மற்றவர்களுக்குப் பாடமாக அமைகிறது!

    எளிதில் எதை வேண்டுமானாலும் இவ்வுலகில் பெற்று விடலாம்; ஆனால், உலகையே கொடுத்தாலும் கிடைக்காத ஒன்று உண்டென்றால்; அதுதான் கடந்து சென்ற காலம்!

    மேல்நாட்டிலே நேரத்தின் அருமையைப் புரியவைக்க ஒரு கற்பனைக் கதை ஒன்றைச் சொல்வார்கள்;

    நீங்கள் ஒரு வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அக்கணக்கில் தினமும் ரூபாய் 86,400/- வரவு வைக்கப்படுகிறது ஆனால் ஒரு நிபந்தனையாக , அன்று மாலையிலேயே, தாங்கள் செலவு செய்தது போக மீதமுள்ள தொகை உடனடியாக உங்கள் கணக்கிலிருந்து எடுக்கப்பட்டு விடுகிறது என்றால்,

    என்ன செய்வீர்கள்?

    மனித இயல்பு உடனடியாக ஒரு பைசா மீதமில்லாமல் எடுப்பதுதானே? இதற்கு விதிவிலக்காக இருப்பவர்கள் யாரும் உண்டோ ?

    இதேபோல்தான், இயற்கை நமக்கு வரமாக வாழ்வின் வளத்திற்குத் தேவையான நேரத்தைத் தினமும்

    விழித்தெழும் காலம் முதல் இரவின் மடியில் விழும் காலமும் சேர்த்து

    86,400 வினாடிகள் (24 x 60 x 60) நம் கணக்கில் வரவு வைக்கிறது; ஆனால் அது ஏதோ இலவசமாக வருவதாக எண்ணி நம்மை ஏமாற்றிக் கொள்கிறோம்!

    கடந்து செல்லும் ஒவ்வொரு நிமிடமும், உங்கள் வாழ்வில் ஒரு மைல் கல்லாக இருந்தால் காலத்தை நீங்கள் வென்றதாக நம்பலாம்; அல்லாமல், காலம் மட்டுமே கடந்து நீங்கள் வெறும் கல்லைப் போல் இருந்தால், காலம் உங்களை வென்று செல்கிறது என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை!

    நண்பர்களே, இதுவரை நேரத்தைக் கருதிச் செயல்படாவிடினும், இப்பொழுது தொடங்குங்கள்; இனிவரும் காலத்தை வெல்ல…

    காலத்தின் அருமையைச் சொன்ன ஒரு அழகான திரையிசைப் பாடல் உங்களின் பார்வைக்கு…

    துள்ளித் திரிந்ததொரு காலம்
    பள்ளி பயின்றதொரு காலம்

    அன்னை மடி தனில் சில நாள்
    அதை விடுத்தொரு சில நாள்
    திண்ணை வெளியினில் சில நாள்
    உண்ண வழியின்றி சில நாள்

    நட்பின் அரட்டைகள் சில நாள்
    நம்பித் திரிந்ததும் பல நாள்
    காணல் நீரினில் சில நாள்
    கடல் நடுவிலும் சில நாள்

    இதைவிடக் கடந்து சென்ற காலத்தின் பதிவையும்; கடக்கக் காத்து இருக்கும் காலத்தை எப்படிக் கையாளவேண்டும் என்பதையும் சொல்லவும் வேண்டுமா?

    காலம் என்பது கையில் இருக்கும் மிகப்பெரிய சொத்து மட்டுமல்ல; விட்டுச் செல்லும் காலம் நம்மைச் சற்றுக் காலனின் பக்கம் இழுத்துச் செல்கிறது இந்த மனித வாழ்வில் என்பதை உணர்ந்தால்,

    நீங்கள் ஒவ்வொரு நிமிடமும் விழிப்புடன் இருப்பீர்கள்; விழிப்புணர்வு உங்களைப் பயனுள்ள செயல்களைச் செய்யத் தூண்டும்; பயனுள்ள செயல்கள் உங்களைப் பண்புள்ள மனிதராக ஆக்கும்; பண்புள்ள வாழ்வு தன் சுவடுகளைப் பதிந்து சென்றால்,

    அதுவே, தாங்கள் காலத்தை வென்றதற்கான வரலாறாக இருக்கும்!

    இது வார்த்தையல்ல… வாழ்க்கை! நம்புங்கள்! இந்த உலகில் வெற்றியின் ஒவ்வொரு அத்தியாயமும் வேர் விடுவது, நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில்தான்!!

    உங்களுக்குள் ஒரு மாற்றத்தை, கடிகார முட்களின் நகர்வு ஏற்படுத்தினால்,

    உலகம் தன் கையை விரித்து உங்களை வரவேற்கக் காத்து நிற்கிறது என்பதைக் காலம் நிச்சயம் உங்களுக்குச் சொல்லும்!

    சாதனையாளருக்கும்; சாதாரணமானவருக்கும் சமமாகத்தான் காலம் இருக்கிறது; காலத்தைத் தன்பக்கம் இழுத்தவர்கள் வெற்றியாளர்கள்; மற்றவர்கள் காலத்தின் போக்கில் செல்பவர்கள் என்று சொல்லலாம்!

    நீங்கள் எந்தவகை எனத் தீர்மானியுங்கள்!

    எழுதுகின்ற இந்த நேரம்கூடக் கடந்து சென்றாலும்; ஒரு நிறைவைத் தருகிறது ஒரு எழுத்தாளனாக…

    உங்கள் சிந்தனையில் சில விதைகளை விதைத்ததற்கு!

    திருவள்ளுவரின் வாக்கில் சொல்ல வெண்டும் என்றால்…

    அருவினை என்ப உளவோ கருவியான்
    காலம் அறிந்து செயின்?

    காலத்தின் தன்மை அறிந்து செய்தால், கடினமான செயல் என்று எதுவும் கிடையாது என்பதைக் காலம் பற்றிய தெளிவு ஏற்படும் முன்பே நமக்குச் சொல்லிச் சென்றிருக்கிறார் என்றால்

    அதைக் கையாள்வது நம் திறமை மற்றும் கடமை என்பதை சிந்தையில் தைக்க வேண்டும்.

    காலத்தைச் சரியாகப் பயன்படுத்த உங்களின் இலக்கையும் அதற்கான செயல்களையும் கீழ்கண்டவாறு பட்டியலிட வேண்டும்;

    1. மிக மிக முக்கியமானது
    2. மிக முக்கியமானது
    3. முக்கியமானது
    4. சாதாரணமானது
    5. தேவையற்றது

    இவ்வாறாகப் பிரித்துக் காலத்தின் தன்மைக்கேற்பச் செய்ய வெண்டும்;

    கால வீணடிப்பைக் கண்டறிய, ஒரு வாரத்திற்கு உங்களின் செயல்களையும்; அதற்குத் தாங்கள் எடுத்துக் கொண்ட கால அளவையும் குறிப்பெடுங்கள்! அதை மேற்சொன்ன வகைகளில், அதன் தன்மையை ஆராயுங்கள்!

    உங்கள் நேரம் எப்படிக் கையாளப்பட்டது என்பது உங்களுக்கே புரியும்!

    கண் துஞ்சார்; பசி நோக்கார்; மெய் வருத்தம் பாரார்; கருமமே கண்ணாயினார் என காலத்தை மதிக்கக் கற்றுக்கொண்டு இலக்கு நோக்கிப் பயணிக்க முடிவு செய்துவிட்டால், எதுவும் சாத்தியமே!

    புரிந்தவர்கள் சிகரம் நோக்கிப் பயணிப்பவர்கள்… புரிய முனைபவர்களுக்கும் சிகரம் காத்திருக்கிறது!

    தொடர்வோம்…

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • வள்ளுவ மாலை

    சுரேஜமீ​​

    மழலைமுன் ஆற்றாமை காட்டல் அறிவன்று
    வாழ்வின் ஒளியாய் வந்தது – வள்ளுவம்
    சொல்தினம் பாடம் இயல்பு மாறிப்                     valluvar
    பழக்கிடும் உள்ளம் கனி!

    இலக்கு நோக்கும் நிறைமனம்; மாற்றாய்
    இருப்பு காக்கும் வழிச்செல் உண்டு!
    இராது புறம்பேசத் தங்கும் சிறுமையும்
    வள்ளுவம் தள்ளும் புறம்!

    தானேகி நிற்கின் தடுக்கும் வாழ்வொருநாள்
    தன்னைப் போக்கின் தமிழேகி – வள்ளுவம்
    வாக்கின் வழிநிற்கத் தன்னையும் தாங்கும்
    வளம்பெருகும் மண்ணில் உணர்!

    இன்முகம் சொல்நலம் பண்புடை நாளும்
    இறைசெவி செல்லும் நினைத்த நடக்க
    இல்லம் தழைத்து இன்பம் நிலைக்க
    நித்தம் திருக்குறள் சொல்!

    எண்ணத்தின் ஆழம் படைக்கும் வண்ணம்
    ஒருநாள் வந்திடும் வானவர் வையவர்
    வாழ்த்திட நிச்சயம் நம்பிடு – வள்ளுவம்
    காத்திடும் பண்பு நலன்!

     

    Share
  • சிகரம் நோக்கி . . . . . . (15)

    சுரேஜமீ

    எண்ணங்கள்

     

    பிறந்ததன் பயனை வாழ்வு சொல்லவேண்டுமெனில், வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என தீர்மானிப்பது நம் எண்ணங்கள்தான் என்பதை அறியும் எவரும் மண்ணில் வீழ்ந்ததாகச் சரித்திரம் இல்லை. அந்த அளவிற்கு நம்மைச் செதுக்குவது நம் எண்ணங்கள்!

    அத்தகைய உயர்ந்த எண்ணங்கள் உருவாக அடிப்படைக் காரணிகள் எவை? அத்தகைய எண்ணங்களைச் செயலாக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அதன் மூலம் நம் வாழ்வின் பயனை அடைவது எப்படி? என்று அலசுவதுதான் இந்தப் பதிவின் இலக்கு ஆகும்.

    எண்ணம்போல் வாழ்வு என்று கூறக்கேட்டிருக்கிறோம். ஏனோ நம் மனம் அதை ஒரு வார்த்தையாகவே பார்த்திருக்கிறது. மனம் என்ற மாளிகையை அலங்கரிக்கும் ஒப்பற்ற ஓவியமாக நம்முடைய எண்ணங்கள் இருக்கிறது என்பதை அறிந்தவர்கள்தான் வெற்றியாளார்கள் என்று சொன்னால் மிகையாகாது.

    எதை நினைக்கிறாயோ, அதுவாகவே ஆகிவிடுகிறாய் என்று சொல்கிறது வேதம்!

    ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்கிறார் திருவள்ளுவர்.

    peak1111111111-11

    ஆக, வாழ்வின் உயரிய நோக்கங்களை வெளிப்படுத்துகிற எண்ண ஊற்று எப்படி இருக்க வேண்டும்?

    என்பதைத் தீர்மானிக்கும் காரணிகளான சிலவற்றை உங்களின் பார்வைக்குத் தருகிறேன்!

    1. கல்வி
    2. குடும்பம்
    3. சமூகம்
    4. புத்தகம்
    5. இலட்சியம்
    6. சாதனையாளர்களின் வரலாறு
    7. மன உறுதி

    காரணிகளைச் சற்று விரிவாக, நம் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில், சுருக்கமாகக் காண்போம்!

    1. கல்வி 

    கல்விச்சாலை எனும் அறிவுக்கோயிலில் நம் மனதைத் திறந்து வைக்க முதலில் கற்றுக்கொள்ள வேன்டும். ஏதோ தேர்வுக்காகப் படிக்கும் பழக்கத்தைக் கைவிட்டு, நம்மைத் தேர்வாக்க நடைமுறைப் படுத்த வேண்டிய அணுகுமுறைகளாக,
    எந்தப் பாடமாக இருந்தாலும், ,வாழ்வியல் சிந்தனைகளோடும், வாழ்க்கை நெறிகளோடும் ஒப்பீடு செய்து, நம்மை வளர்த்துக்கொள்ள ஏதுவாகப் படிக்க வேண்டும்.
    அந்த வகையில், நம் எண்ணங்களை வலுவாக உற்பத்தியாக்கி, மேம்படுத்தும் பங்கில், மிக முக்கிய அங்கமாக இருப்பது கல்விமுறை என்பதைப் புரிந்துகொள்ளல் வேண்டும்.

    2. குடும்பம்

    நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்று சொல்வார்கள்.

    நல்ல எண்ணங்கள் உருவாவதற்கு அடுத்த காரணியாக இருப்பது குடும்பம். நம்மை வாழ்வின் அடுத்தடுத்த நிலைக்கு அழைத்துச் செல்வதில், குடும்பத்தின் பங்கு தலையாயது ஆகும்.

    ‘சான்றோனாக்குவது தந்தைக்கு கடமை!’ – புறநானூறு

    எத்தனையோ சாதனையாளர்களின் வெற்றிக்குக் காரணமாக, அவர்களது குடும்பச் சூழல் இருந்திருக்கிறது என்பதை வரலாறு சொல்கிறது. தந்தையின் செந்நீரும்; தாயின் கண்ணீரும் வாழ்வியல் லட்சியங்களை உருவாக்கும் ஒப்பற்ற எண்ணங்களுக்கு ஆணி வேராக இருந்திருக்கிறது என்றால், மறுப்பதற்கில்லை.

    ஆகவே, நல்ல எண்ணங்களை வளர்ப்பதில் குடும்பத்தின் பங்கு இன்றியமையாதது.

    3. சமூகம்

    யாரோடு நாம் தொடர்பில் இருக்கிறோம் என்பது, நாம் எத்தகைய பண்பாளர் என்பதைக் காட்டிவிடும். நம் வாழ்வியல் மாற்றங்களுக்கு மிக முக்கியக் காரணமாக இருப்பது நம் சமூகம் எனும் கட்டமைப்பு ஆகும். வாழ்வில் வெற்றி பெற்றவர்களை அடிக்கடி சந்திப்பதும்; அவர்களோடு தொடர்பில் இருப்பதும், அவர்கள் அனுபவங்களை நினைவில் ஏற்றிக் கொள்வதும், நம் எண்ணங்களைச் செம்மைப் படுத்தும் என்பதை நம் அனுபவம் நமக்குச் சொல்லும்!

    4. புத்தகம்

    நண்பர்கள் செய்ய இயலாததை ஒரு நல்ல புத்தகம் செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்தது. நல்ல புத்தகங்கள் நம்முள் எண்ணற்ற மாற்றங்களை ஏற்படுத்தும் ஒப்பற்ற உயர்வான எண்ணங்களுக்கு வித்தாக இருக்கக் கூடியது. அத்தகைய புத்தகங்களை மீண்டும், மீண்டும் படிக்க வேண்டும்.

    படித்தால் மட்டும் போதுமா? அடுத்து என்ன செய்ய வேண்டும்? அதன் பயனாக விளைந்த நல்ல எண்ணங்களை உருவேற்றிச் செயலாக்கம் கொடுப்பதில்தான் வெற்றி அடங்கி இருக்கிறது.

    5. இலட்சியம்

    இலக்கு இல்லாத வாழ்வு திசை அறியாமல் செல்லும் படகு போன்றது. உயர்ந்த இலக்குகளுக்கு அடிப்படையாக இருப்பது நம்முள் தோன்றும் எண்ணங்களே!

    வலுவாக வேரூன்றும் எந்த எண்ணமும் அதற்கான பலனை வழங்காமல் இருந்ததில்லை என்பதற்கு நம் வாழ்வின் அனுபவங்களே மிகச் சிறந்த சான்றாக விளங்கும்.

    ஆகவே, மிகச் சிறந்த இலட்சியங்களை, நம் பெற்றோருக்கும், மற்றோருக்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய சாதனைகளாக இருக்கக்கூடிய இலட்சியங்களை,

    நோக்கி நகர்வதற்கு அடிப்படையானது எண்ணங்கள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.

    6. சாதனையாளர்களின் வரலாறு

    என்னதான் இருந்தாலும், நமக்குத் தேவையாக இருப்பது

    ஒரு உந்துதல்;
    நம்மை வெற்றி நோக்கி நகரச் செய்யும் ஒரு சக்தி:
    ஒரு நம்பிக்கை;
    ஒரு ஊன்றுகோல்;
    ஒரு அனுபவ அறிவாக இருப்பது

    வெற்றியாளர்களின் வரலாறு ஆகும்.

    அத்தகைய வெற்றியாளர்களின் வாழ்க்கை நிகழ்வுகள், அவர்களின் தொடர் முயர்சிகள், வாழ்வியல் சிக்கல்கள், உயர்ந்த இலட்சியங்களை அடைய அவர்கள் தந்த விலை என ஒவ்வொரு நகர்வும்,

    நம்மை வெற்றி நோக்கி அழைத்துச் செல்லும் எண்ணங்களை விதைக்கும் ஒப்பற்ற செய்திகளைச் சொல்லும்!

    7. மன உறுதி

    இவை அனைத்தும் இருந்தாலும் மகாகவி பாரதி சொல்வது போல, நமக்குத் தேவை

    மனதில் உறுதி;
    வாக்கினில் இனிமை;
    நினைவு நல்லது;

    இவை இருந்தால் போதும். நம் எண்ணங்கள் வலுவாக இருப்பதற்கு வேறென்ன வெண்டும்?

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின் – திருக்குறள்

    இதிலிருந்து நாம் கற்றுக் கொள்வது, நம் எண்ணங்களை மேம்படுத்தக் கூடிய சக்திகளை நம்மைச் சுற்றி வளர்த்துக் கொள்வதும்,

    நம் தலையாய கடமையாக இருந்தால்,

    வெற்றி நம் கதவைத் தட்டும் என்பது சத்தியம்!

    எழுமின்! விழிமின்! அயராது உழைமின்!

    என்ற தாரக மந்திரத்தை உச்சாடனம் செய்து, எண்ணங்க்களைச் செதுக்குவோம்!

    வெற்றி தன்னைச் செதுக்கட்டும் நம் வாழ்வின் பக்கங்களை வைத்து…..

    அதுவரை தொடர்ந்து சிந்திப்போம்………

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • சிகரம் நோக்கி …. (17)

    சுரேஜமீ

    உணர்ச்சி வயப்படுதல்

    peak1111111111-1

    பொதுவாகவே இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் உணர்ச்சி மிக்கவர்கள் என்று சொல்லப்படுவதுண்டு. எங்கு மனிதம் இருக்கிறதோ, பாசம் இருக்கிறதோ, இரக்கம் இருக்கிறதோ, உறவுகள் வலுவாக வேரூன்றி இருக்கிறதோ, அங்கு நிச்சயமாக உணர்ச்சிப் பெருக்கு இருக்கும் என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது.

    அத்தகைய உணர்வுகள், சில வேளைகளில் நம் அறிவைக் கட்டுப்படுத்தவோ அல்லது முற்றிலும் மறைக்கவோ செய்து, நம்மைத் தவறான முடிவை நோக்கி இட்டுச் செல்லும் வல்லமை படைத்தது. ஆகவே அது பற்றிச் சில செய்திகளைத் தங்களின் பார்வைக்குக் கொணர்ந்து, சிந்தையைத் தூண்டுவதே இன்றைய பதிவின் மையக் கருத்தாகும்!

    நம்மைப் பற்றிச் சிந்திப்பதற்கு நாம் காட்டும் அலட்சியப் போக்கே,

    பெரும்பாலும், நம்மால், உணர்ச்சி மேலோங்கும் நிகழ்வுகளைப் பற்றி அலசி ஆராய முடியாமல்,

    சரியான நிலையில், நம் எண்ணத்தை வார்த்தையாக்கவோ, செயலாக்கவோ அல்லது பிரதிபலிக்கவோ இயலாமல் செய்து விடுகிறது.

    அதன் விளைவாக ஏற்படும் இன்னல்கள், உடல் ரீதியாகவோ அல்லது உள்ள ரீதியாகவோ, நமக்கு வருத்தத்தை அளிக்கிறது.

    மேற்கத்திய நாட்டில் உள்ளவர்களுக்கும், குறிப்பாக வெள்ளையர்களுக்கும் நமக்கும் உள்ள ஒரு முக்கிய வேறுபாடே, உணர்ச்சிகளைக் கையாள்வது தான் என்று சொன்னால், மிகையாகாது.

    பெரும்பாலும் உணர்ச்சிக்கு அடிப்படைக் காரணமாக இருப்பது அபரிமிதமான அன்பு அல்லது ஏதோ ஒரு விதமான அச்சம் என்பதை,

    அமைதியாகச் உணர்ச்சிமயமான சூழ்நிலையையும் அதனை எப்படிக் கையாண்டோம் என்பதையும் சிந்தித்தால் தெளிவாகும்.

    உணர்ச்சியை வெளிக்கொணர்வதில் அவரவர் வாழ்வியல் மற்றும் அனுபவத்தின் சாரத்தில் ஆராய்ந்தால், அது மகிழ்ச்சியாகவோ, அழுகையாகவோ, கோபமாகவோ, பிணக்காகவோ, மன அழுத்தமாகாவோ பயணமாகவோ, சந்திப்பாகவோ, பேச்சாகவோ, எழுத்தாகவோ இருக்கலாம்!

    இதுவரை ஆராயவில்லை எனில், இப்பொழுது முதல் உங்கள் ஆராய்ச்சியைத் தொடங்குங்கள். நிச்சயம் ஒரு தெளிவைப் பெறலாம்.

    உணர்ச்சிகளின் வெளிப்பாடுகளில் தலையாயது, கோபமாக இருப்பதால்தான்,

    “நகையும் உவகையும் கொல்லும் சினம்……” என்கிறார் வள்ளுவர்!

    அதுமட்டுமல்ல!

    ஒருவன் தன்னைக் காத்துக்கொள்ள அவசியமானது தன்னிடமிருந்து வரும் உணர்ச்சிப் பெருக்காகிய கோபத்தைக் காக்க வேண்டும் என்றும் சொல்கிறார் என்றால்,

    திருக்குறளை விட, நமக்குக் கற்றுத் தருவதற்கு சிறந்த நீதிநூல் வேறென்ன இருக்க முடியும்?

    இன்னும் நமக்குப் புரியும்படியாக எத்தனையோ மகான்கள், புத்தர் முதல் வள்ளலார் வரை, நாம் எப்படி உணர்ச்சிகளைக் கையாளவேண்டும் என்று சொன்னாலும், நம்மால் வாழ்வியலில் அதை நடைமுறைப் படுத்த இயலாமல், பல துன்பத்திற்கு ஆளாகிறோம்!

    இத்தகைய உணர்ச்சிப் பெருக்கு நம்மை வழி நடத்தாமல், கற்ற கல்வியும்; வாழ்க்கை அனுபவமும் நம்மை வழி நடத்தும் வகையில், அறிவு சார்ந்து உணர்ச்சியைக் கையாள நாம் செய்ய வேண்டுவது என்ன எனப் பார்ப்போம்!

    1. முதலில் நாம் உணர்ச்சி மேலோங்குவதை அறிய முற்படுதல் அவசியம்.

    எப்படி அறிவது?

    உதாரணமாக, நீங்கள் அலுவலகத்திற்குக் காலையில் 8 மணிக்குச் செல்ல வேண்டும் என்று வைத்துக் கொள்ளுங்கள். தங்கள் குழந்தைகள் தினமும் பள்ளி வாகனத்தில் செல்ல் வேண்டியவர்கள், இன்று வாகன ஓட்டுனர் உடல்நலக் குறைவு காரணமாக, வர இயலவில்லை! தாங்கள், குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டுச் செல்ல தங்கள் மனைவி வேண்டுகிறார். உங்களுக்கோ, அலுவலகத்தில் இருக்கும் அவசர பொறுப்போடு, குழந்தைகளைப் பள்ளியில் விட்டுவிட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பும் இணைகிறது. குழந்தைகளைத் தயார் செய்யத் தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும்உங்கள் உணர்ச்சி மேலோங்கும் வாய்ப்பு இருக்கிறது!

    இங்கு உணர்ச்சியின் வெளிப்பாடு சினமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இதை முன்னமே அறிந்து, அலுவலகம் செல்லச் சற்று தாமதமாகலாம் என மனதைத் தயார்படுத்தி விட்டால்,

    உணர்ச்சி இலகுவாகக் கையாளப்படுகிறது என்று அர்த்தம் கொள்ளலாம்!

    இது ஒரு மாதிரியே. இதைப்போல, உணர்ச்சி எழும் சூழ்நிலைகளை அறிந்து கொண்டோமேயானால், பெரும்பாலான உணர்ச்சிகள் மட்டுப்பட்டு, உடல் மற்றும் மனதளவில் நாம் திறம்படச் செயலாற்ற முடியும்!

    2. ஜப்பான் நாட்டில் ஒரு வழக்கமுண்டு. தொழிலாளர்களுக்கு மேலதிகாரி மேல் கோபம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவர்களால் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாது. அத்தகைய சூழலில், ஒரு அரைமணி நேரம், அவர்கள் தனி அறைக்குச் சென்று, அங்கு ஒரு பலூன் போன்ற காற்றடைக்கப்பட்ட ஒரு சாதனத்தை தொங்கவிட்டு, அதனை ஓங்கி அடித்துக் கொண்டே இருப்பார்களாம்! இவ்வாறாக, தொழிளாளர்களின் உணர்ச்சிகள் வடிகாலாக்கப் பட்டு, உறபத்தித் திறனைப் பெருக்குவதுண்டு.

    அது போல, உணர்ச்சிகளை மட்டுப்படுத்த முடியாத தருணங்களில், அதை வெளிப்படுத்துவது சிறந்த முறையாகும்.

    ஆனால், இங்கு கவனம் தேவை! வெளிப்படுத்தும் முறை அறம் சார்ந்ததாக, அடுத்த மனிதரைத் துன்புறுத்தாததாக இருத்தல் அவசியம்!

    3. மதம் மற்றும் இறை நம்பிக்கை சில வேளைகளில் உணர்வுகளை மட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிந்தனைத் தெளிவையும்; திடமான நம்பிகையையும் கொடுக்கும்!

    4. மிக முக்கியமாக, உணர்ச்சிகளைப் பெருக்கும் புறச்சூழலை நாம் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வந்துவிட்டால், அங்கே உணர்ச்சிகளுக்கு அடிமையாக வேண்டிய அவசியம் துளியும் இருக்காது.

    5. இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டும் என்றால், பற்றற்றிருப்பது, நமக்கு நல்ல பக்குவத்தைத் தரும். அதற்காகத் துறவறம் மேற்கொள்ள வேண்டியது இல்லை. சாதாரண நிலையிலேயே நம்மால், உணர்ச்சிகளைக் கையாள முடிந்தால், அந்த நிலைதான் துறவறத்திற்குச் சமம்!

    6. யோகா மற்றும் தியானப் பயிற்சி உணர்ச்சிகளை மட்டுப்படுத்தும்!

    நண்பர்களே நம்மீது சிறு அக்கறை கொண்டு, உணர்ச்சி மேலோங்குவதை நன்கு புரிந்து, அதனைக் கையாளக் கற்றுக் கொண்டால்,

    நம் உடலும், மனமும் இன்னும் ஆரோக்கியம் பெற்று, வீரியத்தோடு நம்மை இலக்கு நோக்கி இட்டுச் செல்லும்!

    நம்புங்கள்! நிச்சயம் நம் ஒவ்வொரு அடியும் இம்மண்ணில் ஒரு அழுத்தமான வடிவை விட்டுச் செல்லும்! அது சொல்லும் வெற்றிக்கான அடிப்படை தத்துவத்தை!!

    தொடர்ந்து சிந்திப்போம்………

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • வள்ளுவ மாலை

    -சுரேஜமீ

    வேலையும் நல்ல வேளையும் கூடிவரும்
    மேலவன் தானெழுதி வையகம் தந்திட்டத்
    தூயநூல் வள்ளுவம் பற்றிடக் காண்பீர்                valluvar
    மெய்யென வாழும் உலகு!

    எதுவரின் வந்தது நல்லவை நிற்கும்
    கொடுசெய் நீக்கும் திருக்குறள் வல்லமை
    தானறிவர் அவ்வழிசெல் ஆன்றோர் மற்றார்
    தான்தேடித் தாள்பணி வர்!

    தெளிவுநற் சிந்தனைக்குத் தேடுதினம் வள்ளுவம்
    சேர்க்கும் அறிவுடை நெஞ்சம் சிறந்திடும்
    வாழ்வும் போற்றிநல் மூத்தோர் விளங்கச்
    செய்திடும் நன்னூல் குறள்!

    தன்வலி தானறிய மாற்றான் வலியுணரத்
    தேற்றிடும் வாழ்வைத் திருக்குறள் சேயுயிர்த்தாய்
    போல அணைக்கும் மந்திரம் சொல்லப்
    பொசுக்கும் துன்பம் அழித்து!

    பல்லுயிர் பேணும் மனதில் தெய்வமும்
    தங்கித் தடைகளை ஓட்டித் திருக்குறள்
    ஓதும் பழக்கத்தைக் காட்டித் தினமும்
    ஒற்றுமை ஓங்கிடக் காண்!

     

    Share
  • சிகரம் நோக்கி …. (16)

    சுரேஜமீ

    நட்பு

    peak1111111111 (1)

    சிறுவயதில் பள்ளிப் பாடத்தில் ஒரு கதை உண்டு. ராமு சோமு என்று இரு நண்பர்கள் காட்டு வழியே பயணம் செய்வார்கள். பயணத்தின் ஊடே ஒரு கரடி எதிரில் வரக் கண்டு, அதனிடமிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசிக்கும் போது, ராமு சோமுவின் துணையோடு மரத்தில் ஏறிக் கொள்ள, சோமு தனியே விடப்படுவான். ராமு, சோமுவைக் காப்பாற்ற மறுக்க, கரடி அருகில் வர, சோமு தன் சமயோசித புத்தியால் மூச்சை உள்ளிழுத்து, இறந்து விட்டதுபோல் நடிப்பான். கரடி சோமுவை நுகர்ந்து பார்த்து, அவன் மூர்ச்சையற்று இருப்பது கண்டு விலகிச் சென்றுவிடும்.

    ராமு கீழிறங்கி வந்து, சோமுவிடம் கரடி உன் காதருகே வந்து என்ன சொன்னது எனக் கேட்பான்? அதற்கு சோமு, ஆபத்தில் உதவாத நண்பர்களோடு சேரக் கூடாது என்பான்.

    இதுதான் கல்வி!

    ஆனால், நடைமுறை வாழ்வில், அறிவுக்கு முன்னால் உணர்ச்சிகள் முடிவெடுப்பதால்,

    நம்மால் நட்பில் எது நல்லது? எது கெட்டது? என அறிய முடியாமல், பல சிக்கல்களுக்கு ஆளாக நேரிடுகிறது. அனுபவம் தரும் பாடம்தான், அடுத்த தெரிவுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்று சொன்னால், மிகையாகாது!

    உன் நண்பன் யார் என்று சொல்; நீ யாரென்று சொல்கிறேன் என்று ஒரு பழமொழி உண்டு!

    அந்த அளவிற்கு நம் வாழ்வின் வெற்றியைத் தீர்மானிப்பது நட்பு! அத்தகைய நட்பை நாம் எவ்வாறு தேர்வு செய்கிறோம் என்பதில்தான், நாம் அடையும் இலக்கும் அதற்கான நகர்வும், அதனை அடைய நாம் பயணிக்க வேண்டிய தூரமும் இருக்கிறது என்பதை அறிந்தால், நிச்சயம் வெற்றி நம் கையில்!

    முகம்நக நட்பது நட்பன்று நெஞ்சத்து

    அகம்நக நட்பது நட்பு! – திருவள்ளுவர்

    ஆக, நட்பு என்பது முகமன் கூறுவதில் அல்ல என்பதை திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமக்குச் சுட்டிக் காட்டியிருக்கிறார் என்றால், நட்பின் வலிமையை நாம் அறிதல் வேண்டும் என்ற அவசியத்தை, அவர் வலியுறுத்துகிறார் என்பதை

    சிறுவயது முதலே நாம் புரிந்து கொள்வதோடு மட்டுமல்லாமல், அதற்கேற்ப நம்மைப் பழக்கிக் கொள்ளவேண்டும்.

    நட்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த கோப்பெருஞ்சோழனும்; பிசிராந்தையாரும் நாம் அறிந்ததே. கோப்பெருஞ்சோழன், தான் பெற்ற பிள்ளைகள் தனக்குப் போட்டியாக, ஆட்சிக்கு வரவேண்டும் என எண்ணிப் போர் தொடுக்க முனைந்த போது, அதைக் கண்டு மனம் வெதும்பி வடக்கு நோக்கி இருத்தல் எனும் பண்டைக்கால உண்ணா நோன்பு முறையில் உயிர்விட எண்ணி, இருக்கை அமைத்த போது,

    இரண்டு இருக்கைகள் அமைக்கச் சொன்னானாம்! ஒன்று அவனுக்கும்; மற்றொன்று பிசிராந்தையாருக்கும்! அந்த அளவுக்கு அவன் பிசிராந்தையார் மீது நம்பிக்கை கொண்டது,

    எப்படியும் செய்தி கேட்டு, தாம் துன்பத்தில் இருப்பது தாங்காமல், தம் நண்பர் வருவார் என்ற திடமான எண்ணம்,

    பிசிரந்தையாரை அவன் இருக்கும் இடத்திற்கு வரவழைத்தது!

    ஒருவரை ஒருவர் பார்க்காமல், ஒருவர் மீது மற்றொருவர் வைத்திருந்த அன்பின் ஆழத்திற்கு, இவர்கள் நட்பு ஒரு சான்று என்றால், இலக்கியங்கள் நம் வாழ்வில் எந்த அளவு உந்துதலாக இருக்கிறது என்பது புரியும்!

    ‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க

    நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே – நல்லார்

    குணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு

    இணங்கி இருப்பதுவும் நன்று!

    என்று நல்லவர் நட்பு பற்றி மூதுரை எனும் சங்க இலக்கியம் சொல்கிறது!

    இவையெல்லாம் ஏதோ நாம் பள்ளியில் படிப்பதற்காக மட்டும் படைக்கப்பட்ட நெறிகள் அல்ல; மாற்றாக, நம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய இலட்சிய வழிகள் என்பதை மனிதில் ஊன்றி விதைத்தலில்தான், ஒரு மகத்தான சமுதாயம் உருவாக முடியும் என்ற நம்பிக்கைதான், நம் இன்றைய தேவை!

    கேட்டினும் உண்டோர் உறுதி……….என்கிறார் திருவள்ளுவர்!

    இன்பத்தில் பங்கெடுப்பது மட்டுமல்ல நட்பு; துன்பம் வரும்போதுதான் நட்பின் வலிமையை நாம் உணர முடியும்! நட்பு என்பது நம்மை ஒதுக்குவதாக இருக்கக் கூடாது; நம்மைச் செதுக்குவதாக இருக்க வேண்டும்! இரத்த உறவுகளைக் காட்டிலும் சிறந்த உறவு ஒன்று உலகில் உண்டென்றால், அது நட்புதான்!

    அத்தகைய தனிச் சிறப்பு பெற்ற, உயர்ந்த நட்பை எப்படித் தேர்வு செய்வது என்பதில்தான், நம் அறிவையும்; அனுபவத்தையும் ஒரு சேரப் பயன்படுத்தி, நம் வாழ்வில் சிறந்த பண்புகளை அடைய முடியும். பள்ளிப் பிராயத்திலேயே, நம்மைச் செதுக்குவதற்காகத்தான், நெறிநூல்கள் பாடமாக்கப் படுகின்றன. அதன் பயனை நாம் சரியாகப் புரிந்துகொண்டு, நடைமுறை வாழ்வில் கடைப்பிடிப்பதில்தான் வெற்றி அடங்கியிருக்கிறது!

    புதிதாக எதையும் சொல்ல முனைவதல்ல இந்தத் தொடரின் நோக்கம்; மாறாக, நம் இலக்கியங்கள் கற்றுத் தந்தவற்றை, நாம் படித்த வெற்றியின் கோட்பாடுகளை, உங்களுக்காகத் தொகுத்து, ஓரிடத்தில் வழங்குவதும், உங்கள் சிந்தனையைத் தூண்டுவதும்தான்,

    நம்மைச் சிகரத்தை நோக்கிப் பயணிக்க வைக்கிறது………..

    தொடர்வோம் பயணத்தை!

    அன்புடன்

    சுரேஜமீ

    —————————————————————————————————

    Share
  • சிகரம் நோக்கி (15)

    சுரேஜமீ

    குடும்பம்

     

    peak111111111

    வாழ்வில் வெற்றியடைய வேண்டும் எனக் கனவு காணும் ஒவ்வொரு மனிதனுக்கும் அதற்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் ஒப்பற்ற களம்தான் குடும்பம் என்னும் அன்புச் சோலை! ஒரு இருபது முப்பது ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்தால்,

    ஒவ்வொரு குடும்பத்திலும் அங்கத்தினர்களாக, அனுபவத்தின் சாரமான வயோதிகர்களும், அன்பின் அடையாளமான அன்னை, தந்தையும், இனிமையின் இருப்பிடமான குழந்தைகளும்

    இன்னும் பிற உறவினர்கள் என்று குறைந்தபட்சம் ஒரு ஐந்து அல்லது ஆறு நபர்களாவது இருப்பார்கள். ஆங்கே வாழ்வியல் பிரச்சினைகள் பல இருப்பினும், மனதிற்கு உரம் ஏற்றும் உணர்விற்குப் பஞ்சம் இருக்காது.

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்ற வார்த்தையில் பொதிந்து கிடக்கும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களை அனுபவிப்பவர்கள் அறிவர்!

    இன்னும் ஒரு படி மேலே சொல்லவேண்டும் என்றால், தொன்றுதொட்டு வரும் நம் கலாச்சாரத்தின் ஆணி வேராக இருப்பது நம் ஒப்பற்ற குடும்ப வாழ்க்கைதான்! நம் ஒவ்வொருவரது வாழ்வு நெறிகளின் முதல் பள்ளிக்கூடமே அதுதான்! அது மட்டுமின்றி, நம் எதிர்காலத்தைச் செவ்வனே செதுக்கக் கூடிய சீரிய பயிலரங்கமாகவும், அனுபவப் பாடசாலையாகவும் விளங்குகின்ற இந்தக் குடும்ப வாழ்வுதான் நம்மை தலைமுறை தாண்டி நிற்கச் செய்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை!

    ஆனால், இன்று தெரிந்தோ தெரியாமாலோ அதில் சில ஓட்டைகள் தென்படுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்து இருக்கிறது. அதற்கான காரணத்தையும், அதனை எவ்வாறு செப்பனிட்டு, நம் வாழ்வின் வெற்றிக்கு ஏதுவாக அமைத்துக் கொள்வது என்ற சிந்தனையை விதைப்பதுதான், இன்றைய பதிவின் நோக்கம்!

    மனித உறவுகளைப் புரிந்துகொள்ள, வாழ்வின் எல்லைகளையும், அதன் தன்மையையும் அறிந்துகொள்ள, அன்பின் வலிமையை உணர்ந்து கொள்ள, ஆற்றலின் உந்துதலைப் பெருக்கிக்கொள்ள நமக்கு இருக்கும் ஒற்றை வாய்ப்பும், வெற்றியின் வாசலுக்கு நம்மை அழைத்துச் செல்லும் துணையும்,

    நம் குடும்ப அமைப்புதான் என்பதை நாம் எளிதில் மறந்துவிட முடியாது!

    அத்தகைய குடும்ப உறவுகள் சமூக, பொருளாதார மற்றும் வாழ்வியல் சுழலில் சிக்கித் தன்னைச் சிறிது சிறிதாக இழந்து வருகிற நிலையை, ஒவ்வொரு நாளும் செய்தித் தாள்களும், ஊடகங்களும் நம் கண்முன்னால் நிறுத்துகின்றன என்பதை நம்மால் மறைக்க இயலாது!

    அதற்கு சாட்சியாக……..

    · முதியோர் இல்லங்களில் தவிக்கும் பெற்றோர்கள்

    · குவிந்து கிடக்கும் மணமுறிவு வழக்குகள்

    · சொத்துக்காக நடக்கும் வன்முறைச் சம்பவங்கள்

    · பாலியல் வன்முறைகள்

    · சிறார்களின் வரம்பு மீறிய குற்றங்கள்

    என பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம்!

    இதைப் படித்தவுடனே, உங்கள் எண்ணத்திரையில், இவையெல்லாம் எல்லாக் காலங்களிலும் இருந்ததுதானே….இப்பொழுது என்ன புதிதா? என்ற வினா எழலாம்! தவறில்லை. ஆனால், குடும்பம் என்ற அமைப்பு வலுவாக இருந்த காலகட்டத்தில், இம்மாதிரியான குற்றங்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்ததேயொழிய, இன்றைக்கு இருக்கக்கூடிய அளவிற்கு வரம்பு மீறிப்போனதில்லை என்பதை நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியம்!

    இன்றைக்கு குடும்பம் என்பது ஒரு தந்தை; தாய் மற்றும் ஒன்றிரண்டு குழந்தை எனச் சுருங்கியதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரச் சிக்கல் காரணமாக, கணவன் – மனைவி இருவருமே வேலைக்குச் செல்லக்கூடிய நிலையும் இருப்பதும்,

    குழந்தைகளைக் காப்பகத்திலோ அல்லது பணியாளரிடத்திலோ விட்டுச் செல்வது என்ற நிலைதான்

    குடும்ப அமைப்பில் விழுந்த முதல் ஓட்டை!

    அதற்கு அடுத்தபடியாக நம்முடைய வயதான பெற்றோர்களை நம்முடன் சேர்த்து வைத்துக் கொள்வதில் உள்ள உளரீதியான சிக்கல்கள் இரண்டாவது ஓட்டை!

    மூன்றாவதாக, உறவுமுறைகள் சுருங்கியதும்; உறவுகளை வளர்த்துக் கொள்ள இயலாத சமூகச் சூழலும்!

    நான்காவது, வாழ்வியல் விழுமங்களின் சிதைவு!

    ஆக, மேற்கூறியவற்றின் தாக்கம், ஒவ்வொரு தனிமனிதனையும் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், அவனது சமூக அமைப்பையும் கேள்விக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதன் விளைவுதான், இன்றைக்கு குடும்ப அமைப்பில் ஏற்பட்டிருக்கக் கூடிய சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது.

    நண்பர்களே, உலகிலேயே ஓரறிவுள்ள ஒரு முல்லைக் கொடி காற்றில் தள்ளாடுவதைக் கண்டு பொறுக்காமல், வீதி வழியே தேரினில் வந்த மன்னன் பாரி, அந்தத் தேரை, செடிக்கு அருகினில் நிறுத்தி, அதன் கொடியைத் தன் தேரின் மீது படரச் செய்து, தான் நடந்தே அரண்மனைக்குச் சென்றான் என நாம் படித்திருக்கிறோம் என்றால்,

    நம்முடைய கலாச்சாரம், வாழ்வியல் தொன்மைகள், குணநலன்கள் எத்தகையதாக இருந்தது என்பதை நாம் சற்று யோசித்துப் பார்த்தோமானால், நிச்சயமாக, எந்த ஒரு தாயும்; தந்தையும் முதியோர் இல்லங்களில் இருக்கமாட்டார்கள்!

    பெற்றவர்கள் கூட இருப்பதால், நம் சந்ததிகளுக்குக் கிடைக்கும் நன்மையும்; நமக்குக் கிடைக்கும் ஆறுதலும் நம்மை மேலும் மெருகூட்டி, வாழ்வில் வெற்றி மேல் வெற்றி குவிக்கச் செய்யும்!

    சிறிது சிறிதாக நம்மைச் சுற்றியுள்ள உறவுகள் அனைத்தும் வலிமை பெறும்!

    குழந்தைகளுக்கு நன்னெறியும்; நமக்குத் தகுந்த ஆலோசனையும் கிடைக்கும்!

    மணமுறிவு தேடும் அளவிற்கு இருக்கக்கூடிய மன உளைச்சலுக்குத் தகுந்த நிவாரணமாக முதியவர்களின் அன்பும், அரவணைப்பும் இருக்கும்!

    வாழ்வியல் விழுமங்கள் மீட்டு எடுப்பதன் மூலம் நம்மால் சமூகத்தில் ஒரு பொறுப்புள்ள மனிதனாக இருக்க முடியும்! சமூகக் குற்றங்கள் நிச்சயம் குறைவதற்கான முதல் நிலையாகவும் இருக்கும்!

    ஆகவே, நல்ல குடும்பத்தைக் கட்டிக்காப்பது நம் அனைவரின் தலையாய கடமையாக இருப்பதன் மூலம், ஒரு அப்பழுக்கற்ற சமுதாயத்தை உருவாக்குவோம்!

    அதற்கு அடிப்படையாக அனைவரிடத்திலும் இனிமையாகப் பேசுவோம்…..உறவுகளை வளர்ப்போம்….

    உறுதியாக சிகரத்தை நோக்கிப் பயணிப்பதற்கு ஒரு பலமாக, பாலமாகக் குடும்பம் எனும் கட்டமைப்பு நமக்குத் துணை புரியும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமிருக்காது!

    வாழ்க்கை ஒரு இனிய பயணமாக இருக்கும்!

    தொடர்ந்து சிந்திப்போம்………..

    அன்புடன்

    சுரேஜமீ

    Share
  • சிகரம் நோக்கி (14)

    சுரேஜமீ

    பெண்மை

    peak11111111

    பெண்ணினம் இல்லாதிருந்திருந்தால் மண்ணில் ஏது வாழ்க்கை? ஒரு நிமிடம் எண்ண ஓட்டத்தை சற்றே நிறுத்தி, உங்களைச் சுற்றி இருக்கும் பெண்களைப் பாருங்கள்.

    தாயாக…..தமக்கையாக….தாரமாக…..தோழியாக……மாற்றுத்தாயாக….துணையாக….செவிலியராக….ஆசிரியராக….சக ஊழியராக….இன்னும் எத்தனை எத்தனை உறவுகளாக …..என

    எங்கெங்கு காணினும் நம்மைச் சுற்றி நிற்கும் பெண்களை!

    இந்த உலகிற்கு நாம் வருவதற்குக் காரணம் ஒரு ஆணாக இருந்தாலும், நாம் வந்ததற்குக் காரணம் ஒரு பெண்ணே! அத்தகைய பெண்கள் சற்றே தன்னை நிலைநிறுத்திக் கொண்டது கடந்த இரு நூற்றாண்டுகளாகத்தான் என்பது வரலாறு நமக்குச் சொல்கிறது. ஏன் பெண்கள் என்றாலே சற்று இளைத்தவர்கள் எனவும்; ஒரு ஆணால் சாதிக்க முடிவதை ஒரு பெண் சாதிக்க இயலாது என்றும்; பெண் என்றாலே ஒரு ஆணைச் சார்ந்துதான் வாழ வேண்டும் எனவும்; ஆண்களின் ஒரு போகப்ப்பொருள்தான் பெண் எனவும் சில ஆண்கள் நினைக்கின்றனர்?

    பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு; அதிகாரம் மறுக்கப்பட்டு; உரிமைகள் மறுக்கப்பட்டு; நிலைமைகள் பறிக்கப்பட்டு இருந்த ஒரு இருண்ட காலத்திலிருந்து; அவர்களுக்காக இந்த நூற்றாண்டில் குரல் கொடுத்த மிக முக்கியக் கவிஞன் மகாகவி பாரதிதான்!

    “ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்றும் எண்ணியிருந்தவர் மாய்ந்து விட்டார்;

    வீட்டுக்குள்ளே பெண்ணை பூட்டி வைப்போம் என்ற விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.” – பாரதியார்.

    இவ்வளவு ஆழமாக; அழுத்தமாக பாரதியை விட யார் சொல்ல முடியும்? தன் பெயரின் சுருக்கத்திலேயே பெண்ணீயம் வாழ வழிவகுத்தவனாயிற்றே!

    இதற்குப் பின்னர்தான் ஆண்களின் சிந்தனையில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டதும்; பெண்கள் தானே தலையெடுத்ததும் என்றால் மிகையாகாது.

    ஒரு ஆணை விடப் பெண் தீர்க்கமாகச் சிந்திக்கக் கூடிய ஆற்றல் பெற்றவள் என்பதற்கு தமிழ் இலக்கியங்களின் ஒப்பற்ற படைப்பாளியான ஔவையார் மிகப் பெரிய சான்று!

    கடுகைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்’ – என்று திருவள்ளுவரின் திருக்குறளை முதலில் புகழ்ந்தவர் இடைக்காடர் எனும் ஆண் புலவர்.

    ஆனால் அடுத்து வந்த பெண் புலவரான ஔவையார் அதை மாற்றி

    அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்! என்று பாடுகிறாரென்றால்

    சற்று யோசியுங்கள் பெண்களின் அறிவு எத்தகைய வலிமை வாய்ந்தது என்று!

    கவியரசர் கண்ணதாசன் ஒரு பாடலில் சொல்கிறார் பெண்ணின் மேன்மை எத்தகையது என்பதை….

    கருவினில் வளரும் மழலையின் உடலில்

    தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!

    களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம்

    காத்திட எழுவான் அவள் பிள்ளை…… என்று!

    அத்தகைய உயர்ந்த சக்தியாக விளங்கும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எப்போது தடுக்கப்போகிறோம்?

    அவர்களையும் சமமாக, சரிநிகராக மதிப்ப்பதற்குத் தடையாக இருப்பது எது? சிந்தனையா? செயலா?

    அப்பப்பா…எத்தனை கொடுமைகள் பெண்ணாகப் பிறந்ததற்காக இச்சமூகத்தில் ஏவி விடப்படுகின்றன?

    தலைநகர் டில்லியில் பேருந்தில் சென்ற ஜோதிசிங்கின் மீது நடத்தப்ப்பட்ட பாலியல் வன்முறை மற்றும் கொலையைத் தடுக்க முடிந்ததா? (2012)

    சட்டம் போட்டுத் திருத்த முயன்றாலும், நம்மால் ஒரு வினோதினியைக் காப்பாற்ற முடிந்ததா? (2013)

    இன்னமும் ஏதோ ஒரு இடத்தில்…ஏதோ ஒரு பெண் சமூகக்கொடுமைகளுக்கு ஆளாகிக்கொண்டுதான் இருக்கிறாள்!

    இதையெல்லாம் செய்பவர்கள் யார்? ஒரு ஆண்மகன் தானே! ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவன் தானே? ஒரு சகோதரியோடு உதித்தவன் தானே? ஏன் ஒரு பெண் குழந்தைக்குத் தகப்பனாக இருக்கக்கூடியவன் தானே?

    பெண்களைத்தான் தெய்வமாக வணங்குகிறோம். அத்தகைய பெண்களின் வளர்ச்சியில்தான் ஒரு நல்ல சமூகம் மலரும். ஆகவே, இன்னமும் பெண்கள் தனக்கான உரிமையை நிலைநாட்டச் சட்டத்தை நாடும் இழிசெயலைத் தடுத்து, தானாகவே பெற நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும்.

    இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே போகும்? என்றாவது யோசிக்கிறோமா? ஒவ்வொரு ஆண்மகனும், ஒரு பெண்ணை பாலியல் பார்வை தாண்டிப் பார்க்கும் சிந்தனை வளர்ந்தால்,

    நிச்சயம் வரும் ஒரு நாள்; அந்நாள் இம்மண்ணில் நிலைக்கும் மகிழ்ச்சி!

    ஒரு நாட்டுக்கு எது பெருமை என்று தெரியுமா? கீழ்வரும் புறநானூற்றுச் செய்யுளை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன்!

    நாடா கொன்றே; காடா கொன்றே

    அவலா கொன்றே; மிசையா கொன்றே

    எவ்வழி நல்லவர் ஆடவர்

    அவ்வழி நல்லை; வாழிய நிலனே!

    இப்பாடல் சொல்லுவது என்னவென்றால், ஒரு நாட்டிற்குப் பெருமை நிலமல்ல….அடர்ந்த காடுகள் அல்ல….பள்ளம் ; மேடு அல்ல…..நற்பண்பும்; நல்லொழுக்கமும் கொண்ட ஆண்களே பெருமை சேர்க்கின்றனர் என்றால்;

    சற்றே ஆண்கள் சமூகம் சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. அது மட்டுமல்ல….எந்த ஒரு நிலையிலும் பெண்களை இழிவு படுத்தும் ஒரு காரியத்தைச் செய்யாமல், பெண்ணீயம் போற்றுகின்ற ஒரு சமூகமாக, ஆண்கள் மாறும் நாள்

    நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் சிகரம் நோக்கிப் பயணிக்கும் ஒரு இனிய நடையாக அமையும்!

    தொடர்வோம்……..

    அன்புடன்

    சுரேஜமீ

    Share
  • கன்னித்தமிழும் கண்ணதாசனும்

    சுரேஜமீ.

    kannadasan2

    கன்னித்தமிழும் கண்ணதாசனும்

    தமிழ் மொழியின் ஆற்றல் பன்நெடுங்காலமாகத் தன்னைப் போற்றியவர்களுக்கு அடைக்கலம் தந்தது மட்டுமல்ல, அழியாப் புகழைக் கொடுத்தது. அற்றை நாட்களில் தமிழின் தொன்மையை; தமிழனின் பெருமையை காலம் தாண்டிக் கொண்டு செல்வதற்காக இலக்கியப் படைப்புகளை செய்தனர் புலவர்கள். ஆனால், இற்றை நாட்களில் தமிழால் தன்னை நிலைநிறுத்துவதோடு, செல்வமும் ஈட்டும் முயற்சியில் வெற்றி கண்டிருக்கிறார்கள்!

    என்னடா தலைப்புக்கே இன்னும் வரவில்லையே என்ற வாசக உள்ளங்களின் கேள்வி என் செவிகளில் எட்டுகிற்து! இதோ அதற்கான விடை உங்கள் முன்னால்!

    கன்னித்தமிழுக்குக் கிஞ்சித்தும் குறையாமல், தமிழ் எப்படி தன்னைச் சரண்புகுந்தவரை வாரி அணைத்து, அவர்தம் உள்ள வேட்கையையும்; வேண்டிய செல்வத்தையும், அழியாப் புகழையும் கொடுக்கிறதோ, அதற்கு நிகராக, தன் பெயரை உச்சரித்தாலே போதும்; வார்த்தைகளை வாரி வழங்கி; வான் புகழ் அடையச் செய்து; நல்லாரைக் கூட்டி; நலிதல் சிறிதுமின்றி நவில்தல் திறம்படச் செய்து, செல்வம் ஈட்டும் ஒரு தாரக மந்திரமாக …

    ‘கண்ணாதாசன்’ எனும் நாமம் இருக்கிறதென்றால், தலைப்பில் குறையும் உண்டோ? சொல்வீர்காள்!

    கேட்டதும் கொடுப்பவன் தான் கிருஷ்ணன் என்றான்!
    ………………………………… இல்லை கண்ணதாசனும் தான்!!

    என்பதை இன்றைக்கு தமிழ்நாட்டில் அவன் புகழ்பாடும் கவிஞர்கள், அறிஞர்கள், புலவர்கள் எனப் பட்டியல் நீளும்!

    அவன் எழுதிய வார்த்தைகள் எவ்வளவு சத்தியமானவை என்று அனுபவித்தவர்கள் அறிவர்!

    எத்தனையோ கவிஞர்கள் வந்தனர் அவனுக்கு முன்னாலும்; பின்னாலும்! ஆனால், அவர்களெல்லாம் வெறும் சருகுகளாகக் காற்றோடு அடித்துச் செல்லப் படுகின்றனர்; ஆனால், கவியரசரோ காற்றுக்கு கவிதை பாடியவராயிற்றே!

    நதியில் விளையாடி கொடியில் தலைசீவி
    நடந்த இளந் தென்றலே ……………………என்று!

    இப்படித்தான் ஒரு பாடல் எழுதுவதற்காகக் கவிஞரின் வரவை எதிர்நோக்கி, திரைப்படத்தின் இயக்குநர், இசையமைப்பாளர் மற்றும் குழுவினர் காத்திருக்க, கவிஞரின் வருகை தாமதாமாகிக் கொண்டிருக்க, எம்.எஸ்.வி க்கோ, அடுத்த பட நிறுவனத்திற்கு, உடனடியாகச் செல்ல வேண்டிய நெருக்குதல் வேறு! முன்னும் பின்னும் அலைமோதி, கைக்கடிகாரத்தைப் பார்த்த மேனியில், கவிஞர் வரவில்லையே என பொறுமை இழந்து, ஒரு கடுஞ்சொல்லைப் பிரயோகிக்கப் பக்கத்திலிருந்தவர், கவிஞர் வந்தவுடன் அவர் காதில் போட்டுவிட்டார்!

    கதையின் இயக்குனர் ஶ்ரீதர் அவர்கள், பாடலுக்கான சூழலைச் சொல்கிறார்…..

    மருத்துவமனையில் புற்று நோய் காரணமாக அனுமதிக்கப் பட்டிருக்கும் கணவன், தான் எப்படியும் இறந்துவிடுவோம் என்பதை அறிந்து, அந்த மருத்துவமனையில் தனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர், தன் மனைவியின் முன்னால் காதலர் என்பதையும் அறிந்து, தன் மறைவுக்குப்பின் தன் மனைவி அந்த மருத்துவரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என சம்மதம் கேட்க, அதைக் கேட்ட மனைவியின் இதயம் சுக்கு நூறாக உடைய…..

    பாடலின் இசைக்கு வார்த்தைகள் வர மறுத்த நேரம்தான், அந்த நண்பர் கவிஞரிடம், எம்.எஸ். வி, உங்களை இப்படிச் சொன்னார் என்று சொல்ல, கவிஞரால் நம்ப இயலாமல், ஏன்டா நீயா இப்படிச் சொன்னாய் என்று சட்டென்று கேட்க…

    மீண்டும் ராகத்தோடு….

    சொன்னது நீதானா? சொல்….சொல்…..என்னுயிரே என்ற பல்லவி பிறந்ததாக வரலாறு!

    என்ன அருமையாக, ஆழமாக அந்தப் பாடலில் சொல்கிறார்….

    மங்கலமாலை குங்குமம் யாவும் தந்ததெல்லாம் நீதானே
    மணமகளை திருமகளாய் நினைத்ததெல்லாம் நீதானே
    என்மனதில் உன்மனதை இணைத்ததும் நீதானே
    இறுதிவரை துணையிருப்பேன் என்றதும் நீதானே…….

    நண்பர்களே……இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள் நம் உணர்வுகளோடு ஒட்டி உரையாடுபவை? அதனால்தான் அவர் ஒரு அட்சயபாத்திரமாக அனைவருடைய எண்ணங்களிலும் இன்னமும் இருக்கின்றார்! எப்பொழுதும் இருப்பார்.

    இயல்பான உணர்வுகளை இலக்கியமாய்த் தந்ததனால் இக்காலம் மட்டுமல்ல; எக்காலமும் நிலைத்திருக்கும் கவியரசர் கண்ணதாசன் திரையிசைப் பாடல்கள்!

    அவன் பேச நினைப்பதெல்லாம் நான் பேசவேண்டும்
    அவனியில் அவன்சொல்லின் ஆற்றல் உணர்த்திடவே!

    அவருடைய பாடல்கள் பற்றி ஒவ்வொரு நாளும் உலகத்தின் தமிழினம் இருக்குமிடமெல்லாம், யாரோ ஒருவர் தன்னுடைய படைப்பாக, புத்தகமாக, பேச்சாக, கவியாக, பாடலாக என்று திறம்படப் புகழ் பாடிக்கொண்டேயிருக்கின்றனர் என்றால்,

    சற்று யோசியுங்கள்……

    தலைப்பு சரிதானே?

    சந்திப்போம்….சந்திக்கும் வரை சிந்திப்போம்!

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • இனிய ரமலான் வாழ்த்துக்கள் இஸ்லாமியச் சகோதர சகோதரிகளுக்கு!

    -சுரேஜமீ

     மறையோதி நாளும் தொழுவர்
    மானுடத் தின்நலம் பேணியே
    மகத்தான நன்னாள் இறைத்தூதரே
    மாண்பு களைத்தாரும் என்றும்!

     பிறைகண்டு நோன்பெடுத்த எங்கள்      ramalan
    குறைகளையும் நெஞ்சம் வேண்டிப்
    பிறந்தோர்கள் யாவரும் இங்கே
    இறைவழியில் நாளும் இருக்க!

    முப்பதுநாள் நோன்பில் வரும்
    முழுநிலவை யொத்த மனம்
    முகமதியர் போற்றும் ரமலான்
    முன்பாவம் போக்கும் அறம்!

    எரிக்கும் எல்லா வினையும்
    என்றும் இறைநூல் பற்றிட
    ஏற்றிடுங்கள் நன்மார்க் கமும்
    எதுவரினும் அல்லாஹ் துணை!

    சமநிலை ஏற்படுத்தும் தர்மம்
    செயலேகும் எண்ணம் தரும்
    சன்மார்க்க மாதம் ரமலான்
    சந்ததிகள் வாழ்த்தும் ரமலான்!

     இனிய ரமலான் வாழ்த்துக்கள்
     இஸ்லாமியச் சகோதர சகோதரிகளுக்கு! 

     

    Share
  • சிகரம் நோக்கி (13)

    சுரேஜமீ

    மனம்

    peak1111111

    இந்த உலகில் வடிவமில்லாத ஒன்று, கண்ணுக்குப் புலனாகாத ஒன்று, கடவுள் என்ற கருப்பொருளுக்கு இணையான ஒன்று, பிறப்பின் ஆழத்தை ஒவ்வொரு மனிதனுக்கும் புரிய வைக்கின்ற ஒன்று, மனிதனின் இருப்பை மற்ற உயிரினங்களிலிருந்து உயர்த்திக் காட்டுகின்ற ஒன்று இருக்கிறது என்றால்

    அதன் பெயர்தான் ‘மனம்’!

    அது எங்கே இருக்கிறது? அதை எப்படி புரிந்து கொள்வது? அதனால் நமக்கு என்ன பயன்? என்பதைப் பற்றிப் பார்ப்போமா?

    உலகில் படைக்கப்பட்டுள்ள ஜீவராசிகள் அனைத்திற்கும் மனம் என்ற ஒன்று இருந்தாலும், மனித மனம் மட்டும் அதிலிருந்து வேறுபடக்கூடியது. விலங்கினங்கள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேரப்போகிறது என அறிந்தால், தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற அறிவுதான், அதனை வழி நடத்தி, உயிரைக் காப்பாற்ற உதவுகிறது.

    ஆனால், மனிதனுக்கு மட்டுமே ஒரு ஆபத்துக்கான காரணத்தை ஆராயும் தன்மையான உயர்ந்த நிலையைக் கொடுக்கிறது. அடுத்து அதுபோல் நடக்காமலிருக்க தன்னைத் தயார்படுத்தவும் செய்கிறது.

    அத்தகைய உயர்வான மனத்தை எப்படிப் புரிந்து கொள்வது?

    விலங்குகளில் குரங்கு என்பது ஓரிடத்தில் நிற்காது அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருப்பது போல், மனம் என்பதும் ஒரு குரங்கைப் போல், நிலையால் இல்லாமல், ஒரு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போதே, அடுத்தடுத்த சிந்தனைகலுக்கும் சென்று கொண்டிருக்கும்.
    அதானல் எதிலுமே முற்றுப் பெற முடியாமல், அதற்கேற்ற விளைவுகளால் அவதியுற நேரும்.

    அவ்வாறு நேராமல் இருக்க மனதை நாம் பக்குவப் படுத்த வேண்டும்.
    மனத்தின் தன்மையை நாம் சரியாகப் புரிந்து கொண்டால், இவ்வுலக வாழ்வே ஒரு சொர்க்கமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    மனதின் ஆற்றலுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், நாம் நினைத்த மாத்திரத்தில், உலகின் ஒரு மூலையிலிருந்து அடுத்த மூலைக்கு மனம் பயணப்பட்டு விடும். ஆனால், உடல் அவ்வாறு பயணிக்க வேண்டுமானால் கடவுச்சீட்டு தொடங்கிப் பயணசீட்டு பெற்று பயணப்பட்டால் மட்டுமே முடியும்!

    மனித வாழ்வில் ஏற்படக்கூடிய அத்துனை இன்ப துன்பங்களுக்கும் காரணமாக இருப்பது மனம். இன்பம் வந்தால் அறியாமையால் ‘துள்ளிக் குதிப்பதும்’; துன்பம் வந்தால் ‘துவண்டு விடுவதும்’ மனம் தான் என்பதை நாம் அறிவோம்.

    கவியரசர் கண்ணதாசன் அவர்கள், ஒரு பாடலிலே இவ்வுலகில் எல்லாமே இரண்டாக இருக்கும் பொழுது உள்ளம் மட்டும் ஒன்று போதாது….இரண்டு வேண்டும் என்று இறைவனிடம் கேட்பார்;

    இரவும் பகலும் இரண்டானால்
    இன்பம் துன்பம் இரண்டானால்
    உறவும் பிரிவும் இரண்டானால்
    உள்ளம் ஒன்று போதாதே! ….என்று

    ஆக நமக்குள் இருந்து ஒரு நீதி பரிபாலனம் பண்ணக்கூடிய ஆற்றல் வாய்ந்த மனதை நாம் ஆள்வதன் மூலமாக, இவ்வுலகில் நாம் நினைத்த எதையும் அடைய முடியும் என்பது மட்டுமல்ல; ஒரு ஒப்பற்ற மாமனிதராக உருவெடுக்க முடியும் என்பதும் உண்மை.

    ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் சொல்கிறார் ;

    மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
    ஆகுல நீர பிற.

    ஒருவன் மனதைத் தூய்மையாக வைத்துக் கொள்வதே சிறந்த அறம் என்றால், அதனை நாம் பின்பற்றி மனத்தைப் பழக்கப்படுத்தி, நம்மை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்கான விதையை அப்பொழுதே விதைத்திருக்கிறார் என்றால்,

    ஏற்றுக்கொள்ள வேண்டிய இடத்தில்தான் இன்னமும் நாம் இருக்கிறோம் என்பது மட்டுமல்ல; இனிவரும் காலமும் இருக்கும் இந்த மனித சமுதாயம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

    உலகில் உள்ள எண்ணற்ற மதங்கள் தோன்றியதன் நோக்கமே மனித மனத்தைப் பக்குவப்படுத்தி மனித வாழ்வை ஒரு உயர்ந்த நிலைக்கு இட்டு செல்வதற்காகத்தான் என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை.

    குருஷேத்திரத்திலே அர்ஜுனன் தன் உறவுகளுக்கு எதிராகப் போருக்குத் தயங்கிய பொழுது, பகவான் கிருஷ்ணர் அவனுக்கு எது தர்மம் என்பதை நிலைநாட்ட, உள்ளத்தைத் தெளிவு படுத்த, அதிலிருந்து எழக்கூடிய உணர்வுகளை மட்டுப்படுத்தி, நீதியைப் புரியவைத்து உலக்குக்கு அளித்த ஒப்பற்ற வசனங்களைக் கொண்டதுதான், பகவத் கீதை எனப்படும் இந்துக்களின் புனித நூல்.

    இதைப்போல ஒவ்வொரு மதத்திலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து தெளிவான மனநிலையைக் கொடுக்கும் ஒப்பற்ற நூல்களாக புனித நூல்கள் இருக்கின்றன.

    மனத்தினில் எழக்கூடிய உணர்ச்சியின் பால் தூண்டப்படுகின்ற ஆசைகளே துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறது. அத்தகைய துன்பங்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள

    மனத்தை அறிவின்பால் செலுத்த, அதனைப் பழக்க முயன்றால், வாழ்வில் ஒரு நிலைத்தன்மையை நம்மால் அடைய முடியும்.

    • மனதைப் பழக்குவதற்கு முதலில் நாம் செய்ய வேண்டியது ‘ நம்மால் முடியும்’ என்ற நம்பிக்கை வார்த்தைகளைத் திரும்பத் திரும்ப உச்சரிக்க வேண்டும்.
    • உடற்பயிற்சி எப்படி உடல்நலத்திற்கு முக்கியமோ, அதைப்போல ‘மனப்பயிற்சி’ மனநலத்துகும்; உடல் நலத்திற்கும் இன்றியமையாதது.
    • யோகா முறையாகக் கற்றுக்கொண்டு தினமும் பயிற்சி செய்வது மனதைக் கட்டுப்படுத்த உதவும்.
    • ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் ஒரு பத்து நிமிடமாவது கண்களை மூடித் தியானம் செய்வது.
    • உயர்ந்த இலட்சியங்களை நோக்கி வாழ்க்கையை நகர்த்துவது.
    • மனதுக்கு இதமாக, இன்பமாக இருக்கக் கூடிய இடத்திற்கு அடிக்கடி செல்வது.

    இவ்வாறெல்லாம் மனதைப் பழக்கிப் பக்குவப்படுத்த, ஒரு செயலின் விளைவை ஆராய்ந்து அதன் சாதக பாதகங்களைக் கூறிட்டு; அதனால் ஏற்படக்க்கூடிய நன்மை தீமைகளைக் கணக்கில் கொண்டு, செயலில் இறங்கும் ஆற்றலை மனம் சுலபமாகக் கொண்டுவிடும்!

    அதன்பின் பாருங்கள் உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறதென்று?

    ஒரு வெற்றியாளராக, ஒரு ஊர் போற்றும் உத்தமராக, சான்றோன் எனக் கேட்கும் தாய்க்கும்; என்னோற்றான் கொல்! என அறியும் தந்தைக்கும் மகனாக; மகளாக; நாட்டின் சிறந்த குடிமகனாக உங்களை மாற்றிக் காட்டும் உங்கள் மனம் என்பதற்கு உங்கள் வாழ்வே ஒரு சாட்சியாக இருக்கும்!

    இதோ காவியத்தாயின் இளைய மகன் கவியரசர் கண்ணதாசனே சொல்கிறார்…….
    நெஞ்சுக்குத் தேவை மனசாட்சி
    அது நீதிதேவனின் அரசாட்சி! ……….என

    நண்பர்களே இங்கு சொல்லப்படுவது ஒரு துளியே…அந்தத் துளி ஒரு உளிபோல உங்களைச் செதுக்கினால் வருகின்ற சிலையாக ஒரு தெய்வத்தன்மையுடன் கூடிய மனிதனாக மாற்றினால் சிகரம் என்பது கூட ஒரு சிறுகுன்றாகிவிடும் உங்கள் முன்னால்!

    தொடர்வோம் பயணத்தை………

    அன்புடன்
    சுரேஜமீ

    Share
  • இதுதான் வாழ்க்கை. இதுதான் பயணம்…. இவர் போல் வாழ இனி யார் வருவார்?

    சுரேஜமீ

    எம்.எஸ்.வி. எனும் இசை மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்றிருக்கிறது!

    acmsv
    என்ன சொல்ல? எதைச் சொல்ல? வாழ்வில் எத்தனையோ பேருக்கு ஒளி கொடுத்த விளக்கு, இப்போது விண்ணுக்குச் சென்று அங்கிருந்து இந்த அகிலத்திற்கே ஒளி காட்டும் விண்மீனாக பட்டொளி வீசப்போகிறது என்பதில் எள்ளவும் ஐயமில்லை!

    சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கண்ணதாசன் சம்பந்தப்பட்ட விழாவில் பேசுகிறார். அதில் அவருடைய கனவை வெளிப்படுத்துகிறார். ஒரு திரைப்படத்திற்கான கதை விவாதிக்கப்படுகிறது. கவியரசர் மற்றும் பலர் களத்தில் இருக்கிறார்கள். நடிகர், நடிகையர், கதை, திரைக்கதை, இயக்கம், பாடல்கள் எல்லாம் முடிவாகிக் கடைசியில் இசையமைப்பாளர் யார் எனும் கெள்வி எழ,

    கவியரசர் தம்பி விசுவைப் போடலாம் என்கிறார். அதற்குப் பதில் உடனே வருகிறது…..அவர் இன்னும் இங்கு வரவில்லை என! உடனே கவியரசர் கேட்டாராம்….அவன் இன்னுமா வரவில்லை? அப்படியென்றால் இந்தப் பணியைத் தள்ளி வையுங்கள்….அவன் வரட்டும் என்று!

    அந்த அளவிற்குக் கவியரசரும், மெல்லிசை மன்னரும் இணைபிரியாத இரு உடல்கள் ஊருயிராகத் திகழ்ந்தவர்கள் என்பது திரைத்துறையில் இருந்தவர்கள் அறிவார்கள்!

    இதோ…..இன்று அதிகாலை அங்கே ……கவியரசர்…….இரு கரம் நீட்டி அழைக்க…..இசை அரசர்…..இதயம் இணைந்திருக்கிறது!

    இறைவா……மண்ணுலகம் என்ன செய்யும் இனி?

    இதுதான் வாழ்க்கை …இதுதான் பயணம்………இவர் போல் வாழ இனி யார் வருவார்?

    Share
  • வள்ளுவ மாலை

    சுரேஜமீ​​

    மிகைச்சூடும் சூழ்வறட்டும் தாங்கா முடிவினிலே
    மாண்டிடும்  வாழ்விந்த மண்ணில் – நிலத்தை
    மீட்டெடுக்க வள்ளுவம் போற்றிடு நாளும்
    மனிதம் சேர்க்கும் மாண்பு!

    எண்ணிக்கை கூட்டிடுதல் என்றும் உறவாகா  valluvar
    எண்ணங்கள் சேர்த்து இதயங்கள் கோத்து
    உதவுங்கள் யார்க்கும் திருக்குறள் சொல்லும்
    உயர்நெறி பற்றிச் சிறந்து!

    நேர்பட வாழ்தல் சுகமென்றும் கொள்கை
    நேர்கெடு அந்நாள் பழிவரும் பின்னர்
    நேரும் கொடுமை கோள்கெடும் – உண்மைத்
    திருக்குறள் மாண்பு தரும்!

    மாறிடும் பண்பு நெறிசார் மண்ணேகி
    மானுடம் காக்கத் தவறின் –  கெட்டிடும்
    முன்னோர் கொடுமரபும் பட்டிடத் தேறும்
    மனமேசெல் வள்ளுவம் முன்!

    கறையிலா நெஞ்சம் தினமும் கெஞ்சும்
    இறையிடம் தஞ்சம் நிறைபட வேண்டி
    உறைபவன் நிற்பான் துணையென – வள்ளுவம்
    ஏகித்தொழச் சேரும் கருணை!

     

    Share
  • சிகரம் நோக்கி (12)

    சுரேஜமீ

    தெளிவு

    peak111111

    இன்றைய குழந்தைகள் பலருக்கும் ஒற்றைக் குறிக்கோளாக இருப்பது,

    ஒன்று பெற்றவர்களின் எண்ணத் திணிப்பு;

    அல்லது சக மனிதத் திணிப்பு!

    என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.

    புற்றீசல் போல எங்கும் பரவிக் கிடக்கும், எண்ணற்ற பொறியியல் கல்லூரிகளில் இருக்கும் இடங்களின் எண்ணிக்கை,, தேர்ச்சி பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பதும்,

    பெரும்பாலான மாணவர்கள்,

    ஏதேனும் ஒரு பொறியியல் சார்ந்த படிப்பு, எப்படியும் ஒரு கணிணிப் பயன்பாட்டு நிறுவனத்தில் பணி கிடைப்பதற்கு ஏதுவாகி விடும்;

    என்ற எண்ணப் போக்கும், இன்றைய கல்வி நிலையில் ஒரு பொருளாதாரச் சிந்தனையை வித்திட்டு விட்டது என்று சொன்னால் மிகையாகாது.

    இதனால் பாதிக்கப்பட்டது ஒட்டு மொத்த சமூகமேயன்றி தனி மனிதன் மட்டுமல்ல என்பதை நாம் அறிய வேண்டும். மிகச் சில பெற்றோர்களே, தம் குழந்தைகளின் விருப்பத்தை அறிந்து, அவர்களின் வழியில் செல்லவிட்டு, அந்தக் குழந்தைகளின் சாதனைக்குச் சான்றாக இருக்கின்றனர் என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

    இதற்கு என்ன அடிப்படைக் காரணம்?

    யோசித்துப் பார்த்தால், ஒன்று நம்முடைய அறியாமையாக இருக்கும்; இல்லையெனில், கற்ற கல்வி உடனடியாக நம் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்ற குறுகிய காலச் சிந்தனையாக இருக்க வேண்டும்.

    கல்வியைப் பற்றி நம் இலக்கியங்களில், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ‘நாலடியார்’ கல்வி எப்படி கற்க வேண்டும் என்று சொல்வதைத் தெரிந்து கொள்வோமா?

    …..தெள்ளிதின்

    ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

    பாலுண் குருகின் தெரிந்து!

    எப்படி அன்னப் பறவை, நீரைப் பிரித்துப் பாலை மட்டும் உண்ணுகிறதோ, அதைப்போல, நாம் எண்ணங்களை ஏற்றம் பெறச் செய்யும் நூல்களைத் தெரிந்தெடுத்து கற்றல் அவசியம்!

    அப்பொழுதுதான் வாழ்வில் உயர்வடைய முடியும். அதை விடுத்து, ஒரு பொருளியல் சார்ந்த சிந்தனையிலோ, அல்லது ஒரு பட்டம் பெறவேண்டும் என்ற நோக்கிலோ படித்தால், கற்றலின் பயன் வாழ்வில் உய்ய வழி வகுக்காது!

    சரி நமக்கு என்ன படிப்பது? எதைத் தேர்ந்தெடுப்பது? என்று தெரியவில்லையென்று வைத்துக்கொள்வோம்.

    அடுத்து என்ன செய்ய வேண்டும்? நம்மில் கற்றறிந்த மக்களை உற்று நோக்குதல் அவசியம்.

    நான் படித்தது முகவை மாவட்டத்தில், இராமநாதபுரத்திற்கும், இராமேஸ்வரத்திற்கும் இடைப்பட்ட ஒரு சிற்றூர். நான் படித்த காலத்தில், கிழக்கு முகவை என்று சொல்லக் கூடிய, மேற்கூறிய இவ்விரண்டு ஊர்களுக்கும் இடையில் இருந்த ஒரே மேல்நிலைப் பள்ளிக் கூடம், நான் படித்த கடுக்காய் வலசை என்னும் கிராமம் தான். அந்தக் கால கட்டத்தில், ஆசிரியர் எண்ணிக்கையும் குறைவே. மேலும், கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம், என எல்லாவற்றிலும் பின் தங்கிய ஒரு மாவட்டம் என்பதால், அரசு ஊழியர்களுக்குத் தண்டனைக்குரிய பகுதியாகக் கருதப்பட்டதால், அது சார்ந்த சிக்கல்களும் உண்டு.

    அத்தகைய சூழலில், என்னால் தேவையான மதிப்பெண்களை, பள்ளி இறுதி வகுப்பில் பெற முடியவில்லை; அப்பொழுதே, முடிவு எடுத்தேன் மேல்நிலை வகுப்பில் வணிகவியல் பாடம் எடுத்து படிக்க வேண்டும் என்பதையும், அதற்குப் பின் பட்டயக் கணக்காளர் படிப்புதான் படிக்க வேண்டும் என்பதும்!

    இதற்கு உறுதுணையாக இருந்தது நான் அடிக்கடி விடுமுறைக் காலங்களில் காரைக்குடிக்குச் செல்வதும், அங்கே கற்றறிந்தவர்களுடனான நட்பும் என்றால் சாலப் பொருந்தும்!

    அதைத்தான் பின் வரும் பாடலில் உணர்த்துகிறது!

    ……….கற்றறிந்தார் கேண்மை நுனியின் கரும்புதின் றற்றே!

    கற்றறிந்தவர்களுடைய நட்பு என்பது கரும்பை நுனியிலிருந்து சுவைப்பத் போன்று, நம் வாழ்க்கை கரும்பை ருசிப்பதற்கு உதவும். இதையெல்லாம், இளம் வயதில் நம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி, ஒரு வழிகாட்டியாக இருந்தால், நிச்சயம் எந்த சிகரத்தையும் வரும் தலைமுறை அடையும் என்பதில், எள்ளளவும் ஐயமில்லை!

    சமீபத்திய செய்தி ஒன்று!

    apooja

    இந்தியா வம்சாவழியைச் சேர்ந்த பதினேழே வயதான மாணவி பூஜா சந்திரசேகருக்கு, அமெரிக்காவில் உள்ள முதல்நிலைப் பல்கலைக் கழகங்கள் பதிநான்கில் சேருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

    இவருக்கு எப்படி இந்த வாய்ப்பு கிட்டியது என்றால்,

    இவர் மறதி நோய் எனப்படும் பார்க்கின்சன் எனும் நோயை, ஒருவர் பேசும் முறையை வைத்தே கண்டறியப் படும் ஒரு முறையக் கண்டுபிடித்துள்ளார் என்ற சிறப்பே!

    அவரிடம் எப்படி உங்களால் சாதிக்க முடிந்தது என்று வினவியதற்கு, அவர் கூறிய பதில் என்ன தெரியுமா?

    ‘என்னால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும் என நான் நம்பியதுதான்!’ என்றார்.

    ஆக, ஒவ்வொருவரும் நாம் என்ன சாதிக்க வேண்டும் என்பதைத் தான் படித்த நூல்களின் வாயிலாகவோ,

    நம் பெற்றோர்களின் அனுபவத் துணையோடோ, அல்லது

    கற்றறிந்த மேதைகளின் நட்பு மூலமாகவோ,

    நாம் விரும்பும் படிப்பைத் தேர்ந்தெடுத்து, அத்துறையில் தனிப்பெரும் சிறப்புப் பெறவேண்டும் என்ற முனைப்பும், தன்னம்பிக்கையும் கொண்டு முயன்றால்,

    தெய்வத்தால் ஆகாதெனினும், முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் எனும் வள்ளுவனின் கூற்று,

    உங்களைச் சிகரங்களை நோக்கிப் பயணிக்க வைக்கும்!!

    -தொடர்ந்து சிந்திப்போம்!

    அன்புடன்

    சுரேஜமீ

    Share
  • வள்ளுவ மாலை

     

     சுரேஜமீ​​
    avallu
    மேல்நீர் நிலைவாரா மண்ணில் கானழிக்க
    ஏர்பிடிக்கும் கைகள் இயந்திரம் நோக்கின்
    வருமுலகில் உண்ணும் உணவேது – வள்ளுவம்
    நெறிபழகிச் செய்யப் பழகு!
    கானழிய வெப்பம் தானேகும் பூமியில்
    காற்றும் கரும்புகை யேகிநச்சைத் தூவும்
    உயிரழிக்கும் துன்பம் விலக்க – வள்ளுவம்
    காட்டும் திசையறிந்து வாழ்!
    ஓரிடத்துப் பெய்தும் வருமிடத்துப் பொய்த்தும்
    சேரிடத்தில் வீணாய்ப் போகும் மழையும்
    பேரிடராய் மண்ணில் புகுதல் நீக்கத்
    திருக்குறள் சொல்லும் வழி!
    ஈதலை நன்கறியப் பேணிடு ஞாலஞ்செய்
    வளம்யாவும் அன்றேல் அழிந்திடுவர் நாளையர்;
    வள்ளுவம் வெல்நெறியே மாந்தர்க்கு என்றும்
    வழித்துணை யாமறிந்து செல்!
    வளம்குன் றின்வரும் போருணர்வாய் மாநிலத்தில்
    தாயுள்ளம் தள்ளாடும் சேயுயிர்கள் வாடிநிற்க;
    தேடிடுவாய் மண்ணில் நிறைகளையே – வள்ளுவம்
    தெரிந்து கற்கத் தெளிந்து!
     
    அன்புடன்
    சுரேஜமீ​

                                                      

    —————————————————————————————————
    Share