Tag: சந்தர் சுப்ரமணியன்

  • உழைப்பே உயர்வு தரும்…

     

    வளராத பொருளென்று வானுக்குக் கீழ்வாழும்
    .. வகையே தில்லை!
    துளிராக வருகின்ற துளிர்ப்பொன்றே மரமாகித்
    .. தொடரும் தோப்பாய்!
    களராக வாழ்வெல்லாம் கழியுங்கால் விழையெண்ணம்
    .. கனவாய்ப் போகும்!
    தளராத உழைப்புடையார் தாமெண்ணும் உயர்வையெலாம்
    .. தமதாய்ச் சேர்ப்பர்! (1)

     

    வில்லின்றோர் இலக்கடைய விரைகாற்றைக் கிழித்தன்றோ
    .. விலக்கும் அம்பும்!
    கல்லொன்றில் எறும்பூரக் கால்பட்ட இடந்தேய்த்துக்
    .. கரைக்குங் கல்லை!
    அல்லொன்றின் இருளழிக்க ஆதவனில் செந்தீயாய்
    .. அமையுங் கோபம்!
    செல்கின்ற வழியெங்கும் சிறப்பான உழைப்பிருப்பின்
    .. செயந்தான் ஆங்கே! (2)

     

    அலையாடும் கடல்சேரும் ஆற்றுக்குத் துளிநீரால்
    .. அமைந்த ஆதி!
    மலையேறும் போதெல்லாம் மனங்குவித்த முதலடியே
    .. மலைப்பைப் போக்கும்!
    விலையாகும் பொருளெல்லாம் விளைவிக்கும் திறன்கொண்ட
    .. விதையின் வீச்சே!
    தலையான பணியேற்கத் தரநெஞ்சின் முதலூக்கத்
    .. தவிப்பே போதும்! (3)

     

    செய்கின்ற செயலொன்றும் சிந்தனையும் தேர்ச்சியையும்
    .. தெரிதல் வேண்டும்!
    மெய்யொன்றி முனைப்பினையும் முயற்சியையும் ஏற்றாற்றும்
    .. முறைகள் வேண்டும்!
    ஐயங்கள் வரும்போதில் அவைதீர்க்க அறிஞர்கள்
    .. அருகே வேண்டும்!
    தொய்கின்ற மனச்சோகை தொலைத்திலக்கை நோக்கிமனம்
    .. தொடர்தல் வேண்டும்! (4)

     

    விட்டத்தை நோக்கிநிதம் விழித்திருப்பின் விழைகின்ற
    .. விடியல் இல்லை!
    சொட்டுங்கள் மலரறிந்து தொலைதூரம் சென்றளிகம்
    .. தொகுத்தாற் போலே
    திட்டங்கள் வேண்டுமவை தீட்டுதற்காய்த் தெளிவுடைய
    .. திறமை வேண்டும்!
    கட்டங்கள் வரும்போதில் கலக்கிமிலா மனத்திறத்தால்
    .. கடத்தல் வேண்டும்! (5)

     

    துயரங்கள் வரும்போகும்! தொலைதூரம் வழிகாட்டும்
    .. துணிச்சல் ஒன்றே
    பயில்கின்ற மடிநீக்கி பக்கத்தில் வெற்றிதனை
    .. பழகச் செய்யும்!
    அயர்வுக்காய்க் காரணங்கள் ஆயிரமாய் இவ்வுலகில்
    .. அமைந்த போதும்
    உயர்வுக்கோ ஒற்றைவழி! உண்மையுடன் நாமாற்றும்
    .. உழைப்பென் றொன்றே! (6)

    Share
  • சேய்நெஞ்சம் வேண்டும்!

    திங்கள்மேல் காட்டியே தித்திக்கச் சோற்றினில்
    தேன்கொஞ்சம் ஊற்றியன்பைச்
    … சேர்த்தென்றன் தாய்தரும் சேய்மைக்குள் இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    செங்குன்றின் மேலொரு தீப்பந்தம் போலெழும்
    சீர்வண்ணச் சூரியன்றன்
    … செவ்வண்ணஞ் சேர்கடற் செந்நீர்கண் டின்புறச்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    தெங்கங்காய் சீவிநீள் கோல்சேர்த்துச் செய்தொரு
    தேய்வண்டி வீதியோட்டிச்
    … செல்கின்ற போதினிற் சிந்திக்கா தின்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    சங்கொன்றில் நீரினைக் கொண்டூத வாய்வழிச்
    சத்தங்கள் கொப்பளிக்கச்
    … சாமத்தின் தேரைவாய்ச் சந்தத்தில் இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்

     

    தென்றல்கண் டாடிடும் தொய்ந்துப்பின் ஏறிடும்
    செவ்வானின் கண்கயல்போல்
    … செல்லுங்காற் றாடியின் நூல்பற்றி இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    தென்னம்பூ வீழ்ந்திட தோட்டத்தின் வேலியைச்
    சேர்ந்தோங்கும் மாமரத்தின்
    … சில்லென்ற நீழலில் தீயிலிட் டின்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    தென்மாட வீதியில் சேர்ந்தாட மாமயில்
    சென்றீந்த தோகையொன்றின்
    … சேய்வேண்டி புத்தகத் தேயிட்டுக் காத்திடும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    தின்கின்ற போதெலாம் தன்பங்கி லேதுளி
    தெய்வத்தின் பாகமென்றே
    … தின்னாமல் பிள்ளையார் சீர்பாதம் சேர்த்திடும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்

     

    செக்கொன்றைச் சுற்றிடும் செங்காளை மாடெனச்
    செல்வண்டிச் சக்கரத்தைத்
    … தேய்த்துந்திச் சுற்றியே தோட்டத்தில் இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    திக்கெங்கும் பார்வையில் சட்டென்று தோன்றிடச்
    சென்றென்றன் தந்தையின்தோள்
    … தொட்டென்னைத் தூக்கிடச் செய்தின்பம் கண்டிடும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    துக்கங்கள் சேர்ந்துளம் துன்புற்ற போதெலாம்
    தூக்கித்தன் தோளமர்த்தும்
    … தூய்நெஞ்சத் தாயவள் தோயன்பில் இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    சிக்கல்கள் ஆயிரம் சேர்ந்தென்னைத் தாக்கியும்
    சேதங்கள் யாவினையும்
    … சீர்செய்யும் சற்குரு சேய்மைக்குள் இன்புறச்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்

     

    முட்டுங்கள் வாழ்வெலாம் முன்செல்ல என்றெனை
    முட்டித்தான் முன்னெழுந்தே
    … முன்னேறும் என்மகள் கால்பற்றி இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    பட்டங்கள் பெற்றுமென் பல்லக்கில் வந்துமென்
    பாரெங்கும் சென்றுமென்ன
    … பாசத்தைப் பிள்ளைகள் பாற்கொட்டி இன்புறும்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    திட்டங்கள் தீட்டியென் செல்வத்தைத் தேடியென்
    தேடற்கண் தேய்வதற்கோ
    … சின்னப்பெண் வாயெழும் தேன்சொல்லி லின்புறச்
    … சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
    கட்டங்கள் வென்றுமென் கைவிட்டுப் போயுமென்
    காலத்தின் வீதியெங்கும்
    … கால்தத்தும் என்மகள் கால்பற்றி இன்புறும்
    … சேய்நெஞ்சே வேண்டுமென்பேன்

     

    Share
  • உழவனின் காதல்!

    விடியும் வேளை
    … விடியல் தேடி
    … வியர்வை விடுகின்றான் – உழவன்
    … விதையை இடுகின்றான்
    முடிவில் லாமல்
    … முன்செல் ஏர்ப்பின்
    … முயன்று நடக்கின்றான் – உழைப்பை
    … முதலாய்க் கொடுக்கின்றான்
    மடியில் லாமல்
    … மாடாய்த் தானும்
    … மண்ணை உடைக்கின்றான் – அதனுள்
    … மர்மம் படைக்கின்றான்
    அடியும் நுனியும்
    … அனைத்தும் பார்த்தே
    … அன்பால் வளர்க்கின்றான் – பயிராய்
    … அவனே துளிர்க்கின்றான்

    ஆளே இல்லா
    … அர்த்த சாமம்;
    … அல்லும் அழுகிறது – பனியாய்
    … அதுவே விழுகிறது
    காளை உழவன்
    … காணாப் பயிரும்
    … கண்கள் விழிக்கிறது – கனவாய்க்
    … கண்டு கழிக்கிறது
    நீளும் இலையை
    … நீட்டிப் பயிரே
    … நிலவை அழைக்கிறது – உழவன்
    … நிலையை உரைக்கிறது
    மூளை மயங்கி
    … முத்துப் பனியில்
    … முங்கி நனைகிறது – அதனால்
    … மோகம் தணிகிறது

    அல்லை விரட்டி
    … அன்போ(டு) உழவன்
    … அங்கே விரைகின்றான் – கண்டே
    … அல்லோன் மறைகின்றான்
    சொல்லில் லாமல்
    … சொக்கும் பயிரின்
    … தோகை பார்க்கின்றான் – பனியின்
    … தோய்வால் வேர்க்கின்றான்
    புல்லே முத்தம்
    … பொழிந்த தென்றே
    … பொங்கிச் சினக்கின்றான் – நெஞ்சம்
    … பொருமக் கனக்கின்றான்
    கல்லாய் ஆகிக்
    … கலங்கி உள்ளம்
    … கதறிக் கரைகின்றான் – புல்லைக்
    … களைந்தே எறிகின்றான்

    வீசுங் காற்றில்
    … விளைந்த பயிரும்
    … வெற்றாய்ச் சலசலக்கும் – அதிலும்
    … விஷயம் பலவிருக்கும்
    பாசத் தோடு
    … பழகும் உழவன்
    … பாடும் பாட்டிருக்கும் – காதற்
    … பரிசாய்ப் பூப்பிருக்கும்
    நேசங் கொண்டே
    … நெஞ்சோ டிணையும்
    … நினைவுச் சேகரிப்பும் – உணர்வில்
    … நிலவும் தீஎரிக்கும்
    ஆசைக் காதல்
    … அடைந்தே உள்ளம்
    … அனலாய் உறைந்திருக்கும் – அதனால்
    … அதில்நெல் நிறைந்திருக்கும்

    தோகை வெளுக்கத்
    … தொய்ந்தே பயிரும்
    … தொலையும் நாள்நெருங்கும் – உழவன்
    … தூக்கத் தோளுறங்கும்
    மோகம் கொடுத்த
    … மொத்தப் பரிசாய்
    … முத்துச் சரமிறக்கும் – பின்
    … முடிவை வரவேற்கும்
    சோகம் கசக்கும்
    … துவைக்கும் நெஞ்சை
    … துண்டித் ததுபோகும் – நினைவே
    … துணையாய் அசைபோடும்
    வேகும் நெஞ்சின்
    … வேதனை தீர்க்கும்
    … விதமாய் பணியிருக்கும் – கையில்
    … விதைநெல் மணியிருக்கும்

     

    Share
  • உளியின் காதை!

     

    முயற்சியை முதலில் தூண்டி
    .. முனைந்திடும் நேரம் காட்டி
    இயற்கையின் இரும்புத் தாதை
    .. ஏந்தியோர் கலத்தில் இட்டு
    மயக்குறு நிலையிற் காய்ச்சி
    .. மறுவுரு பிறக்கச் செய்யும்
    வியத்தகு வாழ்வின் போக்கில்
    .. விளைந்திடும் உளியென் காதை (1)

    மண்ணெலாம் வென்ற பின்னர்
    .. மன்னவன் நெஞ்சில் ஓர்நாள்
    விண்ணெலாம் அளந்த தேவன்
    .. விந்தையை என்றும் போற்றும்
    வண்ணமோர் கோவில் செய்ய
    .. வந்தநல் ஆசை அந்த
    எண்ணமோ டியைந்து பின்னர்
    .. எழுந்ததே பெரிய கோவில் (2)

    மலையுடைத் தெறிந்த தும்நான்;
    .. மண்ணடி வீழ்ந்த பின்னர்ச்
    சிலைகொளும் அளவிற் சீராய்ச்
    .. செப்பனிட் டதும்நான்; மெல்ல
    தலைநிறை கனத்தி னூடே
    .. தஞ்சையை அடைந்த போதும்
    கலையெனும் உலகின் ஓங்கும்
    .. கற்பனைச் செங்கோல் நானே (3)

    கல்லெலாம் என்றன் முன்னர்க்
    .. கதறிடும் வண்ணம் என்னால்
    சில்லுடைந் தெகிரக் கண்டு
    .. சிரித்துநான் இன்பங் கண்டேன்
    மெல்லவென் கூர்மை தீட்ட
    .. மேனியை வாட்டும் தீயால்
    சொல்லொணாத் துயரம் உற்றேன்
    .. சுருங்கிடத் தெளிவு கொண்டேன் (4)

    கற்பனை ஓட்டங் காட்டிக்
    .. கல்லொடு காதல் செய்தேன்;
    நற்றிறன் நயத்தை ஊட்ட
    .. நாணுமக் கற்கள் என்றன்
    விற்பன விந்தை கண்ட
    .. வியப்பினில் விரைத்து நிற்க
    நிற்பவை நிசமோ என்னும்
    .. நிலைதனை ஊட்டி நின்றேன் (5)

    உச்சியை நோக்கிக் கற்கள்
    .. உயர்ந்துவான் தொட்டு நிற்க
    மெச்சிடும் வண்ணம் எங்கும்
    .. மேன்மையாய்ச் சிற்பஞ் செய்யும்
    தச்சனின் கரத்தார் நூலால்
    .. தாவிடும் பொம்மை போலே
    இச்சைகள் யாவும் செய்யும்
    .. இயந்திரம் ஆகி நின்றேன் (6)

    நிலமெழு சுவரின் நீளம்
    .. நீண்டிடச் செய்தோன் நானே!
    பலவிதத் தூண்கள் தாங்கும்
    .. பரப்பினைப் படைத்தோன் நானே!
    தலையமர் பெருத்த கல்லைத்
    .. தழுவியோன் முதலில் நானே!
    உலகினில் உயர்ந்த கோவில்
    .. உயர்வினை உணர்ந்தோன் நானே! (7)

    திண்ணிய கூர்மை செய்யும்
    .. திறன்பல என்னில் கண்டு
    நுண்ணிய வேலைக் கெல்லாம்
    .. நுகர்வரென் சேவைக் காக;
    கண்ணுதல் உருவங் காண
    .. கல்லினைக் குடைவ தற்காய்
    எண்ணினர் என்னை, அன்றே
    .. இவ்வுயிர்ப் பயனைப் பெற்றேன் (8)

    சித்தனின் சிந்தை சற்றும்
    .. சிதைந்திடா வண்ணம் மெல்லத்
    தத்துமென் முனையைக் கொண்டே
    .. தேவனின் உருவம் கண்டார்;
    கொத்தியென் உயரம் குன்றக்
    .. குட்டையாய் போன தாலே
    அத்தனின் அகன்ற பாதம்
    .. அதனடி முட்டாய் நின்றேன் (9)

    ஆனனென் அகந்தை கண்டான்;
    .. ஆணவம் அழிக்க நின்றான்;
    தானமாய் அமைந்த மெய்யைத்
    .. தரையொடு நசுக்கி வென்றான்;
    ஊனமாய் அமைந்த வாழ்வும்
    .. ஒழிந்தது; மெல்ல மெல்ல
    ‘நானெ’னைப் பிரிந்த நேரம்
    .. நம்பனின் பார்வை என்மேல்! (10)

    Share
  • ஒரு ரசிகனின் பயணம்!

    உத்தமன் பேர்பாடி
    விம்மி விம்மி மெய்ம்மறந்து
    மார்கழிப்பூ மலர்கின்ற காலம்!

    மௌனமும் ஒலியும்
    தத்தம் முரண் நிலைகளை மறந்து,
    மெல்ல மெல்ல
    ஒன்றில் மற்றொன்றாய் மயங்கிப் பரவ,
    மோகமாய் முகிழ்த்தெழுந்த சுருதி,
    சூழலை இலேசாய் உரசும் நேரம்!

    அந்த உரசல்களில் உயிர்த்த சுவரங்கள்
    ஒன்றோடொன்று கைகோத்து
    மௌனத்தை வெட்டும் கணங்களில்
    மூச்சிழந்த மௌனம்
    முனகலாய் எழுகிறது!

    ‘ம்’ என்றே மௌனம்
    மெல்லத் தன் நிலையுடைக்க,
    சுவரங்கள் அந்த ஒலிக்குறிப்பைத்
    தமதாய்ச் சுவீகரித்துக்கொள்கின்றன!

    மௌனத்தின் கணங்களைக்
    கரைக்கத் தொடங்கும் சுவரங்கள்,
    வெவ்வேறு வரிசையில் அமைந்து,
    கீழ்மேலாய்த் தங்களுக்குள்ளே
    ஸ்தாயில் திரிந்தும்
    கமகமாய்ப் பொடிந்தும்
    காலங்களை அளந்துகொண்டிருக்க,
    மௌனம் மெல்ல மெல்ல உறைந்து
    ஸ்படிகமாகிச் சுவரங்களைப்
    பிரிக்கும் புள்ளிகளாய்த்
    தன்னைப் பிரித்துக் கொள்கிறது!

    மௌனத்தை உடைத்தெழுந்த சுவரங்கள்,
    மெல்லிய இழைகளாய்,
    இராகங்களின் சாயலில்
    இரகசியமாய்ப் பிரவேசிக்கின்றன!

    இரகசியத்தை அம்பலப்படுத்தும்
    தானம், மெல்லத் தன்நிலையெடுக்க,
    வெற்று ஒலிக்குறிப்புகள்
    எழுத்துகளாய் ஏற்றம் பெறுகின்றன!

    அந்த ஏற்றத்தின் உச்சமாய்
    பல்லவி பளிச்சிட,
    சொல்லாற்றின் முதற்சொட்டு
    சுழித்தெழுகிறது!

    சொற்களின் வீரியத்தில்,
    சுவரங்கள்,
    தாங்கள் தோற்பதாய் நினைத்து,
    எழுத்துக்களின் ஏற்றத் தாழ்விலெல்லாம்
    தங்களை விதவிதமாய் நிரவி
    தங்களின் நிலைப்பாட்டை
    உறுதி செய்துகொள்கின்றன!

    குரல் தன் கற்பனை வளத்தால்
    சுவரங்களையும் வார்த்தைகளையும்
    சுழற்றிச் சோதிக்கப்
    பிரவாகமாய்ச் சங்கதிகள்!

    அந்தச் சங்கதிப் பிரவாகத்தின்
    சௌந்தர்ய அலைகளில்,
    திக்குமுக்காடித் தன்னிலை மறந்து,
    தவழ்ந்தோடும் இலையாய்,
    ஒரு ரசிகனின் பயணம்!

    Share
  • நிரந்தரக் கவிதைகள்!

     சந்தர் சுப்பிரமணியன்

    books55

    ஆயிரம் கவிதை நூல்கள்
    .. அருஞ்சுவைத் தமிழிற் கண்டோம்
    போயின காலம் யாவும்,
    .. போயினும் போகா தின்றும்
    வாயினில் வழக்கில் நம்முன்
    .. வாழ்ந்துகொண் டேயி ருக்கும்
    தோயுந்தீங் கவிதை ஏதோ?
    .. தொகுத்தனம் கவிதை யாலே (1)

    ஊரெலாம் தமதே என்றான்,
    .. உறவினர் எவரும் என்றான்,
    சாருநற் பண்பும் தீதும்
    .. தருவதால் வாரா தென்றான்;
    நேரிய வழிகள் எல்லாம்
    .. நிறைந்துள கணியன் பாடல்,
    நீருள வரையில் வாழும்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (2)

    இனியநற் சொற்கள் அன்பை
    .. இயல்புடன் அளிக்கத் தோதாய்க்
    கனிகளாய்க் காத்தி ருக்கக்
    .. காய்ந்திடும் சொல்லாற் பேச்சை
    முனைவதில் பயனே இல்லை;
    .. முறையுடன் இனிமை தன்னை
    நினையெனும் குறளே மண்ணின்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (3)

    நற்றுணை நமக்கு நீறே
    .. ஞானசம் பந்தன் கூற்று;
    மற்றெதும் தேவை யில்லா
    .. மந்திரம், அதுவும் நீறே
    சொற்களிற் சுவையைச் சேர்த்துச்
    .. சுந்தர மாகும் நீற்றை
    நிற்குமோர் விதமாய்ச் சொன்னான்;
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (4)

    வஞ்சியை மாடம் ஏற்றி
    .. வளைந்தவள் விழிகள் நோக்க
    மிஞ்சிடும் அழகன் தன்னை
    .. மிடுக்குடன் நடக்க வைத்துக்
    கொஞ்சிடும் அவர்தம் பார்வை
    .. கொடுத்தனன் நமது கண்ணில்;
    நெஞ்சினுள் கம்பன் தைக்கும்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (5)

    எத்தனை கோடி யென்றான்
    .. எழுமெலாம் இறையே என்றான்
    சித்தினை அசித்தோ டேற்றும்
    .. சிந்தையின் தெளிவி னாலே
    பக்தியின் நிலையைப் போற்றி
    .. பாரதி வழங்கும் பாடல்
    நித்தமும் நெஞ்சில் நிற்கும்
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (6)

    கருப்படு பொருளைக் கண்டு
    .. கவிதையுள் அதனைக் கூட்டி
    உருப்பட வைக்கும் விந்தை
    .. உணர்ந்தவன் கவிஞன் என்னும்
    பொருட்பட கண்ண தாசன்
    .. புதுநிலைக் கணித எண்ணம்
    நிரப்பியப் பாடல் ஒன்றே
    .. நிரந்தரக் கவிதை யன்றோ (7)

    ஓங்கிடும் மொழியிற் சந்தம்
    .. ஒலிக்குநல் தொடையைத் தேர்ந்து
    பாங்குடன் கருத்தைச் சேர்த்துப்
    .. பாட்டினுட் பொருளாய் யாத்துத்
    தேங்கிடும் அமுதச் சாறாய்த்
    .. தேந்தமிழ்ச் சொற்கள் கோக்க
    நீங்கிடா தொலிக்கும் எங்கும்
    .. நிரந்தரக் கவிதை அன்றோ (8)

    பொட்டினில் அறைந்தாற் போலே
    .. புலன்களை எழுப்பச் செய்து,
    கொட்டிய முத்தாய்ச் சொற்கள்
    .. கொஞ்சிடப் பொருளைக் கூறிச்
    சொட்டிடும் தேனாய் நெஞ்சில்
    .. சுகந்தரும் சந்தப் பாட்டே
    நிட்டையிற் கூட நிற்கும்
    .. நிரந்தரக் கவிதை அன்றோ (9)

    Share
  • ஒதுங்கிய ஊர்மிளை!

    ஒதுங்கிய ஊர்மிளை!
    (இலக்குவன் ஊர்மிளையைப் பிரியும் காட்சி)

     

    நகர் நீங்கு படலத்தில் மூவரும் நகரை நீங்குவதற்கு முன், இலக்குவனனுக்கும் அவன் மனைவி ஊர்மிளைக்கும் இடையே நடந்த உரையாடலாய் அமைந்தது இப்பாடல். கம்பனின் நகர் நீங்கு படலத்தில் இலக்குவன் மற்றும் ஊர்மிளை இருவரும் இத்தருணத்தில் பேசுவதாக எவ்விதக் குறிப்பும் இல்லை. இந்த பாடலின் முதல் அடி கம்பன் கொடுத்ததே. இக்காட்சியின் இடத்தைக் குறிக்கவே கம்பனின் அடியைக் கொண்டு ஆரம்பித்துள்ளேன். கம்பனின் அப்பாடலைத் தொடர்ந்து வரும் காட்சிகளாக என்னுடைய பாடல் வரிகளை எண்ண வேண்டுகிறேன்.

    சீரை சுற்றித் திருமகள் பின்செல
    ஊரும் சென்றது யிர்த்துணை நாயகன்
    மூரி விற்கை இளையவன் மாளிகைச்
    சேர வாயிலாய் ஆயினள் ஊர்மிளை

    தேடி வந்தவன் தேவியின் நெஞ்சடை
    பாட னைத்தையும் பார்வையில் வாங்கினன்
    ‘நாட னைத்தையும் நல்கிடும் அண்ணலின்
    பீட கற்றிடப் பிரிகுவம்’ என்றனன்

    ‘அன்னை என்றனம் அண்ணறன் தாயினை,
    ஒன்றென் றாகிடின் ஒன்றதே இன்னலும்;
    பின்னைச் செல்குவம் பேணுவம் தாயவள்
    என்னை ஈன்பயன் ஈதெனக் காண்குவம்’

    என்றி யம்பிட இயம்புவள் ஊர்மிளை
    ‘நன்று நும்நிலை நாமதற் கொப்பினும்
    ஒன்று வேண்டுவம் உம்மிடம் யாசகம்;
    பின்னர் யாம்வரும் பேறெமக் கருள்கவே’

    ‘மண்ணை நீக்கெனும் மன்னவன் ஆணையால்
    அண்ணல் நீங்கினன் அவ்வழி யாமுளோம்;
    பெண்ணைக் கானகப் பெருவழி சேர்த்திடும்
    எண்ணம் எமக்கிலை; எண்ணுக’ என்றனன்

    ‘அண்ணல் முன்னவர் ஆனதால் செல்கிறீர்!
    மண்பெண் சானகி எம்முறைச் சோதரி;
    பெண்ணென் றானதால் போனதோ சாத்திரம்?
    உண்மை சொல்க’வென் றுரைத்தனள் ஊர்மிளை.

    ‘முன்னை ஓர்நிலை, முற்றிலும் வேறினி;
    அன்னை மூவரை ஆரினிக் காப்பது?
    தன்னைப் பார்த்திடின் தாயினைப் பார்ப்பதார்?’
    என்று நின்றனன் இணைவிழி நீருடன்

    ஓங்கும் உணர்வுகள் ஒதுங்கும் போதினில்
    தாங்கும் தூணெனத் தானெழும் மாமதி;
    வீங்கு கண்களில் விரையும் நீருடன்
    ஏங்கும் ஏந்தலை இளையவள் ஏந்தினள்!

    உங்கள் கண்கள்நீர் உகுத்திடும் போதெலாம்,
    எங்கண் வற்றிடும் காரணம் அறிகிலோம்
    தங்கள் கண்களில் தங்குநீர் எம்மதோ?
    அங்ங ணமென்றிடின் அழுதிடா துளமினி!

    கானில் இருவரைக் காத்திடும் பணியுமக்
    கான தால்விழி அசைத்திடா திருந்தவை
    சேனை யாயல்பகல் சேர்ந்து காத்திட
    வானின் இறைவனை வணங்கி ஏத்துவம்

    அல்லும் பகலுமாய் அடர்ந்தநற் காட்டினுள்
    தொல்லை அறுத்திட தோள்வலி நாயக
    எல்லை யாகியே இருவரைக் காத்திடும்
    இல்லை துயிலினி எமக்குமாம் என்கவே

    நின்று பேசினள் நேரிழை ஊர்மிளை
    ‘நன்று நன்றெ’ன நாயகன் நோக்கவே
    ‘இன்று கண்களில் ஏந்திய உம்முரு
    என்றும் வாழ்ந்திடும் என்விழி’ என்றனள்

    சென்ற நாயகன் சென்றிடும் பாதையை
    ஒன்றி அவளுயிர் ஓடிடும்; ஊனுடல்
    மன்றம் நின்றிட நாயகன் இலக்குவன்
    தன்னைக் கண்களில் தாங்குவள் ஊர்மிளை

    Share
  • நந்தியின் நினைவுகள்!

    சந்தர் சுப்பிரமணியன்

    thanjai

    கல்லுள் உறைந்த கனத்த இருளில்images (1)
    சொல்லே நுழையாச் சூன்ய அடர்த்தி;
    இமைப்ப தற்கும் இடமே தங்கே?
    சுமக்கும் நினைவு சொல்லையுங் கசக்கும்;
    இருளே உலகம், இருளே உடலம்,
    இருளே உணர்ச்சி, இருளே உணவும்.
    ஆயிர மாயிரம் ஆண்டுகள் பலவாய்ப்
    போயின பின்னும் பொதிந்து கிடந்தேன்;
    எதுகல் எதுநான் என்றுளம் அறியாப்
    புதிராய் விடைநான் புதைந்து கிடந்தேன்
    அன்றென் உடலில் அதிசய அதிர்வு;
    மென்மலர் என்னொடு முட்டிடும் உணர்வு;
    நெஞ்சின் நரம்புகள் நெகிழ்ந்த நொடியில்,
    அஞ்சியென் சொற்கள் அமைந்தன நனவாய்;
    யாரோ மனிதன் என்னை அழைக்கப்
    பாறை முழுதும் பரப்பிடும் உளிச்சொல்;
    தட்டத் தட்டத் தளர்ந்ததென் நரம்புகள்,
    முட்டவென் உணர்வின் முளைகள் விழிப்பு;
    அலைமனம் உளிபோல் அடித்துக் கொள்ளப்
    புலன்கள் புலர்ந்தன புதிதாய் மீண்டும்.
    ஏதோ அரவம், என்னைச் சுற்றி,
    மோதும் சத்தம் மொழியும் புதிராய்;
    மென்மைப் பேச்சும் மெல்லுளி வீச்சும்
    என்னில் என்னை இனம்பிரித் தெடுக்கும்;
    தடவிக் கொடுக்கும் தச்சன் கையால்
    உடலின் உணர்வை உணர்ந்தேன் மீண்டும்;
    கல்லின் இறுக்கம் கழியும் போதில்
    மெல்லிய ஒளியால் மேனி குளிக்கும்;
    முதுகை வளைத்துச் சோம்பல் முறிக்க
    மெதுவாய்த் தென்றல் மீண்டும் தொட்டது
    மீண்டும் பிறந்தேன், மீண்டும் பிறந்தேன்,
    காண்பேன் மீண்டும் கண்ணுதல் பாதம்
    துன்பச் சுமையது தீரக் கண்டேன்,
    இன்பச் சுவையாய் ஈசன் எண்ணம்;
    இமையின் பாரம் இறங்க உளியால்,
    உமையோன் முன்னே ஒளியாய்ச் சிரித்தான்
    மெய்யாய் என்றன் மேனி சிலிர்க்க
    ஐயை மீண்டும் அருகிற் கண்டேன்
    உச்சம் அளந்த உமையோன் காட்டித்
    தச்சன் செயலால் தாயாய் நின்றான்
    சோழன் அன்றென் தோளைத் தொட்டே
    வாழும் படியாய் வாழ்த்திச் சென்றான்;
    வண்ண மெங்கும், வழிபா டெங்கும்,
    கண்கள் பூக்கும் கலைநிகழ் வெங்கும்;
    ஆண்டான் என்றும் அடிமை என்றும்
    தோன்றா தெண்ணம் தொழுதார் தெய்வம்;
    மெல்ல நிகழ்வுகள் மெலிந்திடக் கண்டேன்
    சொல்லுங் கூட தொலைதற் கண்டேன்;
    என்னுள் முன்னர் இருந்த விரைப்பை
    முன்காண் மனிதர் மனதுட் கண்டேன்
    வருடந் தோறும் வனப்புங் குறைய
    பெரிய கோவிற் பெருமை குறைந்தது;
    அருளை வழங்கும் ஆண்டவன் சந்நிதி
    இருளில் மறையவென் இதயம் நொந்தது;
    என்றோ ஒருசிலர் என்முன் வருவார்,
    நன்று நன்றென் நயத்தை புகழ்வார்;
    ஓதுவார் வாய்ச்சொல் வேதம் எங்கே?
    மாதரிங் காடும் நாட்டியம் எங்கே?
    போயின யாவும் புதிராய், மெல்ல
    ஆயின ஆயிரம் ஆண்டுகள் ஆமே
    கல்லை உடைத்துக் கண்டதும் இஃதே,
    கல்லாய்ப் மாறிய கள்ள உலகம்;
    என்னை வடித்தான் அன்றோர் சிற்பி,
    என்றோ வடிப்பான் இந்த உலகை?
    உருகும் கல்லும், உணர்வும் விழிக்கும்,
    திருவருள் வருநாள் தேடிக் கிடந்தேன்;
    பெரிய கோவில் பெருமை இழந்தும்
    உரியோர் உளத்தே உணர்வே இல்லை
    காலவை இரண்டும் கல்லாற் பிணைய
    காலமே எண்ணி காத்துக் கிடந்தேன்
    ஒலித்த தொருநாள், ஓளியுங் கூட;
    சிலிர்த்தே என்றன் சிந்தை கலைந்தது;
    நால்வரின் பாடல் நாலாத் திசையும்,
    மேல்வரும் பெண்கள் மேதகு நாட்டியம்
    ஓதுவார் பாட்டின் ஒலியெலாஞ் சேர்ந்து
    மோதிடக் கல்லை, மோனம் கலைந்தது;
    ஆயிரம் மங்கையர் ஆடிட அரங்கில்
    ஓயா மகிழ்ச்சி, ஒலியின் கிளர்ச்சி;
    ஆகா! இதுதான் ஆயிரம் ஆண்டில்
    போகா திருக்கும் புதுமை, தமிழில்
    அந்தோ! மகிழ்ச்சி அன்றோர் நாளே!
    விந்தை சென்றது விடுத்தென் புறத்தை;
    மீண்டும் மௌனம் மேவிய தென்னுள்,
    காண்பது மீண்டும் காரிருள் ஒன்றே!
    ஐயே எனக்கோர் அருள்செய வேண்டும்,
    பொய்யாய் உலகம் போன தின்று;
    பொல்லா உலகம் பொய்க்கும் போதில்
    கல்லாய் என்னைக் காட்டுக மீண்டும்;
    உறைதல் ஒன்றே உணர்வின் துவக்கம்,
    உறையும் வணமென் உருசெய் ஐயே!

    Share
  • என்னுலகம் 2300

    சந்தர் சுப்பிரமணியன்

     

    உலகதன் ஓட்டம் போலே ஓடிடும் நாள்கள் எல்லாம்!
    நிலையெலாம் மாறும், ஏதும் நிரந்தரம் ஆகாப் போதில்,
    புலருமிந் நாளை ஒட்டிப் போகுமுந் நூறாம் ஆண்டில்
    நிலத்தெழு மாற்றம் என்னே? நினைப்பதன் பதிவே இப்பா! (1)

    வளருமந் நாளில் மண்ணை வகுத்திட நாடென் றேதும்
    அளவிலை, எல்லை யென்னும் அவையெலாம் மாறி ஒன்றாய்
    உளநிலம், உள்ளோர் வாழ்வை உழற்றிடும் போருக் கென்றோர்
    களமிலா உலகம், காதல் கருத்தினில் உறையும் காலம்! (2)

    குழவியை வயிற்றில் ஏந்திக் கொடுக்குமக் காலம் எல்லாம்
    பழைமையாய் மாறிப் போகும்; பண்டமாய் ஆய்வுச்சாலைக்
    குழலிடை அண்டம் விந்து கொண்டதை வளர வைக்கப்
    பழகிடும் முறையே எங்கும் பழக்கமாய் ஆகும் காண்க! (3)

    வருவது பெண்ணா ஆணா? வளர்ப்பவர் விருப்பம் ஆகும்!
    மரபணுத் தேர்வின் மூலம் வருகிற பிணிகள் எல்லாம்
    கருவினில் உள்ள போதே கண்டவை நீங்கச் செய்யும்
    மருத்துவம் கொண்ட தாலே மானுடம் செழிக்கும் மேலும்! (4)

    சிறப்புடை மரபைத் தேர்ந்து செம்மையை மேலும் கூட்டித்
    திறமையை குவிக்கச் செய்து தேர்ந்திடும் துறையைச் சார்ந்த
    அறிவிலே ஆழம் காணும் அமைப்பினை மூளை சேர்த்துப்
    பிறப்பதை வளமை ஆக்கும் பெருஞ்செயல் எளிதாம் அந்நாள்! (5)

    உடல்நிலை ஆய்ந்து காணும் உப்புடன் கொழுப்பும் மற்ற
    திடநிலைக் கூறுக் கேற்ப தெரிந்துதம் உணவின் ஊட்ட
    எடைதனை சமச்சீர் ஆக்கி எழுதிய வாய்பா டொத்த
    கடையுண வொன்றே நன்றாய்க் கருதுவர் அந்நாள் காண்க! (6)

    அருஞ்சுவை அதுநா காணும் ஆழ்மனப் பழக்கம் அன்றோ!
    ஒருதனி வேதிச் சேர்வை உணவுடன் நாவுக் கென்றே
    தரும்விதம் புதிதாய்த் தோன்றும்! தனிநபர் சுவைக்கும் போக்கில்
    வரும்பல விதமாய்ச் சேர்வை! வளர்ச்சியென் றிதையே காணும் (7)

    தணலிடை உயிரை வாட்டி தான்பெறும் வாய்ச்சு வைக்காய்
    கணமொரு விலங்கை கொல்லும் கடைநிலை இலையென் றாகும்!
    மணமுடன் சுவையும் சேர்த்து மகிழ்ச்சியை ஊட்டும் நல்ல
    உணவென இறைச்சித் துண்டம் உருபெறும் குளோனிங் ஊடே! (8)

    தாவரம் அழிக்கும் செய்கை தவறென வாகும் அந்நாள்!
    பூவொடு பழம்காய் யெல்லாம் பறிப்பது குற்றம் ஆகும்!
    நாவினுக் கேற்ற தாக நற்சுவைப் பொருளை எல்லாம்
    மேவிட குளோனிங் ஒன்றே முறையென வாகும் காண்க! (9)

    மரங்களின் அடர்த்தி தன்னை மதிப்பிடும் கருவி கொண்டு
    நிரம்பிய காடே எங்கும் நிலைத்திட வழிகள் சேர்க்கும்;
    தரமுடை கருவி, திட்டம், தனிநிலை இயக்கம் கொண்டு
    பரவிடும் பசுமை தன்னை பரப்பிடும் உலகம் எங்கும்! (10)

    விலங்குகள் வாழும் காட்டில் விதிபல மனிதர்க் காகும்!
    உலவிடத் தடையாம் அங்கே! உடைமைகள் மனிதர்க் கில்லை!
    அலைக்கதிர் வீச்சால் மாஆர் அடர்த்தியை அறிவால் ஆய்ந்து
    தலைமுறை காக்கும் செய்கை சாதனை படைக்கும் காண்க! (11)

    திடநிலைச் சுவர்கள் எல்லாம் தீதென உலகம் காணும்!
    இடமது விரியும், மண்ணால் எழும்பிய சுவரே எங்கும்!
    அடர்நிலை நகரம் மாறி அண்மையில் கிராமம் சேரும்!
    தொடர்ந்திடும் வாழ்வில் மாசு தொலைந்திடும்; தூய்மை எங்கும்! (12)

    ஒளிவழித் தொடர்பை ஏற்கும் உலகுடை பணிகள் யாவும்;
    களப்பணி குறையும்; வீட்டுக் கட்டிலில் அலுவல் யாவும்;
    தெளிவினைப் பெறுவ தற்காய் செய்திகள் இணையம் தன்னில்
    அளவிலா தமையும்; வாழ்க்கை அமைந்திடும் அமைதி யோடே! (12)

    செப்படி வித்தை போன்றே தொலைவுள சுற்றத் தாரின்
    முப்பரி மாணப் பிம்பம் முழுமையாய்க் கண்முன் தோன்றும்!
    அப்படி ஆகும் காலம் அந்நியம், தூரம் யெல்லாம்
    ஒப்பிலை என்றாய் வையம் ஒருங்கிடும்; ஒன்றென் றாகும்! (13)

    சேதியைக் காட்சி யாகச் சேர்த்திடும் நுட்பத் தாலே
    பாதைகள் குறைந்து போகும்! பயணமும் அரிதாய்ப் போகும்!
    வீதியே இல்லாப் போதில் விரைந்திடும் வாழ்வே தில்லை!
    ஆதியில் மனிதர் கண்ட அமைதிசேர் வாழ்வே மீளும்! (14)

    இயற்கையை ஒத்த வாழ்வில் இலையினி உணவுப் பஞ்சம்;
    வயிற்றெழும் பசியைப் போக்க வளமுடை மண்ணே ஈயும்!
    முயற்சியை மேலும் காட்ட முயல்பவர் இணையம் தன்னில்
    வயப்படும் வாய்ப்பை ஏற்று வளமையைக் காண்பர் அந்நாள்! (15)

    மண்மிசை விளையா டல்கள் மற்றொரு புதுமை காணும்!
    எண்திசை யாவும் பிம்பம் எழு மின் மன்றின் ஊடே
    கண்வளர் காட்சி யோடு கலந்துளம் காயம் நீக்கி
    எண்ணமாய் எழுந்து நீழல் இயல்பெனும் மாயை ஏற்கும்! (16)

    பிறப்பினால் சமய மேற்கும் பிழையினி மறைந்து போகும்!
    முறைப்படி சிறுவர் வாழ்க்கை முடியுமப் பொழுதில் எல்லா
    மறைகளும் ஓதிப் பார்த்து மனத்தெழும் பேச்சைக் கேட்டு
    நிறையுளத் தோடொன் றேற்கும்; நீக்கிடும் நிலையும் பார்க்கும்! (17)

    வாயிலங் கெட்டோ டென்கோண் வடிவிலோர் மன்றம் ஊரின்
    கோயிலாய் அமையும்; மையம் கொள்ளிடம் விண்ணை நோக்கும்!
    தாயெனக் காக்கும் ஏகம் தன்னுரு திரிந்து வெவ்வே
    றாயினன் என்னும் உண்மை அனைவரும் அறிந்தே வாழ்வார்! (18)

    ஒவ்வொரு மொழியும் எழுத்தை, ஒன்றிலை, இரண்டாய்க் கொள்ளும்,
    செவ்வியல் வழக்க மென்றும் சேர்ந்தமை வடிவ மென்றும்!
    இவ்வியல் பாலிம் மண்ணின் எழுத்தெலாம் இணையும் அந்நாள்!
    அவ்விதம் ஆகு மாயின் அனைவரின் மொழியும் ஒன்றே! (19)

    எத்தனை எழுச்சி பெற்றும் இயல்பினில் ஏழ்மை செல்வம்
    இத்தர வேற்று மைகள் இயற்கையாய்த் தொடரும் போதும்
    நித்தியத் தேவை யாவும் நிலைபெறக் கிடைக்கச் செய்யும்
    அத்தகு நிலையை மாந்தர் அனைவரும் அடைவர் அந்நாள்! (20)

    Share
  • வழிகாட்டும் அழகு!

     சந்தர் சுப்பிரமணியன்

     

    உலகாளும் சேயன், உமையாளின் பாலன்,
    .. உறவாடும் நெஞ்சன் அழகன்,
    விலகாத இன்னல் விரைந்தோட வாழ்வின்
    .. வினைதீர்க்கும் வேலன், அழகன்,
    கலையாத காந்தள் கலைமார்பன், கந்தன்,
    .. கவின்தெய்வ யானை அமையின்
    வலமாரும் வேளின் வரைஆறுங் காண
    .. வழிகாட்டும் கீரன் உரையே (1)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 1-11)

     

    அலைமோதும் ஆழி அதில்வாழும் சூரர்
    .. அவரோடு போரில் பொருது
    தலைஆறு கொண்ட உருவோடு சூரன்
    .. தனையன்று வேல்கொண் டழிக்கும்
    நிலைகண்டு பேயும் நிலங்கண்ட சூரர்
    .. நிணங்கொண்டு பாடும் விதமாய்
    மலர்மேவு மாவின் மரங்கண்டு வீழ்த்தும்
    .. மறங்கொண்ட வீரன் குகனே (2)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 46-60 )

     

    மலர்மாலை வாசம் மணிபேசும் பட்டம்
    .. மதயானை கோல நுதலில்;
    வலிவான காற்றின் வடிவாக கூற்றம்
    .. வரும்போன்ற வேழம் அதன்மேல்
    அலங்கார ரூப அழகோடு காதின்
    .. அணிதாரை யாகி ஒளிர
    வலங்காணும் வேலன் முகம்வானில் நாளும்
    .. வலங்காணும் கோல நிலவே (3)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 78-90 )

     

    உலகுள்ள மாயை ஒழிகின்ற வண்ணம்
    .. ஒளியூட்டும் ஒற்றை முகமே
    நிலைநல்ல தாக்கும் முகம்வேறு வேத
    .. நிலைகாப்பின் காக்கும் முகமே
    நிலவன்ன ஞான முகம்வேறு போரில்
    .. நிணம்காணும் வேறு முகமே
    மலைவள்ளி காணும் முகம்வேறு; வேலன்
    .. முகம்ஆறு காண்க தினமும் (4)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 91-105)

     

    உலகோடும் எல்லோன் உடனோடும் ஆற்றல்
    .. உடையோரைக் காக்கும் ஒருகை
    நிலையாகி நிற்கும் இடையேறும் ஒன்று;
    .. நிலையேகும் ஒன்று தொடையில்;
    மலையொத்த மாவின் மதமாளுங் கோலை
    .. மனதாகி ஏற்கும் ஒருகை;
    வலமாகச் சுற்ற வடிவேலும் காப்பும்
    .. வகையென்று கொள்ளும் இருகை (5)

     

    மலர்மாலை ஏந்தும் கரமொன்று; மோன
    .. வடிவேற்கும் வண்ணம் மறுகை;
    ஒலிஆர்க்கும் நல்ல வளைஒன்று பூணும்;
    .. ஒலிசேர்க்கும் ஒன்று மணியால்;
    மலைகாடி யாவும் மழைஈயும் ஒன்று;
    .. மணமாலை சூட்டும் மறுகை;
    பலன்தேடு வோர்க்குப் பயனீயும் வேலன்
    .. பன்னிரண்டு கைகள் இவையே (6)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 107-118)

     

    மலம்யாவும் நீத்த தவஞானி, பக்தி
    .. வசமாகிப் பாடும் கலைஞன்,
    வலிவான பாம்பை வசமாக்கும் செம்புள்
    .. வடிவேற்றம் கொண்ட திருமால்,
    உலகேத்தும் ஐயன் உமைநாதன், தேவ
    .. உலகோரின் ராசன் எவரும்
    மலரோனின் சாபம் மறைந்தேக வேலன்
    .. மலையேறி வந்து விழைவார் (7)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 126-175)

     

    கலைமேவும் மாலை கழுத்தேற நல்ல
    .. கவிபாடி வாழ்த்தும் மகளிர்
    சிலைபோன்ற வேலன் திருக்கோலம் கண்டு
    .. திளைப்பாரெக் குன்றந் தனிலும்;
    பலவேறு நாத இசைமீட்டுங் கைகள்
    .. பணிவோரின் தேவை அறியும்;
    நிலந்தேயும் வண்ணம் துகிலார்ந்த வேலன்
    .. நிலைகாணல் என்றும் நலமே (8)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 201-215)

     

    மலைமீத மைந்த வடிவேலன் கோயில்
    .. வலமேகி நிற்கும் குறத்தி
    பலிபீடம் தன்னில் மலரெங்கும் தூவிப்
    .. பலிதந்த ஆட்டின் குருதி
    பலகூடை நெல்லின் மணியோடு சேர்த்துப்
    .. படைக்கின்ற போதில் அருவி
    ஒலியோடு பாடல் ஒலிகூட்டி வேலன்
    .. உளன்நாடி பூசை புரிவாள் (9)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 218-240)

     

    மலையோளின் மைந்தன், மறுப்போரின் கூற்றன்,
    .. வடிவேலன், போரில் பொருநன்,
    மலர்கொண்ட மார்பன், மறவீரன், செல்வ
    .. மணவாளன், குன்றின் கிழவோன்,
    பலநூல்கள் ஆயும் அறிவாளன், மெய்யன்,
    .. பலர்போற்றி ஏத்தும் பெருமன்,
    அலர்ந்தோர்க்கு வள்ளல், அகல்மார்பன், வேலன்,
    .. அவன்வாசல் சென்று தொழுவோம்! (10)
    (திருமுருகாற்றுப்படை அடிகள் 257-271)

    Share
  • பருவ காலங்கள்!

    சந்தர் சுப்ரமணியன்

    BlueMarble_monthlies_animation

    சித்திரையில் சூரியனின் சிரிப்பைக் கண்டு
    .. சிலிர்த்தபடி வரவேற்றாள் செம்பெண் பூமி;
    நித்திரையை உடைத்தொழிக்கும் நெருப்பைப் பேதை
    .. நெடுநாளாய் நினைந்திருந்தாள்; நிறைந்த பெண்மை
    அத்தனையும் அவன்விழிக்கே அளிக்க வேண்டி
    .. அவளுடலைத் தினஞ்சுழற்றி அழகு சேர்த்தாள்;
    இத்தரையின் சுழல்நோக்கி இளகி வெப்பை
    .. இளவேனிற் பருவமென ஈந்தான் வெய்யோன் (1)

    வைகாசி வரும்வரையில் வளைவான் நோக்கி
    .. வஞ்சியவள் காத்திருந்தாள் வளைவான் என்றே;
    பொய்யாகிப் போய்விடுமோ புகைந்த காதல்?
    .. பொழுதெல்லாம் நினைத்துமனம் புகைந்த பின்னர்
    ‘நொய்யாதென் நெஞ்சடைந்தீர் நீரே’ என்று
    .. நுண்மடலாய் ஆவியதில் நீரே சொல்லாய்
    எய்தாளே வானோக்கி எழும்பும் ஆவி
    .. இளவேனிற் பருவமதில் எழும்பும் போதே (2)

    ஆனியெலாம் அவளனுப்பும் அன்பின் சொல்லை
    .. அசையசையாய் கேட்டபினும் அவள்தான் அந்த
    தேனினிய மடலனுப்பும் சொந்தம் என்றே
    .. தெளியாத பகலவனும் சோர்ந்தான் உள்ளம்,
    ஏனெவளோ எழுதுகிறாள், என்றும் நாம்முன்
    .. எதிர்பார்க்கும் நிலமடந்தை எழுதாப் போதில்?
    மோனவுளம் இதைநினைக்க மூச்சின் வெப்பே
    .. முதுவேனிற் பருவமென முன்னர்த் தோன்றும் (3)

    ஆடிவர அங்குலவும் அடர்ந்த மேகம்
    .. அதிலீரம் படிந்தமடல், அழகுக் காலை;
    ஓடிவரும் கருமுகில்கள், ஒன்றைத் தள்ள
    .. உறவாடும் புவிகண்டான்; விண்ணை நோக்கிக்
    கோடியென மடல்விடுக்கும் கோதைச் செம்மண்!
    .. கூடிவிழிச் சிவந்ததுவோ? கொள்ளை நாணம்!
    மூடுமனக் கண்திறந்து முன்காண் மண்ணில்
    .. முதுவேனிற் பருவமென முகிழ்த்தான் வெய்யோன் (4)

    ஆவணியில் அவள்மடல்கள் அனைத்தும் சேர்த்தே
    .. ஆதவனும் நனைகின்றான், அன்பாய் வானில்
    பூவழியச் செய்கின்றான்; பொழியும் மாரிப்
    .. பூவிதழில் தன்விருப்பைப் பூக்கச் செய்தான்;
    தாவியெழும் நீர்த்துளியில் தாக மாக
    .. தங்கிநின்ற அவன்விருப்பு தாளில் வீழ
    காவியுடை துறக்குமுடல் காதல் தன்னை
    .. கார்காலம் முழுவதுமண் காத்து நிற்கும் (5)

    புரட்டாசி மழைகண்டாள்; புரண்டங் கோடும்
    .. புதுப்புனலாய் அகமகிழ்ந்தாள்; பொங்கும் பூவின்
    திரட்டாலே துகிலுடுத்தாள்; செவ்வான் நீரைத்
    .. தேக்குதற்கே நெஞ்சென்றாள்; தேடுந் தேனைத்
    தரத்தானே மலரணிந்தாள்; தாகங் கொண்டே
    .. தலைநோக்கிப் பொழிநீரை தானே ஏந்த
    கரங்காட்டும் மரங்கொண்டாள்; கானில் எங்கும்
    .. கார்காலம் வந்தவிதம் காட்டி நின்றாள் (6)

    ஐப்பசியும் வந்ததவள் அன்பை ஊட்ட
    .. ஆதவனை அருகழைத்தாள்; அடுப்பை மூட்டிக்
    கைப்பதத்தைக் காட்டுகின்றாள்; கானே பானை,
    .. கலமெங்கும் மலர்பொங்கும்; கடக்கும் ஆறே
    நெய்ப்பரப்பாய் நெளிந்தோடும்; நிற்கும் வான்வில்
    .. நீளகப்பை; மலர்வாசம் நெய்யில் தோயக்
    குய்ப்புகையாய் முகிழெலுந்து கோலம் காட்டக்
    .. குளிர்கால விருந்துணவைக் கோதை தந்தாள் (7)

    கார்த்திகையில் நிலமளித்த காதற் சோற்றைக்
    .. களித்துள்ளம் மகிழ்கின்றான் கண்ணால் வெய்யோன்
    நீர்த்துகளில் நிலம்பதித்த நினைவின் ஈரம்
    .. நிற்கின்ற நனவிலெலாம் நெகிழக் கண்டான்;
    போர்த்தமுகில் எடுத்துலகைப் பொத்திப் பொத்திப்
    .. பொன்போலக் காக்கின்றான்; பொழியும் வெப்பின்
    கூர்தரையைக் கிழிக்கவொளி குறுக்கிக் கொண்டான்;
    .. குளிர்காலம் எனும்பருவ கோலந் தந்தான் (8)

    மார்கழியும் வந்ததங்கு வான மெல்லாம்
    .. மலர்விரித்த வெண்பஞ்சு மஞ்சத் தோற்றம்;
    வேர்கழித்துப் பூவனமே விண்ணில் சேர்ந்த
    .. விந்தையிதோ? நிலமடந்தை வேணி சூட்ட
    நார்தொடுக்கும் பகலவனின் நறும்பூ மாலை
    .. நாரேறத் தாரகையோ? நனைக்கும் பாலோ?
    மோர்பனியாய்ப் பொழிகிறதோ? முகிலின் தோய்வே
    .. முன்பனியாய்ப் பெய்கிறதோ? முத்த நீரோ? (9)

    தைக்கென்றே காத்திருந்தாள் தையல், கொஞ்சம்
    .. தன்நடனம் காட்டுதற்காய்; தனியே நின்று
    துய்க்கின்றான் அவன்பொருட்டு தோகை நெல்லைத்
    .. தோதாய்க்காற் சலங்கையெனத் துணையாக் கொண்டு
    வைக்கின்றாள் பாதமவள்; வனப்புச் சேர
    .. வயலெங்கும் நாட்டியந்தான்; வானின் வெய்யோன்
    மொய்க்கின்ற வண்டானான்; மோக மூட்டும்
    .. முன்பனியே தேனாகும், முன்னர்ப் பூவே (10)

    மாசியதும் வந்ததுகாண்; மங்கை சொல்லில்
    .. மனங்களிப்பான் பகலவனும்; மனத்தில் ஆழ்ந்த
    ஆசைமொழி அவன்முடிக்க ஆகும் நேரம்,
    .. அந்நேரம் பின்னிரவே; அலையும் புள்ளின்
    ஒசையினால் துயில்விடுப்பான்; உழைக்க வேண்டி
    .. ஓடிடுவன்; சென்றபினும் ஒருத்தி மட்டும்
    பேசியதை முணுமுணுக்கப் பேச்சின் மௌனம்
    .. பின்பனியாய்ப் பொழிகையிலே பிறக்கும் நாளே (11)

    பங்குனியில் படர்கொடியாய்ப் பலநாள் காதல்,
    .. பார்க்காத இரவெல்லாம் பசலை மண்ணில்;
    அங்கமெலாம் அவள்நினைவே அடர்ந்தி ருக்க
    .. ஆதவனும் அயர்ந்திருக்க அல்லின் நீட்சி;
    தங்கிவிட வேண்டுமென தரணி கெஞ்சத்
    .. தாமதமாய்க் கதிரெழும்பும், தண்மை நீங்கப்
    பொங்கியெழும் புத்தொளியாய்ப் புதிய போக்கில்
    .. பின்பனியாய் மின்மினுக்கப் பேசும் பூவே (12)

    Share
  • ஏடா தம்பி! எடடா பேனா!

    சந்தர் சுப்ரமணியன்

     

    சொல்லுக்குள் கருத்தில்லை; சுவைசேர் பேச்சில்

    .. சொற்கோத்த முழுஅடியே சொல்லும் சேதி;

    கல்லுப்பு புளிமிளகாய் காரம் சேர்த்துக்

    .. காண்க ருசி; தனித்தனியாய் ருசி ஏதங்கு?

    பல்லுக்குப் புரியாத பண்டம் யாவும்

    .. பட்டவுடன் பகுத்தறியும் பழகும் நாவே;

    எல்லைக்குள் அடங்காத இனிக்கும் நல்ல

    .. இலக்கியத்தைச் சுவைஞருளம் இயல்பாய் ஏற்கும்.

     

    இன்றரங்கின் தலைப்பாக ‘ஏடா தம்பி

    .. எடடாபேனா’ என்றோர் தொடரைக் கொண்டோம்

    அன்றவரின் கருத்துகளை அள்ளித் தந்த

    .. அண்ணாவின் சொற்றொடரே; அதனால் இன்றும்

    மன்றமமர் அன்பர்தம் செவியைச் சேர்ந்து

    .. மதிக்கின்ற கருத்தாக மாறி உள்ளம்

    சென்றமரும் விதமாக செய்தி சேர்த்து

    .. செழுமியதாய்த் தமிழ்க்கவிதை சேர்க்க வேண்டும்!

     

    (தலைமைக்கவிதை):-

     

    கற்கொண்டான் கண்ணகிக்காய்; கப்பல் ஏறி

    .. கடற்கடந்து போர்வென்று கடாரம் கொண்டான்;

    விற்கொண்டான் வேற்கொண்டான் வேந்தன் மண்ணை

    .. விந்தியத்தை எல்லையாக்கி விரித்துக் கொண்டான்;

    கற்கண்டாய்ப் பாவமைத்து காலம் வென்றான்;

    .. கருத்தமைந்த காவியங்கள் காத்துத் தந்தான்;

    நிற்கின்றோம் இவையிழந்தே, ஏடா தம்பி

    .. நிலையதனை இன்றியம்ப எடடா பேனா (1)

     

    பட்டதெலாம் போதுமிந்த பாழும் வாழ்வில்,

    .. பழங்கதைகள் இனிவேண்டாம்; பழமை தன்னை

    வெட்டிடுவோம்; அன்பென்னும் விதையை மண்ணில்

    .. விதைத்தன்பை விளைவாக வேண்டி நிற்போம்;

    கொட்டறைந்து முரசதனை, கூடும் வையம்

    .. கொள்ளுமிதைக் கொள்கையாக, கொண்ட பின்னர்

    எட்டும்வான் அதன்புகழே; ஏடா தம்பி

    .. எழுதிடுவாய் அந்நிலையை; எடடா பேனா (2)

     

    கரையில்லாக் கடலொத்தத் தமிழைக் கற்க

    .. கற்பவர்க்கு மொழியறிவு நிறைய வேண்டும்;

    உரையின்றிப் புரியாத உயர்ந்த நூல்கள்

    .. உளபோதும் விளங்கிடுமோ உதவி இன்றி?

    வரையறையை உடைக்கின்ற வடிவம் தன்னில்

    .. வளமான தமிழ்சேர்த்து வனப்பாய் அண்ணா

    உரைநடையாய் அன்றுரைத்தார்; ஏடா தம்பி

    .. உணர்ந்தவரின் புகழெழுத எடடா பேனா (3)

     

    ஆங்கிலமே அறிவென்ற அகந்தை கொண்ட

    .. அளவற்ற மோகத்தின் அணைப்பில் முன்பு

    தூங்கிநின்ற தமிழகத்தின் துயரம் தீர

    .. தெருவெல்லாம் தமிழோசை சேர்த்தார் அண்ணா;

    தேங்கு மது தானுருகி சொட்டச் சொட்ட

    .. தெளிவான தமிழ்நதியாய் தெருவில் ஓட

    ஏங்கிடுவார் தமிழரெலாம் ஏடா தம்பி

    .. இன்றந்தப் புகழ்பாட எடடா பேனா (4)

     

    ஆதிவழி அதையின்றும் அணைத்து வாழ்தல்

    .. அறியாமை எனவுணர்ந்த அண்ணா நான்கு

    சாதிவழி முறையதனைச் சாடிச் சாடி

    .. சரித்திரத்தின் சரித்திரத்தை சரியாய்ச் செய்யும்

    போதனையை வாழும்வரை போதித் தன்பே

    .. பொதுவென்னும் பொருட்தந்தார்; பாரில் சாதி

    ஏததனை விலக்கவழி ஏடா தம்பி

    .. இயன்றிடவே இன்றேனும் எடடா பேனா (5)

     

    ஆயினகாண் வருடங்கள் ஆயும் என்ன?

    .. அவரெதிர்த்தப் பழக்கமதன் அவலம் யாவும்

    போயினவா எனும்கேள்வி புதைந்து நிற்க

    .. பொய்யான போலியதே பொலியும் இன்றும்;

    சாயுங்காண் நீதியின்றும் சாதி போற்றும்

    .. சங்கங்கள் அரசியலைச் சார்ந்து நிற்பின்;

    ஏயமவை இனியெதற்கோ ஏடா தம்பி

    .. இவ்வெண்ணம் ஒழித்திடவே எடடா பேனா (6)

    (ஏயம் – தேவை இல்லாதது)

     

    அகத்திரையில் ஆயிரமாய் ஆன சிந்தை

    .. அகமுடைத்து புறநிஜத்தை அடைய வேண்டும்

    சகத்திலினி எழுச்சிவொன்றே, சரிவே இல்லாச்

    .. சரித்திரத்தை சமுதாயம் தேட வேண்டும்

    பகுத்தறிவின் பயன்பாட்டால் பாரில் யார்க்கும்

    .. பலனனைத்தும் பெற்றுவக்கும் பங்கு வேண்டும்

    இகத்திலினி இவைவேண்டும் எடா தம்பி

    .. இவைகாணும் வழிகாட்ட எடடா பேனா (7)

     

    தவணைமுறை தொழுகைமுறை தேவை இன்று

    .. தலமனைத்தும் சமத்துவமே தவழ வேண்டும்;

    குவளைமுறை இன்னுமிங்கே குறையவில்லை,

    .. கொடிபிடித்தே இதைத்தடுப்பார் யாரு மில்லை;

    அவலநிலை அடிதடிகள் அனைத்தும் இன்றும்

    .. அடங்காது தொடர்கையிலே அமைதி யேது?

    துவளுமவர் துயர்துடைக்க ஏடா தம்பி

    .. துணிச்சலுடன் திரைகிழிக்க எடடா பேனா (8)

     

     

    இடைக்கவிதைகள் (எல்லோரும் இந்நாட்டு மன்னர்):-

     

    தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ எனும் கட்டுரையில் அண்ணா எழுதிய ஒரு கதையின் கவி வடிவம்:

     

    மன்னவன்றன் உள்ளத்தில் கவலை போலும்

    .. மலையாகி அமர்ந்திருந்தான் மன்றம் ஓர்நாள்

    கன்னியர்கள் ஆடல்மேல் கவனம் இல்லை

    .. காதல்விளை யாட்டிலிலும் கண்கள் இல்லை

    முன்குழுமி முத்தமிழால் முனைந்து பாவை

    .. முழங்குகின்ற கவிஞரினால் மாற்றம் இல்லை

    என்னவழி செய்யமன்னன் எண்ணில் மீண்டும்

    .. இன்பமது சேருமென்றே அமைச்சன் சொன்னான் (1)

     

    முன்னோர்நாள் போர்க்களத்தின் முன்னர் நின்ற

    .. மூவைந்து தளபதிகள் தலைகள் கொய்தோன்

    முன்னின்ற பதினாறு வீரர் கைசேர்

    .. வேல்தட்டி அவர்பற்கள் வீழச் செய்தோன்

    தன்னாட்டின் போர்வீரர் தழைக்கச் செய்த

    .. தரம்வாய்ந்த குருவைமண் தழுவச் செய்தோன்

    பின்னிற்கும் கரிப்படையின் தலைவன் கண்ணை

    .. பிடுங்கியவன் வந்துள்ளான் காண வென்றான் (2)

     

    என்னஇது விந்தையன்றோ இத்திரு நாட்டில்

    .. இத்தகைய வீரனவன் இருந்த போதும்

    முன்னர்யாம் கண்டதில்லை; முரட்டு வீரர்

    .. முன்னிற்கும் எம்படையை வென்ற வீரன்

    இன்றவனை யாம்காண யாவும் செய்வீர்

    .. என்றதுமே அமைச்சரவர் சென்றார்; வந்தார்

    மன்றமெலாம் வீரன்றன் வரவை நோக்க

    .. வரவேற்கும் பணியாளர் வாழ்த்தும் பாராக் (3)

     

    கரைகண்ட வீரன்றன் காட்சி காண

    .. காத்திருந்த மன்னன்தன் கையால் மெல்லத்

    திரைநீக்க திடுக்கென்று கழுதை ஒன்று

    .. தெரிந்திடவே சபையோடு சிரித்து விட்டான்

    சரியிதுதான் முன்னோர்நாள் சாயும் வேளை

    .. தலைப்படையை உதைத்தெடுத்தச் சரிதம் தானே

    சிரித்தபடி வினவுகின்ற மன்னன் தன்னை

    .. சிரித்தசபை பார்த்ததுகாண் சிந்தை யோடே (4)

     

    இடைக்கவிதைகள் (அண்ணாவின் வாழ்க்கை):-

     

    கல்வியென்றும் வளர்ந்தோங்கும் காஞ்சி ஈந்த

    .. கலைச்செல்வம் பன்னோக்குக் கலைஞன் அண்ணா

    கல்லூரி நாட்களிலே கல்வி ஒன்றே

    .. கடமையென்று கற்றுவந்த கர்ம வீரர்

    செல்வமாக அவர்படித்துச் சேர்த்த தொன்றே

    .. சீர்மிகுந்த பொருளியலில் சிறந்த பட்டம்

    இல்லறத்தைக் கடைபிடிக்க ஏற்ற நேரம்

    .. இணையாக வந்தவர்தான் இராணி அம்மை (1)

     

    மொழியாக்க செயற்றனையே முதலில் கற்றார்

    .. முயற்சியதன் விளைவாலே முன்னர் நின்றார்

    தொழிற்சங்கத் துறைதன்னில் தொடர்ந்தார் வாழ்வை

    .. தோழர்கள் பலரோடு தொண்டும் செய்தார்

    விழைவாக பொதுவாழ்வை விரும்பிப் பின்னர்

    .. விடுதலையின் ஆசிரியப் பணியும் ஏற்றார்

    அழியாத புகழ்பெற்றார் அண்ணா அன்றே

    .. அவர்காலம் கடந்தாலும் அதுகாண் வாழும் (2)

     

    ஓரிரவு வசனத்தால் உலகை ஈர்த்தார்

    .. உரைநடையால் உணர்வென்னும் உலையை ஊதி

    காரிருளில் பெரும்வெப்பக் கதிரைப் பாய்ச்சி

    .. கருத்தமைந்த கனவுகளைக் காணச் செய்தார்

    போரொத்த பகுத்தறிவுக் கொள்கை யோடே

    .. பொதுவுடமைக் கொள்கையையும் போற்றிக் காத்தார்

    பேரறிஞர் எனும்மொழியால் புகரப் பட்டு

    .. பொதுசனத்தின் நிஜமனத்தில் பொதிந்து நின்றார் (3)

    Share
  • குயில் பாட்டின் நயம்

    -சந்தர் சுப்ரமணியன்

    பண்ணிசைப் பரப்பி எங்கும் பலவுயிர் சிலிர்க்கச் செய்து
    வண்டமிழ் ஒலிக்கும் பேடை வனமமர் குயிலின் நீலக்
    கண்களில் காதல் கண்டான், கண்டதைக் கவியாய்த் தந்தான்;
    உண்டதேன் உரைப்பேன் இங்கே உளத்திடை ஊறு மட்டும் (1)

    பாவலர் கண்கள் என்றும் பார்த்திடும் அகத்தின் தோற்றம்
    பூவளர் பொழுதும், பொன்னார் பொழுதது புலரும் போதும்,
    தூவிடும் மழையின் தோற்றம், தொலைவுள நிலவும், யாவும்
    பாவளர் கருவாய் ஆகிப் பாட்டுடை பொருளாய் மாறும் (2)

    தேடலும் தேடும் இன்பத் தீதரும் சுகமும் கண்டென்?kuyil0
    கூடடை உயிரும் நீங்கும் கூற்றுவன் அருகும் வேளை;
    வேடவன் வாரா நாளே விருந்தெனும் பறவை என்று
    பாடலில் புலவன் சொன்னப் பாங்கது புதுமை அன்றோ (3)

    ஓடிடும் மனத்தின் எண்ணம் ஒருமுகப் படுமவ் வேளை
    பாடகன் கனவில் நெஞ்சம் பளிச்செனப் படமொன் றேர்க்கும்
    தேடிய கவிதை யங்கே தெரிந்திடும்; வரியாய்ச் சொற்கள்
    கூடிடக் கருத்தின் ஊற்றாய்க் கொள்ளெனக் கவியா(று) ஓடும் (4)

    பேசிடுங் குயிலைக் கூட பெருங்கவி பார்க்கக் கூடும்;
    ஓசையோ டுறவு கொண்டே உளத்தினை யிழக்கக் கூடும்;
    ஆசையாய்க் குயிற்பால் காதல் அடைந்திடும் மனிதன் மெல்ல
    ஊசியோ டோடும் நூற்போல் உலவுவான் கனவின் ஊடே (5)

    காதலில் வெற்றி ஒன்றே காதலர் உயிர்ப்பென் றாகும்;kuyil1
    சாதலே நன்றாம் வெற்றி சாத்தியம் இலாத போழ்து;
    நாதமாய் ஒலிக்கும் காதல் நலிந்திடும் வேளை நெஞ்சில்
    சேதமே, கவிஞன் நன்றாய்த் தெளிந்திதைப் பாவாய்த் தந்தான் (6)

    ஓசையில் விதங்கள் உண்டோ? ஒன்றிலை கோடி யென்றான்
    பேசிடும் மொழியும், கானில் புள்ளதன் ஒலியும், பெண்டிர்
    மூசிடும் அளிகம் போலே மொழிந்திடும் போதும், கையில்
    நேசமாய் வளையல் என்றாய் நிகழ்வுகள் எதிலும் ஓமே (7)

    காதலை வேண்டிப் பேடை கரைதலும், இல்லை யாயின்
    சாதலே சரியாம் என்றே தவிப்பதும், சிந்தை சேர
    வேதனை உயிருள் ஊறி உளத்தினை உழற்றப் பேடைப்
    போதலை மனிதன் கண்டே பொருள்தெரி யாது நின்றான் (8)

    சத்தியைத் தந்தான், தானே தந்துணை தேடு மாறு
    வித்தையை விரைந்து கற்க வினையினை உளத்தில் வைத்தான்;
    சித்தமும் செயலும் நெஞ்சின் சிந்தனை தன்பால் ஈர்க்கும்
    தத்துவம் இதையே இப்பா தந்திடும் எனக்கொள் வோமா? (9)

    பொம்மையாய்ப் பொழுதைப் போக்கும் பொய்வழிப் போதை மாயை;
    சும்மையாய் உடலம், சோகம் சொட்டிடும் கண்ணில் நீராய்;
    வெம்மையும் குளிரும் ஒன்றே, விளைவுகள் காணும் மாற்றம்;
    இம்மொழி உவமை யாக இயன்றிடும் பாடல் ஈதோ? (10)

    வந்தது மறுநாள், அன்று வனத்திடை குயிலைத் தேடி
    முந்தைய மரத்தைப் பார்த்தான், வரவிலை, வேறோர் கொம்பின்
    சந்தியில் கண்டான், அந்தோ! தனித்திலை, குரங்கி னோடே;
    நொந்தவன் நொடியில் நெஞ்சும் நொடிந்திடும் நிலைமை உற்றான் (11)

    வாலுடை வான ரத்தை வாஞ்சையோ டடையும் பேடை;
    ஓலமே உளத்துள் ஓங்க ஓடினான் வீட்டைத் தேடி;
    காலமாய்ப் போனான், கண்கள் கருத்திட மூர்ச்சை யாகி
    நாலுபேர் அவனைச் சூழும் நிலையினில் மனிதன் வீழ்ந்தான் (12)

    பார்ப்பது குயிலா? இல்லை, பரமதே, ஆன்ம ரூபம்;
    சேர்ந்திடும், சிலநாள் தங்கும், திகைத்திட வைத்துப் பின்னர்
    சார்ந்திடும் உடலம் விட்டுத் தாவிடும், பிறிதோர் கூட்டைத்
    தேர்ந்திடும்; நிலைத்து நீங்கும் தெய்வதம் இதுவே ஆகும் (13)

    என்புடை உடலம் என்றும் இப்புவி மண்ணில் தங்கும்;
    அன்புடை உயிரே என்றும் அலைந்திடும் ஆன்மம் ஆகும்
    சென்றிடும் மேலும் கீழும் செலவொடு வரவு மாக;
    இந்நெறி ஒன்றை யன்றோ இயன்றிடும் இப்பா என்றும்? (14)

    நீண்டிடும் இரவ டுத்து நினைவினில் மூன்றாம் நாளாம்;
    காண்கையில் மிரண்டு நின்றான், காளையும் குயிலும் ஒன்றாய்;
    வேண்டியே நெஞ்சின் காதல் விளக்கிடும் குயிலின் பேச்சைத்
    தாண்டியும் போக ஒண்ணாத் தவிப்பினில் தானு றைந்தான் (15)

    ஆவியை உருக்கிப் பொன்னாய் அதனுடன் உடலம் சேர்க்கக்
    கூவிடும் குழந்தை ஒன்றைக் குவலயம் பிறப்பாய்க் காணும்;
    மேவிடும் உலக வாழ்வில் மெய்யது பொய்யே ஆகும்;
    தேவனின் விளையாட் டொன்றின் செயற்பலன் பிறப்பென் றாகும் (16)

    தொல்லைகள் தொடரும் வாழ்வில், தொலைந்திடும் ஓர்நாள்; பின்னர்,
    இல்லையென் றான போழ்தில் இருட்டினில் ஒடுங்கி ஓய்வோம்;
    முல்லையாய்ப் பொழுதும் பூக்கும், முனைந்துநாம் பிறப்போம் மீண்டும்;
    அல்லுடன் பகலு மாக அடுத்தடுத் தமையும் வாழ்க்கை (17)

    வந்தது நான்காம் நாளும், வருகையில் குயிலும் மெல்ல
    முந்தைய வாழ்வைப் பற்றி மொழிந்தது மனிதன் காதில்;
    விந்தைதான், காதல் வெப்பில் உருகியே குறைகள் நீங்கும்;
    சிந்தையில் சேர்தல் ஒன்றே தேவையென் றாகிப் போகும் (18)

    நான்கெனும் கணக்கேன் தேவை? நம்மனம் நினைத்துப் பார்க்கும்;
    நான்முறை வருணம் தன்னை நயமுடன் சொல்கின் றானோ?
    வான்மணின் ஊடே ஓடி வாழ்ந்திடும் வாழ்வும் நான்கோ?
    ஏன், மனத் தோற்றம் கூட இருப்பது நான்காய்த் தானே? (19)

    ஆய்ந்திடின் கோடி உண்மை அளித்திடும் குயிலின் பாட்டு;
    தோய்தமிழ்ச் சான்றோர் என்பா சொலும்பிழை பொறுக்க வேண்டும்;
    பாய்மரம் காற்றின் போக்கில் பாய்ந்திடும் அன்றோ? அஃதாய்
    சேய்கவி என்றன் எண்ணம் சென்றவா றெழுந்த திப்பா (20)

     

    Share
  • நவராத்திரி திருப்பதிகம்

    சந்தர் சுப்ரமணியன்

    —————–

    maa-durga-devi-navratri-wallpaper-258

    துர்க்கை

    நெருப்பின் வடிவெழு நீலி! பயங்கரி!
    .. நீளும் உறவென நின்றவளே!
    வருத்தும் முறையுள வாழ்வின் வழிவரும்
    .. வன்மை தொலைந்திட வாழ்த்திநலம்
    இருக்கும் வகையினில் என்றும் சுகந்தரும்
    .. இன்பம் தழைத்திட இவ்வுலகைத்
    திருத்தி அமைத்தினி சீர்மை துலங்குநற்
    .. சேமம் நிலைபெறச் செய்குவையே! (1)

    கரத்தி லொருபடை, கண்ணிற் பெருஞ்சினங்
    .. காட்டி உலகினைக் காப்பவளே!
    உரத்த குரல்வழி ஓலம் ஒலித்திட
    .. ஓங்கும் வறுமையில் ஏழையர்கள்
    இரக்கும் நிலைதனை ஏகும் படியவர்க்(கு)
    .. இன்னல் இழைத்திடும் ஈனரவர்
    சிரத்தை அறுத்தகச் சிந்தை தனிலுறை
    .. தீமை அழித்தருள் செய்குவையே! (2)

    துரத்தி அசுரனின் தொல்லை அறச்செயும்
    .. துர்க்கே! சுடரொளித் தீப்பிழம்பே!
    அரக்க மனிதரின் ஆழ்ந்த மனத்தெழும்
    .. ஆலம் அழித்துல காள்பவளே!
    சுரக்கும் அமுதெனத் தோன்றி உளத்தெழு
    .. சோகம் கரைத்திடும் தூயவளே!
    சிரத்தை மனத்தெழ தேடித் தொழுபவர்
    .. தேவை நிறைவுறச் செய்குவையே! (3)

    இலக்குமி

    தெரிக்கும் திருவளர் செல்வத் திருமகள்!
    .. தீராத் திரவியத் தீம்பொருளே!
    அரிக்கும் பிணியென ஆன வறுமையின்
    .. ஆழப் புதைகுழி ஆழ்ந்தவரின்
    வருத்தம் விலகிட, வாட்டும் வினையற,
    .. வாடா வளம்பெற, வாழ்விலினி
    சிரிக்கும் படிஅவர் சேர்க்கும் அரும்பொருள்
    .. தேயா துயர்ந்திடச் செய்குவையே! (4)

    பெருத்த நிதியளே! பேறே! வளங்களைப்
    .. பேணிப் பெருக்குநற் பேரருளே!
    உருக்கும் வெயிலிடை உண்ணும் பொருள்பல
    .. ஓயா துயர்ந்திட ஓர்வழியாய்க்
    கருத்த முகில்பல காட்டி அதன்வழி
    .. காய்மண் குளிர்ந்திடக் காத்தருளி,
    தெரிக்கும் கதிர்வளம் சேர்ந்த கழனிகள்
    .. செழிக்கும் படியினி செய்குவையே! (5)

    பொருட்கள் தனிலிருப் போளே! பொலிதரு
    .. பொன்னே! திருவளர் பூமகளே!
    பெருக்கும் பெருநிதி! பிள்ளை பிறப்பெனும்
    .. பேற்றை அளிக்குநற் பேரனையே!
    செருக்கும் படையமை தீரச் செழுமையே!
    .. தேடும் விசயமென் றானவளே!
    விருப்பின் வழியுமை வேண்டி விழைபவர்
    .. வேண்டும் படிஅருள் செய்குவையே! (6)

    சரஸ்வதி

    கருத்தில் அமைபொறி காக்கும் கலைமகள்!
    .. கல்விக் கடலெனக் காணறிவே!
    சுருக்க உரையெனத் தோயுங் கருவினில்
    .. தோதாய்ப் புதுச்சுவை தோன்றநிதம்
    விரித்துப் பொருள்பல விளக்கும் அதிசய
    .. விந்தை விளைக்குநல் வித்தகத்தைச்
    சிரத்துள் புதைமதி சீராய்ச் செயும்வழி
    .. தேரும் வகைபெறச் செய்குவையே! (7)

    விரிந்த மலர்மிசை வீணை தடவிட
    .. வேதன் துணையென வீற்றவளே!
    நிருத்தம் உடல்பெற நீளும் நயமதை
    .. நிற்கும் நரம்பினுள் நிரப்புதலும்
    பொருந்தும் இசைவரும் போது புதுக்கவி
    .. பூக்கப் புனைவதும் போற்பலவாய்ச்
    செருக்குங் கலைஞரின் தேடும் இயல்பினைத்
    .. தேர்ந்து தெளிந்திடச் செய்குவையே! (8)

    புரிந்த கலைகளில் பூக்கும் திறன்மிகப்
    .. போந்த புதுச்சுவை பூணழகே!
    சொரிந்த அமுதென சொல்லில் வடிந்துளம்
    .. சொக்கும் படிசெயும் தூய்தமிழே!
    விரைந்த விரல்படும் வேளை விழையுநல்
    .. வீணை இசையென வீற்றவளே!
    தெரிந்த கலைகளில் தேர்ந்த புதுமைகள்
    .. சேர்க்கும் வளம்பெறச் செய்குவையே! (9)

    விழைவு

    கருத்து பொது;வெளிக் காட்டும் முறைபொது;
    .. கண்டு கவிதையில் மூவருக்கும்
    விருத்த வழிதனில் விண்டு விளக்கிடும்
    .. வேலை எமதென வேண்டுகிறேன்!
    பொருத்த முளதெனின் போகம் அறிவறம்
    .. பொய்யா வகையினி பூவுலகில்
    வருத்தம் முடிவுற வாழ்வில் வளமுடன்
    .. வாழ மனிதரை வாழ்த்துகவே! (10)

    Share
  • நாணயம்

    சந்தர் சுப்ரமணியன்
     

    “முத்து, வண்டியை வேகமா ஓட்டுடா” என்றே விரைவுபடுத்தினான் ராஜா. பல நாள்கள் கழித்து அம்பத்தூர் தொழிற்சாலை ஒன்றில் அவனை வேலைக்கு அமர்த்துவதாக அவனுடைய மாமாவின் சிபாரிசின் பேரில் இன்று அவனை வரச்சொல்லி தகவல் வந்தது. வீட்டிலிருந்து புகைவண்டி நிலையம் சற்று தூரம் இருப்பதால் முத்துவை புகைவண்டி நிலையத்தில் விட்டுவிட்டு வரும்படி அவன் மிதிவண்டியின் பின்புறம் அமர்ந்து ராஜா சென்று கொண்டிருந்தான்.

    “என்ன வேலை ராஜா? ஏதாச்சும் மெஷீன் சுத்தணுமா?”

    “இல்லப்பா, ஏதோ பேக்கிங் செய்யணும் தான் மாமா சொல்லிச்சு”

    “வைக்கோல் எல்லாம் வச்சி அடைப்பாங்களே அப்படியா? முந்தி நான் பேரீஸ்லே இருந்தப்போ அப்படித்தான். சாமானை வைக்கோல்லே சுத்தி அதை அட்டை டப்பாக்குள்ளே வச்சு பிளாஸ்டிக் கயித்தாலே இழுத்து கட்டணும்”

    “இருக்கலாம்பா. போய்ப் பார்த்தாத்தான் தெரியும்”

    “என்ன 2000 ருபா தருவாங்களா? சம்பளம் பத்தி ஏதாச்சும் சொன்னாங்களா?” என்று ஆவலுடன் முத்து விசாரித்தவாறே மிதிவண்டியின் ஓட்டத்தை விரைவு படுத்தினான். “போனாத்தான் தெரியும் போல. மாமா ஒண்ணும் அதைப் பத்தி சொல்லலே” என்று ராஜா, வாயளவில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாலும், அவன் மனத்தில் இந்த வேலை எப்படியாவது கிடைத்துவிட வேண்டும் என்று வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிக் கொண்டிருந்தான்.

    “ஸ்டேஷன் தெருவுலே அந்த புள்ளையார் கோவிலாண்ட நிறுத்திக்க முத்து. நம்ப வேலுவை கொஞ்சம் காசு எடுத்தாரச் சொல்லி இருக்கேன். வாங்கிட்டு போயிடலாம்” என்றான் ராஜா.

    “வேலு இங்கே என்னா பண்றான்? ரெட் இல்ஸ் மில்லே வேலை பார்த்துட்டு இருந்தான் இல்லே?” என முத்து வினவ, “இங்கே ஏதோ வேலையா வர்ரானான். இங்கத்தான் நிக்கச் சொன்னான்” என்று ராஜா தெருவில் வருவோர் போவோர்களில் வேலுவைத் தேடத் தொடங்கினான்.

    அன்று வெள்ளிக்கிழமை ஆனதால் கோவிலில் கூட்டம் அதிகம். வழக்கமாக, அலுவலகம் செல்பவர்கள் கூட, வண்டி ஏறும்/இறங்கும் அவசரத்திலும் ஹலோ சொல்லிவிட்டுப் போகும் அளவிற்கு இந்தப் பிள்ளையாருக்கு மகிமை. இதில் வெள்ளியும் சேர்ந்து கொண்டதால் ஒரே கூட்டம். சிதறு தேங்காயின் சில்லுத்தெறிப்பில் இருந்து தப்பிக்க, கூட்டம் படாத பாடு பட்டுக் கொண்டிருந்தது.

    சனங்களின் தீராத தேவைகள் குறைவதாகத் தெரியவில்லை. சமுதாயத்தின் பல்வேறு நிலை மனிதர்களும் தத்தம் தேவைகளைப் பூர்த்தி செய்யுமாறு அந்த யானைச் செவியானின் காதோரமாகச் சொல்லிக் கொண்டிருந்தனர்.

    அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கும் தலைகளில் தன் பார்வையைச் செலுத்திக் கொண்டிருந்த ராஜாவிற்கு, கோவில் எதிரே நின்றிருந்த வேலுவைக் கண்டபின் தான் மூச்சே வந்தது.

    கையசைத்து வேலுவை அருகில் வரவழைத்தான். “என்ன வேலு, எவ்ளோ நேரம் ஆச்சி தெரியுமா?” என்று வேலுவை ராஜா கேட்க, “வழியிலே லேட்டயிடுச்சி! இந்தா பணம்” என்று ராஜாவின் கையில் பதினைந்து ரூபாயைத் திணித்துவிட்டு. “அப்பால பாக்கலாம் ராஜா, நான் ஆபீஸ் போவணும் இப்போ” என்று கூறிவிட்டு வேலு சென்றுவிட்டான்.

    “வண்டியை எடு முத்து” என்று ராஜாவின் பேச்சைக் கேட்ட முத்து, அந்தத் தெருவின் அடுத்த முனையில் இருக்கும் புகைவண்டி நிலையத்திற்கு வண்டியைச் செலுத்தினான்.

    நிலையத்தில் வழக்கம் போல் கூட்டம் அதிகமாக இருக்க ராஜா, முத்துவை திருப்பப் போகச் சொல்லிவிட்டு தான் வரிசையில் நின்றான். ‘ஏங்க, இங்கிருந்து அம்பத்தூர் போக ஒரு அரை மணி ஆகுமா?” என்று பக்கத்தில் நிற்பவரை விசாரித்து விட்டு, சீட்டு வாங்கக் காசெடுக்கத் தன் சட்டைப் பையைத் தூழாவினான்.

    அங்கிருந்து அம்பத்தூர் சென்று திரும்பிவர பதினைந்து ரூபாய் ஆகும். அதனால் தான் வேலுவிடம் பதினைந்து ரூபாய் கேட்டிருந்தான் ராஜா. “இங்கேயே ரிட்டன் டிக்கிட் வாங்கணும்” என்று எண்ணியவாறே, சட்டைப்பையில் இருக்கும் ஒரு பத்து ரூபாய் நோட்டையும் ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தையும் தேடினான். பத்து ரூபாய் மட்டும் அகப்பட்டதே ஒழிய ஐந்து ரூபாய் நாணயத்தைக் காணவில்லை. துழாவிப் பார்த்ததில் சட்டைப் பையின் புதிய ஓட்டை அவன் விரல்களுக்குப் புலப்பட்டது.

    “பத்து ரூபாயில் அம்பத்தூர் சென்றுவர முடியாதே” என்று நினைத்த ராஜா, “முத்துவைப் பிடிச்சா ஐந்து ரூபாய் வாங்கலாம்” என்று நினைத்தவாறே, வரிசையை விட்டு வெளியே ஓடினான். ஆனால் அவன் வருவதற்குள் முத்து அங்கிருந்து சென்றுவிட்டிருக்க வேண்டும். முத்துவைக் காணாது திகைத்து நின்ற ராஜா என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான். “ஒருவேளை, காசை பையிலே போடும்போதே விழுந்திருக்குமோ? கோவில் கிட்டே போயி தேடிப் பார்ப்போம்” என்று எண்ணிய வண்ணம் கோவிலை நோக்கி நடந்தான்.

    கோவிலின் அருகே ஏதோ கூட்டமும் குழப்பமுமாக இருந்தது. ராஜாவுக்கு அதில் மனம் செல்லவில்லை. தன்னுடைய ஐந்து ரூபாய் நாணயம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்ததால், வழியெங்கும் அதைத் தேடிக் கொண்டே கோவிலை நெருங்கினான். “இவ்ளோ பெரிய தெருலே, அஞ்சி ரூபா எப்படி கெடைக்கப் போகுது?” என்று நொந்து கொண்டான்.

    கோவில் பக்கம் நெருங்கும் போது, அங்குக் கூடியிருந்த கும்பல் போடும் கூச்சலும் குழப்பமும் அதிகமாகியது. “அஞ்சி நிமிஷத்துக்கு முன்னே தான் பழம் வாங்கிட்டு பர்ஸை சட்டையிலே வச்சேன் சார். நல்ல நினைவு இருக்கு. அதுக்குள்ளே எவனோ அடிச்சிட்டான் சார்” ஒரு முதியவர் தன் பர்ஸ் தொலைந்தது குறித்து அங்கு நின்றிருந்த காவலரிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “ஏங்க, கோவில்லே இது மாறி நடக்குமுன்னு உங்களுக்கு தெரியாதா? கொஞ்சம் கவனமா இருக்கக் கூடாதா? பர்ஸை சட்டைப் பைலே தான் போட்டிங்களா இல்லே கீழே எங்கேயாவது தொலைச்சிட்டிங்களா? நல்ல யோசிச்சி சொல்லுங்க” என்று காவலர் அவர் திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார்.

    “பர்ஸ்லே எவ்ளோ வச்சிருந்தீங்க? என்ன கலர் பர்ஸ்?” என்ற காவலரின் கேள்விக்கு அந்தப் பெரியவர், “ஒரு 500 ரூபா இருக்கும் சார். சிவப்பும் நீலமும் சேர்ந்த கலர் சார்.” என்றார். “எவனோ எடுத்திருக்கான் சார்” என்று மீண்டும் அடித்துச் சொல்லிக் கொண்டிருந்தார் அவர்.

    ‘நம்ம அஞ்சி ரூபாவை தேடறோம், இங்கே இவரு 500 ரூபாவைத் தேடிக்கிட்டு இருக்காரு” என்று நினைத்த ராஜா தன் தேடலைத் தொடர்ந்தான்.

    இதற்கிடையில் ராஜா தரையில் தேடுவதை கவனித்த காவலர், ‘யார்பா அது? அங்கே என்ன தேடிட்டு இருக்கே?” என்று அதட்டிய வண்ணம் ராஜாவை அருகில் அழைத்தார்.

    “சார் என் அஞ்சி ரூபா காயின் காணாம போச்சி சார். அதை தேடிட்டு இருக்கேன்”

    “என்னையா விளையாடறியா? இவ்ளோ பெரிய தெருலே அஞ்சி ரூபாய தேடறையா?”

    “ஆமாம் சார், சட்டைபை கிழிஞ்சி இருக்கு பார்க்காம போட்டிருக்கேன். இங்கேத்தான் எங்கேயாவது விழுந்திருக்கனும்”

    அதற்குள் எங்கிருந்தோ ஒருவர் காவலரின் அருகே வந்து, “சார் இந்த ஆள அஞ்சி நிமிஷம் முன்னாடி இங்கே பார்த்தேன் சார். இன்னும் ரெண்டு பேரு கூட இருந்தாங்க சார். எனக்கு என்னவோ இந்த ஆள்தான் எடுத்திருக்கணும் போல இருக்கு” என்றார்.

    ராஜாவிற்கு திக்கென்றது. ‘இல்லே சார். எனக்கு ஒன்னும் தெரியாது நான் பாட்டுக்கு ரெயில்வே ஸ்டேஷன் போய்க்கினு இருந்தேன். பைசா கீழ விழுந்திருச்சி, அதை தேடக்கிட்டு இருக்கேன்” என்றான்.

    “பாருங்க சார் பொய் சொல்றான். அவன் இப்பதான் ரயில்வே ஸ்டேஷன் பக்கத்திலிருந்து வர்ரான், ஆனா போறதா சொல்றான்” என்று ஒருவர் கூட்டத்தை உசுப்பி விட்டார்.

    “இந்த மாறி ஆளுங்கள நம்ப முடியாது சார். மூனு பேர்லே இவன் ஒருத்தன் தான் இங்கே இருக்கான். பர்ஸ் கை மாறிடிச்சி சார். இவனை பெண்டு எடுத்தா எல்லாத்தையும் கக்கிடுவான் சார்” என்று உன்னதமான ஒரு உபாயத்தை கூறியபடி ஒருவர் அந்த கூட்டத்திலிருந்து விலகிச் சென்றார். ஏதோ பர்ஸே கிடைத்து விட்ட மாதிரி கூட்டமும் கொஞ்சம் கொஞ்சமாக பர்ஸ் கதையை விட்டுவிட்டு தத்தம் பயணத்தின் அவசரத்துக்கு தன்னை தயாராக்கிக் கொண்டது.

    “ஏங்க ஸ்டேஷன் வந்து ஒரு ரிப்போர்ட் எழுதி கொடுங்க சார், பர்ஸ் காணாம போயிடிச்சின்னு” என்று காவலர் அந்த முதியவரிடம் கேட்க, அவர் “சார் நான் ஒரு கல்யாணத்திற்கு அவசரமா போறேன் சார். விடுங்கா போகட்டும். இந்த பையந்தான் எடுத்திருப்பான்னு எனக்குத் தோணலை” என்ற படி கிளம்பி விட்டார்.

    “இவனுங்களா இப்படி விடக்கூடாது சார். ஸ்டேஷன் கொண்டுபோய் ரெண்டு தட்டு தட்டி அனுப்புங்க சார்” என்று தன்னாலான ஒரு கருத்தை உதிற்த்து விட்டு மற்றொருவர் விலகினார்.

    “சார் எனக்கு ஒன்னுமே தெரியாது சார். ஸ்டேஷன் போயி டிகிட் எடுக்க காசு தேடுறேன் அப்பத்தான் என் பாக்கெட் ஓட்டைன்னு எனக்கே தெரிஞ்சுது சார். இங்கே நின்னு பேசிக்கிட்டு இருந்ததாலே இங்கே விழிந்திருக்குமுன்னு வந்து பார்த்தேன் சார். நம்புங்க சார்” என்று அழாக்குறையாக ராஜா காவலரிடம் சொன்னாலும் அவர் கேட்பதாக இல்லை.

    “சரி சரி வண்டிலே ஏறு, ஸ்டேஷன் போய் பேசிக்கலாம்” என்று தன் இரு சக்கர வண்டியில் ராஜாவை அமரச் சொல்லி வண்டியை ஸ்டேஷ்னுக்கு ஓட்டினார் காவலர்.

    “சார் ஒரு வேலை தேடி அம்பத்தூர் போறேன் சார் இப்போ. லேட்டானா அந்த வேலை கூட கெடைக்காது சார். நம்புங்க சார். நான் எடுக்கல்ல சார்” என்று மீண்டும் ராஜா கெஞ்சிப் பார்த்தான்.

    “உன்னை எப்படி நம்பறது?” வண்டியை நிறுத்தி விட்டு காவலர் கேட்டார்.

    “இதோ பாருங்க சார் எங்கிட்டே பத்து ரூபா நோட்டு இருக்கு. இந்த ஓட்டை இப்பத்தான் சார் பார்க்கிறேன். அஞ்சி ரூபா காயின் இதிலே தான் விழுந்திருக்கணும்” என்று தன் சட்டைப் பையின் ஓட்டையில் விரலை விட்டுக் காட்டினான்.

    “இப்போ பத்து ரூபாய்லே நான் அம்பத்தூர் போக கூட முடியாது சார்”

    “உன் வீடு எங்கே இருக்கு?”

    “அந்த தண்ணி டாங்க் பின்னாலே சார். ராஜான்னு கேட்டா எல்லார்க்கும் தெரியும் சார்”

    “நிஜமாத்தான் சொல்லறயா? பொய்யினு தெரிஞ்சதுனா பொளந்துடுவேன்”

    “இல்லே சார் மெய்யாலுமே தான் சார். இங்கே தான் சார் இருக்கேன்”

    “சரி சரி. கூப்ட்டு அனுப்பிச்சா வந்துரணும். இப்ப இந்த அஞ்சி ரூபாயை வாங்கிக்க, அம்பத்தூர் போக வச்சுக்க” என்ற படியே காவலர் தன் சட்டைப் பையில் இருந்து சிவப்பு நீலமும் சேர்ந்த கலர் பர்ஸை எடுத்து அதிலிருந்து ஒரு ஐந்து ரூபாய் நாணயத்தை ராஜாவிடம் கொடுத்தார்.

     

    Share