Tag: திவாகர்

  • என்னை நான் தேடித் தேடி.. (சிறுகதை)

    என்னை நான் தேடித் தேடி.. (சிறுகதை)

    திவாகர்

    ஓ.. கொரோனா வந்ததே உங்களுக்குத் தெரியாது என்பதை மறந்துவிட்டு நான் அதையே பேசிண்டிருக்கேன். ஆறு மாசம் ஓடிப்போயிடுச்சு. சரி, விடுங்க..”உங்களை ஆறு மாசம் முன்னாடி ஜாகேஷ்வர்ல பார்த்தப்போ என்னவோ தோணிச்சு, மறுபடியும் இங்கே எங்கேயோ உங்களைப் பார்ப்பேன்னு.. உங்களுக்கும் அப்படிப் பட்டுதா?”

    நான் அவளைப் பார்த்துச் சிரித்தேன்.. கொஞ்சும் மழலைத் தமிழில் இவள் பேசுவது எத்தனை அழகாகக் கேட்கிறது. “இல்லைம்மா! அப்ப நீ பார்க்கறச்சே நான் இருந்த மனநிலை வேற. இப்போ உன்னை அடையாளம் கண்டுபிடிச்சுப் பேசறதே எனக்குப் பெரிசு. ஆனா அடுத்த முறை இங்கே எங்கேயாச்சும் பார்த்தேன்னு வைச்சுக்கோ.. உடனே ஞாபகம் வந்துடும்.”

    அவளும் சிரித்தாள். கள்ளமில்லா சிரிப்பு.. ஆறு மாதம் முன்பு ஜாகேஷ்வரில் அவளைப் பார்த்துப் பேசியதெல்லாம் நினைவுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. பெரிய பணக்காரவீட்டுப் பெண். அம்மா இல்லை இவளுக்கு.. சின்ன வயதில் இருந்து ஹாஸ்டல் வாசம்.. ம்ம்.. இன்னும் என்னென்னவோ சொன்னாளே.. ஓ மறந்துவிட்டேனே.. இந்த சிறிய வயதில் அதுவும் வாழ்க்கையின் அனுபவ வாசலில் நுழையப்போகும் தருணத்தில் அடிக்கடி ஜாகேஷ்வர் வந்துவிடுவாளாம். மாதக் கணக்கில் இருப்பதாகச் சொல்வாள். இந்த மலைப்பக்கம் சுற்றுவட்டாரம் எல்லாம் தெரியும் என்று கூடச் சொன்னாள். இன்னும் ஏதேதோ சொல்லி இருக்கிறாள். நினைவில்லை. அப்போது நான் இருந்த மனநிலையில் இவள் பற்றிய இத்தனை நினைப்புகளும் இன்னமும் என் ஞாபகத்தில் இருப்பதே ஆச்சரியம்தான்.

    ’என்ன ஆண்ட்டி! எதுவும் பேசவே இல்லை.. ஆமாம்.. உங்களை ஆண்ட்டி என்று கூப்பிடலாமா இல்லை அக்கா என்று கூப்பிடட்டுமா?”

    ’வேண்டாம்மா.. என்னை மங்களா என்று எங்கப்பா வெச்ச பேரைச் சொல்லியே கூப்பிடு.. இந்த உறவு முறைல்லாம் எதுக்கப்பா.. உறவுகளை ஒதுக்கிவிட்டுதான் வந்தாச்சே..”

    ”இது நல்லா இருக்கே மங்களா.. மங்களகரமான முகத்துக்கு மங்களம்னுதான் பேர் வெக்கணும். உங்கப்பா செஞ்சது சரி.. எங்கப்பாவுக்கு இதெல்லாம் தெரியாது.. மேடைல வக்கணையா பேசுவார்.. கீழே இறங்கிவந்தா என்ன பேசினார்னு உடனேயே மறந்துடற நல்ல மனசு அவருக்கு. வர்ஷினி’ன்னு பேர் யார் வெச்சுருக்கார்’னு அவருக்கே ஞாபகம் இல்லே.. மங்களா! நீங்க எனக்கு அன்னிக்கு பேசினதெல்லாம் இன்னமும் ஞாபகமிருக்கு. உங்க குடும்பம் ரொம்பப் பெரிசு. ரொம்ப பிளான்லாம் பண்ணிதான் இங்க வந்தீங்கன்னு சொன்னீங்க.. சரிதானே?  பாருங்க.. இந்த மலை இங்கேதான் கொஞ்சம் சமானநிலம். கொஞ்சதூரம் இப்படியே போயிட்டே இருந்தா அப்புறம் பெரிய பள்ளம். அதுக்கு முன்னாடி ஒரு சில குடும்பங்கள் கூட்டமா இருக்கும். சுட்ட கிழங்கு அப்படியே சுடச்சுட கொடுப்பாங்க. நான் போன வருஷம் பார்த்தேன். இப்ப அங்கேயே இருக்காங்களோ இல்லையோ… பார்க்கத்தானே போறோம்..”

    ”ஓ.. வர்ஷினி நான் கொஞ்சதூரம்தான் உன்னோட வருவேன் போல இருக்கே. இந்த மலையிலேர்ந்து கிழக்கே கீழே இறங்கிடுவேன். அங்கயும் ஒரு சின்ன கிராமம் இருக்கு. அங்கதான் எங்க குரு இருக்கார். அவரைப் பார்க்க வரச் சொல்லியிருக்கார். அதனாலதான் இந்தப் பயணம்.”

    ”பரவாயில்லை மங்களா.. நானும் உங்களோட வர்ரேனே.. எனக்கு எந்த ஒரு வேலையும் கிடையாது. இப்படி நடந்துண்டே போவேன். எங்காவது இடம் கிடைச்சா தங்குவேன். போய்க்கொண்டே இருப்பேன். புகலிடம் எங்கேன்னு தெரியலே.. இன்னிக்கு உங்க கூட வரதுல உங்களுக்கு ஏதாச்சும் கஷ்டமா?.”

    சட்டென அவளை நிறுத்தினேன். ”வர்ஷினி.. தாராளமா என்னோட வாம்மா.. எனக்கு எந்த வித கஷ்டமும் இல்லே. உனக்குப் பிடிச்சுதுன்னா எங்க கூடவே தங்கலாம்”

    அவள் குதூகலித்தாள். அந்த குதூகலம் அவள் துள்ளல் நடையில் தெரிந்தது.

    ’மங்களா இந்த ஆறு மாசத்துல  உங்க குடும்ப ஞாபகமே இல்லாம இருக்கீங்களா.. நல்ல வைராக்கியசாலிதான்.. எனக்கு அதெல்லாம் போறாது.. கொஞ்ச நாள் இங்கே வருவேன்.. தைரியமா நடப்பேன்.. எங்கேயாவது வாகான இடம் கிடைச்சால் சாதனா செய்வேன். திடீர்னு ஊர் ஞாபகம் வந்துடுச்சுனா போச்சு.. திரும்பி ஏதாவது ஷார்ட்கட்லே போயி எப்படியாவது ஊருக்குப் போயிடுவேன்.. உங்களை மாதிரி வைராக்கியம் வரணும்னு தேவிகிட்டே இன்னிக்கு சாயந்திரம் வேண்டிக்கிறேன்’.

    “அதென்ன சாயந்திரம்?”

    “அது அப்படித்தான்.. சாயங்காலம்தான் எனக்கே தோணும். வேண்டிக்குவேன்.. உடனே அவளும் நான் கேட்பதையெல்லாம் தந்துடுவாள், ஒரே ஒரு விஷயம் தவிர”

    சிரித்தாள் அவள். உள்ளம் போலவே பளிச்சிட்டன. அந்த ஒரே ஒரு விஷயம் என்ன என்று கேட்கவில்லை. நான் கூட இவளை மாதிரிதானே.. என்னவோ பழைய நினைவுகள் ஒவ்வொன்றாக மனதுள் வலம் வந்தன. அதற்கேற்றாற்போலவே இவளும் கேட்கிறாள். குடும்ப ஞாபகம் வந்ததா என்று இவளுக்கு சொல்லலாமா.. சொல்லலாம்.. கடந்த காலத்தை நினைவுப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

    ”வர்ஷினி.. உன் பெயர் நல்ல பெயர்தான்.. நன்மையே பொழிபவள் என தேவிக்கு வர்ஷினி, வர்ஷா என்பார்கள். எனக்கு என் குடும்ப ஞாபகம் எல்லாம் எப்போதும் இருந்துகொண்டுதான் இருக்கும். பலவந்தமாக மறக்க முயன்றாலும் அதெல்லாம் முடியாதுதான். குடும்ப பந்தம் என்பது சாமான்யமான விஷயம் இல்லைம்மா.. சட்டென அத்தனையும், அத்தனை பந்தங்களையும் உதறிவிட்டு ஓடி வர முடியுமா.. அதுவும் நல்லதொரு குடும்பத்தைக் கட்டிக் காத்து வரும் பெண்ணால் முடியுமா.. அப்படிப்பட்ட கட்டுக்கோப்பான குடும்பப் பெண், அதுவும் பொறுப்புள்ள குடும்பப்பெண் திடீரென காணாமல் போனாள் என்று எல்லோரும் தேடுவார்களே என்ற கவலையும் பயமுமாய் இருப்பவள் இப்படி எல்லாவற்றையும் உதறி வரமுடியும் என் நினைக்கிறாயா.. இல்லையம்மா.. நான் வணங்கும்தேவி அவளருள் குருவின் அருளாய் கட்டளையாக வந்ததாய் எனக்குத் தோன்றியது.. வந்துவிட்டேன். அவ்வளவுதான்.!”

    நிதானமாகத்தான் அவளுக்குச் சொன்னேன். அவளுடன் மெல்ல நடந்துகொண்டே இருக்கும்போதே என் மனம் ஆறு மாதங்களுக்கு முன்னால் நடந்ததையெல்லாம் அசை போட ஆரம்பித்துவிட்டதுதான். மனம் தூண்டப்பட்டாலும் கூட மனத்தை அடக்கும் சக்தியை என்றாவது ஒருநாள் தேவி அருளத்தான் செய்வாள். அதுவரை மனம் தன் இஷ்டப்படி எதை வேண்டுமானாலும் நினைக்கட்டுமே..

    உண்மைதானே.. என்னால் எப்படி அத்தனை உறவுகளையும் ஒரே நாளில் சட்டென உதறி வரமுடியும்? அந்த நாளுக்காகவே ஒரு வருடமாக நான் காத்திருந்தேனே.. என்ன குறையை எனக்கு என் வாழ்வில் வைத்தாள் என் தேவி. எதுவும் இல்லையே.. ஆரோக்கியமான கணவன், இரண்டு பிள்ளைகள், ஒரு பெண் எல்லோருமே என்னுடன் அன்று வரை பிரியமாகத்தானே இருந்தார்கள். கணவர் அவருக்கு உலகத்தின் உண்மை சொரூபம் தெரியாதோ இல்லை தெரிந்தாலும் அலட்சியப்படுத்தும் மனநிலையோ.. கொஞ்சம் படாடோபக்காரர்தானே.. தான் எப்போதும் செல்வச் செழிப்போடு, வளமான ஆரோக்கியமாக இருக்கவேண்டும், மற்றவர்களின் விஷயத்தில் தலையிடுவது என்பதை எப்போதும் விரும்பமாட்டார். தான் உண்டு தன் ஷட்டில்காக் விளையாட்டு உண்டு,  படிக்கிறாரோ இல்லையோ ஆனால் கையில் எப்போதும் ஆங்கில புதினங்கள் உண்டு, தன் பணக்கார நண்பர்களோடு அரசியல் பேசிக்கொண்டும், ஹாஹாவென பெரிதாகக் கத்திச் சிரித்துக்கொண்டும் கொண்டாடிக்கொண்டும், மற்றவர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என எவ்விதக் கவலையுமில்லாமல் வாழ்ந்து வருபவர். அப்படிப்பட்டவர் திடீரென நான் கோயிலுக்கு அந்தக் கடைசி நாள் போகும்போது கூடவே தானும் வருவதாக பிடிவாதமாக காரில் ஏற்றிக்கொண்டு போனாரே…

    நான் காரில் கோயில் செல்வது இல்லை. வீட்டில் இருந்து சரியாக ஐந்து கிலோமீட்டர் தூரம் உள்ள என் தேவியின் கோயிலுக்கு நடந்தே தினம் செல்வேன். சரியாக ஒன்றேகால் மணிநேரம் ஆகும். அதைப் போல அங்கே பொது தரிசனம்தான் செய்வேன். அங்கேயே ஏறத்தாழ ஒருமணி நேரம் ஆகும். ஒரு சில நாட்கள் இன்னும் தாமதமானாலும் கூட பொறுமையாக இருந்து அவளைத் தரிசனம் செய்வேன். தட்டில் போடும் அந்த பத்து ரூபாய்தான் மொத்த செலவு. மறுபடி திரும்பி வரும்போது நடைதான். ஒன்றேகால் மணி நேரம்.. இது என் நித்திய வேலை வீட்டிலே கூட எல்லோருக்கும் தெரியும்தான். அவர்களுக்கும் பழகிவிட்டது. ஆனால் இவரென்ன காரில் போகவேண்டுமென்று சொல்கிறார். சரி, இன்று கடைசி நாள். தேவியின் திருவுள்ளம் கணவரோடு ஒருநாள் சேர்ந்து வர வேண்டுமென்றிருக்கிறது போலும். வாழ்நாளில் இவரோடு ஒருநாள் கூட சேர்ந்து கோயிலுக்குச் சென்றதே இல்லையே..

    அவரே காரை ஓட்டினார். பத்தே நிமிஷத்தில் கோயில் வந்தோம். பெரிய மாலையை வாங்கிக்கொண்டார். தலையை நிமிர்த்தி ஒரு தனவந்தருக்கான தோரணையோடு கையில் மாலையோடு சென்றவரை அங்குள்ளோர் வியப்பாக பார்த்திருக்கலாம். சிறப்பு டிக்கெட் எடுத்துக் கொண்டார். முன்னூறு ரூபாய் கொடுத்தால் தேவியின் அருகாமைக்குக் கொண்டு சென்று காண்பிப்பார்கள்தான். ஆனால் நான் அப்படிப் பழகவில்லை. சாதாரண பக்தையாகத்தானே இத்தனை நாள் சென்றவள். ஏனோ தேவியை அருகே பார்ப்பதை விட வழக்கப்படி  சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் என்ன என்று மனதுக்குள் தோன்றியது. ஆனால் இவரோ கையைக் கூப்பியபடி தேவியைக் கும்பிட்டார். வீட்டில் பூஜை அறைப் பக்கம் தலை வைத்துப் படுக்காதவர். எனக்கு அதிசயமாகத்தான் இருந்தது. ஏதும் பேசவில்லை. தேவியையே பார்த்துக்கொண்டிருந்தேன். அர்ச்சகர் வந்ததும் எங்களை தடபுலடாகக் கவனித்தார். பெரிய மாலையை வாங்கிக்கொண்டார். கோத்திரம் கேட்டார்.. இவருக்கு அதெல்லாம் சொல்லத் தெரியாது. நானே சொன்னேன். உள்ளே சென்று மாலை சார்த்தி அட்டகாசமாக ஸ்தோத்திரம் சொல்லி பூஜை செய்தவர் அம்பாளின் மேல் சார்த்தியிருந்த அந்தப் பெரிய மாலையைக் கஷ்டப்பட்டு எடுத்தார். கொஞ்சம் மல்லிகைச் சரத்தையும் எடுத்துக் கொண்டு எங்களிடம் வந்தார். பெரிய குரலில் ஆசீர்வசனம் சொல்லி அந்தப் பெரிய மாலையை என் கணவர் கழுத்தில் போட்டார். எனக்கு மல்லிகைச் சரத்தைக் கொடுத்தார். இவர் தன் பர்ஸிலிருந்து இரண்டு புது ஐந்நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து அர்ச்சகர் தட்டில் வைத்தார். அர்ச்சகர் கண்கள் பெரிதாகின. சௌஜன்யமாக எங்களைப் பற்றி விசாரித்தார். அடிக்கடி கோயிலுக்கு வரவேண்டும் என்று என்னிடம் ஆதரவாகப் பேசினார். எனக்குச் சிரிப்புதான் உள்ளுக்குள் வந்தது. நிதம் வருகிறேன். சாதாரணமான  பக்தர்களுடன் வருகிறேன். பத்து ரூபாய் போடுகிறேன். ஆனால் நான் போடுவதைப் பல சமயங்களில் அவர் பார்ப்பது கூட கிடையாது. குங்குமம். மட்டும் அவர் கையிலிருந்து எங்கள் கைகளில் போட்டுக்கொண்டே வருவார். ’சீக்கிரம் நகருங்கோ, தரிசனம் ஆயிடுத்து இல்லையா.. பின்னாடி நிறைய பேர் இருக்காங்களே.’. என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அப்படிப்பட்டவர் இன்று எங்களுக்கு ஆசீர்வசனம் மாலை போட்டு மரியாதை தருவதோடு என்னையும் நித்யம் வருமாறு அழைக்கிறார். இவர் கவனமே இப்போதுதான் என் மீது விழுந்தது. இருக்கட்டும்.

    கோயிலைச் சுற்றி வந்த என் கணவர் அங்கே பக்தர்கள் அதிகம் கூடாத ஒரு இடம் பார்த்து சப்பணம் போட்டு உட்கார்ந்துகொண்டார். என்னை அங்கே உட்காரச் சொல்லி சைகை செய்தார்.

    ”மங்களா, ஏதோ சின்ன வயசுல கோயிலுக்கு வந்திருக்கேன். கல்யாணம் ஆனதிலேர்ந்து உன் கூட கோயிலுக்குன்னு வந்தது இல்லேதான். ஆனாலும் இன்னிக்கு ஏன் வந்தேன்னா ஒரு காரணம் இருக்கு. அந்தக் காரணமே நீதான்”.

    என்ன இவருக்கு எல்லாம் தெரிந்து விட்டதா.. நான் நாளைக் காலை வண்டிக்கு டில்லிக்கு ஒரு குழுவோடு பிரயாணம் செய்வது தெரிந்து விட்டதோ.. அங்கிருந்து ஜாகேஷ்வர் செல்கிறோம். அந்த யாத்திரை விஷயத்தை நான் யாரிடமும் சொல்லவில்லை. குழுவுடன் ஜாகேஷ்வர் வரைதான் என் பயணம். அதற்கடுத்த பயணம் எனக்கே தெரியாதே. தேவியை நம்பித்தானே செல்கிறேன். சென்றவருடம் சென்றபோதுதான் அந்தக் கட்டளை  எனக்கே வந்தது என்ற உண்மையை இவரிடம் சொல்லிவிடலாமா?

    சென்ற வருடம் எனக்கு ஏற்பட்ட ஒரு அபூர்வ அனுபவம்தான் இந்த அபூர்வ நிகழ்ச்சிக்கும் வித்திட்டது, ஜாகேஷ்வரில் நான் இருந்த அந்த ஒரு வாரத்தின் கடைசி நாளில்தான் அவர் தரிசனம் கிடைத்தது. என்னை விட வயதில் இளையவர்தான் எனினும் என்னைப் பார்த்ததும் தனிக் கனிவோடு பேசினார். அவர் முகத்தில் இருந்த காந்த ஒளியை என்னால் வர்ணிக்கவே முடியாது. அவர் பேச்சு உடனடியாக என்னை ஈர்த்தது. குருவானவர் எப்படி எந்த உருவில் வேண்டுமானாலும் வருவார் என்று சூசகமாகச் சொன்னவர் என்னை நானே தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார். ’இங்கேயே இருந்து விடுவாயா’ என்று கேட்டார்’. மனதுக்குள் ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி. ’உடனே ஒப்புக்கொள்’ என்றது மனம். ஆனால் வாய் மட்டும் கொஞ்சம் கால அவகாசம் கேட்டது. ’சரி ஒரு வருடம் உன்னைத் தயார் படுத்திக்கொண்டு வந்து விடு. நீ வரவேண்டிய நேரம்கூட சரியாக அமையும்தான்’ என்று ஆசிர்வதித்துப் போனவர் திரும்பி வந்து ’நான் உன்னைக் கண்காணித்துக் கொண்டே இருப்பேன். கவலையே பட வேண்டாம். தேவியின் அருள் உனக்கு உண்டு’ என்றார். இந்த ஒருவருடம் என்னை நானே ஒவ்வொரு கணமும் தயார்படுத்திக்கொண்டேன். அனுதினமும் இரவில் சாதனா செய்தேன். அவ்வப்போது நான் ஏதாவது மனதுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டும் சந்தேகம் எழுப்பிக்கொண்டும் இருக்கும்போது கூட அதற்கேற்றாற்போல சமாதானமும் அதே மனதுள் கிடைக்கும். சென்ற வருட நிகழ்வை நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்ல. இவரிடமும் கூட.

    நாளைய பயணத்தையும் இவரிடமும் சொல்லவில்லை. தேவையில்லை என்று மனம் உறுதியாகக் கூறியதால் நான் வீட்டில் கூட யாரிடமும் எதையும் பகிர்ந்து கொள்ளவில்லை. தேவி அவள் பார்த்துக் கொள்வாள். என் மனதில் இருந்து ஆட்டுவிக்கும் குரு பார்த்துக் கொள்வார்.

    இத்தனைக்கும் சென்றவருடம் இந்த ஊர் கோஷ்டியோடு நான் ஜாகேஷ்வரம் செல்லும்போது எல்லோருக்கும்  சொல்லிவிட்டுத்தானே சென்றேன். காரில் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை இவர் வந்து வழி அனுப்பி வைத்தாரே. நான் திரும்பி வரும்போது கூட காத்திருந்து அழைத்து வந்தாரே.. ஒருவேளை நான் எப்போது திரும்புவேன் என்று இப்போது இவர் கேட்டால் என்ன சொல்வது?

    ஆனால் கணவர் என் சிந்தனைகளை சீண்டவில்லை. “நான் உன்னிடம் வீட்டில் சரியாகப் பேசக்கூட முடிவதில்லை. உனக்குதான் தெரியுமே.. என் வேலையே தனி.. நான் உண்டு, என் வேலையுண்டு என்றுதானே இருப்பேன். இரண்டு நாள் முன்புதான் சேதி தெரிந்தது.. நேத்திக்கே உன்னிடம் பேசணும்னு நினைச்சேன். ஆனால் நேத்துக் காலைலேயே எழுந்து வழக்கம்போல கோயில் கிளம்பிப் போயிட்டே.. நீ வரும்போது நான் இல்லே. நேத்துப் பார்த்து ஒரே நண்பர்கள் தகராறு. அதுலேயே டைம் பாஸ் பண்ணிட்டேன். ராத்திரி படுக்கவரச்சே லேட்டாயிடுச்சு. சரி, கார்த்தாலே கோயிலுக்கு நானும்தான் உன்னோடு போகலாமேன்னு ஒருநாள் ஷட்டில்காக் விளையாட்டை விட்டுட்டு இதோ உன்கூட உட்கார்ந்திருக்கேன்.. சரி சொல்லு.. ஏன் இப்படி செய்தே.. பொண்ணு அழுதுண்டே உருகிப்போய் சொல்லறச்சே என் மனசு கூட கஷ்டமா இருக்கு.!’”

    ஓ.. இவ்வளவுதானா.. அதாவது என்னிடம் இருந்த நாற்பது லட்சம் ரூபாய் வைப்பு நிதியை அவளுக்கு எழுதிக் கொடுத்துவிட்டேன். அவள் புருஷன் ஏதோ பிஸினெஸ் பண்ண ஆசைப்பட்டான் என்றாலும் இது அதிகம் என்று எனக்குத் தெரியும். ஆனால் அந்தப் பணத்தையெல்லாம் நான் இனி என்ன செய்யப் போகிறேன். சந்தர்ப்பம் சரியாக அமைந்தது. தேவையும் சரியெனப் பட்டது. இருந்த பணத்தையெல்லாம் கொடுத்துவிட்டேன். அவ்வளவுதான். இதை எப்படி சொல்வது.. இவரிடம். மகளே சொல்லியிருப்பாளே..

    அவரும் அதைத்தான் சொன்னார். ”மங்களா.. அவங்க பிஸினஸுக்குத் தேவை என்றால் ஒரு பத்து லட்சம் கொடுத்திருக்கலாம். இல்லை நான் இருக்கிறேனே. என்னிடம் கேட்டால் ஏதாவது செய்வேனே.. எனக்கு அறுபத்தெட்டு வயசாகிறது. உனக்கும் அறுபத்து நாலு வரப் போகுது. எட்டு வருடம் முன்பு உன் எதிர்கால வாழ்வில் ஒரு வேளை நான் முன்னாடி போய்ச் சேர்ந்துவிட்டால் உனக்கென்று பணம் இருக்கணும், அது உன்னை வைத்துக் காப்பாத்தும் என்கிற நம்பிக்கையினால்தான் அந்த நாற்பது லட்சம் டிபாசிட் செய்தேன். இன்று அதன் மதிப்பு எண்பது லட்சமாக்கும், அப்படியே உன் பொண்ணுக்கு மாற்றிக் கொடுத்துவிட்டாயே.. சரி போகட்டும் நாளை உன் பேரில் இருபது லட்சம் டிபாசிட் செய்கிறேன். அது உன்னுடைய தனிப்பட்ட எதிர்காலத்துக்காகத்தான். நான் இருக்கும் வரை உனக்கு எந்தக் கவலையுமில்லை. இதோ பார்.. ஒன்றை ஞாபகம் வைத்துக்கொள். பணம் மட்டுமே உன்னைக் காப்பாத்தும். இந்த மகன் மகள் உறவு எல்லாம் உன் கடைசி காலத்தில் உதவமாட்டார்கள். என்ன.. சொல்லறது புரிஞ்சுதா?”

    நான் சிரித்தேன். ”எனக்காக எதையும் செய்யவேண்டாம்.. செஞ்சதெல்லாம் மனநிறைவோடு நீங்கள் செய்தீர்கள். நானும் அதே மனநிறைவோடுதான் கொடுத்தேன்..”

    திடீரென என் கழுத்தைப் பார்த்தார், சற்று அதிர்ச்சியானார். “உன் தாலிச் செயின் எங்கே.. செக்யூரிட்டின்னு உள்ளே கழட்டி வைத்துவிட்டாயா? ஐய்யோ இந்த மஞ்சள் கயிறு எல்லா நல்லாவே இல்லே.. தாலிச்செயின் பத்து சவரனாக்கும். .அது வேணாம்னா  ரெண்டு சவரன்லயாவது சின்ன சங்கிலி போட்டிருக்கலாம்.. உன் மோதிரம் வளையல்லாம் எங்கே?.. உடம்புல பொட்டு தங்கம் இல்லாம உன்னை இப்படிப் பாக்கறது என்னால தாங்க முடியலே.. யாராவது தெரிஞ்சவங்க உன்னையும் என்னையும் சேர்த்துப் பார்த்தா அவ்வளவுதான்.. என் மானமே போயிடும்.. ஏன் இப்படி பண்றே?”

    ”இப்போ எதுக்குங்க அதெல்லாம் கேட்கறீங்க? எல்லாம் ஜாக்கிரதையாதான் இருக்கு.!” நான் மருமகளிடம் கொடுத்து அவள் பீரோவில் ஜாக்கிரதையாக என் நகைகளை வைக்கும்படி சொன்னதைச் சொல்லவில்லை.

    அவர் கொஞ்சம் ஆசுவாசப்பட்டார். ‘எங்கே அதையும் உன் மகளுக்குக் கொடுத்திட்டியோன்னு நினைச்சேன். வெளிலே நடந்து போகறச்சே நகை போட்டா பாதுகாப்பில்லேதான். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் நகையைப் போட்டுக்கறது பெண்பிள்ளைகளுக்கு நல்லதுதான். ஏதோ சொல்லிட்டேன்.. நாளைலேர்ந்து கழுத்துல காதுல நகையைப் போட்டுண்டு என் காரை எடுத்துண்டு கோயிலுக்கு வா.. இப்போ நமக்குக் கிடைத்த மரியாதையை பார்த்தியா.. நீ பொதுபக்தர்களோட வரதுன்னாலே அவருக்கு அடையாளம் தெரியலே.. நாம் கொஞ்சம் பகட்டா காண்பிச்சாதான் இந்த உலகத்துல மதிப்பு. பத்துரூபாயெல்லாம் போடாதே.. குறைஞ்சது நூறு ரூபாயாவது போடு. சிறப்பு டிக்கெட் எடுத்துக்கோ.. இதெல்லாம் இனிமே என் பணத்துலேயே செலவு செஞ்சுக்கோ.. தெரியறதா.. சொல்லிட்டேன்.”

    சொன்னவர் ஏதோ கணக்குப் போட்டார். ”என்ன செலவாயிடப்போகுது? மிஞ்சிப் போனா தினம் ஐந்நூறு ரூபாய் ஆகும்.. மாசத்துக்கு பதினஞ்சாயிரம் ஆகும்.. ஆகட்டுமே!” குரலில் சுரத்து அவ்வளவாக இல்லைதான்.

    சிரித்தேன் அவரைப் பார்த்து. “ஒரு வருஷமா தினம் கோயிலுக்கு நாள் தவறாம வர்ரேன். நீங்க சொல்லறபடி கார்ல வந்து சிறப்பு டிக்கெட் வாங்கி கிட்டக்கப் போய் தர்சனம் பண்ணி, தட்டுலயும் நூறு ரூபாய் போட்டேன்னா இப்ப வரைக்குமே என்னாலே கிட்டதட்ட ரெண்டு லட்சம் ரூபாய் செலவு ஆகியிருக்குமே.. கவலை வேண்டாமே.. நான் வழக்கப்படிப் போய்க்கறேன்”

    ஒரு முறை ஏளனமாக என்னை ஒரு ஓரப்பார்வை பார்த்தார். ஆனால் அவர் குரலில் ஒரு நிம்மதி இப்போது தெரிந்தது. “சரி மங்களா.. ஏதோ உன் நல்லதுக்கு சொன்னேன், உன் இஷ்டம். நான் என்னிக்காவது உன் வேலையிலே தலையிட்டிருக்கிறேனோ.. நீயும் அப்படித்தான்.. எனக்குத் தெரியும். இருந்தாலும் புருஷன் தன் கடமையை ஒழுங்காகச் செய்யணும். அதுவும் பண விஷயத்தில் சரியாச் செய்யணும். நாளைக்கு பணம் ஒண்ணே காப்பாத்தும்.. ஞாபகம் வெச்சுக்கோ”.

    எழுந்துகொண்டார். அப்போதுதான் ஒன்று கவனித்தேன். நான் நிதமும் இந்தக் கோயில் வரும்போது தலைவாசலில் இருந்து என் வாய் அவள் நாமத்தையே முணுமுணுத்துகொண்டே இருக்கும். திரும்பும்போதும் அதே தலைவாசலில் அந்த நாமத்தினை முடித்துவிட்டு அவளுக்கு ஒரு நமஸ்காரமும் செய்துவிட்டு மனம் நிம்மதியோடு வெளியே வந்து நடை போட ஆரம்பிப்பேன். ஆனால் இன்று பார்த்து இப்போது வரை ஒரு முறை கூட என் வாயில் அவள் பெயரே வரவில்லை. எத்தனை அருகிலிருந்து அவளைத் தரிசித்தேன். ஊம்ஹூம்.. இல்லை. அவளை நான் கூப்பிடவே இல்லை. தேவி அப்படி என்னைக் கூப்பிட வைக்கவில்லை.. தாயே இது என்ன கொடுமை.. உடனடியாக நாவில் அவள் நாமம் சொல்லிக்கொண்டே தலைவாசல் வரை சென்று அவளுக்கு நமஸ்கரித்துவிட்டு வெளியே அவருடன் வந்தேன். காரில் வீடு சென்றோம். ஏதோ அவரின் தலையாய கடமை ஒன்று முடித்து விட்ட திருப்தியில் அவர் வேலைகளைப் பார்க்க சென்றுவிட்டார்.

    அடுத்த நாள் காலைப் பயணம். ஒரு பூஜைப் பையில் என்னுடைய ஜீன்ஸ் பேண்ட் ஒன்றும் ஒரு முழுக்கை காக்கிச் சட்டையும் வைத்துக்கொண்டேன். இந்த டிரஸ் மூன்றாம் வருடம் லண்டனில் இருக்கும் மகனைப் பார்க்கப்போன போது விமானப் பயணத்துக்கு சுலபமானது என்று வாங்கித் தந்தான்.. இங்கிருந்து ஆட்டோவுக்கு முந்நூறு ரூபாய் தேவைப்படும். ஐந்நூறு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்துக் கொண்டேன். என் பீரோவில் மீதி இருந்த ரொக்கத்தையெல்லாம் மருமகளிடம் கொடுத்து வழக்கப்படி அவள் பீரோவில் வைக்கச் சொன்னேன். ஆச்சரியமாகப் பார்த்தாள்.. ஆனாலும் சொன்னபடி செய்தாள். சாப்பிட்டேன். இரவு தேவியை நினைத்து வழக்கப்படி செய்யும் சாதனாவை செய்துவிட்டுத் தூங்கினேன். காலை குளித்துவிட்டு வழக்கம்போல் அந்த பூஜைப் பையை கையில் எடுத்துக் கொண்டு கிளம்பினேன்.

    பேரன் எதிரே வந்தான். ‘என்ன பாட்டி! ஜாலியா கையை வீசிண்டே கோயிலுக்கு தினம் வாக்கிங் போவே.. இன்னிக்கு என்ன புதுசா கையிலே பை?. தேங்காய்ப் பழமா?’ என்று கேட்டான். அத்தோடு இல்லாமல் புதிதாக கையில் ஒரு சாக்லேட் கொடுத்தான். ’ரோடுல போகறச்சே சாப்பிடு. திடீர்னு சுகர் ஏறினா குறையும்’னு சொல்லி சிரித்தான். வாங்கிக்கொண்டேன். இந்தக் காலத்தில் சின்னப்பசங்களுக்கெல்லாம் அறிவு ஜாஸ்திதான்.

    ”எனக்கு சாக்லேட் கொடுத்தே இல்லே.. பதிலுக்கு இந்த என்னோட மொபைல் போன் எடுத்து வெச்சுக்கோ.”

    ”ஐய்யோ பாட்டி! வேணவே வேணாம்’. என்று மறுத்துக்கொண்டே அவன் நீட்டிய கையில் அந்த கைபேசியை கெட்டியாக அழுத்திக் கொடுத்தேன்.

    ”பாட்டி, எனக்கே எனக்கா?” சந்தேகத்தோடு கேட்டான். சிரித்தேன் நான். ”ஆமாம்.. நீயே வெச்சுக்கோ!” அவனுக்குப் பரம சந்தோஷம். எனக்கும்தான். என் கடைசித் தொடர்பையும் துண்டித்தாயிற்று. “ஆஹா.. ஒரே ஒரு சாக்லெட்டுக்கு ஆப்பிள் போன் கொடுத்திருக்கே.. நீ ரொம்ப கிரேட் பாட்டி..”

    ”ஆனா இது மூணு வருஷம் முந்தைய ஆப்பிள் மாடல்!”

    ”பாட்டி.. மரத்துல ஆப்பிள் எப்போ காய்ச்சினா என்ன?.. நம்ம கையிலே வரச்சே அது பளபளன்னு அழகா பழமா ருசியா இருந்தா போதும்.. ரொம்ப தேங்க்ஸ்.” சொல்லிவிட்டு அதை நோண்ட ஆரம்பித்துவிட்டான். பத்து வயசுப் பையன் சர்வ சாதாரணமாக ஒரு யதார்த்தத்தை அழகாகச் சொல்லியவன் எனக்கு கையைக் காட்டி வழி அனுப்பினான். ”கோயிலுக்கு போயிட்டு வந்தவுடன் திருப்பிக் கேட்கமாட்டே இல்லே?”

    ”இது உனக்கே உனக்குதான்”. நிதானமாக சொல்லிவிட்டு நடையைக் கட்டினேன். சாலையில் சென்ற ஆட்டோவைப் பிடித்து சென்ட்ரல் ரயில் நிலையம் வந்து அங்கிருந்த ஜாகேஷ்வர் பக்திக் கும்பலோடு சேர்ந்துகொண்டேன். ஏற்கனவே ரயில் பயணம் மற்ற ஏற்பாடுகளுக்கெல்லாம் பணம் கட்டிவிட்டதால் நன்றாகவே கவனித்துக் கொண்டார்கள்.

    ஜாகேஷ்வர் வந்தவுடன் சூசகமாக என்னுடன் வந்த தெரிந்த இருவரிடம் நான் திரும்ப அவர்களுடன் வரப் போவதில்லை என்பதையும் அவர்கள் ஊர் திரும்பியதும் என் வீட்டாரிடம் சொல்லிவிடலாம் என்றும் சொன்னேன். அவர்கள் ஆச்சரியமாக என்னைப் பார்த்தார்கள். ஏதேனும் குடும்பப் பிரச்னையா என்று ஒருவர் மெல்லக் கேட்டார். ’அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஜாகேஷ்வரில் ஒரு சில மாதம் இருப்பேன். அதன் பிறகு எதுவும் சொல்வதற்கில்லை’ என்று மட்டும் சொன்னேன். ஆனால் அவர் அவசரக்குடுக்கை போலும். தன் கைபேசியின் மூலம் உடனடியாக என் வீட்டுக்குப் பேசிவிட்டார். அவர்களும் பதட்டப்பட்டார்கள் என்பது அவர் பேசிய முகபாவத்திலிருந்தே தெரிந்தது. ’உங்களிடம் ஒருமுறை பேசவேண்டும் நீங்கள் வீடு திரும்பவில்லை என்றதும் எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிறார்கள்.. நீங்கள் ஜாகேஷ்வர் பயணத்தையே சொல்லவில்லையா’ என்று கேட்டார். கொஞ்சம் உங்கள் மகனிடம் பேசுங்கள்’ என்றார். நான் பேச மறுத்து விட்டேன். மேலும் யாரும் இங்கே என்னைத் தேடி வரத் தேவையில்லை என்றும் ஜாகேஷ்வரில் கூட நான் தங்கப்போவதில்லை என்பதையும் சொல்லிவிட்டேன். ஆச்சரியமாக அவருக்குப் பதில் செய்தி கிடைத்தது. அம்மாவின் மனது புரிகின்றது, அம்மாவின் நலம்தான் முக்கியம் என்றும் அம்மாவை சில நாட்களோ அல்லது ஒரு மாதமோ தங்கவைப்பதில் ஆட்சேபணை இல்லை என்றும் அம்மா திரும்பி வரும்போது ஒரு தகவல் மட்டும் சொன்னால் போதும், தாங்களே அங்கே வந்து அழைத்துச் செல்வதாகவும் சொல்லிவிட்டார்கள். அவர்கள் என்னைப் பற்றி நன்கு அறிந்தவர்கள். அம்மாவின் ஆன்மீக ஆசைக்குக் குறுக்கே நிற்கவும் மாட்டார்கள். அதே சமயம் என்னைப் பிரியவும் சம்மதிக்கமாட்டார்கள். ஆனால் இவர்கள், இந்தக் குழுவினர் இனி இதைப் பற்றிப் பேசமாட்டார்கள்.

    இங்கேதான் அமைதியான இந்த அழகிய பெண் வர்ஷினியைப் பார்த்தேன். இவளுடன் எப்படி பரிச்சயம் ஆரம்பம் என்பது நினைவில்லை என்ற அளவுக்கு பூர்வஜன்ம பழக்கம் போல எங்கள் பரிச்சயம் அமைந்தது. அங்கு இருந்தவரை என்னுடன் ஒட்டிக்கொண்டு என்னோடு ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள். ஏனைய நேரம் என்னைப் போலவே சாதனா செய்ய ஆரம்பித்துவிடுவாள். அதிசயமான பெண். ஒருவாரம் இருந்து அவர்களிடம் பிரிந்து எங்கே போவது என்று முழித்தது வாஸ்தவம்தான். ஆனால் சரியாக எல்லோரும் போன இரண்டாம் நாளே என் வழிகாட்டியை என் தேவி அனுப்பி வைத்துவிட்டாள். அவருக்கும் பரம சந்தோஷம். ‘பழம் ஒன்று பழுத்து தானே அதைப் பரமானந்தமாய் ருசிக்க வந்துவிட்டது’ என்றார். அன்று முதல் அவரோடும் அவர் இல்லாமலும் இந்த மலைப் பகுதியில் நானே என் தேடல் முடிந்த திருப்தியோடு இங்கு திரிந்துகொண்டிருக்கிறேன். ஆனால் இந்த நிம்மதிக்கு ஒரு அளவே இல்லை.

    ”என்ன வர்ஷினி.. போதுமா என் பூர்வ கதை.. இன்னும் என் கல்யாணத்திலிருந்து ஆரம்பிக்கட்டுமா?”

    அவள் தீர்க்காலோசனையில் ஆழ்ந்துவிட்டாள் போலும். திடீரென விழித்துக்கொண்டவள் கண்களில் கண்ணீர் வந்தது.

    நான் பதறிவிட்டேன். ”ஏனம்மா.. ஏன் அழுகிறாய்? என் கதை அழுகைக் கதையா என்ன.. ஜாலியாக கேட்க வேண்டிய கதை.. என்னால் யாருக்கும் கஷ்டமோ நஷ்டமோ இல்லை பார்த்தாயா.. இன்னொன்றும் தோணுகிறது. என் வீட்டவர்கள் ஏன் என்னைத் தேடி வரவில்லை என்றால் நீ சொன்ன கரோனாவும் காரணம் இருக்கலாம் இல்லையா. நான் எங்கோ ஜாலியாக இந்தப் பயமே இல்லாமல் இருப்பது நல்லது என்று அவர்கள் நினைத்திருக்க வாய்ப்புண்டு”.

    வர்ஷா கண்களைத் துடைத்துக்கொண்டே சொன்னாள். ‘மங்களா.. உங்க தேடல் இங்கே முடிஞ்சா மாதிரி என் தேடலும் இங்கேதான் முடியணும் நு எனக்கு ஆசி கொடுங்க..”

    ’அதுக்கு என்னம்மா.. என்னோட பரிபூரண ஆசி எப்போதும் உனக்கு இருக்கும். அதுக்கு எதுக்கும்மா அழுகை..?”

    அவள் சற்று நிதானித்தாள். நடை கொஞ்சம் தளர்ந்தது போல பட்டது. ”உன் தேடலுக்கு என் உதவி தேவைன்னா என்னால என்ன முடியுமோ அதைச் செய்யறேன் வர்ஷினி.. உன்னை நான் எப்பவுமே சிரிச்ச முகத்தோடதான் பார்க்கணும். உன் தேடல்னா அது என்ன வகையானது சொல்லேன்’

    அவள் என்னோடு கை கோர்த்துக் கொண்டாள். அந்தப் பிடிப்பில் ஏதோ ஆறுதல் தேடுவது போல எனக்குப் பட்டது. நிதானமாகப் பேசினாள்.

    ”நான் எனக்கு அம்மா இல்லேன்னு சொன்னேன் இல்லையா.. ஆனா அம்மா உயிரோட எங்கேயோ இருக்காங்க.. என் முகம் அவங்க பார்க்கலே.. அவங்க முகம் நான் பார்க்கலே.. எங்கப்பாவோட கொடுமை தாங்கமுடியாம நான் பிறந்தவுடனே அப்படியே கட்டில்ல என்னைத் தனியே விட்டுட்டு அவங்க போயிட்டாங்க.. நான் பெரிசா வளர்ந்து படிக்கறச்சேதான் எனக்கு விஷயம் எல்லாம் தெரிய வந்தது.”

    மறுபடியும் அவள் கண்களில் வழிய ஆரம்பித்துவிட்டது. துடைத்துக்கொண்டே பேசினாள்.. ”எங்கப்பா ரொம்பக் கொடியவர். அந்தக் காலத்துலேயே ஏரியா ரவுடியா பேர் வாங்கின அரசியல்வாதி.. எங்கம்மாவை பெண் கேட்டிருக்கார். அவங்கம்மா அப்பா பயந்துபோய் வேற யாருக்கோ பேசி கல்யாணம் வரைக்கும் வரச்சே கல்யாண மேடையிலே கத்தியால அந்த மாப்பிள்ளையை வெட்டிப் போட்டுட்டு எங்கம்மாவை இவர் தாலி கட்டியிருக்கார். அம்மாவோட வாழ்வே இவரோட ஒரு வருடம்தான்.. ரொம்ப கொடுமை பண்ணுவார்னு நான் நிறைய கேள்விப்பட்டுருக்கேன். என்னை வயத்துல சுமந்துகொண்டே குடிகாரரான இவர்  கொடுக்கற அடிகளையும் உதைகளையும் எப்படித்தான் அம்மா தாங்கினாளோ? ஐய்யோ.. நினைச்சுப் பார்த்துப் பார்த்து அழுவேன்.. அத்தோட மட்டுமா விட்டுருக்கார்? அது எலெக்‌ஷன் டைம். பரிதாப அலை தன் மேல அதிகம் விழணும்னு நான் பிறந்தவுடனே எங்கம்மாவை கொலை செய்ய பிளான் பண்ணிருக்கார். பொண்டாட்டி பிரசவத்துல போயிட்டாள்னா பரிதாபத்துல ஓட்டு வந்து விழுமாம். விஷம் கொடுக்கவேண்டிய அந்த நர்ஸம்மா மனசு வராம விஷயத்தை எங்கம்மாகிட்டே சொல்லி எங்கேயாச்சும் ஓடிப்போயிடுன்னு தப்பிக்க வெச்சுருக்காங்க. இவ்வளோ கொடுமையையும் எங்கம்மா எங்கப்பாகிட்ட அனுபவிச்சுருக்காங்கன்னா அவங்க தப்பிச்சது நல்லதுக்குதானே.. எங்கேயோ போயிட்டாங்க.. ஆனா எங்கன்னு எங்கம்மாவைத் தேடுவேன்.. தெரிந்த இடத்துல அவங்க உறவுக்காரங்ககிட்டே எல்லா இடத்துலயும் தேடியாச்சு. வேஸ்ட். எங்கப்பாகிட்டே அடிக்கடி கேட்பேன்.. அவர் கட்சிக்காரங்ககிட்டே சொல்றாமாதிரியே எங்கிட்டயும் சொல்வார். ‘உங்கம்மா வருவாம்மா.. எங்க போயிருப்பா.. நானும் எல்லா இடத்துலயும் ஆட்கள்கிட்ட சொல்லி வெச்சுருக்கேன்.. பார்ப்போம்” இப்படி சொல்லிச் சொல்லியே இந்த இருபத்து நாலு வருஷமா என்னை வளர்த்துண்டு வர்ரார். நடுவுல ஒருநாள் என்னை விட பத்து வயசு ஜாஸ்தியான பெண்ணைக் கூப்பிட்டுண்டு வந்தார். ’இவதான் உன் சித்தி’ அப்படின்னார். ஆனா அந்த சித்தி என் கூட இருந்து என்னை வளர்க்க விரும்பலே. அவளுக்குன்னு தனியா அவ ஊர்லயே பெரிய பங்களா கட்டிக்கொடுத்தார். இவர்தான் அடிக்கடி அங்க போயி தங்குவார். நடுவுல ஒரே ஒரு தடவை என்னையும் அழைச்சுண்டு போய்க் காண்பிச்சார். ஏதோ விருந்தாளி மாதிரி இருந்தாலும் என்னால அங்க தங்கமுடியலே. ‘அப்பா.. எங்கம்மா விஷயம் ஏதாவது முயற்சி பண்றீங்களான்னு கேட்டேன். முயற்சி பண்ணிண்டே இருக்கேன்மா.. அப்படின்னு வழக்கப்படி சொல்லிவிட்டு திரும்ப அழைத்துக்கொண்டு வந்துவிட்டார்.”

    ’வர்ஷினி” என்று ஆதரவாக அணைத்துக்கொள்ளத்தான் முடிந்தது என்னால்.

    ”கொஞ்சம் மாசம் முன்னாடி எங்கப்பா எனக்கு இன்னொரு கொடுமையை செய்ய முன்வந்தார். அவர் கல்யாணம் பண்ணிண்ட பொண்ணுக்கு ஒரு தம்பி இருக்கானாம். அந்த தம்பிக்கு என்னைக் கல்யாணம் பண்ணப்போறாராம். சொத்தெல்லாம் ஒரே இடத்துல இருக்கும்னு அந்த பொண்ணு ஏதோ திட்டம் போட இவர் என்னைக் கேட்டுருக்கார். நான் முடியாதுப்பா’ன்னு சொன்னேன். ’சரிம்மா.. படிப்பு முதல்ல முடியட்டும், கல்யாணத்தை அப்புறம் வெச்சுப்போம்’னு சமாதானம் சொல்லி இருக்கார்,”.

    தேவி.. இது என்ன சோதனை.. எனக்கு இனிமையான வாழ்வைக் கொடுத்த நீ ஏன் இந்தக் குழந்தை வாழ்வை இப்படிச் செய்கிறாய். ஓ.. சினிமாக் கதை போல இருக்கு. ஆனா சினிமாக் கதை எல்லாம் ஹீரோ தான் ஜெயிப்பார். வில்லன் தோத்துப்போவான். இங்கே வில்லனுக்கு வெற்றி மேல் வெற்றி.. அவளிடம் ஆதுரமாகக் கேட்டேன், ”ஏன்மா.. உங்கம்மாவோட தம்பி தங்கைகள்னு யாருமே உனக்கு உதவலியா?”

    வெறுப்புடன் சிரித்தாள். ”அவர்களுக்கு என் மீது நல்ல அன்பு உண்டு. ஆனால் அப்பாவிடம் பயம். அவரை மீறிக்கொண்டு அவர்களால் ஏதும் செய்யமுடியவில்லை. மேலும் எங்கப்பாவோட பொஸிஷன் ஏற ஏற அவங்க ரொம்ப பயந்துட்டாங்க. அவர்களுக்கு அம்மா இருக்குமிடம் தெரியும் என்கிற சந்தேகம் எப்போதும் என்னிடம் உண்டு. ஆனால் அவள் திரும்பிவந்தால் இவர்களுக்கும் கஷ்டம் என்று நினைக்கிறார்களோ என்னவோ. அதனால் அம்மாவின் விஷயத்தில் அவர்கள் கூட கண்டுகொள்ளாமல் எதுவும் பேசுவதில்லை.  விட்டுவிட்டார்கள். இவர்களும் சப்போர்ட் செய்யமுடியாத நிலையில் எங்கே என் அம்மா போயிருப்பாள்? தற்கொலை செய்திருப்பாளோ என்று கூட நினைத்துக் கொள்வேன். பிறகுதான் எனக்கு அந்தச் செய்தி கிடைத்தது. ஒரு ஐந்து ஆண்டுகளாக ஜாகேஷ்வரம் பகுதியில்தான் எங்கோ இருக்கிறாள் என்ற நம்பத் தகுந்த செய்தியை என் பெரிய மாமா, என் அம்மாவுக்கு மூத்த அண்ணன், மிக ரகசியமாக ஆனால் இன்னொருவர் மூலமாகச் சொன்னார். அதனால்தான் ஐந்து ஆண்டுகளாகவே ஒரு முகம் தெரியாத அம்மாவைத் தேடி அடிக்கடி இங்கு வருகிறேன்!”,.

    ’ஆனால் மங்களா.. இப்போது தேவி என் விஷயத்தில் கருணை காட்டத் தொடங்கிவிட்டாள் என்றுதான் நினைக்கிறேன். படிப்பு முடிந்தவுடன் கல்யாணம் என்று சொன்னார் அல்லவா.. கரோனா வந்து உதவி செய்தது. இப்போதைக்குப் பரிட்சை இல்லை. இந்த கரோனா இன்னொரு உதவியும் செய்திருக்கிறது. இந்த உதவி மட்டும் முழுமையடைந்தால் எனக்கு இந்தக் கொடுமைகளிலிருந்து பூரண விடுதலை கிடைக்கும். என்ன பார்க்கிறீர்கள். கொரோனாவினால் உதவியா என்றா கேட்க வருகிறீர்களா மங்களா? ஆமாம். ஒரே வீட்டில் இருந்ததால் அப்பாவுக்கு, அவர் இரண்டாம் மனைவிக்கு அந்த மனைவியின் தம்பிக்கு, அவர்கள் வீட்டு சமையல்காரனுக்கு, டிரைவருக்கு என எல்லோருக்கும் கரோனா வந்து இப்போது அத்தனை பேரும் ஆஸ்பத்திரிவாசம். அங்கே என் அப்பா தப்பிப்பாரா என்பது சந்தேகம்தான் அந்த தம்பியும்தான்.. அப்படித்தான் சொல்லறாங்க. கோடி கோடியாக கள்ளத்தனமா சொத்து சேர்த்தவங்க இலவசமா ஆயிரத்தெட்டு நோய் கூட வாங்கி வைத்திருக்கிறார்கள். குடிகாரக் கும்பல்கள்..”

    சோகமா வந்ததா இல்லை சந்தோஷமாகச் சொன்னாளா என்று தெரியவில்லை. இருந்தாலும் இந்த கரோனாவைப் பற்றிப் பேசும்போது நல்லவர்கள் கெட்டவர்கள் என்ற பேதம் இந்த தொத்து வியாதிக்குக் கிடையாது என்று முதலிலேயே சொன்னவள்தான்..

    ”’எவ்வளவு கெட்டவர்களாக இருந்தாலும் நம்மைப் பொறுத்தவரை அவர்களை மன்னிக்கவேண்டும் வர்ஷினி. உன்னை இத்தனை வருடம் வளர்த்திருக்கிறார் இல்லையா?’ அன்போடுதான் சொன்னேன்.

    ”இல்லை மங்களா! அவர் என்னை வளர்த்த காரணம் எல்லாம் பணம் சொத்து மேல் உள்ள பிடிப்புதான். என் பெயரில் உள்ள சொத்துகள் ஏராளம். எல்லாம் அவருடையதுதான். என் மேல் உள்ள அன்புக்கு அதுதான் காரணம். மகள் பாசம் எல்லாம் வெளிவேஷம். அவர் ஒரு கொடியவர் என்று நான் சொன்னதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளவேண்டாம். கொண்ட பெண்டாட்டியைக் கொலை செய்யத் தயங்காதவர் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளவும். இவர் அரசியல் கொடுமையைக் கேட்டு இன்னமும் ஜனங்கள் நடுங்குவார்கள்.  நான் அவரைப் பற்றியெல்லாம் சிந்தித்து என் மன அமைதியைக் கெடுத்துக் கொள்வதில்லை. ஏன் எப்போது அம்மா இவரிடம் அனுபவித்த கொடுமை விவரங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வந்ததோ அன்றிலிருந்தே அவர் எனக்கு உறவில்லாதவர், யாரோ வேறு ஒரு கொடியவர்.. அவர் வெறுக்கத்தக்கவர் என்ற முடிவுக்கு நான் வந்தாயிற்று. அவர் உயிரோடு வந்தாலும், வராவிட்டாலும் எனக்கு அந்த குடும்பத்தைப் பற்றியோ அவரைப் பற்றியோ எவ்விதக் கவலையுமில்லை. அவரால் எனக்கு எந்தவித கஷ்டமும் தரமுடியாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. நான் தேவியை வேண்டிக்கொள்கிறேன். அவள் உதவுவாள். அம்மா விஷயத்திலும் என்றாவது ஒருநாள் உதவாமலா போய்விடுவாள்?”.

    ”வர்ஷினி! என் அனுபவக் கதைக்கு முற்றிலும் மாறுபட்ட மிகக் கொடிய வாழ்வை இந்த சின்ன வயதில் அனுபவித்திருக்கிறாய். எனக்கு இந்த ஆறு மாத காலத்தில் நிறைய சாதுக்கள் பரிச்சயம் ஆனார்கள். பல சாதுக்கள் எதிர்காலத்தையும் போன பிறவிகளையும் அறிந்த பெரியவர்கள். ஆனால் நாம் கேட்காமல் அவர்களே சொல்லவேண்டும். கேட்டால் அதைப் பற்றிப் பேசமாட்டார்கள். விசித்திரமானவர்கள். ஒருமாதம் முன்பு ஒரு சாது என்னைப் பார்த்து தான் எங்கேயோ பார்த்தவளாய் தெரிகிறாய்’ என்றார். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. அவரை இதுவரைப் பார்த்ததில்லை என்று அழுத்திச் சொன்னேன். அதற்கு அவர் ‘அதற்கென்னம்மா.. இந்த ஜென்மத்தில் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் போன ஜென்மத்தில் பார்த்திருக்கிறாய்.. ஜென்ம ஜென்மப் பலன் மட்டுமே உன்னை இங்கே இழுக்கும்” என்றார். நான் கொஞ்சம் அதிசயப்பட்டேன். ஆனால் அதுதான் உண்மை என்பதையும் உணர்ந்தேன். தேவியின் மகிமையே வேறு. அவள் உனக்கு நிச்சயம் அருள்புரிவாள். என்னை நம்பு.. இன்றோடு உன் கஷ்டமெல்லாம் விலகட்டும்.’ என்று அவள் தலையில் கை வைத்துச் சொன்னேன். ஏனோ அப்படிச் சொல்லத் தோன்றியது.

    மலை இறக்கத்தில் கிழக்குப் பக்கமாக கீழே இறங்கமுற்பட்டோம். வர்ஷினி என் வார்த்தையில் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டும். தான் ஒவ்வொருமுறை எப்படி அப்பாவை ஏமாற்றி ஜாகேஷ்வரம் ஓடி வருவதையெல்லாம் சிரித்துக் கொண்டே சொன்னாள். இவள் பெயரில் ஏராளமாக கள்ளப்பணங்கள் சேர்த்துப் போட்டிருப்பதையும் அவர் ஆடிட்டர் மூலம் தனக்கு ஒரு வங்கி அட்டை இருப்பதையும் சொன்னாள். ஆனால் தான் தேவைப்பட்டாலொழிய அந்த அட்டையை பயன்படுத்துவதில்லை என்றும் சொன்னாள்.

    ”வெளிநாடு சென்று படிக்க விருப்பம். அதற்கு வேண்டுமானால் இனி அதைச் செலவு செய்யலாம் என்றிருக்கிறேன். இந்தமுறை ஏதோ பிடிவாதம்.. என் தேடலுக்கு ஒரு முடிவு தெரியாமல் திரும்பக்கூடாது என்று எனக்குள் சொல்லிக்கொண்டுதான் புறப்பட்டேன். இல்லாவிட்டால் இங்கேயே மலைமேலாக ஏறிக்கொண்டே இருக்கவேண்டும். கீழே இறங்காமல் தேவியை எங்கேயோ மேலே உயரத்தில் இருப்பதாக நினைத்துக்கொண்டு ஏணிப்படியில் ஏறுவது போல அவளை நினைத்துக்கொண்டே ஏறிக்கொண்டே இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் முதலில் அம்மா கிடைக்கவேண்டும். அதன் பிறகுதான் இந்த எதிர்கால திட்டங்கள் எல்லாம்.”

    ”அதுவரை பணத்துக்கு என்ன செய்வாய்?

    ‘நீங்கள் என்ன செய்வீர்களோ அதையேதான் நானும் செய்வேன் மங்களா.. எனக்குத் தெரியும் இங்கே பணத்துக்கும் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்பது.. என்னிடம் பாருங்கள்.. ஒரு பைசா இல்லை.. நகை இல்லை.. மொபைல் இல்லை.  எல்லாமே உங்களைப் போலத்தான். கிடைத்தால் சாப்பிடுவது.. இல்லையேல் பட்டினி கிடப்பது.. ஆனாலும் இங்கே என் வாழ்க்கை இனிமையாகத்தானே போகிறது.. நீங்கள் அருள் புரியுங்கள் ஆசீர்வாதம் செய்யுங்கள்.. ஒன்று அம்மா கிடைக்கவேண்டும், இல்லையேல் பரிபூர்ணமாக என் மனது இங்கேயே குடியேற விரும்பவேண்டும் என்று ஆசி கூறுங்கள்.’ என்று சட்டென குனிந்து என் காலைத் தொட்டாள்.

    நான் ஏதும் சொல்லாமல் மனதில் தேவியை நினைத்துக்கொண்டு அவளைத் தொட்டு ஆசிர்வதித்தேன்.. எனக்கென்ன தெரியும்? என் குருநாதருக்குத் தெரியும்.. அவரிடமே கேட்கலாமோ.. வேண்டாம் நான் அவரிடம் என்னைப் பற்றி ஏதும் கேட்காமலே அல்லவா அழைத்துக் கொண்டார்?

    மாலை மங்கும் சமயத்தில்தான் அந்த கிராமத்துள் நுழைந்தோம்.. இருட்ட ஆரம்பித்துவிட்டது.. மலையின் கிழக்குப் பக்கங்கள் சீக்கிரம் இருட்டிவிடும். மலையின் மேற்குப் பகுதியில் இந்நேரம் பளிச்சென்று இருக்கும். இயற்கையின் அழகை ரசிக்கவேண்டும். எங்கள் இருவரைக் கண்டதும் யாரோ ஒரு ஆதிவாசி சிரித்துக்கொண்டே நாங்கள் போகவேண்டிய இடத்தைச் சுட்டிக் காட்டினார். அவருக்கு எப்படித் தெரியும் நாங்கள் வருவது என்பது போல வர்ஷினி என்னைப் பார்த்தாள். இங்கு எதுவுமே அதிசயமில்லை என்பதாக நான் அவளைப் பார்த்தேன்.

    தூரத்தில் சங்கு ஊதும் சப்தம் கேட்து. இரண்டு நிமிஷம் மேலாக அந்த சங்கு ஊதிக்கொண்டே இருந்ததைக் கேட்டோம். அந்த சங்கூதல் வர்ஷினியை சமாதானப்படுத்தியதோ என்னவோ.. மிகவும் சந்தோஷப்பட்டாள்.

    ’மங்களா.. அந்த சங்கூதலைக் கேட்டீங்களா.. சாதாரணமா ஒரு நிமிஷம் தொடர்ச்சியா ஊதினாலே மூச்சிரைக்கும். நானும் முயற்சி பண்ணியிருக்கேன். ஒரு நிமிஷம் மேலே முடியலே.. யாரோ சாது இன்னும் ஊதிண்டே இருக்கார் பார்த்தீங்களா.. நல்ல சாதனா போல…. தினம் நான் ரெண்டு மணி நேரம் பண்றேன்.. இன்னும் நிறைய நேரம் பண்ணினா நானும் ஒருநாள் ரெண்டு மூணு நிமிஷத்துக்கு இந்த சங்கை ஊதுவேன்..”

    ”ஆமாம்மா! என் குருநாதர்தான் சங்கு ஊதுவார். நீ சொல்லறது சரி.. நான் இதுவரை அதெல்லாம் பண்ணியதில்லே. ஆனா சாதனா மாத்திரம் தினம் முடிஞ்ச அளவுக்குப் பண்ணனும்… இன்னிக்கு அந்த கிராமத்துல என்னோடு தங்குவே இல்லையா, நானும் நீயும் சேர்ந்து பண்ணலாம்”.

    நான் வர்ஷினியைப் பக்கத்தில் வைத்து அணைத்துக்கொண்டேன். சங்கு ஊதல் நின்றது. இன்னும் நடந்து கொஞ்ச தூரம் சென்றதும் அங்கே சிலர் கூடி உட்கார்ந்து நெருப்பு வைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தோம். தூரத்திலேயே நின்றோம். குருநாதர் கூப்பிடுவார்.. அப்போது போகலாம் என்று வர்ஷினியிடம் சொன்னேன்.

    வர்ஷினியின் கூரிய கண்களுக்கு அங்கே மூன்று சாதுக்கள் தென்பட்டதைத் தெரிவித்தாள். அதில் ஒருவர் பெண் சாது,  மற்ற இருவரும் ஆண் சாதுக்கள்’ என்றாள்.. ஆண் என்றும் பெண் என்றும் ஆன்மீகத்தில் அதுவும் இங்குள்ள சாதுக்களில் வேற்றுமை ஏது என்று பதிலுக்கு நான் சொன்னேன். என் காதில் வந்து மெல்ல வர்ஷினி ஓதினாள்.

    “அந்த இருவரில் யார் உங்கள் குருநாதர்?”

    நானும் மெல்லச் சொன்னேன். ’அவர்கள் இருவருமில்லை. மாதாஜிதான் என் குருநாதர், எனக்கு மட்டுமல்ல, மற்ற இருவருக்கும் கூட குரு”

    ”ஓ.. அப்போ சங்கு ஊதியது மாதாஜியா.. அவங்ககிட்ட இந்தப் பயிற்சியைக் கத்துக்கணுமே..” .

    இருளும் வெளிச்சமும் போட்டி போட்டுக்கொண்டு ஒன்றை ஒன்று வெல்லும் அந்தத் தருணத்தில் இருளே வென்றாலும் மெதுவாக ஏற்றப்பட்ட நெருப்பு கொஞ்சம் வளர்ந்து எங்கள் நால்வரையும் மங்கலாகத்தான் முகம் பார்க்க வைத்தது. மாதாஜி எங்களை அருகில் அழைத்தார். முதலில் சென்றவள் மாதாஜிக்கும் மற்ற இருவருக்கும் நமஸ்காரம் செய்தேன். வர்ஷினியும் அந்த மூவரையும் என்னையும் சேர்த்து வணங்கிவிட்டு எழுந்தாள்.

    நான் அவர்களிடம் வர்ஷினியை அறிமுகம் செய்தேன். அன்னையைத் தேடிய அபலை இவளுக்கு அந்த மூவரின் ஆசிகளையும் அள்ளித் தரவேண்டுமென பணிவாக மெதுவான குரலில் கேட்டுக்கொண்டேன். சாதுக்கள் ஏதும் பேசவில்லை. அவளையும் சேர்ந்து அவர்களுடன் உட்காரச்சொன்னார்கள்.

    மாதாஜி சற்றே முறுவலித்தது எனக்குத் தெரிந்தது. அவர் வர்ஷினியைத் தன் பக்கத்தில் அழைத்துக்கொண்டார். வர்ஷினி ஆவலுடன் அவரிடம் ஒட்டிக்கொண்டாள். எனக்கு எப்படியாவது மாதாஜி வர்ஷினியின் மனவருத்தத்தைப், போக்க வழி செய்யவேண்டும் என்று மனதுள் என் தேவியை வேண்டிக்கொண்டேன். நான் தேடாமலே என்னைத் தேடி வந்து என் குருவாக அமைந்து என்னை ஆட்கொண்டவர்.. என்னையே நான் யார் என எனக்கு அறிமுகம் செய்தவர்.. என் தேடலுக்கும் முடிவு கட்டியவர் ஆயிற்றே.. இந்தச் சின்னப் பெண்ணின் தேடலுக்கும் ஒரு தீர்வு சொல்லவேண்டும். இதையெல்லாம் என் மனதுக்குள்தான் வேண்டிக்கொண்டேன். என் மனதில் இருப்பவர் இல்லையா.. அவருக்குத் தெரியும்..

    மாதாஜியின் கண்கள் அந்தப் பெண்ணிடமே நிலைகொண்டன. என்னை எப்படி முதல்முறை பார்த்தாரோ அதே காந்தப் பார்வை இப்போதும் அவரிடம் இருந்தது.

    என்னவோ தெரியவில்லை. நான் பிறந்தது முதல் எந்தக் கஷ்டமும் படாமல் வளர்ந்து எவ்வித பெரிய துன்பமும் இல்லாமல் திருமண வாழ்க்கையில் புகுந்து அதே போல எவ்வித துன்பமும் இல்லாமல் இதோ இங்கே வந்தாயிற்று. ஒருவேளை விதி தடம் மாறி  இந்த வர்ஷினி போன்ற நிலையில் நான் இருந்தாலும் சரி, அல்லது அவள் தாய் இருந்த நிலையில் நான் தள்ளப்பட்டிருந்தாலும் சரி, நான் எப்போதோ தற்கொலை செய்து உயிர் விட்டிருப்பேன் என்பது மட்டும் நிச்சயம் என மனதில் பட்டது. வர்ஷினியும் சரி, வர்ஷினியின் தாயும் சரி… எத்தனை உறுதி படைத்தவர்கள்.. தனக்கு தேவி அப்பேர்ப்பட்ட தண்டனையை வழங்கவில்லை.. ஆனால் இனியும் வர்ஷினிக்கு எந்தக் குறையும் வரவிடக்கூடாது. அதற்கு மாதாஜியின் அருள் அவளுக்குப் பரிபூரணமாக அமையவேண்டும்.

    என்ன இது, நாற்பது வருடங்களுக்கு மேல் தாம்பத்யத்தோடு வாழ்ந்த கணவர் மீதோ, பெற்றெடுத்த பிள்ளைகள் மீதோ வராத பரிவு இந்தப் பெண்ணிடம் தனக்கு ஏன் வரவேண்டும்?.. பற்று என்பதை மிகச் சுலபமாக தேவியின் அருளோடு அறுத்தெறிந்துவிட்டுத்தானே இங்கு வந்தேன். ஆனால் இந்தப் பெண்ணின் மேல் ஏன் பிடிப்பு அதிகமாகவேண்டும்.. இல்லை..இல்லை.. இவள் அனுபவித்த வேதனைகள் பரிதாபமாக மாறுகின்றன.. அது பந்தமாக மாற வழியில்லை என்று என் மனதுள் கூறிக்கொண்டேன்.

    மாதாஜி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டே என்னைப் பார்த்துப் பேசினார். ”இன்னும் சற்று நேரத்தில் பிரசாதம் வந்துவிடும். உண்டு விட்டு உன் சாதனாவை நீ ஆரம்பித்து விடு மங்களா.. உனக்கு தனியாக ஒரு குடிசை கொடுக்கச் சொல்கிறேன். இந்தப் பெண் இந்த இரவு என்னோடு இருக்கட்டும். என் வழக்கமான தியானம் முடிந்தவுடன் நான் என்னால் முடிந்த உதவியைச் செய்கிறேன்.. நீ கவலையே படாதே..!”

    ஆஹா,, குருநாதருக்குத் தெரியாதா என் மனத்தின் நினைவுகள். என் மனதுள் என்றும் இருந்து ஆட்டுவிக்கும் சக்தி மாதாஜி அல்லவா.. அவர் பாதம் தொட்டு வணங்கி நான் எழுந்து கொண்டேன். மற்ற இரு சீடர்களுக்கும் மாதாஜி விடை கொடுத்தார்,

    அடுத்த நாள் காலை எழுந்ததும் என் சாதனா முடிந்தநிலையில் மாதாஜியைக் காண அவர் குடிசைக்குள் நுழைந்தேன். அங்கு ஆச்சரியமான ஒரு நிலை. மாதாஜியின் மடியில் தலை வைத்து வர்ஷினி நிம்மதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.

    மாதாஜி உறங்கவில்லை போல. ஆனால் இது அவருக்கு சகஜநிலைதான். மாதாஜியால் நாட்க்கணக்கில் கூட உறங்காமல் இருப்பதை நானே பார்த்திருக்கிறேன். தேவியின் சாட்சாத் மனித உருவம் அவர். இரவு முழுதும் தூங்கவில்லையென்றாலும் அவர் முகம் மிகப் பிரகாசமாக அந்தக் காலை வேளையில் இருந்ததால் ஒரு பரவசத்தோடு அவர் முன் நமஸ்கரித்தேன். அவர் என்னைத் தன் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டார். மிக மெல்லமாகப் பேசினார்.

    ”வர்ஷினியை, அவள் எழுந்ததும் நீ ஜாகேஷ்வர் வரை அழைத்துச் சென்று விட்டு வா. செல்லும் வழியில் அவளோடு பேசு. இனி இவள் உன் சிஷ்யை என்று ஏற்றுக்கொள். அவள் உள்ளத்தில் இனி நீ எப்போதும் இருந்து அவளைக் கரையேற்ற நான் தேவியை வேண்டிக்கொள்கிறேன்”

    சந்தோஷமாகக் கேட்டேன்.  ”ஓ.. இனி வர்ஷினி இங்கேயே எங்காவது இருக்க வேண்டுமா.. அவள் அதைத்தான் என்னிடம் நேற்று கேட்டாள்.” மெதுவான குரலில்தான் கேட்டேன்.

    ‘இல்லை மங்களா! இவளுக்கு அந்தக் காலம் இன்னும் வரவில்லை. ஆனால் உனக்கு ஒரே ஒரு ரகசியம் சொல்கிறேன். இவளிடம் கூட சொல்லாதே.. இனி இவள் வாழ்க்கையில் கவலை என்பதே இருக்காது. உனக்கு எப்படி எல்லாம் சீராக உன் வாழ்க்கை இதுவரை சென்றதோ அதே நிலை இவளுக்கும் தொடரும். இவளும் வருவாள். இப்போதல்ல.. உன்னைப்போலவே தன் கடமைகளை முடித்துவிட்டு வருவாள். ஆனால் அடிக்கடி உன்னைப் பார்க்க ஜாகேஷ்வர் வருவாள். தவறாமல் பார்த்து இவளுக்கு சந்தோஷத்தைக் கொடு. போகும் வரை போகட்டும்.. அடுத்து நடப்பது அனைத்தும் தேவியின் கையில் இருக்கும்போது நமக்கேன் கவலை. நாமெல்லாருமே அவள் குழந்தைகள். நம் எல்லோருக்குமே அவள்தான் தாய்.”

    நான் கையெடுத்துக் கும்பிட்டேன். மாதாஜியின் கை தன் மடி மீது தலைவைத்து நிம்மதியாக தூங்கிக்கொண்டிருந்த வர்ஷினியின் முடிக்கற்றைகளை வருடியது.

    ’ஜீ! இவள் உங்கள் மடி மீது..” தயக்கமாய்தான் குருநாதரிடம் கேட்டேன். அவர் சிரித்தார்.

    ”இரவு முழுதும் பேசிக்கொண்டிருந்தோமா.. அவள் இனி என்ன செய்ய வேண்டும் என்று விவரமாக சொல்லி இருக்கிறேன். அழுதழுது ஓய்ந்திருந்தாள். அவளுக்கு சற்று நேரம் முன்புதான் உறக்கம் வந்தது போலும். என்னைக்  கேட்டாள். ’அம்மா ஒருமுறை உன் மடியில் தலைவைத்துப் படுக்கும் உரிமையைக் கொடு’ என்றாள். இதைக் கூட ஒரு பெற்ற தாய் செய்யாவிட்டால் எப்படி?.. வாம்மா.. வந்து படுத்துக் கொள்!’ என்றேன்.. ஆனந்தமாகப் படுத்தாள். உடனே உறங்கி விட்டாள். பார் அவள் கை என் கையை எப்படி இறுகப் பற்றியிருக்கிறது..”

    என் ஆச்சரியம் எல்லை கடந்தது.

    ”மாதாஜி! அப்படியானால் அந்த உத்தமத் தாய் நீங்களா? தேவி.. தாயே. உன் மகிமையை என்ன சொல்வது?”.

    மாதாஜியின் மலர்ச்சியான முகம் மேலும் ஒளி வீச வாயில் ஒரே ஒரு சிறு புன்னகை மட்டும் எனக்கு பதிலாய் வந்தது..

    Share
  • திவாகரின் இமாலயன் – நூல் விமர்சனம்

    அண்ணாகண்ணன்

    Himalayan - இமாலயன்
    Himalayan

    இந்தோ சீன எல்லையில் உள்ள புலிக்குன்று (டைகர் ஹில்ஸ்) என்ற இடத்திற்கு ஒரு முறை, சுற்றுலா நிமித்தம் சென்றேன். எங்கும் பனி, எதிலும் குளிர். உச்சி முதல் உள்ளங்கால் வரை மூடிக்கொண்டுதான் சில மணி நேரங்கள் அங்கே செலவிட்டேன். அதற்குள் உடல் வெடவெடத்தது. சிறிது நேரம் இருந்த எனக்கே இப்படி இருந்தால், அங்கேயே காலம் முழுவதும் நின்று காவல் காக்கும் வீரர்களின் நிலையை என்னவென்று சொல்வது? அந்தப் பனி மலையில், போரும் செய்ய வேண்டுமானால் அது எத்தனை கடினமானது? ஆனால், 1962ஆம் ஆண்டு அப்படித்தான் இந்திய – சீனப் போர் நடைபெற்றது. இந்தப் பகீர், திடீர், ஜிலீர் அனுபவத்தைத்தான் ஒரு புதினமாக வடித்துள்ளார் திவாகர்.

    இந்திய – சீனப் போர் என்பது, வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் ஒரு வரியில், வாக்கியத்தில் நாம் கடந்து செல்லும் ஒன்று. ஆனால், அதற்குப் பின்னே எத்தனை சதிகள், சம்பவங்கள், சாகசங்கள் நடைபெற்றுள்ளன? எந்தக் காரணத்திற்காக இந்தப் போர் நடைபெற்றது? இரு தரப்பின் பலம், பலவீனம் யாவை? யாரெல்லாம் யாருக்குப் பின் அணி திரண்டார்கள்? யாருடைய ஆதரவு யாருக்கு? போர் நடவடிக்கைகளின் போது, உள்நாட்டிலும் உலக நாடுகளிலும் நடந்தவை என்னென்ன? எனப் பலவற்றையும் இந்தப் புதினம், போகிற போக்கில் தொட்டுச் செல்கிறது.

    இவ்வளவு சம்பவங்களுக்கு இடையில் ஒரு விறுவிறுப்பான கதையைப் பின்னி, உண்மையிலேயே பின்னிப் பெடலெடுத்து விட்டார் திவாகர். இந்தக் கதையின் நாயகன், இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒரு குரூப் கேப்டன். அவர் மூலமாக முன்னகரும் கதையில் பல்வேறு திருப்பங்கள், இணையாக அவரது காதல், அவருக்கு நடக்கும் விபத்து, அதற்குப் பிறகான ஆள் மாறாட்டம் என அந்தக் காலத்துத் திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படுகிறது.

    இமயமலை, திபெத், சீனப் பகுதிகளின் பெயர்கள், அங்கு வாழும் பழங்குடி இனங்களின் பெயர்கள், அவர்களது மொழிகளின் பெயர்கள், அந்தந்த இடத்துக்கு ஏற்ப, பின்புலத்துக்கு ஏற்ப நபர்களுக்குச் சூட்டப்பெற்ற பெயர்கள் என ஒவ்வொன்றும் கவனமாகச் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஒவ்வோர் அத்தியாயத்தின் தொடக்கத்திலும் அதே காலத்தில் இந்தியத் தலைவர்களும் உலகத் தலைவர்களும் உதிர்த்த மொழிகள், பொருத்தமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இது, புதின ஆசிரியரின் கடின உழைப்பைக் காட்டுகிறது.

    கதையில் இமயமே ஒரு பாத்திரமாக இடம் பெற்றுள்ளது. அதன் அமைப்புகள், பாதைகள், நீரோட்டங்கள், அங்குள்ள மக்கள், அவர்களின் வாழ்க்கை என அனைத்தும் நேரில் பார்ப்பது போலவே விவரிக்கப் பெற்றுள்ளன. இந்தக் கதையின் நாயகி, பாறைகளைப் பற்றிப் படித்தவள் என்ற விவரம், கதையில் சரியானபடி பயன்படுத்தப் பெற்றுள்ளது. அவளே பின்னர், ஆண் பாறை, பெண் பாறை எனக் கண்டறிந்து, ஒரு புதிய நீர்த்தடத்தை உருவாக்குவது, ஆசிரியரின் செம்மையான கதைப் பின்னலைக் காட்டுகிறது.

    இந்திய ராணுவத்தில் ஆள் பற்றாக்குறை இருந்த காரணத்தால், கடல் போன்ற சீன ராணுவத்தைச் சமாளிக்க, நம் எல்லையோரப் பழங்குடியின இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது, அவர்கள் உள்பட, இந்திய வீரர்கள் போர்க் களத்தில் நிகழ்த்திய துணிகரச் செயல்கள், இயற்கையின் அமைப்பைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சாதுர்யம் எனப் பலவும் புதினத்தின் இறுதிப் பக்கங்களைப் பரபரப்பாக்கிவிடுகின்றன. துணிகரமாகப் போரிட்ட இந்திய வீரர் ஒருவருக்குச் சீனப் படையினர் சிலையெடுத்ததும் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.

    சீனப் படைகளால் இழப்பைச் சந்தித்த போதும், இந்தியாவின் விமானப் படையைப் பயன்படுத்திக் குண்டு வீசும் யோசனையைக் கதையின் நாயகர் தவிர்க்கிறார். அதற்கு அவர் கூறும் காரணத்தைப் புதினத்தைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

    போருக்கு முந்தைய காலக்கட்டத்தைப் பற்றியும் அதற்கு எவ்வாறு இரு நாடுகளும் தயாராயின என்றும் அக்காலத்திய உளவு நடவடிக்கைகள் குறித்தும் புதினம் விரிவாகப் பேசுகிறது. இதே புதினத்தை நேரடியாகப் போர்க் களத்திலிருந்து தொடங்கி, போர் விவகாரங்களை மேலும் விரிவாகக் காட்டியிருந்தால், அது மேலும் பரபரப்பாக இருந்திருக்கும். ஆயினும் நூலாசிரியர் முன்னுரையில் தெரிவித்தபடி, அவர் வேண்டுமென்றே தான் அதனைத் தவிர்த்திருக்கிறார்.

    வாசிப்புச் சுவாரசியத்தை விட, தேர்ந்த அற நெறிகளைப் பின்பற்றும் பாத்திரங்களைப் படைத்ததற்காகத் திவாகர் பெருமைப்படலாம். வரலாற்றை இப்படிக் கதையாகப் படிக்கும் போது, அது மனத்தில் சட்டெனப் பதிந்துவிடும். அந்த வகையில் இமாலயன், யாரும் அதிகம் தொடாத கருவைத் தொட்டுச் செல்கிறது. புதின ஆசிரியர் திவாகர் அவர்களுக்கும் வெளியிட்ட பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தாருக்கு வாழ்த்துகள்.

    நூல் கிடைக்குமிடம்:

    இமாலயன் (வரலாற்றுப் புதினம்)
    ஆசிரியர் – திவாகர்
    வெளியீடு – பழனியப்பா பிரதர்ஸ், சென்னை
    பக்கங்கள் – 363
    விலை – 480
    இணையத்தில் வாங்க – https://www.udumalai.com/imalayan.htm

    Share
  • இந்திரனும் சந்திரனும்

     

    திவாகர்

     2 (1)

    என்னன்புக் கண்மணியே பதில்சொல்வாயே

    இன்னமும்ஏன் தயக்கமும் தாமதமும்

    உனக்கொரு மணாளனென ஒருவனை

    உனக்களித்த உரிமையில் தேர்ந்தெடுப்பாய்

    இந்திரனென ஒருவன் வந்தானேகண்டாயோ

    சந்திரனென இன்னொருவனும் வந்தான்

    இருவருமே அழகில்அறிவில் வல்லவர்தாம்

    ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்லர்தாம்

    ஆனாலும் உனைப்பெற்ற தாயாம்நான்

    எனக்குள் தோன்றியதைச் சொல்வேன்கேள்

    கொடைவழங்குவதில் சிறந்தவனாம் இந்திரன்

    மடைதிறந்து ஓடிவரும்நீர்போல செல்வத்தை

    அனைவருக்கும் மகிழ்வோடு வழங்குபனாம்

    பனைமரம்போல பலரும் பயன்பெறுவாராம்

    ஊருலகத்தில் போற்றுகிறார் அனைவரும்

    பாரிமன்னன் போனபிறகு பாரிலுள்ளோர்

    வாடாதிருக்க வறுமைதீர வந்தவனாம்

    கொடுத்துக்கொடுத்து சிவந்த கைகொண்ட

    மாபாரதக் கர்ணன்போல சீரும்சிறப்பாக

    மாபெரும் பெயர்பெற்றவனே இந்திரன்

    ஊருக்குதவுவார் ஒருவர் இவன்போல்

    இருந்தால் ஒவ்வொருஊரும் செழிக்குமே

    வள்ளல்வள்ளல் இவனென பார்போற்ற

    வள்ளல்தம்மனைவி எனஉனை ஊர்போற்றும்

    பாழும்பூமியிலே பஞ்சமும் பாதகமும்

    வாழும்காலம்முதலாய் பார்த்தவள் நான்

    பசித்தவர்க்கு ஈயாதோர் பலரிருக்கும்பூமியிலே

    கசிந்தஉள்ளம் கொண்டிருப்போர் ஒருசிலரே

    நல்லோர்களெல்லாம் நலிந்துவரும் காலமிது

    நல்லார்க்கு நல்லானாகவந்தவனடி இந்திரனே

    தாயாகநானொருத்தி என்னதான் எடுத்துரைத்தும்

    வாயும்வயிறும் வேறுவேறுபோல தனக்கென்ற

    ஓர்கருத்து எனக்குமுண்டு உனக்குமுண்டு

    சீர்தூக்கிப் பார்த்துச் சொல்லடிஎன்கண்மணி!

    என்னவென சொல்வேன் எனதருமைத்தாயே

    என்னவராய் யார்தான் வரவேண்டுமென்பதை

    உன்னைவிட யாரறிவார் யார்சொல்வார்

    உன்வார்த்தையே என்வேதமென நீயறிவாய்

    இந்திரனைக் கண்டாய் இனியவைசொன்னாய்

    சிந்தையிலேபட்டதை சிறப்பாகச் சொன்னாய்

    கவுரவரின்தோழன் கர்ணனோடு ஒப்பிட்டாய்

    சிவந்தகைகள்தான் கர்ணனுக்கு ஆனாலம்மா

    அவைகொடுத்துச் சிவந்தன என்றாநினைத்தாய்

    அவையிலன்று பாஞ்சாலி துடித்துக்கதறும்போது

    கைக்கொட்டி கொட்டிவலித்துச் சிவந்தகரங்களம்மா

    கைநிறையக் கொடுத்தான்கர்ணன் உண்மை

    கொடையில் நிகரிலாதவன் அதுவும்உண்மை

    கொடைஒன்று போதுமோ குணத்துக்குஅம்மா?

    கெடுவார்பக்கம் நின்று கெடுதல்நினைத்தவன்

    சுடும்வார்த்தைகளால் பஞ்சவரை நிந்தித்தான்

    கர்வம்கொண்டவனாய் பழிதீர்க்கும் பகைவனாய்

    கர்ணன்போல கணவன் உன்மகளுக்குவேண்டுமா

    உயர்ந்தகுணம்தான் கொடையென்றகுணம் உண்மை

    உயர்வான வாழ்க்கைக்கு அதுவொன்றேபோதுமோ

    சந்திரனும்வந்தானம்மா வானத்தின் முழுநிலவுபோல

    சிந்தையிலே நின்றானம்மா சிந்தித்துப்பார்த்தேன்

    ஒளியிழந்த என்நெஞ்சத்தில் ஒளிபாய்ச்சினான்

    வளமைகொண்ட வாக்கினால் தேனூட்டினான்

    உள்ளொன்று வைத்து புறமொன்றுபேசாமல்

    உள்ளத்தின்நல் ஒளியைமுகத்தில் காண்பித்தான்

    கள்ளங்கபடமில்லா அவன்போக்கும் பேச்சுமென்

    உள்ளத்துள் புகுந்ததம்மா உள்ளதெலாம்புரிந்ததம்மா

    உண்மையே பேசுகிறான் நன்மையாய்பேசுகிறான்

    பண்போடுபழகுகிறான் பார்வைக்கும் இனியவனே

    சொல்லில் இனிமைஇருந்தால் வாழ்வுஇனிதாகும்

    நல்வார்த்தை அவன்பேச்சு நற்குணமேஅவன்மூச்சு

    வள்ளல்தம்மனைவி எனயென்மனம் ஏற்கவில்லை

    உள்ளத்துஇனிமையை தன்முகத்தில் காட்டியவனே

    உள்ளத்துக்குள்ளே வள்ளலாய் வாழ்கின்றானம்மா

    உள்ளம் ஒன்றிவிட்டால் இனியேதுதேர்தல்?

    இந்திரனைநான் தூற்றவில்லை தாயேஆனால்

    சந்திரனைப் போற்றுகிறேன் நல்லதுணைஅவனே!!

    ******************************************

    அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து 
    இன்சொலன் ஆகப் பெறின் (திருக்குறள் – 92)

    முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்

    Share
  • தித்திக்குதே திருக்குறள் – 8

     

    அன்பே தெய்வம்

     04ae7493-c5f6-469a-b182-8711c1d60836

    திவாகர்

     

    உயிர்களிடத்தே அன்புசெய்ய வேணுமாய்

    ஆயிரம் முறைசொன்னாலும் கேளாமல்

    உந்தன் நலமொன்றையே கருத்தில்கொண்டு

    எந்தநாளும் உன்காரியம் செய்கின்றாய்

    பயன்பிறர்க்கும் அதன்பலனில் உண்டெனில்;

    சுயநலம் பேணுவதால் குறையில்லைதான்

    அறியவேணும் தம்பி நன்றாய்புரியவேணும்

    குறுகியயெண்ணங்கள் என்றும் துணைவாரா;

    உன்மீதே உனக்கன்பு என்றல்லாமல்

    அனைவர்மீதும் செலுத்துமன்பே உத்தமாம்

    உள்ளம்சிறிது உயிர்பெரிது என்றிருப்போர்

    கள்ளத்தன வாழ்க்கையே வாழ்வார்களாம்

    சற்றேகவனம் கொடுத்து சொல்வதைக்கேள்

    பற்றுமிகக் கொள்வாய் அன்பின்மீதே!

     

     

    அனாதையென்றே வந்தவனாம் அவனை

    ஆனந்தமாய் அருட்தந்தை ஆதரித்தார்

    சோறுண்டு சுகவாழ்க்கை வாழ்ந்தாலுமேனோ

    ஊறுவிளைப்பதிலேயே சுகம்கண்டான் அவன்

    தன்னலம்பார்த்தான் பிறர்நலம் கண்டானில்லை

    பின்னால் யாரும்குறைசொன்னால் அவர்க்கும்

    இன்னல்தந்தான் ஊரார்பலரை அவமதித்தான்

    இன்னும்பல தொல்லைதந்தான் கெடுதிசெய்தான்

    பெரும்வேதனையைத் தாங்காது ஊராரும்

    அருட்தந்தையிடன் சென்றார் ஊரிலே

    இவனொருவன் இருந்தால் இன்னும்பலர்

    இவனைப்போலவே திரிவர் என்றார்

    அருட்தந்தை அவரிடத்தே சமாதானஞ்செய்து

    பொருட்படுத்தாதீர் இவன்செயலை இனியும்

    யார்க்கும் தீங்குசெய்யாது வீட்டினிலே

    ஊரினிலே நல்லபெயர் வாங்கித்தருவேன்

    இவனுக்கென யாருண்டு என்னைத்தவிர

    அவப்பெயர்நீக்கி நல்லவனாக்கி காட்டுவேன்

    நம்பிக்கைதான் வைத்தார் அவருமிவனிடம்

    நம்பினார் கெடுவதில்லை வேதத்தின்தீர்ப்பு

    ’தம்பி, இனிநல்லதையே நினைக்கப்பழகு

    வம்புதனை விட்டுவிடு நல்லவனாயிரு

    நல்லதையே நினைத்து உனைவளர்த்தேனென

    நல்லபலவார்த்தை சொன்ன அருட்தந்தையை

    வன்கொடுமையாய் தன்கத்தியால் குத்திஅவர்தம்

    பொன்செல்வத்தை களவாடி ஊரைவிட்டோடினான்

    வழியில் காவலர்கள் பிடித்தனர்கட்டுப்போட்டு

    கழிகொண்டடித்தனர் கொள்ளை விவரம்கேட்டனர்

    பாரறிந்த நல்லவராம் அருட்தந்தைபெயர்சொன்னால்

    ஊர்க்காவலர் தம்மைவிட்டு விடுவரென்றெண்ணி

    அருட்தந்தை அவர்பிள்ளை தனக்காககொடுத்ததென

    பெரும்பொய்யொன்றைக் கூசாமல் சொன்னானே

    வல்லவராம்காவலரும் அவன்சொன்ன வார்த்தையால்

    நல்லவராம் அருட்தந்தை இல்லத்தில்சேர்த்தாரே

    அங்கேதரைதனில் குருதிவெள்ளத்தில் அருட்தந்தை

    அங்கம்துடிப்போடு படுத்துக்கிடக்க நிலையறிந்த

    காவலர்மருத்துவருக்கு ஆளனுப்பி காயம்பட்ட

    விவரத்தைக் கூறக்கேட்க அருட்தந்தையோ

    தன்மகனாம் இவனுக்கு மறுவாழ்க்கைக்கொடுக்க

    என்செல்வங்களாம் தங்கநகைகளைத் தந்தேனே

    இன்னும்ஏதேனும் தருவதற்கு பரண்மீதேறுகையில்

    தன்தவறால்கத்தி தடுமாறி தன்மீதுவிழுந்ததென

    தயக்கமின்றி அவர்பேச தடுமாறிபோனான்கள்வன்

    மயக்கம்வந்தது மனதும் தெளிந்ததுமாறிப்போனான்

    ’எந்தையே எனைக்காக்கும்தெய்வமே மன்னியும்

    சிந்தைதெளிந்தேன் உமதன்பினாலே மாற்றினீர்!

    காசுபணம்செல்வம் இவையே நம்பினேன்ஆனால்

    மாசற்றஅன்பே தெய்வம் என்போர்பெரியோர்

    நீவிர்காட்டிய அன்பால் எமையாட்கொண்டீர்

    நீவிர்தெய்வம்.. எனைமன்னியுமென கால்பற்றினான்

     

     

    தம்பி! கேட்டாயா இந்தக்கதையை

    நம்பிக்கை வைத்திரு அன்பின்மேலே

    அன்பால் கொடியவரை வெல்லலாம்

    அன்பைப் பிறர்மீது திருப்பினால்

    அன்பால் எதையும் வாங்கலாம்

    அன்பை மற்றவரிடம் காட்டினால்

    அன்பொன்றே நாமறிந்த ஆயுதமாய்

    அன்பொன்றே நாமறிந்த மந்திரமாய்

    அன்பொன்றே நாமறிந்த தெய்வமாய்

    என்றைக்கும் சிந்தித்துச் செயல்படுவாய்!!

     

     

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

    என்பும் உரியர் பிறர்க்கு. (திருக்குறள் – 72)

     

    அன்பு இல்லாதவர் எல்லாவற்றையும் தமக்கே உடமையாகக் கொண்டு வாழ்பவர். அன்பு உள்ளவரோ தன் உடல் பொருள் அனைத்தையும் பிறருக்காக என்றே கருதி உதவி அருளுபவர்.

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • பிரியே சகியே அன்பே ஆருயிரே

    திவாகர்

    c2311b6b-ff9e-48f3-888a-df00e3d8c069

    அன்புள்ள ராகி’,

    பிரியே சகியே அன்பே ஆருயிரே என்றெல்லாம் இந்தக் கடிதத்தைத் தொடங்கலாமே என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஒருவேளை அது உனக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம் என்ற ஒரு சந்தேகமும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்ததால் இப்படிப்பட்ட ஃபார்மாலிடிக்குள் நுழையாமல் நேரடியாகவே சப்ஜெக்ட்’டுக்கு வரப் பார்க்கிறேன்.

    மூன்று மணி நேரமாக மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறேன். நீ கடைசியாக ராத்திரி மொபைலில் பேசும்போது உன்னிடம் ஏதோ சொல்லவேண்டும் என்று சொன்னேன் இல்லையா.. ஆனால் நீ காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.. நீங்க என்ன சொல்லவேணுமோ அதையெல்லாம் தூங்கறதுக்கு முன்னாடி ஒரு லெட்டெர் எழுதி நாளைக்கு மறக்காம போஸ்ட் பண்ணுங்க’ன்னு சொல்லி டபக்’கென வைத்துவிட்டாய்.

    உன் ஐடியா புரிகிறது. போன தடவை நீ சிம்லா சென்ற போது இதே போல ஒரு கடிதம் எழுதி அனுப்பியதை உன் அக்கா பரம ஆனந்தமாக ரசித்தாள் என்று சொல்லியிருந்தாய்.. அதே உன் அக்காவின் ஆனந்துத்துக்காக மறுபடியும் ஒரு கடிதம்தான் என்னிடமிருந்து வரட்டுமே என்று நீ எதிர்பார்க்கிறாய் போலும்.. ஆனாலும் அந்தக் கடிதம் எழுதி ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டபடியால் எனக்கு இந்தக் கடிதங்கள் எழுதும் கலையும் மறந்து விட்டபடியால், எப்படி ஆரம்பிப்பது எனக்கூட தெரியாமல் முழிப்பது வாஸ்தவமே.. ஆனாலும் நீ மெனக்கெட்டு கடிதம் கேட்டதால் அதை எழுத வேண்டிய கட்டாயத்தால் நான் கடந்த மூன்று மணி நேரமாக எப்படியும் எழுதி முடித்துவிட்டுத்தான் தூங்குவது என்று விடாப்பிடியாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் ‘உன் வார்த்தைக்கு நான் எவ்வளவு தூரம் மதிப்புக் கொடுக்கிறேன்’ என்பதைப் புரிந்து கொள்ளவும்.

    நாம் போனில் பேசும்போதெல்லாம் நீயே பேசிக் கொண்டிருப்பதும் நான் ‘உம்’ கொட்டுவதும் வழக்கமாகிவிட்டதும் இந்தக் குழப்பத்துக்கு இன்னொரு காரணமாக இருக்கலாமோ என்னவோ..

    சென்றமுறை உன் அக்காவின் உடல்நலம் தேறுவதற்கு நானும், முக்கியமாக என்னுடைய கடிதமும் காரணம் என்று நீயே பலமுறை வருவோர் போவோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு நினைவு வந்து இப்போது கொஞ்சம் உற்சாகப்படுத்துகிறது. உன் அக்கா சந்தோஷப்படுவதற்காகவாவது நான் கடிதம் எழுதியே ஆக வேண்டும் என்று இந்த நடு இரவிலும் நான் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

    கொஞ்சநேரம் முன்புதான் பக்கத்து ஃபிளாட்டு மோகன் வந்தார் (ன்). வாசற்கதவு இன்னும் தாழ்ப்பாள் போடவில்லையாதலாலும், நானும் என்னதான் எழுதுவது என்ற தீர்க்க யோசனையில் அப்படியே பேப்பரும் பேனாவும் வைத்துக் கொண்டிருந்ததாலும் வந்தவரை முதலில் கவனிக்கவில்லை. மோகன் “என்ன சார் மிஸ்ஸஸ் ஊர்ல இல்லைன்னதும் ஒழுங்கா செலவுக் கணக்கைக் காமிக்கணுமே’ன்னு கணக்குப் போடறீங்களா’ என்று கேட்டு அசடு வழிந்தார்.

    நான் அவர் மீது கோபப்படாமல் ‘இல்லை சார், லெட்டெர் எழுதுகிறேன் சார் லெட்டெர், அதுவும் என் அருமை மனைவிக்கு’ என்று நெஞ்சை நிமிர்த்தி கொஞ்சம் பெருமையாகச் சொன்னதும் அவருக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது. அடக்கமுடியாமல் ஹாஹ்ஹா என சிரித்துவிட்டு ஏதோ பெரிய ரகசியத்தை அறிந்து விட்டவர் போல அவர் மனைவி பத்துவை (சாரி, பத்மான்னுதான் பேர். நீ அடிக்கடி பத்து..பத்து’ன்னு கூப்பிடுவாய் இல்லையா.. ஒரு ஃஃப்ளோ’வில் அப்படி எழுதிவிட்டேன்.. என்னைப் பொருத்தவரை அந்தம்மா பெயர் எப்போதும் பத்மாவதிதான் என்பதை நீ நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.. இதைப் பற்றி நமக்குள் வேறெந்த விவாதமும் தேவையில்லை)

    அந்த பத்மா உடனே ஓடிவந்துவிட்டாள். இவர் ஏதோ பெரிய ஜோக் சொல்வது போல ‘உனக்குத் தெரியுமா பத்மா.. நம்ம சார் தன்னோட சம்சாரத்துக்குக் கடிதம் எழுதறார் பார்..” என்று தன் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகச் சொல்லிவிட்டு அத்துடன் விடாமல் கோராமையாக ஹோஹ்ஹோ எனச் சிரித்தார். அந்த பத்மா என்னை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு ‘ராகினிதான் டெய்லி நூறுதரம் போன்’ல உங்களோட பேசறாளே.. இப்ப எதுக்கு லெட்டெரெல்லாம் போடறீங்க’ன்னு கேட்டதும் கொஞ்சம் யோசித்தேன். ’பார்த்தாயா.. நீ என்னிடம் நூறு தரம் பேசுகிறாயாம்.. காலையில் ஒரு அரை மணி நேரமும், ராத்திரி ஒரு மணி நேரமும் பேசுகிறாய் என்பது வாஸ்தவம்தான்.. நடுவில் நானாகத்தான் உனக்கு ஏதாவது ஒருமுறை போன் போட்டுப் பேசினால்தான் உண்டு. அது எப்படி இந்த பத்துவுக்கு (சாரி, பத்மாதான்) நூறு தடவையாக கண்களில் படுகிறது என்று நினைத்துப் பார்த்தேன்.

    இதற்குள் அவளே அவள் கணவனை என் முன்னாலேயே குற்றம் சொல்ல ஆரம்பித்து விட்டாள். ’கல்யாண ஆன புதுசுல ஒரே ஒரு கார்டு போட்டவர் இவர். அதிலே ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.. மொட்டையாக நான் இத்தனாந்தேதி புறப்பட்டு வருகிறேன்.. ஸ்டேஷனுக்கு ஆள் அனுப்பவும்’னு கட்டளை வேற.. என்ன இருந்தாலும் ராகினி கொடுத்து வைத்தவள்,. பாருங்களேன்.. ராத்திரி இத்தனை நாழியாச்சு, இன்னும் உட்கார்ந்து அழகாக பொண்டாட்டிக்கு கடுதாசி போடணும்’னு உங்களுக்குத் தோணறதே’ என்று ஆதங்கப்பட்டாள்.

    உடனே அவள் கணவன் சமாதானம் செய்ய ஆரம்பித்துவிட்டான். “அதற்காகத்தான் பதிலுக்கு சண்டை போட்டு பட்டுப்புடவை ஒன்று உடனே உடனே வாங்கிக் கொடுத்தேனே.. மறந்து விட்டாயா’ என்று கேள்வி கேட்க, அவள் அந்தப் புடவை வாங்கியவுடன் அதிசீக்கிரம் கிழிந்து போன கதையை கொஞ்சம் பெரிய குரலில் விரிவாகச் சொல்லிக் கொண்டே போக, இந்த சப்தத்தைக் கேட்டு மாடி ஃஃபிளாட் சுப்பு மாமியும் அவள் மூன்றாவது தங்கையான அருணாவும் கடகடவென கீழே இறங்கி வந்தார்கள்.

    “ஏதோ பெரிய சப்தமா கேட்டுதே.. நீங்க தனியா வேறே இருக்கிங்களா, என்னவோ ஏதோ’ன்னு பயந்து வந்தோம்.. நல்ல காலம் கலகலவென பேசிண்டுதான் இருக்கீங்க..” என்று ஏமாற்றப் பெருமூச்சு விட்டு அவள் தங்கையை அறிமுகம் செய்ய முன்வந்தாள். நான் உடனே முந்திக் கொண்டு “தெரியுமே உங்க மூன்றாவது தங்கை அருணாதானே, பெங்களூர்ல இருக்காங்க இல்லே.. உங்க தக்காளி தொக்கு..’ என்று ஆரம்பித்தேன்.. அவளுக்கு உடனே என்னை நன்றாக ஞாபகம் வந்துவிட்டது.. ”ஆமாமா.. உங்களுக்குக் கூட நான் தக்காளித் தொக்குக் கொடுத்திருக்கேன் இல்லே.. (இவளுக்கு இதே வேலையோ என்னவோ) இப்போ நினைவு வந்தாச்சு.. உங்களுக்கு நான் ரெசிபி கொடுத்தேனே.. அதன்படி உங்க மிஸ்ஸஸ் செய்யறாங்களா” என்று ஏதோ டாக்டர் நோயாளியை ‘சரியாக மருந்தெல்லாம் சாப்பிடுகிறாயா’ என்பது போல கேட்க ஆரம்பித்தாள். உனக்குதான் தெரியுமே.. நான் தக்காளி தொக்கைக் கடைசியாக அன்று ஒருநாள்தானே பார்த்தேன்.. இதை எப்படி இவளிடம் சொல்வது என்று முழித்துக் கொண்டிருக்கும்போதே நல்லகாலமாக மோகன் தலையிட்டான்.

    ”சார்.. அவங்க மிஸஸ்ஸுக்கு கடுதாசி எழுதிக்கொண்டிருந்தார், நாங்க வந்து டிஸ்டர்ப் பண்ணிகொண்டே இருக்கறச்சே.. நீங்களும்..” என்று அசடு வழிய சமாளித்தான்,

    அந்த அருணா உடனே “என்னது லெட்டர் ரைடிங்கா.. ரொம்ப இண்டரெஸ்டிங் சப்ஜெக்ட்டாச்சே.. என்னைக் கேட்டா காலேஜிலே ஒரு சிலபஸ் மாதிரி இதை வெக்கணும்’னு சொல்வேன். உங்களுக்குத் தெரியுமா.. மூணாம் வருஷம் எனக்கு கல்யாணம் ஆன புதுசுலே நான் என் வீட்டுக் காரருக்கு ஒரு கடுதாசி எழுதினேன். ரொம்ப கஷ்டப்பட்டு அகராதியெல்லாம் பார்த்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதி அதை அவருக்கு போஸ்ட் பண்ணி அதை அவருக்கு போன்’லயும் சொல்லிட்டேன். ஆனா ரெண்டு மூணு நாளானாலும் அந்தக் கடுதாசி வரவே இல்லியாம். இவர் கடுதாசிக்காக காத்திருந்து அது வராமே கடைசியில் இவரே இங்கே வந்துட்டார்”.

    ”கடைசியில் அந்தக் கடிதம் என்ன ஆச்சு” என்று மிகப் பெரிய சஸ்பென்ஸோடு மோகன் ஆவலாகக் கேட்க பத்மா இவனை முறைக்க, அந்த அருணா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவள் எழுதிய கடிதம் அவளுக்குத் திரும்ப வந்ததையும் அவள் புருஷனை ஆயிரம் முறை அதைப் அவள் முன்பே படிக்க வைத்ததையும் பெருமையாகப் பீற்றிக் கொண்டாள். அடடா’ நீ இன்னும் இந்த அருணாவைப் பார்க்கவில்லை இல்லையா. என்னவோ தெரியவில்லை.. சரியாக நீ இல்லாத நாட்களில்தான் அதுவும் நான் கடிதம் எழுதும்போதெல்லாம் அவள் வருகிறாள்.. வேடிக்கையாக இருக்கிறது இல்லை..

    எப்படியோ என் கடித எழுத்துக்குத் தடையாக கொஞ்ச நேரம் இருந்துவிட்டு எழுந்து போனார்கள். போகிறபோது அந்த பத்மா என்னிடம் சிபாரிசு வேறு.. அடுத்த வாரம் அவள் ஊருக்குத் தனியே போகிறாளாம்.. அன்பா, அழகா ஒரு கடிதம் பொண்டாட்டிக்கு எழுதுவது எப்படின்னு அவள் புருஷனுக்கு நான் ஒரு டிரெயினிங் கொடுக்கணுமாம். அவனும் கூசாமல் ‘ யார் யாரோ எழுதறாங்க சார்.. நானும் ஒரு லெட்டர் எப்படியாவது எழுதணும் சார்.. ஸ்கூல் படிக்கறச்சே ‘லெட்டர் ரைடிங்’ கிளாஸே இருந்துச்சு சார்.. அப்பல்லாம் இண்ட்ரெஸ்ட் இல்லாம விட்டாச்சு. எப்படியாவது உங்கள்ட்ட கத்துக்கணும் சார்’ என்று ஏதோ மிகப் பெரிய ரகசியத்தை என்னிடம் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்’ என்பது போல கெஞ்ச ஆரம்பித்தான்.. அந்த பத்மாவும் ‘நீங்க எப்படியாவது ட்ரெயின் பண்ணித்தான் ஆகவேண்டும்’ என்று கட்டாயப் ’படுத்தி’விட்டுத்தான் சென்றாள் என்றால் பார்த்துக் கொள்ளேன்.. நான் ஒரு பதிலும் அவர்களுக்கு சம்மதமாகத் தெரிவிக்கவில்லை என்பதையும் உனக்கு சொல்லிவிடுகிறேன்..

    இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நான் ஏதோ கடிதம் எழுதுவதில் நிபுணன் என்று இவர்கள் நினைத்துக் கொண்டதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்ததும் அந்த ஒரு எண்ணத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஒரு நோக்கத்தில்தான் எழுதினேன்.

    பழைய காலத்தில் இந்தக் காதலன் காதலிக்கு நீண்ட கடிதங்கள்லாம் எப்படியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதினார்களோ.. என்ன விஷயமாக வைத்து அத்தனை பெரிய கடிதங்கள் எழுதுகிறார்கள் என்று நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை கண்ணே, மணியே கற்கண்டே உன்னைக் காதலிக்கிறேன் என்று இம்போசிஷன் எழுதுவார்களோ என்னவோ.. இருந்தாலும் கடிதம் என்று வந்துவிட்டால் அதை எழுதிவிட்டு போஸ்ட் பண்ணி விட்டால் அதில் ஒரு திருப்திதான்..

    உனக்கு நினைவு இருக்குமோ என்னவோ.. நான் கூட உன்னை ஒரு தடவை கேட்டேன்.. ’நீ எனக்கு ஒரு கடிதம் எழுதவேண்டுமெனத் தோன்றினால் போல சும்மா ஒரு லெட்டர் எழுதிக் காண்பியேன்.’. என்று.. அதற்கு ’ஐயய்ய.. இப்படில்லாம் உங்களுக்கு ஆசையோ’ என்று நீ எனக்கு அழகுக் காட்டி சிரித்தது எனக்கு இன்னமும் நினைவுக்கு வருகிறது..

    அடடா, உன்னிடம் ஏதோ முக்கிய விஷயம் சொல்லவேண்டுமென போனில் சொன்னேன் அல்லவா. நீ கூட இந்தக் கடிதத்தில் எழுதி அனுப்பச் சொன்னாயே.. அது இந்த நிமிடம் வரை ஞாபத்துக்கே வரமேட்டேனென்கிறது.. ஞாபகம் வந்ததும் அதை போனிலேயே சொல்லி விடுகிறேனே..

    அப்புறம் உன் அக்காவை மிகவும் கேட்டதாகச் சொல்லவும் (போன தடவை இதை எழுதியதில் உன் அக்காவுக்கு பரம திருப்தி என்று நீ இங்கே வந்ததும் சொன்னது நினைவுக்கு வருகிறது. )

    மற்றவை போனில்

    உன் அன்புக் கணவன்.

    (வாசகர்களுக்கு அன்புக் கணவன் தன் மனைவிக்கு எழுதிய முதல் கடிதத்தை வாசிக்க http://www.vallamai.com/?p=40314 என்ற லிங்க்’க்கு செல்லவும்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர்  27, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  திரு. வெ. திவாகர் அவர்கள்

    V. Dhivakar

    இந்த மாதம் அக்டோபர் 11, 2014 அன்று 195 கி.மீ. வேகத்தில் வீசிய ‘ஹூட் ஹூட்’ புயல், ஆந்திர மாநிலத்தின் துறைமுக நகரமான விசாகப்பட்டினத்தில் கரையைக் கடந்து நகரை சூறையாடியதுடனல்லாமல் அதன் காரணமாக ஆறு பேர் உயிரிழக்கவும் நேரிட்டது. இவ்வாறு அடுத்த வீட்டு ஆந்திராவை அலங்கோலமாக்கிய புயலை, விசாகையில் வசிக்கும் திரு. திவாகர் அவர்கள் அந்தப் பேரிடரிலும் தனது சிரமத்தைப் பொருட்படுத்தாது தொகுத்து வழங்கிய மேன்மையான செயலைப்பாராட்டி அவரை வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமைக் குழுவினர் பெருமை அடைகிறோம்.

    நாடகக் கலைஞரும், எழுத்தாளருமான திரு. திவாகரை அறியாத வல்லமை வாசகர்களே இருக்க வழியில்லை. வல்லமை வாசகர்களுடன் தனது படைப்புகளைப் பகிர்ந்து கொள்வதுடன், இந்த “வல்லமையாளர் விருது” வழங்கிப் பாராட்டும் பொறுப்பையும் ஏற்று ஒரு நூறு வல்லமையாளர்களைத் தேர்ந்தெடுத்துப் பாராட்டி மகிழ்ந்தவரே அவர்தான். அடுத்தவர்களைப் பாராட்டி ஊக்குவிக்கும் செயலை மேற்கொண்ட சிறந்த வல்லமையாளர்களில் ஒருவரான திவாகர், அப்பணியின் காரணமாகவே காலந்தாழ்த்தி இப்பொழுது வல்லமையாளராகப் பாராட்டப்படும் ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது.

    விசாகப்பட்டினத்தில் பல ஆண்டுகளாக வாழ்ந்துவரும் திவாகர் ஆந்திராவைக் குறிப்பிடும் பொழுது அடுத்தவீடு என்றே குறிப்பிடுவார். “அடுத்த வீடு – நம் தமிழகத்தின் அடுத்த வீடு இந்த ஆந்திரதேசம்தானே.. ஆந்திரதேசத்தில் என்னுடைய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்…” என்று ஆந்திர அனுபவங்களை “அடுத்தவீடு” என்ற வலைப்பூவில் பதிவு செய்து வருகிறார். தமிழ்மக்களுக்கு ஒரு நேர்முக வர்ணனையாளர் போன்று ஆந்திர செய்திகளை ஆறு ஆண்டுகளாகப் பகிர்ந்து வந்திருக்கிறார் திவாகர்.

    “ஆந்திரப்பிரதேசம் ஆத்திரப்பிரதேசமாக மாறியது ஏனோ” என்று ஆந்திரம்-தெலுங்கான பிரிவினைக்கு முன்னிருந்தே ஆந்திரா தெலுங்கானா சர்ச்சைகளை “அடுத்த வீட்டு ஆந்திராவை இப்போது ரணகளமாக்கும் தெலுங்கானா பிரச்னை” எனக் கடந்த ஐந்தாண்டுகளாகப் பதிவு செய்து வந்திருக்கிறார். மார்கழியில் ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் திருப்பாவை தமிழில் ஒலிப்பது, ஆந்திர மாநிலக் கோயில்கள், திருப்பதி பிரசாதம் – பங்கு விற்பனை, காளஹத்தி கோயில் தலைவாசல் கோபுரம் சுக்கு நூறாக இடிந்து விழுந்த காட்சி, தெலுங்கு எழுத்தாளர்கள் பற்றி, ஆந்திர உணவு, விசாகப்பட்டின தமிழ்ச்சங்க நடவடிக்கைகள் எனப் பல தகவல்களை இதுவரை பகிர்ந்து வந்திருக்கிறார். அவ்வாறு இதுவரை பதிவு செய்து வந்த அவரது அனைத்து அடுத்த வீட்டுப் பதிவுகளையும் ஒப்பிடும்பொழுது ஹூட் ஹூட் புயலினால் ஏற்பட்ட அழிவை விவரிப்பது அவருக்கு மிகவும் வேதனை தரும் நிகழ்வாக இருந்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இருப்பினும் தனது நேரடி அனுபவங்களை அவருடைய அடுத்த வீட்டில் ஏற்பட்ட அலங்கோலங்களை” “ஹூட் ஹூட் புயலின் தாண்டவம் – ஒரு நேரடி அனுபவம்”   என்று தமிழ் வெப்துனியா செய்தித் தளத்திலும், கூகுள் தமிழ்க் குழுமங்களிலும் அவர் பகிர்ந்து கொண்டது தொழில்முறை செய்தியாளர்களையும் பின்னுக்குத் தள்ளிய செயலாகும்.

    மிகச் சிறந்த எழுத்தாளரான திவாகரை பலர் வரலாற்று புதினங்கள் எழுதுபவராகவும் நன்கறிவர். கடைக்கோடி வடக்கு ஆந்திரத்தைத் தளமாகக் கொண்டு தமிழர் புகழ் சொல்லும் வரலாற்றுப் புதினம் “வம்சதாரா” இவர் எழுதிய முதல் வரலாற்று நூல். தொடர்ந்து, சென்னை பழனியப்பா பிரதர்ஸ் பதிகப்பகத்தினரால் வெளியிடப்பட்ட “திருமலைத் திருடன்” என்ற பதினொன்றாம் நூற்றாண்டு சம்பந்தப்பட்ட வரலாற்றுப் புதினம், மதராசபட்டினத்தில் குண்டு வீசிய எம்டன் கப்பல் நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு “எஸ். எம். எஸ் எம்டன் 22-09-1914”  என்ற வரலாற்று நூல், “விசித்திர சித்தன்”, “தேவன் நூறு”, “நம்ம ஆழ்வார் நம்மாழ்வார்”, “ஆனந்த விநாயகர்” என்ற தெலுங்கில் இருந்து மொழி பெயர்க்கப்பட்ட நூல், சோழ மன்னன் குலோத்துங்கனின் காலக் கதையான “அம்ருதா” என்ற சமீபத்திய வரலாற்று நூல் வரை பலநூல்களை வெளியிட்டுள்ளார்.

    V. Dhivakar3

    திவாகரின் தமிழ்ப்பணி இலக்கியபபடைப்புகள் என்ற வட்டத்தில் அடங்கியதல்ல. அவர் தேவாரத்தை தெலுங்கில் மொழிபெயர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளார். விசாகப்பட்டினத்தின் தமிழ்ச்சங்கத்தின் செயலாளராகவும் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொண்டாற்றி வருகிறார். அங்கு தமிழ்ச்சங்கத்தில் வள்ளுவர் சிலை நிறுவிய பணியிலும் பெரும் பங்காற்றினார். “வெளியூரில் தமிழ்ச்சங்கம் வைத்து அதை சரியாக வளர்ப்பது எப்படி ?…..இப்படி யாராவது கேள்வி கேட்டால் பதில் சொல்ல நான் உடனே பள்ளி மாணவன் கையை தூக்குவது போல தூக்கி விடுவேன்” என்று நகைச்சுவையாக தனது தமிழ்ச்சங்க பணிகள் பற்றியும் குறிப்பிடுகிறார் திவாகர்.

    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்கு ஆய்வுக்கட்டுரை வாசிக்க அழைப்பு வந்த பொழுது இவர் வாசித்ததமிழும் இந்திய தமிழ்ச்சங்கங்களும் என்ற ஆய்வுக்கட்டுரை நல்ல பல ஆலோசனைகளை முன் வைத்தது. அக்கட்டுரையின் முக்கியக் கருத்துகள் சுருக்கமாக கீழே வழங்கப்பட்டுள்ளது:

    […]

    இன்று இந்திய மாநிலங்களின் அனைத்து முக்கிய நகரங்களிலும் தமிழ்ச்சங்கங்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. தமிழ்ச்சங்கங்களின் தலையாயப்பணி நிச்சயமாக தமிழைப் பேணிப்பாதுகாப்பதில்தான் இருக்கவேண்டும். இதனை இங்கே தயங்காது ஏன் கூறுகிறேன் என்றால் பல தமிழ்ச்சங்கங்களின் தற்போதைய நிலையை நன்கு அறிந்தவன் நான். அந்த தமிழ்ச்சங்கங்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டுமானால் திரைப்படம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளோ, பிரபலங்களின் பாடல் கச்சேரிகளோ அல்லது கூத்தாட்டங்களும், குதியாட்டங்களும் நிறைந்த பொழுது போக்கு நிகழ்ச்சிகளோ நடத்தப்படவேண்டிய காலகட்டத்தில் உள்ளனர் சங்க நிர்வாகிகள். தமிழ் மக்களுக்கு எழுச்சி ஊட்டும் நிகழ்ச்சிகள் கேளிக்கை நிகழ்ச்சிகள் மட்டுமே என்ற சூழ்நிலை உள்ள காலகட்டமிது. அதனால் இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிக அளவில் நடத்தப்படுகிறது. இந்தக் கேளிக்கை நிகழ்ச்சிகளை ஒரேயடியாகக் குறைக்காமல் மெல்ல மெல்ல நம் மக்களுக்குத் தமிழில் ஆர்வம் காட்டும் விஷயங்களாக நிகழ்ச்சிகளை அவர்கள் முன் எடுத்துச் செல்லவேண்டும்.

    V. Dhivakar2
    […]
    இந்தத் தமிழ்ச்சங்கங்களுக்குத் தாயக தமிழகத்தில் அரசு தகுந்த அங்கீகாரம் அளிக்கவேண்டும். தாயகத் தமிழகத்தில் தமிழ்ச்சங்க ஆணையம் ஒன்று நிறுவப்படவேண்டும். இந்த ஆணையத்தின் கீழ் ஆங்காங்கே பதிவுசெய்யப்பட்ட தமிழ்ச்சங்கங்கள் அங்கத்தினராகி தமிழக அரசின் உதவியோடு செயல்படும்போது, அதுவும் தமிழுக்காக செயல்படும்போது நம் தமிழன்னை நம்மை எப்போதும் வாழ்த்திக் கொண்டே இருப்பாள்.
    [ http://www.aduththaveedu.blogspot.com/2010/06/blog-post.html ]

    கவியரங்கில் பங்கு கொண்டு கவிதை வாசிக்கும் திவாகர் ஒரு கவிஞரும் கூட, பிடுங்கப்பட்ட எனது பல் என்னைப் பார்த்து முறையிட்டுக் கேட்ட கேள்விதான் இது என்று விளக்கமுறைத்து “பிரிவு நிரந்தரமே” என்று இவர் வழங்கிய இவரது கவிதையில் ஒரு பகுதி …

    ஒன்றா இரண்டா
    ஐம்பது வருட பந்தம்
    உன்னோடு என் உறவு
    இனியும் வேண்டுமோ

    எப்படியெல்லாம் இருந்தோம்
    எண்ணிப்பார்க்கிறேன் நான்
    அழுகை வருகிறது எனக்கு
    அன்பான அந்தக் காலகட்டம்

    பல்லின் முழு முறையிடலையும் (முழுக்கவிதையும்) இங்கு காணலாம் – http://www.vamsadhara.blogspot.com/2009_03_18_archive.html

    இந்த நகைச்சுவைக் கவிதையைப் போன்றே, இவரது தொலைபேசி உரையாடல் வழி நிகழ்வுகளை விவரிக்கும் நகைச்சுவைக் கதைகளும் திவாகரின் எழுத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காட்டும். வரலாற்று நூல், வலைப்பதிவுகள், நகைச்சுவை, கதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், தமிழ்ச்சங்கப் பணிகள் என தமிழுக்கு இவர் ஆற்றிவரும் பங்களிப்புகள் தொடரட்டும் என வாழ்த்தி வல்லமைக் குழுவினர் எங்களுடைய பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • சரிகமபத நீ..கல்யாணி

    திவாகர்

    ஸார்.. எதுக்கு இந்த விஷப்பரீட்சை.. சொன்னாக் கேளுங்க.. எனக்கு ஒரு ஞானமும் இல்லே.. கர்நாடக சங்கீதத்துக்கும் எனக்கும் காத தூரம்..இல்லே இல்லே டெல்லி தூரம்.. அத்தோட ஏழு மணிக்கு ரிலையன்ஸ் க்ரூப் பார்ட்டி இருக்கு.. போகணும்..வுட்டுடுங்க ஸார்..”

    ”என்னப்பா.. என்ன சொல்லிட்டேனு இப்படிப் பெரீசா கத்தறே.. ரொம்ப முக்கியமான கச்சேரிய்யா.. இந்தம்மா ஏறத்தாழ ஒரு வருஷமா எந்தக் கச்சேரியும் பண்ணலே.ரொம்ப ஃபேமஸ்.. ஆர்கனைஸர்ஸ் எப்படியோ கஷ்டப்பட்டு இந்த அம்மாவின் அனுமதி வாங்கியிருக்காங்களாம்.. நானே போகணும்.. ஆனா என் கஷ்டகாலம்.. ராத்திரியானா வர்ர தலைவலி சாயங்காலமே வந்துடறது.. இதோ பார்.. நான் ரிடையர் ஆனவுடனே இந்த நாற்காலி’ல நீதான் உட்காரப்போறே! உனக்கு எல்லாம் தெரிஞ்சாகணும்.. கர்நாடக சங்கீதம்’னா எனக்கும்தான் ஒரு எழவும் தெரியாது.. நான் அப்பப்ப எழுதல?.. அதனால.. நான் சொல்லிட்டேன்.. நீதான் அட்டெண்ட் பண்றே.. இன்னொண்ணும் சொல்லிடறேன்.. நம்ம சார்’ஜி கண்டிப்பா பாக்கற பத்தி இது.. இந்த விமர்சன ஆர்டிகிள்’ல கீழே உன் பேரை வேற போடப் போறேன்.. சார்’ஜி பாக்கணும்.. அட.. ந்னு மூக்கு’ல கையை வெக்கணும்.. ரிலையன்ஸ் க்ரூப் மீடிங் முக்கியம்தான். அதனால என்ன.. அந்த மாதிரி பார்ட்டிக்கு இன்னொரு சந்தர்ப்பம் வரும்.. ஆனா இந்தம்மா கச்சேரி சந்தர்ப்பமெல்லாம் உனக்கு வருமா? இப்போதைக்கு எனக்கும் உன்னை விட்டா வேற ஆளு இல்லே.. சங்கீதக் கச்சேரிக்கு போ.. போ.. சரிகமபத நீ’ன்னு எதையாவது எழுதித் தொலை.. அப்படியே பாடற அந்தம்மாவையும் முதல்லே பார்த்து ஒரு அவுட்சைட் பேட்டி எடுத்துக்கோ.. அதையும் பார்த்தா சார்’ஜிக்கு ஆத்மா குளிர்ந்து போகும்.. மனுசனுக்கு ரொம்ப ரொம்ப ஃஃபேவரைட்டாக்கும்.”

    வெற்றிலை மென்றுகொண்டே எடிட்டர் சொல்லிவிட்டார். பேசும்போது அவரையும் மீறி கொஞ்சம் சிவப்பு எச்சில் சொட்டுகள் என் மீது விழத்தான் செய்தன. அவரை இந்தச் சமயங்களில் பேசவைக்கக்கூடாதுதான்.. ஆனாலும் வேறு வழியில்லை.. இவர் உட்காரும் இந்த இருக்கை நாளை எனக்கு வரப்போகிறது.. இந்த விஷயத்தில் இவரும் நமக்கு சாதகம்தான்.. என்ன.. இதோ போகிறேன்.. அதோ போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறாரே தவிர முடிவு எதுவும் எடுக்கவில்லை.. சார்’ஜி மனதில் நான் இன்னமும் ஆழமாகப் பதியவில்லை என்று அவ்வப்போது இவர் வேறு வயிற்றெரிச்சலைக் கிளப்புகிறார்.

    ”இன்னொண்ணு.. இன்னைக்கு உன்னோட இந்த ஸ்டோரிக்கு கடைசி பக்கம் நாலு பத்தி கொடுக்கச் சொல்லி ஸ்பேஸ் ரிசர்வ் பண்ணியிருக்கேன்.. டக்கென்னு எல்லார் கண்ணுலயும் படும்.. போட்டோகிராஃபரிடம் சொல்லிட்டேன். மணிதான் வருவான். சமயம் பார்த்து எடுக்கறதுலே அவன் கில்லாடி.. அவன் எப்பாவாவது போய் எடுத்துடுவான். போட்டோவோட நீ ராத்திரி 12க்குள்ளே ஸ்டோரி ஃபைல் பண்ணிடு.. காலை’ல எழுந்ததும் ஸார்ஜி பாக்கறச்சே முதல் நியூஸ் ஐடம் உன்னோடதுதான்.. உனக்கு ஒரு சீக்ரெட் சொல்லறேன்.. கேட்டுக்கோ.. நியூஸ் பேப்பரை கடைசி பேஜிலேர்ந்து ஆரம்பிச்சுப் படிக்கிற பழக்கம் ஸார்ஜிக்கு எப்பவும் உண்டு..”

    நாங்கள் சார்’ஜி என்று சொல்வது எங்கள் பத்திரிகை முதலாளியான கிஷன்ஜியைத்தான்.. மிகப் பெரிய க்ரூப் கம்பெனிகளின் தலைவரான அவர் இந்தப் பத்திரிகையைக் கையால் தொடுவது கூட கிடையாது’ என்று இதே எடிட்டர்தான் ஒருமுறை தலையில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிறார். அப்படிப்பட்டவர் சங்கீதம் பற்றிய செய்தி மட்டும் பார்ப்பாராம்.. அதுவும் அவருக்கு பிடித்தமான பாடகியாமே.. கடவுளே.. என்ன நினைத்து என்னை இந்தப் பத்திரிகைத் தொழிலுக்கு அனுப்பி வைத்தாயோ..

    என் அறைக்குள் அமர்ந்ததும் குட்டி வந்தான். ‘என்ன சார்.. முகம் ஒரு மாதிரி இருக்கு.. எங்க போக சொல்லிச்சு கிழம்?” என்று கேட்டுக் கொண்டே காபியை மேஜையில் வைத்தான். ஆபீஸ்பையன் என்ற பேர்தான்.. ஆனால் எல்லாம் தெரிந்த இவனைத் தனியாக விட்டால் ஒரு பேப்பரையே நடத்திவிடுவான், என்ன.. எழுத சரியாகத் தெரியாது.. அவ்வளவுதான்.. ஆனால் இந்தக் காலத்தில் பத்திரிகையாளர்களுக்குக் கட்டாயம் எழுதத் தெரிந்துதான் ஆகணும்’ என்று யார் சொன்னது…

    “பாருடா.. பிஸினஸ் கரெஸ்பாண்டெட்’க்கும் கல்சுரல் கரெஸ்பாண்டெட்’க்கும் வித்தியாஸம் தெரிய வேணாமாடா.. இந்தம்மா கச்சேரிக்குப் போய் என்னத்த எழுதப்போறேனோ.. சங்கீதத்தைப் பத்தி ஒரு மண்ணும் தெரியாதேடா”..

    “ஸார்.. ஏன் கவலைப் படறே.. நான் சொல்றதைச் செய்யறியா..”

    “சங்கீதத்தைப் பத்தி நீ சொல்லறியா.. சொல்லு.. சொல்லு.. நான் இப்போ யார் என்ன சொன்னாலும் கேட்கற நிலைமைலதான் இருக்கேன்..”

    “சிம்பிள் சார்.. போனதபா நம்ம எடிட்டர் இந்தம்மா பாடின கச்சேரிக்குன்னு போனார்.. கூடவே வெத்தலைப் பெட்டியோடு நானும் போவேனில்லையா. இவரு முதல்ல என்னா பண்ணார் தெரியுமா.. சும்மா மேடை மேலே போனாரு.. அந்த சபா செக்ரடரி நின்னுகினு இருந்தாரா. அவர்கிட்டே ஏதோ முணுமுணுத்துக்கினே அந்த அம்மா பாடப் போற பாட்டோட லிஸ்ட் முளுசுமா கேட்டுக்கினார்.. அவங்ககிட்டே அதெல்லாம் டைப் பண்ணி ரெடியா இருக்கும் சார்.. கச்சேரி’ல சும்மா கொஞ்ச நேரம் முன்னாடி சீட்’ல உக்கார்ந்தார்.. நடுவுல ஏதோ போன் வந்தது மாதிரி கையில மொபைல் பிடிச்சுண்டே சடார்’னு எழுந்து வெளியே வந்தார்.. அவ்வளவுதான்.. அப்புறம் ஆபீசுக்கு வந்துட்டோம்..அந்த மாதிரி நீங்களும் பண்ணுங்க.. அந்த செக்ரடரி கொடுக்கற பேப்பர்ல இருக்கறதை அப்படியே எழுதப் போறிங்க.. நடுவுல ஆஹா அருமை.. ஓஹோ அது பிரமாதம், இது உசத்தி’ன்னு மசாலா போட்டுடுங்க..”

    அவன் சொன்ன ஐடியா அந்தக் கணத்திலேயே மிகவும் பிடித்துப் போனது.. இவனல்லவா உண்மையான பத்திரிகையாளன்..’ இருந்தாலும் குட்டி சற்று வேண்டுமென்றே அலுத்துக் கொண்டான்.

    ”ம்.. பேசாம இந்தக் கிழவன் உங்களுக்குப் பதிலா என்னிய அனுப்பிச்சிருக்கலாம்..”

    “அடேய் குட்டி, இந்தக் கிழம் போனதுமே நான் எடிட்டர்.. அப்படி வந்த உடனே உனக்கு டபுள் பிரமோஷன்..டா..”

    “என்ன சார்.. கனாக் காணறிங்களா?.. கிழம் போகும்கிறீங்க? ரெண்டு அட்டாக் பாத்தாச்சு, ஆபிஸ் செலவுல ஆபரேஷன் பண்ணிட்டு ஜாலியா அங்கே உட்கார்ந்திருக்கு.. இதோ சூடா வெங்காய பஜ்ஜி வேற வாங்கியாறச் சொல்லியிருக்கு.. நான் ஓடறேன்..” அவன் நிஜமாகவே ஓடிவிட்டான்.

    நான் என் நடையைக் கட்டினேன்.. அட, கச்சேரிக்கெல்லாம் பயமா.. சேச்சே.. ஊதிடலாம்.. நேரே ஆடிட்டோரியம் போகணும், எவனாவது செக்ரடரியைப் பார்த்துட்டு பாட்டோட லிஸ்ட் வாங்கணும்.. கொஞ்ச நேரம் அங்கே உட்கார்ந்திருக்கணும்.. அப்பறம் அப்படியே வெளியே வந்து காண்டீன்’ல ஏதாவது சூடா சாப்பிட்டவுடனே ஜூட் விட்டுட வேண்டியதுதான்.. அட, அந்தப் பாடகியை ஒரு சின்ன பேட்டி எடுக்கணுமே.. பார்க்கலாம்.. இதெல்லாம் ஒரு பிரச்னையா.. சமாளிச்சுடலாம்.. என் கண் முன்னே இன்னொரு அழகான காட்சி விரிந்தது. சார்’ஜி கை குலுக்குகிறார். அருமையா எல்லா சப்ஜக்ட்டையுமே எழுதறீங்க.. உட்காருங்க இந்த நாற்காலியில்’ என்று என்னை அமர வைக்கிறார். எடிட்டர் முகத்தில் பெருமை.. ’என் சீடனாச்சே’ என்று முதுகில் ஷொட்டுகிறார். தலையைச் சற்று அசைத்துக் கொண்டேன். கனவை நினைவாக்க ஒரு நல்ல சந்தர்ப்பம்தான்.

    நினைத்தவுடனே எளிதாகிவிட்ட மனதுடன் அந்த அகன்ற அரங்கத்துள் நுழைந்ததும் முதலில் என் கண்ணில் பட்டது திருமலை நாயுடுதான்.. திருமலை நாயுடு மிகவும் தெரிந்த தொழிலதிபர் என்பதோடு சென்னை மாநகர வியாபார சங்கத்துத் தலைவரென்பதாலும் அடிக்கடி நாங்கள் சந்தித்துப் பேச வேண்டிய நிர்ப்பந்தங்களும் உண்டு. . அந்த சபாவுக்கும் அவர்தான் கௌரவத் தலைவராம்.. எனக்கு இப்படிப்பட்ட கச்சேரிகளில், அதுவும் சங்கீதத்தில், இவ்வளவு விருப்பம் இருக்கிறது என்பது தனக்கு தற்போதுதான் தெரியும் என்று எல்லோருக்கும் கேட்கும்படி கத்திச் சொல்லியதோடு அந்த சபா காரியதரிசியையும் அழைத்து என்னை அறிமுகம் செய்தார். அவரைப் பக்கத்தில் தள்ளிக்கொண்டே பேசினேன்.. ‘சார்.. உங்களைப் பத்தி எங்க எடிட்டர் ரொம்பப் புகழ்ந்து சொல்லிருக்காரு.. அது சரி, இவங்க பாடல் பாடற லிஸ்ட் கிடைக்குமா..” என்று கேட்டு வைத்தேன்.

    “அட, லிஸ்ட்’தானே.. எங்கிட்டே இல்லே.. இருந்தாலும் க்ரீன் ரூமுக்கு வாங்க.. அவங்க வந்துட்டாங்க.. அவங்ககிட்டேயே கேட்டுடலாம்.. அத்தோட ஒரு சின்ன பேட்டியும் எடுத்துடுங்களேன்.. அதுவும் நாளைக்கு பேப்பர்’ல வரட்டுமே, என்ன சொல்றிங்க.. சரிதானா.. சரிதான் சரிதான்..”

    பழம் நழுவிப் பாலில் விழுந்து அதை வாயிலும் ஊட்டினால் வேண்டாமென்றா சொல்வார்கள். ஆனாலும் அதை நான் விருப்பம் இல்லாமல் செய்பவனாகக் காட்டிக் கொண்டு அவரோடு சென்றேன். இன்னமும் அரை மணியாகும் ஆரம்பிக்க.. இந்த அம்மாளைப் பார்க்கவேண்டும்.. ஏதாவது பேசவேண்டும்.. பார்ப்போம்.. சங்கீதத்தில் எனக்கு என்னவெல்லாம் தெரியும்.. கல்யாணி ராகம், ம்ம்.. முகாரி.. ம்ம்.. ஆதி.. அட அது.. அது.. தாளமாச்சே.. ஒருவேளை ராகத்தோட பேர்தானா.. ச்சே.. எத்தனை சினிமா பார்த்தோம்.. ஆங்.. சங்கராபரணம்.. அப்பறம் ஆனந்த ராகம், இப்படி நிஜமாவே பேர் இருக்கோ இல்லையோ.. இந்த ராகத்தை அவாய்ட் பண்ணிடவேண்டியதுதான்.. தில்லானா மோகனாம்பாள், அடச்சே அது நாட்டியப்படம்.. பார்க்கலாம்.. முதல்ல இந்த லிஸ்ட் கையில கிடைச்சா போதும்.. அதுல ராகம் பேர் போட்டுருப்பாங்களே.. அதை முதல்ல வாங்குவோமே..

    ”முக்கியமான ஒரு வேண்டுகோள். கடைசில ஒரு வரி என் பேரை மட்டும் மறக்காம போடுங்கோ.. ஹி.. சும்மா ஒரு நாலு பேர் பார்வைக்கு, ரிகார்டுக்கு இருக்கட்டுமே.. என்ன சொல்றேள்.. சரிதானா? சரிதான் சரிதான்” என்று செக்ரடரி கேள்வியும் பதிலும் தானாகக் கொடுத்ததோடு அவர் விஸிட்டிங் கார்டையும் கூடவே கொடுத்தார். கல்யாணராமன் என்று பேர் போட்டிருந்தது.. அட.. இந்த ராகம்தான் தெரியுமே.. வேறு ஏதாவது ராகத்தின் பெயரை தன் பெயராக வைத்திருக்கக்கூடாதோ..

    நான் ஒன்றுமே பேசாமல் அதை வாங்கிக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்து சென்றேன். அங்கே ஒரு வி.ஐ.பி. அறையில் கதவைச் சட்டெனத் திறந்து உரிமையாக செக்ரடரி உள்ளே நுழைய நானும் பின்தொடர்ந்தேன்..மெலிதான சப்தத்தில் வயலின் ஒலிக்க அதே குறைந்த சப்தத்தில் மிருதங்கத்தைத் தட்டிக்கொண்டிருந்தார் இன்னொருவர். கொஞ்சநேரம் அங்கேயே நின்று ரசித்தார்.

    ”அடடா.. சஹானா ராகத்துல பிச்சு உதறறேள்.. டிஸ்டர்ப் பண்ணிட்டேன்.. இதோ இவர்தான்..” அவர் சொல்வதற்குள் அந்தப் பெண்மணி முந்திக்கொண்டாள்.

    “ஐய்யோ.. இது சஹானா இல்லே பிலஹரியாக்கும்..” என்று சட்டென வெட்டியவளைக் கொஞ்சமும் லட்சியம் செய்யாமல் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    எனக்கு என்னவோ இரண்டு புதிய ராகங்களின் பெயர்கள் கிடைத்த ஒரு சந்தோஷத்தில் ஒரு நமஸ்காரம் போட்டு வைத்தேன். வாத்தியக்காரர்கள் மெல்ல எழுந்து கொள்ள என்னை ஒரு நாற்காலியில் உட்காரச் செய்தாள். செக்ரடரி விடாமல் ’என்ன இருந்தாலும் நீங்க சஹானா பாடறதுன்னா நான் உயிரையே விட்டு விடுவேன்.. அப்படி ஒரு ஈர்ப்பு அந்த ராகத்துல’என்று அவரின் உயிரின் ரகசியத்தை மறுபடியும் பிடிவாதமாக ஒருமுறை அந்தப் பெண்மணியிடம் சொல்லி அசடு வழிந்துவிட்டுதான் அந்த அறையை விட்டு அகன்றார்.

    அறை காலியானதும் என்ன பேசுவது என்று தெரியாமல் கொஞ்சம் முழித்தேன்.. இளமை கொஞ்சுகிறதுதான் என்றாலும் அருகாமையில் பார்க்க அவள் முக அழகு இயற்கையாகவே செழிப்பாக இருந்ததைக் கவனிக்கத்தான் செய்தேன். நெற்றியில் இருந்த சிறிய குங்குமப்பொட்டு அவள் முகத்தழகுக்கு மெருகூட்டியது கண்கள் வேறு குறும்பாகப் பார்த்ததாகப் பட்டது. அவளே ஆரம்பித்தாள்.

    “போனமுறை உங்கபேப்பர்’ல ரிவ்யூ ரொம்ப நல்லாதான் எழுதியிருந்தீங்க…. ஆனா எனக்கு ஒரு சின்னக் கோபம்..”

    குழந்தை போல பேசினாள். குரலில் கரகரப்பு இருந்ததும் அதை மெல்லமாகப் பேசும்போது ஒரு மயக்கமும் கூடவே வந்ததை உணர்ந்தேன்..

    ”அடடா.. எங்க மேல கோபமா?” நான் பொதுவாக கேட்டு வைத்தேன்..

    “உங்க எல்லார் மேலயும் கோபம்’ன்னு சொல்லலே..போனதடவை என் கச்சேரி முடியறதுக்கு முன்னாடி எழுந்து போயிட்டதா செக்ரடரி சொன்னார்.. சரிதானே..”

    அடக் கடவுளே.. இந்த எடிட்டர் கிழம் செஞ்சதை அப்படியே சொல்றாளே.. என மனதுள் நினைத்துக் கொண்டாலும் இவள் எதற்காக எங்கள் பத்திரிகைக்காரகளை மட்டும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.. வெளியே கொஞ்சம் அசட்டுச் சிரிப்பு சிரித்தேன்..

    “ஓ.. அது எனக்குத் தெரியாதே.. ஆனா..”

    “பரவாயில்லை.. அதனாலென்ன.. பத்திரிகைக்காரங்களுக்கு ஆயிரத்தெட்டு ஜோலி..” என்று முறுவலித்தவள் அடுத்து ஒரு இடியைப் போட்டு வைத்தாள். “அவர் வந்திருக்கிறார் இல்லையா?”

    “யார், எடிட்டரா?”

    “சேச்சே.. நான் சொல்றது கிஷன்’ஜிதான்.. வர்ரேன்னும் காலைல போன் போட்டு அவரே சொன்னாரே..”

    எனக்கு சட்டென வியர்த்தது.. சார்’ஜி வருகிறாரா.. ஐய்யோ..

    அவள் கண்கள் விரிய சிரித்தாள். “ஆனால் எங்காவது பின்னாடி உட்கார்ந்து போய்விடுவதுதான் அவர் வழக்கம்.. ரொம்ப சிம்பிள் பெர்ஸன்..” இவளுக்கு எல்லாம் தெரிந்திருக்கிறது.. கொஞ்சம் ஜாக்கிரதை அவசியம்.

    “அவர் புரொக்ராம் தெரியல்லே மேடம்.. நான் என் ட்யூடியை செய்யவேண்டாமா.. நான்பாட்டுக்கு வந்துட்டேன்”

    “ம்ம்.. நான்பாட்டுக்கில்லே.. என் பாட்டுக்காக வந்தீங்க’ன்னு சொல்லுங்க.. நீங்க வெளிப்படையா சொல்லாவிட்டாலும் உங்க முகமே சொல்லுதே..” என்னை உற்றுப்பார்த்த அந்த பார்வை கலக்கினாலும், அவள் சாமர்த்தியம் என்னை சற்று தளர்த்தி உட்காரச் செய்தது..

    “அப்படின்னுதான் வெச்சுக்கணும்.. உங்க பாட்டுங்களைக் கேட்கக் கொடுத்து வெச்சுருக்கணுமே”..

    போனமுறை எடிட்டர் போற்றிப் புகழ்ந்தது போலத்தான் இந்த முறையும் எழுதவேண்டும்.. வேறு வழியில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

    “ரொம்பப் புகழாதீங்க.. அப்படியே இதையும் சேர்த்து உங்க பேப்பரிலேயும் எழுதிடாதீங்க.. ஏன்னா.. புகழ்ச்சி ஒரு போதை இல்லையா.. நமக்கு எதுக்குங்க அந்தப் போதை.. என்னால் எந்தப் போதைக்கும் அடிமையாக முடியாது”

    இப்படிச் சொல்லிவிட்டு சிரித்தாள். போலியான சிரிப்பில்லாமல் மிக யதார்த்தமாக இருந்தது. நான் பொதுவாக சொல்லி வைத்தேன்..

    “இதெல்லாம் உங்க தன்னடக்கம்.ஆனா ஒண்ணு… எதை எழுதினாலும் என் மனதுக்குப் பட்டதைத்தான் எழுதப் போறேன்..”

    “உங்களை மாதிரி சங்கீத எக்ஸ்பர்ட்ஸ் எழுதறாங்கன்னா சும்மாவா.. உங்க மனசுக்கு என் பாட்டு ரொம்பவே பிடிச்சுருக்கு’ன்னு ஏற்கனவே சொல்லிட்டீங்களே.. ..”

    நான் எங்கே அப்படிச் சொன்னேன்’ என்று கேட்க விரும்பினேன்.. இருந்தாலும் பேச்சை மாற்ற விரும்பினேன்.. செக்ரடரியிடம் வாங்க விரும்பிய அந்த பாட்டு வகைகளை இவளிடமே கேட்டால் என்ன?

    “இன்னிக்கு புரோக்கிராம்’ல என்ன பாடல்கள் பாடப்போறிங்கன்னு லிஸ்ட் இருக்குமே.. கொஞ்சம் கொடுங்களேன்..”

    என் கள்ள மனத்தைப் படித்துவிட்டாளோ என்னவோ, கொஞ்சமாக முறுவலித்து இன்னொரு முறை குறும்பாக ஒரு பார்வை பார்த்தாள்

    “எனக்குத் தெரியும் நீங்க கேப்பீங்க’ன்னு.. ஆனா இந்தமுறை சஸ்பென்ஸ் வெச்சிருக்கேன்.. என் இஷ்டத்துக்கு நான் அந்த சமயத்துல பிடிச்சதெல்லாம் பாடப்போறேன்.. என்ன நான் சொல்றது பிடிச்சிருக்கா?”

    ஈசுவரா.. இதென்ன சோதனை.. சார்ஜி வருகிறார் என்கிறாள்.. கூடவே சஸ்பென்ஸ் கொடுத்து தான் பாடப்போகும் லிஸ்ட்டையும் மறைக்கிறாள்..

    “பொதுவா லிஸ்ட் வெச்சுத்தான் எல்லோரும் பாடணும்.. வாத்தியக்காரா கூட அப்பதான் சரியா ஒத்துழைப்பாங்க.. ஆனா இந்த தடவை இந்த வாத்தியக்காராளுக்கும் சேர்த்து ஒரு சோதனை.. முதல்லேயே சொன்னதாலே இப்ப அவங்களுக்கு வயித்தைக் கலக்கிண்டிருக்கு.. எப்படி என் ஸர்ப்ரைஸ்?’ என்று கலகலவென சிரித்தாள்.

    வாத்தியக்காரர்களுக்கு மட்டுமில்லை தாயே.. எனக்கும் வயிற்றைக் கலக்குகிறது.. என் மனத்துள் கிலேசம் அதிகரித்தது இவளுக்குப் புரியுமா.. ஆனால் என் மனதை இவள் கண்டுகொள்ளவில்லை என்பது அவள் அடுத்துக் கேட்ட கேள்வியில் புரிந்தது..

    “சரி, உங்களுக்காக ஒரு பாட்டு கேளுங்களேன்.. நான் பாடுகிறேன்.. ஆடியன்ஸ் எல்லோரும் அவங்களாகவே இது வேண்டும் அது வேண்டும் எனக் கேட்பார்கள். இப்போது நான் கேட்கிறேன்.. உங்களுக்கு எது வேண்டும்?” ஒரு மயக்கச் சிரிப்பு சிரித்தாள். கடவுளே.. எனக்கு எது வேண்டும்..

    பேட்டி நான் எடுக்க வந்தேனா?, இவள் என்னைப் பேட்டிக் காண்கிறாளா.. ஒரு நிமிடம் புரியாமல் பார்த்தேன். சட்டென வாயில் வந்ததை அப்படியே சொன்னேன்.

    “கல்யாணி’யில் ஒரு பாடல் பாடுங்களேன்..”

    இதைக் கேட்டதும் அவள் ஆச்சரியமாய் கண் விரித்துப் பார்த்தது அழகாகத்தான் இருந்தது.

    ”கல்யாணியா?”

    “ஆமாம்.. கல்யாணி ராகம் என்றால் மிகவும் பிடிக்கும்” என் மனது என்னைத் திட்டியது.. அடேய்.. இது எக்ஸ்ட்ரா உனக்கு’ என்றது..

    “ஓ.. கல்யாணி ராகம்னா அவ்வளோ இஷ்டமா.. அட, உங்கள் கிஷன்’ஜிக்கு மிகவும் பிடித்த ராகம் அதே கல்யாணி.. உங்களுக்குமா? உங்களுக்கு கல்யாணியில் உயிரா.. உங்கள் உயிரைப் போற்றி நிச்சயம் பாடுகிறேன்.. சரி..கல்யாணியில் என்ன பாட்டு வேண்டும்..”

    எனக்கு வேண்டும்.. நானே போய் வலையில் சிக்கிக் கொண்டேன்.. இன்று யார் முகத்தில் முழித்தோம்.. ஆஹா.. எனக்கு அந்த எடிட்டர் சீட்டே வேண்டாம்.. ஆளை விட்டால் போதும்’ என் மனதுள் ஏதோ ஒன்று சொல்லி அலறியது.

    “இந்த பாட்டுதான்னு சொல்லமுடியாது.. நீங்க எந்தப் பாட்டு பாடினாலும் அது இனிமையாகத்தான் இருக்கும்..”

    ’ஓஹோ’ என்று சொல்லி கலகலவென மறுபடி சிரித்தவள், “நீங்க இதையெல்லாம் இப்படியே நாளைக்கு பேப்பர்’ல போடப் போறீங்க’ன்னு தெரிஞ்சு போச்சு.. என்ன.. நான் சொல்றது சரிதானே..”

    “சரி, உங்களுக்குப் பிடிச்ச உங்க பாடல் எதுன்னு சொல்லுங்களேன்..”

    “அட, எனக்குப் பிடிச்ச அத்தனை பாடல்களையும்தான் பாடப் போறேனே..உங்களுக்காக அந்தக் கல்யாணியையும் சேர்த்துதான்”

    “இல்லே.. அப்படி சொல்ல வரலே. எல்லாப் பாடகர்களுக்குமே அவங்களுக்குன்னு ஒரு பிடிச்ச பாடல் இருக்கணுமே.. .. ரசிகர்களுக்காக சில பாடல்கள், உங்களுக்கு ஆத்ம திருப்திக்காக சில பாடல்கள்’னு பாடுவீங்க இல்லையா.. அந்த ஆத்மாவைத் திருப்தி தரும் ஒரு பாடல் சொல்லுங்களேன்..”

    அவள் மறுபடி ஏதோ ஆச்சரியமாக என்னைப் பார்த்தாள். ஏதாவது கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டோமா என்ன..

    “நல்லா மடக்கறீங்க.. எந்த பாடகிக்கும் தான் பாடற அத்தனை பாடலுமே உசத்தியாதான் தோணும்.. சங்கீதத்துலயும் வெல்லப்பிள்ளையாரிலும் எந்தப் பகுதி இனிக்கும்’னு எப்படி சொல்றது? சரி, ஸர்ப்ரைஸிங்’னு சொன்னேன் இல்லையா.. இன்னிக்கு நான் பாடற அத்தனை பாடலுமே எனக்குப் பிடிச்சுப் பாடினதா எழுதிடுங்களேன்”

    அடக்கடவுளே.. எனக்கு உதவி செய்கிறாளா அல்லது உபத்திரவமாக ஏளனம் செய்கிறாளா.. ஏன் இந்த சபா செக்ரடரி நம்மை இப்படித் தனியா இவளிடம் மாட்டிவிட்டுப் போய்விட்டான்.. இவளிடம் உண்மையைச் சொல்லிவிடலாமா.. நீ நினைக்கிறா மாதிரி நான் சங்கீத எக்ஸ்பர்ட் இல்லேம்மா.. லிஸ்ட் இல்லாமல் சரியாக ரிவ்யூவெல்லாம் எழுதமுடியாது தாயே..’

    வேண்டாம்.. இவளிடம் எது சொன்னாலும் வம்பாகிப் போகும், போதாதற்கு கிஷன்ஜி பெயரை அடிக்கடி இழுக்கிறாள்..

    அதற்குள் அந்த சஹானா செக்ரடரி உள்ளே நுழைந்து குழைந்து மேடைக்குக் கூப்பிட்டதால் அவளும் எழுந்தாள். “சரி, பார்ப்போம் உங்க ரிவ்யூவை.. எப்படி எழுதப்போறிங்கன்னு இப்ப நினைச்சாலே மனசு ரொம்ப சந்தோஷப்படுது.. அந்த சந்தோஷத்தோடப் பாடப் போறேன்..வாங்கோ.. போகலாம்..” என்று கவர்ச்சிப் புன்னகை வீசிவிட்டு வெளியேற நானும் அவளுடன் ஏமாற்றத்துடன் வந்தேன்.

    எனக்குப் புரிந்தது.. இவள் என்னவோ ஏதோ எல்லோரையும் பரிட்சை செய்வதாக நினைத்துக்கொண்டு அந்த எல்லோரையும் மாட்டி விடுகிறாளோ.. கடவுளே.. என்ன இது.. இப்படி என்னை ஒரு இக்கட்டில் மாட்டி விட்டாய்..

    வேறு வழி தெரியாத நிலையில்தான் என்னுள் வைராக்கியம் வந்தது.. சரி எப்படியும் சமாளித்துதான் ஆகவேண்டும். ராகத்தின் பெயர் தெரியாவிட்டால் என்ன.. பேசாமல் முடிந்தவரை மொபைல் போனில் ரிகார்ட் செய்து கொள்வோம். ஒவ்வொரு பாடல் முதல் வரிகளை எழுதி வைத்துக் கொள்வோம்..

    திடீரென எங்கள் ஃபிளாட் மாடியில் குடியிருக்கும் டீச்சர் நினைவுக்கு வந்தாள். அவள் சங்கீதம் அறிந்தவள்.. அவளிடம் பாடல் வரிகளையும் நம் மொபைல் ரிகார்ட் செய்ததையும் வைத்துக் கேட்டால் சொல்லமாட்டாளா என்ன.. ஆஹா.. முடிந்து போச்சு கதை.. ஆனால் நேரம் போதாது.. ராத்திரியில் தொல்லை தருவதாக நினைத்துக்கொள்வார்களே.. என்ன வேண்டுமென்றாலும் நினைத்துக் கொள்ளட்டும்.. இது ஒரு மாதிரியான சிக்கலான பிரச்னை.. பயந்தால் தீர்க்கமுடியாது.. எதையும் எப்படியும் சமாளிப்போம். நாளைக் காலை பத்திரிகையில் நம் ரிவ்யூ கொஞ்சம் நன்றாக வரவேண்டாமா.. இவள் வேறு பெரிதாக எதிர்பார்க்கிறாள்….

    மனதுள் கொஞ்சம் நிதானம் வந்தது.. ஆச்சு.. மணி ஆறரை.. எப்படியும் ஒன்பதுக்குள் கச்சேரி முடித்தாக வேண்டும். ஒன்பதரைக்கு வீடு, பத்துமணிக்குள் அந்த சங்கீத டீச்சரிடம் பாடம் கேட்டு விட்டு ஆபீஸுக்கு 11 மணிக்குள் போனாலும் கடைசி டெஸ்பாட்ச்சாக நம் ஆர்டிகிள் போட்டுவிடலாம். என்னுடைய மொபைலில் ரிகார்டிங் ஆன் செய்துவிட்டு மேடையில் கவனம் செலுத்தினேன். குங்குமப்பொட்டுக்காரி முகம் மலர அமர்ந்து பாட ஆரம்பித்தாள்.

    singer2முதலில் அவள் அழகு முகம்தான் மனதில் அப்படியே நின்றது. தூரத்திலிருந்து பார்த்தால் கூட அந்தக் குறும்பு பொங்கும் கண்களும் அழகான வட்டவடிவ குங்குமப்பொட்டும் கொஞ்சம் சலனத்தை ஏற்படுத்தியதுதான் .,, ஆனால் போகப்போக அவள் பாடப் பாட அவள் முகம் மறைந்து போய் அந்தக் குரலினிமையும் பாட்டுக்களின் நேர்த்தியும் வேறெங்கோ அழைத்துச் சென்றதுதான்.

    அவள் கச்சேரி செய்யும் விதமே தனிதான். இவள் பேசும் குரலிலிருந்த கரகரப்பு விலகி இனிமையான இசைக் குயிலாக மாறிய அனுபவமே அலாதிதான். கிஷன்ஜி என்றில்லை யார் வேண்டுமானாலும் இந்த இனிமையான குரலுக்கு அடிமையாக மாறி விடுவார்கள்தான்.. அவ்வப்போது என்னை வேறு உற்றுப் பார்க்கிறாள்.. ஒருவேளை நான் நடுவில் போகிறேனோ என்று சந்தேகப்படுகிறாளோ.. இல்லையில்லை.. இவள் கவனம் கொஞ்சமும் நம்மீது இல்லைதான்.. இசையின் இறுக்கமான அணைப்பில் இருக்கும் அவளுக்கு நான் கண்ணில் படமுடியாது என்றுதான் நினைத்தேன். எத்தனை அநாயசம்.. எத்தனை நளினம்.. அடாடா. இந்த எடிட்டர் தப்பு செய்துவிட்டார்..அவர் என்னை கட்டாயம் செய்து இங்கு அனுப்பி தவறு செய்து விட்டார். நான் வந்திருக்கக்கூடாது.. யாராவது தேர்ந்த இசை விமர்சகரை அனுப்பி இருக்கவேண்டும்.. இவள் இசைக்கு நானெல்லாம், என் எழுத்தெல்லாம் எம்மாத்திரம்.. என் எழுத்தில் இவள் இசை நயத்தைக் கொண்டு வரமுடியுமா..

    ஒன்பது மணிக்கு முன்பாகவே முடித்துவிட்டாள் என்றாலும் அவள் இசையின் தாக்கம் என்னைப் பரிபூரணமாக ஆக்கிரமித்திருந்தது. ராகங்கள் தெரிந்தால்தான் இசையை அனுபவிக்கமுடியுமா.. இவள் மந்திரக்காரிதான்.. மாயம் செய்பவள். இசையால் எல்லோரையும் மயக்கத் தெரிந்தவள்.. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக சபையைக் கட்டிப் போடத் தெரிந்தவள்.. இவள் பேச்சில் கெட்டிக்காரி என்று நினைத்தது தவறு.. இசையையும் தன்னுள் அடக்கி ஆள்பவள், இவள் நினைப்புக்கேற்றவாறு அந்த இசையை தன் இஷ்டத்துக்கு திசை திருப்புபவள். இன்னமும் கச்சேரியை நீட்டித்திருக்கலாம்தான்.. இப்படி என்னையும் கூட நினைக்க வைத்ததுதான் இவள் வெற்றிதானே..

    இருந்தாலும் கடமையை மறக்காமல் என் வேலைகளை பூர்த்தி செய்து அலுவலகத்தில் நுழைந்தபோது மணி பத்தரையைத் தாண்டியிருந்தது. என்னுடைய மேஜையில் போட்டோகிராஃபர் மணி ஏற்கனவே போட்டோவின் பிரதி ஒன்றை வைத்திருந்தார். அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே கட்டுரையைத் தட்ட ஆரம்பித்தேன்..

    மனதுக்குள் ஒரு குரல் என்னைத் திட்டிக் கொண்டே இருந்தது. பிஸினஸ் எழுதறவன் இப்போ மியூசிக் எழுதறியா.. பார்த்து எழுது.. என்பது போல ஏதேதோ சொன்னாலும் மியூசிக் டீச்சர் பார்த்துப் பார்த்து கேட்டு கேட்டு ரசித்துச் சொன்ன ராக ஆலாபனைக் குறிப்புகளை அப்படியே கலந்தேன்.. கட்டுரை ரெடி.. இன்னொரு முறை படித்துப் பார்த்தேன்.. திருப்தியாக இருந்தது.. மணியைப் பார்த்தேன்.. பன்னிரண்டைத் தாண்டியிருந்தது.. மனதில் மகிழ்ச்சி ஏராளமாக உண்டாக ஏதோ ஒரு மிகப் பெரிய சாதனைப் படைத்து விட்ட திருப்தியுடன் அச்சுக்காக அனுப்பி வைத்தேன்.. சற்று நேரம் அப்படியே சாய்ந்துஅந்த மாலை நேரத்து இனிமையான பொழுதுகளை மறுபடியும் மனதில் திருப்பினேன்..

    வீட்டுக்குச் செல்லவேண்டுமா என்றுதான் மனதில் பட்டது.. ஒரு இனிமையான அனுபவத்தை அப்படியே இன்னொரு முறை ரசிக்கவேண்டும் என்ற ஆவலுடன் வெளியே வந்தேன்.. அறையில் இருந்த குளிரை விட வெளிக்காற்றின் குளிர் ஏராளமாக மகிழ்விக்க வீடு திரும்பினேன்.

    பசிக்கவில்லை.. ஏனென்று தெரியவில்லை.. சாப்பிடாமலேயே படுக்கையில் விழுந்தவனின் காதில் அந்த இசையும் அவள் குங்குமப்பொட்டு முகமும் சற்று சலனப்படுத்தியது. புரண்டு புரண்டு படுத்தேனே தவிர தூக்கம் வருவதாயில்லை..மீண்டும் மீண்டும் அந்த முகம் அவனை அலைக்கழித்தது. தூக்கமா இல்லை அரைத்தூக்கமா தெரியவில்லை.. மறுபடியும் அவள் வந்தாள்.. அந்த குங்குமப்பொட்டும் கருவிழிகளும் இப்போது சற்று அருகில் வந்தது. ‘சங்கீதம் என்றால் உனக்கு ரொம்பப் பிடிக்குமோ’ என்று கேட்டது.. ‘சரி, உனக்கு என்ன பிடிக்கும்.. கேள்.. உடனே பாடுகிறேன்.. என்றது’. நான் நினைவில் உளறினேன்.. ‘கல்யாணி ராகத்தில் பாடு’ என்றேன்.. ’ஏன் கல்யாணி என்றால் உயிரோ’ என்று கேட்டு கலகலவென சிரித்தாள். நானும் ‘கல்யாணி.. கல்யாணி…

    திடீரென்று குதித்து எழுந்தேன். அடக்கடவுளே.. நான் எழுதிய அந்தக் கட்டுரையில் இந்தக் கல்யாணி பற்றிக் குறிப்பிடவே இல்லையே.. இவள் நிச்சயம் எனக்காகப் பாடுவதாக சொல்லிச் சொல்லிச் சென்றாளே.. எங்கே போச்சு இந்த கல்யாணி? ஏன், நிச்சயம் பாடியும் இருப்பாள். ஸார்ஜிக்கு மிகவும் பிடித்த ராகமாயிற்றே.. அட, இந்த டீச்சரும் தப்பு சொல்லிவிட்டாளோ.. இல்லை.. நான் தவறு செய்துவிட்டேன்..ஒரு வார்த்தை கூட கல்யாணியைப் பற்றி எங்கும் எழுதவில்லையே.. ராகங்கள் ஏதாவது மாற்றி எழுதி விட்டேனோ.. கல்யாணியும் எங்கும் காணப்படாதது ஏன் என் அறிவுக்குத் தெளிவாகவில்லை.. கடவுளே.. நாளை ஒரு அபத்தமான கட்டுரை வெளியாகி ஊர் சிரிக்கப் போகிறதே..

    உடனே எங்கள் ஆபிஸ் பிரஸ்ஸுக்கு போன் செய்தேன்.. யாரும் எடுக்கவில்லை.. பிரிண்டர் போய்விட்டானா.. அடக்கடவுளே.. அவன் கைபேசியில் தொடர்பு கொண்டேன்.. நீண்ட நேரம் கழித்து எடுத்தான்.. ’அது சரி, நான் கொடுத்த மேட்டர் பிரிண்ட் ஆகிவிட்டதா’.. என்றதற்கு அவன் எரிச்சலாகப் பேசினான்.. ‘என்ன சார்.. மணி என்ன இப்போ.. மூணாகப் போவுதுல்ல.. பேப்பர் டெஸ்பாட்ச்சிங் டைம் சார்.. நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க.. உங்க மேட்டர் சூபரா வந்திருக்கு.. கடைசிப்பக்கத்துல முதல் நான்கு பத்திதான்..” என்று சொல்லிவிட்டு கைபேசியை மூடிவிட்டான்.

    ஆஹா.. எவ்வளவு அழகாக திட்டம் போட்டு கச்சேரி முடிந்ததும் அடித்துப் பிடித்து ஓடி, தூங்கப் போன அந்த டீச்சரை எழுப்பி உட்காரவைத்து ஒவ்வொன்றாகக் கேட்கவைத்து எழுதி என்ன பயன்.. அட, நானாவது ஒரு வார்த்தை இந்தக் கல்யாணி ராகத்தைப் பற்றி அந்த டீச்சரிடம் ஞாபகம் செய்திருக்கவேண்டாமா.. அவளும் தவறுவது சகஜம்தானே..ஒரு அபத்தமான கட்டுரை அரங்கேறிவிட்டதே.. லட்சக்கணக்கில் ஊரெங்கும் பிரதியாக்கப்பட்டாகிவிட்டது..

    தியாகய்யாவின் கிருதிகள் முத்துசாமி தீட்சிதர் பாடல்கள் என்றெல்லாம் எழுதி அந்த தெய்வப்பாடல்களுக்கும் சேர்த்தா தவறிழைத்தேன்.. அரைகுறை ஞானம் கூட இப்போது சூன்யமாகப் போய்விட்டதே.. அவள் சபையில் பாடிய பத்துப் பாடல்களுமே தவறாக விளக்கப்பட்டதோ.. ஐய்யோ.. அப்படியானால் அவள் பாடியதில் எந்தப் பாடல் இந்தக் கல்யாணி?

    எனக்கு அந்தக் குளிரிலும் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.. எடிட்டர் முதலில் திட்டுவார். கிஷன்ஜி ஏதும் சொல்லமாட்டார் என்றாலும் ‘அரைகுறைக்கெல்லாம் ஆசிரியர் பொறுப்பா’ என்று நம் பதவி உயர்வு கேஸை இழுத்து மூடி விடப்போகிறார்கள். அவள் அந்த இசை ராட்சஸி வந்தாள்.. இந்த முறை அவள் குரலில் இனிமை இல்லை..குரலும் கரகரப்பு அதிகமாகி காரமாக வந்தது.. ஏதோ கத்தினாள். நீயெல்லாம் ரசிகனா’ என்று திட்டுகிறாளோ..

    ஊம்ஹூம்.. அநாவசியமாக ஒப்புக்கொண்டுவிட்டேன். நான் சுயமாக இதுவரை ஈட்டிய என் புகழை இந்த ஒரு சங்கீதக் கட்டுரை ஒரேயடியாக வீழ்த்தி விட்டது.. அறியாத துறையில் தெரியாத ஆழத்தில் காலை விட்டால் முழுகவேண்டியதுதான்.. அதிகாலை வரை மனது துடித்துக் கொண்டே இருந்தது. பகல் வெளிச்சம் பளிச்செனப் பட்டதும் வாசலுக்கு வந்தேன். தரையில் போடப்பட்டிருந்த அந்த பேப்பர் எனக்கு ஒரு அவலட்சணப் பொருளாகத் தெரிந்தது. பயத்துடனே கடைசி பக்கத்தைத்தான் முதலில் பார்த்தேன். எல்லாமே நான் எழுதியதுதான்..கட்டுரைக்கடியில் பெயரை வேறு அழகாகப் பதித்த சோகத்தை என்னவெனச் சொல்வது.. இனி என்ன செய்ய.. எதுவுமே தெரியாதமாதிரிதான் இனி அலுவலகம் செல்லவேண்டும்..கண்ணீர்த் துளிகள் அந்தப் பத்தியில் விழுந்து பேப்பரை நனைத்தது.

    இன்று என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய துக்கதினம்தான்..

    தூக்கம் ஒரேயடியாகப் போய்விட்டது. மதியம்தான் அலுவலகம் சென்றேன்.. அறைகள் காலியாக இருந்தன. இது கூட நல்லதுக்குதான்.. என் மேஜையில் இரண்டு கம்பெனி விழா அழைப்புகள் கிடந்தன.. ஆமாம்.. இப்படிப்பட்ட விழாக்களுக்குச் சென்று ஹலோ சொல்லி அவர்களைப் பேட்டி கண்டு எழுதுவதுதான் என் வேலை. எடிட்டர் நாற்காலிக்கு ஆசைப்படுவதற்குக் கூட ஒரு அருகதை வேண்டாமா.. தூக்கம் இல்லாதலால் சோர்வு அதிகமாக நாற்காலியில் சாய்ந்தேன்.. குட்டி சாப்பிட்டுவிட்டு அப்போதுதான் வந்தான்.

    ”என்ன சார், காலைலேர்ந்து மொபைல் ஆஃப் பண்ணி வெச்சிட்டிங்க.. உங்கள எங்கல்லாம் தேடறது.. தோ.. கொஞ்ச நேரம் போனா உங்க வீட்டுக்கே வந்திருப்பேன்..”

    எனக்குப் புரிந்தது.. ஏதாவது விளக்கம் கேட்பார்கள். கிஷன்’ஜி நேற்று கச்சேரிக்கு வந்திருக்கலாம்.. இன்று காலை பேப்பர் பார்த்திருக்க வேண்டும்.. எடிட்டர் தேடியிருக்கலாம்..

    குட்டி யாருக்கோ போன் செய்தான் தன் மொபைலில்.. “தோ இருங்க.. வந்துட்டார்..”

    கைபேசியை என்னிடம் கொடுத்தான். “சார் பேசுங்க.. அந்தம்மாதான்”

    ஓஹோ.. கழுத்துவரை முழுகிவிட்டோம்.. இனியென்ன.. இவளையும் சமாளிப்போம்.. இனி இவள் இருக்கும் திசை கூட போகக்கூடாது..

    “என்ன சார்.. என் மேல கோபமா.. காலைலேர்ந்து உங்களைத் தேடறேன்… ஆனால் உங்க கட்டுரை ரியல்லி சூபர்ப்.. அப்படியே பிரேம் பண்ணச் சொல்லிட்டேன்.. கிஷன்’ஜி காலைல போன் பண்ணி அரைமணி நேரம் ஒரே பாராட்டு மழைதான்.. நேத்து அவரால்ல வரமுடியலியாம்.. ஆனா உங்க ஆர்டிகிள் மூலமா விவரமா படிச்சுத் தெரிஞ்சுண்டதா சொல்லி ஆஹா ஓஹோ’ன்னு பாராட்டினாரா.. ரொம்பவே கூச்சமாயிடுச்சு.. எல்லாம் உங்க ஆர்டிகிள் செஞ்ச மாயை..”

    இவள் என்ன சொல்கிறாள்?

    “சரி புரியறது உங்க கோபம்.. நேத்து சொன்னேன் இல்லையா..

    எல்லாமே சர்ப்ரைஸிங்’ நு ஒரு பாலிஸி வெச்சுண்டு பாடப்போறேன்’னு.. அந்த சர்ப்ரைஸிங் உங்களுக்கும் சேர்த்துதான்.. ஆனா நீங்க எதையும் மனசுல வெச்சுக்காம இவ்வளோ அழகா ஒரு ஆர்டிகிள் ஒண்ணு எழுதி அசத்திட்டீங்க..நேர்த்தியா கலைக்கண்ணோட ஒவ்வொரு ராகத்தையும் அழகாக் குறிப்பிட்டு என்னோட புகழையும் நிறையவே ஏத்திட்டீங்க.. இப்படிக் கொடுத்தது உங்க பெரிய மனசைக் காட்டறது,, ஸோ.. உங்க ஆபிசுக்கு இன்னிக்கு சாயந்திரம் கார் அனுப்பறேன். நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்.. உங்களுக்கென்னு தனியா கல்யாணி ராகத்துல எத்தனை வேணும்னாலும் பாடறேன்.. கல்யாணி ராகத்தில் நேத்துப் பாடலியேங்கற குறையை, அதுவும் நீங்க கேட்டு நான் பாடலியே’ங்கற குறையை தீர்த்து வெக்கறேன்.. வர்ரீங்க இல்லே..”

    “க.. க.. கல்யாணி அப்ப..”

    ”ஆஹா! கல்யாணின்னு இவ்வளோ உருகறீங்களே.. நான் எவ்வளோ பெரிய தப்புப் பண்ணிட்டேன்னு இப்பத்தான் புரியறது.. நேத்தேப் பாடியிருக்கணும்.. கச்சேரில விளையாட்டா உங்களைப் பார்த்து ஒரு சிரிப்பு கூட சிரிச்சேனே.. ஸாரி, இன்னிக்கு உங்க கல்யாணி விருந்து உங்களுக்கு மட்டும் விசேஷமா தரேன்.. கட்டாயம் வாங்க..”

    கையிலிருந்த கைபேசியை குட்டியிடம் கொடுத்தேன்..

    “என்ன சார்.. என்ன ஆச்சு?”

    “இன்னிக்கு சாய்ந்திரம் வீட்டுக்குக் கூப்பிடறா.. என் கட்டுரை ரொம்பப் பிடிச்சுருக்காம்.. ஆனா.. குட்டி.. என்னை இவள் சரியா ஏமாத்திட்டாடா.. எனக்காக ஒரு பாட்டு பாடறேன்’னு பிராமிஸ் பண்ணினவ.. ஆனா சபை’ல பாடலே.. நானும் மறந்து போயிட்டேன்.. கட்டுரைலயும் மறந்து எழுதிட்டேன்.. ஆனா டக்கெனு ஞாபகம் வந்தப்ப இவ கண்டிப்பா பாடியிருக்கா’ன்னு மனசார நினைச்சேண்டா.. ராத்திரி பூரா இந்த விஷயத்தை எழுதாம தப்பு பண்ணிட்டோமோ’ன்னு நான் பட்ட அவஸ்தை எனக்குதான் தெரியும்.. இப்ப என்னடா’ன்னா சிரிக்கிறா.. என்னை வீட்டுக்கு வரச்சொல்லி தனியா பாடறாளாம்.. நேத்து சாயந்திரமே அவகிட்டே பேசறச்சே பாக்கணுமே.. எதுக்குமே பிடிகொடுக்காமப் பேசினாடா.. அட, எவ்வளோ அழகா பிராமிஸ் பண்ணினா.. அவ்வளோ சிம்பிளா ஏமாத்திட்டாடா..இப்போ வரைக்கும் நான் மனசுக்குள்ளே கலங்கிண்டு இருந்தேண்டா.. நான் அவளுக்கு விளையாட்டுப் பொருளா மாறிட்டேனோ என்னவோ.. அப்படித்தான் இருக்கணும்”

    “அப்படியா சார், அடப் பாவமே.. நீங்க என்ன சார் பண்ணப்போறிங்க.. சாயங்காலம் அவங்க வீட்டுக்கெல்லாம் போவாதீங்க சார்.. ஏன்னா.. நாமளே போய் வலை’ல மாட்டப்படாது பாருங்க..”

    “சேச்சே.. என்னை என்ன மடையன்’னு நினைச்சியா.. அவஸ்தப்பட்டவங்க யாராவது மறுபடியும் போய் அதே அவஸ்தையை அனுபவிப்பாங்களாடா.. முட்டாள்தான் மறுபடி போவான்.. எதுக்கும் அவங்க போன் நம்பர் கொடுத்துட்டு போ.. கண்டிப்பா கறாரா பேசி ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு கட் பண்ணிட்டா போச்சு.. போடா.. ஒரு காபி எடுத்துண்டு வா.. தலையை வலிக்குது..”

    குட்டி போன் நம்பரைக் கொடுத்துவிட்டுப் போனான். அதற்குப் பிறகு நான் அவளோடு பேசியதையும் அவள் குழைந்து பேசும் மயக்கக் குரலுக்கு மயங்கி அவள் வீட்டுக்கு ஓடியதையும் குட்டியிடம் நான் ஏன் சொல்லப்போகிறேன்…
    ————————————————————–

    படம்: ஓவியர் தேமொழி.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    திரைப்படப் பாடல்கள் எனும்போதே உடனடியாக நம் கவனத்தில் வருபவர்கள் கவியரசு கண்ணதாசனும் கவிஞர் வாலியும்தான். கவியரசை நாம் எல்லோருமே உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருக்கிறோம் என்பது வாஸ்தவம்தான் என்றாலும் வாலியார் கூட எந்தவிதக் குறைவுமில்லாமல் நம் மனதில் நிறைந்தவர் என்பதில் எள்ளளவு சந்தேகமுமில்லை. பொதுவாக மக்களை நல்வழிப்படுத்தும் பாடல்களை எழுதுவதில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் வாலியாரும் சற்று அதிகமாகவே பிரபலமடைந்திருந்தார்கள். அதிலும் வாலியார் மக்கள் நலப் பாடல்களை எழுதிய விதமும், அதைத் திரைப்படம் மூலமாக சொல்லும் விதமும் அந்தத் தமிழானது தமிழர்கள் நெஞ்சத்தில் எந்நாளும் பதியும் விதமும் எத்துணை சிறப்பானது என்பதில் மாற்றுக் கருத்து இருக்கவே முடியாது. தமிழை வாலி அவர்கள் கையாண்ட விதமும், அதே விகிதத்தில் செம்மொழியான தமிழ் அவருக்கு வளைந்து கொடுத்துச் சென்றதும் மிகவும் சுவையானவைதான்.

    கவிஞர் வாலியின் ஆயிரக்கணக்கான திரைப் பாடல்களில் அதுவும் மக்கள் நலனுக்காக எழுதிய பாடல்களில் அவருக்கென தனியிடத்தைக் கொடுத்த பாடல்கள் பல உண்டு. எண்ணிலடாங்கதவை. அவைகளில் ஒன்றுதான் ‘ஒண்ணாயிருக்கக் கத்துக்கணும்’ பாடல். இதைப் பற்றி இந்த வார வல்லமை இதழில் கவிஞர் காவிரி மைந்தன் மிக அழகாக வர்ணித்திருக்கிறார். அதைச் சற்று பார்ப்போம். http://www.vallamai.com/?p=40993

    அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய பெரியவர் சுந்தரவரதன் குரோம்பேட்டையிலிருந்து வருகிறேன்.. என்கிற அறிமுகத்துடன் என்னோடு பழைய பாடல்கள்பற்றி பேசத் தொடங்கினார். ஒரு நாள் காலை ஸ்நானம் முடித்து வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை அணிந்து தோளிலே துண்டையும் போட்டுக்கொண்டு கறிகாய் வாங்க மார்க்கெட்டிற்கு நடந்து சென்றபோது சாலையில் தங்கியிருந்த மழைநீர்.. அவ்வழியே சென்ற நான்கு சக்கர வாகனத்தால் தனது உடைகள் அனைத்தையும் முற்றிலுமாய் பாழ்படுத்திவிட்டதுவாம். எந்த ஒரு நபருக்கும் அப்படி நேரும்போது என்ன செய்வோம். அந்த வாகன ஓட்டியை உரக்கக்குரல் எழுப்பித் திட்டோ திட்டு என்று திட்டித்தீர்ப்போம்! இதுவே இயல்பாய் மனிதர்கள் செய்வது! இவர் என்ன செய்தார் தெரியுமா? அமைதியாய் சில நிமிடங்கள் ஒதுங்கி நின்றாராம். பிறகு.. கீழ்க்காணும் அன்புக்கரங்கள் திரைப்படத்தில் கவிஞர் வாலி எழுதிய பாடல் வரிகளை சந்தோஷமாய் பாடியபடியே வீட்டிற்குத் திரும்பினாராம்..

    வீட்டை விட்டு வெளியே வந்தா நாலும் நடக்கலாம்.. அந்த
    நாலும் தெரிஞ்சு நடந்துகிட்டா நல்லா இருக்கலாம்..
    உன்னைக் கேட்டு என்னைக் கேட்டு எதுவும் நடக்குமா? அந்த
    ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா?

    ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்..இந்த உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்..

    photoகோபப்படும்போது நமது உடலில் அதிகமான ரத்தநாளங்கள் செயல்படவேண்டியிருக்கின்றன. ரத்த அழுத்தம் அதிகமாகிறது. நமது கோபத்தால் அந்த இடத்தில் ஆவது ஒன்றும் கிடையாது.. ஆனாலும் அதுதெரிந்திருந்தும்.. கோபத்தை அடக்கமுடியாமல் நாமே அவஸ்தைக்கு உள்ளாகிறோம். கோபம் வரும்போது சுவாமி பெயரை உச்சரிக்கவும்.. 1, 2, 3 என்று எண்களை வரிசைப்படுத்தி எண்ணவும் என்று பல்வேறு வழிமுறைகள் சொல்லப்பட்டிருந்தாலும்.. நடைமுறையில் செய்கிறோமா? இதுபோன்ற உண்மை நிலையை உணர்த்தும் பாடல்களை சற்று உரக்க உச்சரித்தால் உள்ளம் அமைதி பெறுமே!

    கவிஞர் வாலி அவர்களின் ஒரு அருமையான பாடலை முன் வைத்து அழகான முன்மாதிரியையும் தந்து வாழ்க்கைப் பாடமாக எடுத்தெழுதி மகிழ்வித்த கவிஞர் காவிரி மைந்தன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: தஞ்சை திரு வெ. கோபாலன் அவர்களின் ‘நாற்பது வருஷ வாழ்வும் தாழ்வும்’ என்பதிலிருந்து

    இந்த பிரம்மச்சரியத்துக்குச் சில அரிய சக்தி உண்டு என்கின்றனர் பெரியோர். பன்னிரெண்டு வருடங்கள் கடுமையாக பிரம்மச்சரியத்தைக் கடைப்பிடிப்பவன் இடும் சாபம் பலிக்கும் என்பர். அதைப் போல மற்றுமொரு பன்னிரெண்டாண்டுகள் கழிந்தபின் அவன் வாழ்த்தினால் சாபம் நீங்கி நல்வாழ்வு பெற முடியுமாம். முப்பத்தியாறு ஆண்டுகள் பிரம்மச்சரியம் கடைப்பிடித்தவன் வழங்கும் ஆசி பிறரது பாவங்களையும் நீக்கி அவனுக்கு நல்வாழ்வு தரமுடியும் என்பது பெரியோர் வாக்கு.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    sathyaசென்னை ராமகிருஷ்ணா பள்ளியில் என்னுடன் படித்த மாணவ நண்பனை சமீபத்தில் நான் பார்க்க நேர்ந்தது. நரை திரையாக பெரிய மீசை வைத்து பயங்கரமாக என் கண்களுக்குக் காட்சியளித்தான். இத்தனைக்கும் நான் அவனை ஐந்து வருடங்களுக்கு முன்பு கூட சந்தித்திருந்தேன். என்னடா உனக்கு இப்படி வயசாகிவிட்டதே என்று அவனை கிண்டலடித்ததற்கு, ஆமாம்.. இவர் என்றும் மார்க்கண்டேயராக்கும்’ என்று பதிலடி கொடுத்தான்.. கூடவே என்னை அருகேயே இருந்த அவன் வீட்டுக்கும் அழைத்துப்போய் தூசி தட்டப்பட்டு அலமாரியில் வைத்திருந்த என் புத்தகங்களையும் (பெருமையாக) காண்பித்தான். அவன் மனைவிக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தான்..

    அந்தப் பெண்மணி என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, உங்கள் புத்தகத்தில் உள்ள புகைப்படத்தைப் போலத்தான் இருக்கிறீர்கள்.. ஆனால் சின்னப்ப மட்டும் கொஞ்சம் அழகாகத்தான் இருந்தீர்கள்’ என சீரியஸ்ஸாகச் சொன்னதும் என் நண்பனை கேள்விக் குறியாகப் பார்த்தேன்..

    ’அட, அது வேற ஒண்ணுமில்லே.. நம்ம ஸ்கூல் போட்டோவைச் சொல்றாடா.. ’எங்கே இவனுக்கும் கொஞ்சம் காண்பியேன்.. இவன் அழகை இவனே மெச்சிக்கட்டும்’ என்று மனைவியைப் பார்த்துச் சொன்னதும் அவர் உள்ளே சென்று ஒரு பழைய ஆல்பம் கொண்டு வந்தார். என் நண்பனின் சித்திர சுய வரலாறு என்று பார்த்தவுடனே புரிந்தது. என்னுடனும் இன்னும் இரண்டு நண்பர்களுடனும் அந்தப் பள்ளி வயதில் போட்டோ எடுத்துக் கொண்டதை நான் அந்த நேரத்திலேயே மறந்திருந்தாலும், இவன் மறக்காமல் ஆல்பத்தில் இன்னும் வைத்துக் கொண்டிருந்ததை ஆச்சரியமாகப் பார்த்தாலும், அதே சமயத்தில் கருப்பு வெள்ளைப் புகைப்படத்தில் உள்ள அந்த நான், நான்தானா என்ற சந்தேகமும் கூடவே எழுந்ததும் வாஸ்தவம்தான்.. நானேதான் என்பதை சத்தியம் செய்தான் அவன் என்பது இன்னொரு விஷயம்.

    இந்த விஷயங்கள் கீழே உள்ள அந்த சுட்டிப் பெண்ணைப் பார்த்ததும் நினைவுக்கு வந்ததுதான். நாளை வயதானபின் இந்தப் போட்டோவைப் பார்த்துவிட்டு இந்தப் பெண் என்ன நினைப்பாளோ என்ற ஒரு கற்பனையும் கூடவே எழுந்ததுதான். இனி இந்த வார வல்லமையாளரைத் தேர்ந்தெடுக்கும் அமைதிச்சாரல் சாந்திக்கு வழிவிடுவோம். இதோ சாந்தியின் எழுத்தில்:

    இந்த வார வல்லமையாளர்: திரு. சத்யா.

    ஒளிப்படக்கலையில் வல்லுனரான இவர் எதைக் க்ளிக் செய்தாலும், அந்தப் படம் உயிர் பெற்று வந்ததைப்போல் ஒரு உணர்வு தோன்றுகிறது. ஒளியமைப்பு, காட்சியமைப்பு, கோணங்கள், வண்ணங்களின் சேர்க்கை என்று இவரது படங்கள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று விஞ்சும் அழகைக்கொண்டவை. இவரது படங்களை ரசிக்க சுட்டியைச் சொடுக்கவும்.

    http://www.flickr.com/photos/snarayanank/with/9537102597

    ஒளிப்படங்கள் அழகுணர்ச்சியை மட்டும் வெளிப்படுத்துவதாக அல்லாமல் சில சமயங்களில் தகவல்களின் இருப்பிடமாகவும் இருப்பதுண்டு. ஒளிப்படங்கள் வழியாக கலைஞன் அந்த நொடியில் தான் உணர்ந்ததை பார்வையாளனுக்கும் கடத்துகிறான். அந்த வகையில் சத்யாவின் இந்த ஒளிப்படம் சிறப்புப்பெறுகிறது. பார்க்கும் அந்த நொடியிலேயே பண்டிகைக் கொண்டாட்டத்திற்கான மனநிலை நமக்கும் ஏற்பட ஆரம்பிக்கிறது. அந்தப்பெண்ணின் குறும்புத்தனமான பார்வையும் வண்ணக்கலவையும், அழகான முகபாவமும் கவர்கின்றன. bokeh, dof போன்ற சிறப்பம்சங்களால் படம் மேலும் அழகுபெறுகிறது.

    sathya

    http://www.flickr.com/photos/snarayanank/11368702886

    இந்த வார வல்லமையாளரான திரு. சத்யாவுக்கு வல்லமை சார்பில் என் வாழ்த்துகள்.

    கடைசிப்பாரா: தேமொழியின் ”தமிழர்களின் மொழிக்கொள்கை – ஒரு பார்வை”

    தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்ததல்ல என்ற கருத்தினை இறுகப் பற்றிக்கொண்டு பிறமொழி பேசுபவர்களை எதிர்க்கும் மொழி வெறியர்களும் நம்மில் உண்டு. இவ்வகையில் கண்மூடித்தனமாக மொழியின் மீது ஈர்ப்பு கொண்டவர்களில் பலருக்கு மிஞ்சிப் போனால் மூன்று அல்லது நான்கு மொழிகள் தெரிந்திருக்கலாம். தனது மொழியைத் தவிர பிற மொழிகள் உயர்ந்தல்ல என்று கருதும் இவர்களது முடிவு பற்பல மொழிகளையும் ஒப்பிட்டு ஆராயும் மொழியியல் வல்லுனர்களைப் போல ஆராய்ந்து கொண்ட முடிவாக இருத்தல் அரிது.

    Share
  • தக்காளி சட்னி!

    திவாகர்

    அன்புள்ள ராகிக்கு

    (ராகி எனப் பெயரைக் கூப்பிடுவதை விட எழுதும்போது அவ்வளவு நன்றாக இல்லையென்று நன்றாகவே தெரிகிறது என்றாலும் ராகினி என்று உன் முழுப்பெயரையும் எழுதினால் எங்கே நீ கோபித்துக் கொள்வாயோ என்றுதான் நான் வீட்டில் உன்னை சாதாரணமாகக் கூப்பிடுவது போலவே எழுதிவிட்டேன்)

    அது சரி, இருக்கட்டும், அடடா..கோபித்துக் கொள்ளாதே.. இதோ கடிதம்.. இனிமேல்தான் ஆரம்பிக்கிறேன்.

    உபயக்ஷேமம். (இப்படித்தான் என் தாத்தா எனக்கு ‘கார்டு’ போடும்போது எழுதுவார், என்ன அர்த்தம் என்று கேட்காதே)

    இப்பவும் உன் நலத்துக்கு அடிக்கடி கடிதம் எழுது (இதுவும் தாத்தாவின் பாணி). நிற்க! (இப்படி எழுதிவிட்டேன் என்பதற்காக நீ நிற்பதாக நான் கனவிலும் நினைக்கமாட்டேன்.. இப்படி எழுதுவதெல்லாம் ஒரு சம்பிரதாயம்)

    நீ சிம்லா சென்று இன்றைய தினத்தோடு ஏழு நாட்கள் ஆகிவிட்டது. உன் அக்கா உடல்நலம் மோசமாகிவருவதால் நீ போய் மூன்றுமாதம் பணிவிடைகள் செய்வதாய்ச் சொல்லிவிட்டுப் போனவள்தான். ஆனால் இந்த ஏழு நாட்களுக்கே நான் எவ்வளவு கஷ்டப்பட்டுவிட்டேன் என்று ஆயிரம் முறை உனக்கு என் மொபைல் போனில் சொல்லிவிட்டேன்.. இருந்தாலும் எழுத்தில் சொல்வதும் என் கடமையாக நான் கருதுவதால் இங்கே இப்படி எழுதத் தோன்றியது.

    நானும் யோசித்துப் பார்த்துவிட்டேன். அதுதான் தினமும் நினைத்தாலே மொபைலில் பேசுகிறோமே, நீ சொல்லியபடி கடிதம் எல்லாம் எழுதத்தான் வேண்டுமா’ என்று நினைத்து நினைத்துப் பார்த்து ஓய்ந்து விட்டேன்.. எத்தனைதான் உன் அக்கா ஆசைப்படுகிறாளாக இருக்கட்டுமே,.. தங்கையின் புருஷன் தங்கைக்கு அடிக்கடி கடிதம் எழுதுகிறானோ இல்லையோ என்று கவலைப்படுகிறாளே என்று வாரத்துக்கு ஒருமுறையாவது ஒரு கடிதம் என எழுதி போஸ்ட் செய்துவிடுங்கள், கடைசி காலத்தில் அவள் சந்தோஷப்படட்டும் என்று நீ சொன்னாலும், கடிதம் எழுதுவது எப்படி என்பது இப்போதெல்லாம் மறந்துபோய்விட்டது. இன்று மாலை கூட இந்தக் கடிதம் பற்றி யோசித்துக் கொண்டே கார் ஓட்டியதால், எதிரே ஒரு எருமை மாடு மீது முட்டப்போய் அது என்னை ஒரு மாதிரியாக பார்வை பார்த்துவிட்டு தப்பித்துக் கொண்டதை நான் உனக்கு மொபைலில் சொல்லவில்லைதான். மரணம் வரும்போது எல்லோருக்கும் எருமை வாகனத்தான் எதிர்வருவான் எனச் சொல்வார்கள்.. அந்த எருமைக்கு கார்வாகனத்தான் நான் எமனாகத் எதிரே தெரியப் பார்த்தேன். நல்லகாலம் எமனின் கருணை, எமன் வாகனமான எருமை தப்பித்தது. இருக்கட்டும்..

    இரவு பத்து மணிக்கு இந்தக் கடிதம் எழுதுவதற்காக மேஜை முன்னால் உட்கார்ந்தேன்.. மணி இரண்டாகிவிட்டது.. இன்னமும் எனக்கு என்ன எழுதவேண்டும் என்று தெரியவில்லை. எல்லாவற்றையுமே மொபைலில் பேசிவிட்டோமே.. இன்னமும் எழுதுவதற்கு என்ன இருக்கிறது என்று பார்த்ததில் உன்னிடம் சொல்லாமல் விட்டதையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வருகிறேன். இரு இரு.. இதோ வந்துவிட்டது..

    5மாடியில் சுப்பு மாமி (அந்த மாமியின் நிஜப் பெயர் கூட எனக்குத் தெரியாது.. அந்தப் சுப்புப் பையனுக்கு அம்மா என்பதால் இப்படிக் கூப்பிட்டே என்னையும் பழக்கிவிட்டாய் – உடனே அந்த மாமியின் பேர் தெரிஞ்சு உங்களுக்கு என்ன ஆகணும் என கேட்காதே, நான் ஒரு வார்த்தைக்குச் சொன்னேன் என்பதோடு நான் எவ்வளவு நல்லவன் என்பதையும் நீ புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகச் சொன்னேன்) சரி, விஷயத்துக்கு வருகிறேன். அந்த சுப்பு மாமியின் மூன்றாவது தங்கை அருணா நான் சாப்பாட்டுக்குக் கஷ்டப்படுவதாக அவளாகவே நினைத்துவிட்டு இரவுச் சாப்பாடாக சப்பாத்தியும் தக்காளி சட்னியுமாக வந்தாளா.. அவளிடம் நானும் வீட்டில் சப்பாத்திதான் செய்துகொண்டேன் என்று சொன்னேனா.. அவள் சப்பாத்தியை திரும்ப எடுத்துக் கொண்டு அந்தத் தக்காளிசட்னியை மட்டுமாவது சாப்பிட்டுப் பாருங்கள்’ என்று சொன்னதோடு தக்காளி சட்னியில் புதுமாதிரியாக மிளகாய்க்குப் பதிலாக மிளகும் புளிக்குப் பதிலாக எலுமிச்சையும் பிழிந்து செய்திருப்பதாகவும் சொன்னதால் அதை வாங்கிக் கொண்டேன்.. அவள் பெங்களூரில் அடிக்கடி இதைச் செய்வதாகவும் அவள் புருஷன் எப்போதெல்லாம் கோபித்துக் கொள்கிறானோ, அப்போதெல்லாம் இந்தத் தக்காளி சட்னியைக் காண்பித்தாலே போதும், பெட்டிப்பாம்பாய் சுருண்டு விடுவான் என்றும், அப்படிப்பட்ட தக்காளி சட்னியை நிறையவே எனக்குக் கொடுத்திருப்பதாயும், அடுத்தநாள் சாப்பிட்டால் இன்னமும் ருசியாக இருக்குமே என்பதால் நாளையும் சாப்பிடுங்கள் என்று அவள் தாராள மனப்பான்மையோடு பீற்றிக் கொண்டதையும் எப்படியாவது உன்னிடம் மொபைலில் சொல்லத்தான் வேண்டுமென்று நினைத்தேன்.. ஆனால் நீ அவகாசம் கொடுக்கவில்லையே.. உன் அக்காவைப் பற்றிப் பேசிப்பேசி நீ களைப்பாகக் கடைசியில் தூங்கப்போவதாகவும் காலை வரை மொபைல் அடித்து டிஸ்டர்ப் பண்ணவேண்டாம் என்று கட்டளையும் கூடவே போட்டதால் நான் மறுபடியும் மெனக்கெட்டு உனக்கு போன் போட்டு இந்த விஷயத்தைச் சொல்லவில்லை.

    சரி, தக்காளி சட்னி விஷயத்துக்கு வருகிறேனே.. நான் அதை மட்டும் வாங்கி அவளை அனுப்பதற்காக தேங்ஸ் சொல்லிவிட்டு ருசித்துப்பார்த்து நாளைக் காலை எப்படி இருந்தது என்று சொல்கிறேன்’ என்று அவளை உடனடியாக அனுப்பப் பார்த்தேன்.. அவள் உடனே போகாமல், ’என்ன சார்.. நீங்களும் எப்பவாவது கோபப்பட்டால் உங்கள் மனைவியை இந்த தக்காளி சட்னி செய்து போடச் சொல்லுங்கள், ஒரு நிமிஷத்தில் உங்கள் கோபம் எகிறிப் போய் சாந்தமாகிவிடுவீர்கள்.. இந்த அருணா சொன்னதாக உங்கள் மனைவிக்கு சொல்லுங்கள் சார்’ என்று இலவச அட்வைஸ் ஒன்றும் கொடுத்துவிட்டுதான் மாடி ஏறினாள். (இப்படித்தான் அவள் பெயரையும் நான் தெரிந்துகொண்டேன் என்பதையும் நீ நம்பவேண்டும்)

    பாவம், அவளுக்குத் தெரியாது.. நான் கோபமே படாத ஜன்மம் என்பதும், உனக்கு தக்காளி என்றாலே அலர்ஜி என்பதால் நம் வீட்டு சமையலில் தக்காளிக்கே வேலை இல்லை என்பதும், அதே சமயத்தில் இதைவிட ருசியான புதிய வகை சமையல்கள் செய்து கலக்கி வருபவள் நீ என்பதையும் எப்படி அவளுக்குத் தெரியவைப்பேன். (கலக்கி வருபவள் என்றால் வேறு ஏதாவது அர்த்தம் பண்ணிக்கொள்ளாதே). சரி, அதை விடு.. உனக்குப் பிடிக்காத அந்த தக்காளி சட்னியை எதற்கு இரண்டு வேளையும் நம் வீட்டில் வைப்பானேன் என்று ராத்திரி சாப்பிடும்போதே அத்தனையும் சாப்பிட்டு அவர்கள் கொடுத்த கிண்ணத்தையும் கழுவிவிட்டேன் என்றால் பார்த்துக் கொள்.

    தக்காளி சட்னி அப்படி ஒன்றும் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு ருசியாக இல்லை என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன்..எலுமிச்சை போட்டதால் ருசி அப்படி இப்படி மயக்கப்பார்த்தது என்பது என்னவோ உண்மைதான் என்றாலும் போயும் போயும் தக்காளி சட்னியில் யாராவது எலுமிச்சை பிழிவார்களா என்ற அறிவார்ந்த கேள்வியும் எனக்கு நானே கேட்டுக் கொண்டதால் அந்த ருசி மயக்கத்திலிருந்து கொஞ்சம் வெளியே வந்தேன்.. அதுவும் பெங்களூர் தக்காளி என்பதால் கொஞ்சம் மேல் ருசிக்கு எலுமிச்சை புளிப்பு தேவை என்று போட்டிருக்கலாம் என்றும் சமாதானம் செய்து கொண்டுதான் சாப்பிட்டேன்.  இன்னமும் கேட்டால் நாளை மறுபடி இவள் கீழே இறங்கும்போது என்னைப் பார்த்துவிட்டால், இதைப் பற்றிக் கேட்டால் என்ன சொல்லி சமாளிக்கலாம், எப்படி மறுபடியும் வாங்காமல் இருக்கலாம் என்று ஒரு யோசனையும் கூட இந்தக் கடித விவகாரத்தோடு மூளையின் இன்னொரு பகுதியில் ஓடிக் கொண்டிருக்கிறது.  இந்த மாதிரி விஷயத்துக்கெல்லாம் உன்னிடம் நாளை மொபைலில் போன் போட்டு அட்வைஸ் வாங்கலாம்தான்.. ஆனால் மொபைலில் மறுபடியும் ஆதியோடு அந்தமாய் இந்தத் தக்காளி சமாசாரத்தை உனக்குச் சொல்வதால் உனக்குக் கோபம் வரலாம்..ஏன் இப்படி அடுத்தவர் சாப்பாடுக்கு அலைகிறீர்கள் என்ற கிண்டல் வரலாம், ஒருவேளை ராத்திரியே ஏன் சொல்லவில்லை என்று கேள்வியும் கேட்கலாம்.. ஏன் அத்தனை சட்னியையும் ராத்திரி நேரத்திலேயே விழுங்கித் தொலைத்தீர்கள் என்று எரிச்சலாய்ப் பேசலாம், ஏதாவது வயிற்றைக் கலக்கி ஒன்று கிடக்க ஒன்று ஆனால் அந்த ராத்திரியில் எந்த டாக்டரிடம் ஓடுவீர்கள் என்று கேட்கலாம் (இப்போது வரைக்கு எனக்கு ஒன்றும் ஆகவில்லை என்பது வேறு விஷயம்).. எனக்குப் பிடிக்காத அந்தச் சட்னியை தூரக்கொட்டாமல் ஏன் ஒரு பிடி பிடித்தீர்கள் என்ற கேள்வியும் உன்னிடமிருந்து வரலாம். அதனால் நாளைக் காலையும் உன்னிடம் இந்தத் தக்காளி சட்னி விஷயமாகப் பேசப்போவதில்லை.. எனக்கு இன்னொரு விஷயமும் முக்கியம்.. அதாவது உனக்கு தக்காளி என்றாலே அலர்ஜி என்பது கூட தெரியுமென்பதால் இதைச் சொல்லி உன் எரிச்சலைக் கிளப்புவானேன்.. அதனால் இந்தக் கடிதத்தில் இந்தத் தக்காளி சட்னி விவகாரத்தினையும் முடித்துக் கொள்கிறேன்.

    இந்தக் கடிதம் உனக்கு எப்போது கிடைக்குமோ தெரியாது. நான் மட்டும் நாளைக் காலையே மௌண்ட்ரோடு போஸ்ட் ஆபீஸ் சென்று போஸ்ட் செய்து விடுகிறேன். எப்படியும் இரண்டு நாளைக்குப் பிறகுதான் இந்தக் கடிதம் உனக்குச் சேரும் என்பதால் இரண்டு நாள் இதைப் பற்றி மொபைலில் பேசப்போவதில்லை.. உனக்குப் பிடிக்காத விஷயத்தை உனக்கு மொபைல் போன் போட்டுத்தான் பேச வேண்டுமா.. நீயே சொல். உனக்குப் பிடிக்காத செயலை என்றாவது நான் செய்திருக்கிறேனா?

    மற்றவை ஏதாவது ஞாபகத்துக்கு வந்தாலும், மறுபடியும் இதைப் போல ஏதேனும் இடர் வந்தாலும் கட்டாயமாக அடுத்த வார கடிதத்தில் உனக்குத் தெரியப்படுத்துகிறேன்.

    எழுத மறந்துவிட்டேனே.. உன் அக்காவின் உடல்நலத்தை விசாரித்ததாகச் சொல்லவும்.

    உன் அன்புள்ள கணவன்.

    படத்திற்கு நன்றி: http://lorakrulak.com/2010/08/tomatoes/

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர் 

    ஆதி காலத்திலிருந்து பார்க்கிறோம்.. பெண்கள் என்றால் பொதுவாக போகப் பொருளாகத்தான் சமூகத்தில் சிற்சில ஆண்களின் கண்களுக்குத் தெரிகின்றார்களோ என்னவோ,. பெண்களின் அழகை வர்ணிப்பதென்றால் போதும்.. இந்தக் கவிஞர்களுக்குக் கற்பனா சக்தி விண்ணைத் தொடும் அளவுக்கு பறக்கும். பூ என்பார்கள், பூவினும் மெல்லிய இதழென்பார்கள்.. மென்மைக்கு மறுபெயரே பெண்மை என்பார்கள்.. ஆனால் பெண்கள் வன்கொடுமை என வரும்போது இவர்கள் வர்ணனைக்கு நேர்மாறாக நடக்கும்போது நல்நெஞ்சம் கொண்டோர் அவர் ஆணாயினும் பெண்ணாயினும் நெஞ்சம் பதறத்தானே செய்வர்.

    பெண்கள் வன்கொடுமை இந்தியாவில் இப்போது அதிகம் நடப்பதாகச் செய்திகள், தொலைக்காட்சிகள் தெரிவித்தாலும் இது உலகம் முழுமைக்கும் ஒரே கதைதான் என்பது நம் பார்வையைச் சற்று அகல விரித்தால் புரியும்.. இதற்கான சமுதாயக் காரணங்களாக ஆண்களின் ஆதிக்கத் தன்மையை அதிகமாகக் காண்பித்தாலும், மனோதத்துவ ரீதியாகப் பார்க்கையில் ஆண்களின் தாழ்வு மனப்பான்மையும் அந்தத் தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடாக அவர்கள் மனத்தில் தோன்றும் வெறித்தனமும், அந்த வெறித்தனத்தின் பயனாக அது பெண்ணின் மீது உடல்ரீதியாகத் துன்புறுத்தும்போது அது வன்கொடுமையாக மாறுகிறது. இயற்கையாகவே பெண்களின் மன உறுதி, ஆண்களை விடச் சற்று பலமானதுதான். ஆனால் வன்கொடுமை என வரும்போது பெண்ணின் மன உறுதி குலைக்கப்படுகிறது என்பது வாஸ்தவம்தானே..

    இந்த வாரம் வல்லமையில் ஒரு கதை படித்தேன். ‘நிமிர்ந்த நினைவு’ (http://www.vallamai.com/?p=39956) கதை இந்த வன்கொடுமையினால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கைப் போராட்டமும்,  பலம் உடைய அவள் எப்படியெல்லாம் மனோரீதியாக உடல்நீதியாக பாதிக்கப்படுகிறாள் என்பதையும் விவரிப்பது.

    பெண்கள் ஆண்களோடு பிறந்தவர்கள். தாயாய், சகோதரியாய் பிறவியிலிருந்து ஆண்களோடு வாழ்பவர்கள். பின்னர் மகளாக வருபவள். இத்தனை உறவும் ஆண் ஒரு பெண்ணோடு இணைந்துதான் பெறுகிறான் என்றாலும் இந்த தாய் சகோதரி, மகள்,உறவுமுறைகள் அவனுக்கு நேர்மையாகப் புரியவேண்டும். சமுதாயம் சில நல்ல குறிக்கோள்களை ஆண்வர்க்கத்துக்கு அழுத்தமாகத் தெரியப்படுத்தவேண்டும். இதில் முக்கியமானது பெண்ணை வன்கொடுமைக்கு பலியாக்குவதை அடியோடு ஒழித்துத் தடுப்பதே.

    இந்த வகையில் திருமதி நிர்மலா ராகவன் எழுதிய நிமிர்ந்த நினைவு சிறுகதை என்பது, சமுதாயம் மூலமாக உலகுக்குத் தரும் நல்ல குறிக்கோளின் ஒரு பகுதியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படவேண்டும். பெண் மதிக்கப்படுவதை விட முதலில் அவளுக்கு இழைக்கப்படும் உடல்ரீதியான, மனரீதியான கொடுமைகளைத் தடுக்க முன் வரவேண்டும். இந்தக் கொடுமைகள் தடுக்கப்பட்டாலே பெண் தானாகவே மதிக்கப்படும் நிலை உருவாகிவிடும்.

    நல்லதொரு கதையை வழங்கிய திருமதி நிர்மலா ராகவனை இந்த வார வல்லமையாளராக விருது கொடுத்துக் கௌரவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். அவருக்கு நம் வாழ்த்துகள்.

    கடைசிபாரா: குறட்டையைப் பற்றி திரு. சம்பத் (’வளையம்’ பின்னூட்டம்)

    ஒரு முறை ஹவ்ரா மெயிலில் விசாகப்பட்டிணம் செல்லும் போது சக பயணி ஒருவர் பயங்கரமாகக் குறட்டை விட்டு அடியேனின் தூக்கத்தைக் கலைத்து விட்டார். அடுத்த நாள் காலையில் வண்டி விஜயவாடா சேர்ந்தது. இருவரும் காபியை சுவைத்தவாறு பேச ஆரம்பித்தோம்.

    மெள்ள நான் அவரது முன்னிரவு குறட்டையைப் பற்றி பிரஸ்தாபித்தேன். பொறுமையாக என் புகாரைக் கேட்டபின், “ஐயா, நீங்கள் சொல்கிறீர்கள், நான் சொல்லவில்லை. அதுதான் வித்தியாசம்” என்று ஒரு போடு போட்டார்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    நமது பாரதம் வாத விவாதங்களுக்குப் பெயர் போனது. அந்தக் காலங்களில் செய்யப்பட்ட விவாதங்கள் அனைத்துமே நல்ல நெறிக்கே இறுதியில் அழைத்துச் சென்றன என்பதை சமயம் சம்பந்தப்பட்ட வரலாறு படித்தோருக்கு நிச்சயமாகப் புரியும். மாணிக்கவாசகரின் புத்தபிட்சுக்களுடனான வாதம் அப்படியே எழுத்து வடிவில் நமக்குக் கிடைத்துள்ளது. ஆதி சங்கரராகட்டும் ராமானுஜராகட்டும், விவாதங்களில் மிகப் பெரிய அளவில் பங்கு கொண்டிருந்தனர். பண்டிதர்கள், ஆழ்ந்த அறிவுடையவர்கள், வெற்றி தோல்விகளை ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது மட்டுமல்லாமல் வெற்றி பெற்றவரின் சீடர்களாகவும் ஆனது பற்றிய செய்தியும் அவர்களது வரலாற்றிலிருந்து தெரிய வரும்.

    இந்த விவாதங்கள் எல்லாமே ஒரு சில வரம்புகளுக்குக் கட்டுப்பட்டவை. ஆத்திகரானாலும் நாத்திகரானாலும் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவராக இருந்தாலும் இந்த வரம்பு மீறாதநிலையில்தான் வாதப்பிரதிவாதம் செய்தனர் என்பதை பெரும்பாலான நிகழ்ச்சிகளில் அறிகின்றோம். இவை பற்றிய இன்று கிடைக்கும் செய்திகள் கூட இருபக்கங்களையும் நியாயமானவர்களாகவே வர்ணித்து எழுதியுள்ளார்கள் என்பதையும் இங்கே கவனிக்கவேண்டும். வாதத்துக்கும் விவாதத்துக்குமே இடம் உண்டே தவிர குதர்க்க வாதத்துக்கோ பிடிவாதத்துக்கோ அங்கு இடம் இல்லை. நவீன காலத்தில் பட்டி மன்றங்களாக இவை உருவெடுத்தன என்றாலும், பட்டி மன்றங்கள் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளாக மட்டுமே மாறிவிட்டதாகத்தான் இன்றைய நிலையில் அவைகளைக் கவனிக்கையில் இப்படி நினைக்க வேண்டியுள்ளது.

    ஒருகாலத்தில் நேருக்கு நேர் நின்று முகம் பார்த்துச் செய்யும் விவாதங்கள், இணையம் உலகத்தைச் சுருக்கிவிட்ட இன்றைய காலகட்டத்தில் முகமறியாத விதத்தில் விவாதங்கள் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கின்றன. இணையம் கொடுத்திருக்கிற வசதிகள் மூலம் படித்தவர்கள் பலர் பங்கு பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றனர். யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் இந்த இணைய விதத்தில் கலந்துகொள்ளும்போது பேசலாம் என்பத்யால் பல விவாதங்கள் குதர்க்க திசையில் போனாலும் நிறைய பயனுள்ள செய்திகள் அவைகள் மூலம் கிடைக்கின்றன (அதாவது நல்லவை தீயவை அறியப்படுகின்றன) என்பதையும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். அப்படிப்பார்க்கையில் இந்த விவாதங்களில் பங்கு பெறுகின்ற பண்டிதரான திரு தேவராஜ் அவர்கள் அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருக்கும் விவரங்களும் செய்திகளும் நமக்கு, நமது எண்ணங்களுக்கு விருந்தாக அமைகின்றன என்பதை நிச்சயம் சொல்லலாம்.

    சமீபத்தில் ஒரு விவாதம் – படிப்பதால் உண்மையான ராஜயோகம் கிட்டும் என்கிற விஷயம்தான். இந்த வாரம் இந்த விவாதத்தினைக் கூர்ந்து கவனித்ததில் திரு தேவ் அவர்கள் சொல்லும் செய்திகள் எல்லாமே அவரது அறிவின் முதிர்ச்சியையும், ஆழ்ந்த ஞானத்தையும் சிறப்பாக வெளிப்படுத்துகின்றன. இவரது பாண்டித்யம் பற்றிப் பல இடங்களில் பார்த்ததுண்டு.

    எங்கு சமூகத்துக்கென எதிர்மறையான விஷயங்கள் பேசப்படுகின்றதோ அது தவறு என்பதையும் நம் முன்னோர்கள் எப்படியெல்லாம் நம் சமூகத்தை சீர்திருத்த முயற்சி எடுத்தார்கள் என்பதையும் மிகத் தெளிவான ஆதார விவரங்களோடு எடுத்து வைப்பதில் திரு தேவ் அவர்களுக்கு நிகர் தேவ் மட்டுமே. சமூகம் அதுவும் கற்றவர் சமூகம் என்பது மிகவும் பண்பட்டதாக மாறவேண்டும் என்ற இவரது எண்ணம் இவரது எழுத்தில் வெளிப்படுவதாகத்தான் உணர்கின்றேன்.

    சமீபத்தில் இவர் சிந்தனை ஒன்று ஒரு விவாத களத்தில் வந்து விழுந்ததை கையில் எடுத்து அவர் மொழியில் உங்களுக்காக முன் வைக்கிறேன். படிப்பின் பயன்பாடு எப்படி இருக்கவேண்டும் என்பதை இங்கு உணர்த்துகிறார்.

    “இதே வழியில்தான் என் சிந்தனையும் சென்றது. Dev2

    நூற்கல்வி விவேக மலர்ச்சிக்கு உறுதுணையாக

    அமைதல் வேண்டும்; அந்த விவேகம் மலர்ச்சி பெற்று

    ஞானமாகப் பரிணமிக்கும். விவேகத்தை ஊக்குவிக்காத

    எவ்விதக் கல்வியும் ஆன்மிகப் புலத்துக்கு ஒவ்வாதது,

    அது பெரும்பாலும் செருக்குக்கே அடிகோலும் என்பதே

    நான் புரிந்து கொண்டிருப்பது. கல்வியும், செல்வமும்

    மேலும் மேலும் சேகரிப்பைத் தூண்டுவன. ”உத்தவரின்

    கல்வி உதவாமற் போனது”. ஒப்புக்கொள்வோர்

    ஒப்புக்கொள்ளட்டும்,”

    பல விஷயங்கள், பல மேற்கோள்கள் மூலமாக பல இடங்களில் இவர் மூலம் எனக்குக் கிடைக்கின்றன. இவர் தெளிந்த ஞானம் பலருக்கு செல்கிறது என்பதே ஒரு பெரும் பயன் தானே.. இந்த வாரம் வல்லமையாளராக திரு தேவ் அவர்களைத் தேர்ந்தெடுப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது? பண்டிதர் தேவ் அவர்கள் ஞானச் செல்வம் பற்பலருக்கும் இன்னும் நீண்டகாலம் மென்மேலும் சென்றடையவேண்டும் என்பது என் ஆசை. வல்லமையாளரான் திரு தேவ் அவர்களுக்கு தனிப்பட்ட முறையிலும் வல்லமைக் குழுவினர் சார்பிலும் என் வாழ்த்துகள்.

    கடைசி பாரா: திரு சத்திய மணி’யின் தீபாவளிப் பட்டாசு

    வெடி வெடி வெடியென இடபுறம்

    வெடியால் செவிடர்கள் வலபுறம்

    புகைந்திடும் சூழல் இடபுறம்

    இருமலில் இரைப்பவர் வலபுறம்

    கலகலச் சக்கரம் இடபுறம்

    கடனுக்கு கஞ்சி வலபுறம்

    இளைஞராய் குதிப்பவர் ஒருபுறம்

    இயலாமையில் சிலர் மறுபுறம்

    ந‌ரகாசுரர்க‌ள் எதிர் புற‌ம்

    நார‌ணண் ந‌ம்பி ந‌ம்புற‌ம்

    Share
  • பிரிவு ஒரு தொடர்கதையோ

    திவாகர்

    சென்னை ஏர்போர்ட் பகல் நேரத்தை இந்திய பிரயாணிகளுக்கும் இரவு நேரத்தை வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கும் பிரித்துக் கொடுத்துத் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டதாக அதற்கு ஒரு நினைப்போ என்னவோ. அதுவும் பகலை விட ராத்திரி நேரம்தான் ரொம்ப பிஸி போலும்.. ஒருவேளை சென்னையில் உள்ள மக்கள் ஏதோ பொருட்காட்சியைப் பார்ப்பது போல பார்க்க வருகிறார்களா இல்லை மெய்யாகவே இத்தனை பேரும் பிரயாணிகளா என்று ஆச்சரியப்படவைக்கும்தான். அதுவும் அந்த பல்நாட்டு விமானநிலையம் இருக்கிறதே அது அந்த இரவு நேரத்தில் சந்தைக் கூடம்தான். எத்தனை விமானங்கள்.. எத்தனை அலுவலர்கள்.. விதம் விதமான அலங்காரத்தில் உதடு ஒட்டாமல் விரித்துக்கொண்டே உள்ளே செல்லும் விமானப் பணிப்பெண்கள்..தங்கத் தமிழ்நாட்டில் இந்தியில் கறாராகப் பேசி அனுமதிச் சீட்டு இல்லாமல் உள்ளே விட மறுக்கும் காவலாளிகள்.. பலவிதமான எண்ணக் கலவைகளுடனே மனதில் ஆவல் பொங்க வந்திருக்கும் பிரயாணிகள்.. கனவு, இன்பம், பரபரப்பு, போராட்டம், துன்பம் கடமை என பலவித உணர்ச்சிக்கலவையைத் தாங்கி வரும் பிரயாணிகள் கூட்டம்

    அட, இந்த பிரயாணிகளுடன் கூடவே வரும் உறவுக்கார ஜனங்களைப் பார்க்கவேண்டுமே.. பிரயாணிகளில் முக்கால்வாசிப் பேர் துபாய் போன்ற அரபு நாடுகள் போலும்.. அப்படித்தான் அவர்கள் பேசும் விதத்தில் தெரிந்தது கூட..

    “இவங்கள்லாம் துபாய்’ல கஷ்டப்பட்டு சம்பாதிச்சு இங்கே குடும்பம் காப்பாத்தறாங்க இல்லே.. நன்றிக்கடனா அத்தனை உறவுகளும் வழியனுப்ப வந்திருக்கும்மா”

    அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்ததோடு மட்டுமல்லாமல் அவர்களைக் காண்பித்து தன் மகளிடமும் சொன்னான்.. அந்த மகள் இவனை ஏதோ மாதிரி பார்த்தாள். தன் அம்மாவிடம் கோள் மூட்டினாள்.

    ”அம்மா! என்னம்மா இப்படி பே’ன்னு அப்பா எல்லாரையும் அரக்கப் பரக்க பாத்துண்டிருக்கார்.. எப்படிம்மா இத்தனை வருஷமா தாங்கினே..”

    ”அது ஒரு சோகக்கதைதான்.. என்னாத்துக்கு இப்போ அதை ஞாபகமூட்டறே.. அவர் கிடக்கார்.. உன் டிக்கெட்டையும் பாஸ்போர்ட்டையும் ஜாக்கிரதையா வெச்சுக்கோ”

    அந்த மகள் மறுபடியும் சலித்தாள். “ஐயோ உனக்கு அப்பாவே பரவாயில்லே.. எத்தனை தரம் சொல்வே.. பாஸ்போர்ட் டிக்கெட் இந்த கேட்’ல காட்டறதிலேருந்து கையிலேயே வெச்சுக்கணும்.. எனக்குத் தெரியாதா?

    ஆனாலும் இவர்கள் அந்த இடத்திலேயே நின்றிருந்தனர் “இன்னும் எத்தனை நேரம் இங்கேயே நிக்கறது.. எனக்கு காலை வலிக்கறதும்மா! உள்ளே வுடுவானா’ன்னு கொஞ்சம் கேளும்மா”:

    ”போப்பா.. மூணுமணிநேரம் முன்னாடி அவன் உள்ளேயே விடமாட்டான்.. எதுக்கு அவன்கிட்டே போய் ஹிந்தி’ல திட்டு வாங்கணும்..”

    “அப்போ உன்னைத் தமிழ்லேயே நல்லா திட்டலாமா?”

    ”ஐய்யோ கடவுளே! நீங்க ஏன் இப்படி வெளில வந்தாலும் இவகிட்டே வாயைக் கொடுக்கறீங்க..” அம்மாவின் சொல் மகளை மேலும் கோபமாக்கியது.

    “அப்ப..நான் வாயாடின்னு பட்டம் கட்டறியா அம்மா!.. இதுக்கு என்னை வீட்’லயே டாடா காட்டி அனுப்பிச்சுருக்கலாம்.. ஏர்போர்ட் வரை வந்து ஏன் மானத்தை வாங்கறீங்க. ச்சே.. மூடையே ஸ்பாயில் பண்றீங்க!.”

    “இப்ப, என்னடி சொல்லிட்டேன் இவ்வளோ கோபம் வரது.. வெளியூர் போறே.. உனக்கு கோபம் கூடாது..”

    ”ஆமாம்.. கோபம் கூடாதுதான்” என்ற அப்பாவையும் கோபம் குறையாமல் பார்த்தாள். அப்பா உடனே சமாதானப் படுத்தினார்.

    ”சரி.. சரி.. நாம் இங்க இவ்வளோ தூரம் வந்து உன்னை சமத்தா வழி அனுப்பவேண்டாமா.. நம்மளை வுடு.. அதோ அங்கே பார்.. அந்தம்மா எப்படிக் கேவி கேவி அழறாங்க.. பாவம் இப்போ போற புருஷன் எப்போ வருவானோ.”.

    ”அதெல்லாம் சரிப்பா.. பட் எதுக்கு ஏர்போர்ட் வரை வந்துட்டு அழணும்.. ரெடிகுலஸ்.. இப்போ மாடர்ன் உலகத்துல அழுகை எல்லாம் ஒரு ஓல்ட் ஃபேஷன்..”

    அம்மாவுக்கு கோபம் குறையவில்லை. “அதுக்காக உன்னையும் உங்கப்பாவும் மாதிரி உணர்ச்சியே இல்லாம ஜனங்க எல்லா இடத்துலேயும் இருந்துடுவாங்களா..”

    அவள் உடனே சண்டைக்கு மறுபடியும் மல்லுக் கட்டினாள்.. “இப்போ நான் சொல்றதுல என்ன தப்பு பாக்கறே.. இதோ பார்.. இவங்க.. ஐ மீன்.. துபாய்க்கு இந்த ரெண்டு மூணு மணி நேர பிரயாணம்தான்.. கைல எப்பவுமே மொபைல் போன்.. சதா பேசிட்டே இருக்கறமாதிரி வசதி வந்தாச்சு.. இதுக்கே இப்படி சீன் காமிக்கறாங்களே.. நானெல்லாம் கிட்டத்தட்ட 30 மணிநேரம் பிரயாணம் பண்ணனும்.. மூணு ஏர்போர்ட் டிரான்சிட் பண்ணனும்.. நான் எவ்வளோ சீன் காமிக்கணும்.. என்னப்பா அங்கேயே பாக்கறியே நான் சொல்றதை சரின்னு சொல்லேன்”

    அப்பா சிரித்தான். “ஆமாமா.. ஆனா பாவம்மா.. புருஷன் பெண்ஜாதி இல்லையா.. அப்படித்தான் இருக்கும்.. அங்கே பாரு ஒரு கும்பலே கூட்டம் போட்டு கண்ணைக் கசக்கிண்டு இருக்கு.. இதெல்லாம் தமிழ்நாட்டுல சகஜம்மா.. அந்தக் கிழவன் கூட பாரேன் சந்தடி சாக்குல கண்ணைத் துடைச்சுக்குறான்..”

    அப்பாவின் சிரிப்புக்கு மகளும் பதில் சொல்வது போல சிரித்தாள். “நிஜம்மா இந்த ஏர்போர்ட் ஒரு சினிமா தியேட்டர்தான்பா.. சினிமா’ல சோகக் காட்சியெல்லாம் வரச்சே நம்ம ஜனங்க அழுவாங்க இல்லே அதே மாதிரிதான்..”

    ”அதேதான்.. ஒருத்தர் ஊருக்குப் போறார்னா டீசெண்டா வழி அனுப்பி வெக்கணும்.. ஒரு பூங்கொத்து அப்படி இப்படி கொடுத்து” அப்பா சிரித்துக்கொண்டே தலையாட்டினான்.

    ”ஐய்யோ போதுமே அப்பாவும் மகளும் இங்கே சிரிச்சது.. அப்பறம் இங்கே ஏதோ காமெடி சீன் நடக்கறது’ன்னு நினைச்சு ஜனங்க எல்லாம் நம்மளை சினிமா பார்ப்பாங்க.. வுடுங்க.. டைம் ஆயிடுத்து.. உள்ளே வுடுவான் போல அந்த கடங்காரன்.. உங்க ஏர்போர்ட் டிக்கெட்டையும் அவளோட டிக்கெட்டையும் அவன் மூஞ்சி நேரா காமிங்க.. அப்பதான் உடனே உள்ள வுடுவான்.”

    உள்ளே சென்றவர்கள் மகளை மட்டும் கவுண்டருக்கு அனுப்பி வைத்தார்கள். அவள்: அங்கிருந்து தன் கைபேசியில் ‘அப்பா ஒரு கிலோ ஜாஸ்தியா யிருக்கு.. எதை எடுக்கறது..”

    அவன் உடனடியாக மனைவியைத் திட்டினான். “இதுக்குதான் நான் அப்பவே தலையாலே அடிச்சுகிட்டேன்.. கண்ட கண்டதையெல்லாம் பேக் பண்ணாதே’ன்னு.. பாரு இப்போ எக்ஸ்ட்ரா லக்கேஜ்.. மறுபடியும் பாக்கேஜ் எல்லார் முன்னாடியும் ஓபன் பண்ணனும்”

    அதற்குள் மறுபடியும் அவள் கைபேசியில் பேசினாள். “அப்பா.. டோண்ட் வொர்ரி, அவங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறாங்களாம்..” அப்பா மௌனமாய் கையை ஆட்டினான். “என்னவாம்” மனைவி அதட்டினாள்.

    அவன் அசடு வழிந்தான்.. “இல்லே ஒரு கிலோல்லாம் பரவாயில்லையாம்”.

    மனைவி உடனே சண்டையைத் துவங்கிவிட்டாள். “அவசரபுத்தி உங்களை விட்டுப் போகவே மாட்டேங்குதே.. ஒரு நிமிஷத்துல என்னவெல்லாம் என்னைத் திட்டிப்புட்டீங்க.. நான் இதை அவ்வளோ ஈஸியா விடப்போறதில்லே.. எனக்குத் தெரியாதா யார் யார் எந்தந்த ஏர்லைன்ஸ் எவ்வளோ அக்செப்ட் பண்ணிப்பாங்க’ன்னு..”

    “இரு.. இரு” இந்த சின்ன விஷயத்தை பெரிசுபடுத்தாதே.. இதோ பார் உன் மகள் வராள். சிரிச்சமூஞ்சியோட வழியனுப்பி வையேன்..”

    “ஆஹா.. எனக்கு சிரிச்ச மூஞ்சியில்லே’ன்னு எனக்கு நல்லாவே தெரியும்..அதைக் கூட உங்க மகளுக்கு நீங்களே செஞ்சுடுங்க.”.

    ”என்னம்மா.. இன்னும் ஏதாவது சண்டை போடறீங்களா.. இப்போ சினிமால ஃபைட் சீனாக்கும்.. ஒண்ணு தெரியுமா.. வெளிலே இருக்கற கூட்டம் மாதிரி உள்ளே இல்லே.. ஸோ.. ஆடியன்ஸ் உங்க ஃபைட் சீனுக்கு ரொம்ப குறைவுதான்….

    ”’நல்லா சொன்னே போ’..என்று சொல்லிவிட்டு ஹஹ என்று கொஞ்சம் கத்தி சிரித்த அப்பாவை விசித்திரமாகப் பார்த்தாள் மகள்.

    “அப்பா.. நான் போகறச்சே ஏன் இப்படி சிரிச்சு பயமுறுத்தறே.. அப்புறம் ப்ளேன்’ல தூக்கம் வராது. அப்படியே வந்தாலும் நீ இப்ப சிரிச்சயே ஒரு சிரிப்பு, அது என்னை தூங்க வுடாதுப்பா”

    அம்மாவும் கொஞ்சம் சிரித்தாள். ”ஜாக்கிரதையா போயிட்டு வாடா தங்கம்..”

    “இம்மிகிரேஷன முடிந்ததும் ஒரு கால் கொடுத்தாள். பாதுகாப்பு முறைகள் முடிந்ததும் இன்னொரு கால் கொடுத்தாள்.

    ”சரிப்பா! நீங்க கிளம்புங்க! இரண்டு மணிநேரம் போல ஆகும்.. நான் பாத்துக்கறேன்..”

    ”பரவாயில்லேம்மா..விமானத்துல ஏறி உட்கார்ந்ததும் சொல்லு, அப்பவே போறோமே. வீட்டில போயி என்ன பண்ணப்போறோம். உங்கம்மா வேற கர்புர்’னு இருக்கா.. அதுக்கு இங்கயே இருக்கோம்..” என்று சொல்லிவிட்டு சிரித்தான். அவளும் கொஞ்சம் சத்தமாக சிரித்ததாக காதில் கேட்டது.

    இவர்களைப் போல ஒரு சிலர் உள்ளே வந்து வழி அனுப்பினாலும் அவர்கள் கண்களில் துக்கமும் ஒரு சேர இருந்ததை கவனிக்கவே செய்தான்.. ’உலகம் ரொம்ப சிறுசு.. என்பதை எப்போதுதான் இவர்கள் உணரப்போகிறார்களோ’ என்று மனைவியிடம் சொல்லி வருத்தப்படுவதைப் போல முகத்தை வைத்தான். அவள் இவனைச் சீண்டாமல் ஏர்போர்ட் முழுதும் பார்த்துக் கொண்டு கண்ணால் அளவெடுத்துக் கொண்டிருந்தாள். இன்னும் இரண்டு மணிநேரம் போகவேண்டுமே என்பதாகக் கவலைப் பட்டாளோ என்னவோ..

    இரண்டு மணிநேரமும் கழிந்தது. மகள் கைபேசியும் ஒலித்தது. “என்னம்மா.. ப்ளைட்’ல உக்காந்திட்டியா?”

    “இதோ போகணும்பா.. ஆமாம்ப்பா.. நான் எதுக்காக இவ்வளோ தூரம் பிரயாணம் செஞ்சு என்ன சாதிக்கணும்னு போறேன்’னு இவ்வளோ நேரம் நினைச்சுப் பார்த்தேன்..பா.. ஒண்ணுமே விளங்கலே.. எதுக்காகப்பா உங்க ரெண்டு பேரையும் விட்டுட்டு நான் இப்படி தனியா போகணும்.. அப்பா எனக்கு இப்போ மனசெல்லாம் உங்க ரெண்டு பேரோடயே இருந்துடலாம்’னு தோணறது..” அவள் குரல் உடைந்திருந்ததைக் கவனித்ததும் இவனுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது..

    “ஆமாம்மா.. நாங்க எதுக்கு உன்னை இப்படி கம்பெல் பண்ணி அனுப்பணும்.. நாம் இப்படியே அப்பப்ப சண்டை போட்டுண்டு ஜாலியா கமெண்ட அடிச்சுண்டு இருக்கவேண்டாமா.. நீ எதுக்காக போகணும்..” அவன் குரலும் கம்மியது..

    “அப்பா…” அவள் அழுதது போல அவனுக்குக் கேட்டது..

    “என்னம்மா..”

    “நான் போகலேப்பா.. நான் உங்களோடயே வந்துடறேன்பா..” என்றவளின் கேவி அழும் சப்தம் கேட்டு அப்பாவுக்கு கண்ணில் நீர் பொங்க ஆரம்பித்து விட்டது. இதைக் கவனித்த அம்மா அந்த போனை சட்டென்று அவனிடமிருந்து பிடுங்கினாள். மகள் அம்மாவிடமும் அதையேதான் கேட்டாளோ.. அந்த அழுகைக் குரல் அம்மாவையும் தொற்றிக் கொண்டது.

    “நீ வந்துடுறா செல்லம்..அழாதே அழாதே.. அம்மா நான் இருக்கேன்.. பரவாயில்லே.. என்ன பெரிய படிப்பு வேண்டிக்கிடக்கு.. அங்க போய் படிக்கறதை இங்கேயே படிக்கமுடியாதா என்ன?..நீ முதல்ல அழுகையை நிறுத்தும்மா”

    “இல்லேம்மா.. நான் இப்போ உள்ளே இருக்கேன்மா.. எல்லாத்தையும் உதறிவிட்டு வரமுடியாது..”:

    “அப்ப ஒண்ணு பண்ணு.. போனவுடனே அங்கே நிலைமையைப் பாரு.. பிடிக்கலேன்னு வெச்சுக்க, உடனே புறப்பட்டு வந்துடு, என்னடா செல்லம்..”

    “சரிம்மா.. நீ அழாதே.. போனை அப்பாகிட்டே கொடு”

    ”என்னம்மா”

    “அப்பா! அம்மாகிட்டே நான் இல்லாத சமயத்துல சண்டை போடாதேப்பா..”

    ”சரிம்மா.. நீ வந்தவுடனே உன் முன்னாடியே சண்டை போடறோம்.”

    சட்டென மகள் சிரித்த சப்தம் அம்மாவுக்கும் கேட்டது போலும். மெல்ல புருஷன் கையை அழுத்திப் பிடித்துக் கொண்டாள்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    மனிதனும் இயற்கையும் ஒன்று. நம் உடல் பஞ்ச பூதத்தினால் ஆனது. மண், ஆகாயம், நீர், காற்று, அனல் இவற்றுடன் சம்பந்தப்படுத்தியே மனிதன் படைக்கப்பட்டான். அதனால் மனிதன் இயற்கையோடு ஒன்றிச் செயல்பட வேண்டும் என்பதற்காகப் படைக்கப்பட்டவன்.. ஆனால் மனிதனே மனிதனை அதாவது இயற்கையை அழிக்கலாமா.. ஆண்டாண்டுக் காலமாக இந்த விழிப்புணர்ச்சி இல்லாமல் இயற்கையை அழிப்பது இந்த மனித குலம்தான்.

    மனிதர்களின் சின்னச் சின்ன சுகங்களுக்காக இயற்கையை அதிகம் சீண்டி விளையாடியதால்தான் சமீபத்திய கேதார்நாத், பத்ரிநாத் இழப்புகள் என்கிறார்கள் சுற்றுச் சூழல் ஆய்வாளர்கள். இயற்கைச் சீற்றங்களினால் மனித அழிவு ஏற்படும்போதும் அந்த அழிவில் நமக்கு நெருங்கியவர்களில் சிலர் மறையும்போதும் ஆற்றாத் துயருணர்ச்சி உண்டாகிறதுதான். ஆனாலும் ஒவ்வொரு முறையும் மனித வசதி மேம்பாடு என்கிற பெயரில் நாம் இயற்கைக்கு செய்யும் கொடுமைகளை மட்டும் மிக வசதியாக மறந்துவிடுகின்றோம்.

    இயந்திரமயமான நிகழ்கால வாழ்க்கையில் நமக்காக நாம் முதல் பலி கொடுப்பது இயற்கையை அழிக்கும்போதுதான். அதே சமயத்தில் இயற்கையும் நமக்குப் போட்டியாக எத்தனையோ பேரழிவுகளை நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஆனால் அவைகளிலிருந்து நாம் பாடம் கற்றுக் கொள்வதில்லை. மேலும் தவறு செய்கிறோம். பாதுகாப்புக்காகவும், நீர்வசதிக்காகவும் இயற்கை கொடுத்திருந்த மலைகள் கிரானைட் கல் ஏற்றுமதியில் இருந்த இடம் தெரியாமல் கரைக்கப்பட்டு வருகின்றன. சுத்தமான குடிநீரை அள்ளித் தரும் நதி நீரில் ரசாயனக் கழிவுகள் தெரிந்தே கலக்கப்பட்டு, மாசுபடுத்தப்பட்டு வருகின்றன. இன்று சுற்றுச் சூழல் காற்று கெடுக்கப்பட்டு வருவதை உலகம் முழுவதும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இதனைத் தடுக்க எத்தனையோ கூப்பாடுகள் போட்டாலும் சுற்றுச் சுழல் மாசுபடுத்தப்படுவது நிறுத்தப்படுவதில்லைதான். வான்வெளியையும் விட்டு விடுவதில்லை நாம். இயற்கையைக் கெடுத்து அதனால் நாமும் நம்மைக் கெடுத்துக்கொண்டு வாழும் இந்த வாழ்க்கையும் ஒரு வாழ்வா என்று மனிதன் எப்போதுதான் நினைக்கத்தொடங்குவானோ..

     வே.ம.அருச்சுணன்இயற்கைதனை அழிப்போர்
    இறைவனின் எதிரியென்போம்
    படைத்தவன் நமக்களித்த
    வாழ்வுதனைத் தட்டிப் பறிக்கும்
    அரக்கனை அழிப்போம்
    பணத்துக்குச் சோரம் போகும்
    கொடியோரின் கருவறுப்போம்
    தலைமுறையும் துளிர்க்காமல்
    காவல் காப்போம்!
    செயற்கைப் பேரிடர்
    நந்தவனப் பயிர்களும் உயிர்களும்
    அற்ப ஆயுளை முத்தமிடல்
    கொடுமையின் உச்சம்!

    இறைவனின் அருட்கொடை
    மனிதன் இயற்கையை
    நேசிப்பதும் சுவாசிப்பதும்
    காப்பதும் வாழ்த்துவதும்
    உரிமையும் பெற்றவன்!

    இயற்கையைக் காக்க
    உள்ளத்தையும் உயிரையும்
    அள்ளித் தருவோம் மடமையில்
    எதிர்ப்போரைக் கிள்ளி எறிவோம்
    அடுத்த தலைமுறைக்கு இயற்கையை
    விட்டுவைப்போம் செழிப்பாய்
    அதுவரையில் உயிராய்க்
    காத்து நிற்போம்!

    மலேசியாவைச் சேர்ந்த வே. ம. அருச்சுணனின் கவிதை இது. இன்னும் இது போல எத்தனை ஆயிரம் கவிதைகள் விழிப்புணர்வு தந்தால் மனிதன் விழித்துக் கொள்வானோ.. இந்த வாரத்தில் வல்லமை இதழில் இக்கவிதையை இயற்றிய திரு அருச்சுனன் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து வாழ்த்துகின்றோம்.

    கடைசி பாரா: திரு செண்பக ஜகதீசனின் கவிதை

    எல்லாம்
    ஒன்றாய்ச் செய்யும் மனிதன்,
    நன்றாய் இல்லையே குணத்தில்
    ஒன்றியே உள்ளானே பணத்தில்…!

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    வெ.திவாகர்

    “முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
    பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே”

    என்பார் மாணிக்கவாசகர். இறைவன் என்பான் பழமை நாம் என நினைக்கும் அந்தப் பழமைக்கும் பழமையானவன் என்ற அதே சமயத்தில் புதுமைக்குப் பின் வரும் புதுமைகளையும் புகுத்தி வருவன் அவனே என்பதாகப் பொருள் வரும். இந்தப் பதிவு எழுதும்போது இந்தப் பாடல் ஞாபகம் வந்தது. இருக்கட்டும்.

    சென்ற ஞாயிறு, சென்னையில் ஒரு பயிற்சி வகுப்பு. இந்தப் பயிற்சி வகுப்பு என்பது எப்படி ஒரு புத்தகத்தை எளிய முறையில் மின்னாக்கம் செய்வது என்பது. இந்தப் பயிற்சியைக் கொடுத்தவர் கடலூரில் இருந்து இதற்காகவே வந்த டாக்டர் தி.வாசுதேவன் எனும் அரசாங்க மருத்துவர். புத்தகங்கள், அதிலும் மிகப் பழமையான ஆவணங்கள் கொண்ட புத்தகங்களை மின்னாக்கம் செய்து வைத்தால் பிற்காலத்தில் எத்தனை உபயோகப்படும் என்பதற்காக இந்தப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இத்தகவலை எனக்குக் கொடுத்து உதவியவர், நண்பர் ரீச் சந்திரா தான்.

    டாக்டர் தி. வா.வை மின்னுலகக் குழுமத்தினர் பலர் அறிந்திருக்கலாம். இவருக்கும் எனக்கும் ஏற்பட்ட ஒரு பெயர்க் குழப்பத்தில் எனக்காக தன் பெயரைத் ’தியாகம்’ செய்து, ‘திவாஜி’ என இனி அழைக்கவும் எனப் பிரகடனம் செய்ததோடு அவர் பெயரையும் திவாஜி என்றே கையெழுத்தில் போட்டவர்.

    நான் முதலில் ஆரம்பித்த மாணிக்கவாசகர் திருவெம்பாவைப் பாடலுக்கும் இவருக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. திவாஜி, பழமையைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல் தன் வாழ்நாளில் அப்படியே கடைப்பிடிப்பவர் கூட. சனாதன தர்மத்தின் ஆணிவேரான வேத தர்மத்தின் அடிச்சுவட்டில் தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். தொழில் மருத்துவமானாலும் மூன்று வேளையும் அக்னிஹோத்திரம் செய்து வருபவர். வேதத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு சனாதனியின் கடமை என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் கடலூரில் தக்கதொரு வேத பாடசாலை (ஸ்வாமிநாதர் வேத பாடசாலை) அமைத்தவர். இந்த வேத பாடசாலை பற்றி அறிய http://www.swaminathar.org/ என்கிற தளத்திற்குச் சென்றால் எல்லா விவரங்களும் புரியும், இவர் எளிமையும், ஸனாதான தர்மத்தில் இவருக்கு உள்ள இந்தக் கடமையின் நேர்த்தியும் புரியும்.

    பழமை என்றில்லாமல் புதுமையான தற்காலத்து கணினி தொழில்நுட்பத்தை இவர் எல்லோரிடமும் எடுத்துச் செல்வது மிகவும் போற்றத்தக்கது . ’தொண்டுகிழங்களுக்குக் கணினி’ எனும் இவரது வலைப்பகுதியில் எளிய வகையில் எல்லோரும் புழங்கக்கூடிய வகையிலே கணினித் திறம் பெறுவது எப்படி என்று விளக்கி வருகிறார். இவரது இந்த வலைப்பகுதியிலே http://techforelders.blogspot.in/ சென்று பார்த்தாலே இவர் எப்படியெல்லாம் ஞானம் என்பது பலருக்கும் சென்று அடைய வேண்டும் என்பதை விரும்புகிறார் என்பது புரியும்.

    திவாஜியின் இந்தச் சமூக சேவை, மிகவும் பாராட்டுக்குரியது. எந்தவித எதிர்பார்ப்புமில்லாமல் இந்தக் கலியுகத்தில் இப்படியும் சிலர் தேர்ந்தெடுத்த சில நல்ல சேவைகளைச் செய்வதால்தான் நாடெங்கும் மழை தவறாமல் பெய்து வருகின்றதோ என்று நினைக்குமளவுக்குத் தொண்டு செய்து வரும் டாக்டர் திவாஜியை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து நாங்கள் கௌரவம் தேடிக்கொள்கிறோம்.

    **** **** ****

    கடைசி பாரா: அடடா.. இத்தனைப் பூக்களும் (புக்களும்?) ஒரு வாகனத்துக்காகவா தேமொழி?

    என்ன ஒரு செக்கச் சிவப்பு
    கண்ணைக் கவரும் வாளிப்பு
    மதியை மயக்கும் வனப்பு
    அழகிய பளபளப்பு மினுமினுப்பு

    Share