Tag: செண்பக ஜெகதீசன்

  • குறளின் கதிர்களாய்…(45)

    -செண்பக ஜெகதீசன்

    அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சங்
    கடுத்தது காட்டும் முகம். (திருக்குறள் -706: குறிப்பறிதல்)

    புதுக் கவிதையில்…

    அருகில் செல்வோர் உருவத்தை
    அப்படியே காட்டிவிடும்
    கண்ணாடி…

    அகத்திலுள்ள உணர்வுகளை
    அப்படியே காட்டிவிடும்
    முகம்…!

    குறும்பாவில்…

    அருகிலுள்ளதைக் காட்டும் கண்ணாடி,
    அதுபோல் காட்டும்
    அகத்திலுள்ளதை முகம்…!

    மரபுக் கவிதையில்…

    மருங்கி லுள்ள பொருளையெல்லாம்
    மாற்றம் ஏது மில்லாமல்
    உருவி லதுவாய் உள்ளபடி
    உள்ளதைக் காட்டும் கண்ணாடியாய்,
    இருப்பது வெளியே தெரியாதென
    எதனை மனதில் மறைத்தாலும்,
    இருப்பை எடுத்துக் காட்டிவிடும்
    எதையும் மறைக்கா முகமதுவே…!

    லிமரைக்கூ…

    கண்ணாடி காட்டிவிடும் அப்படியே முகத்தை,
    எப்படித்தான் மறைத்தாலும்
    எப்படியும் முகம்காட்டும் முழுதாய் அகத்தை…!

    கிராமிய பாணியில்…

    கண்ணாடி கண்ணாடி
    மொகம்பாக்குங் கண்ணாடி,
    முன்னவுள்ள எல்லாத்தயும்
    முழுசாக்காட்டுங் கண்ணாடி…

    இதப்போல,
    மொகமும் ஒரு கண்ணாடி
    முழுசாக்காட்டுங் கண்ணாடி,
    மனசிலுள்ள எல்லாத்தயும்
    தெளிவாக்காட்டுங் கண்ணாடி..

    கண்ணாடி கண்ணாடி
    மொகம்பாக்குங் கண்ணாடி…!

     

    Share
  • தனிமை தெய்வங்கள்…!

    -செண்பக ஜெகதீசன்

    அம்மாதான் தெய்வமென்றார்கள்
    அருமைப் பிள்ளைகள்..

    தெய்வத்துடன் வாழ
    ஒருமகனும் விரும்பவில்லை-
    மருமகள் விருப்பம்போல்..

    வெளியூரில் வேலையென்பதால்
    வசதிப்படாதாம்,
    மூன்றுபேரும் போய்ப் பார்க்க
    முதியோர் இல்லமும்
    அருகில் இல்லையாம்..

    அதனால்,
    கோவில் தெய்வங்கள்போல்
    அவளும்-
    தனியாய் வீட்டில்…!

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(44)

    -செண்பக ஜெகதீசன்

    கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
    குத்தொக்க சீர்த்த விடத்து. (திருக்குறள்-490: காலமறிதல்)

    புதுக் கவிதையில்…

    காலமறிந்து
    கடமையாற்று…

    உறுமீன் வரும்வரையில்                      heronandfish
    பொறுமையாயிருந்து,
    உற்ற தருணம் வரும்போது
    மீனைக்
    கொத்தி எடுத்திடும்
    கொக்கு போலிரு…!

    குறும்பாவில்…

    காலம் வரும்வரைக் காத்திரு
    கொக்கு போல,
    கடமையாற்று அது கொத்துவதுபோல…!

    மரபுக் கவிதையில்…

    உரிய தருணம் வரும்வரையில்
    ஓய்வாய் நின்றே காத்திருந்து,
    பெரிய மீனாய் வந்ததுமே
    பற்றிடக் கொத்தும் கொக்கினைப்போல்,

    அரிய உலக வாழ்வதிலே
    அவசரம் ஏதும் கொள்ளாமல்,
    தெரிந்தே உரிய தருணமதில்
    தொடங்கிடு, செயல்படு வென்றிடவே…!

    லிமரைக்கூ…

    பொறுமையாயிருந்து தக்கதருணத்தில் கொத்தும் கொக்கு,
    காலமறிந்து செயல்படாமல்
    கடமையாற்றித் தோல்வியடைந்தால் நீயொரு மக்கு…!

    கிராமிய பாணியில்…

    காத்திருக்குது காத்திருக்குது
    கொக்குத்தான் காத்திருக்குது,
    ஒத்தக்காலுல காத்திருக்குது
    கொத்தாமத்தான் காத்திருக்குது..

    நல்லமீனு வரும்போது
    நழுவாமத்தான் கொத்திடுமே…
    கொக்கப்பாத்து தெரிஞ்சிக்க
    காலம்பாத்து நடந்துக்க,
    நல்ல
    காலம்பாத்து நடந்துக்க…

    காத்திருக்குது காத்திருக்குது
    கொக்குத்தான் காத்திருக்குது…!

     

    Share
  • நண்பனே…

    -செண்பக ஜெகதீசன்

    நிழல் உன் நண்பன்-
    நீ                                                                                  manwithshadow
    நடந்தால் நடப்பான்,
    நின்றால் நிற்பான்,
    ஓடினால் ஓடுவான் உன்னோடு…

    படுத்து உறங்கினால்தான்
    பிடிக்காது அவனுக்கு-
    போய்விடுவான் உன்னைவிட்டு…

    நண்பனே,
    நீயும் நிழலாயிரு-
    எழுந்துநட எப்போதும்,
    விழுந்துவிட வேண்டாம்…!

     

     

    Share
  • பசி…

    -செண்பக ஜெகதீசன்

    குப்பை பொறுக்கும் சிறுவனுக்குக்          WastepickersDelhi
    காகிதத்தில் தெரிவதில்லை
    கவிதை…

    தெரிந்தது அவனுக்கு,
    காகிதமே கவிதையாக-
    அறிவுப் பசிக்கு அல்ல,
    வயிற்றுப் பசிக்கு…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(43)

    -செண்பக ஜெகதீசன்

    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
    ருயிர்நீப்பர் மானம் வரின். (திருக்குறள்-969: மானம்)

    புதுக் கவிதையில்…

    கவரிமானின் குணமிது-                      sunday malar template
    உடலில் மயிரிழப்பிற்கு
    உயிரையே விட்டுவிடும்…

    மனிதரிலும் இருக்கிறார்கள்
    இப்படி-
    மானத்தை இழக்கநேர்ந்தால்,
    வாழமாட்டார்கள்
    அதற்குமேலும்…!

    குறும்பாவில்…

    மயிரிழந்தால் உயிரிழக்கும்
    கவரிமான் போன்ற மனிதரும்
    உயிரிழப்பர், மானமிழந்தால்…!

    மரபுக் கவிதையில்…

    காட்டில் வாழும் கவரிமானும்
    கணத்தில் உயிரை விட்டிடவே,
    வேட்டை யாடி வீழ்த்தவேண்டாம்
    விழுந்திடும் ஒருமயிர் போதுமன்றோ,
    நாட்டி லுள்ள மாந்தரிலே
    நாமும் தெரிந்து கொண்டிடலாம்,
    காட்டு மானைப் போல்வாழார்
    கொண்ட மானம் போனபின்னே…!

    லிமரைக்கூ…

    கவரிமான் வாழாது, இழந்துவிட்டால் மயிரை,
    இதுபோன்ற மாந்தரும்
    மானமதை இழந்துவிட்டால், விட்டிடுவர் உயிரை…!

    கிராமிய பாணியில்…

    வாழாது வாழாது
    கவரிமானு வாழாது,
    மயி ரொண்ணு போனாலே
    உயிர்தானாப் போயிருமே..

    இதுபோல மனுசனுந்தான்
    ஒலகத்தில இருக்கானே,
    அவுனும்
    மானம்போனா வாழமாட்டான்
    மானுபோலச் செத்திருவான்,
    வாழாது வாழாது
    கவரிமானு வாழாது…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(42)

    -செண்பக ஜெகதீசன்

    கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
    நாவாயு மோடா நிலத்து. (திருக்குறள்-496: இடனறிதல்)

    புதுக் கவிதையில்…

    இடமறிந்து செயல்படு                              Ratham-R2
    இடர்ப்பாடுகளின்றி வாழ..
    இடம் மாறினால் பாழ்தான்!
    பார்,
    நின்று அசைந்துவரும்
    திடமான தேரும்
    கடலில் ஓடாது,
    கடலில் மிதந்தோடும்
    மரக்கலம்
    ஓடாது நிலத்திலே…!

    குறும்பாவில்…

    தேர் ஓடிடாது கடலில்,
    கப்பல் ஓடிடாது நிலத்தில்,
    கற்றிடு இடமறிந்து செயல்பட…!

    மரபுக் கவிதையில்…

    இடமதை யறிந்தே செயல்படுவாய்,
    இடர்தான் வாழ்வில் இல்லையெனில்,
    கடலில் உலாவரும் கப்பலதைக்
    கரையில் கொணர்ந்தே ஓடவிட்டால்
    கடுகள வேனும் அசையாதே,
    காட்சிக் கழகிய தேரதுவும்
    கடலில் விட்டால் ஓடாதே,
    கருத்திதைக் கொண்டிடு செயல்படவே…!

    லிமரைக்கூ…

    கடலிலே ஓடிடாது தரையினிலோடும் தேர்,
    இடமறிந்து செயல்படு,
    கடலோடும் கப்பலும் கரையிலோடாது பார்…!

    கிராமிய பாணியில்…

    நடந்துக்க நடந்துக்க
    எடம்பாத்து நடந்துக்க,
    எடம்மாறிப் போச்சிண்ணா
    எல்லாமே பாழாவும்…

    கப்பலு கடலுலபோவும்
    தேரு தரைலபோவும்,
    கடலுல ஓடாதய்யா தேரு
    நெலத்துல நவுராதய்யா கப்பலு..

    பாத்துக்க பாத்துக்க
    பாத்தபடி நடந்துக்க,
    நடந்துக்க நடந்துக்க
    எடம்பாத்து நடந்துக்க…!

     

    Share
  • வணங்குவோம் வாணியை…

    -செண்பக ஜெகதீசன்

     

    saraswati

     

     

     

     

     

     

     

     

    வெள்ளைத் தாமரை உன்வாசம்
         வீணை செய்திடும் உன்ஓசை,
    பிள்ளைத் தமிழ்முதல் பெருங்கவிதைப்
         பனுவல் பலதிலும் நிறைந்திருப்பாய்,
    அள்ளி அருளது தந்திடுவாய்
         ஆய கலையெலாம் நீதருவாய்,
    பள்ளித் தலமெலாம் உறைபவளே
         பணிந்தோம் வாணித் தாயவளே…!

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(41)

    -செண்பக ஜெகதீசன்

    வேலொடு நின்றா னிடுவென் றதுபோலுங்
    கோலொடு நின்றா னிரவு. (திருக்குறள்-552: கொடுங்கோன்மை)

    புதுக் கவிதையில்…

    வழிப்பறி கள்வர்                                                  kural41
    வேல்காட்டி மிரட்டி
    மக்களிடம்
    பொருள்பறிப்பதைப் போன்றதே,
    ஆட்சியாளர் மக்களிடம்
    அதிகாரம் காட்டிப்
    பொருள் பெறுவதும்…!

    குறும்பாவில்…

    அதிகாரத்தில் பொருள்கேட்கும் ஆட்சியாளரும்,
    வேல்காட்டி பொருள்பறிக்கும்
    திருடனும் ஒன்றே…!

    மரபுக் கவிதையில்…

    பயணமாய்த் தனிவழி செல்வோரும்
    பயந்து நடுங்கிட வேல்காட்டித்
    தயவு பண்பு ஏதுமில்லாத்
    திருடர் அவர்பொருள் பறிப்பாரே,
    உயர்வாய் நாட்டை ஆள்வோரும்
    உறுதுணை யிலாது மக்களையே
    பயந்திட மிரட்டிப் பொருள்கேட்டால்,
    பண்பில் அவரும் கொள்ளையரே…!

    லிமரைக்கூ…

    வேல்காட்டி மக்கள் பொருள்பறிப்பார் கள்வரே,
    அவர்போன்றே அரசியலார்
    அதிகாரப் பலம்காட்டி பலர்பொருள் கொள்வரே…!

     கிராமிய பாணியில்…

    போவாத போவாத
    தனிவழியே போவாத,
    கள்ளன்வந்து மறிப்பானே
    காட்டிகிட்டு வேல்கம்ப
    கைப்பொருளப் பறிப்பானே..

    அதால
    போவாத போவாத
    காட்டுவழி போவாத..

    நாட்டுலயும் கதயிதுதான்-
    நாட்டுமக்க பணம்பறிக்க
    காட்டுனாலே அதிகாரத்த,
    அந்தக்
    கள்ளனும் ராசாங்கமும்
    வேறயில்ல ஒண்ணுதானே…!

    Share
  • நவராத்திரி நாயகிகள்…

    -செண்பக ஜெகதீசன்

    3 devis

     

     

     

     

     

     

     

    வல்லமை தந்திடும் மலைமகளை
         வாழ்த்திப் போற்றி வலுவடைவோம்,
    நல்ல பொருள்தரும் அலைமகளை
         நாமம் சொல்லி வாழ்த்திடுவோம்,
    கல்வி தந்திடும் கலைமகளைக்
         கால மெல்லாம் போற்றிடுவோம்,
    எல்லாம் பெற்றே இன்பமுற
         என்றும் பணிவோம் இவர்பதமே…! 

    Share
  • அவனிடம்…

    -செண்பக ஜெகதீசன்

     

    படைத்தவனைவிட,images (1)
    பக்கத்திலிருக்கும் மனிதன்மீது
    அதிக அன்பு செலுத்துபவனின்
    பக்கத்தில் அமர்ந்துகொள்கிறான்,
    அவன் நாட்குறிப்பின்
    முதல் பக்கத்தில்
    முத்துமுத்தாய்க் கையெழுத்திடுகிறான்,
    இறைவன்…!

     

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(40)

    -செண்பக ஜெகதீசன்

    சொல்வணக்க மொன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான். (திருக்குறள்:827 – கூடா நட்பு)

     

    புதுக் கவிதையில்…                              solvanakkam

    நல்லதல்ல
    வில்லின் பணிவு,
    அது
    விடப்போகும் அம்பிற்காகத்தான்…

    அதுபோல்
    பகைவர்தம்
    பணிவான சொற்களும்
    பயன்தராது நல்லதாகவே…!

    குறும்பாவில்…

    வில்லின் பணிவும்,
    வயவர்தம் சொல்லின் பணிவும்
    வழங்கிடாது நற்பயனையே…!

    மரபுக் கவிதையில்…

    வில்லது பணிவாய் வளைந்தாலும்
       விரைந்தே வந்திடும் அம்பாலே
    நல்ல பயனைத் தந்திடாத
       நம்மை யழிக்கும் படைதானே,
    நல்லார் போலே மிகப்பணிந்து
       நல்ல சொல்லாய்ச் சொன்னாலும்
    பொல்லாப் பகைவர் பேச்செல்லாம்
       பயனாய் நல்லதைத் தாராதே…!

    லிமரைக்கூ…

    பணிவுடனே வளைந்தாலும் தீங்கேதரும் வில்,
    பணிவாய்த்தான் வந்தாலும்
    நற்பயனைத் தருவதில்லை பகைவர்தம் சொல்…!

    கிராமிய பாணியில்…

    வில்லு வளஞ்சா
    மரியாதண்ணு
    மனசுலதான் எண்ணாத,
    அது ஆபத்து-
    அம்பு வந்து
    தொளச்சிருமே நம்மளத்தான்…

    அதுபோல
    நம்பாத நம்பாத
    எதிரி பேச்ச நம்பாத,
    மருவாதயா பேசுனாலும்
    மனசாற நம்பாத-
    அம்புபோல வந்து
    ஆளத்தான் அழிச்சிருவான்,
    நம்பாத நம்பாத
    அவம்பேச்ச நம்பாத…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(39)

    -செண்பக ஜெகதீசன்

    சுடச்சுடரும் பொன்போ லொளிவிடுந் துன்பஞ்
    சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (திருக்குறள் – 267: தவம்)

    jag

    புதுக் கவிதையில்…

    சுடவைத்துச் சுடவைத்துப்
    பொன்னை உருக்கி நகைசெய்தால்,
    பொலிவாகும் மேலும்…

    இது போல
    இடுக்கண் பலவந்து மேலும்
    இன்னல் கொடுத்தாலும்,
    இன்னும் மேம்படும் துறவு…!

    குறும்பாவில்…

    சுடச்சுட மெருகேறும் பொன்போல,
    துன்பம் பலவந்து
    தூயதாக்கும் துறவை…!

    மரபுக் கவிதையில்…

    திரும்பத் திரும்பச் சுடவைத்துத்
    தீயினில் காட்டி உருகவைத்து,
    விருப்பம் போல நகைசெய்தால்
    வியக்கும் வகையில் பொலிவுறுமே,
    சிரமம் மிக்க துன்பங்களும்
    சேர்ந்தே வந்து தொடர்வதனால்,
    தரமது உயரும் துறவினுக்கே
    தானே சிறக்கும் தவவாழ்வே…!

    லிமரைக்கூ…

    பொன்மிளிரும் தொடர்ந்து தீயினில் சுட்டால்,
    தவவாழ்வு சிறந்திடுமே
    தாக்கும் துன்பத்தைத் தொடர்ந்திட விட்டால்…!

    கிராமிய பாணியில்…

    பவுனுயிது பவுனுயிது
    பத்தரமாத்துப் பவுனுயிது,
    பதுக்கி அதயே வைக்காம
    புதுசா சொலிக்கும் நகசெய்ய
    ஒலைல வச்சு சூடாக்கி
    உருக்கணுமே
    திரும்பத் திரும்ப தீயிலதான்…

    இதுபோல
    தும்பம் தொடந்துவந்தாலும்
    அதத்
    தாங்கும் மனசு வருவதாலே
    தொறவு பெரும தெரிஞ்சிருமே,
    சனங்க மதிக்கும் சாமியார…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(38)

    -செண்பக ஜெகதீசன்

    கூத்தாட் டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

    போக்கு மதுவிளிந் தற்று.     (திருக்குறள்-332: நிலையாமை)

    புதுக் கவிதையில்…

    கூடிடும் கூட்டம் அவையில்          shenbaga jegadesan for kuthattu
    கூத்தாடும் காட்சி காண,
    கலைந்திடும் அதுவே
    காட்சி முடிந்ததும்…

    இதுதான் கதை-
    பெருஞ்செல்வம் சேர்வதும்
    பின்னர் விட்டுப்போவதும்…!

    குறும்பாவில்…

    கூத்துசபை வரும் கூட்டம்
    போவதுபோல் போய்விடும்,
    செல்வந்தனிடம் சேரும் பணமும்…!

    மரபுக் கவிதையில்…

    கலையாம் கூத்து நடக்கையிலே
        காண வந்திடும் ரசிகர்களும்
    கலைந்தே செல்லுவர் முற்றிலுமாய்
        காட்சி முடிந்ததும் சபைவிட்டே,
    மலைபோல் செல்வம் சேர்ந்துவந்து
        மனிதனைச் செல்வனாய் ஆக்கிடினும்
    நிலைப்ப தில்லை அவனிடமே
    நீங்கிச் சென்றிடும் அவனைவிட்டே…!

     லிமரைக்கூ…

    கூத்து முடிந்ததும் அவைகலையும் கூட்டம்,
    சேர்ந்த பணமும்
    சிலநாளில் கைவிட்டு ஓடியேவிடும் ஓட்டம்…!

    கிராமிய பாணியில்…

    கூத்து கூத்து தெருக்கூத்து
    கூட்டம் கூடிடும் தெருக்கூத்து,
    ஆட்டம் பாட்டம் முடிஞ்சதுமே
    பாக்க வந்த கூட்டமெல்லாம்
    பறந்து போவும் எடத்தவுட்டே…

    பணத்து கதயும் இதுதானே,
    சேந்து வந்த பணமெல்லாம்
    கூத்துசப கூட்டம்போல
    சேந்து போயிரும் பாத்துக்க…!

     

    Share
  • பிள்ளையார்!

    -செண்பக ஜெகதீசன்

    முக்கண்ணனின் மூத்த பிள்ளை                            Lord Ganesa
         முக்கனியும் விரும்பும் பிள்ளை,
    திக்கெங்கும் நிறைந்த பிள்ளை
         தீதெல்லாம் அகற்றும் பிள்ளை,
    எக்கணமும் அருளும் பிள்ளை
         எளியவர்க்கும் ஏற்ற பிள்ளை,
    அக்கறையாய் அவனைப் பணிவாய்
       ஆனைமுகன் அருள்வான் இனிதே…!

    Share