–தேவா
வானத்தில் புள்ளிவைத்து – என்
இதயத்தில் கோலம் போட்டாய்,
நிலவுப்பொட்டில் உன் முகம்!
தேவா
பெண்ணே!!
உன் உடம்பு மட்டுமே
உல்லாச ஊஞ்சலாகிவிட்டது,
ஜாதி பேதமின்றி,
வயது வரம்பின்றி, அனைவரும் ஆடிமகிழ்கின்றனர்,
உன் ஆபரணத்தைத்தான் அபகரிக்கிறார்கள் என்றால்,
உன் அழகு பெட்டகத்தில், கற்பு கூட சூறையாடப்படுகிறது,
அமிலத்தில் அபிஷேகம் உனக்கு மட்டுமே செய்யப்படுகிறது,
வெறி நாய்களின் இச்சைக்கு உன் சதைகள் சிதைக்கப்படுகிறது,
பாவம் கூட உனக்காக பரிதாபப்படவில்லையே!
பிரம்மன் உன் படைப்பில் வஞ்சனை செய்து விட்டானடி,
அழகைத் தந்தவன் ஆபத்தையும் தந்துவிட்டான்,
என் செய்வது,
ஆண்களின் பசிக்கு பெண்கள் இரையாவது,
என்றோ ஆரம்பமாகிவிட்டது,
அடுத்தவன் பெஞ்சாதியை,
ஆண் ஜாதிதானே துகில் உரித்தது,
அன்று கண்ணன் சேலை தந்தான்,
இன்று உன் சடலத்திற்கு மட்டுமே போர்த்தப்படுகிறது,
ஆனாலும் ஆச்சரியம்!
எத்தனை நடந்தாலும் உன் பொறுமையின் பெருமைதான்
ஆச்சரியம், அதிசயம், நீ மட்டுமே அற்புதம்,
மற்றவை அப்புறம்,
போதுமம்மா போதும்,
பட்டது போதும், உன்னை தொட்டது போதும்,
நீ கெட்டது போதும்,
கவலைப்படாதே!
இனியொரு உலகு படைப்போம்,
உனக்கொரு விதி செய்வோம்…
அங்கு உன் சுதந்திரக்கொடியை மட்டுமே பறக்கவிடுவோம்…
கவிஞர்களே
உங்கள் ,கவிதை தறியில்,
கனவுகளையும் ,கற்பனையும் ,பொய்யையும்
நெய்ததுபோதும் ,
அரசனை பாராட்டி பரிசுகள் பெற்றதும் போதும் ,
உங்கள் முன்னோர்கள் ,
ஈரடி குறளும் ,நாளடி பாட்டும்
பாரதியின் கனவுகளும் ஏதும் மெய்யாகவில்லை ,
ஆக்கப்பூர்வமாக ,ஆரோக்யமாக மனிதன் வாழ்வதற்கு ,
வழிதனை உங்கள் வரிகளில் வரைந்திடுக ….
படத்துக்கு நன்றி
தேவா
என் பாட்டி சொல்லும் கதைதான்
என் இரவு நேர தூக்க மாத்திரைகள் ,
காலையில் என்னை எழுப்புவது என் பாட்டிதான் – அன்று
ஏனோ மாலை வரை அவள் எழவில்லை ,
மாலை அணிந்து அவள் படுத்துக் கிடந்தாள் – தலை மாட்டில் விளக்கு ,
எங்கும் மவுனம்
அதைக் கலைத்த சில அழுகைகள் ,
அதையும் தாண்டி தாரை தப்பட்டைகள் ,
அவளை நாலு பேர் தூக்கிச் சென்றனர் , முன்னால் என் தந்தை ,
தீச்சடியுடன் ,
‘அம்மா ,பட்டியை எங்க கூட்டிட்டுப் போறாங்கம்மா ? – .நான் ,
‘பாட்டி சாமி ஆயிட்டா, அதான் கோவிலுக்கு எடுத்துட்டுப் போறாங்க – அம்மா.
‘அம்மா பாட்டிய நிப்பாட்டும்மா இரவு பாதிகதையை சொல்லிட்டு
மீதி கதையை,சொல்லாம போறாங்கம்மா – நானும் அழுதேன்.
ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் ,மீள்வதுண்டோ?
எனக்கு தெரியாமல் போனது.
ஒருநாள் கோவிலுக்கு சென்றோம்
என் கண்கள் எதையோ தேடியது ; என் தாய் அதைக் கண்டு ,
‘என்ன தேடுகிறாய் என்றாள்’?
‘சாமியை தேடுகிறேன்’ என்றேன்.
‘அதோ உள்ளே இருக்கிறது சாமி ’, உள்ளே இருக்கும் சிலையைக்
காட்டினாள்.
அந்த சாமி ,இல்லம்மா ,
நம்ம பாட்டி சாமி ஆகிட்டாள்னு சொன்னாயே
அவளைத்தான் ,தேடிக்கிட்டு இருக்கேன்.
என் தந்தையின் கண்களில் ,கண்ணீர்.
உண்டென்றும் இல்லை என்றும்
உரைப்போர் உலகில் கோடியுண்டு
கைலாயத்தில் கண்டேன் ஈசனை என்போர் சிலர்
காசிக்கு சென்றாலும் பாவங்கள் போகவில்லை
என்போரும் உண்டு ,
பயிர் காத்திட மழை ,ஈந்திடும் முகிலும் இறைவனே என்று
எழுதிவிட்டார் வள்ளுவன் ,
தெய்வத்தை பல உருவில் வணங்கினாலும்
அழுகின்ற குழந்தைக்கு பசிதீர்க்கும் உள்ளத்துக்கோர்
ஆலயம் கட்டி வணங்குவேன்
வாடுகின்ற மனிதனுக்கு ஊக்கமூட்டி ,
பகிர்ந்துண்ணும் இதயமே இறைவன் வாழும் ஆலயம் அன்றோ!
படத்துக்கு நன்றி: http://www.flickr.com/photos/csureshbabu/3350928450/
புது வருடத்தில்
அவன் வாழ்க்கை சிறக்குமா ..
நல்ல நேரம் பிறக்குமா ???
தின நாளிதழில் தேடிகொண்டிருந்தான்
வாழ்கையை இளைஞன் ,
இளைஞனே!!
உனக்கு சொல்வேன்,
உழைக்கும் தினமுனது ”முகூர்த்தநாள்”
உறங்கா நேரம்
உன் ‘‘நல்ல நேரம் ”
சோம்பி படுத்திடும் நேரம் ”’ராகுகாலம் ”’
வீணடிக்கும் நேரமே ,…..
உன் ”’எமகண்டம் “…..
படத்துக்கு நன்றி: http://mimohanraj.wordpress.com/category/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/
தேவா
மந்திரிக்கு காத்திருக்கும் ”கொடிக்கம்பம்”’
வாடிப்போன பூக்கள்
சோர்ந்துபோன மாணவர்கள்
வியர்த்து ஒழுகும் ஆசிரியர்கள்
சுதந்திரதினத்தில் சுதந்திரம் இல்லா மனிதர்கள்,
சரித்திரம் படித்தவர்களும்
சரித்திரம் படைத்தவர்களை மறந்துபோனார்கள்
புலம்பும் தியாகியின் கிழிந்த சட்டையில் காந்தியின்
புகைப்படம் ….
மறுநாள் செய்தித்தாளில்
கொடியெற்றிய மந்திரி
கொடிக்கம்பம் நட்டதில் ஊழலால் கைது ,…
என்ன!!,
ஆங்கிலேயன் நம்மிடம் சுரண்டிச்சென்றானா??..
இவர்களும்,அவர்களும் ,
சுரண்டினார்கள்!
சுரண்டுகிறார்கள்!!
சுரண்டிக்கொண்டிருப்பர்கள்!!!
படத்துக்கு நன்றி: http://www.dinamalar.com/Incident_detail.asp?news_id=8250
தேவா
முன்னோர்கள் கண்ட கனவு
பின்னோர்கள் வந்தும் கனவாகவே நின்றது
முன்னேறும் நாடு என்று மூன்று தலைமுறை முடிந்துவிட்டது ,
எங்கள் தலை முடிகள் தான் உதிர்ந்துபோனது
வசதிகள் பல வந்துவிட்டதாம்
மாற்றங்கள் பல நடந்துவிட்டதாம் – அட
உலகம் இன்று சுண்டு விரலில் வந்து விட்டதாம்
கணினியில் உலகம் காட்டப்படுகிறதாம்
கணினி பசிக்கு உணவளிக்குமா ?
வறுமை கோட்டை ”டிலிட்”செய்யுமா ??
பாவம் அது என்ன செய்யும்
மின்சாரம் இல்லாமல் அது மூச்சை விடுகிறது
மின்சாரம் தாக்கியவன் மட்டுமே மடிவான்
மின்சாரம் இல்லாமல் பல சம்சாரங்கள் மடிகிறது
இதுவும் முன்னேற்றம்தான்.!!
விவசாயி இன்னும் அம்மணமாகத்தான் திரிகிறான்
எலிக்கறி கூட கிடைப்பது அரிதானது
எலிகள் எல்லாம் இன்று பட்டணத்து பிள்ளைக் கறிக்கு பழகிப்போனது
விலைமதிக்க முடியாத உயிர்களை எல்லாம்
விலைவாசி முடித்து விட்டது
தவித்த வாய்க்கு தண்ணீர் தர மறுக்கும் நாட்டில்
முன்னேற்றம் அடைந்து விட்டோம் என்பது ???????
படத்துக்கு நன்றி: http://blog.sysomos.com/2010/05/19/twittera-as-a-resource-tool/question-mark/
