Tag: நாங்குநேரி வாசஸ்ரீ

  • கதை வடிவில் பழமொழி நானூறு – 19

    கதை வடிவில் பழமொழி நானூறு – 19

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 39

    தோற்றத்தால் பொல்லார் துணையில்லார் நல்கூர்ந்தார்
    மாற்றத்தால் செற்றார் எனவலியார் ஆட்டியக்கால்
    ‘ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக்
    கூற்றமாய் வீழ்ந்து விடும்’.

    ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்

    இன்னிக்குத் திரும்ப அதே ஊருக்குப் போயிட்டிருக்கேன். அதுவும் கல்லூரிப் பேராசிரியர் வேலையை ஏத்துக்கிடறதுக்கு. மனசு சந்தோஷமாக இருந்தது. இருந்தாலும் ஒரு ஓரத்தில் பழைய நினவுகள் வருத்தின.

    எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பேன் அந்த ஊர்ல. அப்பா இறந்தவொடனே வேற வழியில்லாம பள்ளிப்பட்டிப்பத் தொடர முடியாமப் போயிருச்சு. அம்மாவோட ஆப்பக்கடை வருமானத்த வச்சி ஒண்ணும் பண்ண முடியல. அப்போதான் அந்த பழக்கடைக்காரர் அம்மாவ ஆசை காட்டி பத்தே வயதான என்னயக் கூட்டிக்கிட்டுப் போயிட்டாரு.

    அப்டி ஒண்ணும் அது பெரிய கடையில்ல.. அவர் வீட்டு வாசலக் கடையா மாத்திருந்தாரு. எனக்கு அங்க எடுபிடி வேல. ஆனா சம்பளத்த சரியா அம்மாகிட்ட குடுத்துடுவாரு. காலையில எழுந்ததிலேந்து அவர்கிட்ட குட்டு அடி வாங்கிக்கிட்டே கடையைப் பெருக்கி, பழங்களைஅடுக்கி வச்சி, ஜூஸ் போடற டம்ளர்களக் கழுவி தொடைச்சி வச்சி அப்பாடானு கொஞ்சம் ஒக்காந்தா அவரு சம்சாரம் கூப்பிட்டிடும்.

    அவங்க செல்ல மகன பள்ளிக்கு அனுப்பறதுக்காக அவன் பின்னால நான் நிக்கணும். அவன் ஆறுவயசு சின்னப் பையன்தான்.  அவனக் குளிப்பாட்டி சீருடை போட்டுவிட்டு அவனோட ஷூவப் பாலிஷ் போட்டு வச்சு பஸ்ல ஏத்திவுடற வர எனக்கு வேலைதான். அதுக்கப்புறம்தான் மிச்சம்மீதி இருக்கறதச் சாப்பிடத் தருவாங்க. ரெண்டுவேளச் சாப்பாடுதான். காலையில ஆறுமணிக்கு வந்தா ராத்திரி எட்டுமணிக்குதான் வீட்டுக்குப் போகமுடியும்.

    நான் செஞ்ச புண்ணியம். கடைக்குத் தினமும் ஜூஸ் குடிக்க வந்த சின்னசாமி ஐயா உனக்கு படிக்க விருப்பம்னா சொல்லு உம் முதலாளிக்குத் தெரியாம நான் படிக்க வைக்கறேன்னாரு. எட்டாம் வகுப்புவரைக்கும் படிச்சிருக்கறதால திறந்த நிலைத்தேர்வு எழுதி பத்தாம்வகுப்புல தேர்ச்சிபெறலாம். அதுக்கப்புறமும் உனக்கு விருப்பம் இருந்தா முழுநேரப்பள்ளிக்கூடத்துல சேத்துவிட்டு மேல படிக்கவைக்கிறேன். என்ன சொல்றன்னு கேட்டவொடனே யாராச்சும் உதவ மாட்டாங்களானு காத்துக்கிட்டிருந்த எனக்கு கேக்கவா வேணும்.  அப்புறமும் விசயம் தெரிஞ்சு பழக்கடை முதலாளி என்னபாடு படுத்தினார். பொறுமையா எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டேன். இப்போ சின்னசாமி ஐயா ஆசிர்வாதத்தோட கல்லூரிப்பேராசிரியராவும் ஆயிட்டேன்.

    யோசித்துக்கொண்டிருக்கும்போதே கல்லூரியின் நிறுத்தம் வரவே. இறங்கி உள்ளே நுழைந்தேன். முறைப்படி செய்ய வேண்டிய வேலைகள் முடிந்தவுடன் மனத்திற்குக் கட்டுப்பட்டு பழக்கடை முதலாளியைப் பார்க்கச் சென்றேன்.

    என்ன ஆச்சர்யம். அதே வீடு. எந்த மாற்றமும் இல்லை. உள்ளே மாலை போடப்பட்ட அவரது மனைவியின் புகைப்படம்.

    வாங்க சார். எனப் பணிவாக வரவேற்று தன் முன் கையைக் கட்டிக்கொண்டு நிற்கும் இவன் யார். யோசிக்கும் முன்பே அவனாகவே தொடர்ந்தான். நீங்க வரப்போறதா சின்னசாமி ஐயா சொன்னாரு. அப்பாவுக்கு வாதம் வந்து நாக்கு இழுத்துக்கிச்சு. பேசமுடியாது. உள்ள படுத்திருக்காரு. நான் நீங்க வேலைக்குச் சேந்த கல்லூரியில பியூனா இருக்கேன். என்ன செய்ய. எல்லாம் விதி. எனக்குச் சரியா படிப்பு வரல. அத விடுங்க.

    மொதமொதல்ல எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க. என்ன சாப்பிடறீங்க கேட்டுக் கொண்டே உள்ளே சென்ற அவனை இமைக்காமல் பார்த்துக்கொண்டு நிற்கிறேன். ஓ இதத்தான்  ஆற்றாது அவரழுத கண்ணீர் அவையவர்க்குக் கூற்றமாய் வீழ்த்து விடும்னு பழமொழியாச் சொல்லுவாங்க போல. எளியாரை வருத்த அவர் கண்ணீர்

    வருத்தியவரை அழித்து விடும்னு தமிழ்ல படிச்சது என் நினைவுக்கு வருது.

    பாடல் 40

    ஆற்றவும் கற்றவும் அறிவுடையார்; அஃதுடையார்
    நாற்றிசையும் செல்லாத நாடில்லை – அந்நாடு
    வேற்றுநா டாகா; தமவேயாம் ஆயினால்
    ‘ஆற்றுணா வேண்டுவ தில்’.

    பழமொழி -‘ஆற்றுணா வேண்டுவது இல்’

    என்ன சார் மலேசிய மாநாடு எல்லாம் சிறப்பா நடந்ததா. கேட்டுக் கொண்டே உள்ளே வருகிறார் தெரிந்த மனிதர். அவரை அப்படித்தான் சொல்ல வேண்டும். நண்பன்னு சொன்னா அது அந்த சொல்லுக்கே அவமானமாப் போகும். எப்படா கீழ விழுவேன் கைகொட்டி சிரிக்கலாம்னே காத்துக்கிட்டு இருக்குற மனுசன். என்கிட்ட மட்டுமில்ல. இன்னும் பலபேர் இவரப்பத்தி இப்டித்தான் பேசிக்கிறாங்க.

    இன்னதுன்னு இல்லாம எல்லாத்துக்கும் எடக்கு. யாரப்பாத்தாலும் வயித்தெரிச்சல். நாலுவீடு தள்ளி குடி இருக்கிற இவர் அரசு அலுவலகத்துல குமாஸ்தாவ வேல பாத்து ரிடையர்ட் ஆனவர். அப்பப்ப நியூஸ்பேப்பர் கேட்டுவந்து தானே பழகிக்கிட்டாரு அவ்வளவுதான். வயசில பெரியவர்னு மரியாதை குடுத்தது தப்பாப்போச்சு.

    என்னசார் மாநாடு எப்டி நடந்ததுனு கேட்டேன். நீங்க மாநாட்டுக்குப் போயிருக்கீங்கனு சங்கரன் சொன்னதிலேந்து ஆச்சரியம். வாயத்திறந்து நாலுவார்த்த தொடர்ந்து பேச மாட்டேங்கிறீங்க. நீங்க எப்படினு. என்னதான் பேராசிரியரா இருந்தாலும் வகுப்பறை வேற. மாநாட்டில பார்வையாளர்கள் வேறதானே. என்ன நான் சொல்றது.

    என்னயப் பத்தி நான்சொல்றதுக்கு முன்னயே தானே நான் இப்டித்தான்னு ஊகிச்சு அத என்கிட்டயே புரூவ் பண்ணிட்டு இருக்கிற சன்மம் இவர்.

    நான் என்ன சொல்லி என்ன ஆகப்போறது. மௌனம் சாதித்து விட்டேன். அவர் தொடர்ந்து கொண்டே போனார்.

    புரியுது புரியுது போன எடத்துல பணம் அதிகம் செலவு ஆகியிருக்கும். இப்பயெல்லாம் ஹோட்டல்கள்ல சாப்பாடா போடறான். நம்ம ஊர்லயே ஒரு தோசை தொண்ணூறு ரூபாய் விலை சொல்றான். அஞ்சு நாள் தங்கிட்டு வந்திருக்கீங்க. சும்மா செலவு பிச்சிக்கிட்டு போயிருக்கும்.

    நீங்க ஒண்ணு செய்யுங்க சார். அடுத்த முறை போகறதுக்கு முன்ன என்கிட்ட சொல்லுங்க. எனக்கு நிறைய நண்பர்கள் வெளிநாட்டுல இருக்காங்க. சாப்பாட்டுக்கு அவங்ககிட்ட சொல்லி ஏற்பாடு பண்ணிடறேன். கொஞ்சம் செலவு மிச்சமாகும் பாருங்க. அவர் பேசிக்கொண்டே போக எனக்கு எரிச்சல் தலைக்கு ஏறியது.

    நல்ல வேளை. சங்கரன் வந்துவிட்டார். இந்த ஆளுக்கு அவர்தான் சரி. பதிலுக்கு பதில் நல்லா குடுப்பாரு.

    என்ன இங்க பிரசங்கம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க. ஒருவழியா நம்ம பேராசிரியருக்கு கிடைச்ச மரியாதய ஒத்துக்கிட்டீங்களா. இனிமே அவர்கிட்ட பாத்தே பேசுங்க.  சும்மாவா கருத்தரங்கத்த தலைமை வகிச்சு நடத்திட்டு வந்திருக்காரு. ‘ஆற்றுணா வேண்டுவது இல்’னு பழமொழியே இருக்கே. படிச்ச அறிவாளிகளுக்கு போற எடத்துக்கு கட்டுச்சோறு கொண்டுபோகணும்னு அவசியம் இல்லங்கறது அதோட அர்த்தம். . எல்லாரும் தானா வந்தே உபசரிப்பாங்களாம். என்ன சார் உங்களுக்கும் விருந்து உபசாரம் எல்லாம் தடபுடலா நடந்திருக்குமே. எந்த ஓட்டல்ல தங்க வச்சாங்க.

    பட்டுசால்வ எல்லாம் போத்தி அசத்தியிருப்பாங்க. உங்களுக்குக் கிடைச்ச பரிசுப்பொருள் சால்வை எல்லாம் எடுத்துட்டு வாங்க. அப்டியே எடுத்த போட்டோக்களையும் காட்டுங்க. அதப்பாத்தாவது நாங்க சந்தோசப்பட்டுக்கிறோம்.

    அவர் பேசிக்கொண்டே போக, தெரிந்த மனிதரா அறிமுகப்படுத்தப்பட்ட நம்ம ஆளு முகத்தப் பாக்கணுமே. அசடு வழியறத மறச்சிக்கிட்டே தனக்கு ஏதோ முக்கிய வேலை இருக்கறதா பாவ்லா பண்ணிக்கிட்டு எழுந்தரிச்சு போக முயற்சி செய்யறாரு.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 18

    கதை வடிவில் பழமொழி நானூறு – 18

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 38

    எமரிது செய்க எமக்கென்று வேந்தன்
    தமரைத் தலைவைத்த காலைத் – தமரவற்கு
    வேலின்வா யாயினும் வீழார் மறுத்துரைப்பின்
    ‘ஆல்என்னிற் பூல்என்னு மாறு’.

    ‘ஆல் என்னிற் பூலென்னுமாறு’

    என்னடா ஊர்லேந்து வந்ததுலேந்து நானும் பாக்கறேன் அது முன்ன உக்காந்து ஜபம் பண்ணிக்கிட்டே  இருக்கயே. என்ன ஆச்சு. வேலையில எதுவும் பிரச்சினையா. சம்பளம் எல்லாம் ஒழுங்காவருதில்ல. பாட்டி எல்லாம் சரியாப் போயிட்டிருக்கு. நான் லேப்டாப்ல வீடியோ கான்பிரன்சிங் அட்டெண்ட் பண்றேன். அப்புறமா பேசலாம். குரல் கொடுத்துவிட்டு மீண்டும் கலந்தாலோசிப்பில் மூழ்கினேன். எல்லாம் ஒரு வழியா முடிச்சாச்சு. நாளைக்கு ரிப்போர்ட் ரெடி பண்ணி அனுப்ப வேண்டியதுதான். அப்புறம் ஐயாக்கு ஜாலிதான். யோசித்துக் கொண்டிருக்கும்போதே மீண்டும் பாட்டியின் குரல்.

    டேய் சூடா கொழக்கட்ட பண்றேன். வந்து சாப்பிட்டு வேலயப் பாரு.

    வந்ததே அதுக்காகத்தானே. சாப்பிடற வேலய ஒழுங்காப் பாக்கலாம். நாளையிலேந்து ரெண்டுநாள் பாட்டிக்கு என்னன்ன சமைக்கணும்னு சொல்லி செய்யவச்சு சாப்பிட்டுட்டுப் போகணும். தீர்மானித்தேன். எந்தப்பொருளும் அதுக்கேத்த இடத்துல இருந்தா ரொம்ப அழகா தெரியுமில்லயா. அதுமாதிரிதான் இந்த கிராமத்து சாப்பாடும். இத நகரத்து ஓட்டல்களில் உக்காந்து சாப்பிட்டா ருசிக்காது.

    சரி சரி சாப்பிடும்போது ரொம்ப யோசிக்காத. இன்னும் ரெண்டு போட்டு சாப்பிடு.பாட்டி விரட்ட மனம் ஒருநிலைக்கு வந்தது.

    ஆமா நீ இங்க என்னவேலையா வந்திருக்க. வெளிய எங்கேயாவது போகணுமா? பாட்டி கேட்கிறாள்.

    உனக்கு நான் சொன்னாப் புரியுமான்னு தெரியல. இருந்தாலும் சொல்றேன். ஆரம்பித்தேன். எங்க கம்பெனியிலேந்து மூணு என்ஜினியர்கள் வந்திருக்கோம். நம்ம மேற்குத் தொடர்ச்சி மலைப் பக்கம் காற்றாடிகள் சுத்திக்கிட்டிருக்கு இல்லயா. அதோட பாகங்களத் தயாரிக்கறதுதான் எங்க கம்பெனி வேல. அதுல ஏதாவது புதுவித மாற்றம் செய்ய முடியுமானு ஆராய்ச்சி செய்யறதுக்காக எங்கள அனுப்பியிருக்காங்க. நாங்க ஒரு மாசம் தங்கி புது மாதிரி வடிவங்கள உருவாக்கி மத்ததோட ஒப்பிட்டுப் பாக்கணும். மொதல்ல கேக்க நல்லாத்தான் இருந்திச்சு. ஆனா செய்ய ஆரம்பிச்சவொடனே ரொம்ப சங்கடமா இருக்கும்னு தோணுது. ஒவ்வொரு முறையும் மாதிரி வடிவம் செஞ்சு எடுத்துக்கிட்டுவர சென்னைக்குத்தான் போயாகணும். அலைச்சல் அதிகமாகும். இங்க இருக்கற நேரமும் பொழுது போகறதுக்கு சினிமா தியேட்டர் கூட இல்ல. இதத்தான் மூணுபேரும் சேந்து பேசி முடிவெடுத்தோம்.

    நாளைக்கு எங்க கம்பெனிக்கு ஒரு மெயில் அனுப்பிடுவோம். இடத்தைப் பார்வையிட்டோம். நாம செய்ய நினைத்த ஆராய்ச்சிக்கு இது ஏற்ற இடமில்லனு. அப்புறம் அவங்க வேற இடம் தேட ஆரம்பிப்பாங்க. அதுக்குள்ள புது கம்பெனியில வேலைக்குப் போட்டிருக்கேன். அதுலேந்து தகவல் வந்தா அதுல சேந்திடுவேன். அந்தவேலை ஒரு அறைக்குள்ள உக்காந்து கம்ப்யூட்டர் உபயோகிச்சு செய்ய வேண்டிய வேலை. அலைச்சல் இல்லபாரு.

    நான் பேசப்பேச பாட்டிக்குக் கோபம் தலைக்கேறியது. இதத்தான் எங்க ஊர்ல ‘ஆல்’ என்று சொல்லப் ‘பூல்’ என்று மறுத்துச் சொல்றதுனு சொல்லுவாங்க.  இதோட பொருள் நம்பி அரசன் ஒரு வேலையை ஒப்படைச்ச பின்னாடி வேல் முனையில வீழ்ந்தாவது அதனை நிறைவேற்றணும். அதை விட்டுட்டு செய்யமாட்டேன்னு மறுத்துக் காரணம் சொல்றது ‘ஆல்’ என்று சொல்லப் ‘பூல்’ என்று மறுத்துச் சொல்றதுக்குச் சமானமாம்.

    இவ்வளவு படிச்ச பசங்க நீங்க. இப்டி பண்ணலாமா. தப்பில்லயா. கேட்டுக்கொண்டே பாட்டி வேலையைத் தொடர்கிறாள். நான் யோசிக்க ஆரம்பிக்கின்றேன்.

    பாடல் 38

    விரும்பி அடைந்தார்க்கும் சுற்றத் தவர்க்கும்
    வருந்தும் பசிகளையார் வம்பர்க்(கு) உதவல்,
    இரும்பணைவில் வென்ற புருவத்தாய்! ‘ஆற்றக்
    கரும்பனை அன்ன துடைத்து’.

    ‘ஆற்றக் கரும்பனை அன்னது உடைத்து’

    வாங்க வாங்க உக்காருங்க. என்ன சாப்பிடறீங்க காபி, டீ.

    யாரை இப்படி மரியாதையாக உபசரிக்கிறாள் அம்மா. உள்ளறையில் கதை எழுதிக்கொண்டிருந்த நான் எழுந்து வெளியில் வந்தேன். ஐம்பது வயது மதிக்கத்தக்க நபரும் அவருடன் கல்லூரி மாணவன் போன்று விளங்கும் பையனும் சோபாவில் அமர்ந்திருந்தார்கள்.

    மரியாதைக்கு வணக்கம் சொல்லிவிட்டு மேல் பனியனுடன் அமர்ந்தால் நாகரிகம் அல்ல என நினைத்து சட்டை போட்டுக்கொள்ள உள்ளறைக்குச் சென்றேன்.

    சமையலறையில் அம்மா அக்காவிடம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

    உங்க தோப்புக்கார சித்தப்பா இந்தப் பையனத்தான் படிக்க வைக்கிறாராமா. ஏதோ என்ஜினியரிங் படிக்கிறான் போல. அநாதைப் பையனாம். கூட வந்திருக்கிறவர் அவன் கல்லூரிப் பேராசிரியராம்.

    உங்க சித்தப்பா நம்ம அப்பாவப் பத்தி ரொம்ப பெருமையா சொல்லியிருப்பார்போல. அதனால மரியாதைக்கு இந்தப் பையனும் அவன் பேராசிரியரும் நம்மளப் பாத்து நன்றி சொல்லிட்டுப் போலாம்னு வந்திருக்காங்க. அந்தப் பையனுக்கு உங்க அப்பா போட்டோ ஒண்ணு வேணுமாம். ஏதும் இருந்தாப் பாரேன்.

    தம்பிகிட்ட இருக்கு. நான் எடுத்துக்கிட்டு வரேன். அடுத்த அறையான என் அறைக்குள்

    நுழைந்த அக்காவைத் தடுத்து நிறுத்தினேன். தீர்மானத்துக்கு வந்தவனாய் போட்ட சட்டையைக் கழட்டிவிட்டு மீண்டும் கதை எழுதுவதைத் தொடர்ந்தேன்.

    ஒருவழியாக அவர்கள் இருவரையும் பேசி அனுப்பிய அம்மா ஏண்டா என்ன ஆச்சு உனக்கு மட்டு மரியாத கிடையாதா. நீ பாட்டுக்கு உள்ளுக்குள்ளயே உக்காந்துட்ட. அவங்க என்ன நினைச்சுப்பாங்க…..தொடர்ந்து புலம்பிக்கொண்டே சமையலறை நோக்கிச் சென்றாள்.

    என் மனம் யோசிக்க ஆரம்பித்தது. அப்பா இறந்து எட்டு வருடம் ஆகி விட்டது.  தன்னய அப்பா சொந்தப் பையன் போல வளர்த்து படிக்க வச்சதா சித்தப்பா சொல்லிட்டுத் திரியுவாரு. நல்லா படிச்சு நல்ல வேலையில டில்லியில் இருக்கார். போதாததுக்கு தான் சேத்துவச்சதுல ஒரு பனந்தோப்பு வேற வாங்கிப் போட்டிருக்கார். எதுக்குமே அவர்கிட்ட பண உதவி எதிர்பாக்காமதான் அம்மா எங்க ரெண்டு பேரையும் படிக்க வச்சாங்க. ஆனா ஒரு புத்தகக்கடை வைக்கணும்னு நான் பண உதவி கேட்டப்போ நீயே சம்பாதிச்சு வச்சுக்கோனு சொல்லிட்டார். இப்ப என்னடான்னா யாரோ ஒரு பையனுக்கு உதவி செய்யறாராம்.

    ஆற்றக்கரும்பனை அன்னது உடைத்துங்கற பழமொழி சரியாத்தான் இருக்கு. தன்னய வளத்தவனுக்கு பலன் கொடுக்காம நீண்டகாலத்துக்கப்புறம் யாரோ புதியவனுக்கு பலன்குடுக்கற பனை மரம் மாதிரிதான் இந்த சித்தப்பாமாதிரி ஆளுங்க. இவங்களப்பத்தி நினைக்கறதே நேரவிரயம் தான்.

    அம்மாவும் அக்காவும் பேசுவதைப் பொருட்படுத்தாமல் என் கதையில் மூழ்கினேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 17

    கதை வடிவில் பழமொழி நானூறு – 17

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 35

    மறுமனத்தன் அல்லாத மாநலத்த வேந்தன்
    உறுமனத்த னாகி ஒழுகின் – செறுமனத்தார்
    பாயிரம் கூறிப் படைதொக்கால் என்செய்ப?
    ‘ஆயிரம் காக்கைக்கோர் கல்’.

    பழமொழி —  ‘ஆயிரம் காக்கைக்கு ஓர்கல்’

    ஈசிச்சேரில் படுத்துக்கொண்டு டீ குடித்துக்கொண்டு இருக்கிறேன். டீ குடிக்கிற நேரமா இது மனைவியின் குரல். அரை மணிநேரத்துல டின்னர் ரெடியாயிடும். சொன்னா கேட்டாதானே. எப்ப பாத்தாலும் நியூஸ்வேற. தனக்குத்தானே பேசிக்கொண்டு சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருக்கிறாள். எனக்குத்தானே தெரியும் இன்னிக்கு என்ன நடந்ததுனு. காலையிலேருந்து நடந்ததச் சொன்னா டென்ஷன் ஆயிடுவா.அப்பறம் மெதுவா சொல்லலாம். நிகழ்வுகளை ஒவ்வொன்றாய் நினைவுபடுத்திக்கொண்டிருக்கிறேன். ”

    காலையில்,

    என்ன சார் இங்க கெடுபிடி. கேட்டுக்கொண்டே என் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அந்தப் பெரிய வணிகவளாகத்தினுள் நுழைந்தேன். சொந்தமாக மிட்டாய்க் கடை வைத்திருக்கும் எனக்கு இங்கு கூட்டம் கூடுவது ஒண்ணும் புதுசு இல்ல. இருந்தாலும் தெரிஞ்சிக்கிற ஆர்வம். ஏதும் சினிமா ஷூட்டிங் எடுக்கப்போறாங்களா. போலீசெல்லாம் வந்திருக்கு.

    அது ஒண்ணுமில்ல சார். புதுசா ஒரு போலீஸ்அதிகாரி வந்திருக்கார் போல. அவர் எல்லா இடத்திலயும் பாதுகாப்ப உறுதி செய்யறார். அவ்ளோதான். சொல்லிவிட்டு பான்கடை வைத்திருக்கும் நண்பன் சதீஷ் சென்றுவிட்டான்.

    எனக்கு என்னவோ சரியாகப் படல. வேறு என்னவோ இருக்கு. நேராப் போய் போலீஸ்கிட்டயே கேட்டுரலாம். தீர்மானத்துடன் நடந்தேன்.

    ஆமாப்பா. நேத்தைக்கு நடந்த சம்பவத்த விசாரிச்சுட்டுப் போலாம்னு வந்திருக்கோம். இன்னும் இரண்டு அதிகாரிகள் வரணும். வந்தவொடனே ஒவ்வொரு கடையா விசாரிப்போம்.

    சம்பவமா. என்ன ஆச்சு சார். பதட்டத்துடன் கேட்கிறேன்.

    ஏம்பா.. இங்க கடை வைச்சிருக்கேன்னு சொல்லற. நடந்த திருட்டப் பத்தி ஒண்ணுமே தெரியாதா.

    திருட்டா…… அச்சச்சோ.. என் கடை என்ன ஆச்சோ. பதட்டத்துடன் அவரிடம் விடைபெற்று ஓடினேன். கடையைத் திறந்தவுடன்தான் நிம்மதி. என் கடைக்கு ஒண்ணுமில்ல. வேற எங்க திருட்டு போயிருக்கும். எப்படியோ. நமக்கு ஒண்ணுமில்ல. அவங்க விசாரிச்சுட்டு வரும்போது தெரிஞ்சுக்கலாம்.

    மொத்தம் நூற்றுநாற்பது கடைகள் உள்ள வணிக வளாகம். எங்க, யாருக்கு திருட்டு போச்சோ. இன்னிக்கு முழுசும் அப்டியே கழிஞ்சுபோச்சு. டீ குடுக்க வர பையன் தொடங்கி சுத்தம் செய்யற அண்ணா வர எல்லாரும் போலீஸ் விசாரணையப் பத்தியே பேசிக்கிறாங்க. ஆனா யாருக்கும் எதுவும் தெரியல.

    மதிய உணவுக்கப்புறம்தான் என் கடைக்கு வந்தாங்க. சரியா இரண்டு நிமிடம் நின்னிருப்பாங்க. பிரச்சினை ஒண்ணுமில்லனு தெரிஞ்சவொடனே ஒரு போட்டோமட்டும் எடுத்துட்டுக் கிளம்பிட்டாங்க. அவங்க போனப்புறம் பக்கத்து பிளாக் இரண்டாவது தளத்துல மின்சாதனப் பொருட்கள் விக்கற கடையிலேந்து வாஷிங்மெஷின் திருடுபோயிடுச்சுனு பேசிக்கிட்டாங்க. எது எப்டியோ. ஒருவழியா கடைய மூடி வீட்டுக்குவந்து டிவி நியூஸ் பாத்துக்கிட்டு இருக்கேன்.

    எல்லா சேனலிலயும் எங்க வணிகவளாகத்தோட போட்டோதான்.

    போலீஸின் அதிரடி நடவடிக்கை. கயவர்கள் கட்டாயம் பிடிபடுவார்கள். போன்ற வாசகங்களுடன். இதில போலீஸ் உயரதிகாரி தன்னோட பேட்டியில காவல்துறை உங்கள் நண்பன். உங்களின் பாதுகாப்பு எங்கள் கையில். நிம்மதியாக இருங்க. ‘ஆயிரம் காக்கைக்கு ஓர்கல்’னு பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்க. அதுபோல இந்த ஒரு திருடனுக்கு நாங்க குடுக்கப்போற தண்டனையப் பாத்து மத்தவன் எவனும் சின்னப் பொருளக்கூட திருட நினைக்கமாட்டான்னு பேசிக்கிட்டிருக்கார்.

    என்ன ஆச்சு திடீர்னு. நாட்டுல தினமும் ஒவ்வொரு இடத்துலயும் கொஞ்சநாளா திருட்டு அதிகரிச்சுட்டுதான் இருக்கு. ஒரு வாஷிங்மெஷின்  திருடுபோனதுக்கு இவ்வளவு அளப்பறையா. ஒருவேள கடை ஓனர் அரசியல்வாதியா இருப்பாரோ. அல்லது புதுசா வந்திருக்கிற உயரதிகாரி நியாயமானவரோ. எப்படியோ அவர்சொல்ற மாதிரி திருடங்களே இல்லாமப் போனா என்னயமாதிரி வியாபாரிகளுக்கு நிம்மதிதான்.

    சாப்பிட வாங்க. மனைவி அழைக்கிறாள்.

    பாடல் 36 

    விளிந்தாரே போலப் பிறராகி நிற்கும்
    முளிந்தாரைத் தஞ்சம் மொழியலோ வேண்டா
    அளிந்தார்கண் ஆயினும் ஆராயா னாகித்
    தெளிந்தான் விளிந்து விடும்.

    பழமொழி – ‘ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும்’

    நான் சொன்னமாதிரியே ஆகிப்போச்சு பாத்தியா. ஊரிலிருந்து வந்திருக்கும் அம்மா புலம்பிக்கொண்டிருக்கிறாள். அந்த பொண்ணு மேல விழுந்து ஈஷிக்கிட்டு நிக்கறதப் பாத்தே நான் கண்டுபிட்டிச்சிட்டேன். இமாசலப்பிரதேசத்தில்  கசௌலி எனும் ஊரில் வசிக்கும் என் வீட்டிற்கு அம்மா எப்போதாவது தான் வருகிறாள். நாங்க வருசத்துக்கு ஒருதடவ ஊருக்குப் போயிடறதால சந்தர்ப்பம் கிடைக்கறதில்ல. மேலும் மாலதியும் டீச்சரா வேல பாக்கறதால அம்மாக்கு இங்க வந்தா போர்தான். இந்த வருசம்தான் டில்லி சித்தப்பா பெண் கல்யாணத்த சாக்கா வச்சி ரெண்டுதடவ வந்திருக்காங்க.

    மனைவி மாலதி அதிகம் பேசற டைப் இல்ல. அக்கம்பக்கத்து வீடுகள்ல எவ்வளவு தேவையோ அவ்வளவுதான் வச்சுக்குவா. இது மலைப் பகுதிங்கறதால தனித்தனி வீடுகள்.அதுவும் எங்கவீட்டுப்பக்கத்துல மூணு வீடுகள்தான் இருக்கு. மத்தபடி மேட்டுமேல ஏறிப்போனா என் நண்பன் விஜய் வீடு. கூட இரண்டு வீடுகள் இருக்கு. அவங்க யாரையும் எனக்குத் தெரியாது.

    நேரம் கிடைக்கும்போதெல்லாம் நானும் அவனும் ஒருகிலோமீட்டர் நடந்தே போய் பாய் கடையில இஞ்சி டீ குடிச்சிட்டு வருவோம். இப்ப சமீபத்துலதான் வீட்டுப்பக்கத்துல குடியிருக்கிற பெங்காலி பொண்ணு தன்னு பாத்ரா ப்ரெண்ட் ஆனா. மாலதி வேலை பாக்கற சரஸ்வதி வித்யாலயால கணக்கு டீச்சரா சேந்திருக்கா. எனக்கு புத்தகம் வாசிக்கற பழக்கம் இருக்கறதால அப்பப்ப வந்து புக் வாங்கிக்கிட்டுப் போவா.

    காலையில ரெண்டுபேரும் சேந்துதான் ஸ்கூல் போவாங்க. கொஞ்சம் பழகினப்புறம் சொல்ல ஆரம்பிச்சா உங்க மனைவி ரொம்ப ரிசர்வ்ட் டைப் போல. கேட்ட கேள்விக்குப் பதில் அவ்வளவுதான். எவ்வளவு முயற்சித்தும் பேசவே மாட்டேங்கிறாங்கனு. எல்லாம் கொஞ்சநாள் நல்லாத்தான் போயிக்கிட்டிருந்தது. அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா வீட்டுக்குள்ள வர ஆரம்பிச்சா. மாலதி இருக்கிறதப் பத்தி கொஞ்சம் கூடக் கவலைப்படாம சத்தமா பேசிச் சிரிச்சு என்னய வம்புக்கு இழுப்பா.

    சனி ஞாயிறுகளில் விஜய் குடும்பத்தோட சில சமயம் மங்கி ஹில்ஸ் வரை நடந்து ஏறிட்டுவருவோம். அவன் கிறித்துவன்ங்கறதால அனுமார் கோவிலுக்குள்ள வரமாட்டான். சிலநேரம் அவனுக்காக நாங்க எதிர் மேட்டிலிருக்கிற சர்ச்சுக்குப் போவோம். தன்னு வந்ததிலேந்து அவளும் அண்ணா அண்ணானு எங்ககூட ஒட்டிக்கிட்டு வர ஆரம்பிச்சா.  எதுசெஞ்சாலும் அவ இல்லாம இல்லங்கற நெலமைக்கு வந்திருச்சு. அப்பதான் அம்மா சித்தப்பா பொண்ணு நிச்சயதார்த்தம் அட்டெண்ட் பண்ணிட்டு இங்க வந்திருந்தாங்க.

    இந்தப் பொண்ணு யாரு என்னன்னு விசாரிடா. கூடப்பொறந்தவ மாதிரி உன் வீட்ல ரொம்பதான் உரிமை கொண்டாடறா. அப்பா அம்மா எங்க இருக்காங்களாம்? அடுக்கடுக்கான கேள்விகள். அதுவரை நாங்கள் அதைப்பற்றி கவலைகூடப் படவில்லை.

    சொல்லிவச்சாமாதிரி அம்மா ஊருக்குப்போயிட்டு ஆறுமாசம் கழிச்சு திரும்ப இப்ப கல்யாணத்துக்கு வரதுக்குள்ள இவ்வளவு பிரச்சினை. அவ வீட்டுக்கு ஒரு சிடுமூஞ்சி ஆசாமி போனமாசம் வந்தாரு. அவர எங்களுக்கு மாமானு அறிமுகப்படுத்தினா. அவர் ஏதோ சுற்றுலாவுக்காக வரவங்க தங்கறதுக்கு ரிசார்ட் கட்டி வாடகைக்கு விடப்போறாராமா. அதனால இங்க ஒரு வருசம் தங்குவார்னு சொன்னா.

    என்னமோ நாங்க தன்னுவோட கேர்டேக்கர் மாதிரி அவரும் உரிமையா எப்பபாத்தாலும் எங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சார். இடம் பாத்து காண்ட்ராக்டர் புடிக்கிற வரை என்னயும் விஜயையும் கூட்டிக்கிட்டு திரிஞ்சாரு. சரி கார் இருக்கறதால உதவி கேக்கறாருனு நெனைச்சோம். விஜய்கூட என்னடாஇந்த ஆளு மூஞ்சிய சிடுசிடுனு வச்சிக்கிட்டு காரியத்திலயே குறியா இருக்காருனு சொன்னான். தன்னு கேட்டுக்கிட்டதால உதவி பண்ணினோம்.

    திடீர்னு அந்த ஆளு ஓடிப்போயிட்டாராமா. தன்னு வந்து சொல்றா. அண்ணா அந்த மாமா எனக்கு தூரத்து உறவுதான். புரோக்கர், காண்ட்ராக்டர் எல்லாருக்கும் என் அட்ரசையும், உங்க ரெண்டுபேர் அட்ரசையும்தான் குடுத்திருக்காராம். புரோக்கர்பணம் கேட்டு போன்ல மிரட்டறான். எல்லாத்தையும் செட்டில் பண்ணி குளோஸ் பண்ண மூணுலட்சம் செலவாகும். போலீஸ் கேசாயிடுச்சின்னா நம்மளுக்குதான் பிரச்சினை.

    என்கிட்ட ரெண்டு லட்சம் இருக்கு. நீங்களூம் விஜய் அண்ணாவும் ஒருலட்சம் ஏற்பாடு பண்ணினா போதும்.  தெளிவான ஹிந்தியில் பேசிவிட்டுப் போய்விட்டாள்.

    மாலதி அம்மாவுக்கு மொழிபெயர்த்துச் சொன்னவுடன் கிடைக்கும் வசவுதான் இது. நம்மகிட்ட பாசமா இருக்கறவன்கிட்டயே பாத்துதான் பழகணும்னு இருக்குறப்போ இந்தமாதிரி யாரு என்னனு சொல்லாமயே வந்து உரிமை கொண்டாடற தன்னு மாதிரி ஆளுங்களையும் எப்ப பாத்தாலும் சிடுசிடுனு கோவக்காரன் மாதிரியே காட்டிக்கிட்டு காரியத்துலயே கண்ணா இருக்கற அவ மாமாவையும் ஆராயாம நம்பின உன் மாதிரி ஆளுங்க  நெலமைய பழமொழி நானூறே சொல்லுதே. ‘ஆராயானாகித் தெளிந்தான் விளிந்து விடும்’னு.

    பெரியவங்க பேச்ச எங்க கேக்கறீங்க. திரும்ப அந்தப் பொண்ணுவந்தா. உன் பிரச்சினை உன்னோடனு மூஞ்சியில அடிச்சா மாதிரி சொல்லிடு.  போலீசு கீலீசு எல்லாம் ஒண்ணும் வராது. இவளே நாடகம் ஆடறாளோ என்னமோ. உன்னால முடியலன்னா சொல்லு நான் பேசறேன். அத அவளுக்குப் புரியறமாதிரி மொழிபெயர்த்து சொல்லிடு.

    சொல்லிவிட்டுத் தன் வேலையைப் பார்க்கத் தொடங்கினாள் அம்மா.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 16

    கதை வடிவில் பழமொழி நானூறு – 16

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 33

    தந்தொழில் ஆற்றும் தகைமையார் செய்வன,
    வெந்தொழிலர் ஆய வெகுளிகட்குக் கூடுமோ?
    மைந்(து)இறை கொண்ட மலைமார்ப! ‘ஆகுமோ
    நந்துழுத எல்லாம் கணக்கு?’.

    பழமொழி – ஆகுமோ, நந்து உழுதவெல்லாம் கணக்கு

    என்ன உலகநாதன் ஏதோ பெரும பேசிக்கிட்டிருக்கீங்க போல. கொஞ்சம் நக்கலுடன் ஆரம்பித்தேன்.

    இது தினமும் நாங்கள் சந்திக்கும்இடம் தான். என் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பூங்கா. உலகநாதனும் நானும் பால்ய நண்பர்கள். இயல்பாகவே அதிகம் பேசும் அவனுக்கு தினமும் வரும் இந்தப் பூங்காவில் நிறைய நண்பர்கள். அவன் வீடு இங்கேயிருந்து ஒருகிலோமீட்டர் தான். நான்தான் தினமும் ஜாகிங் வந்து பத்து நிமிடம் ரெஸ்ட் எடுத்தவுடன் திரும்பவும் அரக்க பரக்க ஓடிவிடுவேன். சனி,  ஞாயிறு மட்டும் கொஞ்சம் அதிக நேரம் கிடைக்கும். என்ன செய்வது பிரைவேட் கம்பெனி வேலை. அவனுக்கு சொந்த பிசினஸ்தான்.  நினைச்ச நேரத்துக்குக் கடைக்குப்போவான். துணி வியாபாரம். அது அவங்க பரம்பரைத்தொழில்.

    இன்னிக்கு என்ன பேசிக்கிட்டிருக்கானோ கேட்போம். மனதை நிலைநிறுத்தினேன்.

    ஒண்ணுமில்லடா நான் புதுசா கட்டியிருக்கற வீட்டுக்குக் குடிபோகப்போறோம் ஆரம்பித்தான்.

    ஓ அப்டியா சந்தோசம் அது எங்க வீட்லேந்து ரொம்ப பக்கமில்ல.

    ஆமாம்.  ஆனா இனிமே லோ லோன்னு இவ்ளோ தூரம் வாக்கிங் வர வேண்டியதில்ல.  அவன் சொல்ல ஆரம்பித்தவுடன் எனக்குள் உற்சாகம் குறைந்தது. ஒருவேளை வீட்டுப் பக்கத்திலிருக்கும் வேறு ஏதாவது பார்க்குக்கு வரச் சொல்லுவானோ.

    என்னடா யோசனை. இந்த முழி முழிச்சிட்டிருக்க. நண்பனின் குரலால் சுதாரித்துக்கொண்டேன். ஒண்ணுமில்ல நீ சொல்லு.

    அதாண்டா நான் நாளையிலேருந்து பார்க் வரமாட்டேன்.  நான் குடிபோற சொசையிட்டியிலேயே ஒரு சின்ன பார்க் இருக்கு. புல்லுல கால் வச்சு நடந்தா நல்லதுன்னு தானே இத்தன தூரம் வரோம். என்னோட புது வீட்டுக்குள்ளயே ஒரு ரூம்ல சின்னதா செயற்கைப்புல் தரை இருக்கும். அதுல நடந்தாலும் இதே எபக்ட் தானாம். அப்பறம் ஜிம், நீச்சல்குளம் எல்லாம் உள்ளயே இருக்கு. விளையாட கிளப்ல டேபிள் டென்னிஸ்,  கேரம் எல்லா இன்டோர் கேமும் இருக்கு. இதுக்கு மேல என்ன வேணும் சொல்லு.

    அவன் பேசப்பேச ஏதோ மனதில் நெருடிற்று.

    அவன்தொடர்ந்தான்.  நான் முதல்ல குடிபோயிடறேன். அதுக்கப்புறம் உனக்கும் ஒரு நல்ல வீட்டப் பாத்துக் கொடுக்கறேன். அங்கேயும் சேந்து என்ஜாய் பண்ணலாம். சோகமா மூஞ்சிய வச்சிக்காத.

    எனக்கு சோகமெல்லாம் இல்ல. குழப்பம் தான். அதெப்படி நீ இப்படி செயற்கை விசயங்கள்ல மயங்கிப் போய் பேசறன்னு. நீ சொல்லற ஒவ்வொண்ணும் தொடக்கத்துல வேணா நல்லா இருக்கும். அப்பறம் அதத் தொடர்ந்து பராமரிக்கணும். ஒரு வருசம்கழிஞ்சா அதே முகங்களப் பாத்துப் பாத்து போரடிச்சுடும். எப்டியிருந்தாலும் நாம இப்ப வாக்கிங் வரும்போது எத்தன பேரப் பாக்கறோம். புதுப்புதுவண்டிகள், முகங்கள்,  காற்றோடு கலந்து வரும் வாசனைகள்.  அந்த மாதிரி.

    என்னதான் நீ ரொம்ப வசதின்னு நெனச்சாலும் ஆகுமோ, நந்து உழுதவெல்லாம் கணக்கு ங்கற பழமொழி மாதிரிதான் நினைக்கத் தோணுது. நத்தைப் புழு மண்ணத் தோண்டுறதும் உழுவதற்குச் சமானம்னு சொல்லி நிலத்த  உழாம பயிர விளைவிச்சிற முடியுமா என்ன. நான் சொல்றதச்சொல்லிட்டேன். அப்பறம் உன் விருப்பம். நீ கூப்பிட்டாக்கூட நான் அந்தமாதிரி வீட்டுக்கெல்லாம் குடிவர மாட்டேன். தீர்மானமாகச் சொல்லிவிட்டு நடந்தேன் சந்தோசத்துடன்.

    பாடல் 34

    பொருளல்லார் கூறிய பொய்க்குறளை வேந்தன்
    தெருளும் திறந்தெரிதல் அல்லால் – வெருளவெழுந்து
    ஆடு பவரோடே ஆடார், உணர்வுடையார்,
    ‘ஆடுபணைப் பொய்க்காலே போன்று’.   

    பழமொழி – ஆடுபணைப் பொய்க்காலே போன்று

    ஒண்ணும் பிரச்சினையில்ல. அமைச்சர் வேதநாயகம் நம்ம கூட்டத்தார்தான். சொல்லறவிதமா சொல்லி காரியத்த முடிச்சிக்குடுத்திடறேன்.  அப்பறம் பேசினபடி தொகைய மாத்தி உட்றணும். புரிஞ்சுதா. அமைச்சரின் அள்ளக்கை மோகன் வாக்கு குடுத்ததால் பூமி பூசைக்கு ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தேன். நிம்மதி பூசைக்கு அமைச்சரையே கூட்டிக்கிட்டு வரப்போறான்னு நினைச்சிக்கிட்டு இருக்கும்போது இப்டி வந்து நிக்கறான்.

    இப்ப போயி தலைய சொரிஞ்சிட்டு நின்னா எப்படி. பாங்குல பணத்த மாத்தி உடச்சொன்னப்போ குரல் நல்லா வெளிய வந்தது. இப்ப சத்தமே வர மாட்டேங்குது. என்ன விளையாட்டு இது. 450 வீடுகள் கட்டறதுன்னா சும்மாவா. அதான் சொன்னேனே. ஐந்து வீடுகள இலவசமா உங்க அமைச்சர் யாரையெல்லாம் கையக் காட்டுறாரோ அவங்களுக்குக் குடுத்துடறென்னு. அதச் சொன்னியா.

    மரியாதை குறைந்துகொண்டே போக மோகன் செய்வதறியாது நெளிந்து கொண்டே நிற்கிறான்.

    கொஞ்சம் பொறுமையா இருங்க. அவரு சம்மதிக்கத்தான் செஞ்சாரு. கூட இருந்த அவரோட நண்பர்தான் காரியத்தக் கெடுத்துட்டாரு. நீங்க வீடு கட்டப்போற இடம் முன்ன குளமா இருந்ததாலதான் பிரச்சினை. அதுக்கும் பலவிதமா சொல்லிப்பாத்தேன். எப்படியிருந்தாலும் பல வருசமா இந்த நிலம் வறண்டுதான் இருக்கு. ஏதோ ஒருகாலத்துல குளம் இருந்ததா சொல்லறாங்க. அப்டிப் பாத்தா எங்கயுமே மனுசன் வீடுகட்டி குடியிருக்க முடியாதுன்னு.

    கூட இருந்தவர்தான் அமைச்சரக் குழப்பிட்டாரு. நீதி, நேர்மை, நியாயம் எதுவுமே இல்லாம எப்படி இப்படி அனுமதி கேக்க வந்துட்டீங்க. அமைச்சருக்கு வெளிய நடக்கற நல்லது கெட்டதப் பாத்துட்டுவந்து எடுத்துச்சொல்ல வேண்டிய நீங்களே தப்பு செஞ்சீங்கன்னா அவரால எப்படி மத்த பொறுப்புகள நியாயமா கவனிக்க முடியும். அப்டி இப்டீன்னு. கடைசியில என் பேச்சு எடுபடவே இல்ல.

    அவரு இல்லாதநேரம் பாத்து திரும்பவும் வீட்டுக்குப் போய் முயற்சி பண்ணினயா.

    அங்கயும் போனேன்.  ஆனா…………..மனதுள் நிகழ்ந்ததை அசைபோட ஆரம்பித்தான் மோகன்.

    ஏன்யா….. இங்கயும் வந்துட்டீரா நீர். யாரையும் உருப்படியா செயல்பட உடமாட்டீரு போல…. கேட்டுக்கொண்டே வருகிறார் அதே நபர்.

    இவர் யாராக இருக்கக் கூடும். அமைச்சரின் நண்பரா சொந்தக்காரரா. சுத்தி சுத்தி என்னயே கேள்வி கேக்கறார்.  யோசித்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் தொடர்கிறார்.

    படிச்சுப்படிச்சு சொன்னேன் வேதநாயகத்துக்கு. இந்தமாதிரி நியாயங்கெட்ட அரைகுறை முட்டாளுங்கள கட்சியில வச்சிக்காதன்னு. எவ்வளவு முயற்சி செஞ்சாலும் உன் பாச்சா இங்க பலிக்காது. ‘ஆடுபணைப் பொய்க்காலே போன்று’னு பழமொழி கேள்விப்பட்டிருக்கியா.

    அரசன உன்னயமாதிரி யாரவது பொய்பேசி குழப்பினா கூட இருக்கற அமைச்சருங்க உண்மய எடுத்துச்சொல்லி தெளிய வைப்பாங்களாம். அந்த பொய்யர்கள் கூட சேந்து தாங்களும் பொய்க்கால் கட்டிக்கிட்டு ஆடமாட்டாங்களாம். அந்தமாதிரி தான். நான் கூட இருக்கற வரை இந்த வீடு ப்ராஜக்ட் நடக்காது. யார்கிட்ட கைநீட்டி பணம் வாங்கிட்டு இந்தக் காரியத்தச் செய்யறயோ அந்த ஏஜண்ட்கிட்ட முடியலனுஒத்துக்கிட்டு திருப்பிக்குடுத்துடு. மிரட்டுகிறார்.

    அச்சச்சோ….. அங்க நடந்ததச் சொல்லக்கூடாது.  பணத்த திருப்பிக்குடுக்கறதப் பத்தி யோசிச்சிற வேண்டியதுதான்.

    என்னய்யா மோகன் என்ன பலத்த யோசனை. நான் கேட்கிறேன்.

    அவனிடத்தில் பதில் இல்லை. மீண்டும் என்முன் தலையைச் சொரிந்துகொண்டு நிற்கிறான்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 15

    கதை வடிவில் பழமொழி நானூறு – 15

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 31

    ஆகும் சமயத்தார்க்கு ஆள்வினையும் வேண்டாவாம்
    போகும் பொறியார் புரிவும் பயனின்றே;
    ஏகல் மலைநாட! என்செய்தாங்கு என்பெறினும்
    ‘ஆகாதார்க்(கு) ஆகுவது இல்’.

    பழமொழி – ‘ஆகாதார்க்(கு) ஆகுவது இல்’

    இன்னிக்கு யார் முகத்துல முழிச்சேனோ தெரியல. ஞாயிற்றுக்கிழமை நிதானமா வேலையத் தொடங்கி ஓய்வு எடுக்கலாம்னு நெனச்சா இன்னிக்குனு பாத்து இப்படி ஒரு சோதனை. இப்ப அந்த அம்மா சொன்ன எல்லாத்தையும் உடனே செஞ்சாகணும். மொதல்ல போலீஸ் ஸ்டேஷன் அப்புறம் பாங்க். உலகமே தலைகீழா ஆனாலும் இந்த வயிறு அடங்க மாட்டேங்குது. மொதல்ல இருக்கற பிரட்ல ஜாமத் தடவி வாய்க்குள்ள போட்டுக்கணும். வரிசயாக யோசிக்கத் தொடங்கினேன்.

    தூங்கி எந்திரிச்சவொடனே கண்கள உள்ளங்கையால மூடி திறக்கும்போதே மொபைல்ல முழிக்கற பழக்கம்தான் எனக்கு. இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமைதானேன்னு நெனச்சு ஒன்பது மணிக்கு முழிச்சது தப்பாப்போச்சு. என் வங்கிக் கணக்குலேந்து ஆப்பிள் கம்பெனி காரங்க மூணு தடவ 7,900 ரூபாய் எடுத்திருக்காங்க. அதுவும் இரண்டு நிமிட இடைவெளியில. காலை எட்டரை மணியிலிருந்து. நல்லவேளை பாத்தவொடனே வங்கியிலேந்து நீங்கள் பணம் எடுக்க அனுமதியளிக்கவில்லையெனில் இந்த எண்ணைத் தொடர்புகொள்ளவும்னு அனுப்புவாங்களே அந்த எண்ணுக்குக் கூப்பிட்டேன். அதுலபேசின அம்மா ஆப்பிள் கம்பெனி பெயர்ல வேறயாரோ ஏமாத்து வேலைசெஞ்சிருக்கரதாவும் என்னய போலீஸ் ஸ்டேஷன் போய் புகார் குடுத்துட்டு வங்கிக்குப் போய் பாக்கச் சொல்லியிருக்கு. என்னோட கார்டையும் ப்ளாக் பண்ணிருச்சு.

    நேத்தைக்கு எ.டி.எம் ல பணம் எடுத்தேன். அப்போ என் தகவல்கள் திருடப்பட்டிருக்கலாம்னு நினைக்கறாங்க. என்னய மாதிரி இருபதாயிரம் ரூபாய்சம்பளக்காரனுக்கு இது பெரிய இழப்புதான். எத்தன நாள்ல திரும்பக்கிடைக்குமோ தெரியல. நாலு மாசம் முன்ன எங்க ஊர் சேலத்திலேந்து  சென்னைக்கு கிளம்பினப்போ தாத்தா சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. பட்டணத்துக்குப் போற. தனியாளாநின்னு எல்லாத்தையும் சமாளிக்கணும். எப்பவும் நெலம ஒண்ணுபோல இருக்காது. எவனும் பணத்தகிணத்த களவாண்டு போயிட்டான்னா பயப்படாத. திரும்பக் கெடச்சா நல்லது. இல்ல விதினு உட்டுரு.

    எரிச்சலோட அப்பா இடைமரித்து போற புள்ள கிட்ட நல்லதா நாலு வார்த்த சொல்லுங்க அய்யா.  அதவிட்டுட்டு இப்ப எதுக்கு தேவையில்லாம…..

    அப்பவும் தாத்தா விட்டபாடில்லை. ‘ஆகாதார்க்கு ஆகுவது இல்’னு பழமொழியே இருக்கு. ஒருத்தனுக்கு நல்ல விதி இருந்திச்சுன்னா அதிகமா முயற்சி செய்யாமலேயே அவங்கிட்ட பணம் வந்து குவியும். ஒருவேள தலைவிதி சரியில்லன்னா கஷ்டப்பட்டு சேத்து பாதுகாப்பா வச்சாலும் யாரும் களவாண்டுகிட்டுப் போயி அவன் நடுத்தெருவுல நிப்பான்.

    தாத்தா தொடர்ந்துகொண்டே போக எரிச்சலில் அம்மா வெந்நீர் எடுத்து வச்சு ஆறிப்போவுது. குளிக்கப்போங்க என அவரை விரட்டாத குறையாக போகச்செய்தார்.

    இப்ப யோசிச்சா அவர் சொன்னது சரினு தோணுது.இதையும் விதினு எடுத்துக்கிட்டா மன உளைச்சல்லேந்து தப்பிச்சிரலாம். தாத்தா பெரிய சைக்காலஜிஸ்ட் போல. மனதுக்குள் நினைத்துக்கொண்டே பிரட்டை மடித்து வாய்க்குள் அடைக்கத் தொடங்கினேன்.

    பாடல் 32

    ஓர்த்த கருத்தும் உலகும் உணராத
    மூர்க்கர்க்கு யாதும் மொழியற்க! – மூர்க்கன்தான்
    கொண்டதே கொண்டு விடானாகும்; ‘ஆகாதே
    உண்டது நீலம் பிறிது’.

    பழமொழி – ‘ஆகாதே உண்டது நீலம் பிறிது’.

    இது என்ன புது கதையா இருக்கு. பாம்பேயிலிருந்து தவசி அய்யாவோட மச்சான் வந்திருக்காராம். நம்ம ஊரு பஸ் ஸ்டாண்டுல ரூம் எடுத்து தங்கிக்கிட்டு எல்லாரையும் கூப்பிட்டுவுட்டு பாக்குதார்னு சொன்னாவ. ஏன் ஆச்சி அவருக்கு என்ன வயசிருக்கும். நம்ம தங்கம் ஆச்சியோட கடைசி தம்பியா இருக்குமோ? புதிதாகக் குடிவந்திருக்கும் பார்வதி கேட்க..

    ஆச்சி கதை சொல்ல ஆரம்பித்தாள். அதெல்லாம் ஒண்ணுமில்ல அவருக்கு எண்பத்தைந்து வயசு ஆச்சு… இருபது வருசம் முன்ன ஒரு சின்ன மனஸ்தாபத்துல விரிசல் விழுந்து போச்சு. அதுக்குப்பொறவு வீட்டுக்கு வந்து போவுதது கிடையாது. அப்பப்ப தங்கச்சிக் கிழவியப் பாக்கதுக்காக வருவாக அவ்வளவுதான்.

    அடேயப்பா. இருபது வருசமா அப்டி என்னதான் பிரச்சினை உசுப்பேத்திவிட்டாள் பார்வதி.

    தங்கத்தோட மூத்த மக அதான் சேரன்மாதேவிலேந்து வந்துபோவாளே தெய்வான அவ சடங்குக்கு பத்திரிக்கை அடிக்கையில இவரு பெயரப் போடலியாமா. அதான்.

    சேதி கேள்விப்பட்டவொடனே இவரு சம்சாரத்தோட தட்டு தாம்பாளம் எல்லாம் தூக்கிக்கிட்டு சீர்செய்ய வந்துட்டாரு. அதுக்குப்பிறகுதான் பத்திரிகை அடிச்சாங்க எல்லா சொந்தமும் அக்கம்பக்கத்துலயே இருந்ததால அத ஒரு சம்பிரதாயத்துக்குதான் அடிச்சாங்க. அதனால பெரிசா கவனம் எடுத்துக்கிடல. சடங்கெல்லாம் நல்லபடியா முடிஞ்சு எல்லாரும் ஊர்த்திண்ணையில உக்காந்து பொழுது போக்கையில எவனோ ஊர்க்காரன் கெளப்பி உட்டுட்டான்.

    என்னவே தவசி… இம்புட்டு சிறப்பா சடங்கு செஞ்சீரு. பத்திரிக்கையில தாய்மாமன் பேரமட்டுமாவது போட்டிருக்கலாம். ஒரு சொந்தக்காரன் பெயரும் காணலியே.

    அவ்வளவுதான் கேக்கவா வேணும். கோவக்கார மனுசனுக்கு உசுப்பு ஏத்திவிட்டா முறைச்சிக்கிட்டுப் போனவரு தங்கச்சிகிட்ட மட்டும் அப்பப்ப பேசுவாரு. மூணாவது மனுசன்கணக்கா வெளியில தங்கி பாத்துட்டுப் போவாரு. அவுங்களுக்கும் அது பழகிப்போச்சு. ரெண்டு பேருக்கும் பேரப்பிள்ளைகளுக்கு கல்யாணம் செய்யுத வயசு வந்திடுச்சு. இன்னமும் அந்த மனுசன் அப்டித்தான் இருக்காரு. மூர்க்கன் என்னைக்கும் யோசிக்கமாட்டான் தன் பிடிச்சபிடியிலேந்து மாற மாட்டாங்கது இதுதான் போலிருக்கு. இதத்தான் ‘ஆகாதேஉண்டது நீலம் பிரிது’னு பழமொழியாச் சொல்லுவாங்க.

    சரிதான் ஆச்சி இவுகளும் இவுக கோவமும். கோவப்படுததுக்கு ஏதும் காரணம் வேணும். இவுக இப்டியே பொழுதப் போக்கட்டும். நமக்கு ஆயிரம் சோலிகெடக்கு. கெளம்புவோம். சொல்லிவிட்டுக் கிளம்பினாள் பார்வதி.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 14

    கதை வடிவில் பழமொழி நானூறு – 14

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 29

    பல்லாண்டும் ஈண்டிப் பழுதாய்க் கிடந்தது
    வல்லான் தெரிந்து வழங்குங்கால், – வல்லே
    வலிநெடிது கொண்ட(து) அறாஅது; அறுமோ,
    ‘குளநெடிது கொண்டது நீர்?’.

    பழமொழி -. ‘அறுமோ குளநெடிது கொண்டது நீர்’

    அல்வர் ராஜஸ்தானின் ஒரு அருமையான நகரம். பழம் பெரும் கோட்டைகள் நிறைந்த நகரம் என்றெல்லாம் சித்தப்பா சொன்னது நினைவிற்கு வரவேதான் நான் நாலு நாள் விடுப்பு எடுத்து இங்கு வந்திருக்கிறேன். எவ்வளவு அரித்தாலும் என் சித்தப்பா பையன் வெளியில் சுற்ற மறுக்கிறான்.  ப்ளஸ் 2 பாடம் நெறைய இருக்காம் படிக்கிறதுக்கு. ரொம்ப கட்டாயப் படுத்தினா சித்தி கோவிச்சுப்பாங்களோ என்னவோ.

    அரைகுறை ஹிந்தியில் பக்கத்து வீட்டு பப்லுவை ப்ரெண்ட் புடிச்சாச்சு. முதலில் நான் ஊரச் சுத்திப்பாக்கணும்னு சொன்னவுடனே சிரிச்சான் அப்புறம் நாளைக்கு காலையில சைக்கிள் எடுத்துட்டு சுத்தலாம்னு சொல்லியிருக்கான். சின்ன ஊர் போல.

    காலையில ஊர்சுத்தக் கிளம்பும்போது சித்தி கையில டிபன் பாக்ஸ் தண்ணி பாட்டில் மறக்காம எடுத்துட்டுப் போடா. இது உங்க ஊர் இல்ல.னு சொன்னதோட அர்த்தம் இப்பதான் புரிஞ்சுது. ராஜஸ்தான் உச்சி வெயில் மண்டய பதம் பாத்துக்கிட்டுருக்கு. பப்லு என்னவோ பையா இந்த் ஊர்ல பாழடைஞ்ச கோட்டைகள் நிறைய பக்கத்துல இருக்கு முதல்லஅதப் பாக்கலாம் அப்பறமா உங்களுக்கு மூட்இருந்தா ஊருக்கு வெளிய இருக்கற பெரிய கோட்டைக்குப் போகலாம் அப்டின்னு சொல்றான்.

    என்னவோ தெரியல மக்கள் நடமாட்டம் அதிகமா இல்ல. ரோட்ல நடந்து போற பாவடை சட்டை பெண்களும் தலை வழியா போட்டிருக்கிற துப்பட்டாவால முகத்த மூடிக்கிட்டு நடக்கறாங்க. ஆரஞ்சு பச்சை சிவப்புனு கலர்தான் தெரியுது முகமே தெரிய மாட்டேங்குது. இங்கயெல்லாம் பெண்களுக்கு நகையோட அவசியமே இல்ல அப்டிதானே பப்லு. என் கேள்விக்கு மீண்டும் அவன் சிரிப்புதான் பதில்.

    ஆமாங்கறானா இல்லைங்கறானா யோசித்துக்கொண்டே வந்ததில் ஒரு கோட்டையை அடைந்து விட்டோம். அங்கிருந்த அனுமார் கோவில்ல ஏதோ பூசையாம். போய்ப் பாத்துட்டு கோட்டைக்குப் போகலாம்னு அவன் சொல்லவே சைக்கிளை நிறுத்திவிட்டு மலைக்குன்றில் ஏற ஆரம்பித்தோம்.

    புடைக்கிற வெயிலிலும் நிறைய மனிதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தனர். அங்கேயும் பல வண்ணத் துப்பட்டாவால் முகத்தை மறைத்தபடி பெண்களும், அதேபோல் பல வண்ணத் தலைப்பாகை அணிந்த ஆண்களும்.

    மீண்டும் என் மனதில் நகைபற்றிய அதே கேள்வி. கேட்டும் விட்டேன். என்னைப் பொருட்படுத்தாது புவாஸா ஹுகும் என்று அழைத்துக்கொண்டே ஒரு பெண்ணின் பின்னால் ஓடுகிறான் பப்லு.

    அவள் நின்றவுடன் என்னை அழைத்து இவள் என் அத்தை ஜமீன் குடும்பம் என அறிமுகப்படுத்தியவுடன் அந்தப் பெண் தன் துப்பட்டாவை விலக்கி எனக்கு கமாகனி என ராஜஸ்தானிய மொழியில் வணக்கம் சொல்கிறாள்.

    என் அம்மாவின் வயது அந்த அம்மாளுக்கு. என்ன அழகாக அலங்கரித்துக் கொண்டிருக்கிறாள். முகத்தில் பெரிய சிவப்பு நிறப் பொட்டு. காதிலும் மூக்கிலும் வெள்ளைக்கல் ஜொலிக்கிறது. கழுத்தோடு ஒட்டி பெரிய சைஸ் நெக்லஸ் போன்ற அணிகலன் கைக்கு நான்குவீதம் வளையல்கள். எல்லாம் பழைய காலத்து நகை போல இருக்கு. பரம்பரை நகையோ என்னவோ.

    பப்லு ஏதோ கேட்க அவள்என்னைப் பார்த்து இருபதுதோலா நகை போட்டிருக்கிறேன் என தெளிவான ஹிந்தியில் கூறுகிறாள்.

    ஓ நேத்தைக்குத்தான்சித்தி சொல்லிக்கொண்டிருந்தாள் இங்கயெல்லாம் பவுன் கிடையாது. தோலானுதான் சொல்லுவாங்க. நம்ம ஊர்ல 1 பவுன் எப்டி எட்டு கிராமோ அதுபோல இங்க ஒரு தோலா பத்துகிராம் அப்டின்னா இந்த அம்மா இருநூறு கிராம் அதாவது இருபத்தைந்துபவுன் நகை போட்டுக்கொண்டிருக்காங்க. என்ன ஆச்சரியம் வெளியில எதுவுமே தெரியாம துப்பட்டாவால மறைச்சு மூடிக்கிறாங்க.

    யோசித்துக்கொண்டிருக்கும்போதே அந்த அம்மாள் எங்களை அனுமார் தரிசனம் முடிந்தபின் கீழேயுள்ள பண்டாருக்கு சாப்பிட வருமாறு அழைக்கிறாள். பப்லு ரொம்ப வற்புறுத்தியதால்அங்க போனோம். பூரி, கிழங்கு, கேசரி, பஞ்சாமிர்தம் எனப்படும் தயிர்ப் பிரசாதம் எல்லாம் சாப்பிட்டாச்சு.  இன்னிக்கு அவங்களோட கல்யாண நாளாம். வருசா வருசம் அவங்க வயலில வேலை செய்யற எல்லாரையும் கூப்பிட்டு இந்த மாதிரி அனுமார் கோவிலில் பூசை செஞ்சுசாப்பாடு போடுவாங்களாம்.

    இந்தத் தடவ நானும் பப்லுவும் கலந்துக்கிட்டதுல அவங்களுக்கு ரொம்ப சந்தோசமாம். இப்ப என்னய அந்த மக்கள் முன்ன நாலு நல்ல வார்த்த பேசச் சொல்றான் பப்லு. நான்யோசிச்சேன். என்ன சொல்லலாம். அறுமோ குளநெடிது கொண்டது நீர் ங்கறபழமொழிதான் ஞாபகத்துக்கு வருது.

    பக்கத்துல இருந்த குளத்தக் காட்டி இதுலேந்து கொஞ்சம் தண்ணிய நாம எடுத்துட்டுப் போகறதுனால  மொத்த தண்ணியும் வத்திடப் போறதில்ல. அதுமாதிரிதான் நம்மகிட்ட  இருக்கற செல்வத்த தேவையானவங்களுக்குக் கொடுத்தா அது ஒரு நாளும் குறையாது பெருகத்தான் செய்யும். தருமத்துல சிறந்தது அன்னதானம். இப்ப இந்த ஜமீன்தார் குடும்பம் உங்க எல்லாருக்கும் நல்லா சாப்பாடு போட்டு தேவையானதச் செஞ்சிட்டுவரதால நீங்களும் சந்தோசமா அவரோட வயல்ல உழைப்பீங்க. மகசூலும் பெருகும்.

    என்ன புரிஞ்சுதோ தெரியல எல்லாரும் கையத் தட்டுகின்றனர். ஒரு பழமொழிய ராஜஸ்தான் மண்ணில் சொன்ன பெருமையோட நானும் பப்லுவுடன் கிளம்பினேன்.

    பாடல் 30

    களமர் பலரானும் கள்ளம் படினும்
    வளமிக்கார் செல்வம் வருந்தா; – விளைநெல்
    அரிநீர் அணைதிறக்கும் ஊர! ‘அறுமோ
    நரிநக்கிற்(று) என்று கடல்’.

    பழமொழி:-‘அறுமோ, நரிநக்கிற்று என்று கடல்’

    ஏன் ஆத்தா. வெளைச்சல் எல்லாம் எப்டி இருக்கு. கேட்டுக்கொண்டே திண்ணையில் அமர்கிறேன்.

    எல்லாம் நல்லாத்தான் போயிக்கிட்டிருக்கு. உன்னய மாதிரி படிச்ச பயலுவதான் இத்தனவருசத்துக்குப் பொறவு விவசாயம் பண்ணுதேம்னு வந்து நாட்டாம பண்ணிக்கிட்டுத் திரியுதான்.

    என் ஆத்தா பாம்பட ஆச்சிக்கு பொடிவச்சுப் பேசுவதற்குக் கேக்கவா வேணும். எதையும் நேரடியாச் சொல்லமாட்டா. புரியலைன்னா வளச்சி வளச்சி நாலுமட்டம் கேளு. சொல்லுதேன் என்பாள். புதிய மனிதர்களுக்குச் சங்கடம்தான்.

    அரசாங்க வேலை பார்த்து ரிடையார்ட் ஆகிவிட்ட நான் கிராமத்தில் குடியேரலாமா என்ற எண்ணத்துடன் நிலைமையைப் பரிசீலிக்க வந்திருக்கிறேன். முன்ன மாதிரி இந்த ஆத்தாகிட்ட பேசி வார்த்தய வாங்கற அளவு பொறும இல்ல. பேசாம நம்ம கண்ணபிரானக் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்.

    முடிவுடன் அவன்வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிச்சேன். அவனும் ஆறு மாதம் முன் இங்கு வந்து குடியேறினான். வங்கியில் வேலைபார்த்து இரண்டு பெண்களுக்கும் திருமணம் முடிச்சுட்டான். கடைசி காலத்த இங்க கழிக்கலாம்னு வந்திருக்கான்.

    அவன் வீட்டை அடைந்தவுடன் நோட்டம் விட்டேன். பழைய வீட்டை இடித்து கட்டமைப்பை மாற்றியிருக்கிறான். வீட்டின் வாசல்திண்ணை அழிக்கம்பிச்சிறைக்குள் அடைக்கப்பட்டு மேலே பேன் தொங்குகிறது. இனி தெருவில் போவோர் வருவோர் உட்கார முடியாது. உள்ளே சிமெண்ட் தரை மாற்றப்பட்டு வெள்ளை டைல்ஸ். இடையிடையே கோல ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. வீட்டினுள் ஏ.சி,  இண்டெர்நெட் எல்லா வசதியும் செஞ்சிருக்கான். சுவற்றில் மாற்றப்பட்ட பெரிய சைஸ்டி.வி. மொத்தத்தில் கிராமத்து வெளிப்புறமும், நகரத்து உட்புறமும் கொண்ட வீடாக மாறியிருந்தது அவன் வீடு.

    யோசித்துப்பார்த்தேன். முன்ன உங்க வீட்டு வாசல்ல ஆடு கட்டி வச்சிருப்பாங்க. பின்பக்கத்துக் கொட்டில்ல மாடு கட்டி வச்சிருப்பாங்கயில்ல. ஒருதடவ கோழிக்கூடய எடுத்துவிட்டு எல்லாக் கோழியும் சிதறி ஓடிருச்சுன்னு உங்கம்மாகிட்ட எப்டி திட்டுவாங்கினோம். பழைய விசயத்தை ஞாபகப் படுத்தினேன். அவனுக்கு அதில் நாட்டமில்லைஎனப் புரிந்து கொண்டவுடன் நேரடியா விசயத்துக்கு வந்தேன்.

    நானும் இங்க குடிவந்துரலாம்னு இருக்கேன். பையன் அவன்பாட்டு பாம்பேல வேலபாத்துட்டு இருப்பான்.உன்னய மாதிரியே வீட்ட கொஞ்சம்மாத்திக் கட்டிக்கிட்டு….

    உங்கம்மா அதுக்கெல்லாம் ஒத்துக்காது. போனவாரம்தான் அறுவட சமயத்துல என்னய உக்காத்திவச்சு அறிவுரை மழை பொழிஞ்சுச்சு. அப்டி இருக்கணும் இப்டி இருக்கணும். பகட்டெல்லாம் கூடாது. உங்க ஆத்தா இருந்து சொன்னதா நெனச்சிக்கோன்னு.

    இவன் என்ன சொல்ல வறான்னு புரியல.ஆனா என் அம்மாமேல கடுப்புல இருக்கான்னு புரியுது. நினைத்துக்கொண்டிருக்கும்போதே அவனே தொடர்கிறான்.

    அறுவடை முடிஞ்சு போர் அடிச்சு நெல்லத் தூர்வாரி முடிச்சவொடனே ரெண்டு வீட்டு நெல்லயும் குமிச்சு வச்சிருந்தோம். உங்கம்மா என்னயக் காவலுக்கு உக்காத்தி வச்சிட்டு வீடு வரைக்கும் போயிட்டாங்க.

    அப்ப நெல்ல மூட்ட கட்டி எடுத்துட்டு வரதுக்காக வந்த கூலியாட்கள் அளக்கும்போதே ஆளுக்கு கொஞ்சம் நெல்ல புடவை முந்தானையில முடிஞ்சிக்கிட்டாங்க. நான் அவங்களச் சத்தம்போட்டு வேலை முடிஞ்சவொடனே கூலி தருவோம். இந்த மாதிரி திருடற வேல வச்சிக்காதீங்கனு சத்தம்போட்டேன்.  அப்ப வந்த உங்கம்மா காக்கா தண்ணிகுடிச்சு குளத்துத் தண்ணி வத்திடவா போகுது.

    எடுத்துக்கட்டும் உடு. இதை எடுத்துட்டுப் போயி அதுங்க என்ன கோட்டயா கட்டிடப் போவுது. வெலைக்குப் போட்டு நெல்லிக்கா, மாங்கா என்னமும் வாங்கித் தின்னும் அவ்வளவுதான் சொல்லி அறிவுரைய ஆரம்பிச்சிட்டாங்க.

    என் மனதிற்குள் முன்பு படித்த பழமொழி ஞாபகத்துக்கு வந்தது. அறுமோ, நரிநக்கிற்று என்று கடல் அம்மா சொன்னதுகூட இந்த பழமொழி மாதிரிதான் நரி நக்கினதால கடல்தண்ணி வத்தாதுங்கறது அதோட பொருள். ஆனா அத இப்ப சொல்லக்கூடாது ஏற்கனவே கோபமா இருக்கற என் நண்பனோட கோபம் இன்னும் அதிகமாயிடும்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 13

    கதை வடிவில் பழமொழி நானூறு – 13

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 27

    உறுகண் பலவும் உணராமை கந்தாத்
    தறுகண்மை ஆகாதாம் பேதை, – ‘தறுகண்
    பொறிப்பட்ட வாறல்லால், பூணாதுஎன் றெண்ணி,
    அறிவச்சம் ஆற்றப் பெரிது‘.

    பழமொழி –  பேதை எதையும் செய்யமாட்டான்

    வியாபாரம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. அதற்குள் திடீரென அவனுக்கு என்ன வந்துவிட்டது. இந்த ஐந்து வருடத்தில் அவன் எப்படியெல்லாம் விருத்திசெய்திருப்பான் என கோட்டை கட்டிக்கொண்டு வந்ததுதான் மிச்சம். ஏன் இப்படி. என்னவாக இருக்கும்.

    தீபாவளி பலகாரங்கள் எதுவும் இனிக்கவில்லை. மனம் ஒரு குரங்குதானே. அதனால்தானோ என்னவோ முன்னால் தட்டு நிறைய வீட்டில்செய்த இனிப்புகள் இருந்தும் எதையும் கையில் எடுக்க மனம் வரவில்லை.

    நண்பனின் தந்தை அவனைத் திட்டும்போதெல்லாம் எப்படி வக்காலத்து வாங்கி இருக்கிறேன். மனம் யோசனையில் ஆழ்ந்தது.

    நீ எதுக்கும் லாயிக்கில்லாதவன்டா. உக்காந்து தின்னே காலத்தக் கழிச்சிரு. உன் சோம்பேறித்தனத்த வளக்கறதுக்கு எட்டு காரணத்தச் சொல்லு. வெளியில இறங்கி உலகத்தப்பாத்ததானே பிழைக்கிற வழி தெரியும். நாலு சுவத்துக்குள்ள உக்காந்து நீயும் உங்கம்மாவும் கோட்ட கட்டிக்கிட்டே இருங்க. ஏண்டாப்பா நீ கூடவா இவனுக்கு புத்தி சொல்லக்கூடாது. ஏதோ சென்னைக்குப் போகப்போறதா கேள்விப்பட்டேனே. உண்மையா.

    ஆமா அங்கிள். நான் எங்க சித்தப்பா வீட்ல போய் இருந்துக்கிட்டு வேல தேடப்போறேன்.

    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைச்சவொடனே இவனையும் கூப்பிட்டுக்கறேன். ஒப்புக்குச் சொன்ன வார்த்தை அன்று.

    பள்ளிப்படிப்பில் தொடங்கி கும்பகோணம் கல்லூரி வரை நானும் என் நண்பன் நாகுவும் ஒண்ணாத்தான் படிச்சோம். அவன் கொஞ்சம் பயந்த சுபாவம். எதிலயும் ரிஸ்க் எடுக்க மாட்டான். அவங்க அம்மாவும் அந்தக் கொணத்த திசை திருப்பி பலமான கடவுள் நம்பிக்கைய விதைச்சாங்க. நாளாவட்டத்துல அது கடவுள் நம்பிக்கையா இல்லாம கடவுள் பயமா மாறிப்போச்சு. டேய் பரீட்சைக்கு முன்ன பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டுட்டு வரேன். கோபிச்சுக்கப் போறாருங்கற அளவில்.

    இதை அவன் அம்மாவின் பார்வைக்கு கொண்டு சென்றபோது நல்லது தம்பி நான் அவனுக்கு புத்தி சொல்றேன் என்றாள். அவள் புத்தி சொல்லி வளர்த்தவிதத்தைத் தான் நான் இப்ப பாக்கறேனே. போனவாரம் தீபாவளி அன்று அவன் அப்பாவின் தொலைபேசி அழைப்பு வந்தது.

    கால ஓட்டத்தில் ஒருவரையொருவர் மறந்து வேலை, திருமணம் என்று வேறு வேறு திசைகளை நோக்கி பயணித்து விட்ட பின் அவரின் குரல் என் கடந்த காலத்தை மீண்டும் வரவழைத்ததுபோல்….

    தம்பி நான் உங்க நண்பர் நாகுவோட அப்பா பேசறேன். ஊர மறந்துட்டீங்க போல. இந்தப்பக்கமே வரதில்ல. முடிஞ்சப்போ குடும்பத்தோடவந்து எங்க வீட்ல தங்கிட்டுப்போங்க. உங்க நண்பரும் சந்தோஷப்படுவாரு. உங்கபையனும் என் பேரனும் சேந்து விளையாடலாம்.

    கேட்க நன்றாக இருந்தது. இதோ வந்தேவிட்டோம். என்ன ஆச்சர்யம். நாகு மட்டும் மாறவேயில்லை. ஏதோ கடை வைத்து நடத்துகிறானாம். அதைப்பெரிசாக்க வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. அதே ஓட்டுவீட்டில்தான் வசிக்கிறார்கள்.

    எனக்கு என்னடா குறைச்சல். சாப்பாட்டுக்கு கடை வருமானம் இருக்கு. போய்வர சைக்கிள் வாகனம் இருக்கு. ஒத்த பையன். நாம படிச்ச பள்ளிக்கூடத்திலயே அவனையும் சேத்திருக்கேன். நல்லாப் படிக்கிறான். மனைவி நச்சரிப்புதான் தாங்கமுடியல. வருமானம் பத்தாதாம். எங்கப்பாவும் அவகூட ஜால்ரா போடறார். வங்கியில கடன் வாங்கி கடையை விரிவுபடுத்துனு.

    நீயே சொல்லு. கடவுள் யாருக்கு எது கொடுக்கணும்னு விதிச்சிருக்காரோ அதுதானே கிடைக்கும்.  அதுக்குமேல ஆசப்பட்டா அவருக்குக் கோபம் வராதா. இந்த விஷயத்துல எங்கம்மா தான் சரி.  என்னய தினமும் கனகதாரா ஸ்தோத்திரம் சொல்லச் சொல்லியிருக்காங்க. கடவுளா மனமிரங்கி கொடுத்தா கொடுக்கட்டும். இல்லன்னா விதிவிட்ட வழினு இருப்பேன். அவன் பேசப்பேச எனக்கு ஆச்சரியம்

    ‘அறிவச்சம் ஆற்றப் பெரிது’ என்னும் பழமொழி ஞாபகத்துக்கு வந்தது. தனக்கு வந்து சேர்ந்த துன்பம் பலவற்றுக்கும் காரணம் அறியாமலேயே அது விதிப்பயன் என்றெண்ணி தீர்க்க முயற்சிக்காமலிருப்பவன் பேதையாவான். ஆம் நாகுவும் ஒரு பேதையே.

    பாடல் – 28

    சுட்டிச் சொலப்படும் பேரறிவி னார்கண்ணும்,
    பட்ட இழுக்கம் பலவானால் – பட்ட
    பொறியின் வகைய கருமம்; அதனால்,
    ‘அறிவினை ஊழே அடும்’.

    பழமொழி – ‘அறிவினை ஊழே அடும்’

    நம்ம ராஜேந்தர் சாரோட வழக்கப் பத்தி கேள்விப்பட்டயா. மனசுக்கு ரொம்ப சங்கடமா இருக்குடா. எவ்வளவு பொறுப்பான வாத்தியார். ஒழுக்கத்த நம்மளுக்கு கத்துக் கொடுத்தவரே அவர் தான். என்னால அவர் அப்படிச் செஞ்சிருப்பாருன்னு நம்ப முடியல. நீங்க கண்டிப்பா ஒருநாள் ரொம்ப பேமஸ் ஆவிங்க சார்னு நான்பலமுறை சொல்லியிருக்கேன். அதுக்காக இப்படியா. சென்னையிலிருந்து வந்திருக்கும் நான் என் பால்ய நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.

    பத்தாண்டுகளுக்கு முன்பு உள்ளூர் அரசுப்பள்ளியில் படித்த எங்களுக்கு இராஜேந்தர் சார் பன்னிரண்டாம் வகுப்பு கணித ஆசிரியர். அவராலேயே நல்ல மதிப்பெண் பெற்று சென்னை பொறியியற்கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்மட்டும் இல்லையெனில் எங்களில் பாதிபேரின் வாழ்க்கை ப்ளம்பர் மற்றும் பிட்டர் எனதான் கழிந்திருக்கும். பொறியியல் படிப்பை நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாது.

    கடந்த ஒருவாரமாக ஊடகங்களில் அவரைப்பற்றி வரும் செய்திகளை மற்றவர்கள் போல் கடந்துபோக என்னால் முடியவில்லை. இப்போது நல்லபணியில் இருக்கும்நான் ஏதாவது ஒருவகையில் அவருக்கு உதவ வேண்டும். அதனால் தான் என் உற்ற நண்பனிடம் விசாரித்துக்கொண்டிருக்கிறேன். அவன் தற்போது நாங்கள் படித்த மேல்நிலைப்பள்ளியிலேயே ஆசிரியராகப் பணிபுரிகிறான்.

    ஆமாண்டா. நான் அந்தப் பள்ளியில ஆசிரியர்னாலும் சார எதிரில பார்க்க நேர்ந்தா இப்பவும் எழுந்து நிப்பேன். அவருக்குச் சரிசமமா உட்காற மனசு வராது. திடீர்னு அவரப் பத்தி புகார் வந்தவொடனே பள்ளிக்கூடமே ஆடிப்போயிடுச்சு.

    அவருடைய கடைசி தம்பி தன் மகன டாக்டர் ஆக்கணும்னு விருப்பப்பட்டிருக்கார்போல. அதுக்காக சார்கிட்ட உதவி கேட்டிருக்காரு. தம்பி ஊர்ப்பக்கம் விவசாயம் பாத்துக்கிட்டிருக்கறதால சார் அவர் மகனத் தன் வீட்லயே வச்சி படிக்க வச்சிருக்கார். அப்பறம் கோச்சிங் சென்டர்ல சேக்கணும்னு நெனச்சப்போதான் வினையே தொடங்கிச்சு. நம்ம பள்ளியில புதுசா ஒரு கெமிஸ்டரி சார் சேந்திருக்கார். அவர் குடும்பமே கோச்சிங்சென்டர் வச்சு நடத்தறவங்க போல. அவர நம்பி நீட் கோச்சிங்காக தன் தம்பி மகன அவரோட சென்டர்லயே சேத்து விட்டுருக்காரு. சேரும்போது பத்துபக்கத்துக்கு ஒரு விண்ணப்பம் நிரப்பச்சொல்லியிருப்பாங்க போல. அதில கீழ எழுதியிருந்தத எல்லாம் சரியாவாசிக்காம கூட வேலை பாக்கறவர்தானேனு நினைச்சு சார் கையெழுத்து போட்டிருக்கார்.

    இவருடைய தம்பி மகனுக்கு நீட் தேர்வுல சரியா மதிப்பெண் கிடைக்கல. ஆனா அவங்க உங்க தம்பிமகன் பெயரில வேற ஒருபையனும் எழுதி இருக்கான் அது க்ளியர் ஆயிருக்கு. நீங்க இருபதாயிரம் கட்டணம் எங்களுக்குக் குடுத்தீங்கன்னா உங்களுக்கு சீட் நிச்சயம்னு சொன்னாங்களாம். அப்ப அவருக்குக் கோபம் வந்திருச்சு. முறையாப் படிச்சு வாங்கினவங்க பாதிக்கப்படுவாங்கனு கூக்குரல் போட்டு போலீசுக்குத் தகவல் குடுத்துட்டாரு போல.

    அப்பதொடங்கினது தலவலி. அந்த கோச்சிங் சென்டர் காரருக்கு அரசியல்ல பெரியபுள்ளிகளத் தெரியும்போல. பணம் குடுத்து சரிகட்டிட்டாரு. பழி முழுக்க சார்மேல வந்திருச்சு. பேராசப்பட்டு அவர் சென்டர நிர்ப்பந்தப் படுத்தினதாவும் அதுக்காக அவர் எழுத்துல எழுதிக்கொடுத்ததாவும் வழக்கு பதிவு பண்ணிட்டாங்க.

    முன்ன அவர் படிக்காம கையெழுத்து போட்டது வினையாப் போச்சு. அதில தாங்கள் எந்த வழியிலாவது (ஆள் மாறாட்டம் செய்தோ/பிற வழியிலோ) நீட் தேர்வில் என்மகனைத் தேர்ச்சி பெறச்செய்ய வேண்டும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு இந்த நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. அதற்கான முழு பொறுப்பையும் நான் ஏற்கிறேன்னு எழுதியிருந்தத கவனிக்காம அவர் கையெழுத்துபோட்டிருக்கார் போல.

    இப்போ என்னடான்னா….  என்னய்யா நீயே கையெழுத்து போட்டுட்டு கெடைக்கலன்ன வொடனே இவுங்கள மாட்டி விடப் பாக்கறனு போலீசு திட்டறதப் பாக்க சகிக்கல. இதத்தான் ‘அறிவினை ஊழே அடும்’ னு பழமொழியாச்சொல்லுவாங்க போல. அறிவாளி கூட தன்னோட தலையெழுத்தால சிலநேரம் அவத்தைப்படுவாங்கறது தான் அதோட அர்த்தம். .

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 12

    கதை வடிவில் பழமொழி நானூறு – 12

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 25

    முல்லைக்குத் தேரும் மயிலுக்குப் போர்வையும்
    தொல்லை அளித்தாரைக் கேட்டறிந்தும்; – சொல்லின்
    நெறிமடற் பூந்தாழை நீடுநீர்ச் சேர்ப்ப!
    ‘அறிமடமும் சான்றோர்க்(கு) அணி’.

    பழமொழி -‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’

    நல்லதாப் போச்சு. இந்த தடவ எல்லாரும் வந்துருக்கீங்க. ஆலமரப் படையல பெரிசா செஞ்சிடலாம். அதுக்குத் தேவையான சாமான்களெல்லாம் சொக்கி பாட்டிகிட்ட கேட்டுச் சொல்றேன். போய் வாங்கிட்டு வந்துடுங்க. அம்மா சந்தோஷமாகச் சொல்லிக்கொண்டே போனாள்.

    நான் சண்டிகரில் வசிப்பதால் வருடத்திற்கு ஒருமுறையாவது வந்து போவதுண்டு. ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அக்காவும் நியுசிலாந்தில் வசிக்கும் தம்பியும் இப்போதுதானே வருகிறார்கள். மூன்று குடும்பமும்ஒண்ணு சேர்வது கஷ்டம்தான். அதுவும் கிராமத்தில். நல்லவேளை. சித்தப்பா பையன் கல்யாணத்தை சாக்குவைத்து எல்லாரும் கூடிஇருக்கிறோம். சித்திதான் வரிசையாக நிறைய சடங்குகள் சொன்னாள். பந்தக்கால் நடுவதிலிருந்து தொடங்கி…. இப்போ அம்மா வேற இந்தப் படையல்… எங்கயும் சுத்திப்பாக்கப் போகமுடியாது போல. யோசனையுடன் அமர்ந்திருந்தேன்.

    அப்பா அதுஎன்ன ஆலமரத்துக்குப் படயல்சாப்பாடு. அது என்ன சாப்பிடவா போகுது. நெறைய மெனு வேற சொல்றாங்க. அதுக்கு ஒவ்வொரு பேமிலியும் நியூ டிரஸ் குடுக்கணுமாமே. கேட்கிறான் என் மகன்.

    கண்ணை மூடிக்கொண்டு மனக்கண்ணில் பட்டுப்புடவை கட்டிக்கொண்டுஆலமரம் இலை விரித்து சாப்பிடுவதாக யோசித்தேன். கற்பனை நல்லாதான்இருக்கு.  ஆமா எதுக்கு இது. இந்தக் கேள்விய சின்னவயசில நான் கேட்டதே இல்ல. விசேசம்னு சொன்னா நல்லா சாப்பிடணும்.விளையாடணும். ஆனா இந்த காலத்துப் பசங்க ரொம்ப தெளிவு. காரணம்கேட்டே கழுத்தறுக்கறாங்க.

    பாட்டிகிட்டயே கேளுடா. எனக்கு இதப்பத்தி எதுவும் தெரியாது. சமாளித்தேன்.

    போப்பா நீங்க சுத்த வேஸ்ட். ஓடிவிட்டான் என் பத்துவயது மகன்.

    அம்மாவின் லிஸ்ட் வந்துவிட்டது. மதியம் டவுண் போத்தீஸ் போய் ஆளுக்கு ஒரு பட்டுப்புடவை எடுத்துட்டு அதுக்கு மேல வைக்க கம்மல், செயின், வளையல் எல்லாம் கவரிங் கடையில் வாங்கிட்டு வந்துடுங்க. அப்புறமா மளிகை சாமான் இங்க வாங்கிக்கலாம்.

    இந்த சாக்குல டவுணச் சுத்தலாம். நாளைக்கு சாவகாசமா லோக்கல் ப்ரெண்ட் லட்சு கிட்ட இந்தப் படையல் நம்பிக்கை எதுக்குன்னு கேட்டுத்தெரிஞ்சுக்கணும்.

    மறுநாள் பலசரக்கு சாமான்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பும்போது எதேச்சையாக லட்சு கண்ணில் பட்டான். அவனாகவே டேய் என்ன ஆலமரப் படையல் சாமானா. அசத்து. பெரிய இடம். பட்டுப்புடவையெல்லாம் வைக்கப்போறயாமா. கேள்விப்பட்டேன்.

    அவன் பேச ஆரம்பித்ததும் எனக்கு ஆச்சர்யம்.

    ஏ….அதெப்படி .. உனக்குத் தெரியும். ..நானே உங்கிட்ட டவுட் கேக்கலாம்னு இருந்தேன். காரணமே தெரியாம இந்தப் படையல்ல எனக்கு நம்பிக்கையே இல்ல. அம்மாக்காக பண்றேன். அவ்வளவுதான்..

    ரொம்ப குழம்பாத. முன்னயெல்லாம் சுடுகாடு ஆலமரத்தடியில இறந்தவங்கள நெனச்சு விதவிதமா சாப்பாடு மட்டும் பண்ணி வைப்பாங்க. உண்மையில அந்தச் சாப்பாடு சுடுகாட்டுல வேல செய்யிறவுங்களுக்குத்தான். நாளாவட்டத்துல நம்ம தமிழய்யா முயற்சியில பொதுநல சங்கம் உருவாக்கினோம். இந்த மாதிரி படையல் வைக்கணும்னா அந்தச் சங்கத்துல முதலிலேயே பதிவு பண்ணணும். சங்க உறுப்பினர் அந்த விசேசத்துல கலந்துப்பாரு. மூடிபோட்ட சம்படங்கள்லதான் சாப்பாடு கொண்டுவைக்கணும். இலையைப் பரப்பிஒவ்வொரு கரண்டி வேணாப் போடலாம். அதைக் காக்காய்க்காக விட்டுவச்சிறுவாங்க. சம்படத்தோடசாப்பாட்ட எடுத்துட்டுப்போயி ஒவ்வொரு ஏழைகளுக்கும் வரிசைப்படி குடுத்துட்டு வந்தாங்க. இப்பயெல்லாம் துணிமணிகளும் கொடுக்கணும்னு சங்கம் உத்தரவு போட்டிருக்கு அதனாலதான் உங்கள பட்டுப்புடவை வாங்கச்சொன்னோம். படையலுக்கு வச்ச பாத்திரங்கள் துணிமணிகள் எல்லாத்தையும் தீபாவளிக்கு முன்ன மிகக் குறைந்த விலைக்கு சங்கம் ஏழைகளுக்குக் கொடுக்கும்.

    பாரிவள்ளல் முல்லைக்கு தேர் கொடுத்தான் அப்டிங்கறதுல மேலோட்டமாப் பாத்தா அவன் தெரிஞ்சுக்கிட்டே செஞ்ச அறியாமைச் செயல்கூட அவனுக்கு மங்காப் புகழப் பெற்றுக்குடுத்துடுச்சேனு நெனைப்போம். அதனால தேர்செய்யறவங்களுக்கு மேலமேல வேலைவாய்ப்பு கிடைக்க உதவினான்னும் எடுத்துக்கலாம். அதுபோலத்தான் இதுவும். யார் இந்த ஆலமரப் படையலத் தொடங்கினாங்கனு தெரியல. நம்பிக்கைகளைச் சிதைக்காம அது வெறும் நம்பிக்கைதான்னு தெரிஞ்சுக்கிட்டே அத வாழறவங்களுக்கு உதவியா மாத்த நினைச்சுதான் எங்க சங்கம் உழைச்சிட்டிருக்கு. ‘அறிமடமும் சான்றோர்க்கு அணி’ ங்கற பழமொழிப்படிதான் எங்க சங்கம்இயங்குது. அறிந்தே செய்யும் மடமைச் செயலும் சான்றோர்க்குச் சிறப்பையே தரும்னு சொல்லுவாங்க இல்லயா. அதுபோல இந்த ஊருக்குள்ள எங்களுக்குப் பெருமதான்.

    நண்பன் பேசப் பேச நான் ஆச்சரியத்தில் மூழ்கினேன்.

    பாடல் 26

    பொற்பவும் பொல்லா தனவும் புணர்ந்திருந்தார்
    சொற்பெய்து உணர்த்துதல் வேண்டுமோ? – விற்கீழ்
    அரிபாய் பரந்தகன்ற கண்ணாய்! – ‘அறியும்
    பெரிதாள் பவனே பெரிது’..

    பழமொழி – ‘அறியும் பெரிதாள் பவனே பெரிது’..

    இன்று என் மின்னஞ்சலைத் திறந்தவுடன் ஒரு ஆச்சரிய அதிர்வு. இதை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனோ எழுந்துசென்று கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்கவேண்டுமெனத் தோன்றியது. விக்னேஷ் அனுப்பிய அழைப்பிதழ் அது. கண்ணாடியில் ஆங்காங்கே தெரிந்த நரைமுடிகள் என்வயதை உணர்த்தின. எத்தனை வருடத்திற்கு முந்தைய நிகழ்வுஅது. இன்னும் பசுமையாக என்மனதில்.

    ஆமாம்….. நான் தோற்றுவிட்டேன். எனது தோல்வியை ஒப்புக்கொள்ள புஷ்பா என் அருகில் இல்லையே. ஒருவேளை அவன் அவளையும் அழைத்திருப்பானோ. பொறுத்துதான் பார்க்க வேண்டும். எப்படியும் நாளை போகப்போகிறேனே. விழாவிற்குச் செல்வதற்காக உடுத்த வேண்டிய சேலை முதல் அனைத்தையும் எடுத்துவைத்தேன். பத்தாண்டுகளுக்குப் பிறகு சந்திக்கப்போகும் நிகழ்வல்லவா. விக்னேஷின் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமோ. டில்லியை விட்டு மாற்றலாகி வந்தபிறகு மீண்டும் தொடர்புகொள்ள முயற்சி செய்ததேயில்லை. இந்த விழாவுக்கு கண்டிப்பாக அனைத்து ஆசிரியைகளையும் அழைத்திருப்பான். நேஹா மேடத்தைப் பார்க்கமுடியும். பழசையெல்லாம் அவர்கள் மறந்திருப்பார்கள். இந்தமுறை சந்தித்தால் நன்றாகப் பேசவேண்டும்.

    அடுத்தநாள் விமானம் ஏறியவுடன் மனம் பின்னோக்கிச் சென்றது.

    அது பத்தாண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு. நானும் புஷ்பாவும் தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு ஆசிரியைகள். ஆசிரியர் தினத்தைக் கொண்டாட அனைவரும் அரங்கில் காத்திருக்கிறோம். எங்கள் தலைமை ஆசிரியை கேட்டுக்கொண்டதிற்கிணங்க பள்ளி சம்பந்தமான தங்களின் அனுபவங்களைப் பகிர ஒவ்வொருவராக மேடை ஏறுகிறார்கள்.

    பெருமையடித்தே பொழுதைக் கழிக்கும் கதைசொல்லிகள் தங்கள் கற்பனைப் புராணத்தைத் தட்டிவிட ஆரம்பித்தனர். அனைவரைப் பற்றியும் சரியாக எடைபோட்டு வைத்திருக்கும் தலைமை ஆசிரியை ஒப்புக்கு கைதட்டி ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்தினார்.

    ஒவ்வொருவர் பேசிமுடித்ததும் இவளைப் பற்றித் தெரியாதா. எனக் கிண்டலடித்துக் கொண்டே இருந்த புஷ்பா. நேஹா மேடம் மேடையேறியவுடன் அதிர்ச்சியானாள்.

    என்னஆச்சு இவங்களுக்கு. இவங்களுமா…….

    நேஹா மேடத்தின் உரை ஆரம்பித்தது. நான் சொல்லப்போகும் இந்த அனுபவம் வேறு ஒருவருடையது. அவர் மேடை ஏற விருப்பம் தெரிவிக்காததால் அவருக்குப் பதில் நான் கூறுகிறேன். பன்னிரெண்டாம் வகுப்பு பி பிரிவு மாணவன் விக்னேஷ். உங்கள் அனைவருக்கும் அவனைப்பற்றி நன்றாகத் தெரியும். யாரையும் மதிக்கமாட்டான். பள்ளிக்கு சரியாக வந்ததே கிடையாது. அவனுக்கு நண்பர்களே கிடையாது. இந்நிலையில் நம் பள்ளியிலிருந்து ஒருவர் அவன்வீட்டிற்குத் திடீர்விஜயம் செய்து அவனைப்பற்றி தெரிந்துகொள்ள விரும்பினார். தன் வீட்டிற்குத் திடிரென அவர் வந்தவுடன் அதிர்ச்சியுற்றானாம். அவரை வாசலிலேயே நிற்கச் செய்து வீட்டைத் துப்புரவு செய்து பத்து நிமிடம் கழித்து உள்ளே அனுமதித்திருக்கிறான். அதன்பிறகுதான் தெரிந்தது அவன் தனியாக அந்த வீட்டில் வசிக்கிறான் என்று. அம்மாவும் அப்பாவும் மருத்துவர்கள். தங்களுக்குள் சண்டையிட்டு மணவிலக்கு பெற்றுவிட்டனர். இருவருடனும் வசிக்க விருப்பமில்லாது தனியாக வாழ்கிறான். அன்புசெலுத்த ஆளில்லாமல்தான் அவன் அப்படியிருக்கிறான் என உணர்ந்த அவர் அடிக்கடி அவன் வீட்டிற்குச் சென்று அவனைத் தன் குடும்பத்தில் ஒருநபர் போல் பாவித்திருக்கிறார். விளைவு கடந்த ஒரு மாதமாக தவறாது பள்ளிக்கு வருகிறான். நன்றாகவும் படிக்கிறான். இதன்மூலம் உங்களனைவ்ருக்கும் தெரிவிக்க விரும்புவது மாணவர்களைக் குறைசொல்லாது அவர்களுக்கு பாடத்தில் விருப்பமில்லாது போவதற்கான காரணத்தை அறிந்து அதைத் தீர்க்க முயற்சியுங்கள். வகுப்பறை உங்கள் வசப்படும்.

    அவர் உரையை முடித்தவுடன் அந்த நபர் யாராக இருக்கக்கூடும் என அனைவரிடமும் சலசலப்பு. அனைவரும் மனதுள் பெருமூச்சு விட்டனர்.  இவனால்தான் நூறு சதவிகித தேர்ச்சி பாதிக்கப்படும் எனப் பயந்தோம். நல்லவேளை… என்றனர்.

    எவ்வளவு நல்லமனம் படைத்தவர்களுடன் நாம் வேலைபார்க்கிறோம் பார்த்தாயா என புஷ்பா கூறியபோது நீ வேண்டுமானாலும் பார். நம் பள்ளி கவுன்சிலர்தான் அவன் வீட்டிற்குப்போயிருப்பாள். பள்ளியே நூறுசதவிகிதத் தேர்ச்சிக்குப்பயந்து இந்தவேலையைச் செய்திருக்கும் எனச் சவால்விட்டேன்.

    சிறிது நாட்களில் நான்வேலையை விட்டுவிட்டு பெங்களூருக்கு வந்துவிட்டேன். அவ்வப்போது புஷ்பாவுடன் மட்டும் உரையாடல் தொடர்ந்தது. வெகுநாட்களுக்குப்பிறகு  பள்ளி அலுவலகத்தில் வேலைபார்க்கும் தனஞ்சைதான் அவன் வீட்டிற்குச்சென்றநபர் என புஷ்பா கூறியபோது என்னால் நம்பவேமுடியவில்லை.

    புத்திசாலிங்களுக்கு மத்தவங்க சொல்லிதான் தெரியணும்னு இல்ல. ‘அறியும், பெரிதாள்பவனே பெரிது னு பழமொழியே இருக்கே. அவங்க தானே நல்லது செய்வாங்க. அப்படித்தான் என் வாழ்க்கையிலயும் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கினார் தனஞ்சை சார். அவர் மகளையே திருமணம் செய்துக்கிட்டு உங்க எல்லாருடைய ஆசிர்வாதத்தைப் பெறுவதில எனக்கு ரொம்ப சந்தோஷம். உரையாற்றிக்கொண்டிருக்கிறான் என் முன்னாள் மாணவன் விக்னேஷ் சி. எ.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 11

    கதை வடிவில் பழமொழி நானூறு – 11

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 23

    அறஞ்செய் பவர்க்கும் அறவுழி நோக்கித்
    திறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம்
    புறஞ்செய்யச் செல்வம் பெருகும்; ‘அறஞ்செய்ய
    அல்லவை நீங்கி விடும்‘.

    பழமொழி – அறஞ்செய்ய அல்லவை நீங்கி விடும்‘.

    பட்டணத்து வேலை. நல்ல சம்பளம். வெளியில் இறங்கினால் கார். சொகுசு வாழ்க்கைதான். ஆனாலும் இந்தப் பட்டிக்காட்டில் கழித்த பத்து நாட்களும் வித்தியாச அனுபவம்  பாசமான பாட்டியின் கோரிக்கையை மறுக்கமுடியாமல் வந்த எனக்கு இந்த பத்து நாட்களில் இவ்வூரின் வாழ்க்கை பழகிவிட்டது.

    காலையில் எழுந்தவுடன்முதல் காட்சி. அனைவரும் வாசலில் சாணம்தெளித்துக் கோலம் போடுவது. அடுத்தது வீட்டின் உள்ளே க்ளீனிங். பின் கிணற்றடிக்குளியல். அல்லது வயக்காட்டுக்குநடந்து சென்று பம்புசெட்டுக்குளியல். மாடு வளர்ப்பவர்கள் காலையில் மாட்டைக் குளத்தில் குளிப்பாட்டி பருத்திக்கொட்டையும் புண்ணாக்கையும் காலை உணவாகக் கொடுத்து மேய்ச்சலுக்குப் பத்திச்செல்கிறார்கள். வீட்டிலுள்ள அரசிகள் காலை சிற்றுண்டிக்குப் பின் கையோடு சமையல் செய்துவிட்டு வாசல்திண்ணை அரட்டைக்கச்சேரி ஆரம்பிக்கிறார்கள். அதிலும் பெரிசா ஒரு டாபிக்கும் கிடையாது. செஞ்சசெய்யப்போற சமையலைப் பத்தியும். அக்கம்பக்கத்து வீட்டு விசேசங்கள், வம்புகள் இவ்வளவுதான்.  அதையும் தாண்டி இளவட்டங்கள் புடவை நகை கம்பேரிசன்.

    இருக்கும் வேத பாடசாலை மாணவர்களுக்கு தெருமுக்கு அரச மரத்திலிருந்து விழும் குச்சிகளைச் சேகரிப்பதுதான் டாஸ்க். அதை ஹோமத்திற்குப் பயன் படுத்துவார்களாம். கடவுள்நம்பிக்கை, சொத்து சேர்ப்பது, சாப்பாடு இதைத்தாண்டி இந்த ஊரில் எதுவும் இல்லையென்றாலும் மக்கள் பரபரப்பில்லாமல் சந்தோசமாகத்தான் வாழ்கிறார்கள். நகரத்தில்மட்டும் நாம் எதைத் தேடி ஓடுகிறோம். என்ன சாதித்து விட்டோம். இன்னும் மன அமைதியை விலை கொடுத்து வாங்கமுடியவில்லையே. அங்குள்ள மனநலமருத்துவர்கள் அது உன்னிடத்திலேயே உள்ளது வெளியில் தேடாதே என்று சொல்வதற்கு நான்கு முறை அழைத்து புத்தி சொல்லி பணம் வாங்குகிறார்கள். வெக்கமில்லாமல் நாமும்கொடுக்கிறோம்.

    ஏதோ எண்ண ஓட்டம். சட்டென்று தடைபட்டது பாட்டியின் வருகையால். இந்தாடா இத வாங்கி அந்தப் பிச்சக்காரனோட பாத்திரத்துல கொட்டு.

    மறுக்காமல் கையில் வாங்கி தண்ணீரில் நொதித்துப் போயிருந்த பழையதை பிச்சைக்காரன் நீட்டிய அதுங்கிய அலுமினியப் பாத்திரத்தில் கொட்டினேன். எல்லார் வீட்டுச் சாப்பாடும் கலந்து அவன் பாத்திரத்திலிருந்து ஒரு அதீத நெடி.

    பாட்டி இட்லி சாப்பிட அழைத்தும் என்னமோ என் மனம் ஒட்டவில்லை. பாவம் இந்தப் பிச்சைக்காரன். இவன் யாரோ என்னமோ? யோசித்துக்கொண்டே அவனையே பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவன் பாழடைந்த எதிர் வீட்டுத் திண்ணையில் அமர்கிறான். பக்கத்தில் உடல் மெலிந்த ஒரு கருப்பு நாய் அவனையே பார்த்துக்கொண்டு நிற்கிறது.

    வந்துட்டுயா. உன்னயத்தான் தேடினேன். இந்தா சாப்புடு. அவன் நாய்க்கு சாப்பாடு வைத்துவிட்டு தான் சாப்பிட ஆரம்பிக்கிறான்.

    என்னடா. எவ்வளவு நேரம் கூப்பிடறேன். இட்லி ஆறிப்போகுது. இங்க என்ன வாயப் பொளந்துட்டு பாத்துட்டிருக்க.

    ஓ அவனப் பாக்கறயா. அவனால முடிஞ்சது அந்த நாய்க்கு சாப்பாடு வைக்கறது. அந்த தருமத்துக்காகவாவது கடவுள் அவன் பசியப்போக்கட்டும். போகிறபோக்கில் சொல்லிக்கொண்டே பாட்டி உள்ளே போய்விட்டாள்.

    எவ்வளவு பெரிய தத்துவம்.   ‘அறம் செய்யப் பாவம் நீங்கும்‘ ங்கறது இதுதானோ. பட்டணத்துல சேமிக்கறதயே குறியா வச்சு ஓடிஓடி பணம் சம்பாதிக்கறாங்க. இங்க பாவத்தத் தொலைக்கறதுலயே குறியா தானம் செய்யறாங்க. நினைத்துக்கொண்டே எழுந்து நடந்தேன்.

    பாடல் 24

    தொடித்தோள் மடவார் மருமந்தன் ஆகம்
    மடுத்(து), அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப,
    நெறியல்ல சொல்லல்நீ, பாண! – அறிதுயில்
    யார்க்கும் எழுப்பல் அரிது.

    பழமொழி -‘அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது

    கிரிஷாங் குப்தா… பெயர் வாசிக்கப்பட்டவுடன் மனதுள் பெரும் எதிர்பார்ப்பு. அவன் வந்திருக்கக் கூடாது. ஒருநொடிக்குள் பல எண்ணங்கள். மும்பையில் தனியார் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியையான நான் காலை என் வகுப்பின் வருகைப்பதிவேட்டிலிருந்து பெயர்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

    அவன் வந்தாலென்ன வராவிட்டாலென்ன என நீங்கள் யோசிக்கக்கூடும்.

    அந்த ஐந்தாம்வகுப்பு சி பிரிவின் ஆசிரியையான எனக்குமட்டும்தானே தெரியும் அவன் படுத்தும் பாடு. ஒருநாள் அவன் வரவில்லையென்றால் எனக்கு சிறிது ஓய்வு கிடைக்கும்.

    என் எதிர்பார்ப்பு வீண். அவன் வந்திருக்கிறான். முதல் பாட வகுப்பிற்கான அழைப்புமணி ஒலித்துவிட்டது. நான் ஆறாம் வகுப்பிற்குப் பாடம் எடுக்கச் செல்லவேண்டும். தினப்படி அறிவுரைகளுடன் கூடுதலாக கிரிஷாங் என அழைத்து இன்று எந்த ஆசிரியையிடமிருந்தும் புகார் வராவிட்டால் கடைசி பாட வகுப்பில் உனக்கு சாக்லெட் கிடைக்கும் என ஊக்குவித்தேன்.

    சொல்லிமுடிக்குமுன்பே பக்கத்து சீட்டில் இருந்த கார்த்தியாயினியைப் பென்சிலால் குத்திவிட்டான். வீர் என அலறுகிறாள்.

    முகத்தைப் பாவமாக வைத்துக்கொண்டு சாரி மேடம். பென்சில் ஷார்ப்னஸ் செக் பண்ணினேன்.  அவ்வளவுதான் என்கிறான்.

    இன்று அவன் பெற்றோர் அழைக்கப் பட்டிருக்கிறார்கள். ஸ்கூல் கவுன்சிலருடன் அமர்ந்து ஒரு முடிவு எடுத்துவிட வேண்டும்.

    அவனைப்பற்றி மற்ற ஆசிரியர்கள் புகார் அளித்த துண்டு சீட்டுக்களை எடுத்துக்கொண்டு கவுன்சிலர் அறைக்குச் செல்கிறேன்.

    கவுன்சிலர் ரமா பெற்றோருக்கு விளக்கத்தொடங்கினாள். உங்கள் மகன் எந்த ஆசிரியரின் பேச்சையும் கேட்பதேயில்லை. ஓரிடத்தில் உட்காருவதேயில்லை. வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது பென்சில் சுண்டி விளையாடுகிறான். ரப்பரில் பென்சிலின் சீவிய முனையைச் சொருகி பம்பரம்விடுகிறான். எல்லாப் பாட வேளைகளிலும் தாகம் அல்லது டாய்லெட் எனக்காரணம் காட்டி வெளியே சுற்றி நேரம் போக்குகிறான். உள்ளே வேறு மாணவர்கள் இருக்கும்போது கழிவறைக் கதவுகளை வெளியிலிருந்து தாள் போட்டுவிட்டு வந்துவிடுகிறான். என நீண்டுகொண்டே போனது.

    ரமா அவன் அப்பாவைப்பார்த்துத் தொடர்ந்தாள்.  நீங்கள் ஒரு மனநல மருத்துவர். உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. அவனைப்பார்த்தாலே ஆசிரியர்களும் மாணவர்களும் தெரித்து ஓடுகிறார்கள். இப்போ அவன் சின்னப்பையன். போகப்போக இது பெரிய பிரச்சினையாயிடும் உங்களுக்கு. அவனை அமரச்செய்து பலமுறை அறிவுரை சொல்லியிருக்கேன். நான் சொல்ல ஆரம்பிக்கறதுக்குள்ள அவனே எது சரி எது தப்புனு சொல்லிடுவான். எனக்கென்னமோ தான் செய்யறது தப்புனு தெரிஞ்சுக்கிட்டே திரும்பத்திரும்ப அதே தப்ப அவன் பண்றான். தூங்கறவனதான் எழுப்பமுடியும். தூங்கறாமாதிரி நடிக்கறவன எழுப்பறது ரொம்ப கஷ்டம். எங்களப் பொறுத்தவர அவன் தூங்கறாமாதிரி நடிக்கறவன். அதனாலதான் உங்களைக் கூப்பிட்டோம். நீங்களூம் கொஞ்சம் வீட்ல கண்டிப்பா நடந்துக்கணும்.

    கவுன்சிலர் ரமா பேசப்பேச தமிழச்சியான எனக்கு அறிதுயில் யார்க்கும் எழுப்பல் அரிது. பழமொழி நினைவிற்கு வருகிறது. இப் பழமொழி பற்றி வெளியில் சொல்ல இது தருணம் அல்ல. இருப்பினும் இதற்கு விளக்கம் போல் என் வகுப்பு மாணவன் கிரிஷாங் நடந்து கொள்வது ஆச்சரியம்தான்.  நான் அங்கு அமர்ந்திருந்தாலும் என் மனம் பின்னோக்கிச் சென்று பள்ளிப் பருவத்தில் கற்ற பழமொழிகளை அசைபோடுகிறது.

    சுதாரித்துக்கொண்டு அவர்கள் பேசுவதில் மீண்டும் கவனம் செலுத்த முயல்கிறேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 10

    கதை வடிவில் பழமொழி நானூறு – 10

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 21

    இணரோங்கி வந்தாரை என்னுற்றக் கண்ணும்;
    உணர்பவர் அஃதே உணர்ப; – உணர்வார்க்கு
    அணிமலை நாட! அளறாடிக் கண்ணும்
    மணிமணி யாகி விடும்‘.

    அளறாடிக் கண்ணும் மணிமணியாகி விடும்

    சங்கீதவக் கல்லூரி விடுதி வரை கொண்டு விட்டாச்சு. இன்னிக்கு சாயங்காலம் ரயிலில கிளம்பிற வேண்டியதுதான். நாமக்கல்லிலிருந்து பேசும் அப்பாவின் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயன்றுகொண்டிருந்தேன். அவர் விட்டபாடில்லை.

    சாப்பாடு எல்லாம் சரியா இருக்கா இல்ல வெளியில ஏதாவதுநல்ல சாப்பாடு கிடைக்குதா இதையெல்லாம் பாத்து ரெண்டு நாள் தங்கி மெதுவா வரதுதானே என்ன அவசரம்? தொடர்ந்து கொண்டிருந்தார்.

    ஆமாம் இவருக்கென்ன? இவர் பாட்டன் வீட்டு நிறுவனத்திலயா நான் வேலை பாக்கறேன். ஏற்கனவே நாலு நாள் லீவு எடுத்தாச்சு. இனிமேஎடுத்தா சீட்டு கிழிஞ்சுரும். இதையெல்லாம் சொன்னா அவருக்குப் புரியப் போறதில்லை.

    கவலைப்படாதீங்கப்பா. காசியில எல்லாரும் நல்லாத்தான் பழகுறாங்க. ஹாஸ்டல் சாப்பாடு ஒத்து வரலைன்னா பக்கத்துல ஒரு அம்மா எடுப்பு சாப்பாடு கொண்டு வந்து கொடுக்கறாங்க. உடனே மெனு கேக்க ஆரம்பிச்சிடாதீங்க. எனக்கு நேரம் ஆகுது. எல்லாம் சங்கீதா பாத்துப்பா அப்புறம் சென்னைக்கு வந்தப்புறம் விவரமா போன்ல சொல்றேன். எனக்கு நன்றாகத் தெரியும் அவருக்கு மனம் ஒப்பாது என்று.

    அவரின் செல்லப் பேத்தியில்லயா. அம்மாவும் அப்பாவும் இவளின் அட்மிஷனுக்கு வருவதாகத்தான் இருந்தார்கள். சங்கீதாதான் கண்டிப்பாகச் சொல்லிவிட்டாள். உங்க காசி யாத்திரையெல்லாம் அப்புறம் வச்சிக்கோங்க. நான் முதல்ல விஸ்வஹிந்து பல்கலைக் கழகத்துல சேந்து படிக்க ஆரம்பிக்கறேன். மெதுமெதுவா ஒவ்வொருத்தரா வந்துபாக்கலாம். இப்போ அப்பா மட்டும் வந்தாப் போதும். அவளே முடித்துவிட்டாள்.

    அவசரமாகச் சாமான்களை எடுத்து வைத்துக்கொண்டு சங்கீதாவிடம் விடைபெற்று சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்தேன். அப்பப்பா எவ்வளவு லாவகமாக ஓட்டுகிறான். இருக்கிற எல்லா சந்துபொந்துகளிலும் நுழைந்துவெளியே வந்து ஒருவழியா ரயில்வே ஸ்டேஷனை அடைந்தாச்சு. எங்க பாத்தாலும்கூட்டம். மக்களுக்கு கடவுள் பக்தி இவ்வளவு முத்திப்போச்சா. அல்லது வாழ்க்கையில் பயம் அதிகரித்ததால் இறையைத் தேடி ஓடுகிறார்களா தெரியவில்லை.

    எப்படியோ காசியிலிருந்து வந்து ஒருவாரம் ஓடிவிட்டது. நேரம் கிடைக்காததால் அப்பாவிடம் பேசவில்லை. சேர்த்து வைத்து சங்கீதா அனுப்பின அத்தனை போட்டோவையும் வாட்ஸப்பில் பகிர்ந்து பேசிவிடவேண்டும் தீர்மானித்துக்கொண்டே படுத்திருந்தேன். கைபேசி மணி ஒலிக்கிறது. சங்கீதா கூப்பிடுகிறாளோ.

    என்ன அதிசயம். அப்பாதான் கூப்பிடுகிறார். ராத்திரி ஒன்பது மணிக்கு ஏன் கூப்பிடுகிறார். மனசில் ஒரு பதட்டம்.

    என்னடா அதுக்குள்ள தூங்கிட்டயா. எவ்வளவு ரிங் அடிச்சேன். சரி விசயத்துக்கு வரேன். சங்கீதா சொன்னாளா என் நண்பனைப் பத்தி.

    இல்லையே. என்ன சொல்ல வரீங்கனு புரியல. நான் முடிப்பதற்குள் சங்கீதா ஒரு போட்டோ அனுப்பினாளே. ஒரு தமிழ் ஆண்ட்டி கிட்ட ராத்திரி சாப்பாடு வாங்கிச் சாப்பிடறேன்னு.  அவங்க வீட்டு சோபால அந்தம்மா கூட உக்காந்த மாதிரி.  அத நல்லாப் பாரு. அவங்க பின்னால சுவத்துல ஒரு போட்டோ மாட்டிருக்குல்ல. அவருதான் நம்ம தியாகு. என்கூட சுதந்திரப்போராட்டத்துல கலந்துக்கிட்டவரு. அப்ப நாங்க சின்னப் பசங்களா இருந்தாலும் இளைஞர் அணியில இருந்தோம். ஒண்ணா சிறைச்சாலையும் போனோம். சுதந்திரத்துக்குப் பிறகும்நாங்க பல வருசங்கள் தொடர்புலயே இருந்தோம்.  என் கல்யாணத்துக்குக் கூட அவன் வந்தான். அப்புறம் பிழைப்புக்காக வடக்க போனான்.

    இப்பதான் தெரிஞ்சது உலகத்த விட்டே போயிட்டான்னு. அப்பாவை இடை மறித்து அப்பா நீங்கபாட்டு ஒரு முடிவுக்கு வராதீங்க. வாட்ஸப் போட்டோவ நானும் பாத்தேன். அவ்ளோ கிளியரா இல்லயே.

    திடீர்னு இந்தமாதிரி விசயத்தயெல்லாம் கேக்கக் கூடாது. ஒருமாசம் போகட்டும் நான் சங்கீதாவ உட்டு அவங்க யாருனு கேட்டுச் சொல்லச் சொல்றேன்.

    அட போடா. நான் நேரா சங்கீதாவுக்கு போனப்போட்டு பேசியாச்சு. அவளும் அந்தம்மா வீட்டுக்குத் திரும்பப் போயி நேத்திக்கு என்கிட்ட பேசவச்சா. நான் நினைச்சது சரிதான். இப்போ தியாகி பென்சன் வச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்களாம். குழந்தைகுட்டி இல்லைபோல. நம்ம சங்கீதாவப் பத்தி கவலைப்படாதீங்கனு சொன்னாங்க. அடுத்தமுறை சங்கீதா வரும்போது அவங்களக் கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருக்கேன்.

    அப்பா பேசப்பேச என் மனம் வெட்கியது. அளறாடிக் கண்ணும் மணிமணி யாகி விடும்‘. அப்டிங்கற பழமொழி ஞாபகத்துக்கு வருது. சேத்துல கிடந்தாலும் மணியோட தன்மை தெரிஞ்சவங்க அத மணியாத்தான் பாப்பாங்களாம். அதுபோலத்தான் உயர்ந்தவர்களோட கண்ணுக்குத்தான் உயர்ந்தவங்க தெரியுவாங்க.

    அப்பா ஒரு சுதந்திரப் போராட்டத்தியாகி. அதனால தான் அவரால இன்னொரு தியாகிய அடையாளம் காண முடிஞ்சது. என்னய மாதிரி பஞ்சப் பொழப்பு பொழைக்கிறவங்க கண்ணுக்கு அவங்க சாப்பாடு குடுக்கற ஒரு சாதாரண அம்மாவாத்தான் தெரிஞ்சாங்க.

    பழமொழி -22

    வெள்ளம் பகையெனினும், வேறிடத்தார் செய்வதென்?
    கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழிநட்பு
    புள்ளொலிப் பொய்கைப் புனலூர! அஃதன்றோ,
    அள்ளில்லத்(து) உண்ட தனிசு‘.

    அள்ளில்லத்(து) உண்ட தனிசு

    ரொம்பநாள் கழிச்சு இன்னிக்குதான் ரெண்டுபேரும் வாக்கிங் போரோம். அப்டி என்ன மலையப்பொரட்டற யோசன என் பத்து வருடத் தோழி பவானி கேட்கிறாள்.

    இல்ல. இப்போ கொஞ்ச நேரம் முன்ன என்னோட ஓரகத்திகிட்டேருந்து போன் வந்தது. அவ எப்போதும்போலத்தான் பேசினா. அதத்தான் யோசிச்சுக்கிட்டே வரேன்.

    என்ன ஏதாச்சும் பிரச்சினையா? இது பவானி.

    அதெல்லாம் ஒண்ணுமில்ல. அவ ஒருத்திதான் என்கிட்ட பேசிக்கிட்டிருக்கா. அப்பப்ப நடக்கற விசேசம் தொடங்கி எல்லாம் அவ சொல்லிதான் நான் தெரிஞ்சுக்குறேன்.

    அப்டி இப்ப அவ என்னதான் சொன்னா. கொஞ்சம் சொல்லேன். நானும் தெரிஞ்சுக்கறேன். ஆர்வம் காட்டினாள் பவானி.

    போன வாரம் எங்க மாமியாரோட ஒண்ணுவிட்ட நாத்தனார் பொண்ணுக்குக் கல்யாணமாம். எல்லாரும் ஒண்ணா கும்பகோணம் போயிட்டுவந்தாங்களாம். போற வர வழி முழுக்க என்னயப் பத்திதான் என் நாத்தனாருங்க பேசிக்கிட்டே வந்தாங்களாம். உன்னயப் பத்தி எப்பவுமே அவுங்களுக்கு தப்பு அபிப்பிராயம்தான். உனக்கு சமைக்கவே தெரியல. ருசியா சாப்பாடு போடாததால அவங்க தம்பி கஷ்டப்படறானாமா. அடிக்கடி அக்காக்களுக்கு போன் போட்டு என்ன செய்ய? என் தலையெழுத்துனு நொந்துக்கறாராமா.

    அப்படியா ஆச்சரியமா இருக்கே. நீ பாம்பே குடி வந்தே பத்து வருசம் ஆச்சே. ஒருதடவ கூடவா உன் புருசன் உன்கிட்ட நேர்ல குறை சொல்லல.

    இல்லயே. ஒருதடவ கூட சொன்னதில்ல. என் ஓரகத்தியும் ஒவ்வொரு போன் கால்லயும் என் சாப்பாட்டப் பத்தி மாமியார் குறை சொன்னதாவும், நாத்தனார்கிட்ட சொன்னதாவும் சொல்லறா. நான் அத விசாரிக்கப் போனா இவர் தேவையில்ல உங்க டைம்பாஸ் வம்புல எல்லாம் என்னய மாட்டி உடாதனு ஒத்தவரியில பதில் சொல்லிடுவாரு.

    நானும் முயற்சியெடுத்து ஒருதடவை நாத்தனாருக்கு போன் போட்டு பேச ட்ரை பண்ணினேன். அவங்க என் தம்பி இருக்கும்போது பேசு. நீ மாத்தி மாத்தி பேசற ஆளு. எங்க குடும்பத்து மேல உனக்கு எந்த அக்கரையும் இல்ல. உன்கிட்ட பேசறதுக்கு ஒண்ணுமில்லனு சொல்லிட்டாங்க. அதான் ஆச்சரியமா இருக்கு. இதுவரை என்னோட மாமியார்வீட்ல யார்கிட்டயும் நான் ரெண்டு நிமிசத்துக்கு மேல பேசினது கிடையாது. யாரும் எங்க வீட்டுக்கு வந்து தங்கி இருந்ததும் கிடையாது. அவங்க யாரும் அதிகமா பேச மாட்டாங்க அதனால எனக்கும் பேச டாபிக் இல்லனு நான் விட்டது இப்ப எப்படி இவ்வளவு வெறுப்பா ஆச்சு.

    ஓ. இதுதான் விசயமா. உன்கிட்ட அடிக்கடி போன்ல பேசுதே ஓரகத்தி. அதோட டைப் எப்படி?

    அதுவும் எனக்குத் தெரியாது. நல்லா பேசும். அட்லீஸ்ட் பேச ஒரு ஆளாவது இருக்கேனு நானும் எல்லா விசயத்தையும் சொல்லிக்கிட்டிருக்கேன்.

    அதான் தப்பு. அந்த அம்மா உன்கிட்டேந்து எல்லா விசயத்தையும் கறந்து உன்னயப்பத்தி எல்லா சொந்தக்காரங்ககிட்டயும் தப்பான அபிப்பிராயத்த உண்டுபண்ணிருச்சு.

    அவுங்களும் அவ அடிக்கடி உன்கிட்ட பேசறதால உன்னயப்பத்தி அவளுக்கு நல்லாத் தெரியும்னு நெனச்சிருப்பாங்க.

    மொதல்ல அந்தம்மாட்ட பேசறத நிறுத்து. உன் ஹஸ்பெண்ட் சொல்றமாரி அது நல்லா டைம் பாஸ் பண்ணிக்கிட்டிருக்கு. எனக்கென்னவோ உன் ஓரகத்தி மேலதான் மொத்த சந்தேகமும். எல்லாரையும் தனித்தனியா நம்ப வச்சு குடும்பத்துக்குள்ள சண்டமூட்டி உடுது. இதத்தான் அள்ளில்லத்து உண்ட தனிசுனு பழமொழி நானூறு சொல்லுது. இதோட அர்த்தம் இந்த மாதிரி போலித்தனமான ஆட்களோட நட்பு ஒருவீட்டுக்குள்ளயே கடன்பட்டது போல பெரிய வேதனையைக் குடுக்கும்ங்கறதுதான்.

    பவானி முடித்தவுடன் நான் யோசிக்க ஆரம்பித்தேன். அடுத்து என்ன செய்ய வேண்டுமென்று.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 9

    கதை வடிவில் பழமொழி நானூறு – 9

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல்—19

    தெரிவுடையா ரோடு தெரிந்துணர்ந்து நின்றார்
    பரியார் இடைப்புகார் பண்பறிவார், மன்ற;
    விரியா இமிழ்திரை வீங்குநீர்ச் சேர்ப்ப!
    அரிவாரைக் காட்டார் நரி‘.

    பழமொழி அரிவாரைக் காட்டார் நரி

    கவிதா எனும் பெயர்கொண்ட டீச்சருக்கு மனசு சரியில்லையென இந்த ஸ்டாப் ரூமே பேசிக்கொள்கிறதே. அப்டியென்ன பிரச்சினையாக இருக்கும். ஒன்றிரண்டாகக் காதில் விழுந்தவைகளை வைத்து யூகித்துக்கொண்டே உட்கார்ந்திருந்தேன். ஏதோ மாணவர்களால பிரச்சினைனு மட்டும் புரியுது.

    என்னவோ இன்னிக்கு நோட்புக் திருத்த மனசே வர மாட்டேங்குது. முப்பது நாப்பது நோட்டுக்களைக் கொண்டுவந்து மேசைமேல் வைத்துவிட்டு என் முன் அமர்கிறாள். ஒரு ஆசிரியை.

    ஆமாம் நீங்க இன்னிக்கு புதுசா சேர வந்திருக்கீங்க இல்ல. மிஸஸ் விமலா டிஜி.டி. ரைட்.

    ஓ இவர்களும் என் டிபார்ட்மெண்ட் போல. மனதிற்குள் நினைத்துக்கொண்டே ஆமாம். இன்னும் தலைமை ஆசிரியரப் பாக்கல என ஆங்கிலத்தில் மொழிந்தேன். தொடர்ந்து பேசுவதற்குள். வாங்க மேடம். உங்கள தலைமை ஆசிரியர் கூப்பிடறார். பியூன் அழைக்க அவரைப் பின் தொடர்ந்தேன்.

    என்ன பேச வேண்டும் என் மனதுக்குள் தீர்மானித்துக்கொண்டாலும் ஒரு சிறு உதறல். ஒருவேளை இந்தப் பசங்களால தலைமை ஆசிரியர் எரிச்சலா இருப்பாரோ. நாம ரொம்ப கவனமாப் பேசணும். ஆங்கில ஆசிரியையா சேரப்போரதால ஆங்கிலத்தில் சரளமா பேசி அவரோட நன்மதிப்பைப் பெற்றுடணும்.

    யோசித்துக்கொண்டே பியூனைப் பின் தொடர்ந்ததில் சட்டென அவர் அறை அடைந்தது போல் தோன்றியது.

    எதிர்பார்த்ததுக்கு மாறாக மிக அமைதியான முகம். லேசான திருநீற்றுப்பட்டை முகத்தில்.

    ஓ அவரின் அறை வாசலில் நிற்கும் இந்த மூணு பேரும்தான் கவிதா டீச்சரை தொந்தரவு செஞ்சவங்களா. ஒருவேளை இந்தப் பசங்க இன்னும் இவர்கிட்ட பேசவேயில்லையோ.

    யோசித்துக்கொண்டு இருக்கும்போதே. வாங்க மேடம் உக்காருங்க. இந்தப் பசங்கரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்காங்க. இவங்ககிட்ட பேசிட்டு உங்களக் கேக்கறேன்.

    அவர் அறையைச் சுற்றிலும் நோட்டம் விட்டேன். திருவள்ளுவர் ஓவியம் அவரின் நாற்காலிக்குப் பின்னால். தமிழ்ப் பற்று மிக்கவர் போல. நேர்த்தியாக அடுக்கப்பட்ட தமிழ் இலக்கிய நூல்கள் அவரின் இடப்புறமிருந்த மர அலமாரியின் கண்ணாடி வழியே தெரிந்தது.

    வாங்கப்பா. மூன்று மாணவர்களையும் உள்ளே அழைக்கிறார். என்னப்பா இதுல ஷ்யாம் யாரு.

     சார்.. குனிந்த தலையுடன் கையை முன்னே உயர்த்துகிறான் ஒரு மாணவன்.

    சரி. விமல் ….துஷ்யந்த்.

    நல்லதுப்பா. இப்ப சொல்லுங்க. என்ன நடந்துதுன்னு.

    சார் நாங்க வேணுமின்னே செய்யல. அந்த அண்ணன் சொன்னாரு. தெனமும் ஒரு சைக்கிள லவுட்டித் தந்தேன்னா நான் உங்க மூணு பேருக்கும் சினிமா டிக்கெட் எடுத்துக் குடுக்கறேன்னு. ஸ்கூல் அசெம்பிளி முடிஞ்சவொடனே சைக்கிள மெதுவா எடுத்துட்டு வந்து பின் பக்கத்துல ஒடஞ்சிருக்கிற மதில் சுவத்து வழியா வெளிய போட்டிரு மத்ததநான் பாத்துக்கறேன்னு. செய்யறதுக்கு ரொம்ப த்ரில்லிங்க இருந்ததால தப்புனு தோணல.

    ரெண்டாவது நாள் அப்டி போடும்போது ரோந்து வந்த போலீஸ் எங்களப் புடிச்சிட்டாங்க. அந்த அண்ணன் ஓடிப்போயிட்டாரு. அவரு யாருனு கூட எங்களுக்குத் தெரியாது. இது உண்ம சார். துஷ்யந்த்முடித்தவுடன்

    மூணு பசங்களூம் குமுறிக் குமுறி அழுகிறார்கள்.

    என்ன ஆச்சரியம். அவர் ஏதோ பெரிசா பனிஷ்மண்ட் குடுக்கப்போறார்னு நெனச்ச எனக்கு.

    எப்போ நீங்க கண்ணீர் உட்டு வருத்தப்படறீங்களோ அப்பவே தப்ப உணர்ந்துட்டீங்கனு அர்த்தம்.  கவிதா டீச்சரும் உங்களப் பத்தி நல்லவிதமாத்தான் சொன்னாங்க. இனிமே நான் சொல்லித்தான் நீங்க தெரிஞ்சுக்கணும்னு இல்ல. இருந்தாலும்

    நான் இப்ப சொல்லப்போற பழமொழிய அதோட அர்த்தத்தோட ஐந்து முறை எழுதிட்டு வாங்க. உங்க வகுப்புலஇருக்கற எல்லா மாணவர்களுக்கும் அதச் சொல்லிக்குடுங்க. பழமொழி இதுதான். ‘அரிவாரைக் காட்டார் நரி’

    நல்லபடியா நெல்ல அறுவடை செய்யறவங்க முன்ன அவங்க வேல கெடறமாதிரி யாரும் கவனத்த திசைதிருப்ப மாட்டாங்க.  அதுமாதிரிதான் படிக்கிற பசங்க நீங்க நல்லவங்க கூட்டத்தோடதான் சேரணும். இந்த மாதிரி மனசக் கெடுக்கற கூட்டத்துக்கூட சேர நெனைக்கவே கூடாது. இந்த விசயத்த இத்தோட உட்ருங்க. படிப்புல மட்டும் கவனம் செலுத்துங்க. புரிஞ்சுதா.

    அதன்பிறகு என்னிடம் கேள்விகள் தொடர்கின்றன. ஒப்புக்கு பதிலளித்துக் கொண்டிருந்தாலும் மனம் முழுக்க அவர் அந்தப் பசங்ககிட்ட காட்டின பரிவு நிறைந்து இருந்தது. கண்டிப்பா இந்தப் பள்ளியில பல வருசம் வேலை பார்க்கணும். தீர்மானித்தேன்.

    பாடல்- 20

    முழவொலி முந்நீர் முழுதுடன் ஆண்டார்,
    விழவூரில் கூத்தேபோல் வீழ்ந்தவிதல் கண்டும்,
    இழவென்று ஒருபொருள் ஈயாதான் செல்வம்,
    அழகொடு கண்ணின் இழவு.

    பழமொழி – அழகொடு கண்ணின் இழவு.

    நான் இங்குமங்கும் பறந்துகொண்டிருக்கிறேன். வயிற்றுப்பசி காதை அடைக்கிறது. என்ன செய்ய. எங்கயும் சாப்பாடு கெடைக்கல. கொஞ்ச நேரம் பிரயாணம் பண்ணினதுல ஊர் வந்து சேந்தது கூடத் தெரியல. இனிமே எனக்கு நல்லா வழி தெரியும். வீட்டுக்குப் போய் நல்லா சாப்பிட்டுட்டு  வேப்பமரக் காத்துல ஒரு தூக்கம் போட்டா அசதி போயிடும்.

    பர்க்கர் போடும் வேலு கடையைத் தாண்டறதுக்குள்ள வயிறு குய்யோ முறையோனு கத்துது. அவங்கிட்ட வாய்விட்டுக் கேக்க முடியாது. இல்லனு விரட்டிட்டா அவமானமாப் போயிடும். கொஞ்ச தூரம் தானே வீட்டுக்குப் போயிடலாம்.

    பசிய அடக்கிப் பறந்து பறந்து ஒரு வழியா வீட்டுக்கு வந்தாச்சு. பையன்கிட்ட சாப்பாடு கேக்கறதுல என்ன இருக்கு, இல்லன்னா சொல்லப்போறான். சத்தம் போட்டுக் கேட்டதுதான் மிச்சம். தொண்ட வறண்டு போச்சு.

    மருமக யார்கிட்டயோ பேசிட்டிருக்கா. அவ தோழி வந்திருக்கா போல. மேசை மேல சமோசா, டீ யெல்லாம் வச்சிருக்கு. என் பசிக்கு ஒருவாய் தர மாட்டேங்குறா.

    மயக்கமாய் அமர்ந்திருந்தேன். லேசான குரலில் அவளின் பேச்சுச் சத்தம்.

    எங்களுக்கு ஒரு பிரச்சினை இல்ல. பாத்தையில்ல. வீட்ட வசதியா இடிச்சுக் கட்டிக்கிட்டோம். பையனையும் ஊட்டி போர்டிங் ஸ்கூல்ல போட்டாச்சு. வெளியில இறங்கினா கார்தான். இப்போ டிரைவர வரச்சொல்லியிருக்கேன். வந்தவொடனே கெளம்பலாம். ஐந்து மணி ஷோவுக்குதான் டிக்கெட் வாங்கியிருக்கேன்.

    அப்பறம் நீ சொல்லு. உங்க வீட்ல எப்டி. உனக்கு நேரம் கெடைக்குமா. அவளின் தோழி தொடர்கிறாள்.

    உனக்கென்னப்பா நீ புண்ணியம் செஞ்சவ. நல்ல மாமனார் சொத்து சுகத்த உட்டுட்டுப் போய்ச் சேந்துட்டார். அனுபவிக்கிற. என் மாமனார் என்கூடவே இருக்கறதால வயசான அவர உட்டுட்டு நெனச்ச நேரத்துக்கு என்னால வெளியில வர முடியாது. இப்ப நீ வற்புறுத்திக் கூப்பிட்டதால வந்தேன் அவ்வளவுதான்.

    சரி. நீ டிரஸ் மாத்திட்டுவா. ரொம்ப நேரமா பால்கனியில காக்கா கத்திக்கிட்டே இருக்கே. தினமும் சாப்பாடு போட்டுப் பழக்கியிருக்கியா.

    எங்க மாமனார் ஒரு பணக்காரக் கஞ்சன். கோடிகோடியா சொத்து இருந்தாலும் உசிர் இருக்கற வர எச்சிக்கையால காக்கா விரட்ட மாட்டாரு. சிரித்துவிட்டு டிரஸ் மாத்தச் சென்றுவிட்டாள் என் மருமகள்.

    உங்க மாமனார் ‘அழகொடு கண்ணின் இழவு’.ங்கற பழமொழிக்கு எடுத்துக்காட்டாயில்ல வாழ்ந்திருக்கிறார். அம்சமா அழகா இருக்கற ஒரு பெண் பார்வையற்று இருந்தா அந்த அழகால பெருமையில்லங்கற மாதிரி அவரோட பணத்தால அவருக்கு ஒரு பிரயோசனமும் இருந்திருக்காது..

    உண்மதான். இருந்தவர எதையும் அனுபவிக்கல. இப்ப எந்த உலகத்துல போய் சொத்து சேக்கறதப் பத்தி பேசிக்கிட்டிருக்காறோ சிரித்துக் கொண்டிருக்கிறாள் என் மருமகள்.

    எனக்கு இப்டி ஒரு நிலைமை வரும்னு நான் நெனச்சிக்கூட பாக்கல சாப்பாடு கிடைக்கும் எனும் நம்பிக்கையிழந்த நான் என் வீட்டு வேப்பமரத்தை நோக்கி சிறகுவிரித்துப் பறக்கிறேன். வேப்பம்பழமாவது கிடைக்குமா எனும் ஏக்கத்தோடு.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 8

    கதை வடிவில் பழமொழி நானூறு – 8

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 17

    உழையிருந்து நுண்ணிய கூறிக் கருமம்
    புரையிருந்த வாறறியான் புக்கான் விளிதல்,
    நிரையிருந்து மாண்ட அரங்கினுள் வட்டு,
    கரையிருந் தார்க்கெளிய போர்‘.

    அரங்கினுள் வட்டு, கரையிருந் தார்க்கெளிய போர்

    அமெரிக்காலேந்து என் பேத்தி வரப்போறா. என்ன அவ வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறா. பாட்டி தன் அனைத்து பொக்கை வாய்த் தோழிகளிடமும் சொல்லியாயிற்று.

    நாலு நாட்களாக பாட்டியோட அளப்பற தாங்க முடியல. அவ வந்தா என்னவெல்லாம் பண்ணிக்குடுக்கணும்னு லிஸ்ட் வேற.

    ஒருவழியாக வந்து சேர்ந்த பேத்தி பாட்டியை விரட்ட ஆரம்பித்தாள்.

    இவ்ளோ நாள் என்ன செஞ்சிட்டிருந்தீங்க பாட்டி.

    இப்பவாவது சரியாப் பாத்து புடவை சட்டை எல்லாம் எடுத்து வச்சுக்கோங்க. அங்க வாங்கவும் முடியாது. சட்டை தைக்கறதும் கஷ்டம். உங்களோட முக்கிய தேவைகளைச் சொல்லுங்க. பல்செட்டு, மூக்குக் கண்ணாடி. கோபால் பல்பொடி, சந்திரிகா சோப்பு, தலை தோட்டிக்கறதுக்கு குற்றாலத் துண்டு லிஸ்ட் நீண்டுகொண்டே போனது.  அதோடமறக்காம என்னோட முறுக்குக்குத் தேவையான உளுந்துமாவுப் பொட்டலம் இருக்கு. அத எடுத்துக்கணும். அரிசி உங்க ஊர்ல கிடைக்குமில்ல.

    இந்தப் பாட்டியத் திருத்த முடியாது பேத்தி சௌம்யா தலையில் அடித்துக்கொண்டாள். உள்ளூரில் அவள் பாட்டிக்கு முறுக்கு ஸ்பெஷலிஸ்ட் னு பட்டம் வேற. இப்ப சொன்னா கேக்கவா போறாங்க. வேற வழியில்லாம எடுத்துவைக்க வேண்டியதுதான். இருந்தாலும் சொல்லிப்பாக்கறேன். பாட்டி அமெரிக்காவுல யாரும் முறுக்க விரும்ப மாட்டாங்க. பல்லு ஒடைஞ்சுபோயிடும்னு பயப்படுவாங்க. யாருக்கு செஞ்சுகுடுக்கப்போறீங்க. இருக்கற பத்து முறுக்கு எனக்குப் போதும். ரெண்டு மாசம் கழிச்சு நீங்க திரும்ப வரும்போது செஞ்சிக்கலாம்.

    பாட்டி காதில் போட்டுக்கொண்டதாகத் தெரியவில்லை. உன்னோட அமெரிக்க ப்ரெண்ட் எல்லாம் கூட்டிட்டு வா. நான் சுலபமா கடிக்கறாமாதிரி மொறுமொறுனு தேங்காய் எண்ணெயில பொரிச்சுத்தரேன். ஒருதடவை சாப்பிட்டாங்க அப்பறம் என்ன இந்தியாக்கு திரும்பிப் போகவேண்டாம்னு சொல்லிருவாங்க.

    எப்படியோ என்னோட முறுக்குப்பாட்டியக் கூட்டிக்கிட்டு அமெரிக்காவும் வந்தாச்சு. இங்க இருக்கற இந்திய நண்பர்கள்கிட்ட பேசறதுக்கு முன்ன பாட்டியோட முறுக்குக்குத் தடை போட்டுறணும். முடிவோடு பேச ஆரம்பித்தாள் சௌமியா.

    பாட்டி முறுக்கு சுத்தறது என்ன பெரிய விசயமா. இப்பல்லாம் எப்படிச் செய்யணும்னு மொபைல்ல வீடியோ பாத்தே தெரிஞ்சுக்கலாம். என்ன அதிசயம் பாட்டி ஒன்றுமே சொல்லவில்லை. அமைதியாகப் போய்விட்டாள்.

    அடுத்தநாள் காலை எழுந்த சௌமியாவுக்கு ஆச்சர்யம். பாட்டி முறுக்கு மாவு பிசைந்து ரெடியாக வைத்திருந்தாள். என்னடா தர்மசங்கடம். வந்த ரெண்டாம் நாள்ல அதுக்குள்ள இங்க யார ப்ரெண்ட் புடிச்சிருப்பாங்க. ஒருவேள யாராவது வீட்டுக்கு வரப்போறாங்களோ.

    பாட்டி ஆரம்பித்தாள். இங்க யாரும் வரப்போறதில்ல. திருதிருனு முழிக்காத. இப்போ உனக்குதான் முறுக்கு சுத்தற போட்டி. நேத்திக்கு சொன்னையில்ல. யார் வேணும்னாலும் செய்யலாம்னு. இப்போ இந்த மாவ எடுத்து ஒடையாம மூணு வட்டம் முறுக்கு சுத்து.

    இதென்ன பெரிய விசயமான்னு உக்காந்த எனக்கு அரை மணி நேரம் ஆகியும் ஒரு முறுக்கு ஒழுங்கா சுத்த முடியல. ஒண்ணு புரி சரியான இடைவெளியில வர மாட்டேங்குது. அப்படியே புரி வந்தாலும் இரண்டாவது சுத்துலயே முறுக்கு விண்டுக்கிட்டு நிக்குது. பொறுமையா பாட்டி திரும்பத் திரும்ப கலைந்த முறுக்கு மாவை எடுத்து மீண்டும் உருட்டி எண்ணை தொட்டு என்னிடம் கொடுக்கிறாள்.

    கடைசியில் என்னால முடியல…. அப்டினுஒத்துக்க வேண்டியதாயிற்று. எங்கள் வீட்டு முறுக்கு சாம்பியன் முந்தினநாளே அரைத்துத் துணியில் நீர் வடிவதற்காகக் கட்டி தொங்கவிடப்பட்டதிலிருந்து சிறிது எடுத்துப் பிசைந்து எண்ணெய் தோய்த்து லாவகமாக வெள்ளைத் துணியின்மேல் சுற்றுகிறாள். இப்பொழுது எனக்கு ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகிறது. செய்யறவனுக்குத்தான் அதோட சிரமம் தெரியும். வெளியில நின்னு விமர்சிக்கறது ரொம்ப சுலபம். பழமொழி நானூறுல  அரங்கினுள், வட்டு கரையிருந்தார்க்கு எளிய போர் இதத்தான் சொல்லுது. அரங்குல உக்காந்து பாக்கறவங்களுக்கு உள்ள வட்டாடறது எளிதாத் தோணுமாம். ஆனா உள்ள இருக்கறவனுக்குத்தான் அதப்பத்தின சிரமம்தெரியும்ங்கறது அதோட அர்த்தம். முன்னால படிச்ச ஞாபகம்.

    சரி இருந்தாலும் நான் முறுக்குப்பாட்டியின் பேத்தியாச்சே. முயற்சியோட கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறேன். மனதினுள் சொல்லிக்கொண்டே பாட்டியின்முன் உட்கார்ந்தாள் சௌமியா.

    பாடல் 18

    பொருந்தா தவரைப் பொருதட்டக் கண்ணும்,
    இருந்தமையா ராகி இறப்ப வெகுடல்
    விரிந்தருவி வீழ்தரும் வெற்ப! அதுவே
    அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு.

    அரிந்தரிகால் நீர்ப்படுக்கு மாறு

    கைபேசியின் அழைப்பு ஒலி. இப்பொழுதுதான் வீட்லேந்து கடைக்குப் போனான். அதுக்குள்ளயா கூப்புடறான். சாமான்கள ஒழுங்கா லிஸ்ட் போட்டு எழுதிட்டுப் போன்னு சொன்னா கேக்கறதே இல்ல. எல்லாத்துலயும் ஒரு அலட்சியம் இந்தப் பிள்ளைக்கு மனதில் நினைத்துக்கொண்டே வசைபாடுபவதற்காக கைபேசியை எடுத்தேன். என்ன ஆச்சர்யம். இது கடைக்குப்போயிருக்கும் என் பிள்ளை இல்ல. என் ப்ரெண்ட் விசாகாவோட அழைப்பு. பாம்பேய விட்டு வந்து ஒரு வருசம் ஆகியாச்சு. இன்னிக்குக் கூப்பிடலாம் நாளைக்குக் கூப்பிடலாம்னு நெனச்சி நாட்கள் கழிந்ததுதான் மிச்சம். எந்த பழைய ப்ரெண்ட்ஸையும் கூப்பிடவே இல்ல. கடைசியில அங்கு பக்கத்துவீட்டில் குடியிருந்த தமிழ்பேசும் விசாகா கூப்பிட்டே விட்டாள்.

    என்ன சுலோசனா சென்னை போனதில எங்கள எல்லாம் மறந்துட்ட போல. என்னதான் உங்க சொந்தக்காரங்க எல்லாம் அங்க இருந்தாலும் ஒருவருசமா உனக்குப் பேச நேரமே கெடைக்கலனு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.

    ஆமா வீடு எங்க. கோயமேடு பஸ்டேண்ட் பக்கமா. அமக்களமான எடம். நல்ல அனுபவிக்கற போல. அங்கே ஒரு வீடு வாங்கிற வேண்டியதுதானே.

    சிறிதுநேரம் விசாகாவைப் பேசவிட்டு பின் நான் தொடர்ந்தேன். நல்ல எடம் தான் பொழுது எல்லாம் நல்லாவே போகுது. வீடுகீடு வாங்கறதப்பத்தி யோசிக்கவே முடியாது. இங்க வீடுகள்லநிறைய பிரச்சினை. முக்கியமானது கரையான். கொஞ்ச நாள் துணிமணிகள நகத்தாம வச்சா அதுலயே கரையான் பத்திக்கிது. நல்ல வேள நான் குடியிருக்கிற வீட்ல அவ்வளவா இல்ல. வாசல் கதவுல மட்டும் கரையான் அரிச்சிருக்கு. மூலையில மண்சேத்து வைக்கும். அப்பப்ப அங்க மட்டும் மருந்து அடிச்சு கட்டுப்படுத்தி வச்சிருக்கோம். அக்கம்பக்கத்து வீடுகள்ல எல்லாம் அலமாரிகள் வரை அரிச்சிடுச்சு. மொத்தமா எடுத்துட்டு திரும்ப மரவேலை பண்றாங்க.

    நான் நீண்ட நாள் பேசாததால் கோபத்துடன் ஆரம்பித்த விசாகா கரையான் எனக் கேட்டவுடன் அடப்பாவி, நீ நெனைக்கிற மாதிரி கரையான அழிக்கறது அவ்வளவு சுலபம் இல்ல. கட்டுப்படுத்திட்டதா நீ நினைச்சிட்டிருக்க. புதுசா மரவேலை பண்ணிட்டா திரும்ப வராதுனு உங்க அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க நினைக்கிறாங்க. எல்லாமே தப்பு. பெஸ்ட் கன்ட்ரோல் ஆட்களக் கூப்பிட்டு வீடு முழுக்க மருந்து அடிக்க வை. அவங்க சுவரோட அடிப்பக்கத்துல குறிப்பிட்டஇடைவெளி விட்டு சின்னச் சின்ன ஓட்ட போட்டு மருந்து அடைப்பாங்க. அதனால கரையான் பரவாம அழிஞ்சு போகும். போனவாரம் பொதிகை டிவியில பழமொழி பத்தின ஒரு நிகழ்ச்சி பாத்தேன். அதுல அரிந்தரிகால் நீர்ப்படுக்குமாறு னு ஒரு பழமொழிக்கு வயல்ல கதிரை அரிந்து வச்ச அரிதாளையும் விடாம உழுது தண்ணிக்குள்ள அமிழ்த்தி அழுகச்செய்வான் உழவன். அப்டியே உட்டுவச்சா அதுலேந்து வளமில்லாத பயிர் வர ஆரம்பிச்சுடும்னு அர்த்தம் சொன்னாங்க. உண்மைதானே. அரைகுறையா எத உட்டு வச்சாலும் ஆபத்துதான்.

    சரிதான் என் தோழி சொன்னத செயல்படுத்திடவேண்டியதுதான். முடிவெடுத்தேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 7

    கதை வடிவில் பழமொழி நானூறு – 7

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 15

    சிறிய பொருள்கொடுத்துச் செய்த வினையால்
    பெரிய பொருள்கருது வாரே; – விரிபூ
    விராஅம் புனலூர! வேண்(டு); ‘அயிரை விட்டு
    வராஅல் வாங்கு பவர்‘.

    பழமொழி – ‘அயிரை விட்டு வரால் வாங்குபவர்’

    நம்ம செல்வம் சார் எவ்வளவு மாறிட்டார் பாத்தியா. முன்னயெல்லாம் நாம ஸ்கூல் படிக்கும்போது எச்சில் கையால காக்கா ஓட்ட மாட்டாரு. போனவாரம் நான் ஷாப்பிங் மால் ல பாத்தப்போ ரொம்ப நேரம் பேசிக்கிட்டிருந்தாரு. அவர் கூட அவர் வளர்ப்புப் பையனையும் கூட்டிக்கிட்டு வந்திருந்தாரு. பையன் பாக்க நல்லா லட்சணமா இருக்கான். அவருக்கு ரொம்ப பெரிய மனசு. நான்தான் இவ்ளோநாள் புரிஞ்சுக்காம என்னென்னமோ பேசியிருக்கேன். அதுக்காக இப்போ வெக்கப்படறேன். என் திருச்சி நண்பன் வருத்தப்பட்டான்.

    நீ பேசும்போது அவுங்க மனைவி கூட இருந்தாங்களா இது நான்.

    சிறிது யோசித்த என் நண்பன் தொடர்ந்தான். தொடக்கத்துல கூடதான் நின்னுட்டிருந்தாங்க அவர் பேச ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துல கொஞ்சம் தள்ளி நின்னு புடவைக் கடைய வேடிக்க பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஆமா ஏன் கேக்கற.

    அதானே பாத்தேன். நீ திருச்சியிலேந்து இப்பதான் வந்திருக்க. நானும் ஷண்முகமும் கோயம்புத்தூரிலயே தானே இருக்கோம். அடிக்கடி சந்திச்சிகிறது தான். ஆனா நேத்தைக்கு நான் பேசினப்போதான் அவன் செல்வம் சாரப் பத்தி சொன்னான். இப்ப நாலைந்து வருசமா அவன் அவர் வீட்டுப்பக்கத்துலதான் குடியிருக்கான் போல.  அதனால அவரப் பத்தி கதையாச் சொன்னான். அவன் சொன்னதச் சொல்றேன் அப்ப உனக்குப் புரியும்.

    செல்வம் சாருக்கு குழந்தை இல்லனு எனக்குத் தெரியும்டா. பல வருசமாவே அவர் நிறைய டாக்டர்கிட்டயும்  போய்வரதக் கேள்விப்பட்டேன். அதுல ஒண்ணும் அவருக்குப் பெரிசா வருத்தம் இருந்தாமாதிரி தெரியல. தினமும் பக்கத்துல இருக்கற பார்க்குக்கு காலையில வாக்கிங் போகும்போது பேசிக்கிடறதுதான். பாக்கப் பாக்க அவங்க மனைவிதான் வேதனையில மெலிஞ்சிக்கிட்டே போனாங்க.

    அவங்க வற்புறுத்தலாலதான்  நெறைய டாக்டரப் பாத்திருக்காரு போல. அதுக்கு செலவழிஞ்சத நெனச்சிதான்  அவர் அதிகமா வருத்தப்பட்டிருக்கார். அப்பறம் திடீர்னு ஒருநாள் ஒரு வளந்த பையன தத்து எடுத்துக்கிட்டதாச் சொன்னாரு.

    பிறகுதான் தெரிஞ்சது அவரோட திட்டம். பேச்சுவாக்குல கல்லூரி முதலாமாண்டு படிக்கற பையன தத்து எடுத்து தொடர்ந்து படிக்கவைக்கறேன். அப்பதான் செலவு கம்மி ஆகும்பாரு. ஏன்னா பள்ளிக்கூடப்படிப்புக்குக் கட்டவேண்டிய பணம் மிச்சம். கொஞ்ச வருசத்துல அவன் உங்கள மாதிரி வேலைக்குப் போய் சம்பாதிக்க ஆரம்பிச்சுடுவான். அப்பறம் கைப்பிடித்தம் வராது.  மனைவிக்கும் ஒரு குழந்தை வந்ததிலே சந்தோசம். எல்லா வகையிலும் இது எனக்கு லாபம்தான்னு பெருமப்பட்டார் போல.

    நான் நிறுத்தியவுடன் என் நண்பனுக்குத் தலையே சுற்றிவிட்டது போல. முன்நெற்றியை அழுத்திவிட்டுக்கொண்டே பெருமூச்சுடன்பேச ஆரம்பித்தான்.

    நான்கூடஅவரப் பத்தி பெரிசா நெனச்சிட்டேன். சின்ன மீனைத் தூண்டில்ல கோத்துவிட்டு பெரிய மீனைப் பிடிக்கறமாதிரி இல்ல இருக்கு அவர் வேல. இதெல்லாம் ஒரு பொழப்பா. இவரப்போல மனுசங்களுக்குத்தான் அயிரை விட்டு வரால் வாங்குபவர் அப்டிங்குற பழமொழியே இருக்குபோல.

    அதச் சொல்லிக்குடுத்ததே அவர்தான். சரி அவர விடு. வேற ஏதாவது பேசலாம். தொடர்ந்தேன் நான்.

    பாடல் 16

    நல்லார் நலத்தை உணரின் அவரினும்
    நல்லார் உணர்ப; பிறர் உணரார்; – நல்ல
    மயிலாடு மாமலை வெற்ப! மற்று என்றும்
    அயிலாலே போழ்ப அயில்‘.      

    பழமொழி – ‘அயிலாலே போழ்ப அயில்’. 

    என்ன கைலாசம் எப்ப ஊர்லேந்து வந்த கேட்டுக்கொண்டே அவனருகே நடந்த என்னை இடைமறித்து

    ஆமா நம்ம ஊர்ல பல மாறுதல்கள் வந்துருக்கு போல. வருசம் கழிச்சு வந்ததால ஒண்ணும் சரியாப் புரியல. ஊரப்பத்தி தொலைக்காட்சி செய்தியில பாத்து தெரிஞ்சுக்கிடறதுதான். ஆரம்பித்தான் அவன். .

    தொலைக்காட்சியில எல்லாம் நம்ம ஊரப்பத்தி சொல்றாங்களா. இந்தத் தேர்தல்ல சிவசாமி ஐயா செயிச்சது எவ்வளவு நல்லதாப் போச்சு. நம்ம ஊருக்காக அவர் எவ்வளவு நலத்திட்டங்கள உருவாக்கிட்டு வராரு பாத்தியா. மாணவர்கள்லேந்து வீட்ல இருக்குற குடும்பப் பெண்கள் வரை எல்லாருக்கும் அவங்கவங்க தேவைக்கு ஏத்தமாதிரி செஞ்சிட்டுவராரு.

    மொதல்ல நம்ப ஊருக்கு மேல்நிலைப்பள்ளி கொண்டு வந்தது பெரியவிசயம். பசங்க எவ்வளவு தூரம் போய் படிச்சிட்டு இருந்தாங்க. அடுத்தது கல்லூரியும் வந்துரும். தென்னையிலிருந்து கிடைக்குற பொருட்கள உபயோகமான சாமன்களா மாத்தறதுக்காக பயிற்சியும் குடுக்கப் போறாங்களாம். அப்பறம் சின்னதா ஒரு தொழிற்சாலையும் வந்துடும். உன்னைய மாதிரி பூவிளைவிக்கிற விவசாயிகளுக்கு உள்ளூர்லயே சென்ட் தொழிற்சாலை வரப்போகுதாமே. கேள்விப்பட்டயா. நீ எங்க. சென்னைவாசி அரசாங்கச் சம்பளக்காரன்.  நிலம்தான் உன் பேர்ல இருக்கு. கஷ்டப்பட்டாதானே அது சரியாகும்போது சந்தோசமும்வரும். உனக்குத் தெரிய நியாயம் இல்ல. சரி வந்ததுலேந்து ஊர்க்கதையப்பத்தியே பேசறேன். அப்பறம்உங்க சென்னை எப்டி இருக்கு. பிள்ளைகள் எல்லாம் நல்லாப் படிக்கிறாங்களா?  .

    அட என்னப்பா நீ. நான் சொல்ல வந்ததே வேற. என்னமோ இந்த ஊர சிவசாமி ஐயா சொர்க்கபுரியா மாத்திட்ட மாதிரி இல்ல பேசிக்கிட்டிருக்க. அவர் கட்சியில கிட்சியில சேந்திட்டயா. நிறுத்தினான் கைலாசம்.

    ஏன்னா வெளியில அவரப்பத்தி நல்லமாதிரி சொல்லலயே. நம்ம தெக்குத்தெரு சொக்கன் தொலைக்காட்சிக்கு குடுத்த பேட்டிய போனவாரம் பாத்தேன். அதென்னமோ பதவி ஆசையில ஓட்டு சேகரிக்க அவர் மக்கள திசை திருப்பி விடறார்னுல சொன்னான். நீ சொன்னியே அந்த மேல்நிலைப்பள்ளியில காசு வாங்கிட்டு ஆசிரியர்கள வேலைக்கு அமர்த்தியதாவும், குடும்பப் பெண்கள மாதர் சங்கம்னு சொல்லி அப்பளம் இடற சாக்குல ஊர்வம்பப் பேசவச்சி ஊர் ஒற்றுமையக் குலைக்க முற்படறாராமே. இன்னும் என்னமோ நிறைய சொன்னார். அதப் பத்திதான் கேக்கவே ஆரம்பிச்சேன். அதுக்குள்ள அரசியல் மேடைப் பேச்சு மாதிரி முழ நீளத்துக்கு ஒரு பட்டியல் போட்டுட்ட அங்கலாய்த்தான் நண்பன்.

    ஓ அப்டியாசேதி. நான் என்னமோ நீ நம்ம ஊரப்பத்தி நல்லவிதமா கேள்விப்பட்டதா நெனச்சு மூச்சுவிடாம பேசிட்டேன். எப்படியிருந்தாலும் அதுதான் உண்ம. சொக்கன் சந்தர்ப்பவாதி. இடத்துக்கேத்த மாதிரி பேசுவான். தான் காரியம் நடக்கணும்னா நா கூசமா இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுவான். நீ கேட்டியே அரசியல்ல சேரரதப்பத்தி. அவன்தான் எதிர்க்கட்சியில சேந்திருக்கான்.

    அயிலாலே போழ்ப அயில் னு நீ கேட்டதில்லயா. இரும்பைப் பிளக்க இன்னொரு கூரிய இரும்பு தேவை.  நல்லவரப் பத்தி தெரிஞ்சுக்கணும்னா அவரைவிட நல்லவங்ககிட்டதான் கேக்கணும். சொக்கன் மாதிரி கெட்டவன்கிட்ட கேட்டா இப்டித்தான் ஆகும். கெட்டவனுக்கு பாக்கற நல்லவங்களும் கெட்டவங்களாத் தான் தெரியுவாங்க. என் நண்பனுக்கு உணர்த்திய பெருமிதத்தில் நான் விடைபெற்றேன்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 6

    கதை வடிவில் பழமொழி நானூறு – 6

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 13

    அன்பின் நெகிழ வழிபட்டுக் கொள்ளாது,
    நின்ற பொழுதின் முடிவித்துக் கொள்வது
    கன்றுவிட்(டு) ஆக்கறக்கும் போழ்தில் கறவானாய்,
    அம்புவிட்(டு) ஆக்கறக்கும் ஆறு‘.

    பழமொழி- அம்பு விட்டு ஆக்கறக்குமாறு

    அப்பா இந்த செய்தித்தாளப் பாத்தீங்களா. பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் தற்கொலைனு போட்டிருக்கு. பத்தாம் வகுப்பு படிக்கும் என்மகன் செல்வனின் குரல் கேட்டுத் திரும்பினேன்.

    முன்பெல்லாம் இந்தமாதிரி செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லதான். பத்தோடு பதினொன்றாக வாசித்துவிட்டு மறந்துகொண்டுதான் இருந்தேன். ஆனால் இப்பொழுதெல்லாம் இந்தமாதிரி செய்திகள் மனச உலுக்குது.

    எங்க முழுச்செய்தியையும் வாசி மகனுக்குக் கட்டளையிட்டுவிட்டு முகச்சவரம் செய்ய கண்ணாடி முன் அமர்ந்தேன்.

    செல்வன் வாசிக்க ஆரம்பித்தான். ராஜஸ்தான் மாநிலத்தில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்த மாணவன் திடீரென தற்கொலை செய்துகொண்டான். ராஜஸ்தான் மாநிலம் ரேவடி எனும் கிராமத்தில் வசிப்பவர் சதீஷ் சவுகான். அவர் தன் மகனை ஐ.ஐ.டியில்படிக்கவைக்க வேண்டும் எனும் ஆர்வத்தில் சிறிதுசிறிதாகப் பணம் சேர்த்து கோட்டா நகரின் அருகேயுள்ள மனஸ்வாத் எனும் பெயர் போன பயிற்சிப்பள்ளியில் தன் மகனைச் சேர்த்துவிட்டார்.  பத்தாம் வகுப்பிற்குப் பின்அங்கு சேர்ந்த ஹேப்பி என்ற பெயர்கொண்ட அம்மாணவன் பதினொன்றாம் பன்னிரெண்டாம் வகுப்புடன் சேர்த்து ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுக்கும் பயிற்சிபெற்றுக்கொண்டிருந்தார். நுழைவுத் தேர்வு முடிவுகள் எந்த நேரமும் வெளியிடப்படும் எனும் அறிவிப்பைக் கேட்டதிலிருந்து ஹேப்பி சரியாக உணவு உண்ணாமலும் நண்பர்களுடன் பேசாமலும் இருந்திருக்கிறார். கடைசியில் மன அழுத்தம் அதிகமாகி இம்முடிவை அவர் எடுத்திருக்கலாம் எனப் போலீசார் கருதுகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணைப்படி அம்மாணவன் அமைதியானவர், ஒழுக்கமானவர். கடுமையாக முயற்சித்துப் படிப்பவர் என்று ஆசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டதாகவும், சகமாணவர்கள் அவர் பரோபகாரி. கோபப்படவே மாட்டார் எனப் பாராட்டியதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அவர் இப்படி ஒரு கொடுமையான முடிவை எடுக்கக் காரணம் என்ன?

    அவர் கடைசியாக எழுதி வைத்திருக்கும் டயரி குறிப்பில் முன்பெல்லாம் பாசமாக இருந்த என் அப்பா  நான் என்ன மதிப்பெண் எடுத்தாலும் இன்னும் முயற்சி வேண்டும் எனக் கடுமையாகவே பேசுகிறார். வீட்டிற்குப் போகவே பிடிக்கவில்லை. என் உயிரே போனாலும் கடுமையாக முயற்சித்து ஐ.ஐ.டி க்குள் நுழைந்து என் அப்பாவின் அன்பை மீண்டும் பெறுவேன் என்று எழுதியுள்ளார்.

    செல்வன் வாசித்துமுடித்தவுடன் என் மனம் கனத்தது. அந்தத் தவறை நான்  செய்யக்கூடாது என எனக்குள் எச்சரிக்கை விடுத்துக்கொண்டே வெளியில் பேசலானேன்.

    கன்னுக்குட்டிய குடிக்கவிட்டுட்டு பாலக் கறந்தாதான் பசுமாடு நல்லா பால் கொடுக்கும். அது இல்லாம அது மேல அம்ப விட்டு துன்புறுத்திப் பால் கறந்தா எப்டி இருக்குமோ அப்படித்தான் ஹேப்பியோட வாழ்க்கையில அவங்க அப்பா செஞ்ச வேல. அன்பா பேசி ஊக்குவிச்சிருந்தா இந்த நெலமை வந்திருக்குமா. பாவம் அந்தப்பையன். நான் இப்போ சொன்னது உன் தமிழ் பாடத்துல பழமொழி நானூறுல இருக்குற பழமொழிதான். அம்பு விட்டு ஆக்கறக்குமாறு.

    சொல்லிவிட்டு என் வேலையைத் தொடர்ந்தேன்.

    பாடல் 14

    முயலலோ வேண்டா; முனிவரை யானும்
    இயல்பினார் என்பது இனத்தால் அறிக!
    கயலியலும் கண்ணாய்! கரியரோ வேண்டா;
    அயலறியா அட்(டு)ஊணோ இல்‘.

    பழமொழி – அயலறியா அட்டூணோ இல்

    செண்பகம் உன்னைய இத்தன வருசத்துக்குப் பிறகு பாத்ததுல ரொம்ப சந்தோசம். நம்ப ரெண்டுபேரும் பக்கத்துப்பக்கத்து வீட்ல இருக்கறப்போ உம் பிள்ள சுரேஷ் எங்க வீட்லயே கெடயா கெடப்பான். இப்போ எப்படி இருக்கான்? நான் ஆரம்பித்தேன்.

    என் புள்ளயா?  சென்னையில கல்யாணத்துக்கு உதவற கம்பெனி வச்சு நடத்தறான். வருமானம் நல்லா வந்துக்கிட்டுருக்கு. வயசுதான் ஏறிக்கிட்டே போகுது. ஏதாவது தெரிஞ்ச வரன் வந்தாச் சொல்லு. அவன் எவ்ளோ சாதுனு உனக்குத் தெரியுமே. இப்பவும் அந்தக் குணம் மாறல. யார்கிட்டயும் அதிகம் பேசமாட்டான். தான் உண்டு தன் வேல உண்டுனு இருக்கான். இது செண்பகம்.

    ஆச்சர்யமா இருக்கே. அவன் குணத்துக்கு அந்த வேலய அவன் எப்டிப் பாக்கறான். ஒரு ஜோடியச் சேத்து வைக்கறதுன்னா சும்மாவா. எவ்ளோ பேச்சு பேசணும்.

    சரி அந்த வேல பாக்கற அவனுக்குத் தனக்கு ஒரு பொண்ணு பாத்துக்க முடியாமலா போச்சு. ஒண்ணும் சரியா பிடிபடல. உங்கிட்ட அவன் ஏதொ மறைக்கறான்னு மட்டும் தெரியுது. இது நான்.

    என்ன நீ வார்த்தைக்கு வார்த்த அந்த வேல அந்த வேல ங்கற படபடக்கத் தொடங்கினாள் செண்பகம். அவன் என்ன மாமா வேல பாக்கறானா இல்ல தரகர் வேல பாக்கறானா. ஒரு அறைக்குள்ள கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து பாக்கற வேல. அதுல மறைக்கறதுக்கு என்ன இருக்கு.

    கல்யாணம் பண்ணிக்க விரும்புற பெண்ணோ அல்லது ஆணோ மத்தவங்களப்பத்தி சரியான தகவலத் தெரிஞ்சிக்கிறதுக்காக இவன் கம்பெனிக்கு வருவாங்க.

    இப்பல்லாம் முகநூல், ட்விட்டர் இந்த மாதிரி சோஷியல் மீடியாக்கள் இருக்குல்ல. அதுல அவுங்க எழுதற தகவல்கள் சரியானதானு ஒத்துப் பார்ப்பான். அந்த நபருக்கு எந்த மாதிரி நண்பர்கள் இருக்காங்க அவங்களோட பொழுது போக்கு என்ன இதையெல்லாம் தொடர்ந்து ஒருமாதம் கண்காணிச்சுச் சொல்லுவான். தேவைப்பட்டா அந்த நபரையோ அவருடைய நண்பர்களையோ பின் தொடர்ந்தும் கண்காணிப்பாங்க. இதிலேந்து வேலை பாக்கற அலுவலகம். மாதச் சம்பளம், பொழுதுபோக்கு, இதையெல்லாம் தெரிஞ்சுக்க முடியறதோட மட்டுமில்லாம நண்பர்கள் குழுவ வச்சு பொறுப்பான நபரா அல்லது ஊதாரியா, ஒழுக்கமுள்ளவராங்கற தகவல்களையும் தெரிஞ்சுக்கலாம்.

    ‘அயலறியா அட்டூணோ இல்‘ ங்கற பழமொழி மாதிரிதான் இந்த வேலயும். மீனைப் பக்கத்து வீட்டுக்குத் தெரியாம எப்டி சமைத்துச் சாப்பிட முடியாதோ அது மாதிரி நண்பர்களப் பாத்தா போதும் ஒருத்தங்களோட இயல்பு எப்டினு கணிச்சிடலாம்னு அப்டிப் பண்றாங்க.

    ஓ இதுல இப்டி வேற ஒரு விசயம் இருக்கா. மீன்வாசத்துக்கு இப்படி ஒரு பழமொழியா. நம்ம முன்னோர்கள் அறிவுரை சொல்லணும்னாலும் சாப்பாட்ட வச்சிதான் பேசுவாங்க போல.

    புதிய விசயம் தெரிந்துகொண்ட மகிழ்ச்சியில் செண்பகத்திடமிருந்து விடைபெற்றேன் நான்.

    Share
  • கதை வடிவில் பழமொழி நானூறு – 5

    கதை வடிவில் பழமொழி நானூறு – 5

    நாங்குநேரி வாசஸ்ரீ

    பாடல் 11

    அறிவினால் மாட்சியொன்(று) இல்லா ஒருவன்
    பிறிதினால் மாண்டது எவனாம்? – பொறியின்
    மணிபொன்னும் சாந்தமும் மாலையும் இன்ன
    அணியெல்லாம் ஆடையின் பின்.

    பழமொழி-  அறிவு ஆடை போன்றது!

    புது ப்ளசர்காரெல்லாம் வந்துநிக்கு. யாரும் பெரிய ஆளுங்க வந்திருக்காவளோ. இங்ஙன பண்ணயார் வீட்டுக்கு வாராம தெருமுக்குல ஏன் நிக்கு. ஏன் தாயி ஏதும் சேதி தெரியுமா. கேட்டுக்கொண்டே வந்தாள் வெள்ளைச்சீலை ஆச்சி.

    நம்ம ஊருக்கு புது ஜட்ஜம்மா குடி வந்திருக்காங்களாம். இங்கேருந்து தான்தினம் டவுண் கோர்ட்டுக்கு போயிட்டு வருவாக போல. நம்ம பெட்டிக்கட கணேசு மாமா தம்பி மக தான் அந்த ஜட்ஜம்மானு பேசிக்கிறாக. அதனால பண்ணையாருக்கு மறுப்பு ஒண்ணும் சொல்லமுடியல.போல. இனி ஒவ்வொருமட்டம் ஊர்ப்பஞ்சாயத்துல தீர்ப்புகொடுக்கையிலயும் யோசன பண்ணிக் குடுக்கணும். ஏதும் தப்புகிப்பு வந்திச்சு முன்னமாதிரி இல்ல. அந்தம்மா நம்மளப்பாத்து சிரிப்பாச் சிரிச்சுபோடும். என்னதாயி நான்சொல்லறது. இது ஆச்சி.

    அட போங்க ஆச்சி. நம்ம பண்ணயாரு அவுகளக் கலந்து முடிவெடுப்பாரோ என்னவோ. விடியக்காலையில நமக்கெதுக்கு இந்த வம்பு. அதுவும் பண்ணையார்வீட்டு நெலவாசல் முன்ன நின்னுக்கிட்டு. யாரும் பாத்துற கீத்துற போறாக. போய் மாட்டுத் தொளுவத்தச் சுருக்க  தூத்து சுத்தம் பண்ணுங்க.  நான் நாலுவீட்டுலேந்து உளுந்தும் அரிசியும் களைஞ்சுஊத்தின கழனித்தண்ணி எடுத்துட்டு வாரேன். அடிக்குத வெயில்லமாட்டுக்கு நாக்கு ஒலந்து போவுமில்ல. பேசுகிற ஜோரில் ஆச்சியும் பேத்தியும் பண்ணையாரின் சம்சாரம் வீட்டு நடைக்கதவின் பின்னால் நிற்பதைக் கவனிக்கவில்லை.

    சொல்லிவைத்தார்ப்போல் சிறிதுநேரம் கழித்து வீட்டுக்குள் வந்த பண்ணையாரும் லட்சுமி ஒரு நல்ல சேதி. இனிமே பஞ்சாயத்துல என் வேல சுளுவா முடியும். நம்ம கணேசு தம்பி மவ நீதிபதியாம்ல.  அதுகிட்டதான் பேசிட்டு வாரேன். என்னா சூட்டிப்பு. புள்ள பாக்கவும் லட்சணமா இருக்கு. சொல்லுதசொல்லு ஒண்ணொண்ணுலயும் தைரியம் தெரியுதே. பண்ணையார் சொல்லிக்கொண்டே போக மனைவி லட்சுமிக்கு அடிவயிறுகலங்கியது.

    இத்தன நாள் போடாம வச்சிருந்த காசு மாலயும் இனி தெனைக்கும் போடணும். கழுத்தோட ஒட்டி ஒரு அட்டியலும், மொகப்பு வச்ச நாலு வடம் சங்கிலியும் தெனைக்கும் போட்டாப் போதும்னு இந்த மனுசன் சொன்னதால மிச்சத்த உள்ளார வச்சேன். இம்புட்டு நாளும் என்னய என்வீட்டு மகாலட்சுமினு சொன்னவுக இன்னிக்கு வேற ஒரு செருக்கிய லட்சணமா இருக்கானு சொல்லுதாக. இன்னும் என்னேன்ன நடக்குமோ.

    கோத்துவாங்கின கோபுரம் பார்டர் பட்டுச்சீலயத்தான் இனி தெனைக்கும் கட்டிக்கிடணும். தீர்மானித்தவுடன் கொஞ்சம் மன அழுத்தம் குறைந்தது.

    எல்லாத்தையும் நான் கவனிச்சுக்கிட்டுத்தான் இருக்கேன். வெத்தலைச்சீவலை மென்றுகொண்டே பண்ணையாரின் அம்மா தன்பங்குக்கு ஏற்றி விடுகிறாள்.

    பஞ்சாயத்துப்பிரச்சினைய பெத்த ஆத்தா எங்கிட்ட எப்பமும் பேசி இருப்பானா அல்லது உங்கிட்டதான் சொல்லியிருப்பானா. இப்பம் வந்த செருக்கி பஞ்சப்பொழப்பு பொழைக்குதமாரி பருத்திப்பொடவ கட்டிக்கிட்டு இணுக்குத் தோடு காதுல மாட்டியிருக்கா. அவளுக்கு என்ன பவுசுனு இவன் பின்னால போறான். நீ ஒண்ணும் கவலப்படாததாயி நம்ம பள்ளிக்கூட வாத்தியார்கிட்ட இன்னைக்கு பேசுதேன். பஞ்சாயத்துக்கு என்ன பிரச்சினை வந்தாலும் எங்கிட்டயும் சொல்லச்சொல்லுதேன். நம்மளும் அந்தப் பிரச்சினைக்கு முடிவு எடுத்து பொறவு எம்மவன்கிட்ட சொல்லலாம்.  நேரடியா இப்பஞ்சொன்னா சரிப்பட்டு வராது.

    பள்ளிக்கூட வாத்தியார் அழைக்கப்பட்டு நிலைமை விளக்கப்பட்டது. தலையெழுத்து இந்த வீட்ல வந்து நான் மாட்டிக்கிட்டேன். அணியெல்லாம் ஆடையின் பின் அப்டின்னு பழமொழி சொன்னா இந்த ரெண்டு பெரிய மனுஷிகளுக்கும் புரியவா போகுது. அந்தம்மா படிச்சவங்க. அவங்களுக்கு அறிவால பெரும.  ஆடைக்கு மேல நக நட்ட அணிஞ்சாதானே அதுக்கு அழகு. அறிவும் ஆடை மாதிரிதான். அது இல்லாத இவங்ககிட்ட இப்போ இதச் சொன்னா உசிரோட வீடுபோய்ச் சேரமுடியாது. இப்ப என்ன சொல்லிச் சமாளிக்கலாம். துண்டை உதறித் தோளில் போட்டுக்கொண்டு கீழே உட்கார்ந்துயோசிக்க ஆரம்பித்தார் வாத்தியார்.

    பாடல் 12

    தெரியா தவர்தம் திறனில்சொல் கேட்டால்
    பரியாதார் போல இருக்க! – பரிவுஇல்லா
    வம்பலர் வாயை அவிப்பான் புகுவரே,
    அம்பலம் தாழ்க்கூட்டு வார்‘.

    பழமொழி- அம்பலம் தாழ் கூட்டுவார்

    என்ன தீபா காபி டம்ளர் வச்சு ஒருமணிநேரம் ஆச்சு. இன்னும் குடிக்காம அப்டி என்ன அந்த கம்ப்யூட்டர்ல. படிக்குற காலத்தில தான் என்ன சொன்னாலும் கேக்காம நாள் முழுக்க இது முன்னாடி உக்காந்திருந்த. இப்ப வேலைக்குப் போகும்போதும் அப்டியேதான்னா இது சரியில்ல. நாலு பேர் பாத்தா என்ன நினைப்பாங்க. அம்மாவின் பேச்சு நீண்டுகொண்டே போனது.

    அம்மா அந்த நாலுபேர்னுசொன்னியே அவுங்க தொல்லதான் தாங்கமுடியல. நின்னா குத்தம் ஒக்காந்தா குத்தம். எல்லாத்துலயும் குறை கண்டுபிடிக்கறாங்க. இது நான்.

    நான் சொன்னத வச்சே என்ன மடக்கிடு. நான் சொன்ன நாலு பேரும் அக்கம்பக்கத்து வீட்டு மனுசங்க. தலையெடுக்காம கம்ப்யூட்டரையே பாக்கற உனக்கு அவங்களப்பத்தி என்ன தெரியும். ஒருநாள் கூட நீ அவுங்ககிட்ட பேசினது கிடையாது. சும்மா என்னய வம்புக்கு இழுக்காத. சொல்லிவிட்டு சமையலறைக்குள் நுழைந்தாள் அம்மா.

    எண்பது வீடுகள் கொண்ட நாங்கள் வசிக்கும் அந்தச் சிறிய சொசைட்டியில் போனவாரம்தான் முகநூல் குழுமம் ஒன்று ஆரம்பித்தோம். அவரவர்களின் பிரச்சினைகளை எளிதாகப் பகிரவும் அதை எப்படி நிவர்த்தி செய்வது என்பதைக் கலந்தாலோசிப்பதற்காகவும் உருவாக்கப்பட்ட அக்குழுவில் வீட்டிற்கு ஒருநபர் கட்டாயம் இணைய வேண்டும் என நானும் பக்கத்து பிளாக் உமாவும் வற்புறுத்தி வெற்றியும் பெற்றுவிட்டோம். இப்போது என்னவென்றால் புது பிரச்சினை. தினமும் ஒவ்வொருவரும் ஏகப்பட்ட செய்திகளைப் பகிருகிறார்கள். வாசித்தால் உருப்படியாக ஒன்றுமில்லை.

    எ பிளாக் நாய் சி பிளாக்கில் சிறுநீர் கழித்துவிட்டது அதற்காக பதினைந்து பேர் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். மற்றொருவர் தங்கள் குழந்தையின் பிறந்தநாள் விழாவிற்காக அழைப்பிதழ் அனுப்புகிறார். சுகன்யா ஆன்ட்டி மீந்துபோன சப்பாத்தியில் பக்கோடா எப்படிச்செய்வது என புதுவித ரெசிபியை நேற்றுஇரவு பகிர காலையில் சலீம் அங்கிள் கடும் கண்டனம் தெரிவித்து நாங்கள் மீந்த சப்பாத்தியை நாய்களுக்குப் போட்டு விடுவோம். எங்களுக்கு உங்கள் ஆலோசனை தேவையில்லை என எழுதியதால் அவரைப்பற்றிய பலரின் கருத்துக்கள் வந்தவண்ணம் உள்ளது. இடையில் என்னையும் உமாவையும் கண்டித்து நீங்கள் செய்திருக்கும் இந்த வேலையால் அமைதியாக இருந்த இந்த சொசைட்டியில் பிரச்சினைகள்தான் அதிகரித்துள்ளன. இதற்கு நீங்கள் இருவரும் பொறுப்பேற்று விளக்கம் சொல்லியே ஆகவேண்டும் என்கிறார்கள். இதை எப்படிச் சரிசெய்வது புரியவில்லை. முதலில் அம்மாவிற்கு விளக்கிச் சொல்லவேண்டும். இன்றுமுழுவதும் இதில் வேலை இருக்கும். இந்தக்குழுமத்திற்கென வரையரைகளையும் கட்டுப்பாடுகளையும் உருவாக்கவேண்டும்.

    அம்மாவை அழைத்து அனைத்தையும் சொன்னேன்.

    நிதானமாக அம்மா ஆரம்பித்தாள். மற்றவர்களின் நன்மைக்காக என்று நினைத்து நீங்கள் செய்யும்போது அதைப் புரிந்துகொள்ளாதவர்கள் பழிதூற்றத்தான் செய்வார்கள். எல்லாருக்கும் விளக்கமளித்துக்கொண்டே இருந்தால் எதற்காகத் தொடங்கினீர்களோ அந்நோக்கம் நிறைவேறாமலேயே போய்விடும். அவர்களின் வாய்க்கு நீங்கள் பூட்டுபோடவே முடியாது. இதைத்தான் நம்ம தாத்தாபாட்டி அம்பலம் தாழ் கூட்டுவார்னு பழமொழியாச்சொல்லுவாங்க. அதோட பொருள் ஊர்வம்ப அடக்க முயற்சிசெய்யறது ஊர்ப் பொதுவிடத்த பூட்டுபோட்டு காவல் காக்கறதுக்கு சமானம்னு. ரெண்டுமே முடியாத காரியம். எல்லாத்தையும் மறந்துட்டு உன் காரியத்தப் பாரு. அம்மா ஊக்கமளித்தாள்.

    Share