Tag: நெல்லைத் தமிழ்

  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-45

    45. பெரியாரைத் துணைக்கோடல்

    குறள் 441:

    அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
    திறனறிந்து தேர்ந்து கொளல்

    அறம் உணர்ந்த, தன்னைய விட மூத்த அறிவாளியோட நட்பப் பெறுத மொறைய ஆஞ்சு அறிஞ்சு தெரிஞ்சுக்கிடணும்.

    குறள் 442:

    உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்

    வந்த துன்பத்தப் போக்கி இனி துன்பம் வாராம பாத்துக்கிடுத பெரியவங்கள தொணையா வச்சிக்கிடணும்.

    குறள் 443:

    அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
    பேணித் தமராக் கொளல்

    பெரிய மனுசங்களுக்கு வேணுங்கது எல்லாம் செஞ்சு அவங்க கிட்ட ஒறவு வச்சுக்கிட்டு அவர் காட்டுல வழில நடக்குதது ரொம்ப ஒசந்த பலம்.

    குறள் 444:

    தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
    வன்மையு ளெல்லாந் தலை

    தன்னைய விட அதிக புத்தியுள்ள பெரியவுகளோட ஒட்டுதலா இருந்து அவுக சொல்லுத வழியில நடக்கது எல்லாத்தையும் விடச் சிறந்தது.

    குறள் 445:

    சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
    சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

    கண்ணு கணக்கா எல்லாத்தையும் கண்டறிஞ்சு கூறுத அறிவாளிங்கள சுத்திவர வச்சிக்கிடுதது தான் ராசாவுக்கு நல்லது.

    குறள் 446:

    தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
    செற்றார் செயக்கிடந்த தில்

    ஒருத்தனச் சுத்தி தகுதியுள்ள பெரியவங்க இருந்து  அவுக சொல்படி அவன் நடந்தாம்னா பகையாளியாலையும் அவன ஒண்ணுஞ்செய்ய முடியாது.

    குறள் 447:

    இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
    கெடுக்குந் தகைமை யவர்

    குத்தங் கொறைய இடிச்சுக்காட்டி புத்தி சொல்லுத பெரியவங்கள தொணையா வச்சிருக்கவன கெடுக்கதுக்கும் ஆள் இருக்குமா என்ன?

    குறள் 448:

    இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
    கெடுப்பா ரிலானுங் கெடும்

    குத்தங்கொறைய சொல்லிக்காட்டி காவலா இருக்க பெரியவங்க இல்லாத ராசா, பகையாளி இல்லன்னாலும் தானா அழிஞ்சு போவான்.

    குறள் 449:

    முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை

    முதல் போடாம வியாபாரம் செய்யுதவனுக்கு அதுலேந்து வார லாபம் கெடைக்காது. அது கணக்கா தான் பெரியவங்க தொணையில்லாத ராசாவுக்கும் அவகளால வருத பயனப் பெற ஏலாது.

    குறள் 450:

    பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
    நல்லார் தொடர்கை விடல்

    நல்லவங்க கிட்ட ஒட்டுதலில்லாம இருக்கது, பல பேரோட பகையினால வெளையுத தீமய விட பத்து மடங்கு தீமய கொடுக்கும்.

    (அடுத்தாப்லயும் வரும்…..)

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-44

     

    குற்றங்கடிதல்

    குறள் 431:

    செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
    பெருக்கம் பெருமித நீர்த்து

    இறுமாப்பு , கோவம், காமம் இவையெல்லாம் இல்லாதவங்களோட செல்வாக்குதான் ஒசந்தது.

    குறள் 432:

    இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
    உவகையும் ஏதம் இறைக்கு

    தேவப்படுதவங்களுக்கு கொடுக்காம பேராச வைக்கிதது, தான் பெரிய ஆள் னு நெனைப்புல பெரியவங்களுக்கு மரியாத கொடுக்காம இருக்கது, கெட்ட செயல்ல மகிழ்ச்சியடையதது இதெல்லாம் தலைவனா இருக்கவனுக்கு குற்றங்களாவும்.

    குறள் 433:

    தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
    கொள்வர் பழிநாணு வார்

    பழி பாவத்துக்கு பயப்படுத பெரிய மனுசங்க தினையளவு குத்தத்தையும் பனையளவா நெனச்சு அத செய்யாம தங்கள காத்திக்கிடுவாங்க.  .

    குறள் 434:

    குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
    அற்றந் தரூஉம் பகை

    குற்றமே அழிவ உண்டாக்குத பகையாளி. அதனால அக்குற்றத்த செய்யாம இருக்குததயே நோக்கமா வச்சி வாழணும்.

    குறள் 435:

    வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
    வைத்தூறு போலக் கெடும்

    குற்றம் வருததுக்கு முன்னமே காத்துக்கிடாதவனோட வாழ்க்க நெருப்பு முன்ன இருக்க வைக்கப்போர் கணக்கா அழிஞ்சு போயிடும்.

    குறள் 436:

    தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
    என்குற்ற மாகும் இறைக்கு

    மொதல்ல தங்கிட்ட இருக்க கொறைய நீக்கிட்டு பொறவு அடுத்தவங்கொறைய சொல்லுத தலைவனுக்கு என்ன கொற வரப்போவுது?

    குறள் 437:

    செயற்பால செய்யா திவறியான் செல்வம்
    உயற்பால தன்றிக் கெடும்

    செய்ய வேண்டிய நல்ல காரியத்த செய்யாம சேமிச்சு வைக்குத கருமியோட சொத்து வீணா அழிஞ்சு போயிடும்.

    குறள் 438:

    பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
    எண்ணப் படுவதொன் றன்று

    மத்தவனுக்கு குடுக்காம சேத்து வைக்கித கஞ்சத்தனம் குற்றங்கள் எல்லாத்திலயும் கொடுங்குற்றம்.

    குறள் 439:

    வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
    நன்றி பயவா வினை

    எந்தவொரு காலத்திலயும் தற்பெரும பேசி மார்தட்டிட்டு அலயுதது கூடாது. நல்லது தராத செயல செய்யவும் கூடாது.

    குறள் 440:

    காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
    ஏதில ஏதிலார் நூல்

    பொறத்தியாருக்குத் தெரியாம தன்னோட விருப்பத்த நிறைவேத்தத் தெரிஞ்சவனுக்கு பகையாளி செய்யுத சூழ்ச்சி பலிக்காம போவும்.

    (அடுத்தாப்லையும் வரும்….

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-43

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-43

    43. அறிவுடைமை

    குறள் 421:

    அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
    உள்ளழிக்க லாகா அரண்

    அறிவு நமக்கு அழிவு வராம காக்கும். அது மட்டுமல்லாம பகையாளியாலயும் அழிக்க முடியாத அரண் கணக்காவும் நிக்கும்.

    குறள் 422:

    சென்ற இடத்தாற் செலவிடா தீதொரீஇ
    நன்றின்பா லுய்ப்ப தறிவு

    மனச அது போக்குல விடாம கெட்டத வெலக்கி நல்ல வழில நம்மள நடத்துததே அறிவு.

    குறள் 423:

    எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    யார் என்ன சொன்னாலும் நம்பாம உண்ம எது னு கண்டுபிடிக்கது தான் அறிவு.

    குறள் 424:

    எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
    நுண்பொருள் காண்ப தறிவு

    பொறத்தியார் மனசுல பதியுதது கணக்கா எளிமையா பேசுததும்,  அவுக சொல்லுத விசயத்த கூறுபோட்டு பாத்து  எளிதா விளங்கிக்கிடுததும் தான் அறிவு.

    குறள் 425:

    உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்
    கூம்பலு மில்ல தறிவு

    ஒலகத்து ஒசந்தவங்க கூட நட்பா இருக்கது சிறந்த அறிவு. நட்போட தொடக்கத்துல மகிழ்ச்சியாவும் பொறவு வருத்தப்படுததும் இல்லாம ஒண்ணுபோல சீரா இருக்கது அறிவு.

    குறள் 426:

    எவ்வ துறைவ துலக முலகத்தோ
    டவ்வ துறைவ தறிவு

    ஒலகத்து பெரிய மனுசங்க எப்டி வாழுதாங்களோ அவங்களோட சேந்து தானும் அப்படியே வாழுதது அறிவு.

    குறள் 427:

    அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
    அஃதறி கல்லா தவர்

    அறிவுள்ளவுக நாளமுன்னயும் நடக்கப் போகுதத முன்னமே அறிஞ்சு வச்சிருப்பாக. அறிவில்லாதவுகளால அது ஏலாது.

    குறள் 428:

    அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவ
    தஞ்சல் அறிவார் தொழில்

    பயப்பட வேண்டியதுக்கு பயப்படாம தெனாவட்டா இருக்கது முட்டாள்தனம். பயப்பட வேண்டியதுக்கு பயப்படுதவங்க புத்திசாலிங்க.

    குறள் 429:

    எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
    அதிர வருவதோர் நோய்

    அடுத்தாப்ல வரப்போகுதத முன்னமே உணந்து காத்துக்கிடுதவனக்கு நடுங்குத அளவுக்கு அதிர்ச்சியான துன்பம் னு ஒண்ணு வாராது.

    குறள் 430:

    அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
    என்னுடைய ரேனு மிலர்

    ஒண்ணும் இல்லையினாலும் அறிவுள்ளவங்க எல்லாத்தையும் உடையவுக.  வேற எத வச்சிருந்தாலும் அறிவில்லாதவுக ஒண்ணுமில்லாதவங்களுக்கு சமானம் தான்.

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-42

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-42

    42. கேள்வி

    குறள் 411:

    செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வஞ்
    செல்வத்து ளெல்லாந் தலை

    காதால கேட்டுப்பெறுத நல்ல விசயங்களே சிறப்பான சொத்து. அது மத்த எல்லாச் சொத்தையும் விட ஒசந்தது.

    குறள் 412:

    செவிக்குண வில்லாத போழ்து சிறிது
    வயிற்றுக்கும் ஈயப் படும்

    காதுக்கு மகிழ்ச்சி தருத விசயங்கள் ங்குத உணவு கெடைக்காம போவுதப்போ தான் வயித்துக்கும் கொஞ்சூண்டு சாப்பாடு கொடுக்கப்படும்.

    குறள் 413:

    செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
    ஆன்றாரோ டொப்பர் நிலத்து

    கேள்வி ஞானம் ங்குத செவி உணவு கெடச்சவங்க பூமி ல வாழ்ந்தாலும் யாகத் தீ லேந்து பெறுத நெய்யயும் மத்ததயும் சாப்பிடுத தேவ மக்களுக்கு சமம் தான்.

    குறள் 414:

    கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்
    கொற்கத்தின் ஊற்றாந் துணை

    நூல்களப் படிக்கலேன்னாலும் படிச்சவங்க கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கிடணும். அது நெருக்கடி வருதப்போ அவனுக்கு ஊணிக்கிட்டு நடக்க ஒதவுத கொம்பு கணக்கா தொணயா நிக்கும்.

    குறள் 415:

    இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
    ஒழுக்க முடையார்வாய்ச் சொல்

    வழுக்குத நெலத்துல நடக்க ஒதவுத ஊணிக்கம்பு கணக்கா ஒழுக்கம் ஒடையவுகளோட புத்திமதி சமயத்துல வாழ்க்கையில ஒதவும்.

    குறள் 416:

    எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
    ஆன்ற பெருமை தரும்

    நல்லத எந்த அளவு கேட்டுக்கிடுதோமோ அந்த அளவு அது பெருமயக் கொடுக்கும்

    குறள் 417:

    பிழைத்துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
    தீண்டிய கேள்வி யவர்

    எதையும் நுணுக்கமா சோதிச்சு அறிஞ்ச அறிவாளிங்க சிலதப் பத்தி தப்பு தப்பா புரிஞ்சிக்கிட்டிருந்தாலும் அப்பமும் கூறுகெட்டவன் கணக்கா பேச மாட்டாக.

    குறள் 418:

    கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
    தோட்கப் படாத செவி

    கேக்குத தன்ம இருந்தாலும் நல்லவங்க பேச்ச கேக்காதவனோட காது செவிட்டுக் காது தான்.

    குறள் 419:

    நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
    வாயின ராத லரிது

    கேள்வி ஞானம் இல்லாதவுக அடக்க ஒடுக்கமா பேசுதவங்களா இருக்கது சிரமந்தான்.

    குறள் 420:

    செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
    அவியினும் வாழினு மென்

    கேட்டுப் பெறுத சுவைய ஒணந்துக்கிடாம வாயால சாப்பிடுதப்போ கெடைக்க சுவைய மட்டும் ஒணருதவங்க இருந்தா என்ன. செத்தா என்ன.

    (அடுத்தாப்லயும் வரும்……

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-41

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-41

    41. கல்லாமை

    குறள் 401:

    அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
    நூலின்றிக் கோட்டி கொளல்

    நெறய புத்தியக் கொடுக்க நூல்களப் படிக்காதவன்  படிச்சவங்க சபையில பேசுதது கட்டம் வரையாம தாயக்கட்டம் ஆடுததுக்கு சமானம்.

    குறள் 402:

    கல்லாதான் சொற்கா முறுதன் முலையிரண்டும்
    இல்லாதாள் பெண்காமுற் றற்று

    படிக்காதவன் ஒண்ணச் சொல்ல விரும்புதது முலை ரெண்டும் இல்லாதவ பெண் தன்மய விரும்புதது கணக்கா ஆவும் .

    குறள் 403:

    கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
    சொல்லா திருக்கப் பெறின்

    படிச்சவங்க முன்ன ஒண்ணும் பேசாம அமைதியா இருந்தாம்னா  படிக்காதவங்களும் ரொம்ப நல்லவங்களாத்தான் நெனைக்கப்படுவாக.

    குறள் 404:

    கல்லாதான் ஒட்பங் கழியநன் றாயினுங்
    கொள்ளார் அறிவுடை யார்

    படிக்காதவனுக்கு பொறப்பிலயே புத்தி இருந்தாலும் படிச்சவுக அவன ஒசந்தவன் னு  ஒப்புக்கிடமாட்டாங்க.

    குறள் 405:

    கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
    சொல்லாடச் சோர்வு படும்

    படிக்காதவன் தன்னைய அறிவாளி னு காட்டிக்கிட படிச்சவங்க முன்ன நடிச்சாம்னா அவன் பேசும்போது அவனோட பொய்வேசம் கலஞ்சிபோயிரும்.

    குறள் 406:

    உளரென்னும் மாத்திரைய ரல்லால் பயவாக்
    களரனையர் கல்லா தவர்

    படிக்காதவங்க உசிரோடஇருக்காங்க னு சொல்லிக்கிடலாம் அம்புட்டுதான். அவங்க வெளச்சலுக்கு ஒதவாத களர்நிலம் கணக்காதான்.

    குறள் 407:

    நுண்மாண் நுழைபுல மில்லான் எழினலம்
    மண்மாண் புனைபாவை யற்று

    பாக்குததுக்கு அழகா மட்டுமே இருந்து படிச்சு தெளிவான புத்தியப்  பெறாதவங்க கண்ணக் கவருத மண் பொம்ம கணக்காதான் மதிக்கப்படுவாங்க.

    குறள் 408:

    நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
    கல்லார்கண் பட்ட திரு

    படிக்காத முட்டாள் கிட்ட இருக்க சொத்து நல்லவங்க கிட்ட இருக்க வறுமய விட கூடுதலா கொடும செய்யும்.

    குறள் 409:

    மேற்பிறந்தா ராயினுங் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
    கற்றா ரனைத்திலர் பாடு

    படிக்காதவர் மேல் சாதில பொறந்திருந்தாலும் கீழ் சாதில பொறந்திருந்தாலும் படிச்சவர் அளவுக்கு பெரும இல்லாதவரு தான்.

    குறள் 410:

    விலங்கொடு மக்க ளனையர் இலங்குநூல்
    கற்றாரோ டேனை யவர்

    மனுசங்களுக்கும் மிருகங்களுக்கும் என்ன வேத்துமையோ அதே தான் ஒசந்த நூல்கள படிச்சவங்களுக்கும் படிக்காதவங்களுக்கும் இருக்கு.

    (அடுத்தாப்லயும் வரும்…

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 40

    – நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்

                       40.. கல்வி

    குறள் 391:

    கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க அதற்குத் தக.

    கத்துக்கிட வேண்டியத தப்பில்லாம கத்துக்கிடணும். பொறவு என்ன கத்துக்கிட்டோமோ அதுபடி நடக்கணும்.

    குறள் 392:

    எண்ணென்ப ஏனை யெழுத்தென்ப இவ்விரண்டுங்
    கண்ணென்ப வாழும் உயிர்க்கு

    எண்ணும் , எழுத்தும் வாழுத உசிருங்களுக்கு இருக்க ரெண்டு கண்ணுங்க .(அறிவுக் கண்கள்).

    குறள் 393:

    கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர் கல்லா தவர்

    கண் இருக்கு னு சொல்லுதவங்க எல்லாம் படிப்பு படிச்சவங்கதான்.. படிக்காதவங்களுக்கு இருக்க கண்ண மொகத்துல இருக்க ரெண்டு புண் னு நெனச்சிக்கிடணும்.

    குறள் 394:

    உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே புலவர் தொழில்

    மத்தவங்க கூட மகிழ்ச்சியா சேந்து பழகி பொறவு பிரியும்போது இனி எப்பம் பாப்போம் னு ஏங்குத அளவு மனம் கலங்குதது அறிவாளிங்களோட செயல்.

    குறள் 395:

    உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே கல்லா தவர்

    பணக்காரங்க முன்ன ஏழ நிக்கது போல அறிவாளிங்க முன்ன எப்பம் கெடைக்கும் னு ஏங்கி நின்னு படிப்பு கத்துக்கிடுதவங்க தான் ஒசந்தவங்க அப்டி செய்ய வெக்கப்பட்டு நிக்கவங்க படிக்காதவங்க.

    குறள் 396:

    தொட்டனைத் தூறு மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத் தூறும் அறிவு.

    தோண்டத்தோண்ட ஊத்துத் தண்ணி ஊறுதது போல படிக்கப் படிக்க அறிவு பெருகிக்கிட்டே போவும்.

    குறள் 397:

    யாதானும் டாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங் கல்லாத வாறு

    படிச்சவனுக்கு எல்லா நாடும் எல்லா ஊரும் அவனுக்கு சொந்தம் போலதான். பொறவு சாவுத வரைக்கும் படிக்காம நேரம்போக்குதது எதனால.

    குறள் 398:

    ஒருமைக்கண் தான்னற்ற கல்வி ஒருவற்
    கெழுமையும் ஏமாப் புடைத்து

    ஒரு பொறப்புல படிச்ச படிப்பு அப்பம் மட்டுமில்லாம அவனுக்கு ஏழு தலமுறைக்கும் ஒதவுத தன்ம கொண்டது.

    குறள் 399:

    தாமின் புறுவ துலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந் தார்

    தான் சந்தோசப் படுததுக்கு காரணமா இருக்க படிப்பால ஒலகமும் சந்தோசப் படும் னு தெரிஞ்சுக்கிட்டு படிச்ச அறிவாளிங்க அதவிட அதிகமா படிக்க விரும்புவாங்க.

    குறள் 400:

    கேடில் விழுச் செல்வங் கல்வி யொருவற்கு
    மாடல்ல மற்றை யவை

    ஒருத்தனுக்கு படிப்பு தான் அழியாத சொத்து. மத்ததெல்லாம் ஒசந்த சொத்து ஆவாது.

    (அடுத்தாப்லையும் வரும்….

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 39

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்

    39. இறை மாட்சி

    குறள் 381:

    படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
    உடையான் அரசரு ளேறு

    வீரம் நெறஞ்ச படை, நாட்டு மேல உசிரா இருக்க சனங்க, கொறையாத செல்வம், நல்ல மந்திரி, அக்கம்பக்கத்து நாட்டோட சினேகம், பலமான அரண் இந்த ஆறு சிறப்பும் இருக்குதவன் தான் அரசர்கள் ல ஆண் சிங்கம் மாதிரி இருக்கவன்.

    குறள் 382:

    அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தற் கியல்பு

    துணிச்சல், இல்லாதவங்களுக்கு கொடுக்கது, புத்திசாலித்தனம், ஊக்கம் இந்த நாலு கொணமும் ராசாக்கு இருக்கணும்.  . .

    குறள் 383:

    தூங்காமை கல்வி துணிவுடைமை அம்மூன்றும்
    நீங்கா நிலனாள் பவற்கு

    எதையும் பைய நேரங்கழிச்சு செய்யாம படிச்ச புத்திசாலியா துணிச்சக்காரனா இருக்கது நாட்ட ஆளுத  ராசாக்கு தேவையான கொணம்.

    குறள் 384:

    அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
    மான முடைய தரசு

    அறநெறி தவறாம குத்தம் கொற செய்யாம வீரத்தோடயும் மானத்தோடயும் ஆட்சி செய்யுதவனே சிறந்த ராசா.

    குறள் 385:

    இயற்றலும் ஈட்டலுங் காத்தலுங் காத்த
    வகுத்தலும் வல்ல தரசு

    பொருள சம்பாதிக்க வழிய உண்டாக்கி பொறவு வந்தத சேத்து வச்சி காப்பாத்தி அத செலவு செய்யதுக்கு நல்ல மொறைல திட்டம்போட்டு ஆட்சி நடத்துதவனே நல்ல ராசா.

    குறள் 386:

    காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
    மீக்கூறும் மன்னன் நிலம்

    பாக்கதுக்கு எளிமையா மனசு நோவ கடுமையா வையாம பேசுத ராசாவத்தான் ஒலகம் புகழும்.

     குறள் 387:

    இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
    தான்கண் டனைத்திவ் வுலகு

    தன்மையா பேசி தேவப்பட்டவங்களுக்கு பொருளக் கொடுத்து காக்குத ராசாவுக்கு நெனச்சதெல்லாம் குடுக்கும் இந்த ஒலகம்.

    குறள் 388:

    முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
    கிறையென்று வைக்கப் படும்

    நியாயதர்மத்தோட ஆட்சி நடத்தி மக்கள காப்பாத்துத ராசா தான் மக்கள் தலைவன் னு மதிக்கப்படுவான்.

    குறள் 389:

    செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
    கவிகைக்கீழ்த் தங்கு முலகு

    கொறைபேசுதவங்க சொல்லுதத கேட்டு காது வலிச்சாலும் பொறுத்துப் போகுத ராசாவுக்கு தான் மக்கள் கிட்ட மதிப்பு இருக்கும்.

    குறள் 390:

    கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
    உடையானாம் வேந்தர்க் கொளி

    தேவப்படுதவங்களுக்கு கொடுத்து , கருண காட்டி, நியாயம் தவறாம ஆட்சி செஞ்சு மக்களக் காப்பாத்துத ராசா தான் ராசாக்கெல்லாம் விளக்கு கணக்கா இருக்கவன்.

    (அடுத்தாப்லையும் வரும்…..

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 38

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 38

    38.ஊழ்

    குறள் 371:

    ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
    போகூழால் தோன்று மடி

    பணம் சேக்கணும் னு விதி இருந்தா அத சேக்கதுக்கு  நாம முனஞ்சி செய்யுவோம். இருக்கதும் கைவிட்டு போவணும் னு விதி இருந்திச்சின்னா சடவு தான் உண்டாவும்.

    குறள் 372:

    பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
    ஆகலூ ழுற்றக் கடை

    தாழ்ந்து போவணும்னு விதி இருந்தா மனுசனுக்கு புத்தி கெட்டுப் போவும். வாழ்க்கைல ஒசரணும்னு விதி இருந்தா புத்திசாலித்தனம் வளரும்.

    குறள் 373:

    நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
    உண்மை யறிவே மிகும்

    ஒருத்தன் எம்புட்டு ஒசந்த புத்தகங்கள வாசிச்சாலும் தலையெழுத்து சரியில்லன்னா அது அவன் மண்டக்குள்ள ஏராம சொந்த புத்தி தான் நெலைக்கும்.

    குறள் 374:

    இருவே றுலகத் தியற்கை திருவேறு
    தெள்ளிய ராதலும் வேறு

    ஒலகத்தோட இயற்கை நிலைங்கது விதியால ரெண்டா இருக்கு. . ஒருத்தர பணக்காரரா ஆக்குததும் இன்னொருத்தர அறிவாளியா ஆக்குததும் தான் அந்த வேத்துமை.

    குறள் 375:

    நல்லவை யெல்லாஅந் தீயவாந் தீயவும்
    நல்லவாஞ் செல்வஞ் செயற்கு

    விதியால நல்லது செய்ய முனையுத சமயம் அது தீமயா முடியுததும்,  தீம செய்ய முனையுதப்போ நல்லதா மாறிக்கிடதும் நடக்கும். . .

    குறள் 376:

    பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
    சொரியினும் போகா தம

    தனக்கு ஒடமையில்லாத பொருள எங்ஙன பொதிஞ்சு வச்சி காத்தாலும் தங்காது. ஒடமையுள்ள பொருள எங்க தொலைச்சாலும் அது விட்டு போவாது.

    குறள் 377:

    வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
    தொகுத்தார்க்குந் துய்த்த லரிது

    முனஞ்சு கோடிச் சொத்து சேத்தாலும் கடவுள் விதிச்ச விதிப்படி தான் அத அனுவிக்க முடியும்.

    குறள் 378:

    துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
    ஊட்டா கழியு மெனின்

    துன்பத்த அனுவிக்கணும் ங்குத விதி ஏழைய தடுக்கலன்னா   ஒண்ணுமில்லாத அவன் துறவி ஆயிருப்பான்.

    குறள் 379:

    நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
    அல்லற் படுவ தெவன்

    நல்லது நடக்குதப்போ நல்லது னு நெனைக்கவங்க தீயது நடக்குதப்போ துக்கப்படுதது ஏன்?

    குறள் 380:

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்

    விதிய விட வலிம னு வேற இல்ல. விதிலேந்து தப்பிச்சிக்கிடலாம்னு நெனச்சி வேற வழில போனாலும் அங்கயும் அது வந்து நிக்கும்.

     

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-37

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-37

    37. அவா அறுத்தல்

    குறள் 361:

    அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
    தவாஅப் பிறப்பீனும் வித்து

    எல்லா உசிருக்கும் எல்லாக் காலத்திலயும் ஓயாம வருத பிறவித் துன்பத்த உண்டாக்கும் விதை தான் ஆச.

    குறள் 362:

    வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
    வேண்டாமை வேண்ட வரும்

    ஒண்ண விரும்புததுக்கு நெனைக்கவன் பொறக்காம இருந்திருக்கலாமோன்னு ரோசன (யோசனை)  பண்ணுத அளவு தொயரம் ஆசய ஒழிக்கலேனா வரும்.

    குறள் 363:

    வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
    ஆண்டும் அஃதொப்ப தில்

    எதிலயும் ஆச இல்லாம இருக்குததுபோல செல்வம் இந்த ஒலகத்துல இல்ல. மத்த எங்கயும் கூட இதுக்கு ஒப்பா ஒண்ணுமில்ல.

    குறள் 364:

    தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
    வாஅய்மை வேண்ட வரும்

    மனத் தூய்மை னு சொல்லுதது மனசுல ஆச இல்லாம இருக்கது. ஆச இல்லாம இருக்கது உண்மைப் பொருள விரும்புதப்போ உண்டாவும்.

    குறள் 365:

    அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
    அற்றாக அற்ற திலர்

    எல்லா ஆசயயும் விட்டவர தான் துறவி ங்குதோம்.  ஆசய முழுசும் விடாதவரு உண்மயான துறவி ஆவமாட்டார். .

    குறள் 366:

    அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
    வஞ்சிப்ப தோரும் அவா

    ஒருத்தன வஞ்சித்து கெடுக்குதது ஆச. அதனால ஆசைக்கு அடிமையாவக் கூடாது னு நெனச்சி பயந்து வாழணும்.

    குறள் 367:

    அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
    தான்வேண்டு மாற்றான் வரும்

    ஒருத்தன் கெட்டுப்போவாம வாழணும்னு நெனச்சாம்னா அவன் ஆசப்படுத கொணத்த மொத்தமா ஒழிச்சுப் போடணும்.

    குறள் 368:

    அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
    தவாஅது மேன்மேல் வரும்

    ஆச இல்லாதவுகளுக்கு துன்பம் வாராது. ஆச உண்டாயிடுச்சின்னா அதுக்கு பொறத்தாலேயே துன்பம் ஓயாம வளய வரும்.

    குறள் 369:

    இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
    துன்பத்துள் துன்பங் கெடின்

    பெருசா துன்பத்த தருத ஆச இல்லாமப் போனா சந்தோசம் சேந்தாப்ல வந்துக்கிட்டேயிருக்கும்.

    குறள் 370:

    ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
    பேரா இயற்கை தரும்

    காலத்துக்கும் முடிவில்லாம இருக்க ஆசய ஒருத்தன் விட்டுபோட்டாம்னா அது அவனுக்கு நெலச்சி நிக்குத மகிழ்ச்சியான வாழ்க்கயக் கொடுக்கும்.

    (அடுத்தாப்லயும் வரும்…

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-36

    36. மெய்யுணர்தல்

    குறள் 351:

    பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
    மருளானாம் மாணாப் பிறப்பு

    பொய்யான ஒண்ண நெசம் னு நெனச்சு நம்பி வாழுதவன் வாழ்க்க சிறப்பா இருக்காது.

    குறள் 352:

    இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
    மாசறு காட்சி யவர்க்கு

    மனசு கொளம்பாம எது உண்ம எது பொய் னு புரிஞ்சிக்கிடுத தன்மைய அடஞ்சவனுக்கு துன்பம் வெலகி மகிழ்ச்சி வந்து சேந்துகிடும்.

    குறள் 353:

    ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
    வான நணிய துடைத்து

    மனசுல ஐயமில்லாம உண்மப் பொருளத் தெரிஞ்சுக்கிட்ட மனுசங்களுக்கு அவுக வாழுத பூமிய விட வான ஒலகம் அருகாமையில இருக்கும்.

    குறள் 354:

    ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
    மெய்யுணர் வில்லா தவர்க்கு

    உண்மையக் கண்டுபிடிக்கத் தெரியாதவுக அவுகளோட மனச அடக்கக் கத்துக்கிட்டிருந்தாலும் அதனால பிரயோசனம் இல்ல.

    குறள் 355:

    எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
    மெய்ப்பொருள் காண்ப தறிவு

    எந்தப் பொருளுன்னாலும் பாக்குததுக்கு எப்டி இருந்துச்சின்னாலும் அதப் பத்தின  நெசத்த தெரிஞ்சிக்கிடதுதான் மெய்யுணர்வு

    குறள் 356:

    கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
    மற்றீண்டு வாரா நெறி

    கத்துக்கிட வேண்டியதெல்லாம் கத்துக்கிட்டு உண்மப் பொருள அறிஞ்சிக்கிட்டவங்க மறுபடி பொறக்காம இருக்குத வழிய அடையுவாக.

    குறள் 357:

    ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
    பேர்த்துள்ள வேண்டா பிறப்பு

    ஒருத்தன் உண்மய ஆஞ்சு அறிஞ்சு உறுதியா உணந்தாம்னா அவனுக்கு திரும்பயும் பொறப்பு இருக்கு னு நெனைக்க வேண்டாம்.   .

    குறள் 358:

    பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
    செம்பொருள் காண்ப தறிவு

    பொறப்பு ங்குத அறியாமைய நீக்குததுக்கு அடுத்த பொறப்பு இல்லாம செய்யுத முக்தி ங்குத நெலைய அடைய ஒதவும் ஒசந்த பொருள கண்டுகிடதுதே மெய்யுணர்வு.

    குறள் 359:

    சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
    சார்தரா சார்தரு நோய்

    எல்லாப் பொருளுக்கும் எடமா இருக்குத மெய்ப்பொருள உணந்து ஒட்டுதல் இல்லாம வாழ்ந்தோம்னா நமக்கு வருத துன்பங்களும் ஒட்டாம வெலகிப்போவும். .

    குறள் 360:

    காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
    நாமங் கெடக்கெடு நோய்

    விருப்பு, வெறுப்பு, அறியாம இந்த மூணுக்கும் எடம் கொடுக்காதவங்கள நெருங்குத துன்பம் அழிஞ்சு போவும்.

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்- 35

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-35

    35. துறவு

    குறள் 341:

    யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
    அதனின் அதனின் அலன்

    ஒருத்தன் எது எதுலேந்தெல்லாம் ஆசப் படாம வெலகுதானோ அந்தந்த பொருள் னால ஏற்படுத துன்பம் அவன அண்டாது.

    குறள் 342:

    வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டியற் பால பல

    துன்பம் அண்டாம வாழணும்னா எல்லாம் நம்ம கிட்ட இருக்குதப்பவே அது மேல இருக்க ஆசய உட்டுறணும். உட்டபொறவு நமக்கு இந்த ஒலகத்துல நெறய மகிழ்ச்சி கெடைக்கும்.

    குறள் 343:

    அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
    வேண்டிய வெல்லாம் ஒருங்கு

    நம்மளோட அஞ்சு புலனை (பாக்குதது, கேக்குதது, சுவைக்குதது, வாசம் பிடிக்குதது, தொடுத உணச்சி) அடக்கி அதுக ஆசப்படுத எல்லாத்தையும் சேந்தாப்ல விட்டுப்போடணும்,

    குறள் 344:

    இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை
    மயலாகும் மற்றும் பெயர்த்து

    துறவிங்களுக்கு எதுலயும் ஆச இருக்கக் கூடாது. ஏதாச்சும் மேல இருந்திச்சின்னா அது திரும்ப புத்திய கெடுத்துப் போடும்.

    குறள் 345:

    மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
    உற்றார்க் குடம்பும் மிகை

    இனிமே பொறக்கவே கூடாது னு நெனைக்க துறவிங்களுக்கு அவுக ஒடம்பே ஒரு சுமை தான். அதுக்கு மேலயும் வேற ஒட்டுஒறவு எதுக்கு?

    குறள் 346:

    யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
    குயர்ந்த உலகம் புகும்

    ஒடம்ப ‘நான்’ னும் சம்பந்தமில்லாத ‘பொருள’ எனது னும் நெனக்க அகராதிய ஒழிச்சவன் தேவர்கள விட ஒசந்த நெலய அடையுவான்.

    குறள் 347:

    பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
    பற்றி விடாஅ தவர்க்கு

    நான்,  என்னோடது ங்குத ஆசையில ஒட்டுதல் வச்சிக்கிட்டு விடாதவங்கள  துன்பமும் விடாம வந்து ஒட்டிக்கிடும்.

    குறள் 348:

    தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
    வலைப்பட்டார் மற்றை யவர்

    அரைகொறயா இல்லாம ஆசய முழுக்க உட்டவங்க தான் ஒசந்த நெலய அடையுவாங்க. அப்டி செய்யாதவங்க அறியாம ங்குத வலைக்குள்ளார சிக்கிக்கிடுவாங்க.

    குறள் 349:

    பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
    நிலையாமை காணப் படும்

    சந்தோசத்துலயும் துக்கத்துலயும் மனசு ஒட்டாம ஒண்ணுபோல வச்சிருந்தாத்தான் பிறவித்துன்பம் ஒழியும்.  இல்லன்னா இந்த ரெண்டும் மாறி மாறி வந்து ஒரு நெலையில இல்லாம சீரளிக்கும்.

    குறள் 350:

    பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
    பற்றுக பற்று விடற்கு

    எதிலயும் ஒட்டு ஒறவு இல்லாம இருக்க கடவுள் மேல ஆச வைக்கணும். அவர் மேல ஆச வைக்குதது நம்மளோட எல்லா ஆசையயும் விட்டு ஒழிக்கத்தான்.

    (அடுத்தாப்லயும் வரும்…..

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 34

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம்-34

    34. நிலையாமை

    குறள் 331:

    நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
    புல்லறி வாண்மை கடை

    நெலச்சி நிக்காத ஒண்ண நெலயானதா நெனைக்க மரமண்ட புத்தி கேடுகெட்டது.

    குறள் 332:

    கூத்தாட் டவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
    போக்கும் அருவிளிந் தற்று

    கொஞ்சம் கொஞ்சமா சொத்து சேருதது கூத்து பாக்க கூட்டம் சேருதது போல, கூத்து முடிஞ்சதும் கூட்டம் கலைஞ்சு போகுதது கணக்கா சொத்தும் பைய பைய கொறஞ்சு ஒண்ணுமில்லாம அழிஞ்சு போவும்.

    குறள் 333:

    அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
    அற்குப ஆங்கே செயல்

    சொத்து எப்பமும் ஒருத்தர்கிட்ட நெலச்சி நிக்காது அதஉணந்து இருக்குதப்போ நெலயான நல்ல காரியத்த செஞ்சுபோடணும்.

    குறள் 334:

    நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
    வாள துணர்வார்ப் பெறின்

    வாழ்க்கைய நல்லா புரிஞ்சிக்கிட்டவங்க நாள் னு சொல்லுதது நம்ம ஆயுச (ஆயுள) அறுத்து கொறச்சிட்டே வருத அருவான்னு (வாள்) அறிஞ்சுகிடுவாங்க.

    குறள் 335:

    நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
    மேற்சென்று செய்யாப் படும்

    நாக்க அடக்கி நாம சாவததுக்கு முன்ன நல்ல அறச்செயல்கள வெரசலா (விரைவாக)  செய்யணும்.

    குறள் 336:

    நெருந லுளனொருவன் இன்றில்லை என்னும்
    பெருமை யுடைத்திவ் வுலகு

    நேத்தைக்கு இருந்தவன் இன்னிக்கு இல்ல ன்னு சொல்லுத நிலையில்லாத தன்ம ங்குத பெருமய கொண்டது இந்த ஒலகம்.

    குறள் 337:

    ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
    கோடியு மல்ல பல

    புத்திகெட்டவன் உசிரோட இருக்குத இந்த ஒடம்பு நெலையில்லாதது னு புரிஞ்சுகிட மாட்டான்.  வீணா அவன் மனசுக்குள்ளார கோடிக்கும் மேல ரோசன (எண்ணங்கள்) ஓடிக்கிட்டே இருக்கும்.

    குறள் 338:

    குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
    உடம்போ டுயிரிடை நட்பு

    ஒடம்புக்கும் உசிருக்கும் உள்ள ஒறவு, முட்டைலேந்து வெளிய வந்த பறவக்குஞ்சு அத உட்டுப்போட்டு வேற எடத்துக்கு பறந்து போகுதது போல.

    குறள் 339:

    உறங்குவது போலுஞ் சாக்கா டுறங்கி
    விழிப்பது போலும் பிறப்பு

    சாவு ங்கது ஒறங்குதது போல. பொறப்பு ங்கது ஒறங்கி கண் முழிப்பு தட்டுதது போல.

    குறள் 340:

    புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
    துச்சி லிருந்த உயிர்க்கு

    ஒடம்புல ஒரு மூலைல குடியிருக்க உசிருக்கு இப்பம் வரைக்கும் நெலச்சு தங்குததுக்கு எடம் கெடைக்கலியோ?

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 33

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 33

    33.கொல்லாமை

    குறள் 321:

    அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
    பிறவினை எல்லாந் தரும்

    அறம் ங்கது என்னன்னா எந்த உசிரயும் கொல்லாம இருக்கது. கொல்லுதது எல்லா பாவத்தையும் குடுக்கும்.

    குறள் 322:

    பகுத்துணடு பல்லுயி ரோம்புதல் நூலோர்
    தொகுத்தவற்று ளெல்லாந் தலை

    இருக்கத பங்குபோட்டு சேந்து சாப்புட்டு பல உசிர காப்பாத்தணும் ங்கது நூல்கள எழுதினவங்க தொகுத்த எல்லா அறத்திலயும் ஒசத்தியா நிக்குத அறம்.

    குறள் 323:

    ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
    பின்சாரப் பொய்யாமை நன்று

    அறங்கள வரிசப்படி வச்சோம்னா மொதல்ல உசிர கொல்லாம இருக்குத கொல்லாமையும் அதுக்கு பொறத்தால பொய் பேசாத பொய்யாமையும் இருக்கும்.

    குறள் 324:

    நல்லா றெனப்படுவது யாதெனின் யாதொன்றுங்
    கொல்லாமை சூழும் நெறி

    நல்ல வழி எதுன்னு கேட்டா எந்த உசிரயும் கொல்லாம இருக்குத அறம் காக்குத வழி தான்.

    குறள் 325:

    நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக்
    கொல்லாமை சூழ்வான் தலை

    ஒலகத்து வாழ்க்கைய வெறுத்த துறவிய விட ஒரு உசிரயும் கொல்லக் கூடாதுனு நெனைக்கவன் தான் ஒசந்தவன்.

    குறள் 326:

    கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
    செல்லா துயிருண்ணுங் கூற்று

    கொலை செய்யாமை ங்குத அறத்தைக் கடைபிடிக்கவனோட பெருமையப் பாத்து சாவு கூட கிட்டத்துல அண்டத் தயங்கும்.

    குறள் 327:

    தன்னுயிர் நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
    தின்னுயிர் நீக்கும் வினை

    தான் சாவப் போறோம் ங்குத நெலமைல அத தடுக்குததுக்காவ கூட மத்தவன் உசிர எடுக்குத செயல செய்யக் கூடாது.

    குறள் 328:

    நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
    கொன்றாகும் ஆக்கங் கடை

    கொல செய்யுததுனால பெரிசா நன்ம கெடைக்கதா இருந்தாலும் படிச்ச பெரிய மனுசங்க அந்த நன்மைய தாழ்த்தியா தான் நெனைப்பாங்க.

    குறள் 329:

    கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
    புன்மை தெரிவா ரகத்து

    கொல செய்யுதத தொழிலா நடத்துதவங்க தன் தப்ப உணந்துகிடலனாலும் அத அறிஞ்ச பெரிய மனுசங்க மனசுக்குள்ளார அவங்க தாழ்த்தியா தான் நெனைக்கப்படுவாங்க.

    குறள் 330:

    உயிருடம்பின் நீக்கியா ரென்ப செயிருடம்பின்
    செல்லாத்தீ வாழ்க்கை யவர்

    காசு பணமில்லாம நோவு நொடியோட கெடந்து சீரளியுதவன் முன்ன பல உசிரக் கொன்ன பாவத்த செஞ்சிருப்பான்னு அறிவாளிங்க சொல்லுதாங்க.

    (அடுத்தாப்லயும் வரும்…

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 32

    நாங்குநேரி  வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 32

    32. இன்னா செய்யாமை

    குறள் 311:

    சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்

    பெரிய சொத்து கெடைக்கும்னாலும் மத்தவங்களுக்கு கெடுதல் செய்ய நெனைய மாட்டாங்க சுத்த மனசுக்காரங்க.

    குறள் 312:

    கறுத்தின்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
    செய்யாமை மாசற்றார் கோள்

    கோவப்பட்டு தீம செஞ்சவங்களுக்கும் பதிலுக்குக் கெடுதல் செய்யாம பொறுத்துக்கிடதுதான் குத்தமில்லாத மனசுக்காரங்களோட கொள்க.

    குறள் 313:

    செய்யாமற் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
    உய்யா விழுமந் தரும்

    நாம சும்மா இருக்கையில வம்புக்கு இழுத்து தொந்தரவு செய்யுதவனுக்கு நாம கெடுதல் செஞ்சோம்னா , செஞ்ச பொறவு அது தப்ப முடியாத அளவு துன்பத்த குடுக்கும்.

    குறள் 314:

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயஞ் செய்து விடல்

    நமக்கு கெடுதல் செஞ்சவங்கள தண்டிக்கணும்னு நெனச்சா பதிலுக்கு அவங்க கூசுத அளவு நல்லத செய்யணும். பொறவு அவுங்க செஞ்ச கெடுதலயும் நாம செஞ்ச நல்லதயும் மறந்து போடணும்.

    குறள் 315:

    அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
    தந்நோய்போற் போற்றாக் கடை

    மத்த உசிரு படுத துன்பத்த தன் துன்பம் போல நெனயாதவனுக்கு புத்தி இருந்து என்ன பிரயோசனம்?

    குறள் 316:

    இன்னா எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
    வேண்டும் பிறன்கட் செயல்

    ஒருத்தன் இது கெடுதல செய்யும் னு வாழ்க்கைல அனுபவிச்சு அறிஞ்சத  மத்தவனுக்கு செய்யாம இருக்கணும்.

    குறள் 317:

    எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
    மாணாசெய் யாமை தலை

    எவ்வளவு சிறிசுன்னாலும்,  யாருக்குன்னாலும்,  எப்பம்னாலும் மனசார கெடுதல் செய்யாம இருக்குதது நல்லது.

    குறள் 318:

    தன்னுயிர்க் கின்னாமை தானறிவான் என்கொலோ
    மன்னுயிர்க் கின்னா செயல்

    இது தான் உசிருக்குத் துன்பத்த கொடுக்குததுனு புரிஞ்சுக்கிட்ட பொறவு அத மத்த உசிருக்கு செய்ய நெனக்குதது என்ன காரணத்தாலோ?

    குறள் 319:

    பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
    பிற்பகல் தாமே வரும்

    காலையில ஒருத்தருக்கு கெடுதல் செஞ்சாம்னா, அவனுக்கு கருக்கல் ல கேடு தானா வந்து சேந்துக்கிடும்.

    குறள் 320:

    நோயெல்லா நோய்செய்தார் மேலவா நோய்செய்யார்
    நோயின்மை வேண்டு பவர்

    செய்யுத எல்லா கெடுதலும் அத செஞ்சவன தான் வந்து சேரும். அதனால துன்பம் இல்லாம வாழ நெனக்கவன் மத்தவங்களுக்கு கெடுதல் செய்யக் கூடாது.

    (அடுத்தாப்லயும் வரும்….

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 31

    -நாங்குநேரி வாசஸ்ரீ 

    31.வெகுளாமை

    குறள் 301:

    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
    காக்கினென் காவாக்கா லென்

    எங்க தன் கோவம் பலிக்குமோ அங்க கோவப்படாம இருக்கவன் தான் கோவத்த கட்டுப்படுத்துதவன்.  எங்க பலிக்காதோ அங்க கோவத்த தடுத்தா என்ன? தடுக்காம விட்டாதான் என்ன?

    குறள் 302:

    செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
    இல்லதனின் தீய பிற

    நம்மள விட எளச்சவங்க கிட்ட கோவப்படுதது கெடுதல குடுக்கும். நம்மள விட பலசாலிகிட்ட கோவப்படுதது மாதிரி கேடும்  வேற இல்ல.

    குறள் 303:

    மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
    பிறத்தல் அதனான் வரும்

    யார் கிட்டயும் கோவப்படாம அத மறந்து விட்டுப்போடணும். ஏம்னா அதனால தீம தான் வெளையும்.

    குறள் 304:

    நகையும் உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
    பகையும் உளவோ பிற

    மொகத்துல சிரிப்பாணியையும் மனசுக்குள்ளார சந்தோசத்தையும் கொல்லுத கோவத்த போல பகையாளி வேற உண்டா?

    குறள் 305:

    தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
    தன்னையே கொல்லுஞ் சினம்

    ஒருத்தன் தன்னயத்தானே காக்க நெனச்சாம்னா அவன் கோவம் வராம பாத்துக்கிடணும். இல்லன்னா கோவம் அவன கொன்னு போடும்.

    குறள் 306:

    சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப் புணையைச் சுடும்

    கோவம் அது இருக்கவன அழிக்குததோட அவனோட சொந்த பந்தத்தையும் சேத்து அழிச்சுப்போடும்.

    குறள் 307:

    சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
    நிலத்தறைந்தான் கைபிழையா தற்று

    கையால ஓங்கி தரையில அடிச்சவனுக்கு அவன் கை தான் வலிக்கும் அப்டிதான் கோவப்படுதவங்களோட நெலமயும்.

    குறள் 308:

    இணரெரி தோய்வன்ன இன்னா செயினும்
    புணரின் வெகுளாமை நன்று

    கொழுந்து விட்டு எரியுத தீ நம்ம மேல படுதது மாதிரி பெருந் தீமய ஒருத்தன் செஞ்சாலும்  கோவப்படாம இருக்க முடியும்னா அது நமக்கு நல்லது.

    குறள் 309:

    உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
    உள்ளான் வெகுளி யெனின்

    மனசுக்குள்ள கோவப்படாம இருக்கணும்னு நெனக்கவனுக்கு அவன் நெனச்சது எல்லாம் கெடச்சு போடும்.

    குறள் 310:

    இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
    துறந்தார் துறந்தார் துணை

    பெருங்கோவக்காரன் செத்தவனுக்கு சமானம்.  கோவமே படாதவங்க துறவிக்கு சமானம்.

    Share