Tag: எம். ஜெயராம சர்மா

  • சிவனை நாம் வணங்கி நிற்போம் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண் 

    சினமெமைத் தீண்டா நிற்கச்
    சிரமதில் கனதி போகப்
    பரமனின் பாதம் பற்றிப்
    பணிந்துமே நிற்போம் என்றும்!                 Shiva

    மனிதராய் வாழ வேண்டில்
    மனமதில் தூய்மை வேண்டும்
    புனிதராய் இருக்க வேண்டில்
    போற்றுவோம் பரமன் தன்னை!

    ஆணவம் தமக்குள் ஏற
    அனைத்தையும் மறந்தே நின்ற
    மாலொடு பிரமன் தானும்
    மதிகெட்ட செயலைச் செய்தார்!

    கடவுளர் தாமே என்று
    கங்கணம் கட்டி நின்று
    அழிவினைத் தேடும் வண்ணம்
    அவர்நிலை ஆயிற் றன்றோ?

    ஆணவம் அழிக்க அங்கே
    அளவிலா ஜோதி தோன்றிக்
    காணுங்கள் ஆதி அந்தம்
    கடவுளாய் ஆவீர் நீங்கள்

    என்ற அச்சேதி கேட்டு
    இருவரும் முயற்சி செய்துப்
    பன்றியாய் பட்சி ஆகிப்
    பற்பல வித்தை செய்தார்!

    வென்றவர் யாரு மின்றி
    விக்கித்து நின்ற போது
    அங்குமே சிவனும் தோன்றி
    ஆணவம் போக்கி நின்றார்!

    என்றுநாம் அறியும் வண்ணம்
    இயம்பிடும் புராணம் தன்னை
    நன்றுநாம் கற்றோம் ஆனால்
    நாமுமே திருந்தி வாழ்வோம்!

    மனங்களில் அழுக்கு வந்தால்
    மாயையே தோன்றி நிற்கும்
    குணமெலாம் மாறிப் போகும்
    குறைகளே குவிந்து நிற்கும்!

    அறமெலாம் மறந்தே போகும்
    ஆணவம் ஆட்சி செய்யும்
    அரனது நாமம் கூட
    அனைவரும் மறந்தே போவர்!

    சிவனது இரவு தன்னில்
    அவனையே மனதில் எண்ணி
    பவவினை போக்கு என்று
    பணிவுடன் வேண்டி நிற்போம்!

    நீறு அணிந்த நெற்றியொடு
    ஆறு அணிந்த சடையுடையான்
    பேறு தனைப் பெற்றுவிட
    கூறி நிற்போம் அவன்நாமம்!

    சிவனது நோக்குப் பட்டால்
    தெளிவுமே வந்து நிற்கும்
    உளமெலாம் தூய்மை ஆகி
    உமைபாகன் பக்கம் சேரும்!

    தவமுடன் சிவனை எண்ணித்
    தலைமீது கையை வைத்துச்
    சிவனைநாம் வணங்கி நிற்போம்
    சிவனது இரவு தன்னில்!

    Share
  • காதலை என்றும் காப்போம் !

    – எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    வாழ்விலே காதல் இன்றேல்
    வரட்சியே வந்து நிற்கும்
    ஆதலால் காதல் செய்வோம்
    அனைவரும் மகிழ்ந்து நிற்போம்!           love

    ஆண்டவன் எமக்குத் தந்த
    அருங்கொடை காதல் அன்றோ
    ஆதலால் காதல் தன்னை
    அணைத்துமே நிற்போம் வாழ்வில்!

    மாதாவைக் காதல் செய்வோம்
    மனமெலாம் குளிரச் செய்வோம்
    மாண்புடைத் தந்தை மீது
    மறக்காது காதல் கொள்வோம்!

    குருதனை எண்ணி எண்ணிக்
    குறைவின்றிக் காதல் செய்வோம்
    அருமறை போற்றும் அவனை
    அனுதினம் காதல் செய்வோம்!

    இளசுகள் காதல் என்றும்
    இனிப்பாக இருக்கும் என்பர்
    பழசுகள் காதல் தன்னில்
    பக்குவம் தெரியும் என்பர்!

    உலகிலே காதல் செய்வோர்
    உண்மையாய் இருந்தே விட்டால்
    அழகுடைக் காதல் அங்கு
    அருமையாய் மலரும் அன்றோ?

    காதலை மோதல் ஆக்கும்
    கயவரின் கூட்டம் தன்னைக்
    காதலர் தினத்தில் நாங்கள்
    மோதியே மிதித்தல் வேண்டும்!

    காதலை மனத்தில்  கொண்டு
    கண்ணியம் அதனுள் சேர்த்து
    வேதனைக் கொடுக்கா நின்று
    விருப்பமாய்க் காதல் செய்வோம்!

    இருமனம் இணைந்தால் அன்றோ
    என்றுமே மலரும் காதல்
    இருமலர் ஆக வாழ்வில்
    இணைப்பதும் காதல் அன்றோ?

    காதலர் தினத்தில் நாங்கள்
    காதலைக் காக்க வேண்டில்
    காதலைக் கண்போல் எண்ணிக்
    காதலை என்றும் காப்போம்!

    பூதலம் மீது காதல்
    புனிதமாய் இருக்க வேண்டி
    மாமலர் கொண்டு நாங்கள்
    மாதவன் கோவில் செல்வோம்!

     

    Share
  • அழுக்ககற்ற முனைந்துநிற்போம் !

      -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    Republic Day-jpg-1193

       குடியரசு மலர்ந்தாலும்
       குடிமட்டும் மறையவில்லை
       நடுஇரவில் தனியாக
       நடமாட முடியவில்லை!

       வெடிகுண்டு கலாசாரம்
       விட்டெங்கும் போகவில்லை
       நடமாடும் விபசாரம்
       நாட்டைவிட்டு அகலவில்லை!

       காந்திசொன்ன சுதந்திரத்தை
       கண்டுகொள்ள முடியவில்லை
       கள்ளத்தனம் புகுந்தெங்கும்
       கழுத்தறுத்து நிற்கிறது!

       நீதிநேர்மை எல்லாமே
       நிலைகுலைந்து நிற்கிறது
       சாதிவெறி தலைவிரித்துச்
       சதிராடி நிற்கிறது!

       ஓதிநன்கு உணர்ந்தோர்கள்
       ஒதுங்கிநிற்க முயலுகின்றார்
       உலுத்தகுண மிக்கோரே
       உயர்த்திக்கொடி  பிடிக்கின்றார்!

       நாட்டுக்காய் உழைத்தோரை
       நாம்நினைத்துப் பார்ப்பதற்கு
       நல்லதொரு சந்தர்ப்பம்
       நம்குடியரசு நாளாகும்!

       குளறுபடி அரசியலைக்
       குழிதோண்டிப் புதைத்திடுவோம்
       நலமுடைய அரசியலை
       நம்நாட்டில் அமைத்திடுவோம்!

       தனிமனித சுதந்திரத்தைச்
       சரித்திரமாய் ஆக்கிடுவோம்
       தரணிதனில் பாரதத்தைத்
       தலைநிமரச் செய்துநிற்போம்!

      பாரதிரப் பாரதத்தைப்
    பார்க்கவைக்க வேண்டுமாயின்
    பக்குவமாய்க் குடியரசைப்
    பாதுகாத்தல் வேண்டுமன்றோ?

     போரொழிப்போம் புரட்டழிப்போம்
     பூசலெலாம் ஒழித்துநிற்போம்
    வாசலெலாம் கோலமிட்டு
     வரவேற்போம் குடியரசை!

     குடியரசுநாள்  தன்னில்
    கூடிநாம் சேர்ந்திருந்து
    அடிமனதில் ஒழிந்திருக்கும்
    அழுக்ககற்ற முனைந்துநிற்போம் !

     

    Share
  • தயவான நீயே தாய் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    கடும்விரதம் பல இருந் தாய்
    கருவறையில் எனைச் சுமந் தாய்
    கருணைமழை தனைப் பொழிந் தாய்
    காதலுடன் எனை வளர்த் தாய்!                             momchild

    அரும்பொருளாய் எனை நினைத் தாய்
    அமுதெனப் பால் தனைக்கொடுத் தாய்
    பெரும்பிணிகள் தனைத் தடுத் தாய்
    பித்தாகி எனை வளர்த் தாய்!

    கரும்பெனவே எனை நினைத் தாய்
    விரும்பியெனை தினம் அணைத் தாய்
    துரும்புவிழா எனைக் காத் தாய்
    தூமணியாய் நீஇருந் தாய்!

    தொட்டிலிலே தூங்கிட வைத் தாய்
    துளிஅழுதால் நீதுடித் தாய்
    கட்டிலிலே போட மறுத் தாய்
    கைகளில் தாங்கியே இருந் தாய்!

    பொட்டிட்டு அழகு பார்த் தாய்
    பூவாக எனை நினைத் தாய்
    வட்டநிலா என நினைத் தாய்
    வாஞ்சையுடன் எனைப் பார்த் தாய்!

    முகம்பார்த்து முறுவல் தந் தாய்
    முத்தெனவே எனை நினைத் தாய்
    நகம்குத்தும் என நினைத் தாய்
    நயமுடனே அதைக் கடித் தாய்!

    கண்பட்டுவிடும் என நினைத் தாய்
    கன்னமதில் பொட்டும் வைத் தாய்
    புண்பட்டுவிடும் என நினைத் தாய்
    புழுதிபடா எனைக் காத் தாய்!

    பதமாக உணவு தந் தாய்
    பார்வைக்குள் எனை வைத் தாய்
    நிலைகுலையா எனைப் பார்த் தாய்
    நிம்மதி நான் என நினைத் தாய்!

    சொத்தாக எனை நினைத் தாய்
    சுவையாகப் பல கொடுத் தாய்
    முத்தாக எனை நினைத் தாய்
    முழுநிலவாய் எனை வளர்த் தாய்!

    அருள்தந்தாய் பொருள்தந்தாய்
    ஆசியும் கூடத் தந் தாய்
    பெருகிடவே அன்பு தந் தாய்
    பேரளும் எனக் கீந் தாய்!

    மாங்கனியாய் எனை நினைத் தாய்
    மாமருந்தாய் எனை நினைத் தாய்
    தாங்கிநின்று எனைப் பார்த் தாய்
    தயவானே நீயே தாய்!

    Share
  • புதுவாழ்வு பிறந்திடட்டும் !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    தமிழரது தலைநிமிர
    தைப்பொங்கல் உதவிடட்டும்
    தமிழேறி அரசாள
    தைப்பொங்கல் விளங்கிடட்டும்!

    வீடிழந்து நாடிழந்து
    வேதனையில் நிற்பார்க்கு
    விடிவெள்ளி தோன்றுதற்கும்
    இப்பொங்கல் உதவிடட்டும்!

    படுகொலைகள் தனைநினைந்து
    பரிதவிக்கும் உள்ளமெலாம்
    அதைமறந்து இனிவாழ
    அமைந்திடட்டும் இப்பொங்கல்!

    இனிமேலும் இத்துயர்போல்
    எவர்க்குமே வாராமல்
    இறைவாநீ காத்திடென
    எல்லோரும் பொங்கிநிற்போம்!

    மங்கலங்கள் பலநிகழ
    வழிவகுக்க வேண்டுமென்று
    பொங்கிடுவோம் பொங்கலினைப்
    புத்துணர்வு பிறப்பதற்காய்!

    சங்கெடுத்து ஊதிடுவோம்
    சங்கடங்கள் ஓடிடட்டும்
    பொங்கல்பொங்கி வருவதுபோல்
    புதுவாழ்வு பிறந்திடட்டும்!

     

    Share
  • எங்களது தைப்பொங்கல்!

    -எம். ஜெயராம சர்மா -மெல்பேண்

    பொங்கலென்று சொன்னாலே
    பூரிப்புவந்து நிற்கும்
    மங்கலமாய் நினைவுகளும்
    மனங்களிலே நிறைந்துவிடும்!         http://www.dreamstime.com/royalty-free-stock-photo-indian-festival-pongal-illustration-image1753855

    தங்களது வாழ்க்கையிலே
    தைபிறந்தால் வழிபிறக்கும்
    என்றுஎண்ணி யெல்லோரும்
    இன்பமுடன் பொங்கிநிற்பர்!

    குடும்பமெலாம் ஒன்றானால்
    குதூகலமே நிறைந்துவிடும்
    குத்துவிளக் கேற்றிவைத்து
    கொண்டாடி மகிழ்ந்திடுவர்!

    மூத்தவர்கள் கையாலே
    முதலரிசி எடுத்தங்கே
    பால்பொங்கி வருகையிலே
    பக்குவமாய்ப் போட்டிடுவர்!

    சர்க்கரையும் பாலுமங்கே
    சரியாகக் கலப்பதுபோல்
    சன்மார்க்கம் சந்தோஷம்
    சகலர்க்கும் வந்துநிற்கும்!

    பொங்கல்பொங்கி வருகையிலே
    புதுச்சுவையும் கூடவரும்
    புத்துணர்வும் அதனூடாய்
    புறப்பட்டு வந்திடுமே!

    பட்டணத்தில் பொங்கலென்றால்
    பலபேர்க்குத் தெரியாது
    பட்டிக்காட்டான் பொங்கலென்று
    பகர்ந்துமே நின்றிடுவர்!

    பட்டிக்காட்டான் இல்லையென்றால்
    பட்டணமே இருக்காது
    பட்டினியாய்க் கிடந்தங்கே
    படவேணும் பலபாடு!

    சேற்றிலே காலைவைத்துச்
    சோற்றையே தந்த அவன்
    நாட்டிலே இல்லையென்றால்
    நம்பொங்கல் இனித்திடுமா!

    பொங்கலென்று சொன்னாலே
    புதுத்தெம்பு தருபவனே
    எங்களது ஏருழவன்
    ஏனதனை எண்ணவில்லை?

    மஞ்சள்இலை வந்துநிற்கும்
    மங்கலங்கள் நிறைந்துநிற்கும்
    பொங்கிவரும் பூரிப்பால்
    பொங்கலே மணக்குமங்கே!

    பட்டணத்தார் பொங்கல்பார்க்கப்
    பட்டிக்காடு போகின்றார்
    பட்டிக்காடு எல்லாமே
    பால்பொங்கி நிற்கிறது!

    பட்டணத்தில் பொங்கலிப்போ
    பத்திரமாய்க் கிச்சனிலே
    பாத்திரத்தில் இருக்கிறது
    பார்க்கமட்டும் பொங்கலாக!

    என்றாலும் பொங்குகிறார்
    இனிப்புவர வேணுமென்று
    இனிக்கட்டும் எல்லார்க்கும்
    எங்களது தைப்பொங்கல்!

    Share
  • மெளனமாய் இருக்கின்றேன் !

    எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    இலைகொடுப்பேன் காய்கொடுப்பேன்
    இனிமையொடு கனிகொடுப்பேன்
    எல்லோர்க்கும் உதவுவதே
    என்னோக்காய் கொண்டுவிட்டேன்!

    மங்கலங்கள் நடந்தாலும்                                        mango
    அமங்கலங்கள் நடந்தாலும்
    தங்குதடை ஏதுமின்றி
    தொங்கிநிற்கும் என்னிலையே!

    பொங்கல்பொங்கும் பானைதனைப்
    புதுப்பொலிவு ஆக்குதற்கு
    மங்கலமாய் என்னிலையே
    தொங்கிநிற்கும் பானையிலே!

    என்கனியை உண்பதற்கு
    ஏக்கமுடன் காத்திருப்பர்
    இனிப்பாக இருந்தவர்க்கு
    எப்போதும் சுவைகொடுப்பேன்!

    குழந்தைகளும் சுவைப்பார்கள்
    குமரர்களும் சுவைப்பார்கள்
    அரசர்முதல் ஆண்டிவரை
    அனைவருமே சுவைத்திடுவார்!

    மல்கோவா எனவழைப்பார்
    மனமெல்லாம் விருப்புடனே
    சேலத்தின் பெயர்சேர்த்தும்
    சிறப்புடனே அழைத்திடுவார்!

    ஈழத்தில் இருப்பவர்கள்
    என்கனிக்குப் பேர்கொடுப்பர்
    எத்தனைபேர் பெற்றிடினும்
    இனிப்பேயென் நிலைப்பாகும்!

    முக்கனியில் என்கனியே
    முன்னிற்கும் கனியாகும்
    அக்கனிகள் அத்தனையும்
    அபிஷேகப் பொருளாகும்!

    நல்லதொரு நாடகத்தை
    நாரதரும் நடத்துதற்கு
    நன்றாக உதவியதே
    நான்கொடுத்த கனியன்றோ!

    நான்கொடுத்த கனிதானே
    நாதன்மகன் மலையேற
    நற்கதையாய் அமைந்தனை
    நாடெல்லாம் அறிந்ததன்றோ!

    வேண்டும்வரம் கிடைப்பதற்கு
    விநாயகரை வழிபடுவோர்
    விருப்பமுடன் கொடுப்பதும்
    விதம்விதமாய் என்கனியே!

    ஓமம் வளர்ப்பதற்கு
    உடன்விறகாய் ஆகிடுவேன்
    உட்கார்ந்து இளைப்பாற
    உதவுவதும் என்னியல்பே!

    உயிரோடு இருக்கும்வரை
    உதவிடுவேன் யாவர்க்கும்
    உயிர்விட்டுப் போய்விடினும்
    உதவிடுவேன் விறகாய்நான்!

    காய்கொடுப்பேன் கனிகொடுப்பேன்
    கடைசிவரை உதவிடுவேன்
    கல்லெறியும் எனக்குவிழும்
    கண்களைநான் மூடிநிற்பேன்!

    என்மீது கல்லெறிவார்
    என்றுமே விருப்புடையார்
    என்றுநான் எண்ணியெண்ணி
    இன்னுமே உதவுகின்றேன்!

    மண்மீது உள்ளவர்கள்
    மனமெனக்குப் புரிந்தாலும்
    மாமரமாய் இருப்பதனால்
    மெளனமாய் இருக்கின்றேன் !

     

    Share
  • இருக்கின்றார் படமாக !

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    பட்சணங்கள் பலசெய்வார்
    பக்குவமாய் ஊட்டிடுவார்
    நட்டநடு ராத்திரியில்
    நானழுதால் எழும்பிடுவார்!

    இஷ்டமுடன் எனையணைப்பார்
    எக்கணமும் எனைநினைப்பார்
    கஷ்டமின்றி நான்வளரக்
    காரணமாய் இருந்தாரே!

    அவர்மடியில் படுத்துவிடின்
    அரைநொடியில் தூங்கிடுவேன்
    அவர்முகத்தைப் பார்ப்பதிலே
    ஆனந்தம் அடைந்திடுவேன்!

    பள்ளிப் படிப்பறியார்
    பலவிஷயம் தானறிவார்
    வெள்ளை மனமுடையார்
    விபரமாய்ப் பேசிடுவார்!

    கள்ளமெலாம் செய்துவிடின்
    கடுங்கோபம் காட்டிடுவார்
    உள்ளமதில் அன்புடையார்
    ஊரார்க்கும் உதவிடுவார்!

    பல்லில்லா வாயாலே
    பலகதைகள் சொல்லிடுவார்
    நல்லநல்ல விஷயமெல்லாம்
    நயமாகப் புகட்டிடுவார்!

    கைதொட்டுப் பார்த்துவிடின்
    கழன்றுவிடும் நோயெல்லாம்
    கணநேரச் சிந்தனையில்
    கண்டிடுவார் அத்தனையும்!

    திருமுறைகள் பாடிடுவார்
    திருக்குறளும் கூறிடுவார்
    எவர்வரினும் வீட்டினுக்கு
    இன்முகமே காட்டிடுவார்!

    மனத்திலே துணிவுடையார்
    வள்ளல்குணம் மிகவுடையார்
    தனக்கெதுவும் சேர்த்துவையார்
    தன்பாட்டில் மகிழ்ந்துநிற்பார்!

    குடும்பமது குதூகலிக்கக்
    கொடிபிடிப்பார் பாட்டியம்மா
    குத்துவிளக் காயிருந்து
    குலம்விளங்கச் செய்துநிற்பார்!

    பண்டிகை வந்துவிடின்
    பாட்டிகாலில் விழுந்திடுவோம்
    பாட்டிதரும் ஆசியினால்
    பயனெல்லாம் வந்துநிற்கும்!

    பொங்கல்வந்து விட்டாலே
    பூரித்து நின்றிடுவார்
    பொக்கைவாய்ப் பாட்டிக்கு
    பொங்கிவிட்டால் ஆனந்தம்!

    பொங்கலிலே பாட்டிநின்றால்
    எங்குமே ஆனந்தம்
    எங்கள்பாட்டி இப்போது
    இருக்கின்றார் படமாக!

     

    Share
  • தரணியே காத்திருக்கும் !

         -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

          தைபிறந்தால் வழிபிறக்கும்
          தடைகளெலாம் அகன்றுவிடும்
          மெய்வருந்தி உழைப்போரை
          மேதினியே பாராட்டும்!

          கைநிறையக் காசுவர
          கெளரவமாய் நாமிருக்க
          கடவுளது நினைப்புடனே
          கடினமாய் உழைத்துநிற்போம்!

          பொய்யுரைக்கும் எண்ணமதைப்
          பொசுக்கிவிட முயன்றிடுவோம்
          ஐயனது குறள்வழியே
          அனைவருமே நடந்திடுவோம்!

          செய்கின்ற அத்தனையும்
          சீராகச் செய்துநிற்போம்
          வையகத்தில் வன்முறைகள்
          வரவிடாமல் தடுத்திடுவோம்!

          உறவுநிலை பேணிடுவோம்
          ஊர்போற்ற உயர்ந்திடுவோம்
          அறவழியைத் தேர்ந்தெடுத்து
          அனைவருமே வாழ்ந்திடுவோம்!

          தைமகளை வரவேற்போம்
          தைரியத்தைக் கையெடுப்போம்
          உய்யும்வழி தோன்றிவிடும்
          உவப்புடனே நாமிருப்போம்!

           மார்கழி மறையும்போது
           மலர்ந்துவரும் தைதன்னை
           வாவென்று அழைத்துவிடின்
           வாழ்வெல்லாம் மங்கலமே!

           இழுபட்ட திருமணங்கள்
           இன்பமாய் நிறைவுபெற
           எப்போதும் எங்களுக்குத்
           தைபிறந்தால் வழிபிறக்கும்!

          தைபிறந்தால் வழிபிறக்கும்
          தாலிவரும் வேலைவரும்
          தைபிறக்கும் வேளைதனைத்
          தரணியே காத்திருக்கும்!

    Share
  • மனத்தினால் வரவேற்போமே!

     -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    NYG1

     

           

     

     

     

     

     

          

            இரண்டாயிரத்துப் பதினைந்தை
            இன்பமுடன் வரவேற்போம்
            எங்களது வாழ்வினிலே
            ஏற்றமுற வேண்டுமென்று!

            சங்கடங்கள் போவதற்கும்
            இங்கிதங்கள் வருவதற்கும்
            பொங்கிவரும் புதுவருடம்
            புதுமருந்தாய் அமைந்திடட்டும்!

            வங்கக்கடல் கடைந்த
            மாதவனைக் கேசவனை
            வாழ்த்திநின்ற மார்கழியை
            மனமார வணங்கிடுவோம்!

            எங்களது வாழ்விலினிலே
            மங்கலமே வருகவென
            சங்குகொண்டு ஊதிநின்று
            சந்திப்போம் புதுவரவை!

           மனங்களில் மாற்றம்வந்து
           மதங்களால் அமைதிவந்து
           தினம்தினம் எங்கள்வாழ்வு
           திருந்திட வேண்டிநிற்போம்!

           புலர்ந்திடும் பொழுதுபோல
           பூரிப்பு வந்துசேர
           மலர்ந்திடு வருடமென்று
           மனத்தினால் வரவேற்போமே!

    Share
  • எதிர்த்திடுவோம் கலப்படத்தை!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    நெஞ்சுவலி என்று சொல்லி
    நீர் கேட்டு அருந்தியவர்
    அரை நிமிடம் பேசிவிட்டு
    அப்படியே தூங்கி விட்டார்!

    தூங்கியவர் எழும்ப வில்லை
    துக்கத்தைக் கொடுத்து விட்டு
    ஏங்கி நின்று அழுதிடவே
    எமனுலகை சென் றடைந்தார்!

    தாயோடு பிள்ளைகளும்
    தலைதலையாய் அடித்திட்டு
    சஞ்சலமாம் கடலினுள்ளே
    தாம் மூழ்கிக் கிடந்தனரே!

    மூத்தபிள்ளை மணியாக
    குடும்பத்தில் இருந்தமையால்
    முழுப்பேரும் மணியினையே
    முதலாகக் கொண்டுநின்றார்!

    தந்தையில்லாக் குடும்பமதில்
    தங்கைமார் ஐவருடன்
    தாயுமே சேர்ந்து அவன்
    தயவினையே பார்த்திருந்தார்!

    மணிகுடும்ப நிலைகண்டு
    மாதவனும் மனமிரங்கி
    மருந்துக் கடைதன்னில்
    மணிக்கு வேலைகொடுத்தனனே!

    மணிவீட்டில் யாவருமே
    வயிராற உண்பதற்கு
    மருந்துக் கடைவேலை
    மாமருந்தாய் ஆகியதே!

    மணியனது வேலைகண்டு
    மலைத்து நின்ற மாதவனும்
    மானேஜர் பதவியிலே
    மணியையுமே அமர்த்தினரே!

    மணியறிவு மணியழகு
    மாதவனைக் கவர்ந்தமையால்
    மாப்பிள்ளை ஆக்கிவிட்டான்
    மணிதன்னை மாதவனும்!

    மணியினது மனத்தினிலே
    பணத்தாசை பிடித்ததனால்
    மனம்போன போக்கினிலே
    பணம்பண்ணத் தொடங்கிவிட்டான்!

    மருந்துக்கடை இப்போது
    மணிவசத்தில் வந்தமையால்
    கலப்படத்தைக் கையாண்டு
    காசுழைக்கத் தொடங்கிவிட்டான்!

    காசுவந்த காரணத்தால்
    கடவுளையே மறந்தான்
    கஷ்டப்பட்டு வந்ததையும்
    கவனத்தில் கொள்ளவில்லை!

    கலப்பட மருந்தினாலே
    கணக்கின்றி நுடங்கிவிட்டு
    கவலைப்பட்டு நிற்போரை
    கருத்திலும் கொள்ளவில்லை!

    நாட்பட்ட மருந்தையெல்லாம்
    நல்லமருந்த தோடிணைத்து
    மேல்பட்ட விலைக்குவிற்று
    விரைவாகப் பணம்சேர்த்தான்!

    பப்பாளிவிதை தன்னை
    பக்குவமாய் பதப்படுத்தி
    மிளகோடு சேர்த்துஅவன்
    வெகுலாபம் ஈட்டிநின்றான்!

    நாட்பட்ட பால்மாவை
    நல்லமாவுடன் கலந்து
    நம்பவைத்து எல்லோர்க்கும்
    நயமாக விற்றுவந்தான்!

    பணம்பணமாய் அவன்குவித்தான்
    பண்பையவன் இழந்துநின்றான்
    பத்துமாதம் சுமந்ததாய்
    பதைபதைத்து நின்றிருந்தாள்!

    பெண்கொடுத்த மாதவனும்
    பித்துப்பிடித்து நின்றான்
    கைபிடித்த மனையாளும்
    கதிகலங்கி அங்குநின்றாள்!

    காசுகாசாய் உழைத்தவனின்
    கண்களிலே வியாதிவந்து
    ஏறாதபடி இடமெல்லாம்
    இறைத்தானே காசையெல்லாம்

    சத்திரசிகிச்சை செய்தால்
    சரியாக வருமென்றெண்ணி
    முத்திரைபதித்த டாக்டர்
    மூலமாய் செய்துநின்றான்!

    சிகிச்சையின் போதுஅங்கு
    கொடுத்திட்ட மருந்துயாவும்
    சிக்கலை உண்டுபண்ணி
    சிதைத்ததே வாழ்வுதன்னை

    காசுழைத்தை மணிகண்கள்
    காட்சிகாண மறுத்ததனால்
    காசுகளை மணிகண்கள்
    காணவே முடியவில்லை!

    முத்திரை பதித்தடாக்டர்
    மூச்சுவிடும் இடத்திலெல்லாம்
    மணியினது கலப்படமே
    மலிந்துமே இருந்ததுவே!

    கலப்படத்தை கைக்கொண்ட
    மணியினது மருந்திப்போ
    கலப்பட மன்னனது
    கண்களையே கலக்கியது!

    மணியினது குடும்பத்தார்
    மனம்நொந்து டாக்டரிடம்
    மணிபார்வை வருவதற்கு
    வழியுண்டா எனக்கேட்டார்!

    கலப்பட மருந்தெல்லாம்
    கண்டபடி உலவுவதால்
    சிகிச்சையின் போதுஅது
    சிக்காலாய் போச்சுயிங்கே!

    இப்படி மருந்துவிற்கும்
    எளியவரின் கூட்டத்தை
    இறக்கும்வரை தூக்கிலிட
    வேண்டுமென்றார் டாக்டருமே!

    வீட்டிற்கு வந்தவுடன்
    விவரத்தைச் சொன்னார்கள்
    மெளனமாய் அவனிருந்தான்
    மனமங்கே அழுததுவே!

    கலப்படத்தால் கண்ணிழந்தோர்
    காதிழந்தோர் எத்தனைபேர்
    கலப்படத்தால் காலனிடம்
    கட்டுண்டார் எத்தனைபேர்!

    நாளாந்தம் கலப்படங்கள்
    நாட்டில் உலாவருவதற்கு
    நல்லதொரு பாடத்தை
    நானறிந்தேன் எனநினைந்தான்!

    மணிபோல எத்தனைபேர்
    அணிவகுத்து நிற்கின்றார்
    இனிமேலும்பொறுக்காமல்
    எதிர்த்திடுவோம் கலப்படத்தை!

     

    Share
  • உணர்வுகள்!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    அதிகாலை எழுந்திடுவார்
    அனுஷ்டானம் பார்த்திடுவார்
    பூப்பறித்து வந்துநின்று
    பூசைசெய்து நின்றிடுவார்!

    சிவநாமம் அரிநாமம்
    சிந்தனையில் ஓடிநிற்கும்
    சிரித்துமே பார்த்தறியோம்
    சிடுமூஞ்சி யாயிருப்பார்!

    அப்பாவைக் கண்டதுமே
    அனைவருமே அடங்கிடுவோம்
    அந்தளவு வீட்டிலவர்
    அடக்குமுறை காட்டிடுவார்!

    அவர்நண்பர் சீனுவரின்
    அரைகுறையாய்ப் பேசிடுவார்
    அடுத்தகணம் அவர்கையில்
    அமர்ந்திருக்கும் செய்தித்தாள்!

    சாப்பிடும் வேளையிலே
    சத்தம் போடக்கூடாது
    சத்தம்யாரும் போட்டுவிடின்
    சன்னதமே ஆடிடுவார்!

    பண்டிகை வந்துவிட்டால்
    பலவற்றைத் தந்திடுவார்
    பார்த்துநாம் சிரித்துவிடின்
    பளாரென்று அறைகிடைக்கும்!

    உனக்குமா இப்படி
    எனக்கேட்டோம் அம்மாவை
    ஆமெனவே தலையசைத்து
    அவர்மெளனி ஆகிவிட்டார்!

    பொய்பேசும் பழக்கத்தைப்
    பொறுக்க அவர்மாட்டாமல்
    எல்லோர்க்கும் எச்சரிக்கை
    எப்போதும் விட்டிடுவார்!

    குடிப்பழக்கம் கொண்டோரைக்
    கொன்றொழிக்க வேணுமென்பார்
    குளறுபடிக் காரரொடு
    கூடவேணாம் எனச்சொல்வார்!

    தானதர்மம் எல்லாமே
    தாரளமாகச் செய்வார்
    சமயச் சடங்குகளை
    சரியாகச் செய்துநிற்பார்!

    ஆனாலும் எங்களிடம்
    தாராளம் காட்டாமல்
    அப்பாவும் இருப்பதற்கு
    அடிப்படையை நாமறியோம்!

    அம்மாவும் அப்பாவும்
    ஆதரவாய்ப் பேசியதோ
    அகமகிழ நின்றதையோ
    ஆரும்நாம் கண்டதில்லை!

    என்றாலும் எங்குடும்பம்
    இன்னலின்றி ஓடியது
    எல்லோரும் ஒன்றாக
    இன்புற்று இருந்தோமே!

    காலையிலே எழுந்த அம்மா
    காப்பிகொண்டு வருகையிலே
    கண்மயங்கி அவ்விடத்தில்
    காப்பியுடன் விழுந்துவிட்டார்!

    பூசைசெய்த அப்பாவும்
    ஓசைகேட்டு ஓடிவந்தார்
    ஆசையுடன் அம்மாவை
    அரவணைத்து நின்றாரே!

    அப்பாவின் செயல்கண்டு
    அனைவருமே அசந்துவிட்டோம்
    அப்பாவின் உள்ளத்தும்
    அன்பூற்று இருக்கிறதா?

    மடிமீது தலைவைத்து
    மனைவிமுகம் பார்த்த அவர்
    தலையிலே கையைவைத்து
    ”சாவித்ரி” எனவழைத்தார்!

    அம்மாவை அணைத்தபடி
    அழைத்தாரே அழுதபடி
    அம்மாதான் அசையாமல்
    அப்படியே மடிகிடந்தார்!

    வீட்டிலே எல்லோரும்
    வெலவெலத்துப் போய்விட்டோம்
    பேசாமல் இருந்த அம்மா
    பேசாமலே கிடந்தார்!

    அழுதபடி அப்பாவும்
    அப்படியே இருந்தாரே
    எங்களையும் அருகணைத்து
    ஏங்கிநின்று அழுதாரே!

    இரக்கத்தை ஒழித்துவிட்டு
    எங்களப்பா இருந்ததனை
    இப்போது கண்டதும்
    இரங்கியவர் முகம்பார்த்தோம்!

    உள்ளுணர்வு வெளிவந்து
    உலுக்கியே விட்டதனால்
    ஒன்றுமே அறியாது
    ஓலமிட்டார் எங்களப்பா!

    அடக்கியெமை ஆண்ட அப்பா
    அடங்கியே இருந்திட்டார்
    அம்மாவின் அணைப்பிழந்து
    அவரிப்போ அழுகின்றார்!

    உணர்வுகள் எப்போதும்
    உள்ளுக்குள் இருப்பதில்லை
    உயிருள்ள மனிதர்க்கு
    உணர்வுகளே உயர்வாகும்!

     

    Share
  • குடியொழிக்க வாரீர் !

            -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

              மாந்தோப்பில் அவளிருந்தாள்
              மரம்வெட்ட இவன்சென்றான்
              தேன் தொட்டுச் சுவைப்பதற்காய்
              தினமுமங்கே அவன்சென்றான்!

              கறுப்புநிற மென்றாலும்
              கட்டழகு நிறைந்தவளாய்
              காண்போரைக் கவரும்படிக்
              கண்ணம்மா இருந்தாளே!

              மரம்வெட்ட வந்த அவன்
              மாந்தோப்பில் நின்றவளை
              மனதிலே கொண்டதனால்
              மாலயிட ஆசைகொண்டான்!

              ஆசையினை அவளிடத்தில்
              அவன்சொன்ன போதுஅவள்
              பேசாமல் ஒருபார்வை
              பிரமிப்பாய் பார்த்தனளே!

              சாதியேதும் பார்க்காமல்
              சடங்கேதும் செய்யாமல்
              சந்தோஷத் தோடவர்கள்
              தம்பாட்டில் சேர்ந்தனரே!

              இனிமையாய் அவர்வாழ்வு
              இருந்தவொரு காரணத்தால்
              இருவரும் மகிழ்ந்திடவே
              இனியகுரல் ஒலித்ததங்கே!

             ஆண்குழந்தை பிறந்ததனால்
             அகமகிழ்ந்து நின்றார்கள்
             ஆனந்தம் மேலிடவே
             அதைக் கொஞ்சிநின்றார்கள்!

             குழந்தையின் குரல்கேட்டு
             குதூகலத்தில் மிதந்தார்கள்
             குறையொன்றும் இன்றியே
             குடும்பமும் ஓடியதே!

             ஆண்குழந்தை என்றதுமே
             அந்தரத்தில் அவன்நின்றான்
             அதனாலே அவன்போக்கில்
             ஆணவமே தோன்றியதே!

              மரம்வெட்டி நின்றவனோ
              மரக்காலை உரிமைபெற்று
              உரம்பெற்ற முதலுடயை
              உயர்முத லாளியானான்!

             பணம்வந்து விட்டதனால்
             பண்புஎலாம் தடம்மாறி
             குணமற்ற கூட்டமுடன்
             குலவியவன் நின்றிட்டான்!

             மனைவியிடம் இருந்த அன்பு
             மாறியது மதுவிடத்தில்
             மதுவோடு நில்லாமல்
             மங்கைகளும் வந்தணைந்தார்!

             வெறியோடு வீடுவரும்
             விருந்தாளி போலஅவன்
             நெறியின்றி இருந்ததனால்
             நெடுந்துயரம் அவள்கொண்டாள்!

             கண்ணிலே நீர்கொடுத்த
             கடவுளையே நொந்துஅவள்
             எண்ணியெண்ணி யேங்கியே
             இருப்பதையே மறந்துவிட்டாள்!

             அருமையாய்ச் சமைத்துவிட்டு
             அவள்வாசல் வந்துநின்றாள்
             அரையிலே ஆடையின்றி
             அவனாடி  வந்துநின்றான்!

             வாசலிலே நின்றவளின்
             வயிற்றில் அவனுதைத்தானே
             கைக்குழந்தை யோடுஅங்கே
             கதறியவள் வீழ்ந்தாளே!

             வெறியோடு அவன்கிடந்தான்
             வேதனையால் அவள்துடித்தாள்
             விடிந்ததும் அவன்பார்த்தான்
             வேரற்ற மரமானான்!

             பிஞ்சுக் குழந்தையுடன்
             பிணமாக அவள்கிடந்தாள்
             பித்துப் பிடித்தவனாய்
             பேதலித்து அவன்நின்றான்!

             காவல்துறை கைதுசெய்து
             காட்டியது தன்பணியை
             நீதிமன்ற தண்டனையால்
             நீண்டகாலம் உள்ளிருந்தான்!

            சிறைச்சாலை சென்றஅவன்
            செய்தபிழை தானுணர்ந்தான்
            மடத்தனமாய் மனைவிபிள்ளை
            மாண்டுவிடச் செய்தேனே!

            நெறிதவறி வெறிபோட்டு
            நிட்டூரம் பலசெய்து
            நீசனாய் நிற்கின்றேன்
            எனவெண்ணி அழுதனனே!

            காவலர்கள் வந்தவனை
            காரணத்தைக் கேட்டார்கள்
            கதைகூறி அங்கவனும்
            கதறியே அழுதிட்டான்!

            குடித்துவிட்டுக் கூத்தடித்தல்
            கூடாது என்றான்
            குடிப்பதனால் குடிமுழுக்க
            அழிந்துவிடும் என்றான்!

            குடிஒழிந்தால் நாட்டினிலே
            கொலைஒழியும் என்றான்
            குப்புறவே விழுந்த அவன்
            குப்புறவே கிடந்தான்!

            குடித்துவிடும் ஆண்களால்
            குடிமுழுகிப் போகும்
            குடியொழித்து விட்டாலே
            குடும்பம் அதுதழைக்கும்!

             குடும்பமெலாம் வாழ்வதற்குக்
             குடியொழிக்க வாரீர்
             குடிக்காத சமூகமதைக்
             குவலயத்தில் சமைப்போம்!

     

    Share
  • என்னளவில் மகிழ்கின்றேன்!

       – எம். ஜெயராமசர்மா – மெல்பேண்

         பார்த்தவர்கள் எல்லோரும்
         பக்குவமாய் வந்தமர்ந்து
         பலகதைகள் பேசிநிதம்
         பானமெலாம் பருகிடுவர்!

         வேர்த்துதொழுகி நிற்பார்கள்
         விரைந்தங்கே ஓடிவந்து
         வியர்வைதனைப் போக்கிவிட்டு
         வியந்தென்னைப் பார்த்துநிற்பர்!            tree

         பெரியவரும் சிறியவரும்
         பேதமின்றி வந்திடுவார்
         அருமையாய்ப் பலகதைகள்
         அவரங்கே பேசிடுவார்!

          உரசல்களும் வருமங்கே
          ஊர்வம்பும் தேடிவரும்
          பெருமளவில் சண்டைகளும்
          பின்னேரம் நடக்குமங்கே!

          பஞ்சாயம் செய்வாரும்
          பலகாதல் செய்வாரும்
          பாங்காக என்னிடத்தை
          தேர்ந்தெடுத்து நிற்பார்கள்!

          வெயில் நேரமானாலோ
          விரைந்தங்கே கூட்டம்வந்து
          பையவே அமர்ந்திருந்து
          பரவசமே கொண்டுநிற்பர்!

          எங்கிருந்தோ பறவையெலாம்
          எனைநாடி ஓடிவந்து
          இங்கிதமாய் இருந்தபடிச்
          சங்கீதம் பாடிநிற்கும்!

          குயில்கூவும் ஒருபக்கம்
          குரங்கோடும் மறுபக்கம்
          அணிலெல்லாம் அணிவகுத்து
          ஆடியசைந் தோடிநிற்கும்!

          இளனிவெட்டி விற்பாரும்
          இனிப்புச்செய்து விற்பாரும்
          இருப்பதனைப் பார்த்துவிட்டு
          எங்கிருந்தோ கூட்டம்வரும்!

          என்னிழலில் எல்லோரும்
          இருப்பதனைப் பார்த்தவுடன்
         எனக்குவரும் இன்பமதை
         எண்ணிவிட முடியாது!

         ஊர்நடுவே நானிருந்தேன்
         உதவிநின்றேன் யாவருக்கும்
         யார்செய்த பொல்லாங்கோ
         நானங்கே இல்லையிப்போ!

         புதுத்தலைவர் வந்தவுடன்
         புதுத்திட்டம் போட்டார்கள்
         திட்டம்வந்த காரணத்தால்
         தீர்ந்துபோச்சு என்வாழ்வு!

         ஊர்நடுவேநான் நின்றால்
         உபத்திரவம் எனச்சொல்லி
         வேரோடுஎனைச் சாய்க்க
         விரைந்தங்கே செயற்பட்டார்!

         வீதியைப் பெருக்குதற்கு
         வில்லங்கம் நானென்று
         வெட்டுதற்குத்  தீர்மானம்
         விரைந்தங்கே எடுத்திட்டார்!

         வெட்டுகின்ற செயல்பற்றி
         விவாதங்கள் நடந்தாலும்
         வெட்டவேணும் எனும்கட்சி
         வெற்றியங்கே பெற்றதுவே!

         இரவோடு இரவாக
         எனைவெட்டி வீழ்த்தினரே
         மறுநாளே விறகாக
         மண்மீது நான்கிடந்தேன்!

          நிழல்கொடுத்து நின்றயெனை
          நினைத்துமே பார்க்காமல்
          எனையெடுத்து எரிப்பதற்கு
          எல்லோரும் படையெடுத்தார்!

         இப்படியா இருப்பார்கள்
         எண்றெண்ணிப் பார்க்கையிலே
         மனிதமனம் மரத்துவிட்ட
         வக்கிரத்தை நினைக்கின்றேன்!

          எப்படித்தான் இருந்தாலும்
          எல்லோர்க்கும் நிழல்கொடுத்தேன்
          எனும்நினைப்பு  எழும்போது
          என்னளவில் மகிழ்கின்றேன்!

     

    Share
  • தரணியிலே உயர்ந்திடுவோம்

    எம். ஜெயராமசர்மா .. மெல்பேண்

    தலைவருடி எனையணைத்து
    தனதுதிரம் தனைப்பாலாய்
    மனமுருகித் தந்தவளே
    மாநிலத்தில் தாய்தானே

    மடிமீது எனைவைத்து
    மாரியென முத்தமிட்டு
    விழிமூடித் தூங்காமல்
    விழித்தவளும் தாய்தானே

    படிமீது கிடந்தழுது
    பலமுறையும் வேண்டிநின்று
    பாருலகில் எனைப்பெற்ற
    பண்புடையோள் தாய்தானே

    விரதமெலாம் பூண்டொழுகி
    விதியினையே விரட்டிவிட்டு
    வித்தகனாய் இவ்வுலகில்
    விதைத்தவளும் தாய்தானே

    மலடியென மற்றவர்கள்
    மனமுடையப் பேசிடினும்
    மால்மருகன் தனைவேண்டி
    மாற்றியதும் தாய்தானே

    நிலவுலகில் பலபிறவி
    வந்துற்ற போதினிலும்
    நிம்மதியைத் தருவதற்கு
    நிற்பவளே தாய்தானே

    தாய்மைக்கு இலக்கணமே
    தாய்மைதான் ஆகிவிடும்
    தாய்போல இவ்வுலகில்
    தகவுடையார் யாருமுண்டோ

    வேருக்கு நீராக
    தாயிருப்பாள் எப்போதும்
    தாயிருக்கும் வீட்டினிலே
    சகலதுமே நிறைந்திருக்கும்

    நோய்க்குமவள் மருந்தாவாள்
    நுடங்கிவிடின் துடித்திடுவாள்
    வாய்க்குமவள் சுவையாவாள்
    வல்லமையின் உருவாவாள்

    தாய்க்குலமே இல்லையெனின்
    தரணிநிலை என்னாகும்
    தாய்தன்னைப் போற்றிடுவோம்
    தரணியிலே உயர்ந்திடுவோம்

    Share