Category: பொது

  • Lakshmi Paatti

    Lakshmi Paatti

    Baskar Seshadri

    She is Mrs Lakshmi but fondly called as Krithika mess Patti of Madippakkam. She is above seventy and has been running a mess in that belt for quite some time. Her husband was the pillar of strength for her endeavor and they both were running the mess and many people used to eat in that mess for the Patti and The food purely out of affection and respect for the age and Pricing.

    She lost her daughter sometime back and the couple was struggling to make out both ends meet during the covid times all these days. People who live in that area may know her for her smiling and courteous service.

    Unfortunately months back her husband too died and she is being now supported by a known person to run the mess with Patti Heading the cooking area.

    My Friend Rangabharati who shared this news with me told that he went there with his friend  Mr Sai Santhosh.

    I shared in turn this with my friend  Mr Muralidaran KN and he extended his help through his friend Mr Om Sai and had wired me a sum of Rs 5000/ which was given to her  through a local resident Mrs Nagarajan. And Nagarajan fondly called as Raja was my class mate in college days and i thank him for his help in hand delivering the same to Paatti .

    Thanks to Rangabharathi, Sai Santhosh, Om Sai and Murali for the timely action. Will share more on this based on the response from the friends along with the photos and donations if any.

    Share
  • என் ஆசான்களுக்கு எனது நமஸ்காரங்கள்

    என் ஆசான்களுக்கு எனது நமஸ்காரங்கள்

    பாஸ்கர்

    எனது தொன்னைக் காது .அதைப் பிடித்துக் கிள்ளும் லாகவம், சிவமணி சாரை விட்டால் பள்ளியில் யாருக்கும் இல்லை. சைமன் சார் அடித்த பிரம்படி அதுவும் உள்ளங்கையில் இன்னும் வலிக்கிறது. முட்டி போடச் சொன்ன மாணிக்க ரத்னம் சார். பொய் சொல்லி விடுப்புக் கேட்டுப் போன போது படவா ராஸ்கல் எனச் சொன்ன ஏ வீ எஸ் சார், இன்னும் சைக்கிளில் வருவது போலத் தோன்றும் காட்சி கண்களில் இருக்கிறது.

    நூறு வயதைக் கடக்க இருந்த நிலையில் பார்த்த பீ எஸ் சார், கண்களின் நீர் இன்னும் நெஞ்சை வருடுகிறது. கண் பார்வை இழந்த சிவமணி ஆசிரியரைக் கோவிலில் பார்த்த நெகிழ்ச்சி மறையவில்லை. போய்ப் புளியோதரை பிடி எனச் சொன்ன வாத்தியை நெஞ்சம் இன்னும் மறக்கவில்லை. கல்லூரியில் அய்யங்கார் என அன்பாய்க் கூப்பிட்ட லூதர் சாரும், காப்பி அடித்த போது பிடித்து மன்னித்த பார்த்தசாரதி சாரும் நெஞ்சில் நிற்பவர்கள்.

    அந்தக் காலத்தில் மிரட்டு உடையில் இருந்த நடேசன் சார், மைதானத்தில் ஓட விட்ட மோகனகிருஷ்ணன் சார் எல்லோரும் இந்த வறண்ட குளத்தில் கல் எறிந்தவர்கள்தாம். மேலே குறிப்பட்ட பெரும்பாலோர் மறைந்துவிட்டனர். உடன் படித்த மாணவர்கள் எல்லோரும் அறுபது வயதைக் கடந்துவிட்டனர். ஆரம்பப் பள்ளியில் படித்த சரோஜாவும், பாச்சாவும் என்னை மறந்துபோய் இருக்கலாம். ஆஷாவும் அப்படித்தான். நான் கல்லூரிக் காலத்தில் துரத்திய பெண்கள் எல்லோரும் பாட்டியாகி இருக்கலாம்.

    என் நினைவுகள் இனிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் மண்டிக் கிடக்கும் பசுமை, என் கடைசி மூச்சு வரை இருக்கும். என்றாவது ஒரு நாள் இவர்களில் யாராவது ஒருவரைச் சந்திப்பேன் என நினைக்கிறேன். இப்பொழுதும் இந்தப் பள்ளிகளை, கல்லூரியைக் கடக்கும் போது கொஞ்சம் வயிறு பிசைகிறது. ஓர் அழுத்தம் பரவுகிறது. மறதி ஒரு வியாதி போல பசுமரத்து ஆணியாய்க் கிடக்கும் நினைவுகளும் ஒரு வியாதி தான். நினைவுகள் எனது வாழ்வை நடத்துகின்றன.

    என் ஆசான்கள் எல்லோருக்கும் எனது உள்ளார்ந்த வணக்கம். என்னை ஒரு சுமாரான மனிதனாக மாற்றியது இவர்கள்தாம். கெட்டு கீரை, விதையாகப் போயிருக்க வேண்டியவனைத் தடுத்து ஆட்கொண்டவர்கள் இவர்கள் அனைவருமே.

    இவர்கள் எல்லோருக்கும் எப்படி நான் நன்றியைச் சொல்வேன்? என் நெகிழ்ச்சிதான் எனக்குச் சமாதானம் சொல்லும். வேறு வழியில்லை. என்னை மன்னித்து விடுங்கள் சார், இனிமேல் நன்றாகப் படிக்கிறேன் எனச் சொல்ல முடியுமா? அல்லது படிக்கத்தான் முடியுமா?

    Share
  • திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா (டி.எஸ்.பாலையா)

    திருநெல்வேலி சுப்ரமணியன் பாலையா (டி.எஸ்.பாலையா)

    பாஸ்கர்

    அவர் பெரிய உயரம் இல்லை. வசீகரமான முகம் இல்லை. ஆனாலும் அவரின் நடிப்பு, சரித்திரச் சிகரம். அவர் டி எஸ் பாலையா. அவர் மக்கள் திலகம் நடிகர் திலகத்திற்கு முன்னோடி.

    பாலையா என்றால் எல்லோரும் காதலிக்க நேரமில்லை, தில்லானாவைச் சொல்வார்கள். இந்த வண்ண சினிமாவிற்கு முன் அவரின் பாமா விஜயம் படத்தைப் பாருங்கள். அது போல ஒரு செறிந்த நடிகர் இந்தக் காலத்தில் தேடினால் கூட, கண்டுபிடிப்பது சாத்தியம் இல்லை. இது அவர்களைக் கொடுத்த நடிப்புப் பள்ளியின் பலம்.

    அவர் குரல், செய்கை எல்லாம் நம் வீட்டு மனிதர்களைக் கண் முன் நிறுத்தும். அவரின் டைமிங் சென்ஸ், வசன உச்சரிப்பு, சட்டென மாற்றிக்கொள்ளும் முக பாவம், கணேசனே கொஞ்சம் பயப்படும் ராதா, ரங்காராவ் பட்டியலில் பாலையாவுக்கும் இடம் உண்டு. அவர் கடைசிக் காலத்தில் நடித்த எதிரொலி படத்தில் கூட அதைக் காணலாம்.

    இன்று இயல்பான நடிப்பு என்று கொண்டாடும் நடிகர்கள் பலர், அவரின் படங்களைப் பார்க்க வேண்டும். அவர் இயக்குரின் நடிகர் – பாத்திரத்தின் நடிகர். இந்தப் பெண் பட்ட பாட்டை யாரறிவர் எனப் பத்மினி பாடும்போது கணேசன் தொடையில் லேசாகத் தட்டி தனது ஆதங்கத்தைச் சொல்லும் போது அவர் முகத்தைக் கவனியுங்கள் பிரில்லியன்ட்.

    பாவ மன்னிப்பு படம் என நினைவு. வந்த நாள் முதல் பாடலில் சிறையிலிருந்து வரும் காட்சி. கொஞ்சம் தயங்கி நின்று தலையைச் சொரிந்துகொண்டு வெளியேறும் காட்சியை அவர் உருவாக்கத்தில் கொண்டு வந்ததை எந்தப் பூனே பிலிம் கல்லூரியும் சொல்லித் தர முடியாத ஒன்று.

    அவருக்கு 2021 ஆகஸ்டு 23 அன்று, நூற்று ஏழாவது பிறந்த நாள்.

    Share
  • Face is not the Index of the Mind

    Face is not the Index of the Mind

    Baskar Seshadri

    I used to see that lady very often in the Mada streets of Mylapore and she was around forty years old. She will speak to herself and wander here and there with a bag on her shoulders. Once when I offered some food months back she simply declined to accept and went about her work. She used to be very rough on everyone and try always to be agitated.

    She is very slightly imbalanced.

    One day when i was shopping in a pan shop she came straight and told me that she wanted to get a D T Next. (This English daily costs Rs Two) She took the paper and walked away.

    Just recently when I was there in the pan shop she started narrating that she was a close family member of A Thangavel Nadar and sons and she is in penury since she was denied the property by some family members. I don’t know how far it’s true.

    Then she spoke in a simple blemish-less English for about half a minute about her and moved on with a smile .I was wonder struck and the very opinion that all like her who are on Road are for alms . It’s not to be.

    I am working as to how I could help her with some assistance one of these days. She is our Fellow citizen and she deserves what all we deserve. The equality is the basis of life and we should nourish that. Since she is a middle aged woman I have avoided her photo. I am sure you may come across her one of these days in the vicinity of Mada streets.

    Share
  • கைக்கடிகாரம்

    கைக்கடிகாரம்

    பாஸ்கர் சேஷாத்ரி

    அந்தப் பள்ளி நாட்களில் எனக்குக் கைக்கடிகாரம் மீது ஒரு மோகம். அதனைக் கையில் கட்டிக்கொண்டு நடப்பது போல எப்போதும் ஓர் அதீதக் கற்பனை. கையில் அணிந்துகொண்டால் ஒருவர் ஒசத்தி என்ற எண்ணம், அப்போதே மனதில் இருந்து இருக்கிறது. அப்போது வெளிநாட்டுக் கைக்கடிகாரம் மிகப் பிரசத்தி. பேவர் லூபா என்று ஒரு வகை இதில் மிக உயர்வு எனச் சொல்லிக் கேட்டு இருக்கிறேன். வட்ட வடிவில், சதுரத்தில் எனப் பல வகை.

    இது தாழ்வு மனப்பான்மையால் எழுந்த ஒரு வகையான எண்ணம். அலங்காரமான தோற்றம் தான் சமூகத்தில் மதிப்புக் கொடுக்கும் ஒரு உபகரணம் என்பது அப்போதைய கணிப்பு . இது தன்னைத் தானே ஏமாற்றிக்கொள்ளும் குணம். பெருமை தேடும் புத்தி. அங்கீகாரம் தேடும் சிந்தனை என்ற விஷயம். என்னைப்  பார்த்து, தம்பி, மணி என்ன என ஒருவர் கேட்க வேண்டும் என்றும் அதற்கு நான்  அலட்டலாகப் பதில் சொல்ல வேண்டும் என்ற உந்துதல் தான் அப்போது  மேலோங்கி நின்றது.  அதுவும் கொஞ்ச நாள், அதற்கு பிரவுன் பட்டை, கொஞ்ச நாள் கருப்பு என நிறம் மாற்றி அணிய வேண்டும் என்று ஆசை வேறு.

    பறத்தல் மனசு. தரையில் தங்காது.  கைக்கடிகாரம் கட்டின நாள் முதல் விஷயம் இருக்கிறதோ  இல்லையா கையை உயர்த்தி மணி பார்ப்பது ஒரு சுகம். ஒரு புத்தகம் தராத புத்துணர்ச்சி. இது தேற்றிக்கொள்ளும் சிந்திப்பு  அது எப்படி ஊடுருவி இருக்கிறது என்பது இப்போது தான் புரிகிறது. வாழ்க்கை, அலட்டலில் இல்லை. அமைதியில் இருக்கிறது. அங்கீகாரத்தில் இல்லை. உள்ளத்தின் உள்ளே செல்வதில் என்பது தான் எவ்வளவு பெரிய உண்மை?

    உண்மைகள் புரிவது ஒரு பெரிய விஷயம் இல்லை. அது அந்தந்த நேரத்தில் புரிய வேண்டும். தாமதமாய்ப் புரிந்துகொள்வதும் புரிந்துகொள்ளாமால் இருப்பதும் ஒன்றே. எந்த இயல்புக்கு ஒட்டாத செய்கையும், நாள் தாங்காது . அவசரத்திற்கு மணி பார்க்க, பின்னர் சுவர்க் கடிகாரம் தான் சரி என்ற நிலைக்கு மனம் தள்ளப்பட்டது. பிறகு ஒரு கனமான கைக்கடிகாரம் மேல் ஆசை வந்தது. கொஞ்ச நாளில் அதுவும் விட்டுப் போய், அலங்காரமான பொருள் வந்தும் வாட்ச் மீது இருந்த ஆசை சுத்தமாக இன்று இல்லை. ஒரு பொருளை அடைந்து பின்னர் தெளிவு பெற்று, அதனை விட்டு அகல்வது என்பது ஒரு முதிர்ச்சி. அதன் பக்கம் போகாமலே அண்டாமலே நகர்வது இன்னொரு வகை. ஒவ்வொரு தெளிவுக்கும் ஓர் அனுபவம் வேண்டும் என நினைப்பதே பெரும் ஏமாற்று.

    வாழ்வை உப்புக் காகிதம் வைத்துத் தேய்ப்பது போல உரசி உரசிப் பார்த்தால் தேய்க்கப்பட்ட பொருளும் தேய்த்த காகிதமும் காணாமல் போய் நினைவு மட்டும் அசை போட்டுக்கொண்டு இருக்கிறது.

    Share
  • தென்னகத்தின் முன்னோடிப் பெண் புரட்சியாளர்

    தென்னகத்தின் முன்னோடிப் பெண் புரட்சியாளர்

    -மேகலா இராமமூர்த்தி

    ஆங்கிலேயர் அறிமுகப்படுத்திய அனைவருக்கும் பொதுவான கல்விமுறையானது இந்தியாவில் பல மறுமலர்ச்சி நிகழ்வுகளுக்கு வித்திட்டது. அதன் நீட்சியாகத் தமிழகத்திலும் நெடுங்காலமாக நிலவிவந்த பெண்ணடிமைத்தனத்திற்கும், பெண்கல்வி மறுப்பிற்கும் எதிராகப் பல கலகக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.

    அவ்வகையில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பெண்களின் முன்னேற்றத்துக்காகத் தென்னகத்தில் முதலில் ஓங்கி ஒலித்த பெண்குரலுக்குச் சொந்தக்காரர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் ஆவார்.

    ”அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு” என்ற உதவாத சித்தாந்தத்தில் ஊறியிருந்த மக்கள் வாழ்ந்திருந்த அன்றைய காலச்சூழலில், தம் முன்னேற்றத்திற்கெதிரான அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறிந்து சிறந்த கல்வியாளராகவும், சமூகச் சீர்திருத்தவாதியாகவும் திகழ்ந்த முத்துலட்சுமி அம்மையார், தம் வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொண்டால் போதுமென்று எண்ணாமல், பிற பெண்களும் வாழ்வில் முன்னேற வேண்டும், அவர்களுக்கெதிரான சமூகக் கொடுமைகள் மடியவேண்டும் என்று அரும்பாடு பட்டவர். அந்தச் சாதனைப் பெண்மணியின் வாழ்க்கையை, தன்னலமற்ற தொண்டுகளை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டியது அவசியம்!

    தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886ஆம் ஆண்டு, ஜூலை 30ஆம் நாள் நாராயணசாமி ஐயருக்கும், தேவதாசிச் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரம்மாளுக்கும் மகளாய்ப் பிறந்தவர் முத்துலட்சுமி அம்மையார். தேவதாசிச் சமூகப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டதால் தம் குடும்பத்திலிருந்து விலக்கிவைக்கப்பட்டார் நாராயணசாமி ஐயர் என்று தெரியவருகின்றது. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சாதிக் கொடுமைகளும் ஆணவக் கொலைகளும் குறையாதிருக்கும் நிலையில், 19ஆம் நூற்றாண்டிலேயே மிகத் துணிச்சலாகச் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்ட நாராயணசாமி ஐயர் நம் பாராட்டுக்குரியவர்!

    தந்தைவழித் தொடர்புகள் அற்றுப்போய் தாய்வழித் தொடர்புகளே இறுக்கமாய் இருந்த நிலையில், தேவதாசிகள் சமூகத்தில் சந்திக்கும் அனைத்துச் சிக்கல்களையும் சங்கடங்களையும் அனுபவபூர்வமாக உணரக்கூடிய வாய்ப்பு முத்துலட்சுமி அம்மையாருக்கு இளமையிலேயே அமைந்தது. பின்னாளில் தேவதாசி ஒழிப்புமுறைக்கு அவர் கடுமையாய்ப் போராடியதற்கு அதுவே காரணமாய் அமைந்தது எனலாம்.

    முத்துலட்சுமி அம்மையாரின் தந்தையும், வேறுசில ஆசிரியர்களும் வீட்டிலேயே அவருக்குக் கல்வி கற்பித்தனர். அதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியில் முத்துலட்சுமி அம்மையார் கல்விபயில விரும்பினார். ஆனால் பெண்ணாக இருந்த காரணத்தால் ஆண்கள் மட்டுமே பயிலும் அக்கல்லூரியில் கல்வி பயில அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அம்மட்டோ? அவரைக் கல்லூரியில் சேர்க்கக் கூடாது எனவும் பழமைவாதிகள் பலர் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கல்வியில் முத்துலட்சுமியாருக்கு இருந்த ஆர்வத்தையறிந்த புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறிக் கல்வி உதவித் தொகையுடன் கல்லூரியில் பயில முத்துலட்சுமி அம்மையாருக்கு இடமளித்தார்.

    அங்குக் கல்வியை நிறைவுசெய்த பின்னர், 1907ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார் முத்துலட்சுமி அம்மையார். ஆண்கள் கூட்டத்துக்கிடையே அங்கே கல்விபயின்ற ஒரே மாணவியாகத் திகழ்ந்த அவர்,  அக்கல்லூரியின் அறுவை சிகிச்சைப் பிரிவில் முதலாவது மாணவியாகத் தேர்ச்சிபெற்றுத் தங்கப்பதக்கம் வென்று, 1912இல் ‘தங்க மங்கை’யாகக் கல்லூரியைவிட்டு வெளியில் வந்தார்.

    அப்போது மேல்தட்டுக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைபெற்ற பெண்கள் பலர், பெற்ற குழந்தைக்குப் பாலூட்டாமலும் தேவையான பராமரிப்பை வழங்காமலும் அவற்றையெல்லாம் கவனிக்கும் பொறுப்பை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களிடம் ஒப்படைத்திருப்பதைக் கண்டு மனம் வருந்திய மருத்துவர் முத்துலட்சுமியார், பெற்ற தாயால் ஊட்டப்படும் தாய்ப்பாலின் சிறப்புகள் குறித்து அந்த மேல்தட்டுப் பெண்களுக்கு விழிப்புணர்வூட்டினார்.

    மருத்துவம் படித்தவரும், முற்போக்குச் சிந்தனையாளருமான டாக்டர் சுந்தரரெட்டி என்பவரைத் தமது 28-வது வயதில் 1914ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் முத்துலட்சுமி அம்மையார். தம்மை எல்லாவகையிலும் சரி சமமாய் நடத்தவேண்டும்; தம்முடைய சமூகச் செயற்பாடுகளிலும், தனிப்பட்ட விருப்பங்களிலும் தலையிடக்கூடாது போன்ற நிபந்தனைகளின் அடிப்படையிலேயே முத்துலட்சுமியார் இந்தத் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார் என்ற செய்தி இன்றைய நவநாகரிகப் பெண்களுக்குக்கூட வியப்பளிக்கக்கூடிய ஒன்றே!

     1926-ஆம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற உலகப் பெண்கள் மாநாட்டில் 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அதில் இந்தியாவின் சார்பில் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார் கலந்து கொண்டார். அம் மாநாட்டில் ”ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும்; பெண்களை அடிமைகளாக நடத்துவதை ஒழிக்க வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.

    அன்னிபெசன்ட் அம்மையார் மற்றும் மகாத்மா காந்தியின் சித்தாந்தங்களால் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்த மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார், பெண்கள் முன்னேற்றத்திற்கான இயக்கங்களிலும் பங்கேற்றார். இந்திய மகளிர் சங்கத்தின் சார்பில் (Women’s Indian Association) 1926இல் சென்னை மாகாணச் சட்ட மேலவையின் உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.

    தம்முடைய மருத்துவப் பணிக்கு அஃது இடையூறாக இருக்குமோ என்ற எண்ணத்தின் காரணமாக, ஆரம்பத்தில் அப்பொறுப்பை ஏற்க அவர் தயக்கம் காட்டியபோதிலும், பாரதி கண்ட புதுமைப் பெண்ணான அவர், உடனேயே அத்தயக்கத்தை உதறி, பெண்கள் தங்களது வீட்டைக் காக்கும் திறனை நாட்டை கட்டமைப்பு செய்வதிலும் காட்ட வேண்டுமென உறுதிபூண்டு அப்பொறுப்பை ஏற்றுக்கொண்டார். 1927 முதல் 1930 வரையிலான காலக்கட்டத்தில் சென்னை மாகாணச் சட்டமேலவையின் துணைத் தலைவராகவும் அவர் பதவி வகித்தார்.

    அப்போது, கோயில்களில் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்குப் பொட்டுக் கட்டி இறைவனுக்கு மனைவியாக்கும் தேவதாசி முறையை ஒழிப்பதற்கான சட்டமசோதாவை முன்மொழிந்து, ”தேவதாசி நடைமுறையானது உடன்கட்டை ஏறுதலைவிட மிக மோசமானது; மதத்தின் பெயரால் நடைபெறும் குற்றச்செயல் அது” என்று துணிச்சலோடு வாதிட்டார்.

    தேவதாசி ஒழிப்புமுறைக்கு எதிராகக் காங்கிரசைச் சேர்ந்த தீரர் சத்தியமூர்த்தி போன்றோர் இருந்தனர். “ தேவதாசி முறையானது பழங்காலந்தொட்டுப் பின்பற்றப்பட்டுவரும் சமயம் சார்ந்த ஒரு வழக்கம்; தேவதாசிகளே நம்முடைய மரபுசார் கலைகளைப் பாதுகாப்பவர்களாகவும் உள்ளனர். எனவே, இம்முறையை ஒழிக்கக்கூடாது” என்று அவர் சட்டமன்றத்தில் வாதிட்டபோது, அதுகேட்டுக் கொதித்தெழுந்த முத்துலட்சுமி அம்மையார், ”தேவதாசிகள் எனும் குலம் அழியாமல் காக்கப்பட வேண்டியது அவசியம் என்று நீங்கள் கருதும்பட்சத்தில், நெடுங்காலமாக தேவதாசிகளாக இருந்துவிட்ட பெண்களுக்கு அதிலிருந்து விடுதலை அளித்துவிட்டு, ஏன் உங்கள் பார்ப்பன குலப் பெண்களை தேவதாசிகளாக்கக் கூடாது?” என்று காட்டமாய்க் கேட்டார்.  

    முத்துலட்சுமி அம்மையார் முன்மொழிந்த இந்த மசோதா, 1947இல் மெட்ராஸ் தேவதாசிச் சட்டம் (Madras Devadasi Act) என்ற பெயரில் சட்டமானது. இதன் மூலம் தேவதாசிகள் திருமணம் செய்து கொள்ளச் சட்ட உரிமை கிடைத்தது.

    பெண்களின் திருமண வயதை 14ஆக உயர்த்தக் கோரும் மசோதா குறித்துச் சட்டமன்றக் கவுன்சிலில் விவாதம் நடந்தபோது, ”உடன்கட்டை ஏறும் பழக்கத்தால் ஏற்படும் துயரம் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாய் இருக்கும்; ஆனால், குழந்தைகளுக்குத் திருமணம் செய்யும் பழக்கத்தால், பெண் குழந்தைகள் பிறப்பு முதல் இறப்பு வரையில் தொடர்ந்து துயரமான வாழ்வுக்கு அடிமைப்பட்டுப் போகும் நிலை உள்ளது. குழந்தைப் பருவ மனைவி, குழந்தைப் பருவத் தாய், ஏன் பல சமயங்களில் குழந்தைப் பருவத்திலேயே கைம்பெண் எனத் துயரங்கள் தொடர்கின்றன” என்று பெண்களின் அவல வாழ்வை உணர்வுபூர்வமாய்ப் பேசினார் முத்துலட்சுமி அம்மையார். `சட்டமன்ற உறுப்பினராக எனது அனுபவங்கள்’ (My Experience as a Legislator) என்ற தமது புத்தகத்திலும் இவற்றைக் குறிப்பிட்டுள்ளார் அவர்.

    குழந்தைத் திருமண நடைமுறையை ஒழிக்கக் கோரும் மசோதா குறித்துப் பத்திரிகைகளில் செய்தி வெளியானபோது, பழமைவாதிகள் பொதுவெளியிலும், பத்திரிகைகள் மூலமும் அதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்கலைக்கழகப் பட்டதாரிகளும்கூட அதனை எதிர்த்தனர் என்று முத்துலட்சுமி அம்மையார் வேதனையோடு குறிப்பிடுகின்றார்.

    உப்பு சத்தியாகிரகம் மேற்கொண்ட காந்தியடிகளை 1930இல் சிறையில் அடைத்தது வெள்ளை அரசு. அதை எதிர்த்துத் தம்முடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார் முத்துலட்சுமி அம்மையார்.

    தேவதாசி முறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பெண்கள் தங்கிப் படிப்பதற்குத் தம்முடைய வீட்டில் ’அவ்வை இல்லம்’ என்ற பெயரில் 1930இல் ஓர் இல்லத்தைத் தொடங்கினார். 1936இல் அந்த இல்லம் மயிலாப்பூரில் ஒரு வாடகை இடத்துக்கு மாற்றப்பட்டு, பிறகு அடையாற்றுக்கு மாற்றப்பட்டது. முதலில் தேவதாசி முறையில் இருந்து வெளியில்வந்த பெண்களுக்காகத் தொடங்கப்பட்ட அந்த இல்லமானது பின்னாளில் அடைக்கலமும், கல்வியும் தேவைப்படும் எல்லாப் பெண்களுக்கும் உரியதாக மாற்றமும் வளர்ச்சியும் பெற்றது.

    அக்காலக்கட்டத்தில் கல்வியாளர் சர் பிலிப் ஹார்டாக் (Sir Philip Hartog) என்பவர் தலைமையில் இந்தியாவின் கல்விவளர்ச்சி குறித்து ஆராய்வதற்கோர் குழு பிரிட்டிஷ் இந்திய அரசால் அமைக்கப்பட்டது. அக்குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே பெண் உறுப்பினர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரே ஆவார். இந்தியாவிலுள்ள பெண்களின் கல்விநிலையை அறிய இந்தியாவெங்கும் ஏராளமான பயணங்களை மேற்கொண்டார் அவர். அவருடைய அந்த உழைப்பைப் போற்றும் வகையில், 1947ஆம் ஆண்டு இந்திய விடுதலையின்போது செங்கோட்டையில் ஏற்றப்பட்ட சுதந்தரக் கொடியில் இணைக்கப்பட்ட தலைவர்களின் பெயர்வரிசையில் முத்துலட்சுமி அம்மையாரின் பெயரும் இடம்பெற்றது.

    புற்றுநோயால் தம்முடைய இளைய சகோதரி எதிர்பாராத விதமாக  மரணித்தது பெரும் அதிர்ச்சியையும் துயரத்தையும் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாருக்கு அளித்தது. அதற்குச் சில ஆண்டுகள் கழித்துத் தம்முடைய மேற்படிப்பைத் தொடர இலண்டன் சென்ற முத்துலட்சுமி அம்மையார், அங்கே இராயல் மார்ஸ்டென் (Royal Marsden) மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் எர்னஸ்ட் மைல்ஸை (Dr. Ernest Miles) சந்தித்துப்  புற்றுநோய்த் தாக்கிய நோயாளிகளுக்கு அவர் அளிக்கும் சிகிச்சைகளை நேரில் கண்டறிந்தார். தமிழகத்திலும் அதுபோன்றதொரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் எனும் எண்ணம் அவர் உள்ளத்தில் அப்போது ஏற்பட்டது.

    தாயகம் திரும்பியதும், நல்லுள்ளம் கொண்டவர்களிடம் நிதி திரட்டியும், இந்தியப் பெண்கள் சங்கத்தின் உதவியோடும் அடையாற்றில் புற்றுநோய் மருத்துவமனையைத் தொடங்கும் பணியில் முழுமூச்சாய் இறங்கினார் முத்துலட்சுமி அம்மையார். அன்றைய பாரதப் பிரதர் பண்டித நேரு அவர்கள் 1952இல் அம் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார். 1954இல் மருத்துவமனை கட்டிமுடிக்கப்பட்டுச் செயற்படத் தொடங்கியது.

    மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனைக்குப் பிறகு இந்தியாவிலேயே புற்றுநோய்க்காக உருவாக்கப்பட்ட இரண்டாவது சிறப்பு மருத்துவமனை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையே ஆகும். இன்று உலக அளவில் அம் மருத்துவமனை புகழ்பெற்றுத் திகழ்வதோடு, பல்லாயிரக்கணக்கான புற்றுநோயாளிகளின் நோயைத் தீர்த்துச் சாதனை படைத்துவருவதையும் நாமறிவோம். அதற்குக் காரணமாயிருந்தவர் மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்.

    மருத்துவம் மற்றும் சமூகப் பணிகளில் சிறந்த பங்களிப்பு செய்தமைக்காக 1956ஆம் ஆண்டு முத்துலட்சுமி அம்மையாருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
    சொல்லிய வண்ணம் செயல்
    (664) என்பார் வள்ளுவர்.

    அதுபோல் பெண்களுக்கெதிரான சமூக அவலங்களை மேடைபோட்டுச் சுட்டிக்காட்டுவது எளிது; அதற்குத் தீர்வு காண்பது மிக அரிது.  ஆனால், முத்துலட்சுமி அம்மையாரோ செயல் வீராங்கனையாகவும் களமிறங்கிச் சாதித்தார்.

    கல்வி எனும் கண்ணிழந்து, அறிவொளி குன்றி, வீட்டுக்குள் முடங்கியும் அடங்கியும் கிடந்து, ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கும் கொடுமைகளுக்கும் ஆளான பெண்குலத்தின் அடிமை விலங்கொடித்து, அவர்களின் முன்னேற்றத்துக்கும் நல்வாழ்வுக்கும் அயராது பாடுபட்டுச் சட்டங்கள் பல இயற்றிப் பெண்களின் வாழ்வில் விடிவெள்ளியாய்த் திகழ்ந்தவர் முத்துலட்சுமி அம்மையார். அவர் 1968ஆம் ஆண்டு தம்முடைய 81ஆவது அகவையில் காலமானார்.

    அவருடைய பிறந்த நூற்றாண்டையொட்டி 1986இல் தமிழக அரசு அஞ்சல் தலை ஒன்றை வெளியிட்டுச் சிறப்பித்தது. 2019ஆம் ஆண்டு கூகிள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு முத்துலட்சுமி அம்மையாரின் 133ஆவது பிறந்த ஆண்டு நிறைவை நினைவுகூர்ந்தது.

    அன்பே வடிவாய்க் கொண்டு, உயர்ந்த கல்வியறிவு, சிறந்த கொள்கைகள் ஆகியவற்றை அணிகளாய்ப் பூண்டு, துணிச்சலையும் தன்னம்பிக்கையையுமே ஆயுதங்களாய் ஏந்திச் செயற்கரிய சாதனைகள் பலவற்றை அநாயாசமாக நிகழ்த்திச் சென்றிருக்கும் மகத்தான பெண்மணியான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார், இன்றைய புதுயுகப் பெண்களும் அறிந்து பின்பற்றவேண்டிய சிறந்த வாழ்க்கை வழிகாட்டியாவார்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    https://en.wikipedia.org/wiki/Muthulakshmi_Reddy
    https://www.bbc.com/tamil/india-45003076
    https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/mar/08/womens-day—muthulakshmi-reddy-3376050.html
    https://www.vikatan.com/oddities/women/131624-memories-about-dr-muthulakshmi-reddy

    Share
  • அப்பா

    அப்பா

    பாஸ்கர்

    பள்ளி நாட்கள் எப்படிப்பட்டவர்க்கும் ஒரு இனிமையான விஷயம். படிப்பவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் , ஆளுமை எல்லாம் தாண்டி, பள்ளி நாட்கள் ஒரு கூட்டு வாழ்க்கை. அதுவும் இரண்டு மாத விடுமுறை முடிந்து அடுத்த வகுப்பில் எல்லோரும், புது இடத்தில கூடும்போது ஏற்படும் சந்தோஷம் எந்த சினிமாவும் பணமும் கொடுக்க முடியாதது.

    சின்ன சட்டை, அதில் பிய்ந்த பொத்தானைத் தைக்க வேண்டாம். அதனை அப்பாவோ அம்மாவோ உள்வழியாக பின்னை வைத்துக் குத்தி (தலையை குனியாதடா) ஊக்கு மாட்டி அனுப்பும் போதே தெரியும். ஒரு விளையாட்டில் அது படக்..

    இருந்தாலும் அவர்களின் அன்பு இன்றும் என் கண்ணில் நீர் வரவழைக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாத செயல்.

    இங்கு மாதாவும் பிதாவுமே குருவும் தெய்வமும். அறுபதுகளில் மயிலாப்பூரில் அம்பிகா ஸ்டோர்ஸ் புத்தகக் கடை மிகப் பிரசித்தம். அங்கு லேபில் வாங்கி அதனைக் கட்டுக் கட்டாய் வைத்துக்கொண்டு வகுப்பில் பீத்திகொள்ள அவ்வளவு ஆசை. என் தந்தை புத்தகங்களுக்கு நேர்த்தியாய் அட்டைபோட்டு நாலு பக்கமும் அதனைச் சோற்றுப் பருக்கை வைத்து ஒட்டி, அதனை வெயிலில் காய வைத்து, அடுத்த நாள் அந்த அட்டையில் பெயரை, கூர்ப்பான பௌண்டைன் பேனாவால் எழுதி, துணிப்பையில் போட்டுக் கொடுப்பார். எனக்கு எந்தப் பக்கம் கிழிந்தாலும் கவலை இல்லை. அப்பா ஒட்டின லேபிளும் அவர் கையெழுத்தும் ஒன்றும் ஆக கூடாது.

    இன்று என் அலுவல் பணி சம்பந்தமாய் ஒரு புத்தகக் கடைக்குச் சென்ற போது அந்தக் கடை வாசம், என் நினைவுகளைப் பள்ளிக்கு அனுப்பியது. ஒரு புதுப் புத்தகம் எடுத்து, அதனை அழகாய் மடித்து, சீட்டுக்கட்டு போல, பக்கங்கள் புரட்டி, வாசக் காற்று முகர்ந்தேன். என் தந்தை வாசம் காற்றில் மலர்ந்தது.

    Share
  • போதி மரம்

    போதி மரம்

    பாஸ்கர்

    எழுபதுகளின் முடிவில் எம் ஜி ஆர் ஆட்சியில் மாணவர்களுக்குப் பதினைந்து ரூபாய் பஸ் பாஸ். இலவசமாக எங்கும் செல்லலாம். எங்களுக்குக் கொண்டாட்டம்-பிரயாணச் செலவு இல்லை. பசிக்குப் பொறை சிங்கள் டீ. எப்போதும் ஒரு நாயர் கடை எங்கேயும் உண்டு. படிப்பெல்லாம் பிடிப்பு இல்லை. வீட்டுக்காகக் கல்லூரிக்குச் சென்றோம். அரட்டை. சினிமா, பத்திரிகை சிவாஜி. இது தான் வாழ்க்கை. வாராவாரம் மாங்காடு, திருவேற்காடு. எங்கள் கும்பலின் அலட்டல் பேச்சு, பேருந்து முழுக்கக் கேட்கும். எல்லோர் பார்வையும் எங்கள் மீது. இதில் நடுவே ஆங்கில அலட்டல் வேறு.

    சிறு வயசு. என் பக்கத் துணை சந்திர மௌலி. சுருக்கமாய் மௌலி. காலை அஞ்சு மணிக்குக் கச்சேரி ஆரம்பம். இந்த பாசில் சுற்றாத ஊர் இல்லை. படிப்பறிவு குறைவாய் இருந்த எனக்குப் பள்ளியில் தர்ம பாஸ். கல்லூரியில் பஸ் பாஸ். எல்லாம் மடியில் விழுந்த ஆப்பிள். பல்லவனில் எல்லாத் திசையும் எங்களுக்கு அத்துபடி.. சில இருக்கைகளில் எங்கள் பெயரும் இருக்கும். எல்லாம் எங்கள் பால்பென் கைவண்ணம். வாழ்க்கை எல்லோரையும் ஈர்க்கவே என்று ஆணித்தரமாய் நம்பின காலம்.

    இந்த மயக்கம் அந்த வயதில் நிஜம். ஆனால் படிப்பு அதற்கு விலை என்பது எனக்குப் புரிய கொஞ்ச காலமானது. சேர்ந்து அரட்டை அடித்த கூட்டம் தனித்தனியாகப் படிக்கச் செல்ல நான் தனியானேன். மூணு வருஷம் காணாமல் போனது அன்று தான் தெரிந்தது. பெரிய வலி. நான் இன்னும் பட்டதாரி இல்லை எனப் புரிந்த பெரிய வலி. இனி காலை எழுந்து கல்லூரிக்கு வர வேண்டாம் என்பது சந்தோஷம் இல்லை. பெரிய துக்கம். புத்திசாலி இல்லையெனினும் என் காதல், அந்த கல்லூரி மேல் படர்ந்து இருந்தது.

    இந்த வலியில் இரண்டு மாதம் கழித்து பரீட்சை எழுதப் பேருந்தில் அமர்ந்தேன். டிக்கெட் டிக்கெட் என நடத்துர் என்னைக் கேட்க, வேதனையான தொண்டையில் ஜெயின் காலேஜ் ஒன்னு என்றேன். என் வலி அவருக்குத் தெரியாது. விவரம் தெரிந்து நான் வாங்கின முதல் டிக்கெட். என்னால் இருக்கையில் கர்வமாய் அமர முடியவில்லை. மூணு வருஷப் படிப்பைத் தாண்டி அந்த பஸ் பிரயாணம் எனக்கு ஒரு போதி மரம்.

    Share
  • இரஷியாவின் மகத்தான படைப்பாளி!

    இரஷியாவின் மகத்தான படைப்பாளி!

    -மேகலா இராமமூர்த்தி

    புதின எழுத்தாளர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், தத்துவவாதி எனும் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட மாபெரும் படைப்பாளி, இரஷியாவைச் சேர்ந்த பியதோர் தாஸ்தயெவ்ஸ்கி. சமூக, அரசியல் ஆன்மிகத் தளங்களில் மனித உளவியலை மிக ஆழமாக ஆராய்ந்தவை அவருடைய படைப்புக்கள்.

    மருத்துவர் மிகையில் தாஸ்தயேவ்ஸ்கி – மரியா தாஸ்தயேவ்ஸ்கயா (Mikhail Dostoevsky and Maria Dostoevskaya) இணையரின் இரண்டாவது மகனாக நவம்பர் 11 1821இல் இரஷியாவிலுள்ள மாஸ்கோவில் பிறந்தார் பியோதர் தாஸ்தயேவ்ஸ்கி.

    குழந்தைப் பருவத்திலேயே இலக்கியத்துடனான அறிமுகம் தாஸ்தயெவ்ஸ்கிக்கு கிடைத்தது. மூன்று வயதுக் குழந்தையாக அவர் இருந்தபோதே வீரக்கதைகளையும் சாகசக் கதைகளையும் அவருக்கு வாசித்துக் காட்டிய பாட்டி அலேனா புரோலோவ்னா (Alena Frolovna), வீர சாகசக் கதைகளில் தாஸ்தெயெவ்ஸ்கிக்கு ஆர்வமேற்படக் காரணமாக இருந்திருக்கிறார். அவருக்கு நான்கு வயதானபோது அவரின் தாயார் விவிலியத்தை (Bible) வாசித்துக் காட்டி அவருக்கு எழுதவும் படிக்கவும் கற்பித்திருக்கின்றார்.

    இரஷியாவின் புகழ்வாய்ந்த படைப்பாளர்களான புஷ்கின் (Pushkin), கரம்சின் (Karamzin), டெர்சாவின் (Derzhavin) ஆகியோரின் படைப்புகள், கெதே (Goethe), ஷில்லர் (Schiller) போன்ற ஜெர்மானியப் படைப்பாளர்களின் படைப்புகள், ஹோமரின் படைப்புகள் முதலியவற்றை இளம் வயதிலேயே அறிமுகப்படுத்தித் தாஸ்தயெவ்ஸ்கியின் வாசிப்புத்தளத்தை விரிவுபடுத்தி அவருடைய சிந்தனைத் திறனையும் கற்பனை வளத்தினையும் மேம்படுத்தியிருக்கின்றனர் அவரின் பெற்றோர்.

    கல்வியில் கண்டிப்பு மிகுந்தவராகத் தாஸ்தயெவ்ஸ்கியின் தந்தை இருந்திருக்கின்றார் என்று தெரியவருகின்றது. செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கிலுள்ள இராணுவப் பொறியியல் கல்லூரியில் தாஸ்தயெவெஸ்கியும் அவருடைய சகோதரர் மிகையிலும் (Mikhail) கல்வி பயின்றுகொண்டிருந்த காலத்தில் அவர்களின் அருமை அன்னை காசநோயால் பாதிப்புற்று இறந்தார்.

    அறிவியல், கணிதம், இராணுவப் பொறியியல் போன்றவற்றில் ஈடுபாடின்மையால் அந்தக் கல்லூரிப் படிப்பு தாஸ்தயெவ்ஸ்கிக்கு விருப்பமானதாயில்லை. எனினும், அதற்காகக் கல்வியைக் கைவிட்டுவிடாது கற்றுத்தேறி பொறியாளர் எனும் தகுதியோடு அந்தக் கல்லூரியிலிருந்து வெளியில் வந்தார் தாஸ்தயெவ்ஸ்கி. தாயார் இறந்த இரண்டாண்டுகளுக்குள் வருந்தத்தக்க வகையில் அவருடைய தந்தையும் மறைந்தார்.

    ஆகஸ்டு 12, 1843இல் லெப்டினண்ட் பொறியாளராகப் பணியில் சேர்ந்து தம் சகோதரர் மிகையிலின் நண்பரான ரிசன்காம்ஃப் (Rizenkampf) என்பவருக்குச் சொந்தமான வீட்டில் தங்கினார் தாஸ்தயெவ்ஸ்கி.

    பிரெஞ்சு எழுத்தாளரான பால்சாக்கின் (Balzac) யூஜின் கிராண்டட் (Eugénie Grandet) எனும் புதினத்தை மொழிபெயர்த்து எழுத்துத் துறையில் அடியெடுத்து வைத்தார் தாஸ்தயெவ்ஸ்கி. அதைத்தொடர்ந்து மேலும் சில புதினங்களை அவர் மொழிபெயர்த்தார். எனினும், அம்மொழிபெயர்ப்புப் பணி அவருக்கு வெற்றியைத் தரவில்லை. போதாக்குறைக்கு அவருடைய சூதாட்டப் பழக்கங்களும், ஊதாரித்தனமான வாழ்க்கைமுறைகளும் அவரைப் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாக்கின. இவற்றையெல்லாம் சமாளிக்க விரும்பித் தாமே புதினம் ஒன்றை எழுதும் பணியில் இறங்கினார்.

    அவ்வாறு தாஸ்தயெவ்ஸ்கி எழுதியதுதான் ஏழைமக்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஏழையினம் (Poor Folk) எனும் அவருடைய முதல் புதினம். ஒன்பது மாதங்களில் அப் புதினத்தை எழுதி, 1845ஆம் ஆண்டு மே மாதம் அவர் வெளியிட்டார். ஏழை மக்களின் வாழ்க்கையையும் அவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான உறவையும் உணர்வுபூர்வமாய்ப் பேசுகின்ற அந்தப் புதினத்திற்குச் சிறந்த சமூகப் புதினம் எனும் பாராட்டை வழங்கினார் இரஷியாவின் புகழ்பெற்ற இலக்கிய விமரிசகரான பெலின்ஸ்கி (Vissarion Belinsky). இப் புதினத்திற்கு இரஷிய மக்களிடமும் நல்ல வரவேற்பு கிட்டியது.

    தம்முடைய இலக்கியப் பணிக்குத் தம் பொறியாளர் பணி இடையூறாக இருக்குமெனக் கருதிய தாஸ்தயெவ்ஸ்கி அப்பணியிலிருந்து விலகினார். அதைத் தொடர்ந்து அவர் எழுதிய இரண்டாவது புதினம் ‘இரட்டையர்’ (The Double) என்பது. அதற்குக் கிடைத்த எதிர்மறையான விமரிசனங்கள் அவர் உடல்நிலையைப் பாதித்தன; எனினும், அவர் எழுதுவதை நிறுத்தவில்லை.

    1846க்கும் 1848க்கும் இடைப்பட்ட காலத்தில் பல சிறுகதைகளை எழுதி வெளியிட்டார் தாஸ்தயெவ்ஸ்கி. திரு. புரோகார்ச்சின் (Mr. Prohartchin), குடியிருப்புமனைக் கிழத்தி (The Landlady), பலவீனமான இதயம் (A Faint Heart), வெண்ணிற இரவுகள் (White Nights) ஆகியவை அவற்றுள் சில.

    இதில் வெண்ணிற இரவுகள் என்ற சிறுகதை, ஓர் இளைஞன் தன் சொந்தக் கதையைச் சொல்லுகின்ற வகையில் அமைந்தது. செயிண்ட் பீட்டர்ஸ்பர்கில் தனிமையில் வாழ்கின்ற அந்த இளைஞன் ஓரிளம்பெண்ணைச் சந்தித்துக் காதல் கொள்கின்றான்; ஆனால் அவள் அவனைக் காதலிக்கவில்லை. காரணம் அவள் தொலைந்துபோன தன்னுடைய காதலனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றாள்; அவனும் ஒருநாள் வந்து சேர்கின்றான்; அவர்கள் இருவரும் இறுதியில் இணைகிறார்கள்.

    தாஸ்தயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டதே 2003ஆம் ஆண்டு திரு. ஜனநாதன் இயக்கத்தில் வெளிவந்த ’இயற்கை’ என்ற தமிழ்த் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், தாஸ்தயெவ்ஸ்கி எழுதிய இந்தச் சிறுகதைகள் எவையும் எதிர்பார்த்த வரவேற்பை இரஷிய மக்களிடம் பெறவில்லை. அச்சமயத்தில் அவரைப் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து காத்தது, அவர் இணைந்திருந்த யுடோபியன் சோசியலிச பெடகாவ் வட்டமே (Utopian Socialist Betekov circle).

    அந்த வட்டம் கலைந்தபின்னர் 1846இல் கவிஞர் அலெக்சி ப்லஷேயேவ் (Aleksey Pleshcheyev) என்பவரின் தூண்டுதலினால் ’பெட்ராஷேவ்ஸ்கி’ என்ற இலக்கிய வட்டத்தில் (Petrashevsky Circle) இணைந்தார் தாஸ்தயெவ்ஸ்கி. இவ்வட்டம் இரஷியாவில் சமூகப் புரட்சிகள் நிகழவேண்டும் எனும் சிந்தனையைக் கொண்டிருந்தது.

    ஆதலால் இவ்வட்டம் குறித்து இரஷியாவின் உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த உளவுத்துறை அதிகாரியான லிப்ராண்டி (Liprandi) என்பவரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    டிசம்பர் புரட்சி போலவோ, 1848இன் புரட்சிகள் போலவோ ஏதேனும் கிளம்பக்கூடும் என்று அஞ்சிய இரஷிய அரசாங்கம், தாஸ்தயெவ்ஸ்கியும் அவரது கூட்டாளிகளும் சதிகாரர்கள் என்று முத்திரை குத்தி ஏப்ரல் 23, 1849 அன்று கைது செய்தது. மிகவும் ஆபத்தான குற்றவாளிகள் வைக்கப்பட்டிருந்த அதிகப் பாதுகாப்பு கொண்ட பீட்டர்-பால் கோட்டையில் அவர்கள் சிறை வைக்கப்பட்டார்கள். அவர்கள் மீதான விசாரணை நான்கு மாதங்கள் நடைபெற்றது; அதன்முடிவில் பெட்ராஷேவ்ஸ்கி வட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

    ஆனால் அந்த தண்டனையானது நல்வாய்ப்பாகக் கடைசி நிமிடத்தில் ரத்துசெய்யப்பட்டுக் கைதிகள் சைபீரியாவிலுள்ள சிறைக்கு அனுப்பப்பட்டார்கள். அங்கே நான்கு ஆண்டுகள் மிகக் கடுமையான வேலைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார் தாஸ்தயெவ்ஸ்கி; அக்காலக்கட்டத்தில் வலிப்பு நோயால் அவர் பெரிதும் துன்புற்றிருக்கின்றார். அவர் வாழ்நாள் முழுவதுமே அந்நோய் அவரைத் தொடர்ந்து துன்புறுத்தி நலிவடையச் செய்தமை வருந்தத்தக்கதே.

    பிப்ரவரி 14, 1854இல் சிறையிலிருந்து விடுதலையானார் தாஸ்தயெவ்ஸ்கி. சிறைமீண்ட அவர் தமது சகோதரர்  மிகையிலிடம் பொருளாதார உதவி கோரியதோடு விகோ (Vico),ஹெகல் (Hegel), காண்ட் (Kant) போன்ற சிந்தனையாளர்களின் புத்தகங்களை அனுப்பி உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    தன் வரலாற்றையும் கலந்து அவர் எழுதிய பிணங்களின் வீடு (the house of the dead) என்ற புதினம், வ்ரெம்யா (Vremya) என்ற இதழில் 1861இல் வெளியானது. இரஷியச் சிறைகளைப் பற்றி முதலில் எழுதப்பட்ட புதினம் அதுவேயாகும். இரஷியாவின் மற்றொரு பெரிய இலக்கிய ஆளுமையான லியோ டால்ஸ்டாய் இப்புதினத்தைத் தாஸ்தயெவ்ஸ்கியின் தலைசிறந்த படைப்பு என்று குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கின்றார்.

    கட்டாய இராணுவப்பணியும் இரஷிய அரசாங்கத்தால் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலத்தில் மேட்டுக்குடியைச் சேர்ந்த பிள்ளைகள் பலருக்குப் பாடங்கற்பிக்கும் ஆசிரியராகவும் தாஸ்தயெவ்ஸ்கி பணியாற்றியிருக்கின்றார். அப்போது இராணுவ அதிகாரி ஒருவரின் மனைவியான மரியா என்ற பெண்மீது தாஸ்தயெவ்ஸ்கிக்குக் காதல் பிறந்தது. சில ஆண்டுகளில் அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிடவே, மரியாவை மணந்துகொண்டார் தாஸ்தயெவ்ஸ்கி. எனினும் வலிப்புநோய் கொண்ட கணவரோடு மரியாவால் மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை.

    ஏழு ஆண்டுகளில் மரியா இறந்துவிடவே மகிழ்ச்சியற்ற அம் மணவாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்தது.

    தம் தனிப்பட்ட வாழ்வில் எத்தகைய சங்கடங்கள் வந்தாலும் அதற்காகத் துவண்டு தம் எழுத்துப்பணிகளைக் கைவிடாத தாஸ்தயெவ்ஸ்கி, 1861இல் எழுதிய புதினம், ’நிந்திக்கப்பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும்’ (The Insulted and Humiliated). அதில் இரு முக்கியக் கதாபாத்திரங்களை எதிரெதிர் தன்மையும் மனநிலையும் கொண்டவர்களாக படைத்திருக்கின்றார் அவர்.

    இளவரசன் அலெக்சி ((Prince Alexey), அசட்டுத்தனங்கள் நிறைந்தவனாகவும் அதேசமயம் தெய்வீகத்தன்மை கொண்டவனாகவும் இருக்கின்றான்; அதற்கு மாறாக அவனுடைய தந்தை இளவரசர் வால்கோவ்ஸ்கி (Prince Valkovsky) அதிபுத்திசாலியாகவும் அதன் விளைவாகத் தீமையே வடிவானவராகவும் படைக்கப்பட்டிருக்கின்றார்.

    உலகப் பேரிலக்கியங்களில் சிறந்த ஒன்றாக இன்றளவும் போற்றப்படுகின்ற  குற்றமும் தண்டனையும் (Crime and Punishment) என்ற புதினத்தை 1866இல் எழுதினார் தாஸ்தயெவ்ஸ்கி. வறுமையில் வாடுகின்ற இளைஞன் ரஸ்கோல்நிகோவ் (Raskolnikov), எவ்வித நேர்மையான விதிமுறைகளையும் பின்பற்றாமல் அநியாயமான முறையில் அடகுக்கடை நடத்திவருகின்ற பெண்மணி ஒருத்தியை அவளுடைய பணத்தை அடையும் நோக்கில் கொன்றுவிடுகின்றான். அந்தப் பணத்தால் தன் வறுமை ஓடும்; வாழ்வில் இன்பம் கூடும் என்ற எண்ணத்துடனேயே அவன் கொலை செய்தான்; எனினும், அதன்பின்னர் அவன் எதிர்பார்த்த மகிழ்ச்சி அவனுக்குக் கிடைக்கவில்லை. அதற்கு நேர்எதிராக அக்கொலையானது அவன் மனநிலையை வெகுவாக பாதிக்கத் தொடங்கியது. அவன் நிம்மதியிழந்து குற்றவுணர்ச்சிக்கு ஆளானான். இறுதியில் அவனது நிலையென்ன என்பதை இந்நாவல் உணர்ச்சிவேகம் நிறைந்த அக ஓட்டங்களோடும் சுழன்றடிக்கும் சொற்றொடர்களோடும் விவரித்துச் செல்கின்றது.

    குற்றம் என்பது சார்புத்தன்மை உடையது; ஆனால் தண்டனை என்பது முழுமுற்றானது. இன்று செய்யப்பட்ட குற்றம் நாளை குற்றமில்லாததாக ஆகலாம்; அளிக்கப்பட்ட தண்டனையை நாம் ஒன்றும் செய்யமுடியாது. எனவே தண்டனை என்பது குற்றத்தை ஒருபோதும் சமன் செய்வதில்லை என்ற புதிய தரிசனத்தை இந்தப் புதினம் உருவாக்கியது.

    நீதி என்பது தண்டிக்கும் சமூக அதிகாரத்தின் கோணத்திலேயே பொதுவாக விவாதிக்கப்படுவது வழக்கம். ஆனால், தண்டனைக்குள்ளாகும் குற்றவாளியின் தரப்பிலிருந்து நீதியை இப்புதினம் அணுகியிருப்பது புதுமையே!

    தாஸ்தயெவ்ஸ்கியின் மற்றொரு சிறந்த படைப்பு அசடன் (The idiot). 1868இல் இந்தப் புதினத்தை அவர் எழுதினார். அசடனின் நாயகனாகிய பிரின்ஸ் மிஷ்கின் (Prince Myshkin), ’நிந்திக்கப்பட்டவர்களும் அவமதிக்கப்பட்டவர்களும் புதினத்தில் வருகின்ற பிரின்ஸ் அலெக்ஸியின் மற்றொரு வடிவமே.

    சுவிட்சர்லாந்தின் மருத்துவ விடுதியில் தங்கி வலிப்புநோய்க்குச் சிகிச்சை பெற்றுப் பின் இரஷியாவிற்குத் திரும்பிவந்து ஒரு புதிய வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முயலும் பிரின்ஸ் மிஷ்கின் என்ற 17 வயது இளைஞனின் கதையிது. அவன், தான் சந்திக்கும் மனிதர்கள் வழியாக மானுட உறவுகளின் சிக்கலான பிணைப்பைக் கண்டுகொள்கின்றான். அந்த உக்கிரமான வேட்டை விளையாட்டில் தன்னுடைய நல்லியல்பு கெடாத ஒரு புனிதனாக அவன் கடந்துசெல்கின்றான்.

    இப்புதினத்தில் தாஸ்தயெவ்ஸ்கி தாம் மரணதண்டனைக்காகக் காத்திருந்த கடைசி நிமிடங்களை அற்புதமாகப் பதிவு செய்திருக்கிறார்; சாவின் முன்னால் நிற்பவன் தனக்குக் கிடைத்துள்ள கடைசி ஐந்து நிமிடங்களை எப்படித் துளித்துளியாகப் பகிர்ந்து கொள்கிறான் என்ற விவரணை இப்புதினத்தில் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது.

    அசடனின் நாயகன் மிஷ்கினுக்கு இருக்கும் ஏசு கிறிஸ்துவின் சாயலைப்பற்றி மேனாட்டு இலக்கிய விமரிசகர்கள் நிறையவே எழுதியிருக்கின்றார்கள். சகமனிதர்களின் துயரங்களுக்கும், தன் சொந்தத் துயரங்களுக்கும் வேறுபாடு தெரியாதவன் மிஷ்கின். அந்த இயல்பே அவனை அனைத்து மானுடத் துயரங்களுக்கும் மேலானவனாக, அவற்றில் இருந்து மீட்பளிப்பவனாக ஆக்குகின்றது.

    இடியட் என்ற தலைப்பு இந்தப் புதினத்துக்கு ஏன் வைக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்த வாதப்பிரதிவாதங்கள் இன்றும் நீள்கின்றன. ’அப்பாவி’ என்பதே இப்புதின நாயகனை அடையாளப்படுத்தும் சரியான சொல் என்று ஒருசாராரும், இல்லை… வெளிப் பார்வைக்கு முட்டாள்போலத் தோன்றும் ஒருவன் உள்மனத்தில் தெய்வத்தன்மை பொருந்தியவனாயிருக்கின்றான் என்பதே இந்தத் தலைப்பின் உண்மையான பொருள் என்று இன்னொரு சாராரும் வாதிடுகின்றார்கள். தலைப்புக்கான காரணம் எதுவாயினும் தாஸ்தயெவ்ஸ்கியின் புதினங்களில் மிகவும் கலைநேர்த்தி கொண்டது என்ற பாராட்டைப் பலரிடம் பெற்றது அசடன் எனும் இந்தப் புதினமே.

    தஸ்தாயெவ்ஸ்கியின் மற்றொரு மகத்தான படைப்பு, கரமசொவ் சகோதரர்கள் (The Brothers Karamazov). மனித மனத்தின் இருண்மையைப் பொருண்மையாகக் கொண்டு விரிகின்ற நெடிய புதினமிது. ’பகுப்பாய்வு உளவியலின் தந்தை’ என்று அழைக்கப்பட்ட மருத்துவர் சிக்மண்டு பிராய்டால் (Sigmund Freud) ‘மிகச் சிறந்த கலைப் படைப்புக்களுள் ஒன்று’ என்று போற்றப்பட்ட புதினமிது.

    தாஸ்தயெவ்ஸ்கியைப் பொறுத்தவரை, புதினம் என்பதை நீண்ட கதையாடல் என்ற வகையில் மட்டும் கொள்ளாமல், அதனூடாகச் சமகாலச் சூழல், அடித்தட்டு மக்களின் இருண்ட வாழ்க்கை, மனித மனத்தின் கசடுகள், ஆன்ம விடுதலை, கடவுளின் இருப்பு என்று நிறைய வாதங்களைத் தம் புதினங்களில் அவர் முன்வைக்கின்றார். எனவே அவருடைய படைப்புக்கள், தர்க்கங்களும் தத்துவங்களும் அரசியல் விமரிசனங்களும் கொண்டவையாக அமைந்திருக்கின்றன. முக்கியக் கதாபாத்திரங்களுக்கு இணையாகத் துணைக் கதாபாத்திரங்களையும் உருவாக்கியிருப்பது அவரின் தனிச்சிறப்பு.

    இரஷியா உலகிற்களித்த இந்த மாபெரும் படைப்பாளியைப் பல பிரபலங்களும் அறிஞர்களும் போற்றியிருக்கின்றார்கள்.

    ஜெர்மனியின் சிறந்த தத்துவவாதியான பிரெட்ரிக் நீட்சே (Friedrich Nietzsche), ”நான் கற்றுக்கொள்வதற்கான விஷயங்களைக் கொண்டிருக்கும் ஒரே உளவியலாளர் தாஸ்தயெவ்ஸ்கியே” என்று புகழ்ந்துரைத்திருப்பதும், நோபல் பரிசுவென்ற நார்வே நாட்டு இலக்கியவாதியான கென்யூட் ஹாம்சன் (Knut Hamsun), ”மனித வடிவமைப்பின் சிக்கல்களை தாஸ்தயெவ்ஸ்கி அளவுக்கு ஆராய்ந்தவர் எவருமில்லை” என்று போற்றியிருப்பதும் இங்கே எண்ணத்தக்கன.

    புனைவிலக்கியத்தில் தமக்கெனத் தனிமுத்திரை பதித்த பியதோர் தாஸ்தயெவ்ஸ்கி 1881ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் நாள் தம்முடைய 59ஆவது அகவையில் காலமானார்.

    அவருடைய புகழ்பெற்ற புதினங்களான குற்றமும் தண்டனையும், அசடன், இரட்டையர் போன்றவற்றை மதுரை பாத்திமா கல்லூரியின் மேனாள் தமிழ்ப் பேராசிரியர் முனைவர் எம். ஏ. சுசீலா அவர்கள், சிறப்பாகத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கின்றார். புனைவிலக்கியத்தில் ஆர்வமுள்ள தமிழர்கள் படிக்கவேண்டிய புதினங்கள் இவை. தாஸ்தயெவ்ஸ்கியின் படைப்பாற்றலை நாமும் உணர்ந்துகொள்ள இவ்வாசிப்புத் துணைசெய்யும்!

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    1. https://en.wikipedia.org/wiki/Fyodor_Dostoevsky
    2. https://www.notablebiographies.com/De-Du/Dostoevsky-Fyodor.html
    3. https://www.hindutamil.in/news/literature/150622–4.html
    Share
  • இனிய பாலா

    இனிய பாலா

    பாஸ்கர்

    இப்போது தான் பாலாவைப் பார்த்துவிட்டு வந்தது போல இருக்கிறது. அன்பால் அவர் நட்பின் கைகளைப் பற்றும் விதம் தனி வகை. இணைப்புப் பாலம் போல விரல்கள் ரீதியாக அவர் கைகளைப் பற்றுவார். அது நெகிழ்ச்சியின் உச்சம். பற்றும் கைகளுக்குத் தான் தெரியும்.

    காவேரி மருத்துவமனையில் அவரைப் பார்த்தபோது மெலிதான குரலில் பாஸ்கரா என்றார். ஆமாம் சார் எனச் சொல்லி அவர் கைகளைப் பிடித்து கொண்டேன். நிறைய எழுதியாச்சு. ஆனாலும் இன்னும் பாக்கி உண்டு என்றார். போதுமே என்றேன். அவர் கேட்கவில்லை. எழுதாமல் இருப்பதும் ஒரு கட்டத்தில் சந்தோஷம் தானே எனச் சொல்ல நினைத்தேன். அதற்குள் மருந்து கொடுக்கச் சிப்பந்தி வர, பேச்சு தடைப்பட்டது. அவரைப் போல யாரும் ஆழ்ந்து பார்க்க முடியாது. நின்றபடி வணங்கினேன், கிட்டத்தட்ட அவரை என் கண்ணுக்குள் போட்டபடி.

    இதோ இன்றோடு அவர் அமரராகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? அவர் குரல், அந்த தீர்க்கமான கண்கள் எங்கே? நிலையாமை ஓர் ஆனந்த வலி. அதை விடவும் முடியாது. பிடிக்கவும் முடியாது. உண்டு, கண்டு, பிணைந்து, புனைந்து எல்லாக் குரூரமும் தாண்டி ஒட்டிக்கொண்டுள்ள மிச்ச அன்பை இப்படிக் கொட்டும்போதே வாழ்வின் பிரமிப்பு தட்டுகிறதே, பொய்மையைத் தொலைத்து உள்மன நிஜ தரிசனம் செய்தால் எவ்வளவு பெரிய பேரின்பம்? அந்த இன்பத்தைத் தான் பாலா தொடச் சொன்னார் .

    திடீர் எனக் கைபேசி அழைப்பு வரும் போது அவர் கேட்கும் முதல் கேள்வி, என்ன ஒய் தூங்குறீரா? என்பது தான் இல்லை எனச் சொன்னாலும் உண்மையில் நான் விழித்துகொள்ளவில்லை என்றுதான் பொருள். உம்மை மறக்க முடியுமா ஸ்வாமி?

    ஏதோ பேச்சுவாக்கில் ஒரு நாள் அவர் கேட்டார். ஒய், எத்தனை வருஷமாய் என்னைத் தெரியும்? – கிட்டத்தட்ட எனக்கு உங்களுடன் சுமார் முப்பத்து அஞ்சு வருடத் தொடர்பு என்றேன். அப்போது கௌரிக்கு சுமார் மூன்று வயது இருக்கும். கெளரியிடம் திரும்பி உங்கள் பழைய வீட்டு போன் நம்பர் தெரியுமா எனக் கேட்டேன். பட்டெனச் சொன்னாள்.

    அடேங்கப்பா என்றார் அவர் பாணியில். அவர் நினைவு வரும்போதெல்லாம் அந்த வார்த்தையைத் தான் நான் மனத்துக்குள் சொல்லிக்கொண்டு இருக்கிறேன் .

    Share
  • எனக்குக் கிடைத்த முதல் வேலை

    எனக்குக் கிடைத்த முதல் வேலை

    பாஸ்கர் சேஷாத்ரி

    அது வருஷம் எண்பத்து நாலு. ஏதோ படித்துவிட்டு இலக்கியம், கூட்டம் என்று சுற்றிக் கொண்டிருந்த போது, பக்கத்து வீட்டில் உள்ள பெரிய மனிதரிடம் என்னைக் கூட்டிச் சென்றார் அந்த அம்மையார்.

    அவர் பெயர் கோபால்சுவாமி. பெரிய வரித்துறை நிபுணர். வாசலில் எப்போதும் அவரைக் காண ஒரு கூட்டம் இருக்கும். எனக்கான ஆறுதல், அவரது பக்கத்து வீட்டில் நான் குடியிருந்தது தான்.

    உன் அப்ளிகேஷன் எங்கே? எனக் கேட்டார்.

    இதோ

    தட்டெழுத்தில் அடித்த ஒரு விண்ணப்பம் அது.

    சொன்ன வேலையைச் செய்வியா?

    செய்வேன் சார்.

    நான் சொன்னேன் எனச் சொல்லு என ஒரு ஒரு விசிட்டிங் கார்டைக் கொடுத்தார். அவங்களைப் போய்ப் பார் எனச் சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

    இரண்டு நாளில் பார்த்துவிட்டு, சம்பளம் பேசி (மாசம் இருநூற்று எழுபத்து ஐந்து ரூபாய்), பணியில் சேர்ந்துவிட்டேன்.

    முதல் நாளில் சேர்ந்தவுடன் கணக்காளர்,  “உனக்கு இங்கே சேர் எல்லாம் கிடையாது. தோ, அங்கே போய் உக்கார் என்றார். அவர் மணி அய்யர்.

    ஒரு மணி நேரத்தில் கூப்பிட்டு, கையில் பிளாஸ்க் ஒன்றைக் கொடுத்துவிட்டு, சுப்ரபாத்தில் காப்பி வாங்கிக்கொண்டு வா. இந்தா சைக்கிள் சாவி என்றார்.

    அந்த வயதில் வலிக்காமல் வலித்த வலி. சந்தோஷமாக வாங்கி வந்தேன்.

    டம்ப்ளரில் எல்லோருக்கும் கொடுத்துவிட்டு நீயும் எடுத்துக்கோ என்றார்.

    அலுவலகத்தில் குடித்த முதல் காப்பி, நின்றுகொண்டுதான்.

    அவர்கள் சொன்னதை எல்லாம் செய்தேன்.

    பொது மேலாளர் ஒரு நாள் கூப்பிட்டு, நீ விற்பனைப் பிரிவில் சேர்ந்துகொள் எனச் சொன்னார்.

    ஒரு நாளில் அதிகாரி போல ஆனேன். சுமார் ஏழு வருடங்கள் அங்கு உழைத்த உழைப்பு, இன்னொரு நிறுவனத்திற்கு இட்டுச் சென்றது.

    அதற்கு அடித்தளம் அமைத்த அந்தப் பெண்மணி, என் தாயார்.  இன்று அந்த நிறுவனம், காசாளர், மேலதிகாரி யாரும் இல்லை. ஆனால், என் நினைவில் நிறைந்து நிற்கின்றார்கள்.

    Share
  • கமலா மாமி

    கமலா மாமி

    பாஸ்கர்

    நினைத்து பாருங்கள். நாற்பது வருடங்களுக்கு முன் சுற்று புற சூழல் பாதிப்பில்லாத மயிலாப்பூர் மற்றும் அதன் மாட வீதிகள். அதுவும் நான் சொல்ல போவது அந்த எட்டாம் நம்பர் வடக்கு மாட வீதி. மூன்றடிக்கும் குறைவான அகலம் கொண்ட அந்த சந்தில் என் சினேக காலம் ஊன்றியது. அது நண்பர் மௌலியின் வீடு. நீளமான சந்து. அந்த பக்கம் போனால் பலா தோப்பு வந்து விடும் போல். அவ்வளவு நீளம். அதில் ஒரு அஞ்சடி மர பெஞ்ச். அதில் தான் அய்யாசாமி என்கிற மௌலியின் தாத்தா அமர்வார். கையில் ஒரு விசிறி. சுமார் ஆறடி உயரம். பார்த்தாலே பயம் வரும் ஒரு உருவம். எங்களை திட்டுவதே அவர் பொழுது போக்கு. ஆனால் மிக அன்பானவர். கட்டை குரலில் அவர் கத்துவது ஊரெல்லாம் எதிரொலிக்கும். ஒரு அலாதியான அன்பு அவருக்கு மௌலியிடம் உண்டு.

    அப்போதெல்லாம் குறைவான போக்குவரத்து. நன்கு நீர் நிரம்பிய கோவில் குளம். அதிரடி வேகத்தில் எப்போதும் காற்று. அதுவும் அந்த சந்தில் முட்டி மோதி உள்ளே செல்கையில் அதன் வேகம் கூடும். வாழ்வில் கோபப்பட வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு விவரம் புரியாத சந்தோஷம். எல்லாம் இலவசம். மிதி வண்டியில் ஊர் சுற்றி வரும் எங்களுக்கு எல்லா தெருக்களும் அத்துப்படி. திரும்ப திரும்ப கொஞ்சம் சினிமா, காரம்போர்ட், அவ்வப்போது கிரிக்கெட். இரவு பொழுது தான் எல்லோர்க்கும் அவஸ்தை. வெளியே செல்ல கட்டுப்பாடு. அதனால் என்ன ? அடுத்த நாள் திட்டம் பின்னிரவே தயார். பசிக்கும்போது தான் எங்களுக்கு வீட்டு நினைப்பு.

    அதுவும் மௌலியின் அம்மா எங்களுக்கு கொடுக்கும் தயிர் சாதம் ஒரு வரப்ரசாதம் – காற்றில் முடி பறக்கும் அந்த மதிய பொழுதில் சுமார் வெய்யிலில் அந்த ஜில்லென உணவு நிஜ தேவாம்ருதம். அந்த ஒரு சுவையை நான் இன்று வரை ருசித்ததில்லை. கமலா மாமியின் கை வண்ணம் அது – எத்தனை அன்பு இதயங்களை கடந்து வந்து இருக்கிறது இந்த வாழ்க்கை. எந்த முனையில் உறவுகள் முளை விடுகிறது என்றே புரிவதில்லை. அது எப்படி வீர்யம் அடைந்து பல்கி பெருகிறது என்றும் தெரிவதில்லை. வாழ்வின் வடிவமைப்பு புரிபடவில்லை. இது இப்படி என எண்ணும்போது வேறு ஏதோ ஒன்று வெளிப்படுகிறது. எதையும் ஒரு கட்டுக்குள் கொண்டு நிர்ணயம் செய்ய முடியவில்லை – இதோ எல்லோரும் அறுபதை தொட்டாகி விட்டது குளம் இருக்கிறது. நீர் இல்லை. மனம் இருக்கிறது. வயசு இல்லை. இன்றும் தயிர் அல்லது மோர் சாதம் நினைப்பு வந்தால் கமலா மாமி தான் நினைவுக்கு வருகிறார்கள்.. உணவின் சுவை கைப்பதத்தில் இல்லை. அது மனசில் இருக்கிறது. வாழ்க்கை தீராநதி.

    Share
  • எளிய வாழ்க்கையின் இனிமையை உணர்த்திய அறிஞர்

    எளிய வாழ்க்கையின் இனிமையை உணர்த்திய அறிஞர்

    மேகலா இராமமூர்த்தி

    மாட மாளிகைகளில் ஆடம்பரமாக வாழ்வதே வாழ்க்கை என்று எண்ணும் மானுடரே இம்மன்னுலகில் அதிகம். எளிய வாழ்க்கையை மேற்கொள்வதும் அதில் தன்னிறைவு காண்பதும் பலராலும் சிந்தித்துப் பார்க்கவும் இயலாத ஒன்று. இப்படிப்பட்ட மனிதர்களுக்கு மத்தியில், வேண்டாமை அன்ன விழுச்செல்வம் எனும் வள்ளுவத்தை நெஞ்சில் நிறுத்தி, தேவைகளைக் குறைத்து நிறைவோடும் நிம்மதியோடும் வாழும் மனிதர்களும் அத்தி பூத்தாற்போல் ஆங்காங்கே தென்படத்தான் செய்கின்றார்கள். அத்தகையவர்களில் ஒருவர்தாம் ஹென்றி டேவிட் தொரோ (Henry David Thoreau) எனும் மேனாட்டுச் சிந்தனையாளர். அவரின் வாழ்க்கையை நாம் அறிந்துகொள்வது எளிமையிலும் இனிமையாகவும் இன்பமாகவும் வாழ்வது சாத்தியமே என்பதை நமக்கு உணர்த்துவதாய் அமையும்.

    மாசசூசட்ஸ் மாகாணத்திலுள்ள கான்கார்டு (Concord, Massachusetts) என்ற ஊரில் ஜூலை 12, 1817ஆம் ஆண்டு ஜான் தொரோ (John Thoreau), சிந்தியா டன்பர் (Cynthia Dunbar) இணையருக்கு மகனாய்ப் பிறந்தார் ஹென்றி டேவிட் தொரோ. பென்சில்கள் செய்து அவற்றை விற்பதைத் தொழிலாகக் கொண்டிருந்த தொரோவின் தந்தையால் அதில் அதிக அளவில் பொருளீட்ட இயலவில்லை; அதனால் வீட்டில் வறுமையே கொலுவிருந்தது.

    எனினும், ஹென்றி டேவிட் தொரோவின் பெற்றோர்கள் வளமையான குடும்பப் பின்னணியைக் கொண்டவர்களாக இருந்தமையால் பழைய செல்வ வளத்தை அவர்களால் மறக்க இயலவில்லை. எனவே நிகழ்காலக் குடும்பச் சூழ்நிலை வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருந்தாலும் அதற்காகத் தம் பிள்ளைகள் வெறும் பள்ளிப் படிப்போடு நின்றுவிடுவதை அவர்கள் விரும்பவில்லை.

    ஆகையால் தம் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை வழங்கும் முயற்சியை மேற்கொண்டனர். ஹென்றி தொரோ முதலாவதாகப் படித்த பள்ளிக்கூடம் பாஸ்டனில் (Boston) இருந்தது. பிறகு கான்கார்டில் உள்ள பள்ளியில் பயின்றார். அங்குதான் அவர் நடனமாடவும் குழல் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.

    இலத்தீன் கிரேக்கம் பிரெஞ்சு ஆகிய மொழிகளிலும் கணிதத்திலும் நல்ல அறிவைப் பெற்றபிறகு ஏழை மாணவர்களுக்குரிய உதவிச் சம்பளத்தோடு ஹார்வார்டு பல்கலைக்கழத்தில் (Harvard University) நுழைந்தார் ஹென்றி தொரோ. அங்கே கல்லூரிப் படிப்பை முடித்து வெளியில் வந்தார். அவரைப் பொறுத்தவரை பல்கலைக்கழகம் என்பது பிற அறிஞர்களுடைய அறிவுச் செல்வத்தைப் பெறுவதற்குரிய வாயிலாக இருந்ததே தவிர சமுதாய நட்பைப் பெறவும் தொழில்முறையில் திறமை பெறவும் ஏற்படுத்தப்பட்ட நிறுவனமாக அமையவில்லை. பாடத்திட்டத்தைவிடவும் கல்லூரி நூலகத்திற்குச் சென்று ஜெர்மானிய இலக்கியம், 17ஆம் நூற்றாண்டின் ஆங்கில இலக்கியம் ஆகியவற்றைக் கற்பதில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார் தொரோ.

    ஹார்வார்டு பல்கலைக்கழகம் அக்கால நடைமுறைக்கேற்ப தொரோவை ஒரு படிப்பாளியாக மட்டுமல்லாமல் அதற்கும் மேற்பட்ட ஓர் எழுத்தாளராகவும் ஆக்கியிருந்தது. நியூ இங்கிலாந்தில் தோன்றிய புதிய சிந்தனை இயக்கத்தின் தலைவராக விளங்கவிருந்த ரால்ப் வால்டோ எமர்சன் (Ralph Waldo Emerson), ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ் (Oliver Wendell Holmes) போன்றவர்களின் ஆசிரியராக விளங்கியவரும் அடுக்கு மொழியில் மிடுக்காய்ப் பேசுபவருமான  எட்வர்டு டிரல் சேனிங் (Edward Tyrrel Channing) என்பவரிடம்தான் தொரோவும் கல்வி பயின்றார். இவரிடம் பயின்றதால் ஒழுங்குமுறை, தர்க்கம் ஆகியவற்றுக்கு எடுத்துக்காட்டான ஒரு நடையைக் கற்றார் தொரோ.

    ரால்ப் வால்டோ எமர்சன்தான் இளைஞரான ஹென்றி டேவிட் தொரோவிடம் காணப்பெற்ற மேதைமையை வெளிக்கொணர்ந்தவராவார். அத்தோடு எமர்சன் எழுதிய இயற்கை (Nature) என்ற நூலே தொரோவின் மனத்தில் இயற்கைமீது அளவிலாக் காதல் ஏற்படவும் இயற்கையோடு இயைந்தே மனிதன் வளர்ச்சியடைய வேண்டும் என்ற எண்ணம் வளரவும் காரணமாய் அமைந்தது.

    1840ஆம் ஆண்டு ’தி டயல்’ எனும் இதழைத் தொடங்கினார் எமர்சன். அமெரிக்க இலக்கிய வரலாற்றில் அந்த நிகழ்வு இடம்பெறாவிட்டாலும், தொராவின் வாழ்க்கையில் அது முக்கியமான ஒன்றாக அமைந்தது என்றே குறிப்பிட வேண்டும். பாஸ்டன் நகரில் வெளியான அந்த இதழுக்கு முந்நூற்றுக்கும் குறைவான சந்தாதாரர்களே இருந்தபோதிலும் அறிவாளிகள் வட்டத்தில் அந்த இதழுக்கு நல்ல மதிப்பிருந்தது. தொரோவைப் போல் உலகுக்கு அறிமுகமாகாதிருந்த எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தும் நற்பணியையும் அவ்விதழ் செவ்வனே செய்தது.

    ஆற்றல்மிகு எழுத்தாளராகவும், புதுமைச் சிந்தனையாளராகவும் திகழ்ந்த மார்கரெட் புல்லர் (Margaret Fuller) என்ற அம்மையார் அந்த இதழின் ஆசிரியராய்ப் பணியாற்றினார். தொடக்க கால எழுத்தாளராக அப்போதிருந்த தொரோவின் ’வாச்சுசெட்டில் ஓர் நடைப்பயணம்’ (A walk to Wachusett) என்ற கட்டுரையை, ஓர் கற்றுக்குட்டியின் எழுத்து, என்று விமரிசித்து தி டயல் இதழில் வெளியிட மறுத்தார் புல்லர். தொரோவுக்கு அஃது அப்போது அவமானத்தைத் தருவதாக இருந்தாலும் அவருடைய எழுத்தைச் செம்மைப் படுத்திக்கொள்ள அப் புறக்கணிப்பு உதவிற்று எனலாம்.

    1842ஆம் ஆண்டு தி டயல் இதழை எடுத்து நடத்தும் பொறுப்பை புல்லரிடமிருந்து எமர்சனே ஏற்றுக்கொண்டார். அதைத் தொடர்ந்து தொரோவின் கட்டுரைகள் பல அவ்விதழை அணிசெய்யத் தொடங்கின. ’மசாசூசெட்சின் இயற்கை வரலாறு’ (Natural History of Massachusetts) என்ற தொரோவின் நீண்ட கட்டுரை டயல் இதழில் அப்போது வெளியாயிற்று. எதிர்காலத்தில் உயர்ந்த நடையில் எழுதக்கூடிய சிறந்த எழுத்தாளராகத் தொரோ மலரப்போகின்றார் என்பதற்குக் கட்டியம் கூறுகின்ற வகையில் அந்தக் கட்டுரை அமைந்திருந்தது.

    தொடர்ந்து எழுதிவந்த போதிலும் வாழ்க்கைக்குத் தேவையான பொருளைத் தொரோவால் ஈட்டமுடியவில்லை. எமர்சனைப்போல், எழுதுவதோடு சொற்பொழிவும் நிகழ்த்தினாலொழிய வாழ்வதற்குத் தேவையான பொருளைப் பெறமுடியாது என்றுணர்ந்தார் தொரோ. ஆனாலும் பொருளுக்கு அடிமையாகாத – எவ்விதக் கட்டுப்பாடுகளுமற்ற வாழ்க்கையையே அவருடைய அகமனம் அவாவியது.

    நவீன யுகத்தின் இயல்பாக அமைந்துள்ள ஓயாத அவசரம், ஒழியாத வேலை என்ற இரண்டையும் இயற்கை முற்றிலும் மறுப்பதாகவே தெரிகின்றது என்று கருதிய தொரோ, எப்போதெல்லாம் இயலுகின்றதோ அப்போதெல்லாம் மிக நீண்ட பயணங்களை மேற்கொண்டார். சிறுத்தைத் தவளைகளோடு தாம் நிகழ்த்திய சுவையான பன்னிரண்டு மணிநேர உரையாடல், பணம் சேகரிக்கச் செலவழிக்கும் ஒருநாளைவிட மிகவும் பயனுள்ள காலமாகும் என்று கூறியுள்ளார். அந்தி நேரத்தில் வெடிக்கும் துப்பாக்கியைப்போல் தம்முடைய மறைவான இடத்திலிருந்து பிட்டர்ன் (Bittern) பறவைகள் ஒலியெழுப்புவதைக் கேட்கக்கூடுமானால் வசதியுள்ள வீட்டில் வாழ்வதைக் காட்டிலும் குளிர்ந்த சதுப்பு நிலங்களில் வாழும் வாழ்க்கை மேன்மையானது என்பது அவருடைய கருத்தாய் இருந்திருக்கின்றது.

    இதற்கிடையில் தம்முடைய தமையனார் வில்லியம் எமர்சனின் மகனுக்கு ஆசிரியராகப் பணிபுரியவேண்டி தொரோவை நியூ யார்க்கை அடுத்துள்ள ஸ்டேட்டன் தீவுக்கு (Staten Island) அனுப்பினார் எமர்சன். அங்குத் தொரோவுக்குச் சில நண்பர்கள் கிடைத்தார்கள். ஆனால் எழுத்தாளராக அவரால் அங்கே பிரகாசிக்க இயலவில்லை. காரணம், அங்கு(ம்) மக்களின் உணர்ச்சிகளுக்குத் தீனிபோடும் மலினமான இதழ்களுக்கு எழுதினால்தான் வயிறுவளர்க்க முடியும் என்ற நிலை இருந்ததே. அவ்வகையில் தரந்தாழ்ந்து எழுதத் தொரோவால் இயலவில்லை. ஆதலால் மீண்டும் தம் சொந்த ஊரான கான்கார்ட்டுக்கு 1844இல் திரும்பினார் தொரோ.

    ஜெர்மானியத் தத்துவவியல் அறிஞரான ஜிம்மர்மேன் எழுதிய ’தனிமை நெஞ்சினிடத்துச் செலுத்தும் ஆதிக்கம்’ எனும் நூலினைக் கற்றார். எமர்சனின் ’இயற்கை’ என்ற நூல் அவர் மனத்தைவிட்டு நீங்கவே இல்லை. அதில் கூறப்பெற்ற “காடுகளில்தான் அழியா இளமை இருக்கிறது; காட்டு வாழ்க்கையில் அறிவும் நம்பிக்கையும் ஏற்படுகின்றன” என்ற சொற்கள் அவர் நெஞ்சுக்குள் சிட்டுக்குருவியாய் வட்டமிட்டுக்கொண்டே இருந்தன.

    எனவே கான்கார்டுக்கு அருகிலிருந்த வால்டன் குளத்தருகே (Walden Pond) ஒரு மர வீட்டை அமைத்துக்கொள்ளும் நோக்கத்தோடு காட்டுக்குச் சென்றார் தொரோ. அந்தக் காட்டுப் பகுதி எமர்சனுக்குச் சொந்தமானது; அவர்தாம் அந்த இடத்தைத் தொரோவுக்கு இலவசமாக வழங்கினார்; இல்லையேல் ஆங்கோர் இலைக்குடில் அமைத்து வாழும் அரிய வாழ்க்கை தொரோவுக்கு வாய்த்திருக்காது.

    1847ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொரோ அந்தப் பகுதியில் தம் குடிலை அமைக்கத் தொடங்கினார். குளங்களுக்கு அருகில் வளர்ந்திருந்த வெண் பைன் மரங்களைக் குடில் கட்டுவதற்குத் தேவையான அளவுக்கு வெட்டிக்கொண்டார். குடிலின் பின்புறம் இருந்த மணல்மேட்டைத் தோண்டி நிலவறை ஒன்றைச் செய்துகொண்டார். குளிரும் பனியும் மிகுந்திருக்கும் காலத்தில் காய்கறிகளைப் பாதுகாக்கவே அவ்வாறு ஓர் அறையை அவர் அமைத்திருந்தார். அந்தக் குடில் அழிந்துபோனாலும் மண்ணுக்குள் அமைக்கப்பட்ட வளைபோன்ற அந்த நிலவறையானது அழியாது என்பது அவரது எண்ணம். ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு தாம் கட்டிய நிலவறையைத் தேடிக்கொண்டு வால்டனுக்கு மக்கள் கூட்டம் செல்லும் என்பதை அப்போது தொரோ அறிந்திருக்கவில்லை.

    1845ஆம் ஆண்டு ஜூலை 4ஆம் நாள் கூரையின் கடைசிப் பலகையைச் செருகிய பின்னர் தொரோ அக்குடிலுக்குள் வசிக்கத் தொடங்கினார். அமெரிக்கச் சுதந்தர நாளன்று அவருடைய சுதந்தரமான காட்டு வாழ்க்கையும் தொடங்கியமை தற்செயலாய் நடந்தே ஒன்றே.

    அருகிலிருந்த நிலத்தில் அவர் வேளாண்மையும் செய்யத் தொடங்கினார். பீன்ஸ் செடிகளைப் பயிரிட்டார். அவற்றைப் பராமரிப்பதில் மனநிறைவுற்றார்.

    தமக்குத் தேவையான எளிய உணவை அவரே தயாரித்துக்கொண்டார். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க விரும்பி தேநீர், காபி அருந்துவதையும் தவிர்த்தார். என்றேனும் ஒருநாள் வால்டன் குளத்தில் பிடித்த மீனை உண்பதைத் தவிரப் புலால் உணவுப் பழக்கத்தையும் விட்டுவிட்டார்.

    மேசை, இரண்டு மூன்று நாற்காலிகள், சில சமையல் பாத்திரங்கள் தவிர அவரது குடிலில் வேறெந்தப் பொருளுமில்லை.

    தனிமையைப் போன்ற உற்ற துணைவன் ஒருவருமில்லை என்ற நோக்கத்தோடு அவர் தனித்திருக்க விரும்பினாலும், அவ்வப்போது அவரைத் தேடிக்கொண்டு சிலர் அவருடைய குடிலுக்கு வந்தவண்ணந்தான் இருந்தனர். எனினும் குடிலின் அளவு மிகச் சிறிதாக இருந்ததால் வந்தவர்கள் அதிக நேரம் அங்கே தங்காமல் சென்றது அவர் விரும்பிய தனிமை இன்பத்துக்கு அதிகக் குந்தகத்தை விளைவிக்கவில்லை. சனிக்கிழமைகளில் அவரைக் காண அவருடைய சுற்றத்தார் வந்துசென்றனர்.

    வால்டனில் அவர் மேற்கொண்ட இயற்கை வாழ்வின் காரணமாக உயிரியலாரும் வேட்டைக்காரர்களும் உயிருடன் வாழும் விலங்குகட்கு இழைக்கும் கொடுமையால் அவை அடையும் துன்பத்தை நேரடியாக அறிந்தார். அதுகண்டு பெரிதும் வருந்திய அவர்,

     ”மனிதன் முதலில் காட்டிற்குள் நுழையும்போது மீன் பிடிப்பவனாகவும் வேட்டைக்காரனாகவும்தான் செல்கின்றான். ஆனால் வாழ்வில் உயரக்கூடிய வாய்ப்பு ஏதேனும் இருந்தால் ஒரு கவிஞனைப் போலவோ அன்றி உயிரியல் வல்லுநனைப் போலவோ உயிர்களின் வேறுபாட்டை அறிகின்றான். அறிந்தவுடன் துப்பாக்கியையும் தூண்டிலையும் தூர விட்டுவிடுகிறான்.  ஆனால் மக்களில் பெரும்பாலோர் இத்துறையில் இன்னமும் முதிர்ச்சியற்ற இளைஞர்களாகவே இருக்கின்றனர். சில நாடுகளில் வேட்டையாடும் தொழிலை மேற்கொண்டிருக்கும் மதபோதகர்களைக்கூட அதிகம் காணலாம். அத்தகைய போதகர்கள் மேய்ப்போனிடம் உள்ள நாயாக இருக்கமுடியுமே தவிர நல்ல மேய்ப்போராய் இருக்கமுடியாது” என்றார்.

    தொரோவைப் பொறுத்தவரை வேனிற் காலத்தைப் போலவே அவர் பனிக் காலத்தையும் விரும்பினார்.  பனிக்கட்டி அவரின் ஒரு கன்னத்தில் அடித்தால் தம்முடைய மறுகன்னத்தையும் அதற்குத் திருப்பிக் காட்டினார்.

    தொரோ விரும்பி மேற்கொண்டிருந்த வால்டன் குளக்கரை வாழ்க்கைக்கும்  ஓர் முடிவு வந்தது. 1847ஆம் ஆண்டு செப்டம்பர் 6ஆம் நாள் அவர் தம்முடைய குடிலைவிட்டுப் புறப்பட்டார். வால்டன் வாழ்க்கை அவர் வாழ்வின் ஒருபகுதியாக இருந்ததே தவிர அதுவே முழுமையான வாழ்க்கையாக அமைந்துவிடவில்லை. வாழ்க்கை என்பது ஒரு சோதனையிலிருந்து மற்றொரு சோதனைக்குச் செல்வது என்பதில் அவர் திண்ணமாயிருந்ததால் வால்டனிலிருந்து புறப்படுவதும் அவருக்குச் சிரமமானதாக இருக்கவில்லை. அகத்தே தோன்றும் விருப்பங்களை நோக்கித் துணிவுடன் முன்னேறுவதே வாழ்க்கையின் குறிக்கோள் என்று கருதினார் அவர்.

    எழுத்தாளர் என்ற முறையில் தம்முடைய பலம், தமக்குரிய பாதை, தம் தனித்தன்மை ஆகியவற்றைக் கண்டடைவதற்கு வால்டன் வாழ்க்கை அவருக்குப் பெருந்துணை புரிந்தது.

    1847இன் பிற்பகுதியில் எமர்சனுடைய வீட்டிற்குச் சென்று வசிக்கத் தொடங்கினார். அக்காலம் அவர் வாழ்வின் சிறந்த காலமாக அமைந்தது. அங்கிருந்தபோது வால்டன் பற்றியே அதிகம் எழுதினார். எதனையும் நுணுகி ஆராய்ந்து அதற்குப் பொருத்தமாகப் பெயரிடும் அறிவியலாளரின் பண்பு தொரோவிடமிருந்தது.

    ”ஒரு மனிதன் தன் முயற்சிகளின் விளைவாக இயற்கையிலிருந்து நேரடியாகக் கற்பதுதான் மிகச் சிறந்த கல்வி; பிறர் கற்றுக்கொடுத்தோ, தானே படித்தோ வரும் அறிவு இரண்டாந்தரமானதுதான். நேரடியாகக் கூர்ந்து கவனித்து அறிவதைக் காட்டிலும் ஏட்டுக்கல்வி உயர்ந்ததாகாது. இந்த வயல்களும் ஓடைகளும் காடுகளும் இங்கு வாழும் மக்கள் மேற்கொண்டுள்ள எளிய தொழில்களும் எனக்கு உற்சாகத்தை ஊட்டவில்லையானால் அதனால் ஏற்படும் இழப்பை எந்தப் பண்பாடும் செல்வமும் ஈடுகட்ட முடியாது” என்று கூறியுள்ளார் அவர்.

    கான்கார்டிலும் மெர்ரிமாக் ஆற்றிலும் ஒரு வாரம் (A Week on the Concord and Merrimack Rivers) என்ற நூலை 1849ஆம் ஆண்டு வெளியிட்டார் தொரோ. அந்த நூல் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. அதனால் அச்சிட்ட 1000 படிகளில் 700 படிகள் அவரிடமே திரும்பி வந்துவிட்டன. ”என்னுடைய நூலகத்தில் தொள்ளாயிரம் நூல்கள் உண்டு; அவற்றுள் எழுநூற்றுக்கு மேல் நானே எழுதியவை” என்று தொரோவே இதுகுறித்து வேடிக்கையாகச் சொல்வதுண்டாம்.

    இந்தியாவின் தத்துவ சாத்திரங்களின்மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார் தொரோ என்பதை அவருடைய கருத்துக்கள் வாயிலாக அறியமுடிகின்றது. மேனாட்டினர் காணமுடியாத ஆழமும் அகலமும் இந்தியத் தத்துவ சாத்திரங்களில் இருப்பதாக அவர் கருதினார்.

    ”அண்டங்களின் படைப்புக் குறித்துப் பகவத்கீதை கூறும் தத்துவத்துக்கு எதிரே ஷேக்ஸ்பியர்கூட மிகவும் அனுபவமில்லாதவராகவும் வெறும் உலகியல் மட்டுமே உணர்ந்தவராகவும் காணப்படுகின்றார்” என்கிறார் தொரோ.

    எமர்சன் வீட்டில் தங்கி வால்டனைப் பற்றி எழுதிய அதே காலக்கட்டத்தில்தான் புரட்சிச் சிந்தனைகளை வெளிப்படுத்தும் ’சட்ட ஒத்துழையாமை’ (Civil Disobedience) என்ற தலைப்பிலான தம் கட்டுரையையும் தொரோ எழுதினார். இக்கட்டுரை அண்ணல் காந்தியாரைப் பெரிதும் ஊக்குவித்ததாகலின் இந்தியாவில் தோன்றிய சத்தியாகிரக இயக்கத்தின் மூலகாரணங்களுள் இக்கட்டுரைக்கும் முக்கிய இடமுண்டு என்று கூறலாம்.

    ’அரசாங்கத்தில் தனி மனிதனின் உரிமையும் கடமையும்’ (The Rights and Duties of the Individual in relation to Government) என்ற பெயரில் இக்கட்டுரையானது கான்கார்டு சொற்பொழிவுக் கூடத்தில் தொரோவால் படிக்கப்பெற்றது. அறவழியில் போரிட விரும்பும் அனைவராலும் மேற்கோள் காட்டப்பெறும் கட்டுரையாக இப்போது அது திகழ்கின்றது.

    1850ஆம் ஆண்டு பாஸ்டன் நகர இயற்கை வரலாற்றுக் குழுவிற்குத் தொரோ தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்றாண்டுகளுக்குப் பிறகு அறிவியல் வளர்ச்சிக்கான அமெரிக்கக் கழகத்தின் உறுப்பினரானார்.

    தொரோவின் நூல்களைப் படித்த பலரும் காட்டிலும் மேட்டிலும் சாகசங்கள் செய்வதில் விருப்பமுடைய அவர், வலிமையான உடலமைப்பைப் பெற்றவராக இருப்பார் என்றே கற்பனை செய்திருந்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக மெலிந்த உடலமைப்புடைய அவரைக் கண்ட பலரும் ஏமாற்றமே அடைந்தனர். 

    தொரோவின் காலத்தில்தான் அமெரிக்காவின் தென்பகுதிகளில் அடிமைகள் வைத்திருக்கும் பழக்கத்தை ஒழிப்பது பற்றிய இயக்கம் தீவிரமாய் நடந்தது. உள்நாட்டுப் போரின் முக்கியக் காரணங்களுள் அதுவும் ஒன்று. தென்பகுதி தோட்டங்களிலிருந்து அடிமைகள் பலர் தப்பித்து வட பகுதிகளுக்கு ஓடிவந்தனர். அவர்களை வட பகுதிகளில் குடியேற்றவும் கனடா நாட்டுக்கு அவர்கள் தப்பிச் செல்லவும் பலர் பரிவுடன் உதவினர். அந்த அடிமைகள் தப்பிச்செல்லும் வழியில் கான்கார்ட் கிராமம் இல்லாததால் எப்பொழுதாவது அரிதாகவே அந்தப் பக்கம் அடிமைகள் வருவார்கள். அவ்வாறு வந்தவர்களுக்குத் தொரோவும் அவருடைய குடும்பத்தினரும் அனைத்து உதவிகளையும் செய்தனர்.

    அடிமை வணிகத்தை தொரோ வெறுத்ததுபோலவே மக்கள் எப்போதும் பணம் சேர்க்கும் முயற்சியிலேயே வாழ்நாளைக் கழிப்பதையும் வெறுத்தார். தேடித் தேடிப் பொன் சேர்க்கும் முயற்சியில் மக்கள் ஈடுபடுவதைவிடவும் தம் மனத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள பொன்னைத் தோண்டி எடுக்கும் அகமன ஆராய்ச்சியில் அவர்கள் ஈடுபட்டால் எத்துணைச் சிறப்பாக இருக்கும் என்று அவர் சிந்திக்கலானார்.

    1854ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 9ஆம் நாள் ’வால்டன் அல்லது காட்டு வாழ்க்கை’ (Walden or Life in the woods) என்ற அவருடைய நூல் வெளியாயிற்று. அந்நூல் இன்றளவும் அவருடைய தலைசிறந்த நூலாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

    ’எழுத்துக் கலை’ பற்றித் தொரோ நிரம்பக் கூறியிருக்கின்றார். அவற்றில் சில:

    • ”என்னுடைய வாக்கியங்கள், துப்பாக்கி சுடுபவன் குறிபார்ப்பதுபோலக் கூர்மையாகவும் சாவதானமாகவும் அமைக்கப்படுகின்றன. ஒரு நல்ல வாக்கியத்தை அமைப்பதென்பது ஹெர்க்குலிஸின் முயற்சிபோல மிகக் கடினமானதாயினும் அதற்கு எடுத்துக்கொள்ளும் சிரமம் பயனுடையதாகும்.
    • ஓர் எழுத்தாளனுடைய சொற்கள் அவனுடைய நேரடி அனுபவத்திலிருந்து பிறக்கவில்லையானால் அவன் காலத்தை வீணடிக்கின்றான் என்றே பொருள். சொற்களின்பின்னே பொருள் இல்லையானால் அச்சொற்கள் பயனற்றவை. நாமாக ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றி எழுதுவது வீண். அந்த விஷயம் நம்முடைய மனத்தில் ஒரு கிளர்ச்சியை உண்டாக்க வேண்டும். ஒவ்வொரு முயற்சியும் வெற்றிபெற வேண்டுமானால் அதன்பின்னே அன்பின் கூட்டுமுயற்சி இருத்தல் அவசியம்.
    • எவ்வளவு சிறந்த முறையில் எழுதுகிறீர்களோ அவ்வளவு சிறந்தவர்களாக நீங்கள் இருப்பீர்கள். முதற்பக்கத்திலிருந்து இறுதிப்பக்கம் வரை ஆசிரியனுடைய பண்பாட்டையே அவனுடைய நூல் விளக்கி நிற்கின்றது.

    தொரோ என்றுமே வலுவானவராக இருந்ததில்லை. ஹார்வார்டில் படிக்கின்ற காலத்திலேயேகூட அவர் பிராங்கைட்டிஸ் (Bronchitis) எனப்படும் மூச்சுக்குழல் அழற்சிநோயால் பீடிக்கப்பட்டு அல்லலுற்றார். அந்நோய் வாழ்நாள் முழுவதுமே அவ்வப்போது அவருக்குத் தொல்லைகொடுத்து வந்தது. எனினும் அவர் அந்நோயைப் பொருட்படுத்தவில்லை.

    1860ஆம் ஆண்டு அதிகக் குளிரும் ஈரமும் நிறைந்த நவம்பர் மாதத்தில் மார்புச் சளியால் தொரோ மீண்டும் தாக்கப்பட்டார். அஃது அவருடைய நுரையீரலையும் தாக்கியது. இதனால் பெரிதும் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் 1862ஆம் ஆண்டு மே மாதம் 6ஆம் நாள் உயிர்நீத்தார்.

    பல்வேறு காரணங்களுக்காகப் பல்வேறு மனிதர்களும் தொரோவைப் போற்றுகின்றார்கள்; எனினும், இயற்கையோடு நெருங்கிய தொடர்புகொண்டு எளிமையாக வாழவேண்டும் என்று எடுத்துக்கூறியவர் அவர் என்பதற்காகவே அவரைப் பலரும் கொண்டாடுகின்றார்கள்.

    குறைவான தேவைகளோடு இயற்கையின் அரவணைப்பில் வாழ்ந்தால் நிறைவான மகிழ்ச்சி கிடைக்கும் என்பது தொரோ வாழ்ந்துகாட்டி உணர்த்திய வாழ்க்கை நெறியாகும். இயற்கையிடமிருந்து பெரிதும் விலகிநிற்கும் இன்றைய மக்கள் தொரோவிடமிருந்து கற்றுக் கடைப்பிடிக்கவேண்டிய உயரிய வாழ்வியல் தத்துவமும் அதுவே.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை:

    https://en.wikipedia.org/wiki/Henry_David_Thoreau
    https://en.wikipedia.org/wiki/Civil_Disobedience_(Thoreau)
    தொரோ வாழ்க்கை வரலாறு – பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன்

    Share
  • I saw the man who had served Mahatma Gandhi – Precious Moments in my Life

    I saw the man who had served Mahatma Gandhi – Precious Moments in my Life

    Baskar Seshadri

    Many of us may know Venkita Kalyanam the man who served Mahatma as his assistant for around five years and it was this man who was around Mahatma when Godse pumped bullets on that 30th January (Friday) of 1948.

    It was at this time Kalyanam who was just twenty years old rushed to break the news and went on to call the office of Vallabhai Patel and later to Jawaharlal Nehru.

    It was a small job which Kalyanam got for Rs sixty per month and he took that position after Mahadev Desai passed away. On that fateful day it was Kalyanam who served Gandhi his little food in the noon before he proceeded to Birla House.

    Kalyanam was a small time freedom fighter and did something against Britishers and was arrested for a while. He worked for an insurance company and then through a contact known to Devdas Joined the ashram.

    After the demise of Mahatma he also worked for few personalities like Nehru, Edwina and Red Cross.

    Incidentally Kalyanam was born on August 15 of 1920. Kalyanam would spend his time tending the plants and he has a big garden in Teynampet where he would love to spend time with plants. He was active enough to do the same till late 2010 then due to age factor he dropped the work and it was his assistant who is now doing there. Now he lives with his daughter and bedridden with a catheter support.

    I had the opportunity to see him last week in his place. I was already told that I cannot take long time with him since he is not too well. I went to him and said Namaskaram. He could not recognise any one since he has a vision problem to the acute stage but could see as an Image.

    He told me to sit and I hesitated but he ordered to sit and I was on the edge. I did not speak to him but was awestruck.

    This was the man who had seen Gandhi and other freedom fighters. What a moment in life to me? After few minutes I left the place and had a small chat with his family members. I am too happy that I have seen this man and was with him for a while.

    He will be celebrating centenary celebration next year. I feel the long mission in my life is complete. Heart filling memories with Kalyanam Sir. My Pranams.

    Please enlarge the photos for a better view . (The last photo below on right side is Kalyanam with Mahatma)

    Share
  • Poor Understands Poor Better

    Poor Understands Poor Better

    Baskar Seshadri

    Probably a Poor can understand a poor Better.

    This old woman used to sit near the Kapali Temple tank and sometimes she used to sleep on the pavements of Ramakrishna Mutt.

    She cannot walk but can only crawl and even if she could walk it could be only for few yards. During the peak time of Corona we regularly donated food packets and many of friends donated good number of clothes.

    Later many groups had started donating the food but the only issue was facing was the shelter during rainy days.

    This morning i saw the lady near The Mutt and her friend and a helper to her to have taken the care to dress her and you can see the photo on Plaiting her.

    It needs a great patience, care and concern to nurse one and its not too easy a task. I was so much moved at the very sight of them. Was actually in Tears and could not stay beyond a minute.

    Life is not money, pampering wealth or fancy cars but here it lies just across us. In a High Thick of Emotions.

    Share