”அத்திரி இல்லாள் அனுஸூயா பார்த்ததும்,
சித்திறை ஆச்சு சிசுவாக, -அத்திரி
பத்திரி பாட்ஷா,கு பேரன் குசேலனாய்
சுத்திவரச் செய்தாய்கே சவ்’’….கிரேசி மோகன்….ஓகேயா ஓவியரே….!
”அத்திரி இல்லாள் அனுஸூயா பார்த்ததும்,
சித்திறை ஆச்சு சிசுவாக, -அத்திரி
பத்திரி பாட்ஷா,கு பேரன் குசேலனாய்
சுத்திவரச் செய்தாய்கே சவ்’’….கிரேசி மோகன்….ஓகேயா ஓவியரே….!
அற்புதமான ரவி வர்மன் ஓவியம்….ஏலத்தில் விடப் போகிறார்களாம்….நெஞ்சு பொறுக்குதிலையே….!
“ஏடு மணிமாலை ஏந்தும் கலசமோடு
தோடுடைய காதன் ,திகம்பரன்,தென் -நாடுடைய
தட்சிணா மூர்த்தியை திருரவி வர்மன்கை
கச்சிதமாய்க் கண்முன் கொடுப்பு”….
“ஏலம் விடலாமோ ஏகப் பரம்பொருளை
காலம் கலியின் கொடுமையிது -ஆலத்தை
ஆக்ரோ ஷமாயுண்ட ஆதிசிவன் கோலத்தை
AUCTIONனில் விட்டோன் அசத்து”….கிரேசி மோகன்….
பவள சங்கரி
காட்டிலோ, நாட்டிலோ ஒரு கொடிய மிருகத்தின் பிடியில் தனியாக அகப்பட்டுக்கொண்ட மனிதனின் நிலை என்ன? துணிச்சலும், சமயோசிதமும் தப்பிக்கவும், தற்காத்து உயிர் பிழைக்கவும் வழியமைக்குமா?
பல மாதங்களுக்கு முன் தில்லி உயிரியல் பூங்காவில் +2 படிக்கும் மாணவர் ஒருவரை பூங்காவின் வளர்ப்பு மிருகமான வெள்ளைப் புலி ஒன்று அடித்துக் கொன்றது நினைவிருக்கலாம். இன்றைய நவீன உலகில் எதுவும் சாத்தியம் என்பதற்கிணங்க தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் அந்தப் புலி அம்மாணவனின் சதையைக் கிழித்து உயிரைக் குடிக்கும் கொடூரமான காட்சியை ஒருவன் நிதானமாகப் படம் பிடித்துள்ளான். பிரம்மாண்டமாக தம் எதிரில் கோரப் பற்கள் காட்டி நிற்கும் புலியை எதிர்கொள்ளத் துணிவில்லாமல், அதை அறியும் வல்லமையும் இன்றி செய்வதறியாது சுவருடன் சுவராக ஒடுங்கி, கையை ஆட்டி நெருங்காதே நெருங்காதே என்று கெஞ்சிக் கேட்கும் ஒரு பரிதாபமான சீவனை, தன் கண் முன்னால் ஒரு அப்பாவி இளைஞன் கடித்துக் குதறப்படுவதை வேடிக்கைப் பார்க்கும் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்புகொண்டு காப்பாற்ற முயற்சி எடுக்க எவருக்கும் தோன்றவில்லை என்பதோடு கல் மனதின் உச்சமாக ஒருவர் அதை காணொலிக் காட்சியாகப் பதிவு செய்து உலகம் முழுவதும் பரவவிடுகிறார். மனிதாபிமானம் என்பதன் சுவடே அறியாத ஒரு கொடூர மனம் படைத்தவனாகத்தான் அந்த மனிதனைக் காண முடிகிறது. வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களும் நவீனத்துவங்களும் மனித நேயத்தை முற்றிலும் அழித்துவிடுமோ என்று அஞ்சவும் தோன்றுகிறது.
சென்ற ஆண்டு 2015, ஆகஸ்ட் மாதம், அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் ஒரு பூங்காவில் நீண்ட நடைப் பயணம் மேற்கொண்ட கலைஞர் கிரா கோபெஸ்டோன்ஸ்கி என்பவருக்கு நேர்ந்த மற்றொரு அனுபவத்தைப் பார்க்கலாம். பல முறை இது போன்று தனிமையில் நீண்ட பயணம் செல்லும் வழமையுடையவர் என்றாலும் இவர் ஒருபோதும் காட்டு மிருகங்களை நேருக்கு நேர் கண்டவரில்லை. அன்று நடந்து கொண்டிருந்தவரின் பின்புறம் ஏதோ விநோதமான சத்தம் கேட்டதைத் தொடர்ந்து தன்னிச்சையாகத் திரும்பியவர் கண்களில்பட்டது மூன்று, நான்கு மீட்டர் இடைவெளியில் நெடிதுயர்ந்த ஒரு உருவம். அவ்வளவு நெருக்கத்தில் அத்தனை உயரமான ஒரு மலைச் சிங்கத்தை முதன் முதலில் கண்டவரின் கால்கள் பின்னிக்கொண்டதென்னவோ உண்மைதான். என்றாலும் அவர் தம்மை திடப்படுத்திக்கொண்டு சட்டென்று ஓடாமல், மெதுவாக பின்புறம் நகர ஆரம்பித்தார். அந்த சிங்கமும் மெல்ல முன்னேறுகிறது. கிரா நின்றுவிடுகிறார்; அந்தச் சிங்கமோ பதுங்குகிறது… (பாய்வதற்கோ?) உடனே கியாரா தன்னை ஒரு பெரிய வேட்டைக்காரர் போலக் காட்டிக்கொள்ளும் முயற்சியில் அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையை வளைத்துப் பிடித்துக்கொண்டு நிற்கிறார். ஆனால் அந்த காட்டு ராசா அதற்கெல்லாம் மசியவில்லை. அடங்காமல் நிற்கிறது. கிட்டத்தட்ட 20 நிமிடங்கள் கிராவின் எந்த விதமான அசைவுகளையும் சட்டை செய்யாமல் மெல்ல முன்னேறுகிறார் அரசர். இன்னும் சில அடிகளே இடைவெளி! கிராவிற்கு எப்படியும் அந்த கொடிய மிருகத்தின் தாக்குதலிலிருந்து தப்பிவிட வேண்டும் என்ற மன உறுதி மட்டும் இருந்தது. ஆனால் அதன் கண்களில் இருந்த வெறியும், அதன் பிரம்மாண்ட உருவமும் தப்பிப்பது சாத்தியமா என்ற ஐயத்தையும் கொடுக்காமல் இல்லை. அடுத்து இன்னும் தீவிரமாக முயற்சி எடுக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டார். சுரப்பிகள் எல்லாம் தாறுமாறாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. அடுத்து அவர் எடுத்த விவேகமான ஒரு முடிவுதான் அவரை காப்பாற்றியதோ?
ஆம், கிராவின் அடுத்த நடவடிக்கை தம் பலம் முழுவதும் திரட்டி உச்சக் குரலில் ஓபராவின் பாடலைப் பாடியதுதான்! இசைக்கேட்டால் புவியே அசைந்தாடுமே! ஆச்சரியம், ஆனால் உண்மை. சிங்க ராசா மெல்ல பின் வாங்கினாராம். தம் காதுகளை தரையோடு வைத்தவர் பார்வையை உயர்த்தி கிராவை உற்று நோக்கியவாறு மெல்ல பின் வாங்கியவர் பின் திரும்பிப் போயேவிட்டார்! முயற்சி திருவினையாக்கிவிட்டது. பின் அவர் தம் தோழர்களை அழைத்து நடந்ததைக் கூறி அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கை செய்யும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் தெரிவித்தார்.
அந்த கொடிய காட்டு விலங்கிடமிருந்து தப்பித்தது குறித்து உயிரியலாளர் அமி ரோட்ரிக்ஸ், விலங்குகள் உலகில், ஓடிக்கொண்டிருப்பவையெல்லாம் உணவுகள் என்பது எழுதப்படாத சட்டம். தரையில் அழுத்தமாக நின்றுகொண்டு, பலமாக ஒலியெழுப்பிக்கொண்டிருந்ததால் அந்தச் சிங்கம் அது தனக்கான உணவு இல்லை என்பதை உணர்ந்துகொண்டு திரும்பிச் சென்றுவிட்டது என்றார். ஆக அந்த சிங்கம் கிராவின் பாட்டில் பயந்து ஓடிவிட்டதுபோலும்!
காட்டு விலங்கிடமிருந்து தப்பிக்க ஒரு உபாயம் இருப்பது போன்று நாட்டு விலங்குகளிடமிருந்தும் தப்பிக்க வழியா இல்லை. தேவையானவையெல்லாம் சற்று நிதானமும், தெளிவான சிந்தனையும்தான். தேவையற்ற அச்சமும், படபடப்பும்தான் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்கிவிடக்கூடியது. பிரச்சனையை சமயோசிதமாக சமாளித்த சாமர்த்தியமான மங்கையிவள்!
அமெரிக்காவில் காவல்துறை அவசர அழைப்பு எண் 911. ஒரு அமெரிக்க இளம் பெண் ஒரு குடிகார ஆண் நண்பனிடம் தனியாக மாட்டிக்கொண்டவள் மீண்டு வருவதற்கு ஒரு உபாயமும் கண்டுபிடித்தாள். தாம் குடிகாரனிடம் மாட்டிக் கொண்டிருப்பதை காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டிய சூழலில், அவனும் அதே அறையில் இருந்ததால் நேரடியாக புகார் அளிக்க முடியாத நிலை. அவள் காவல் துறை எண்ணான 911 என்பதற்கு அழைப்பு விடுத்து பீசா கடைக்குப் பேசுவது போல பேசுகிறாள். எதிர் முனையில் காவல் துறையினர் இது காவல் நிலைய அவசர உதவி, பீசா கடை அல்ல என்று சொன்னபோதும் அப்பெண் மீண்டும், மீண்டும் பீசா தேவை என்றும், அவசரம் என்றும் குறிப்பால் உணர்த்த, காவல் துறையினரும் சூழ்நிலையை ஒருவாறாக புரிந்துகொண்டவர்கள் மேலும் அது பற்றிய கேள்விகளைக் கேட்டு புரிந்து கொண்டதோடு விரைவில் வந்து அப்பெண்ணை காப்பாற்றியும்விட்டனர். மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதை உணர்ந்த அந்தப் பெண் சமயோசிதமாக தன்னைக் காத்துக்கொண்டாள்.
பிரச்சனைகள் எவ்வளவுதான் பூதாகரமாக, உயிர் குடிக்கும் நிலையில் இருந்தால்கூட, தெளிந்த சிந்தனையுடன் அணுகும்போது மீண்டு வரும் வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பதை மேற்கண்ட சம்பவங்கள் உணர வைக்கின்றன அல்லவா…
தில்லியில் கடந்த 2012-ஆம் ஆண்டு திசம்பர் 16-ஆம் தேதி இரவு ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமைக்கும், குற்றவாளிகளின் தாக்குதலுக்கும் உள்ளாகி சில நாட்களுக்குப் பின் மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவ மாணவி நிர்பயாவை மறக்கவும் முடியுமா.. இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தூக்கிலிட்டுக்கொண்டான். மற்ற நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்தச் சம்பவத்தில், நிர்பயாவை உடல்ரீதியாக அதிகம் துன்புறுத்தி காயப்படுத்தியதில் 17 வயதேயான ஒரு சிறார் குற்றவாளிதான் முக்கிய நபர். குற்றம் நிகழ்ந்தபோது அவருக்கு 17 வயதுதான் ஆனது என்ற காரணத்திற்காக சுமார் 3 ஆண்டுகளில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். தற்போது 20 வயது நிரம்பியுள்ள நிலையில், விடுதலையாகி வெளியுலகுக்குச் செல்லும் அந்த சிறார் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. தில்லி மகளிர் ஆணையம் சார்பில் சனிக்கிழமை இரவு தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், திங்கள்கிழமை விசாரணைக்கு ஏற்பதாகக் கூறி விட்டது. நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு. லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு இரவு 2 மணிக்கு இந்த மனுவை விசாரித்து, பிறகு ஒத்திவைத்தது. இந் நிலையில் 21.12.2015 அன்று மனுவை விசாரித்த உச்சநீதி மன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. சிறார் தண்டனை சட்டத்தில் கட்டாயம் திருத்தம் கொண்டு வரவேண்டிய நிலையில் அந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், நிர்பயாவிற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் தில்லியில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நிர்பயாவிற்கு ஆதரவு தெரிவித்து கிட்டத்தட்ட ஒரு இலட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். நம் நாட்டில் திருத்தப்பட வேண்டிய பழம்பெரும் சட்டங்கள் பலவற்றில் இதுவும் ஒன்றாக முடங்கித்தான் போக வேண்டுமோ என்னவோ. காலம்தான் பதில் சொல்லக்கூடும்.
இது தொடர்பான மற்றொரு முக்கியமான விசயம் இது குறித்து மத்திய பெண்கள் மற்றும் சிறார் மேம்பாடு துறை மந்திரி மேனகா காந்தி கூறியுள்ள செய்திதான். அதாவது மைனர் குற்றவாளியின் தண்டனை நீட்டிக்க முடியாத நிலை உள்ளதால், விடுதலைக்குப் பின் அந்த குற்றவாளி வேறொரு குற்றம் செய்யும் வரை ஒன்றும் செய்ய முடியாது. நீதியை சட்டத்துடன் இணைத்து குழப்பிக் கொள்ளக்கூடாது. மைனர் குற்றவாளி சிறார் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று சட்டம் தான் சொன்னது. சட்டப்படி தண்டனை முடிந்து மைனர் குற்றவாளி தற்போது விடுதலை ஆகிறார். விடுதலைக்குப் பின் அவர் வேறொரு குற்றம் செய்யும் வரை ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான். மத்திய மந்திரியாக உள்ள மேனகா காந்தி, இந்த வழக்கில் போதிய நீதி வழங்கப்படவில்லை என்று நேரடியாகக் கூறியுள்ளது சட்டத்தின் மீதான விமர்சனமாகத்தான் கருதப்படவேண்டியுள்ளது.
– தேமொழி.
கள்ளியகிலுங் கருங் காக்கைச் சொல்லும்போ
லெள்ளல் கயவர்வா யின்னுரையைத் – தெள்ளிதி
னார்க்கு மருவி மலைநாட! நாய்கொண்டாற்
பார்ப்பாருந் தின்பா ருடும்பு.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
கள்ளி அகிலும், கருங் காக்கைச் சொல்லும்போல்,
எள்ளற்க, யார் வாயும் நல் உரை!-தெள்ளிதின்
ஆர்க்கும் அருவி மலை நாட!-நாய் கொண்டால்,
பார்ப்பாரும் தின்பர், உடும்பு.
பொருள் விளக்கம்:
கள்ளியில் கிடைக்கும் அகிலையும் (அதன் மணத்திற்காகவும்), கருங்காக்கை கரைவதையும் (நல்நிமித்தம் சொல்கிறது என்று கருதியும்) ஏற்றுக் கொள்வதைப் போன்று, இகழாது கயமைப் பண்புள்ளோர் கூறும் நல்ல கருத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். தெளிவாக, ஒலிக்கும் அருவி வீழும் மலைநாட்டைச் சேர்ந்தவரே (வேட்டையின் பொழுது) நாய் கவ்விக் கொண்டுவந்ததாயிற்றே என்று புறக்கணிக்காமல், பார்ப்பனரும் உடும்பின் தசையின் சுவை கருதி அதனை உண்ணுவர்.
பழமொழி சொல்லும் பாடம்: பிறப்பிடம் நோக்காது, உயர்ந்த பண்புகளைக் கண்டால் அதனை மதிக்க வேண்டும். கள்ளியில் தோன்றும் நறுமணம் கொண்ட அகிலையும், கருமையான காக்கையின் கத்தலை விருந்தினர் வருவதைக் கூறும் நல்ல நிமித்தம் என்றும் உயர்வாக மதிப்பது அல்லாமல், அவை தோன்றிய இடம் கண்டு இகழ்ச்சியாகக் கருதும் வழக்கமில்லை. வேட்டை நாய் தனது வாயால் கவ்விப் பிடித்த உடும்பினைக்கூட நாய் கவ்வியதாயிற்றே என்று பார்ப்பனரும் புறக்கணிக்காமல் அந்தப் புலாலின் சுவை கருதி உண்பர். அவ்வாறே, இழிந்தோர் நல்லுரை கூறினால் இகழாமல் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தும் இப்பாடல் கருத்தினுக்கு இணையாக வள்ளுவர் கூறும் குறள்,
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. (குறள்: 423)
எந்த ஒரு பொருள் குறித்து எவர் என்ன கூறினாலும், அக்கருத்தில் காணும் உண்மையைக் கண்டறிந்து ஏற்றுக் கொள்வது அறிவுடமையாகும் என்கிறது.
குறிப்பு: இப்பாடலில் பாடபேதங்கள் காணப்படுகின்றன. நாராயண ஐயங்கார் அவர்களின் நூலில் காணும் பாடல் “எள்ளல் கயவர் வாய் இன்னுரை” என்று கூறுவதை “எள்ளற்க யார் வாயும் நல்லுரை” என்று மற்ற சில நூல்கள் காட்டுகின்றன. அவ்வாறே, “நாய் கொண்டால்” என்பது பாடபேதமாக, “நோய் கொண்டால்” எனவும் இருக்கலாம் என்கிறார் நாராயண ஐயங்கார். அதனை ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும், என்ற உடல் நலம் கெட்ட நிலையில், உடல் நலம் கருதி உடும்பைக் கூட பார்ப்பனர் உண்பர் என்ற வகையிலும் பொருள் கொள்ளலாம். எப்படியாயினும், பொதுவாகப் பாடலின் கருத்து “சேற்றில் மலர்ந்த செந்தாமரை”, சிப்பியில் பிறக்கும் முத்து” ஆகியவற்றை எத்தகைய தாழ்ந்த நிலையில் தோன்றினாலும் இகழ்வாகக் கருதாது, அவற்றின் உயர்ந்த பண்பினைக் கண்டு ஏற்றுக் கொள்வது போலவே; கள்ளியில் பிறந்த அகிலையும், காக்கையின் கரைதலையும், நாய் கவ்விய உடும்பையும் மக்கள் ஏற்றுக் கொள்வதே வழக்கம். அவ்வாறே இழிவானவராக இருந்தாலும் அவர் கூற்றில் உண்மை இருந்தால் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பதே இப்பழமொழிப் பாடல் தரும் அறிவுரை.
(ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)
மீ.விசுவநாதன்
அத்யாயம்: 46
“வசந்தா மேன்ஷன்”
அவனும், அவனுக்கு நண்பன் ரகுவும் திருவல்லிக்கேணியில் வாடகைக்கு அறையெடுத்துத் தங்க எண்ணி, அங்கிருக்கும் ஒவ்வொரு இடமாகப் பார்த்து வந்தனர். திருவல்லிக்கேணியை “பிரும்மச்சாரி”களின் கோட்டை என்று அழைப்பார்கள். அந்தக் கோட்டைக்குள் அவர்கள் நுழைந்து தேடித் பிடித்தனர் “ஐஸ் ஹவுஸ்” பெசன்ட் சாலையில் உள்ள “வசந்தா மேன்ஷன்” என்ற விடுதியை. அங்கிருந்த விடுதியின் மேனேஜர் இராமசாமிப் பிள்ளை, அவர்களிடம்,” இங்கு ஒரே ஒரு அறைதான் காலியாக இருக்கிறது. அது பதிமூணாம் நம்பர் அறை. அதற்கு யாரும் வருவதில்லை.” என்றார். “எங்களுக்கு அது பரவாயில்லை…அந்த அறைக்கு என்ன வாடகை?” என்று கேட்டனர். “ஒரு கட்டிலுக்கு ஒரு மாத வாடகை முப்பது ரூபாய். “கெஸ்ட்” வந்து தங்கினால் ஒரு நாளைக்கு இரண்டு ரூபாய்” என்றார். “சரி” என்றனர்.
இராமசாமிப் பிள்ளை, அவர்களுக்குப் பதிமூன்றாம் எண் அறையைத் திறந்து காட்டினார். ஒரே தூசிக் காடாக இருந்தது. “இத எல்லாம் நல்லா சுத்தப் படுத்தித் தந்துடுவோம் கவலைப் படவேண்டாம்” என்றார். 1977ம் ஆண்டு ஜூலை முதல் வாரத்தில் அவன் முதலில் அந்த அறைக்குள் குடிபுகுந்தான். சில தினங்களில் “ரகுவும்” சேர்ந்து கொண்டான். மிகவும் சௌகர்யமான அறை. நிறைய நண்பர்களையும், எழுத்தாளர்களையும் அவனுக்கு மிகவும் நெருக்கமாகச் செய்த அறை. அந்த விடுதிக்கு மிக அருகிலேயேதான் மெரீனா கடற்கரையும், பார்த்தசாரதி கோவிலும், மகாகவி பாரதியார் இல்லமும் இருந்தது. அந்த பாரதியார் இல்லத்தை அரசாங்கம் பொதுவுடைமை ஆக்குவதற்கு முன்பாக அந்த வீட்டில் பக்திப் பாடகர் கே.வீரமணியும், கே. சோமு அண்ணா குடும்பத்தினரும் வாடகைக்குக் குடி இருந்தனர். அவர்களுடன் அவனுக்கு நல்ல தொடர்பு ஏற்படக் காரணமே ஒருவகையில் அவன் குடிருந்த சூழல்தான்.
“கலைமாமணி, கவிஞர் பொன்னடியான்”
ஒரு ஞாயிறு மாலையில் அவன் தனியாக மெரீனா கடற்க்கரைக்குச் சென்றான். அவனுக்கு கடல் மணலில் நடக்கவும், கடல் நீரில் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு கடலின் நீல வண்ணத்தில் தன்னைக் கரைத்துக் கொள்ளவும் ரொம்பவும் பிடிக்கும். அப்படி அவன் கடலை ரசித்துவிட்டுத் திரும்பும் பொழுது அந்த மணற்பரப்பில் சுமார் ஒரு இருபது கவிஞர்கள் வட்டமாக அமர்ந்து கொண்டு கவிதை படித்துக் கொண்டிருந்தனர். அவனும் அவர்களுடன் அமர்ந்து கொண்டான். அங்கு வாசிக்கப்படும் கவிதைகளை ஒருவர் நடுநாயகமாக அமர்ந்தபடி ரசித்தும், விமர்சித்தும், அந்தக் கவியரங்கத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார். மெலிந்த உருவம். வெள்ளை வேட்டி, ஜிப்பா, முகத்தில் ஒரு கண்ணாடியுடன் கூர்மையான கவனிப்புடனும் , மெல்லிய சிரிப்புடனும் இருந்த அவரை அவனுக்குப் பிடித்திருந்தது. அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ஒரு கவிஞரிடம் அவரைக் காட்டி,” அவர் யாரு…இங்க எதற்குக் கவிதை வாசிக்கிறார்கள்” என்றான். “இதற்குக் “கடற்கரைக் கவியரங்கம்” என்று பெயர். ஒவ்வொரு மாதமும் ஒரு ஞாயிற்றுக் கிழமை இங்கே இப்படி இந்தக் கவியரங்கம் நடைபெறும். “தமிழ்க் கவிஞர் மன்றம்” சார்பாக நடத்துகிற இவர்தான் கவிஞர் பொன்னடியான்” என்றார். அப்படி அவனுக்குச் சொன்னவர் பெயர் கவிஞர் சமதர்மன். அந்தக் கவியரங்கம் முடிந்தவுடன் அவன் கவிஞர் பொன்னடியான் அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டான். அவர் மிக்க மகிழ்ச்சியுடன்,” நீங்கள் ஒவ்வொரு மாதமும் நடைபெறும் இந்த “கடற்கரைக் கவியரங்கத்திற்கு வாருங்கள். உங்களது கவிதையைப் படியுங்கள். தமிழ்க் கவிஞர் மன்றம் சார்பாக வெளிவரும் “முல்லைச்சரம்” கவிதை இதழுக்கும் உங்களது கவிதைகளை அனுப்பி வையுங்கள் என்று சொல்லி” அவனிடம் அந்த மாத முல்லைச்சரம் இதழைத் தந்து,” நீங்கள் எங்கள் வீட்டிற்கு வாருங்கள்” என்றும் அழைத்தார்.
அடுத்த ஞாயிற்றுக் கிழமை மதியம் அவன் கவிஞர் பொன்னடியான் அவர்களின் இல்லத்திற்குச் சென்றான். அப்பொழுது அவரது வீடு கோடம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் உள்ள ஒரு இடத்தில் இருந்தது. அவரது வீட்டு மாடியில் தென்னை ஓலையினால் கூரை போடப் பட்டிருக்கும். அங்குதான் அவனை அவர் அழைத்துச் சென்றார். அந்த அறையில் நிறைய புத்தகங்கள் இருந்தன. அவனிடம் அவர் மிகுந்த அன்புடன் பேசிக் கொண்டிருந்தார். அவரது மனைவியையும், குழந்தைகளையும் அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகளைப் பற்றியும், அவரோடு தனக்கு இருந்த பழக்கத்தின் பெருமைகளைப் பற்றியும் அவனுடன் பேசிக் கொண்டிருந்தார். அவன் “முல்லைச்சரம்” இதழுக்காக ஒரு கவிதையை அவரிடம் கொடுத்தான். அதைப் படித்துப் பாராட்டியதோடு மட்டுமின்றி அதை வெளியிடவும் செய்தார். தொடர்ந்து எழுதுங்கள் என்று ஊக்கப் படுத்தினார். அந்த இருபத்திரண்டு வயதில் அவனுக்கு அது நல்ல ஊட்டச் சத்தாக இருந்தது. அடிக்கடி அவன் அவரை சந்தித்தும், கடற்கரைக் கவியரங்கத்தில் கவிதைகளை வாசித்தும் வந்தான். அங்குதான் அவனுக்கு கவிமாமணி இளந்தேவனின் அறிமுகமும், நட்பும் கிடைத்தது.
“உவமைக் கவிஞர் சுரதா”
உவமைக் கவிஞர் சுரதாவின் மகன் கவிஞர் கல்லாடனின் தொடர்பும் அவனுக்குக் கிடைத்தது. கவிஞர் கல்லாடன் அவனை அசோக்நகரில் உள்ள தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று தனக்குத் தந்தையார் “கவிஞர் சுரதா”விடம் அறிமுகம் செய்து வைத்தார். கவிஞர் சுரதா அவனைப் பார்த்து ,” நீ…பாப்பானா”…எங்கிருக்கிறாய் ” என்றார். “திருவல்லிக்கேணியில் ஒரு விடுதியில்” என்றான். “நீ கவிதை எழுதுவியா என்றார்”. “எழுதுவேன்” என்று ஒரு கவிதையைச் சொன்னான். அவனைத் தட்டிக் கொடுத்து, அவர் எழுதிய கவிதைப் புத்தகங்களை அவனுக்குப் பரிசளித்தார். அவரது “தேன்மழை”க் கவிதைத் தொகுப்பைப் படித்து விட்டு அதில் அவரது உவமை அழகை அவன் ரசித்திருக்கிறான். ஒரு முறை “வானவில் பண்பாட்டு மையம்” மகாகவி பாரதியாரின் பிறந்ததின விழாவை திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியாரின் நினைவு இல்லத்தில் நடத்தியது. ஜதிபல்லக்கு ஊர்வலம் முடிந்தபின்பு நடைபெற்ற கவிப்பொழிவை கவிஞர் சுரதா துவக்கி வைத்தார். அதில் அவன் பாரதியாரைப் பற்றி எட்டு வரியில் ஒரு கவிதையை வாசித்துவிட்டு மேடையில் இருந்து இறங்கி வரும் பொழுது கவிஞர் சுரதா அவனைத் தன்னருகே அழைத்து, ” நீ..பாப்பான் தானே…ஒன்னோடு கவிதைல நல்ல வீச்சிருக்கு…சிறப்பா வருவாய்” என்று வாழ்த்தினார். அவர் வாழ்த்திய கவிதை இதுதான்.
“காளியைக் கண்களில் வைத்தவன்
சாதனை செய்வதில் புதிறேது ?
தூளியில் தொங்கியே பழகினால்
துள்ளியே பறந்திட வழியேது ?
தேவியாம் சரஸ்வதி களிப்பிலே
தேடியே நாவிலே பதிந்திடவே
தாவியே குதிக்கிறாள் கலக்குறாள்
தங்கமாய் ஜொலிக்கிறான் பாரதியும் !
11.02.2016
அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..
க. பாலசுப்பிரமணியன்
அணுவைத் துளைத்து ..
அதன் கருவைக் கிழித்து ..
அமைதியில் உறங்கும்… நான் !
காலமும் ஞாலமும் உரசிடக் ..
கதிராய்ப் பிறந்த கலைஞன் நான்!
கண்ணின் ஒளிக்குள்..
கைகளின் அசைவில் ..
உடலிடும் கதிராய்..
உயிரினுள் அன்பாய்,,..
நடந்திடப் …பறந்திட..
பாதைகள் வகுக்கும் பறவை .
நானிலம் தேடிடும் ..
நல்லவன்..வல்லவன்
நான் காந்தன் !
கால அளப்பில் ..
சிறைப்படவில்லை!
பிறப்பும் இறப்பும் ..
என்னை வரிப்பதில்லை !
கூட்டில் வாழும் உயிர்களுக்குள்
கூடி வாழ்ந்தாலும் ..
குறைகள் அறியா…
கூத்தன் நான் !
சக்தியும் சிவமும்
ஆடிடும் சாஸ்வத நடனம் !
அண்டங்கள் அனைத்தையும்
அணைத்திடும் ஆற்றல் !
புலனுக்குப் புரியா..
புலவர்கள் அறியா
கற்பனைச் சிகரம் ..
கடவுள் தத்துவம்!
–கவிஜி.
புத்தனிடம் பேச
எதுவுமில்லாத யசோதரையிடம்
பேச நிறைய இருக்கிறது…
________________________________________________
உலகின் முதல் கதையும்
கடைசி கதையும்
‘கடவுள்’ ஆகவே இருக்கிறது…
________________________________________________
கைகளை எவ்வளவு
அகலமாக விரிக்க
முடிகிறதோ
அவ்வளவுதான் வானம்
குழந்தைக்கு….
________________________________________________
பூவைச் சூடிக்
கொண்ட தோட்டம் என
உன் கல்லறை…
________________________________________________
உங்கள் வீட்டுப் பூனைகளிடம்
கேட்டு விடாத கேள்விகளில்
எங்கள் வீட்டு அடுப்பு
கடைசியாய்
எரிகிறது…
________________________________________________
கவிஜி
க. பாலசுப்பிரமணியன்
யமுனை நதிக்கரையோரம் இன்று
யதுகுல மன்னனைக் கண்டேன்!!
கதம்ப மரத்தில் கால்நீட்டி வீற்றிருந்தான்
காரிகையர் சேலைகள் கடத்தியிருந்தான் !
கற்பனை உலகினில்தன்னை மறந்திருந்தான்
காதலுக்குப் பொருள்தேடிக் கண்ணயர்ந்தான் !
தோழிகள் அணிசேர்த்து ராதை குறையிட்டாள்
கோபாலனோ குறுஞ்சிரிப்பில் குழலூதி மகிழ்ந்திட்டான் !!
நந்தவனத்தில் அவன் கால்சுவடுகள்,
நர்த்தனத்தில் நாலாயிரம் கீதங்கள் பாடும்!!
நாரணன் கைகோர்த்துக் கோபியர் ஆடும்
நாட்டியத்தைப் பார்க்க அவனியெல்லாம் ஏங்கும்!!
காரிருளில் பிறந்த கார்மேகத்தான்
கதிரவன் முகம்மறையக் காத்திருந்தான்!!
மேலங்கி காற்றினிலே உயர மெதுவாக ராதையங்கே அசைய
மின்னோளியாய் கண்ணனும் அவளோடு சுழல
மேலுலகும் கீழுலகும் கண்சிமிட்டி நிற்க
முன்னசைந்து பின்னசைந்து மோகமின்றி ஆடுகின்றார் !
கம்சனை அழித்த கால்கள் இங்கே
காதல் நாட்டியம் ஆடுதம்மா!
கருநாகன் காளிங்கனை அழித்த களிப்பினிலே
கால்கள் இங்கே களைப்பின்றி ஆடுதம்மா !!
காசினியே கைதட்டித் தாளம் போட
கலையாத அழகோடு கண்ணன் இங்கே ஆடுகின்றான்!
கோலாட்சி செய்யும் மன்னனிங்கே
கோலாட்டம் செய்வதன் மாயையென்ன!
கோதையர்தம் உள்ளங்கவர்ந்து
ராசத்திலே பாசத்தை வடிப்பதென்ன!
ராதையுடன் காதல் போதையிலே
காமமில்லாக் காவியம் படைப்பதென்ன!
– சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள்.
கடந்த ஆண்டு அதாவது 2015 டிசம்பர் மாதம் இங்கிலாந்துக் காலநிலை மிகவும் மாறுபட்டு 5 டிகிரி செல்சியஸ் இருக்க வேண்டிய நேரத்தில் 17 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. எங்கே விட்டுப் போன குளிரைத் தப்ப விட்டு விடுவோமோ எனும் ஏக்கத்தில் காலதேவதை இந்த வாரம் கொஞ்சம் தன் குளிரின் கடுமையைக் காட்டத் தொடங்கி விட்டாள்.
கணினியின் முன்னால் இருந்து கொண்டு பனிபடர்ந்த சாரளத்தினூடாகக் கலங்கலாகத் தெரியும் வெளியுலகை நோட்டம் விட்டவாறு உங்களுடன் மடல் மூலம் உறவாட விழைகிறேன். ஒரு நாட்டின் முதுகெலும்பு அந்நாட்டின் சுகாதாரச் சேவையாகும். அச்சுகாதாரச் சேவையின் அஸ்திவாரமே அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் ஆகிய முன்னிலை சேவையாளர்களே ! இங்கிலாந்தைப் போன்ற வளர்ச்சியடைந்த நாட்டிலே மக்களின் வாழ்க்கைக் காலம் நீண்டு கொண்டு செல்கிறது. இது இங்கிலாந்துக்கு மட்டுமல்ல முழு உலகிற்கும் பொருந்தும்.
1900ம் ஆண்டுகளில் இங்கிலாந்தில் ஒரு சராசரி ஆணின் வாழ்வின் காலம் 47 வருடங்கள் எனவும் சராசரி பெண்ணின் வாழ்வின் காலம் 50 எனவும் அந்நாள் அளவாகக் கணிக்கப் பட்டிருந்தது. அதுவே இன்றைய காலகட்டத்தில் ஒரு சராசரி ஆணின் வாழ்வுக் காலம் 79 வயது எனவும், பெண்ணின் வாழ்வுக் காலம் 83 வயது எனவும் கூறப்படுகிறது. இவ்வாழ்க்கைக் கால நீட்சியின் காரணங்கள் புதிய மருத்துவக் கண்டுபிடிப்புகள், சுகாதாரச் திணைக்களத்தின் அதீத முன்னேற்றங்கள் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தர உயர்வு என்பதே பொதுக் கருத்தாக உள்ளது.
இது சாதாரண மனிதருக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விடயமே. ஆனாலும், அரசாங்கத்தைப் பொறுத்தவரை மிகவும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகிறது. ஒவ்வொரு மனிதரும் வாழும் காலம் நீடிக்க, நீடிக்க அம்மனிதரின் இவ்வுலக வாழ்விற்கான செலவினங்கள் அரசாங்கத்தின் தலையில் அல்லவா விழுகிறது ! அதுவும் இங்கிலாந்தைப் போன்று தேசிய சுகாதார சேவையில் அனைத்து வைத்தியமும் சகலருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி இலவசமாக வழங்கப்படுவதினால் அதற்குரிய நிதி ஒதுக்கீடு அவசியமாகிறது.
அதனால் தற்போதைய கன்சர்வேடிவ் கட்சி அரசு தேசிய சுகாதாரச் சேவையில் எந்த அளவிற்கு தமது செலவுகளைக் கட்டுப்படுத்த முடியுமோ அந்த அளவிற்குக் கட்டுப்படுத்த முனைகிறார்கள். அந்நடவடிக்கையின் போது இதுவரை தாம் கைவைக்கத் தயங்கிய டாக்டர்கள் மீது கை வைத்து விட்டார்கள் போங்கள் . . .
அதி முக்கிய சேவைகளான போலீஸ், இராணுவம் ஆகியவை எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு நாட்டின் வைத்தியர்களும் முக்கியமானவர்களே ! ஆனால் ஒரு சிறிய வேறுபாடு. போலீஸ், இராணுவம் ஆகியோர் வேலைநிறுத்தம் செய்ய முடியாது எனும் சட்டம் நடைமுறையிலிருப்பது போல் வைத்தியர்களுக்கு ஓர் சட்டம் இல்லை. ஆனாலும் எழுதாச் சட்டம் போல வைத்தியர்கள் வேலைநிறுத்தம் செய்வது என்பது இதுவரை அதாவது 2015 வரைக்கு முன்னால் ஒரேயொரு தடவை தான் நடந்ததாக நினைவு.
டாக்டர்களின் அடிப்படை வேலை ஒப்பந்தத்தில் மாற்றம் செய்து அவர்களது ஊதியத்தில் சில மாற்றங்களைச் செய்ய சுகாதார அமைச்சர் முடிவு செய்ததன் பிரகாரம் ஆரம்பித்தது சிக்கல். டாக்டர்களுக்கான யூனியன் இவ்வொப்பந்த மாற்றத்தை முற்றாக எதிர்த்தது, தம்முடன் எவ்விதமான கலந்தாலோசனையும் இன்று தன்னிச்சையாக அரசாங்கம் முடிவெடுத்திருக்கிறது எனவும், இது தமது ஆரம்பக்கால டாக்டர்களின் ஊதியத்தில் பாரிய மாற்றங்களைச் செய்வதோடு அவர்கள் பணிபுரியும் நேரத்திலும் பாதகமான முறையில் மாற்றங்களைக் கொண்டு வருகிறது என்றும் அவர்கள் கோஷமெழுப்பினார்கள்.
அரசாங்கமோ பணிவதாக இல்லை. விட்டார்களா டாக்டர்கள் ? இல்லையே பொறுத்தது போதும், பொங்கியெழுவோம் வாருங்கள் என்று யூனியன் வாக்கெடுப்புக்கு விட்டபோது, இவ்வொப்பந்த மாற்றத்திற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்வதற்கு ஆதரவாக 90 விழுக்காடுகளுக்கும் அதிகமான அளவில் டாக்டர்கள் வாக்களித்தார்கள். முடிவாகக் கடந்த வருட இறுதிகளில் ஆரம்பித்து நேற்று மூன்றாவது தடவையாக டாக்டர்கள் 24 மணிநேர வேலைநிறுத்தத்தில் குதித்தார்கள். இவ்வேலைநிறுத்தம் அவசர சிகிச்சையைப் பாதிக்காத வகையில் தாம் இதை ஒழுங்கு செய்துள்ளதாகவும், தமது காரணங்களை விளக்கி மக்களிடம் ஆதரவு கோரினார்கள் டாக்டர்கள்.
இறுதியாக நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடியத் தன்னிச்சையாக இவ்வொப்பந்த மாற்றத்தை அரசாங்கம் அமல்படுத்துவதைத் தவிர வேறுவழியில்லை என்பது போலத் தென்படுகிறது. இம்முடிவை அரசு இன்றோ அல்லது நாளையோ எடுக்கலாம் எனும் கருத்தும் நிலவுகிறது. அரசு தரப்பிலிருந்து அவர்களது அடுத்த நடவடிக்கை பற்றிய எந்த விதமான தகவல்களும் ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. கருத்துகளின்படி தன்னிச்சையாக ஒப்பந்த மாற்றம் அமுல் படுத்தப்படுமானால் தமது வேலைநிறுத்தங்களும் தொடரும் என டாக்டர்களுக்கான யூனியன் எச்சரித்துள்ளது.
தற்போது இரு தரப்பினர்களுக்கு இடையிலுமான முறுகல் நிலவரம் இதுதான், சனிக்கிழமை சாதாரண பணிநாளாக்கப் படவேண்டும் என்பது அரசாங்கத்தரப்பிலான வாதம். ஆனால், டாக்டர்களுக்கான யூனியனோ சனிக்கிழமை பணிபுரிந்தால் அதற்காக மேலதிகமான ஊதியம் வழங்கப்படும் தற்போதைய முறை மாற்றப்படக்கூடாது என்கிறது. இம்மாற்றத்திற்கு ஈடாக டாக்டர்களுக்கு 11% ஊதிய உயர்வு வழங்குவோம் என்று அரசாங்கமும், எமக்கு 5% ஊதிய உயர்வு போதும் ஆனால் சனிக்கிழமை பணியில் எந்தவித மாற்றமும் செய்யக்கூடாது என்று டாக்டர்கள் யூனியனும் தமது எல்லைக்கோடுகளை வகுத்துக் கொண்டு அதைவிட்டு வெளிவரமாட்டோம் என்று அடம்பிடிக்கிறார்கள்.
இருவரையும் எல்லைக்கோட்டினைக் கடந்து ஒரு இடைவழியில் சந்திக்க வைக்க முயற்சி எடுக்கும் அமைப்பு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கிறது. இவர்களுக்கிடையில் அகப்பட்டு தமது நேற்றுத் திட்டமிடப்பட்ட ஆபரேஷன் ரத்து செய்யப்பட்ட சுமார் 3000 பேஷண்டுகள் மற்றொரு திகதியை எதிர்நோக்கிக் கொண்டு எங்கே தமக்குத்தரப்படும் அடுத்த தேதியில் மற்றொரு வேலைநிறுத்தம் வந்து விடுமோ என்றஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள். வேலைநிறுத்தம் வெற்றியீட்டுவது என்றால் அதற்குப் பொதுமக்கள் ஆதரவு தேவை. இப்போது பொதுமக்கள் ஆதரவு டாக்டர்கள் பக்கம் இருந்தாலும் அது எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது தெரியாது என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
டாக்டர்கள் மனித உயிருக்கு உத்தரவாதம் அளிப்பவர்கள். சுமார் ஆறுவருட காலம் பல்கலைக்கழகத்தில் பயின்று அதன் பின்னால் தொடர்ந்து பல பயிற்சிகளில் தம்மை ஈடுபடுத்தி தாம் பெற்ற அறிவு அனைத்தையும் கொண்டு தம்மை நாடிவரும் மக்களின் பிணியைத் தீர்க்கும் அரும்பணி ஆற்றுவோர்கள் டாக்டர்கள். அவர்களுக்கான நியாயமான ஊதியத்தை வழங்க அரசு முன்வருமா ? அதைவிட்டு தன்னிச்சையாக ஒப்பந்த மாற்றத்தை டாக்டர்கள் மீது திணித்து விரக்தியில் இந்நாட்டு டாக்டர்கள் வேறுநாடுகளைத் தஞ்சம் அடைந்து விடுவார்களா? எனும் கேள்வி பல விற்பன்னர்கள் மத்தியில் ஊசலாடிக் கொண்டுள்ளது.
காலத்தின் பதிலுக்காய் காத்திருப்பதைத் தவிர வேறுவழியில்லை.
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
படம் உதவி:
http://static.standard.co.uk/s3fs-public/styles/story_large/public/thumbnails/image/2015/12/01/07/docs.jpg
www.standard.co.uk
”வண்டரி யென்றரி யாமலே வந்திரு
புண்டரி காட்ஷத்தைப் பார்க்கின்ற -பண்டரி
விட்டலா செங்கலை விட்டுவா வெவ்வினை
கொட்டுதே தேளாய்க் கடுத்து….
”நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
வளிசொல்லி வேணு விட்டலனை வாழ்த்தி
களிகொள் அடியார்தம் கூட்டு”….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
சிந்தையில் சிக்காத சச்சிதா னந்தமே
எந்தையே ஏகப் பரம்பொருளே, -விந்தையே,
தீராத ஆட்டத்தை, மாறாத தோட்டத்தில்,
சீராக ஆடிடும் சேய் ….
வெறும்வாயில் மெல்லும் அவலா கிடாது
குருவாயூ ரப்பா எனக்கும் -திருவாயால்
பாடிய நாரண பட்டர்க்குப் போட்டாற்போல்
போடுநீ ஆமாம்சா மி …
குருவாயூர் பிள்ளை திருநாமம் சொல்லி
வெறும்வாயை மெல்லு விடாது -வரும்நாளில்
பக்திஅவல் உண்டு பதிலுக்(கு) அளித்திடுவான்
முக்தியாம் செல்வம் மகிழ்ந்து ….
காயாம்பூ வண்ணத்தை கற்றோர்தம் எண்ணத்தை
ஆயர்தம் சின்னத்தை மண்ணையுன் -ஓயாத
மாயத்தை ஒப்பில்லா சீயத்தை நேயத்தில்
தாயொத்த தாயத்தைத் தேடு ….கிரேசி மோகன்….
பவள சங்கரி
தலையங்கம்
வருமான வரி ஒழிப்பு பற்றி உயர்மட்டக் குழு ஆலோசனை
இன்று பரவலாக பேசப்படும் வருமான வரி ஒழிப்பு பற்றி மகாராஷ்டிர மாநிலம் ஔரங்காபாத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் அர்த்தகிரந்தி பிரதிஸ்தன் என்ற தன்னார்வக் குழுவினரின் அறிக்கையின்படி வருமான வரி மற்றும், மத்திய மாநில அரசுகளின் முப்பது வகையான வரிகளை நீக்குதல் சம்பந்தமான செயல்பாடுகள் துணை உயர்மட்ட குழுவின் ஆய்வில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. இதே கருத்தை நம் வல்லமை தலையங்கத்தில் சென்ற 2014ஆம் ஆண்டே ‘புதிய நிதிநிலை அறிக்கையும், மக்கள் எதிர்பார்ப்பும்!’ (Saturday, June 7, 2014, 22:40) என்ற தலைப்பில் நாம் வெளியிட்டோம்.
அர்த்தகிரந்தியின் அறிக்கையின்படி ஒரு இலட்சத்து நாற்பதாயிரம் கோடி ரூபாய் அரசிற்கு வருமானம் வரும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆயினும் இத்திட்டத்தை இன்னும் விரிவாக செயல்படுத்தினால் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் இடையூறாக இருக்கும் விற்பனை வரியையும் முற்றிலும் நீக்கிவிடலாம். அதாவது வருமான வரி, விற்பனை வரி அலுவலகங்களின் அவசியமே இல்லாமல் போகும் என்பதால் அந்த அலுவலகப் பணியாளர்களை மாற்று வகையில் வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தினால் கையூட்டுகளும் குறைவதோடு வளர்ச்சிப் பணிகளும் பன்மடங்கு பெருகும். இதற்காக ஒவ்வொரு தனி நபரையும், பொது நிர்வாகங்களையும் தனிப்பட்ட முறையில் சோதனையிட்டு கண்டுபிடிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. ஒவ்வொரு மணித்துளியிலும் அரசிற்கு முழுமையான வருவாய் வந்து கொண்டிருக்கும். இதற்கு ‘பணப் பரிமாற்ற வரி’ என்றும் பெயரிடலாம். இதன் மூலம் அனைத்து வகையான பணப் பறிமாற்றங்களும் வங்கிகள் மற்றும் வங்கி அட்டைகள் மூலமாகவே நடைபெறும். இதனால் பல இலட்சம் கோடிகள் அரசிற்கு வருமானமாக அதிகரிப்பதுடன் செலவும் கணிசமாகக் குறையும். கருப்புப் பணமும் முற்றிலுமாக ஒழிக்கப்படும். கையூட்டு, அல்லது கட்சிகளுக்குக் கொடுக்கக்கூடிய அரசியல் நன்கொடைகளோ என அனைத்தும் வெளிப்படையாகவே இருக்கும். நாசிக்கில் அச்சடிக்கப்படும் ரூபாய் நோட்டுகள் 80 சதவிகிதம் குறையும். நாட்டின் பொருளாதார வளர்ச்சி கட்டாயம் 10 சதவிகிதத்தைத் தாண்டும் என்பதும் உறுதி. தொழில் துறையினர் எதற்கும் அஞ்சாமல் நேர்மையாக தமது தொழிலைக் கவனிக்கலாம். அதுபோல் ஏற்றுமதியாளர்கள், விவசாயிகளும் சிரமமின்றி தங்கள் தொழில்களை நடத்தும் வாய்ப்புகளும் பெருகும் என்பதிலும் ஐயமில்லை. தொழிலகங்களோ, தொழிலதிபர்களோ, என எவரும் எந்த ஏமாற்று வேலைகளிலும் ஈடுபட முடியாது. சிறப்பான நிர்வாகம், சிறந்த வளர்ச்சி என்று நாடு முன்னேற்றப் பாதையை நோக்கி பீடு நடை போடும். இதுபோன்று புதிய பொருளாதார சிந்தனைகளுக்கு ஊக்கமளித்தால் நாடு முன்னேற்றப்பாதையில் செல்வது உறுதி. இந்திய மக்களின் வளமான வாழ்க்கைக்கு வித்தாகவும் அமையும். இது மட்டுமன்றி பெரிதும் விவாதம் நடக்கும் ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிக்கு அவசியம் இல்லாமலும் போகும்.
பேராசிரியர் தெ. முருகசாமி
மேனாள் முதல்வர், இராமசாமி தமிழ்க் கல்லூரி, காரைக்குடி
(குறிப்பு: பாரீசைத் தலைமையகமாகக் கொண்டு, கனடாவிலும், துபாயிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் துவக்கப்பட்டுள்ளன. 08.02.2016 அன்று புதுச்சேரியின் “உலகத் தொல்காப்பிய மன்றம்” கிளையின் சார்பாக, “தொல்காப்பியம் ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள் “தொல்காப்பியத் தொடர்பொழிவு” நிகழ்ச்சிக்காக ஆற்றிய உரையின் சுருக்கம். மாதம் ஒரு தமிழறிஞர் உரை என்ற திட்டத்தில், தொல்காப்பியம் கற்றோர் அல்லாது பொதுமக்களையும் சென்றடையும் நிலை வரவேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறப்போகும் சொற்பொழிவுகளின் வரிசையில் முதல் பொழிவு இது. கொடுக்கப்பட்டுள்ள உரையின் சாரம் காணொளி மூலம் பெறப்பட்டது)
வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் என்று கூறுவது போல, தொல்காப்பியனை உலகினுக்கே தந்தது தமிழ். உலகினுக்கே தந்த என்று குறிப்பது தமிழின் சிறப்பு. ஞாலம் அளந்த மேன்மைத் தமிழில் ‘உலகினுக்கே தந்த’ என்ற அடைமொழியைக் கொடுப்பது, உலகம் சார்ந்த அடைமொழி ஒன்றைக் கொடுத்துப் பெருமைப்படுத்துவது தமிழ் மொழியில் காணப்படும் சிறப்பு.
தொல்காப்பியம் எழுத்தின் முடிபு நூல். எழுத்தின் முடிபானது நூல் என்பதைக் காட்டும் நோக்கில் முதல் நூற்பாவை எழுத்தில் துவங்கி, நூலே என்று தனது இறுதி நூற்பாவை முடிக்கிறார் தொல்காப்பியர். தொல்காப்பியர் வெறும் இலக்கண நூலாசிரியர் மட்டுமன்று, அவர் இலக்கண ஆசிரியர் என்ற நோக்கில் கண்டதால் தொல்காப்பியம் தரும் இலக்கிய, தத்துவ, அறிவியல் பற்றிய கூற்றுகள் மதிக்கப்படாமல் போனது. தொல்காப்பியம் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய நூல், திருக்குறள் போல பரப்பப்பட வேண்டிய ஒரு நூல் செந்நூல் தொல்காப்பியம். தமிழரின் தொன்மையைக் காப்பது என்ற பொருள் கொண்டது தொல்காப்பியம். தமிழர் பண்பாட்டின் தொன்மையைக் காப்பது தொல்காப்பியம்.
தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகியவற்றின் இலக்கணங்களைக் கூறுவது. உலக மொழிகளில் எழுத்துக்கும், சொல்லுக்கும் மட்டுமே இலக்கணம் வகுக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழிக்கு மட்டுமே வாழ்வியல் கருத்துகள் பொதிந்து கிடக்கும் பொருளதிகாரம் தொல்காப்பியரால் அமைந்தது. எழுத்துக்களால் ஆனது சொல். அந்தச் சொற்களுக்கான பொருள் மட்டுமல்ல, வாழ்வியல் இலக்கணம் வகுத்துக் காட்டிய பொருள் இலக்கணத்தைக் கொண்டு, வாழ்வியல் மரபை, ஒழுக்கத்தைக் காக்கும் முறையில் தொல்காப்பியம் என்ற பெயர் அமைந்தது.
ஒலி என்பது வரிவடிவ எழுத்தாகக் குறிக்கப்படுகிறது (phonological component of language), எழுத்துக்களின் கூட்டு சொல்லாக அமைந்தது (semantic component of language), சொற்களில் கூட்டு தொடர்கள் (syntactic component of language). தனித்தன்மையுடன் தொடரின் பொருளைக் காட்டுவதன் மூலம் மொழியை உயர்த்திக் காட்டுகிறது தொல்காப்பியம். தொல்காப்பியர் முதலிலேயே பெயர்ச்சொல், வினைச்சொல் என்று தொடங்கவில்லை. சொல்லதிகாரத்தின் ஐந்தாவது இயலைத்தான் பெயரியல் ஆக அமைத்துள்ளார். மொழியியல் அறிஞர்கள் வியந்து பாராட்டும் வண்ணம் தொல்காப்பியத்தில் கிளவியாக்கம்தான் முதலில் வரையறுக்கப்பட்டுள்ளது. மொழியின் வளர்ச்சி சொல்லாக இல்லாமல், சொற்கூட்டமாக, தொடராக அமைவது மொழிக்கு இன்றியமையாதது. இது தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியரால் உணரப்பட்டுள்ளது என்ற உண்மை தொல்காப்பியத்தில் தெரிகிறது. வரையறைகள் மூலம் மொழியின் பழமையை பாதுகாக்கும் தன்மை கொண்டது தொல்காப்பியம். தொல்காப்பியத்தில் மொழியின் வளர்ச்சிக்கும், மொழியின் வளர்ச்சியில் பங்கேற்கும் நூல்களுக்கும் இலக்கணம் காட்டப்படுகிறது.
மொழிபெயர்ப்பினால் மொழி வளரும் என்ற கருத்தை முன் வைத்தது தமிழே, மொழி இன்னொரு எல்லையைத் தொடும் பொழுது மொழியின் வளரும் தன்மை நிலைக்கும். தமிழை மொழிபெயர்த்தலும், தமிழுக்கு மொழிபெயர்த்தலும் மொழி வளர்ச்சிக்கு அடிப்படை. அதை மறந்து தமிழர் தளர்ச்சியுற்றதால் வங்கத்தின் தாகூர் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இலக்கிய நோபல் பரிசை வெல்லும் வாய்ப்பு கிட்டியது. தமிழர் அதில் தளர்ந்ததால் பாரதிக்கு அவ்வாய்ப்பு கிட்டவில்லை. தமிழை மொழி பெயர்க்க முனைந்த ஜி.யு. போப் நாலடிகளிலும், இரண்டடிகளிலும் வெண்பாக்களின் மூலம் பாடலில் உலகை அடக்கும் சிறப்பை, வாழ்வியலை அடக்கும் சிறப்பை வியந்து பாராட்டியுள்ளார். கடவுளை சிறப்பித்துக் கூறும் திருவாசகத்தின் மொழிபெயர்ப்பின் போது தமிழின் சிறப்பினை வியந்தார். தமிழின் சிறப்புகளை உலகிற்குக் கொண்டு செல்ல இத்தகைய மொழிபெயர்ப்பு முயற்சிகள் தேவை. இதனை முன்னரே உணர்ந்து சொன்னது தொல்காப்பியம்.
தொல்காப்பியம் காட்டும் கருத்துகளை தங்கள் நூல் முழுமையையும் பயன்படுத்தியவர்கள் வள்ளுவரும் கம்பரும். தொல்காப்பியர் எழுத்தின் வரிவடிவையும் காண்பிக்கிறார். உச்சரிப்புக்கும் இலக்கணம் உச்சரிக்கும் பாங்கை உணர்ந்து இலக்கணம் வகுக்கிறார். எழுத்துகள் சேரும் பாங்கினை எந்த எழுத்துடன் சேரும் சேராது என்றும் இலக்கணம் வகுக்கிறார்.
கிளவியாக்கம் என்பது சொல் ஆக்கம் பெறுவதை. வளர்வதைக் காட்டுவது. சொற்கள் எவ்வாறு ஆக்கம் பெறும் என்பதை எப்படி வளரும் என்பதைக் காட்ட, சொற்கள் தகுதியால் வளர்வதைக் காட்டலாம். ‘நெருப்பால் சுடு’, ‘நீரால் நனை’ என்பன சொற்கள் தகுதியால் வளர்வதைக் குறிக்கும்.
தகுதியும் வழக்கும் தழீஇயின ஒழுகும்
பகுதிக் கிளவி வரை நிலை இலவே.
மற்றொரு சொல்லின் அன்மை நிலையாலும் அமைந்து பொருள் காட்டும் தன்மை
தன்மை சுட்டலும் உரித்து என மொழிப
அன்மைக் கிளவி வேறு இடத்தான.
போன்ற இலக்கணங்கள் தொல்காப்பியரால் காட்டப்படுகிறது.
சொல் தொடர்ச்சிதான் மொழிக்கு இன்றியமையாது என்று கண்டறிந்தவர் தொல்காப்பியர். விளி மரபு – அன்மை விளி சேய்மை விளி போன்ற விளிக்கும் நிலைகளில் சொற்கள் எவ்வாறு அமையும் எனச் சொல்லதிகாரத்தில் விளிமரபு காட்டப் படுகிறது.
வாழ்க்கையே ஒரு இலக்கணம் என்பதைப் பொருளதிகாரத்தில் வகுத்தவர் தொல்காப்பியர். தவத்திரு குன்றக்குடி அடிகளார் கூறும் பொழுது,
வாழ்க்கைக்குப் பொருள் (wealth) தேவை
வாழ்வும் பொருளுடையதாக(meaningful life) இருக்க வேண்டும் என்பார்.
அந்தக் கோணத்தில் சிந்தித்தவர்கள் தமிழர்கள். அந்தச் சிந்தனைக்கு தலைப்பாகை கட்டியவர் தொல்காப்பியர். வாழ்வு பொருளுடன் அமைய வாழ்வியல் அமைத்தார். மனிதன் விலங்கினப் பண்புகளைத் தவிர்த்து, அவற்றில் இருந்து வேறுபட்டு, எவ்வாறு வாழவேண்டும் என்ற மரபைக் கட்டமைத்துக் காட்டுகிறது பொருளதிகாரம். ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பதைப் பதிவு செய்கிறது, வரையறுக்கிறது, அதைக் காக்கிறது தொல்காப்பியம். இதனைச் சரியாக புரிந்து கொள்ளாதவர்கள் தொல்காப்பியத்தை ஆழ்ந்து கற்காதவர்கள்.
முதல் கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலும் காலை முறை சிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடும் காலை.
காலம், இடம், செயல் சேர்ந்தது இயக்கம், அது ஓர் இலக்கியக் கொள்கை. முதற்பொருள், கருப் பொருள், உரிப்பொருள் என்கிறது தொல்காப்பியம்.
இப்படித்தான் வாழவேண்டும் என்ற வாழ்வியலை வரையறை செய்வது, வாழ்வியல் வகுப்பது பொருளதிகாரம். “எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉம் மேவற்றாகும்” என்ற தொல்காப்பியம் இன்பத்திற்கும் வரையறை காட்டியது. பழந்தமிழர் எல்லோரும் பரத்தையர் தொடர்பு கொண்டிருந்ததாகக் காட்ட வருவதல்ல தொல்காப்பியம். ஒன்பது இயலைக் கொண்ட தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் முதலில் வருவது அக வாழ்வை வரையறுக்கும் ‘அகத்திணையியல்’
கற்பு வாழ்க்கை வாழும் காலத்தில் தலைவன் தலைவியைப் பிரிந்து மேற்கொள்ளும் பிரிவுகள் ஓதல், காவல், தூது, துணைவயின் பிரிவு, பொருள்வயின் பிரிவு, பரத்தையிற் பிரிவு என ஆறு வகையாகக் காட்டப்பட்டாலும், அகத்திணையியலில் ஐந்து பிரிவுகள் மட்டுமே குறிக்கப்படுகிறது. பரத்தையர் பிரிவோ, குறிப்போ அகத்திணையியலில் இல்லை. ஆனால் இந்த ஆறு பிரிவுகளும் பின்னர் பொருளியலில் காட்டப்படுகிறது. பரத்தையர் பிரிவைப் பற்றி பொருளியலில் குறிப்பிடும் தொல்காப்பியர் அகத்திணையில் அதனைக் குறிப்பிடவில்லை. அகத்திணையில் அவர் குறிப்பிடாததன் மூலம் அகத்திணை வாழ்க்கையின் அடிப்படை ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்பது காட்டப்படுகிறது. தலைவன் கூற்று என்பதில், பரத்தையில் பிரிந்து மீண்டு பேசுதல் காணப்படுகிறது. ஆனால் ‘அகத்திணையியல்’ பரத்தையருடன் கொண்ட வாழ்வு பற்றி சொல்லவில்லை.
பொருள் தேட செல்லும் பொழுது தலைவனின் எட்டு வகை மனத்தடுமாற்றம் காட்டப்படுகிறது. களவியலில் ஒத்த கிழவனும் கிழத்தியும் பத்து ஒத்த பண்புகள் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்படுகிறது. மேலும், பொருத்தமில்லாத குணங்களாக 12 குணங்கள் காட்டப்படுகிறது. அதில் பன்னிரண்டாவதாக வாழ்க்கைத்துணையை பிறிதொருவருடன் ஒப்பிட்டுப் பேசக்கூடாது என்பதை ஒப்புமை கூடாது என்றும் தொல்காப்பியம் சொல்கிறது. எனவே எடுத்துக்காட்டாகக் கொடுக்கும்பொழுது தடம் மாறிய வாழ்க்கையை எடுத்துக்காட்டாகச் சொல்லக் கூடாது.
வாழ்க்கை என்பதும் ஒரு இலக்கணம், அதன் சாரம் ஒழுக்கம். ஒரு மொழி என்பது தனது எல்லையையும் கடந்து தாண்டுகிற பொழுதுதான் வாழ்வியல் மொழியாக ஆக்கமும் ஊக்கமும் பெற்று வளர்ந்து வாழ்க்கைக்கு உரிய மொழியாகிறது. அது வாழ்க்கைக்கும் இலக்கணமாகிறது. வாழ்க்கையின் மொழி அதன் எல்லையைத் தாண்ட வேண்டும் அதுவே வளர்ச்சிக்கு அறிகுறி. தொல்காப்பியத்தைப் புனித நூல் என்ற புதிய நோக்கினை கொள்ள வேண்டும். திருக்குறளுக்குச் சூட்டும் அத்தனை மகுடமும் தொல்காப்பியத்திலும் உள்ளது. அதன் சிறப்பினை உணர்ந்து இலக்கணநூல் என்ற நோக்கினைத் தவிர்த்து அது காட்டும் வாழ்வியல் கோணத்தை அறிந்து கொள்ளவும் தேவை.
எம் . ஜெயராமசர்மா .. மெல்பேண் … அவுஸ்திரேலியா
சமயத்தின் சாறாய்நின்று சரித்திரம் படைத்த வள்ளல்
இமயத்தின் உயரமாகி இகத்துளோர் மதிக்க நின்றார்
சமயத்தை மட்டுமின்றி சமூகத்தை மனதிற் கொண்டு
சன்மார்க்கம் உணர்த்திநின்ற சங்கரர் தாழ்கள் போற்றி !
மாசறு மனத்தனாகி மாண்புறு செயல்கள் ஆற்றி
பூசைகள் தாமுமாற்றி பூதலம் சிறக்கச் செய்தார்
வாசனை பரப்பிநிற்கும் மறுவற்ற மலராய் நின்ற
ஈசனின் தோற்றமிக்க எந்தையின் நாமம் வாழ்க !
தெய்வத்தின் குரலைத்தந்து தீமைகள் அகன்றே போக
வையத்தில் வாழ்ந்துநின்ற மாமணி அவரே ஆவர்
சொல்லிலே சுவைகள் சேர்த்து சுருதியின் கருத்தும்சேர்த்து
நல்லதைச் சொல்லிச் சென்ற நாயகன் நாமம்வாழ்க !
நீண்டதோர் காலம்வாழ்ந்தார் நிமலனை மனதிற் கொண்டார்
பூண்டநல் விரதத்தாலே புவியிலே புனிதர் ஆனார்
ஆண்டவன் அவரேயென்று அனைவரும் தொழுது ஏற்ற
அருங்குணங் கொண்டுநின்ற அவர்நாமம் என்றும் வாழ்க !
இல்லறம் துறந்தயெந்தை ஏகினார் இறை தொண்டாற்ற
நல்லறம் ஆற்றி நிற்க நயமுடன் பலதைச் சொன்னார்
சொல்லறம் காத்து நிற்க தூய்மையைய மனதில் கொண்ட
தொல்லறம் மிக்க எங்கள் தூயவர் நாமம் வாழ்க !
ஊரெலாம் எந்தை சென்றார் உபதேசம் ஆற்றிநின்றார்
பாரெலாம் பண்பு ஓங்கப் பாதங்கள் பதியச்சென்றார்
வாரங்கள் மாதங்களாக மக்களின் இடத்தே சென்று
வேதங்கள் சாரம்தன்னை விளக்கிய வள்ளல் வாழ்க !
ஆற்றிய உரைகள் யாவும் அனைத்துமே வேதமாகும்
சாற்றிய மேற்கோள் யாவும் தத்துவக் குவியலாகும்
சேற்றிலே கிடந்த மக்கள் செழுமையாய் வாழவெண்ணி
நாற்றென நின்ற ஆசான் நாமத்தைப் போற்றிநிற்போம் !
ஆசியநாட்டில் தோன்றி அனைவரும் போற்ற நின்றார்
பேசிய வார்த்தை எல்லாம் பெரும்பயன் பெற்றதாகும்
காசினி உள்ளார்மீது கருணையைப் பொழிந்த வள்ளல்
ஆசியை வேண்டிப் பல்லோர் அவரடிபணிந்தே நின்றார் !
புத்தராம் யேசுகாந்தி புனிதராம் நபிகள் தோன்றி
தத்துவம் உரைத்த நாட்டில் சங்கரர் தோன்றிநின்றார்
அத்தனை பேர்க்கும் மேலாய் அவர்பணி ஓங்கிற்றென்று
நித்தமும் நினைப்பதாலே நிற்கிறார் நிலைத்து என்றும் !
எளிமையைச் சொந்தமாக்கி இனிமையை மனதில் தேக்கி
தனிமையில் இறையைநாடித் தவநிலை கொண்ட வள்ளல்
அழிவுடை எண்ணம்போக அறிவினை ஊட்டி எங்கும்
நிறைவுடை மனத்தைநாட நின்றவர் நாமம் வாழ்க !