Month: August 2016

  • சுகவனம் 3

     

    -இன்னம்பூரான்

     

    sukavanam

     

    மேற்படி நிறுவனத்தின் நீண்ட ஆய்வின் பயனாக வெளியிடப்பட்ட மற்ற அறிவுரைகள்:

    1. சுகவனம் 2-இல் கூறப்பட்டது.
    2. Keep Active: உங்களுக்கு ஆர்வமுள்ள துறைகளில் என்றென்றும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வது நலம் பயக்கும். எறும்பு சுறுசுறுப்பாக இயங்குவதை நாம் காண்கிறோம். ஆண்சிங்கமோ படு சோம்பேறி. புலியை விட வேங்கையின் வேகம் அதிகம். மற்ற ஆய்வுகளும் சோம்பிக்கிடக்காமல், பல அலுவல்களில் இயங்கும் மானிடரை வியாதிகள் அணுகுவது குறைவு என்று பல்லாண்டுகளாக அறிவித்து வந்துள்ளனர்.
    3. Eat Well: உணவே மருந்து. அதைத் தக்கதொரு முறையில் தயாரித்து நன்றாக உட்கொள்வது நல்லது. அறுசுவை உண்டி அளிக்கும் சுவை போற்றத்தக்கது என்றாலும் சிறிய அளவில், இனிப்பையும், உப்பையும், எண்ணெயையும் குறைத்து, காய்கறிகளையும், பழவகைகளையும் உட்கொள்வது நலம். ஆய்வு செய்தவர்களில் பேலியோ டயட்டார்கள் இருந்திருக்கலாம். மாமிசம் உண்போரும் உணவை நல்ல வகையில் உண்ணலாம் -முட்டை,மீன், கோழிக்கறி என்று. அதை குறை சொல்வதற்கு இல்லை.
    4. Drink Sensibly: மேல்நாடுகளில் பெரும்பாலோர் மது அருந்துபவர்கள். அவர்களின் கலாசாரத்தில் அது ஒரு அங்கம் வகிக்கிறது. அதனால் தான் இந்த அறிவுரை. நம் நாட்டில் குடிமயக்கம் அடிக்கடித் தென்படுகிறது. போன வருடம், ஒரு பயணத்தில் ஒரு டாஸ்மாக் கடை ‘வாழ்க வளமுடன்’ என்ற விலாசம் படைத்த வாடகைக் கட்டிடத்தில். அதன் வாசலில் அலங்கோலமாகக் கிடந்தனர், குடிமகன்கள். ‘வாழ்வே மாயம்’ என்று நினைத்துக்கொண்டேன்.
    5. Keep in touch: மனிதனின் இயல்பு சுற்றத்துடன் வாழ்வது. அது குடும்பம், கூட்டுக்குடும்பம், சுற்றம், நண்பர்கள், ஊர், மாநிலம், நாடு, உலகம் என்று பல பரிமாணங்கள் கொண்டது. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், சுயமரபுகள் முட்டுக்கட்டை போட்டாலும், கூடி வாழ்வது நலம் பயக்கும்.
    6. Ask for Help: தட்டுங்கள். கதவு திறக்கப்படும். மற்றவர்களுக்கு உதவுவது ஒரு கலை. திறந்த மனம் வேண்டும். உதவும் மனப்பான்மை வேண்டும். அது உகந்த முறையில் இயங்கப் பயிற்சி பெறவேண்டும். இந்த விஷயத்தில் இங்கிலாந்தில் 80 வருடங்களாக, நாடெங்கும் சராசரி மனிதர்களால், குறிப்பாக, குடும்பத்தலைவிகளால், தன்னார்வத்துடன் இயங்கும் மக்கள் ஆலோசனை மன்றத்துக்கு இணை உலகில் எங்கும் கிடையாது. எனது மனநிறைவுடன் இயங்கும் அமைதி வாழ்க்கை அதற்கு நிரூபணம்.
    7. Take a Break: அவ்வப்பொழுது ஓய்வும், மனமகிழ்ச்சி நிகழ்வுகளும் மிக்க உதவும் என்பது யாவரும் அறிந்ததே.
    8. Do something you are good at: எது செய்தாலும், தனக்கு உகந்ததைச் செய்வது எளிது; நிறைவு தரும். மற்றவர்களுக்கும் உதவும், நான் இந்தத் தொடரில் இறங்கியது போல.
    9. Accept who you are: ஒருவர்போல் ஒருவர் இருப்பது இல்லை. காந்திஜி ‘கத்தியின்றி, ரத்தமின்றி…‘விடுதலைப் புரட்சி நடத்தினார். தமிழ்த்தாத்தா தமிழ் மணத்துடன் வாழ்நாளைக் கடத்தினார். பாமரனும் நல்லாட்சி புரியமுடியும் என்பதைக் காமராஜர் நடத்திக்காட்டினார். அவரவர்கள் இத்தகைய பட்டியலைத் தயார் செய்து கொண்டு, தன்னிலை விளக்கம் அளித்துக்கொள்ளலாம்.
    10. Care for others: சொல்லித் தெரிவதில்லை, மனித நேயம். தொடரின் இறுதி கட்டத்தில் இது விவரமாகப் பேசப்படும்.

    -#-

    சித்திரத்துக்கு நன்றி:

    http://images.fineartamerica.com/images-medium-large/ebullience-regina-valluzzi.jpg

    Mental Health Foundation Copyright © 2016.

    ***

    இன்னம்பூரான்
    http://innamburan.blogspot.co.uk
    http://innamburan.blogspot.de/view/magazine

    Share
  • கண்ணா! மணிவண்ணா!

    பவள சங்கரி

    9683172469_b013279de8_z

    கண்ணா! மணிவண்ணா! தத்துவஞான ஒளியே!
    மாயமாய் மனதினூடே ஒளிருமணியே!
    சேயே யானுனை நெஞ்சாரத் தழுவிடவே
    சேவடியைத் தொழுதிடவே வாடாயென் மன்னா!

    கொல்லன் உலையெனக் கொதிக்குமென் மனமே
    நில்லெனக் கருணைகூர்ந்து வரமொன்றருள்வாயே
    கல்லென்ற இதயம்கொண்டு எனைக் காணாமல்
    கொல்லெந்தன் பாவம்யாவும் பரம்பொருளோனே!

    ஊற்றைச் சடலமிதை உய்யும் வழியறியா உயிரிதை
    தரணிகாப்போன் தள்ளிநின்றே பார்ப்பதென்னே
    பைம்பொழில் மாதவனே பரிதவிக்கும் ஏழையெனை
    கடைக்கண்ணால் பார்த்தருளுமய்யா!

    Share
  • வாழ்வே இதுதான்!

     

     

    பாடல்: ஆர்.எஸ்.மணி (கனடா)

    மெட்டு, பின்னணி இசை: கிஷோர் குமார் பாடிய ஹிந்தி பாட்டு

    —————————————————————————————

     

    வாழ்வே இதுதான்: சுழலும் உலகம்

    இரவும் பகலும் வருமே மாறியே                      (வாழ்வே)

            காலை ஒளியும் மாலை இருளும் (2)

            உறவும் முறிவும் வருமே மாறியே              (வாழ்வே)

     

     

            சுற்றம் என்ன சூழல் என்ன

                    நிலையானதாகுமோ (2)

            சொந்தம் என்ன பந்தம் என்ன

                    செல்லாமலே நில்லுமோ?

                            ஒரு நாள் இன்பம் ஒரு நாள் துன்பம்

                            மாறாதே இக் கோலம்              (வாழ்வே)

     

     

            கன்னி என்ன காதல் என்ன

                    வண்ணமெல்லாம் மாறுமே             (கன்னி)

            பாசம் என்ன நேசம் என்ன

                    வந்து பின்னே போகுமே

                            ஒரு நாள் இங்கே ஒரு நாள் அங்கே

                            எங்கே எந்தன் வீடும்                (வாழ்வே)

     

    —————————————————————————-

    mani

    In 1996 I did a water-colour painting of a tribal woman.
    It was displayed in an art exhibition.
    A doctor from Germany, who was visiting Canada, 
    bought the painting from me.
    Fortunately I have a photograph of the painting.
     
     

     

    Our life is in constant flux. No one can stop the changes taking place in the body. And old age is inevitable. But there is light at the end of the tunnel!

    R.S.Mani

    Share
  • இத்தாலியில் திடீரென நேர்ந்த பெரிய பூகம்பம்

    Earthquake Location 2016 August


    Image 2016 Aug

     சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா
     fig-1-italy-earthquake-disasterபூமித்தாய் குலுக்கித்
    தோள சைத்தாள் ! இடிந்து
    தாமாக வீழ்ந்தன
    மாளிகைகள் !
    தரை மட்ட மாகின
    கட்டடங்கள் !
    சட்டென மக்கள்
    சடலமாய்ப்  புதைந்தார் !
    கடற்தட்டு கால் உதைத்தால்
    படை யெடுக்கும் சுனாமி அலைகள்  !
    அடித்தட்டு தொடை அசைந்தால்
    இடித்திடும் அதிர்வுகள் !
    நிலம்நடுங்கி
    நடனமிடும்  புவித்தளம் !
    குடற் தட்டு கூத்தாடி
    உடல் நடுங்கும், உயிர் நசுங்கும் !
    நிலையாமை மெய்யாகும் !

    ++++++++++++++++

    Image 2016 Aug -1

    Image 2016 Aug -2

    எங்கெங்கு வாழினும்
    இன்ன லப்பா !
    ஏழு பிறப்பிலும்
    தொல்லை யப்பா !
    மனிதப் பிறவிக்குப்
    பாதுகாப்பகம்
    ஏதுவும்
    இல்லை யப்பா  !
    சூழ்வெளி மட்டும்
    மாசோ  டில்லை யப்பா !
    ஆழ்ந்த பூமிக் குள்ளும்
    ஊழல் மண்டி
    ஊர்ந்து செல்லும்
    புற்று நோய்க ளப்பா !
    ஊழிக் கூத்தின்
    பிரளயக் கோரம் உலகெங்கும்
    அரங்கே றுதப்பா !

    +++++++++


    Image 2016 Aug -3

    Image 2016 Aug -4

    “பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது !  பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன!  பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன!  கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப்படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன”.

    டாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]



    Image 2016 Aug -5

    Image 2016 Aug -6

    உலுக்கிச் செல்லும் ஊழியின் கை
    உலுக்கி உலுக்கி மேற்செல்லும் !
    அழுதாலும், தொழுதாலும் அயராது அதன் கரம் !
    உலுக்கி உலுக்கி மீண்டும் உலுக்க வரும் !

    புதிய உமர் கையாம்


    Image 2016 Aug -7
    Image 2016 Aug -8

    Image 2016 Aug -9

    fig-1c-earthquake-death-zones1

    இத்தாலிய நாட்டின் மத்தியப் பகுதியில் மாபெரும் பூகம்பம்

    2009 ஏப்ரல் 6 ஆம் தேதி மத்திய இத்தாலியில் ரோமாபுரிக்கு 60 மைல் (100 கி.மீ) தூரத்தில் உள்ள லாகுயிலா (L’Aquila) என்னும் நகரில் (5.8 – 6.3) ரிக்டர் அளவுப் பூகம்ப அதிர்ச்சிகள் நள்ளிரவில் ஏற்பட்டுக் கட்டடங்கள் தகர்ந்து தூங்கிக் கொண்டிருத்த மக்கள் பலர் மீண்டும் எழ முடியாமல் மாண்டு போயினர் !  இல்லங்களை இழந்தோர் 28,000 (?) பேர் என்றும் 18,000 பேர் தற்காலியக் கூடாரங்களில் குடியுள்ளார் என்றும் சுமார் 10,000 பேர் கடற்புற விடுதிகளில் தங்கி இருக்கிறார் என்று அறியப்படுகிறது.  இறந்தவர் எண்ணிக்கை 280 (ஏப்ரல் 9) என்றும், காண இயலாமல் இன்னும் தகர்ந்த கட்டடங் களுக்குள் புதைந்து போனர் எத்தனை பேர் என்றும் யூகிக்க முடியாத நிலையில் தர்ம சங்கடமாய் இருந்து வருகிறது !  மாண்டவரில் பெரும்பாலோர் 13 ஆம் நூற்றாண்டு மலைச்சிகர நகரமான லாகுயிலா பகுதியைச் (ஜனத்தொகை : 70,000) சேர்ந்தவர்கள்.

    aj

    இடிந்த இல்லங்களின் எண்ணிக்கை 3000 முதல் 10,000 வரை இருக்கலாம்  ! காயமடைந்தோர் எண்ணிக்கைச் சுமார் 1500 என்று கணிக்கப் படுகிறது.  முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கிய இந்த பூகம்பத்தால் பல்வேறு இல்லங்கள், மாளிகைகள், சரித்திரப் புகழ் பெற்ற கிறித்துவ ஆலயங்கள் பல இடிந்து வீழ்ந்தன.  இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி (Sivio Berlusconi) 2009 நிதிமுடக்கக் காலத்து நெருக்கடி யால் அபாயத் தேவைக்குப் பணக்கடன் தேடி அலைந்தார் !  இத்தாலியின் மற்ற இடங்களில் பணிபுரியும் மருத்துவ டாக்டர்களும் பணிப்பெண் நர்ஸ்களும் லாகுயிலா நகர்ப் பகுதிக்கு அழைக்கப் பட்டார் !  அதே சமயம் அவரது அரசாங்கம் பெயர்ச்சி அடைந்த மக்கள் நிவாரணப் பணிகளுக்கு 30 மில்லியன் ஈரோ உதவி நிதியை (40.6 மில்லியன் டாலர்) அளிக்கும் என்றும் அறிவித்தார்.  அத்தோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகள் புரிய 1000 இராணுவப் படையினரை அனுப்ப ஏற்பாடு செய்தார்.

    fig-1b-the-faulty-tectonic-plates-under-italy

    இத்தாலியின் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்

    1980 இல் இதற்கு முன் ஏற்பட்ட இத்தாலியின் 6.5 ரிக்டர் அளவு பூகம்பத்தில் 2735 பேர் கொல்லப் பட்டார் !  2009 ஏப்ரலில் தாக்கிய பூகம்ப ஆட்டத்திலும் அதற்குப் பிறகு நேர்ந்த பின் அதிர்ச்சிகளில் (Aftershocks) இடிந்து போன கட்டடங்கள் அநேகம்.  காரணம் அவற்றில் பெரும்பான்மையான வீடுகளின் ஆயுட் காலம் நூறாண்டுகளைத் தாண்டியவை !  இத்தாலியின் மத்தியில் சுமார் 26 நகரங்கள் மற்றும் பக்கத்து ஊர்களில் உள்ள இல்லங்கள் பல இடிந்து வீழ்ந்தன !  லாகுயிலா நகரைச் சுற்றியிருந்த பல கிராமங்கள் தகர்ந்து ஏறக்குறைய தரை மட்டமாயின !  லாகுயிலா நகரில் மூன்றில் இரு பங்கு கட்டடங்கள் முறிந்து பிளந்தன !  அவற்றில் பொதுவாக மருத்துவ மனைகள், பல்கலைக் கழகத்தின் விடுதிகள், பெரிய ஹோட்டல் ஒன்றும் அடங்குகின்றன.

    நிவாரண உதவிப் பணிகள் செய்ய சுமார் 7000 இத்தாலியர் உழைத்தாக அறியப்படுகிறது.  பூகம்பத்தால் நேர்ந்த பொருட் சேதாரங்களின் மதிப்பீடு சுமார் 2 முதல் 3 பில்லியன் ஈரா (1.5-2.2 பில்லியன் டாலர்) என்று யூகிக்கப்படுகிறது.  இத்தாலியின் உற்பத்தி விற்பனை நிதி சுமார் 1.5 டிரில்லியன் ஈரோ (1 டிரில்லியன் =1000 பில்லியன்).  முதல் பேரிடிப் பூகம்பத்திற்குப் பிறகு ஏற்பட்ட பின்னதிர்ச்சிகளில் பிழைத்த கட்டடங்களும் அடுத்துப் பிளந்து போயின.  அந்த அதிர்ச்சி ஆட்டங்கள் 60 மைலுக்கு அப்பாலிருந்த ரோமாபுரியிலும் எதிரொலித்தன !  அதில் தீவிர நில அதிர்ச்சி 5.6 ரிக்டர் அளவானது.

    fig-2-earthquake-force-in-tnt

    காப்பாற்றப்பட்டோர் விபரங்களில் சில விந்தையானவை !

    1.  முப்பது மணி நேரங்கள் அடைப்பட்டுப் பிழைத்துக் கொண்ட 98 வயதான ஒரு கிழவி லகுயிலாவில் காப்பாற்றப்பட்டு வெளியே கொண்டுவரப் பட்டார்.

    2.  நான்கு மாணவர் தகர்ந்து போன பல்கலைக் கழக விடுதிகளில் ஒன்றில் அடைபட்டுக் கிடந்ததை தீயணைப்புப் படையினர் கண்டுபிடித்தார்.  ஆனால் அவர்கள் உயிருடன் மீட்கப் பட்டாரே அல்லது மாண்டு போனாரா என்பது தெரியவில்லை.

    3.  22 மணி நேரங்கள் இடிந்த கட்டடத்தில் முடங்கிப் போன 23 வயது மாணவன் ஒருவன் உயிருடன் மீட்கப் பட்டான் !

    4.  லாகுயிலா மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளில் நீர் வசதி முழுவதும் நிறுத்த மடைந்தது !

    fig-1e-italian-zone-tectonic-plates-movements

    இத்தாலியில் பூகம்பம் எழுப்பும் அடித்தட்டு நகர்ச்சிக் கோளாறுகள்

    (Plate Tectonics Faults)

    அசுரப் பூகம்பம் ஒன்று வரப் போகிறது என்று அபாய முன்னறிவிப்பு செய்யும் சாதனம் ஒன்று இன்னும் 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட வில்லை !  எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது !  சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து முன்னெச்சரிக்கை  இப்போது செய்ய முடிகிறது ! ஆனல் பூகம்பக் ஏற்படுவதற்குச் சற்று முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று இன்னும் உருவாக்கப் படவில்லை என்பதை விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள வேண்டும் !

    fig-1e-seismic-sensors

    மாபெரும் அட்லாண்டிக் கடலின் விளிம்பில் அடித்தட்டுகள் ஒன்றின் கீழ் ஒன்று புகுந்து அழிக்கப் பட்டதால் (Subduction) மேற்கு மத்திய தரைக்கடல் அடித்தட்டு நகர்ச்சிக் கோளாறுகள் (Plate Tectonics Faults) மிகவும் சிக்கலாகப் போய் விட்டன !  ஆ·பிரிக்கா ஐரோப்பா ஆகிய இரண்டின் அடித்தட்டுகள் ஒருபோக்கில் ஒருங்கே நகர்வது அதற்கொரு காரணம் !  கடந்த 40 மில்லியன் ஆண்டுகளாக அப்பகுதியின் கடல் அடித்தட்டு யாவும் “பின் வளைவுப் பரவலில்” (Back-Arc Spreading) உண்டானவை !  காரணம் படத்தில் செந்நிறத்தில் காணப்படும் கோடு ஸிசிலி மூலமாகச் சென்று வட ஆ·பிரிக்காவில் முடிந்து மோதிக் கொள்ளும் அரங்கம் (Collision Zone) ஐரோப்பாவுக்கு அப்பால் தென்புறம் நோக்கிச் செல்கிறது !  ஆதலால் அந்த அடுத்தட்டுகள் அகண்ட அரங்குகளில் மோதுவதாகத் தோன்றினாலும் பொதுவாக அவை இத்தாலியின் உட்புற நிகழ்ச்சியாகவே பாதிக்கின்றன.

    fig-3-plate-tectonics-in-north-america

    இத்தாலியின் “அப்பெனைன் மலைத் தொடரை” ஆக்கிய அடித்தட்டு நகர்ச்சியே (The Crustal Plates that formed Italy’s Apennine Mountains) அம்மலைத் தொடரின் ஒரு பகுதியைச் சரித்ததாகவும் தெரிகிறது.  மஞ்சள் நிற ஆ·ப்பிரிகன் அடித்தட்டும் செந்நிற அனடோலின் அடித்தட்டும் ஒன்றை ஒன்று நெருக்கி கிரே வண்ணத்தில் உள்ள யுரேசியா அடித்தட்டைக் காற்று வெளியில் தள்ளுகிறது.  அதாவது மரப்பலகைத் தளம் ஒன்றில் ஒரு கார்ப்பெட்டைப் பக்கவாட்டிலிருந்து தள்ளுவது போன்றது.  மேற்குப் பக்கத்தில் மலைகள், ஈர்ப்பியல் விசை கீழ் இழுத்து அடித்தட்டு நகர்ந்து நழுவிச் செல்கின்றன.  பூகம்பத்தால் நேரும் இந்த மலைகளின் மோதல்கள் பூதள ஆட்டங்களை உண்டாக்கிப் பின்னதிர்ச்சிகள் தொடர்ந்து நேப்பிள்ஸ் வரையும் செல்கின்றன !

    fig-4-the-himalayan-fault-line

    இமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்

    விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது!  பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது.  குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவிக்கிறார்கள்!  இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது.  2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது!  2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்!  அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.

    fig-5-the-indian-plate-monitoring-satellite

    நிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்

    பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது!  பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது!  நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது!  ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!  வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன!  அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது!  இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன!  தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளையாடல்கள்!

    fig-5-indo-eurasian-plate-movements

    அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது!  இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது!  அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன.  இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது!  இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலிஃபோர்னியாவின் ஆண்டிரியா பழுது,  இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.

    major-earthquakes-1

    தகவல்:

    1. Time Magazine Article, “Nightmare in the Mountains,” By: Tim McGrik (Oct 24, 2005)
    2. The Kashmir Earthquake By Washington Post (Oct 12, 2005)
    3. Himalayan Tectonic Setting Earthquake Program.
    4. Earthquake History & Scismicity in the Northwest Region of Indian Sub-continent. [http://asc-india.org/scismic/pakistan.htm]
    5. New York Times -As Pakistan Reels, Musharraf Pleads for International Aid By: Somini Sengupta
    (Oct 8, 2005)
    6. Quake Homeless in Urgent Need of Tents By: Martin Regg Cohn, Asia Bureau (Oct 17, 2005)
    7. (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401222&format=html(Earthquake in Gujarat)
    7 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401292&format=html(Earthquake in Mexico City)
    7 (d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401082&format=html(Major Earthquake in Iran)
    7 (e) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40510211&format=html(Earthquake in Himalayan Zone) (October 21, 2005)
    8. Techtonics in Italian Earthquake By Chris Rowan Geologist (April 6 2009)
    9.  Italian Earthquake Death Toll Rises to 260 & 28,000 Homeless By Reuters Alertnet (Apr 8, 2009)
    10. BBC News Aftershock Hits Italy Quake Zone (April 7, 2009)
    11. Rescue Workers Preparing for Surgical Operation on Buildings (April 7, 2009)
    12 News Desk – Italy Earthquake 2009 -Worst Quake Since 1980 (April 7 2009)
    13 Guardian UK : Italy Earthquake : Stricken L’Quila Suffers Again as Aftershocks Hit By John Hooper (April 7, 2009)

    14. https://en.wikipedia.org/wiki/List_of_earthquakes_in_Italy  [August 24, 2016]

    Share
  • கண்ணன் பிறந்தான்

     
    ரா.பார்த்தசாரதி

     
    இராமன் பிறந்தது நவமி தினத்திலே
    கண்ணன் பிறந்தது அஷ்டமி தினத்திலே,

    இராமனும், கிருஷ்ணனும் இரு அவதாரங்களே
    உலகில் அநீதியை அழித்த தெய்வங்களே

    ஒருத்தி மகனாய் சிறையில் பிறந்தான்
    ஓர் இரவில் மாறி கோகுலத்தில் வளர்ந்தான்

    சிறு வயதில் பல லீலைகள் புரிந்தான்
    சிறு விரலால் மலையை குடையாகப் பிடித்தான்

    ஆநிரை மேய்த்து கோபாலகிருஷ்ணன் என பெயர்பெற்றான்
    மலையை குடையாக பிடித்ததால் கிரிதரன் என அழைக்கப்பட்டான்

    மஹாபாரதத்தில் அர்ச்சுனனுக்கு தேர் ஓட்டினான்
    கீதை என்னும் வேதத்தை உபதேசித்தான்

    இராமன் தன்னுடன் பலரை சொர்க்கத்திற்கு அழைத்துச்சென்றான்
    கண்ணனோ வேடன் அம்பு பட்டு தனியே சொர்க்கத்திற்கு சென்றான் 

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav
    ”என்னதவம் செய்தார் யசோதையார் ஏந்திட
    தின்னதை   காட்டும்  திருடனை: -முன்னம்
    உலகேழை உண்டுமிழ்ந்த  உத்தம சேயால்
    கலகாளி மாயை  கலைப்பு’’….கிரேசி மோகன்….!
    கலகாளி(கலகம் புரி ப்ருகிருதி மாயை காளி….பிரயோகம்தான்….சரியில்லை என்றால்)
    பலகால மாயை பறப்பு’’(கண்ணன் பிறப்பில் காளி பறப்பு)….!

    “பரம்பொருள்பால் காரன் ,அறம்பொருள் இன்பம்
      வரம்தரும் காவலன், வீடு -தரும்அருள்
      நூல்படித்தான் அன்னைக்கு(முன்பு கீதை),பால்கொடுத்த அன்னைக்கு(தாய்க்கு)
      பால்வெளி(MILKY WAY) காட்டிப் பிறப்பு(கோகுலாஷ்டமி)”….கிரேசி மோகன்….

     

    Share
  • உன்குழல் கானம்

    -மீ.விசுவநாதன்

     

    baby-krishna

     

    பாடுறேன் பாடுறேன் பல்லாண்டு – என்
    பல்லாங் குழிமனச் சொல்லாண்டு
    கூடுறேன் ஓடுறேன் நிற்காமல் – பெருங்
    கூட்ட இரைச்சலைக் கேளாமல்!

    வஞ்சமோ துன்பமோ செய்யாமல் – மண்
    வாச உறவினைப் பேணுகிறேன்
    கொஞ்சமா கொட்டுறான் இன்பங்கள் – அக்
    கொலுவின் அழகிலே சொக்குகிறேன்!

    கண்ணனாய்ப் பிள்ளையாய் ஊரெங்கும் – தினம்
    களிகள் நடப்பதைக் காண்கின்றேன்
    வெண்ணெயாய் வெண்மையாய் உள்ளுக்குள் – என்
    வெப்பம் தணிப்பதை என்னென்பேன்!

    பச்சையாய்ப் புல்வெளி பார்த்தாலே – ஒரு
    பசுவாய்ச் சுவைக்கிற தோற்றம்தான்
    உச்சமாய்த் தோன்றுது கோவிந்தா – என்
    மூச்சில் உன்குழல் கானம்தா!

    (வாய்பாடு: விளம், விளம், காய், மா, விளம், காய்)

     

     

    Share
  • கண்டிடுவாள் கண்ணனையே !

    எம் .ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

     

              பத்தியம் இருந்தும் பலவிரவு விழித்திருந்தும்

              நித்தமே தன்பிள்ளை நினைவாக மனமிருத்தி 

              எத்தனையோ வேண்டுதலை இறைவனிடம் முறையிட்டும்

              பெத்தெடுப்பாள் பிள்ளைதனை பிரியமுடன் பேரன்னை !

     

              பேச்சுவரா நிலையினிலும் பேசவைப்பாள் பேரன்னை

              மூச்சுவிடும் முகம்பார்த்து முறுவலிப்பால் பேரன்னை 

              ஆச்சரியம் எனநினைப்பாள் அவள்பிள்ளை அழகினையே

              அப்பிள்ளை ஆனந்தம் அவளுக்கே அருமருந்தாம் !

     

              உச்சிமுதல் கால்பார்த்து உள்ளமெல்லாம் பூரிப்பாள்

              இச்சையுடன் இறுகணைத்து எப்போதும் கொஞ்சிடுவாள் 

              பச்சைநிற உடையுடுத்தி பார்த்திடுவாள் கண்ணனென

              மெச்சியார் பேசிடினும் மெய்மறப்பாள் பேரன்னை !

     

              பட்டுமெத்தைக் கன்னத்தைப் பார்த்தபடி அவளிருப்பாள்

              தொட்டுதொட்டு அதைத்தடவி துன்பமெலாம் மறந்திடுவாள்

              நட்டநடு நெற்றிதனில் வட்டமாய் பொட்டுவைத்து

              கிட்டநின்று ரசித்தபடி கிழுகிழுப்பாள் பேரன்னை ! 

     

             கிருஷ்ண ஜயந்திதனில் கிருஷ்ணனே எனநினைத்து

             கிங்கிணி சதங்கைகட்டி கிரீடமும் தலைவைப்பாள்

             தன்பிள்ளை காலடியின் தடம்பதிப்பாள் வீடெல்லாம்

             தன்வீடு வந்துவிட்டான் கண்ணனென்பாள் பேரன்னை !

     

            புல்லாங்குழல் கொடுப்பாள் புதுச்சட்டை போட்டிடுவாள்

            எல்லோரும் வருகைதர எடுத்திடுவாள் விழாவங்கு 

            நல்லசேதி தருவதற்கு கண்ணன்வந்தான் எனச்சொல்லி

            நயமுடனே தன்பிள்ளை கால்தடத்தைக் காட்டிநிற்பாள் !

     

            பார்த்தவர்கள் பரவசத்தால் பலவற்றைப் பகர்ந்தவுடன்

            வேர்த்துநிற்கும் பிள்ளைதனை விருப்புடனே தூக்கிவந்து 

            பார்த்திடுங்கள் கண்ணனையே பகர்ந்திடுங்கள் விருப்பமெலாம்

            கேட்டவுடன் கொடுத்திடுவான் இப்பொழுதே கண்ணனென்பாள் !

     

            பிள்ளையைக் கண்ணனாய் கண்டுநிற்கும் பேரன்னை

            உள்ளமெலாம் பக்தியது ஊற்றெடுத்தே வந்துநிற்கும் 

            கள்ளமனம் கரைந்துவிட கண்டிடுவாள் கண்ணனையே

            மெல்ல அவள்பிள்ளை விரும்பிடுவான் அவள்வழியே !

     

    Share
  • ’’கண்ணன் பிறந்தான் நம்ம கண்ணன் பிறந்தான்’’….!

    crazy

    கண்ணன் பிறந்தது வெண்ணை உண்ணவா….அல்ல!….கம்சனைக் கொல்லவா….அல்ல!….ராதையைக் காதலிக்கவா….அல்ல!…..பாரதம் செய்யவா….அல்ல!….கீதை உபதேசிக்கவா….அல்ல!….பின்….!தனக்கு முந்தி வந்த ராமரைப் போல் பெற்றோருக்காக…..70துகளில் ர.மோகனாய் இருந்த அடியேன் ரவிவர்மாவைப் பார்த்து வரைந்தது(இணைத்துள்ளேன்)….கிருஷ்ண, பலராமர்கள் முதல் காரியமாய் செய்தது ‘’வசுதேவர், தேவகியை’’ சிறையிலிருந்து விடுவித்தது….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    kesav

    “தந்தைக்(கு) உபதேசம்(உப தேசம் ஆயர்பாடி) தந்தான் தலையமர்ந்து,
    நந்தனூர்(நந்தகோபன் ஊர்) சென்றான் நதிதாண்டி(யமுனா), -வந்தான்
    குடையாய் மழைக்கந்த கண்ணாயிரன்(1000கண் ஆதிசேஷன்) சேடன்,
    இடையன் இணைப்பில் இரு’’….கிரேசி மோகன்….!

    (OR)
    -விந்தையவர்
    (அத்புத பாலன் அவதாரம்)-
    மாரி(மழை)வந் தாலும்ரா மானுஜர் காப்பிலிடைச்(நனையாது காத்து இடைச்)
    சேரியில் சேர்ந்த சிசு’’….கிரேசி மோகன்….!

    Share
  • ஆண்டாள் – தமிழை ஆண்டாள்!

    பவள சங்கரி

    aand

    .
    சிறீவில்லிப்புத்தூர் – கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர்!

    சிறீவில்லிப்புத்தூர் என்ற இப் புனிதத்தலத்தின் காரணப் பெயர், சிறீ என்ற இலக்குமி அவதாரமான ஆண்டாள், வில்லி என்ற மன்னன் ஆண்ட பாம்பு புற்றுகள் நிறைந்த புத்தூரில் வாழுகிறாள் என்பதாகும்.

    aan5

    ஆண்டாள், பெரியாழ்வாருடன் வடபத்ரசாயி சுயம்புவாக அவதரித்த தலம் என்பதால் இது முப்புரி ஊட்டிய தலம்.

    இறைச்சிந்தையில் இயைந்து ஈடுபடுபவர் என்ற பொருளில் வைணவ அடியார்களுக்கு “ஆழ்வார்’ எனும் பதம் வழங்கி வருகிறது. சமணரின் ஆதிக்கத்தால் தமிழகத்தில் வடமொழி இலக்கியங்கள் வளர ஆரம்பித்த காலகட்டங்களில் தோன்றிய சமயப் புரட்சியின் வாயிலாக சைவ, வைணவப் பெரியார்கள் ஆலயங்கள் தோறும் சென்று பக்தி இலக்கியங்களைப் பரவச்செய்தனர். தமிழும் சமயமும் ஒருங்கே வளர்ந்த அத்தருணத்தில் ஆழ்வார்களின் இசைத்தமிழ் பாடல்கள் இசையோடு, ஆடல், பாடல், சிற்பம், ஓவியம் என பல்கலைகளையும் வளர்த்துவந்தன என்றால் அது மிகையல்ல. சங்க காலத்திற்குப் பின்னர் சமண, பௌத்த சமயங்களால் நலிவுற்றிருந்த திருமால் வழிபாடு மீண்டும் மறுமலர்ச்சி அடைந்தது.

    தென்னகத்தில், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், திருமங்கையாழ்வார், குலசேகர ஆழ்வார் என்று திருமால் பெருமை பாடிய பாவலர்களான ஆழ்வார்கள் பன்னிருவர். இவர்களில் எட்டாவதாக அமைந்த கோதை நாச்சி என்ற ஆண்டாள், சிறீகிருட்டிணரைத் தம் பதியாக நினைந்து உள்ளுருகிப் பாடிய பாசுரங்கள் இன்றும் வைணவத் திருத்தலங்களில் பாடப்படுவதோடு மக்கள் மனதிலும் நீங்காதொரு இடம் பிடித்துள்ளன.

    aandal.1நள வருடம், ஆடி மாதம், வளர்பிறை சதுர்த்தசியில் பூரம் நட்சத்திரத்தில் செவ்வாய்க் கிழமையன்று அவதரித்தவள் கோதை நாச்சியார் எனப்படும் ஆண்டாள். பெரியாழ்வார் இறையருளால் தனது நந்தவனத்தில் துளசி பாத்திக்கு அருகில், கண்டெடுத்து கோதை என்ற திருநாமத்துடன் வளர்த்து வந்தார். கோதை நாச்சியார் வாலைப்பருவம் எய்தியபோது திருமாலைத்தம் இதயத்தாமரையில் ஏந்தி, எண்ணமெல்லாம் அவன் வண்ணமேச்சூடி, அவனையே மணவாளனாகக் கொள்வேன் எனச்சூளுரைத்து, அவன் நினைவால் தீஞ்சுவைப் பாசுரங்கள் இயற்றினாள் . இப்பிரபஞ்சத்தையே ஆளும் ஆண்டவனையே ஆண்ட ஆண்டாளை திருவரங்கத்தில் ஆட்கொண்டார் திருமால். இந்த ஆண்டாள் அருளிய பாசுரங்களே “திருப்பாவை’ எனும் பேறு பெற்றுள்ளது. இதனை இயற்றிய ஆண்டாள் சூட்டிய பெயரோ “சங்கத் தமிழ் மாலை முப்பது’ என்பது. இதுமட்டுமன்றி “நாச்சியார் திருமொழி’ என்ற தெள்ளுத்தமிழ் திகட்டாதப் பாடல்களின் தொகுப்பையும் வழங்கியுள்ளாள். பன்னிரண்டு முதல் பதினைந்து வயது வரையிலான பெண்ணான, வாலைக்குமரியாம் ஆண்டாள் பாடிய 30 பாசுரங்கள் ‘திருப்பாவை’ எனவும், ஏனைய 143 பாசுரங்கள் ‘நாச்சியார் திருமொழி’ எனவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. பெண்மக்கள் எடுக்கும் பாவை நோன்பு என்பது காத்தியாயனி என்னும் பாவைக்கு வழிபாடு செய்தல். திருப்பாவை 30 பாசுரங்களும் மார்கழி மாதம் கன்னிப் பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் வேண்டியும், நாட்டில் மழை வேண்டியும் முறையாக நோன்பு இருக்கும் முறைகளைப் பற்றிக் கூறுவன. ஆண்டாள் தன்னை ஆயர்பாடி கோபியர்களில் ஒருத்தியாகப் பாவித்து கண்ணனை வழிபடுகிறாள்.

    “மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
    முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
    மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னைக்
    கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீநான்”

    என ஆண்டாள் தம் திருமண வினைகள் முற்றும் முறையே கண்டதைப்போன்று பத்துப் பாடல்களில் அழகுற பாடியுள்ளார்.

    ஆண்டாள் அரங்கனோடு தாம் மணம் முடிக்கும் நிகழ்வைத் தம் கனவில் கண்டதைப் பாடலாக்கி திகட்டாதத் தெள்ளமுதாக அள்ளித் தருகிறார்.

    aan

    இத்தகைய பேறுபெற்ற குமரியவளுக்கு நெடிதுயர்ந்து நிற்கும் ஆலயமே சான்று! மதுரையிலிருந்து 74 கிலோமீட்டரும், விருதுநகர் மாவட்டத்திலிருந்து 45 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ள இவ்வாலயம் சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ஆலயம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இவ்வாலயம் திராவிட சிற்பக்கலையில் சிறந்து விளங்குவது நிதர்சனம். தமிழக அரசின் சின்னமாக விளங்கும் கோபுரம் அமைந்த பேறுபெற்ற ஆலயம் இது. இவ்வாலய கோபுரத்தின்மீது மற்ற ஆலயங்களைப் போன்று இல்லாமல் கட்டிடக்கலையை எடுத்துரைக்கும்வண்ணம் எந்த திருவுருவங்களும் செதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    aan4

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் சிறீவில்லிப்புத்தூர் 90வது தேசம். சுயம்பு மூர்த்தியான மூலவர் ரங்கமன்னார் , ஆண்டாள், கருடாழ்வர் ஆகிய இருவருடனும் சேர்ந்து ஒரே கருவறையில் திருக்காட்சியளிக்கும் ஒரே ஆலயமும் இதுதான். பள்ளிகொண்ட ரங்கநாதரின் அற்புதக் காட்சியை, கருவறையின் கீழ் அமைந்திருக்கும், மர வேலைப்பாடுகளால் முற்றிலும் அலங்கரிக்கப்பட்டிருக்கும் அறையில் தரிசிக்க முடிகிறது. வைணவ திவ்ய தேசங்கள் நூற்றியெட்டில் முதலாவதான சிறீரங்கம் ஆண்டாளின் புகுந்த வீடு என்றும் இறுதித்தலமான சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாளின் தாய் வீடு என்பதாலும் ‘108 திவ்ய தேசங்களையும் மாலையாகச் சூடியவள்’ என்ற பெரும்பேறும் ஆண்டாளுக்கு உண்டு.

    ’சூடிக்கொடுத்தச் சுடர்கொடி’எனும் பெயர் பெற்ற கோதை நாச்சியார் வரலாறு சுவையானது. பெருமாள் வழிபாட்டிற்காக பெரியாழ்வார் தொடுத்து வைக்கும் மலர் மாலையை அன்றாடம் கோதைத்தன் மேனியில் முதலில் சூடி மகிழ்வது வழமையாக இருந்தபோது, ஒரு முறை இக்காட்சியைக் கண்டு கடும் கோபம் கொண்டார் பெரியாழ்வார் . ஆனால் அன்று இரவில் அவர்தம் கனவில் தோன்றிய பெருமானார், ‘ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகந்தது!’ என்றருளிப்போந்தார். அன்று முதல் கோதைக்கு, ‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி!’ என்ற திருநாமம் உண்டாயிற்று.

    இத்தோடு விட்டாளில்லை கோதை நாச்சி. திருமண வயதடைந்த தருணத்தில் ‘அரங்கனைத் தவிர வேறு எவருக்கும் மாலையிட மாட்டேன்!’ என்று உறுதியுடன் நிற்கும் அன்பு மகளைக் கண்ட பெரியாழ்வார் மனம் நொந்தார். மீண்டும் அவர்தம் கனவில் தோன்றிய பெருமாள், ஆண்டாளை திருவரங்கத்திற்கு அழைத்து வரும்படி பணித்து மறைந்தார். அதன்படி தந்தையாருடன் சிறீரங்கம் வந்த கோதை, காவிரிக்கரையை அடைந்த கணம் மறைந்துபோனாள். உளம் கலங்கிய பெரியாழ்வாருக்கு, தமக்குத் திருவடிச் சேவை செய்யும் ஆண்டாளைக் காட்டியருளினார் பெருமாள். ஆனாலும், சிறீவில்லிப்புத்தூர் வந்துதான் தம் மகளை மணம் முடித்து அழைத்துச்செல்ல வேண்டுமென்று வேண்டினார் பெரியாழ்வார் . அதனையேற்று பெருமானார், ஒரு பங்குனி உத்திர நன்னாளில் சிறீவில்லிப்புத்தூரில் எழுந்தருளி கோதை நாச்சியை மணமுடித்துக் கொள்கிறார். ஆண்டவனையே ஆட்கொண்டதால் கோதைநாயகி ‘ஆண்டாள்’ எனச் சிறப்பிக்கப்பட்டாள்.

    இதன் காரணமாகவே தற்போதும் சித்ரா பௌர்ணமி தினத்தன்று மதுரை தல்லாகுளத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர், ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை மற்றும் பரிவட்டங்களை அணிந்த பிறகே வைகையில் இறங்குகிறார்.

    வெள்ளி முளைக்கும் அதே நேரத்தில் வியாழன் உறங்குதலென்பது அபூர்வமானதோர் நிகழ்வு. 8ஆம் நூற்றாண்டில் இது போன்றதொரு நிகழ்வு நடந்துள்ளதை ஆய்வுகள் கூறுகின்றன. அதாவது 731 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் நாளில் அதிகாலை 3.50 மணி முதல் 4.00 மணிக்குள் மார்கழியில் ஒளிருமந்த பௌர்ணமி தினமே திருப்பாவை தோன்றிய காலமாக கணிக்கப்படுகிறது. ஆண்டாள் தோன்றியதாக வரலாறு கூறுவது கி.பி.716 ஆம் ஆண்டு ஆடிப்பூர திருநாளில் . கி.பி.731இல் தம் பதினைந்தாம் வயதில் ஆண்டாள் திருப்பாவை இயற்றினாள் என்பர். ஆண்டாளின் காலத்தைக் கணிக்க உதவும் அபூர்வமான வானியல் நிகழ்ச்சிகளை மு. ராகவையங்கார், சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கிழக்கு நோக்கியிருக்கும் பெண் தெய்வங்களை வழிபடுவது சிறப்பானதென்றும், வேண்டும் வரம் அருளுவதில் வள்ளல்கள் இவர்கள் என்பதும் ஐதீகம். அந்த வகையில் கிழக்கு நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கும் ஆண்டாள் அன்னையும் பெண்களுக்கு மாங்கலய பாக்கியமும், குழந்தை வரமும், அருளும் ஈடற்ற அன்னையாகத் திகழ்பவளும் இவளே!

    ஆண்டாள் திருக்கோயில் முழுதும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. வடபத்ரசாயி ஆலயத்தின் மேற்கில் பழமையான ஆண்டாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டாளுக்குத் தனிச் சந்நிதி ஒன்றும் அதன் முன்புறம் துளசி மாடம் ஒன்றும் உள்ளது. துளசி மாடத்தின் கீழ்புறம் ஆண்டாளின் சிற்பம் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.

    வட கிழக்கில், ‘வென்று கிழியறுத்தான் வீதி’யில் பெரியாழ்வார் கோதை நாச்சியாருடன் வாழ்ந்த வீடு அமைந்துள்ளது. கி.பி. 14ஆம் நூற்றாண்டில் மாவலி பாணாதிராயர் என்பவரால் இந்த வீடு திருக்கோயிலாக மாற்றப்பட்டது என்பதையும், ஆண்டாள் கோயிலின் கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவைகளையும் மாவலி பாணாதிராயர் கட்டியதாகவும் கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் இராச கோபுரம், 11 நிலைகளுடன் 11 கலசங்கள் கொண்டு, 196 அடி உயரத்தில் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. ‘திருக்கோபுரத்துக்கிணையம்பொன் மேருச்சிகரம்’ என மேருமலைக்கு இணையாக இக்கோபுரம் பற்றி கம்பர் போற்றியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பெரியாழ்வார் காலத்தில் ஒரு உரூபாயின் மதிப்பு 196 காசுகளாக இருந்ததால், அதை நினைவுகூரும் வகையில் அவர் 196 அடி உயரத்தில் கோபுரம் எழுப்பியிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

    கருவறை விமானத்தில் திருப்பாவை பாசுரங்களின் அரிய கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன. ஏகாதசி மண்டபம், கல்யாண மண்டபம் போன்ற இடங்களிலும் சிற்ப வேலைப்பாடுகள் சிறப்புற அமைந்துள்ளன. ஒரே கல்லாலான பெரிய தூணின் இருபுறங்களிலும் வேணுகோபாலன், இராமர், விசுவகர்மா, நடன தாரகை, சூர்ப்பணகையைத் தாக்கும் இலக்குவன், சரசுவதி, அகோர வீரபத்திரர், சலந்தரர், மோகினி, சக்தி ஆகிய சிற்பங்கள் உள்ளம் கவருவதாக அமைந்துள்ளன. இராச கோபுரத்தின் வடபுறம் அமைந்துள்ள, ஏகாதசி மண்டபம், பரமபத வாயில் ஆகியவை உள்ளன.

    இராச கோபுரத்தின் முன்புறம் உள்ள பந்தல் மண்டபத்தின் இடப் பக்கம் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இராமாயண நிகழ்ச்சிகளை விளக்கும் ஓவியங்களும், அடுத்துள்ள அறையணி மண்டபத்தில் கொடிமரமும், பலிபீடமும் காணப்படுகின்றன.

    உட்பிரகாரத்தில் அமைந்துள்ள மாதவிப் பந்தல் தேக்குமர வேலைப்பாடுகளுடன் கண்ணைக்கவருவதாக அமைந்துள்ளது. அடுத்துள்ள மணி மண்டபத்தின் தூண்களும் அழகிய சிற்பங்கள் தாங்கியுள்ளது. ‘வெள்ளிக் கிழமை குறடு’ என்ற தங்கமுலாம் பூசப்பெற்ற மண்டபம் ஒன்று மகா மண்டபத்தில் உள்ளது. இதன் தூண்களில் திருமலை நாயக்கர் மற்றும் அவரின் மனைவியர் இருவரது சிலைகளும் உள்ளன .

    கொடிமரத்துக்கும் இராச கோபுரத்திற்கும் இடையில் பெரியாழ்வார் மற்றும் ராமானுசரின் சந்நிதிகள் அமைந்துள்ளன.

    இத்திருக்கோயிலின் முன்புறமுள்ள நூபுர கங்கையில் என்றுமே நீர் வற்றுவதும் இல்லை மற்றும் இதன் நதிமூலம் எங்குள்ளது என்பதையும் அறிய முடியவில்லை என்கின்றனர்.

    aan3

    ஆண்டாளும் சிறீரங்க மன்னாரும் திருக்கல்யாண கோலத்தில் எழுந்தருளியுள்ள அர்த்த மண்டபத்தில் , தங்கமுலாம் பூசப்பெற்ற மஞ்சத்தில் ஆண்டாளின் இடக்கை கிளியை ஏந்தியவாறு நிற்கும் திருவுருவமும் அருகில் கூப்பிய கரங்களுடன் கருடாழ்வாரும் காட்சியளிக்கின்றனர். திருமணக் கோலத்தில் உள்ள திருவரங்கன், இராசகோபாலனாக செங்கோல் ஏந்தியவாறு கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். விரத நாட்கள் தவிர மற்ற நாட்களில், இவர் மாப்பிள்ளைக் கோலத்தில் காட்சி தருகிறார். அப்போது அந்தக் கால அரைக்கால் கால்சராய் மற்றும் சட்டை அணிவார். காலில் செருப்பும் அணிந்திருக்கிறார். அருகில் மணப்பெண் அலங்காரத்தில் ஆண்டாளின் திருக்காட்சி.

    13872774_1086108064811151_5891377523891863578_n

    ஆண்டாள் சந்நதியின் நேர் எதிரில் வெண்கலத்தாலான தட்டொளி (முகம் பார்க்கும் கண்ணாடி) ஒன்றைக் காணமுடிகிறது. இதில்தான் ஆண்டாள் தம் அழகுமுகம் பார்த்து வந்ததாகக் கூறப்படுகிறது. திருப்பாவையில், ‘உக்கமும், தட்டொளியும்’ என்று குறிப்பிடுவதும் இதன் அடிப்படையிலேயே என்றும் கருத்தப்படுகிறது.

    தட்டொளிக்கு அருகிலுள்ள ஒரு தூணில் , தனது வாலை தலைக்குமேல் சுருட்டி வைத்துள்ள ஆஞ்சநேயர் சிற்பம் மிக வித்தியாசமான முறையில்,சிறப்பான சிற்பக்கலைக்குச் சான்றாக விளங்குகிறது. ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கியவாறு தமது வாலை உடல் முழுவதும் வட்டமாகச் சுற்றியவாறு அமைந்திருக்கும் சிற்பம் இது.

    ஆண்டாள் சந்நதியின் கருவறையைச் சுற்றி 108 திவ்ய தேச மூர்த்திகளின் திருவுருவங்கள் அழகிய வண்ணங்களில் சித்திரங்களாக வரையப்பட்டுள்ளன. இதன் தென்கிழக்கு மூலையில் பெரியாழ்வார் வழிபட்ட ‘இலக்குமி நாராயணர்’ திருவுருவச் சிலையும் அமைந்துள்ளது. சுதை சிற்பமாக அமைந்திருக்கும் இத்திருமேனியின் இடது மடியில் இலக்குமி தேவி அமர்ந்திருக்கிறாள். பல வர்ணங்களால் அழகு மிளிரும் இச்சிற்பம் ‘வர்ணகலாபேரர்’ என்றழைக்கப்படுகிறது.

    கருவறையின் விமானத்தின் கீழ் அரவணைப் பள்ளியில் சீதேவி, பூதேவி சமேதராக எழுந்தருளியுள்ள வடபத்ர சாயியை மூன்று வாசல்களின் வழியாகவும் தரிசிக்கலாம். பெருமாளின் தலைமாட்டில் பிருகு முனிவரும், கால்மாட்டில் மார்க்கண்டேயரும் வணங்கி நிற்கின்றனர். பஞ்ச மூர்த்திகள், தும்புரு, நாரதர், சனத்குமாரர், கின்னரர், சூரியன், சந்திரன், மது கைடபர் ஆகிய மூர்த்தங்களையும் காணமுடிகிறது. ஆண்டாளுக்குச் சாத்தப்படும் பூமாலை, மறு நாள் காலையில் வடபெருங்கோயில் உடையவருக்குச் சாத்தப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

    இரண்டாம் பிரகாரத்தில் மகாலட்சுமியும், அனுமனும் அருள் பாலிக்கின்றனர். இங்குள்ள கலைமகள் சிற்பம் மிக நேர்த்தியாக சிற்பக் கலையின் சிறப்புக்கு உதாரணமாக அமைந்துள்ளது. வைகுந்த ஏகாதசியன்று இதன் வடக்கு வாசல் வழியே சொர்க்கவாசல் திறக்கப்பட்டு தரிசனம் அருளப்படுகிறது.
    நந்தவனத்துக்கும் வடபெருங் கோயிலுக்கும் இடையில் சக்கரத்தாழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு சக்கரத்தாழ்வார் மூன்று கண்கள் மற்றும் 16 கைகளுடன் வித்தியாசமாகக் காட்சியளிக்கிறார். இவரின் பின்புறம் யோகநரசிம்மர் காட்சியளிக்கிறார்.

    பெரியாழ்வாரின் திருமேனி சிதிலம் அடைந்தபோது, திருமலை ஐயங்கார் தன் சகோதரர் வேங்கடம் ஐயங்காருடன் இணைந்து பெரியாழ்வாருக்குத் தனியே பெரிய சந்நிதி ஒன்றைக் கட்டியதோடு பெரியாழ்வாரின் திருமேனியில் தங்கக் கவசமும் சாற்றியுள்ளார் என்பதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. சிறீவராக அவதாரம் நிகழ்ந்த தலம் இது என்றே கருதப்படுகிறது. சிறீவில்லிப்புத்தூரின் பெருமைகள் அனைத்தையும் வராக புராணத்தின் ரகசிய காண்டத்தில் ஒன்பது அத்தியாயங்களில் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

    ஆண்டாள் தோளில் உறவாடும் கிளி!

    aandal

    செங்கோல் ஏந்தி அரசாளும் மதுரை மீனாட்சி அன்னைக்கு வலத்தோளில் கிளி இருப்பதுபோன்று காதலால் கனிந்துருகி அருளாட்சி புரியும் ஆண்டாள் அன்னைக்கு இடத் தோளில் கிளி. அன்றாடம் புதிதாகச் செய்யப்படும் கிளியிது. கிளியின் மூக்கு மாதுளம் பூவினாலும், கிளியின் உடல் மரவல்லி இலையினாலும், இறகுகள் நந்தியாவட்டை இலையும் பனை ஓலையினாலும், கிளியின் வால் பகுதி வெள்ளை அரளி செவ்வரளி மொட்டுகளாலும், கிளியின் கண்கள் காக்காய்ப் பொன் கொண்டும், இவையனைத்தையும் இணைத்துக் கட்டுவதற்கு வாழை நாருடனும் தயாராகிறது ஆண்டாள் கிளி. இந்தக் கிளியை உருவாக்க ஐந்து மணி நேரம் தேவைப்படுகிறதாம்.

    ஆண்டாளின் கிளி சொல்லும் கதை: கோதை நாச்சியார் சுகப்பிரம்மம் என்ற முனிவரை கிளி உருவத்தில் அரங்கநாதரிடம் தூது செல்ல அனுப்பி வந்தாராம். தன் காதல் மணவாளரிடம் தூது சென்ற கிளிக்கு வேண்டும் வரம் அருள எண்ணிய ஆண்டாள் அது குறித்து கேட்டபோது, தூது சென்ற கிளி உருவத்திலேயே ஆண்டாள் கையில் எந்நேரமும் இருக்கும் வரம் வேண்டிக்கேட்டுப் பெற்றார் என்றும், அதனாலேயே ஆண்டாளின் கையில் இக்கிளி எப்போதும் வீற்றிருப்பதாகவும் புராணம் கூறுகின்றது.

    ஆண்டாள் கோயிலின் திருக்குளம், வாழைக்குளத் தெரு எனும் இடத்தில் சில தெருக்கள் தாண்டி அமைந்துள்ளது. இதன் மேற்குக் கரையில் எண்ணெய்க் காப்பு நீராடல் உற்சவ மண்டபமும், கிழக்குக் கரையில் தீர்த்தவாசி மண்டபமும் அமைந்துள்ளன. ஆண்டாளின் மடியில் சிறீரங்க மன்னார் சயனித்திருக்கும் ‘சயன உற்சவம்’ திருக்காட்சி அருகில் உள்ள சிறீகிருட்டிணர் கோவிலிலும், சிறீகிருட்டிணரின் சயன உற்சவம் ஆண்டாள் ஆலயத்திலும் நடைபெறுகிறது.

    ஆண்டாளின் அவதார தினமான ஆடிப்பூர தினத்தன்று பிரம்மாண்டமான தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இத்தேர் தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரும் தேராகக் கருதப்படுகிறது. இத்தேரில், சுமார் 1000 தேவ, தேவியர், முனிவர்கள் ஆகியோரின் உருவங்களுடன் இராமாயண, மகாபாரதக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. மீப்பெரும் தேரான இதை வடம் பிடித்து இழுக்க 3,000 க்கும் மேற்பட்ட ஆட்களாவது பங்கு பெறுகின்றனர். இந்த ஆடிப்பூர உற்சவத்தின் ஏழாம் நாள் சிறீஆண்டாள் ஒரு காலைக் கிடத்தி, மறு காலை மடக்கி அமர்ந்திருக்கும் திருக்கோலத்துடன் மடியில் தலை சாய்த்துப் படுத்திருக்கும் திருக்கோலத்தில் சிறீரங்கமன்னார் தரிசனம் காண கண்கோடி வேண்டும்.இந்தத் தேரைத் தவிர மேலும் இரண்டு தேர்கள் இங்கு உள்ளன.

    சிறீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலின் அரவணைப் பிரசாதம் புகழ் பெற்றது. பெருமாளுக்கும், ஆண்டாளுக்கும் இரவில் படைக்கப்படும் இதில் பெருமாள் ஆலயத்திற்கே உரித்தான சுவையான வடை, தேன்குழல் முறுக்கு, அப்பம், புட்டு, வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், பால் ஆகிய ஏழு வித பதார்த்தங்கள் இடம்பெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆண்டாள் அருள் பெற்ற கவிச்சக்ரவர்த்தி கம்பர் பற்றிய ஒரு சுவையான வரலாறும் கூறப்படுகிறது. ஒரு முறை ‘மார்கழி நீராடல்’ உற்சவத்தைக் காணும்பொருட்டு சிறீவில்லிப்புத்தூருக்குக் கிளம்ப ஆயத்தமானார்.ஆனால் குறித்த நேரத்திற்குள் அவரால் திருமுக்குளத்திற்கு வந்து சேர முடியவில்லை. ‘நீராடல் வைபவத்தை ’ எப்படியும் தரிசிக்க வேண்டும் என்ற ஆதங்கத்துடன் உற்சவ மண்டபத்திற்கு விரைந்து வந்து சேர்ந்த கம்பருக்குப் பேராச்சரியம் காத்திருந்தது. அதுவரை விழா ஆரம்பமாகாத காரணத்தைக் கேட்டபோது, வழக்கமாக எண்ணெய்க் காப்பு நீராடல் முடிந்ததும், ஆண்டாளுக்கு நடத்தப்படும் வைர மூக்குத்தி சேவைக்குரிய மூக்குத்தியைக் காணவில்லையென தகவல் அளிக்கப்பட்டுள்ளது. உடனே கவிச்சக்கரவர்த்தி கம்பர் தம் கையிலிருந்து ஒரு மூக்குத்தியை எடுத்துக் காட்டி, அதுதான் அன்னையின் மூக்குத்தியாக இருக்குமோ என்று கேட்டிருக்கிறார். அனைவருக்கும் ஆச்சரியம். காரணம், ஆண்டாளின் வைர மூக்குத்தி கம்பரின் கைகளில் எப்படிக் கிடைத்தது எனக் கேட்டபோது கம்பர், திருமுக்குளத்திலிருந்து கரை ஏறியபோது கண்ணில் மின்னியதைக் கண்டு எடுத்து வந்ததாகக் கூறினார். இந்த நீராடல் வைபவக் காட்சியை கம்பருக்கு அருள வேண்டியே ஆண்டாள் நடத்திய திருவிளையாடல் இது என்பது தெளிவானது.

    தமிழர்தம் வரலாற்று முறைகளையும், இலக்கிய மரபுகளையும் புலப்படுத்தும் அகப்பொருள் கூறுகளைக்கொண்ட நாச்சியார் திருமொழிப் பாசுரங்கள் 143ம் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.
    பக்தியும் காதலும் ஒரு சேரக் கொண்டிருந்த ஆண்டாளின் கனவு உரைக்கும் பாசுரங்கள் அவர்தம் தீஞ்சுவைத் தமிழுக்கும், பண்டையத் தமிழர் திருமண முறைக்கும் சிறந்ததொரு எடுத்துக்காட்டு என்றால் அது மிகையில்லை.

    அரங்கநாதன் மீது கொண்ட ஆழ்ந்த பக்தி, காதலால் அவரைவிட்டு எப்போதும் நீங்காது இருக்க வேண்டுமென்ற தாபம்கொண்ட ஆண்டாள் ஆழிவெண்சங்கிடம் உரையாடுவது போன்றமைந்த பாடல்கள் திருமாலின் மீது அவர் கொண்ட மட்டற்றக் காதலை வெளிப்படுத்துவதைக் காணமுடிகிறது.

    கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ?
    திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ
    மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
    விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்ஆழி வெண் சங்கே

    ஓடும் மேகங்களைத் தூதுவிடுபவள், தம்முயிர் கண்ணனிடம் உள்ளதால் இவ்வுடல் வெறுங்கூடுதான் என்பதை, ‘உலங்குண்ட விளங்கனி போல்’ (உலங்கு – கொசு) என்னும் உவமை மூலம் விளக்குவது அருஞ்சுவைத்தேன் போன்று இனிமையானது. அதாவது விளங்கனியின் மேல் ஓடு இருக்க அதன் உட்பகுதியைக் கொசு அழித்துவிடுவதுபோல, தானும் கண்ணன் தந்த காதல் நோயால் நலிந்துள்ளதை உணர்வுப்பூர்வமாகத் தெளிவுபடுத்துவது சுவைகூட்டுவது. நாச்சியார் திருமொழியில், கண்ணனின் குறும்புகளனைத்தையும் பட்டியலிட்டு, இப்படிப்பட்ட ஒருவனை, அந்த மாயக்கண்ணனை எவரேனும் கண்டதுண்டோ என்று வினவியவளிடம் பிருந்தாவனத்தில் பரமனைக் கண்டதாகப் பதில் கூறும் பாங்கில் இறுதி பத்துப் பாசுரங்களும் அமைந்து வியப்பூட்டுவது சிறப்பு.

    அருவி போல் இனிதாய் வழிந்தோடி இயல்பாய் பெருகி வரும் மொழியுடையவள் ஆண்டாள். கார்வண்ணன் மாயக்கண்ணனை மனதில் கொண்டவளின் தெள்ளுத் தமிழ் நடையழகில் மிளிர்ந்த கானங்கள் அனைத்தும் மார்கழி மாதமதைக் கொண்டாடச் செய்கின்றன என்றால் அது மிகையில்லை. இன்றும் இளங்கன்னியர் வண்ணக் கோலமிட்டு அதன் மத்தியில் இலையில் சாணம் வைத்து அதனுள் பூசணிப் பூக்களைச் செருகி அலங்கரித்து, மண் அகலில் தீபமேற்றி மார்கழி மாதம் முழுவதையும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதைக் காணமுடிகிறது.

    ஆண்டாளின் மிக எளிமையான பாசுரங்களான திருப்பாவையும், நாச்சியார் திருமொழியும் மிகுந்த பக்தியையும், சமூக அக்கறையையும், நன்நம்பிக்கையையும் ஏற்படுத்தவல்லது.

    இப்பாசுரத்தை தினம் காலை அங்கம் சுத்தம்செய்து பக்திச் சிரத்தையுடன் படித்தால் கட்டாயம் மழை பொழியும் என்றும் சகல செல்வங்களும் நிரம்பி வழியும் என்றும் பன்னெடுங்காலமாக மக்களிடம் நம்பிக்கை உள்ளது. ஆண்டாள் பாடிய நாச்சியார் திருமொழியில் உள்ள வாரணமாயிரம் என்று தொடங்கும் முதல் பாடல் உட்பட 11 பாடல்களையும் கன்னியர் தினமும் பக்தியுடன் பாடினால் விரைவில் திருமணம் நிகழும் என்ற நம்பிக்கையும் பரவலாக உள்ளது.

    ‘விண்ணீல மேலாப்பு
    விரித்தாற் போல் மேகங்காள்!
    தெண்ணீர் பாய் வேங்கடத்து
    என் திருமாலும் போந்தானே!
    கண்ணீர்கள் முலைக் குவட்டில்
    துளிசோரச் சோர்வேனை!
    பெண்ணீர் மையீடழிக்குமிது
    தமக்கோர் பெருமையே!.. (1)

    மாமுத்த நிதி சொரியும்
    மாமுகில்காள்! வேங்கடத்துச்
    சாமத்தின் நிறங் கொண்ட
    தாடாளன் வார்த்தையென்னே!
    காமத் தீயுள் புகுந்து
    கதுவப் பட்டிடைக் கங்குல்!
    ஏமத்தோர் தென்றலுக்கு
    இங்கிலக்காய் நானிருப்பேனே!…(2)

    ஒளி வண்ணம் வளை சிந்தை
    உறக்கத் தோடிவையெல்லாம்!
    எளிமையாலிட்டென்னை
    ஈடழியப் போயினவால்!
    குளிரருவி வேங்கடத்து
    என் கோவிந்தன் குணம்பாடி!
    அளியத்த மேகங்கள்
    ஆவிகாத்திருப்பேனே!…(3)

    மின்னாகத் தெழுகின்ற
    மேகங்காள்! வேங்கடத்துத்
    தன்னாகத் திருமங்கை
    தங்கிய சீர்மார்வற்கு!
    என்னாகத் திளங் கொங்கை
    விரும்பித்தான் நாடோறும்!
    பொன்னாகம்புல்குதற்கு
    என் புரிவுடைமை செப்புமினே…(4)

    வான்கொண்டு கிளர்ந்தெழுந்த
    மாமுகில்காள்! வேங்கடத்துத்
    தேன்கொண்ட மலர் சிதரத்
    திறன்டேரிப் பொழிவீர்காள்!
    ஊன் கொண்ட வள்ளுகிரால்
    இரணியனையுடலிடந்தான்!
    தான்கொண்ட சரிவளைகள்
    தருமாகில் சாற்றுமினே! …(5)

    சலங்கொண்டு கிளர்ந்ததெழுந்த
    தண்முகில்காள்! மாவலியை
    நிலங் கொண்டான் வேங்கடத்தே
    நிரந்தேறிப் பொழிவீர்காள்!
    உலகுண்ட விளங்கனிபோல்
    உள்மெலியப் புகுந்து! என்னை
    நலங் கொண்ட நாரணர்க்கு
    என் நடலை நோய் செப்புமினே..(6)

    சங்கமா கடல் கடைந்தான்
    தண் முகில்காள்! வேங்கடத்துச்
    செங்கண்மால் சேவடிக்கீழ்
    அடிவீழ்ச்சி விண்ணப்பம்!
    கொங்கை மேல் குங்குமத்தின்
    குழம்பழியப்புகுந்து! ஒருநாள்
    தங்குமேல் என்னாவி
    தங்குமென்றுரையீரே! …(7)

    கார்காலத் தெழுகின்ற
    கார் முகில்காள்! வேங்கடத்துப்
    போர் காலத் தெழுந்தருளிப்
    பொருதவனார் பேர் சொல்லி |
    நீர்காலத் தெருக்கில்
    அம்பழவிலை போல் வீழ்வேனை |
    வார்காலத் தொரு நாள்
    தம் வாசகம் தந்தருளாரே! ..(8)

    மதயானைப் போலெழுந்த
    மாமுகில்காள்! வேங்கடத்தைப்
    பதியாக வாழ்வீர்காள்
    பாம்பணையான் வார்த்தை யென்னே!
    கதியென்றும் தானாவான்
    கருதாது! ஓர் பெண் கொடியை
    வதைசெய்தானென்னும் சொல்
    வையகத்தார் மதியாரே! ..(9)

    நாகத்தினணையானை
    நன்னுதலாள் நயந்துரைசெய்!
    மேகத்தை வேங்கடக் கோன்
    விடுதூதில் விண்ணப்பம்!
    போகத்தில் வழுவாத
    புதுவையர் கோன் கோதை தமிழ்!
    ஆகத்து வைத்துரைப்பார்
    அவரடி யாராகுவரே …(10)
    ———

    நன்றி : சொற்கோயில் ஆன்மீக இதழ்.

    Share
  • பாடிப்பணிவோம்

    சரஸ்வதிராசேந்திரன்

    krishna

    கொண்டை மயில் சீவி
    குழலூதும் கண்ணா
    கோபியர் கொஞ்சும்
    கோகுல கிருஷ்ணா
    மாய லீலை செய்யும்
    ஆயர்பாடி கண்ணா
    கேட்டதை கொடுக்கும்
    கீதையின் நாயகா
    குருவாயூரில் நிற்கும்
    குழந்தை கண்ணா
    மதுராவில் பிறந்து
    கோகுலத்தில் வளர்ந்து
    துவாரகையை ஆண்டவனே
    குன்றம் ஏந்தியே
    குளிர் மழை காத்து
    பசுக்கூட்டதைக் காத்தவனே
    கமலம் போன்றகண்ணா
    கண்ணாய் இருந்து காப்பவனே
    உன் வேய்குழலின் நாதம்
    வீசி வரும் கீதம்
    எங்களுக்கு வேதம்
    பாடிப்பணிவோம் உன் பாதம்

    Share
  • சுகவனம் 2

    -இன்னம்பூரான்

    செவ்வாய் 23 08 2016

     

    sukavanam2

    மனம் என்பதின் இருப்பிடம், அதன் வழித்தடங்கள் பற்றிய ஆய்வுகள் கணக்கில் அடங்கா. விஞ்ஞான ரீதியாக, அது மூளையின் செயலே என்ற கருத்து தற்காலம் பெரிதும் பேசப்படுகிறது. ஆழ்மனம் என்றால், அது உடல் அவயவமாகவே தென்படுவதில்லை. ஆனால், நம்மை அதுதான் ஆட்டிப்படைக்கிறது என்பது அவரவர் அறிந்ததே. அந்த ஆட்டிப்படைத்தல் உடல் நலத்தைப் பெரிதும் பாதிக்கும் என்பதும் ஒரு அனுபவக்கூறு. நோயற்ற வாழ்வுக்கு மனோதிடம் உறுதுணை என்பதும் மறுக்க முடியாத சூத்திரம் என்பதை ஐயமுற அறிவதற்கு, 1976-லிருந்து இயங்கும் அமைப்பு ஒன்று மனித இனத்தின் காவல் தெய்வமாக இயங்கி வருகிறது. அண்மையில் அவர்கள் ஒரு நீண்ட ஆய்வின் பயனாகப் பத்து அறிவுரைகள் வழங்கியுள்ளனர். அதில் முதலாவது பற்றிய பதிவு  இது. வாசுதேவன், கோபால், லக்ஷ்மி நாரயணன் போன்றோர் கேட்டால் அவை யாவையும் அலசி, அவரவருக்கு ஏற்புடையதை நடைமுறைக்குக் கொணரலாம். தமது உணர்ச்சிகளை இற்செறிக்காதீர்கள். நால்வரிடம் அது பற்றி கலந்தாலோசித்தால், அது பெரிதும் உதவும் என்பது முதல் அறிவுரை, விஞ்ஞான ஆய்வின் அடிப்படையில்.

    சற்றே விவரமாக: தன் உணர்ச்சிகளை பகிர்ந்துப் கொளவது பலவீனமல்ல. அது தன்னலம் போற்றும் அணுகுமுறை. தன்னை பாதுகாத்துக்கொள்ளும் வழி. உன்னை அலைக்கழிக்கும் சிக்கலை, அது அவிழ்க்கக் கூடும். இது எளிதில் நடக்கக்கூடியது இல்லை. ஒரு சொல்லில் தீராத பிரச்சனையை விசாலமாக விளக்குவதும் நலனே. அதற்காக, ஒரு பகிர்வைச் செயற்கையாக அமைத்து விட்டால், வேறு வினை வேண்டாம். இத்தகைய உரையாடல்கள் தான்தோன்றியாக, இயல்பாகவே அமைந்து விட்டால், நீங்கள் ஒரு பாலத்தைக் கடந்து விடுவீர்கள். முஸ்தீபுகள் செய்து கொள்ளாமல், நண்பர்களிடம் மனம் விட்டுப்பேசினால், தீர்வு கிடைப்பது எளிதாக அமையும் என்பது ஆய்வின் வெளியீடு. துவக்கும்போது பாலைத்திணை; கூர்மையான கற்கள் நெருடலாம். அவசரம் இல்லை. காலம் கடந்தாலும், தக்கதொரு சூழ்நிலை ஏற்படுகிறது என்பதும் ஆய்வின் முடிபு எனலாம்.

    *****

    இனி ஆங்கில மூலம்:

    Talk about your feelings

    Talking about your feelings can help you stay in good mental health and deal with times when you feel troubled.

    Talking about your feelings isn’t a sign of weakness. Its part of taking charge of your wellbeing and doing what you can to stay healthy.

    Talking can be a way to cope with a problem you’ve been carrying around in your head for a while. Just being listened to can help you feel supported and less alone. And it works both ways. If you open up, it might encourage others to do the same.

    It’s not always easy to describe how you’re feeling. If you can’t think of one word, use lots. What does it feel like inside your head? What does it make you feel like doing?

    You don’t need to sit your loved ones down for a big conversation about your wellbeing. Many people feel more comfortable when these conversations develop naturally – maybe when you’re doing something together.

    If it feels awkward at first, give it time. Make talking about your feelings something that you do.

    *****

    உதவி: Mental Health Foundation Copyright © 2016.

    சித்திரத்துக்கு நன்றி:

    http://az616578.vo.msecnd.net/files/2016/07/03/636031124379287984-1867934803_mental%20health%20thumbnail.jpg

    *****
    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.u
    http://innamburan.blogspot.de/view/magazine
    www.olitamizh.com

     

     

    Share
  • ஆறுமுகன் அருட்பா (பகுதி 1)

    க. பாலசுப்பிரமணியன்

     

    விநாயகர் வாழ்த்து

    முதலாய் வந்து முடக்கங்கள் நீக்கி
    முன்னும் பின்னும் முடிவினில் நிற்பாய்;
    முருகனின் முதல்வா, மூலப் பொருளே
    முன்னுரை நீயே மூஷிக வாகனா !

     

    ஆறுமுகன் அருட்பா

    Karthikeyar

    1.
    நீள்முடித் தலையில் நிறைவளர் நிலவும்
    நீலக் கழுத்தினில் நெகிழ்ந்திடும் அரவும்
    நீறுடை நெற்றியில் நெருப்புடைக் கண்ணும்
    நினைத்ததும் நிறைந்த நலமே!

    2.
    நலத்தைக் காத்திட நாடிய அமரரும்
    நான்முகன் நாரணன் நற்றவ முனிவர்
    நாதங்கள் ஒன்றிட நமச்சிவாய மென்றிட
    நாபியில் நெருப்பாய் எழுந்தவனே !

    3.
    எழுந்திட்ட தீப்பொறி ஏந்திய பூமியில்
    எழிலாய் வந்த அறுவகை தத்துவம்
    ஏற்றது இசைவாய் சரவணப் பொய்கை
    ஏங்கிய உலகம் மகிழ்ந்ததுவே !
    4.
    இதயங்கள் குளிர்ந்தே இறையவர் வாழ்த்திட
    இனிதாய் வந்த இமையவன் மகனே !
    இன்னல்கள் போக்கிட வானவர் தேடிய
    இம்மையின் நல் விருந்தே!
    5
    விருந்தென் மனதிற்கு மருந்தென் வினைக்கு
    கரும்பென இனிக்கும் கந்தன் பெயருனக்கு !
    அரும்பென இருந்தும் பெருந்துயர் தீர்த்து
    இரும்பெனும் மனத்தையும் இளக்கிடுவாய் !
    6
    இளகிய மனதுடன் இனிதே வந்தாய்
    இருண்ட இதயத்தின் வறுமைநீக்கிட
    இம்மை மறுமை இடைதனைக் காத்திட
    இசைவாய் மலர்ந்த இறையே !

    7
    இறையோ? இன்பக் கனவோ ? நனவோ ?
    இருளைக் கிழித்து ஒளிரும் கதிரோ ?
    இணையில்லா ஈசனின் மூலப் பொருளோ?
    இன்னல்கள் நீக்கிடும் அருளோ?

    8.
    அருளே! அழகே ! அறிவின் வடிவே !
    அந்தமும் ஆதியும் உந்தனில் அடங்கிட
    அங்கத்தில் அன்பை அமுதாய் வடித்த
    அவ்வையின் அழகுடைத் தமிழே !

    9
    தமிழைத் தந்தாய் அமுதாய் பருகிட
    அமுதும் கசந்தது அன்னைத் தமிழில்
    அறுசுவை சேர்ந்த ஒருசுவைத் தமிழில்
    அழகெனும் முருகே அழகே !

    10.
    அழகிய முகத்தில் அமைதியைக் கண்டேன்
    அருளுடை விழியில் அன்பைக் கண்டேன்
    அன்னையின் சக்தியை கைகளில் கண்டேன்
    அகிலம்காணா கருணையின் வடிவே!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ‘கருட வாகனன்’’….!
    —————————————–

    kesav
    ‘’கருடப்புள் மீதேறி கோதெண்டக் கண்ணன்(பசுக்கள் ‘’கோ’ தெண்டமிடும்)
    புருடப்புள் ளாண்டான் பறந்து, -திருடன்போல்
    பிம்மாலை(அதிகாலை) நேரம் புவிக்கு வரும்கல்கி
    செம்மால்(செங்கண்மால்)கை வண்ணம்கே சவ்’’….

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கருட வாகனம் காணாது தூங்கி விட்டேன்….!
    —————————————————————————————————————————————
    ’’கொள்ளும்புண் ணாக்கும் குதிரைக்(கு) அளித்தன்று
    வில்விஜயன் தேரை விரட்டியவன் -புள்ளமர்ந்து
    வல்லிக் குளத்தை வலம்வருதல் காணாது
    பள்ளிக் கிடந்தொழிந்தேன் பாழ்’’….!கிரேசி மோகன்….!

    Share